Author: கானா பிரபா
•1:38 AM
A map by *MUNSTER*, c.1588

கி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகு என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். போர்த்துக்கேயரைப் பறங்கியர் என்பது அக்காலம் தொட்ட வழக்கு.

துருக்கியப்படை ஒன்று அப்போது சிலாபம் முதலான பகுதியை முற்றுகையிட வந்து தோற்றுப் போனது. பின்னர் 1517 மற்றும் 1520 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இருமுறை படையெடுத்து வந்து பறங்கியர் கட்டிய கோட்டையை முற்றுகையிட வந்து அதிலும் தோல்வியைத் தழுவினர்.
பின்னர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகனைக் கிறீஸ்தவனாக்கிய மதம் பரப்பும் எண்ணத்தோடு புவனேகபாகுவைத் தற்செயலாகச் சுட்டது போலச் சுட்டுக் கொன்றனர்.

தம் எண்ணம் போலத் தர்மபாலாவைக் கிறீஸ்தவனாக்கினர். அரசன் எவ்வழி மக்களும் என்பது போல அரசபிரதானிகளும், மக்களுமாக கிறீஸ்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பின்னர் பறங்கிகள் மெல்ல மெல்ல இலங்கைத் தீவின் மற்றைய இடங்களையும் தமதாக்க முனைந்து வெற்றியும் பெற்றனர்.

போர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம்

கனக சூரிய சிங்கையாரியான் இழந்த தன் மகுடத்தை மீண்டும் சூட்டிக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த பின் அவனது மூத்த மகனான பரராஜசேகரன் கி.பி 1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராஜ சேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான். நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராஜசேகரன்.

சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் அழிவுற்ற ஆலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ள இடமுண்டு. சட்ட நாதன் கோயில் வெயுலுகந்தப் பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.

பரராஜசேகர மன்னனுடைய ஆட்சியைப் பொற்காலம் என்றே ஈழவரலாற்று நூல்கள் வருணிக்கின்றன. இப்படிப் பரராஜசேகரன் ஆட்சி செய்து வருகையில் சுபதிருஷ்டிமுனிவர் என்பார் அவன் சபைக்கு வந்தார். அவன் அவரை வணங்கி வரவேற்று, முனிவரிடம்
"அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழுமென்றறியப் பேராசையுடையேன். திரிகாலமும் உணர்ந்த நீங்கள் சொல்ல வேண்டும் "
என வினவினான்.

புருஷோத்தம, நீ புண்ணியவான், நீ இருக்கும் வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன் மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண்டாங் குமாரன் வெட்டுண்டு இறப்பான். இரண்டாம் பத்தினியின் வயிற்றிற் பிறந்த சங்கிலியின் மாயவலைக்குட்பட்டு அரசை அவன் கையிற் கொடுத்திடுவான். சங்கிலி கொடுங்கோலோச்சித் தன்னரசை அந்நிய தேசவாசிகளான பறங்கியர் கையிற் கொடுத்து இறப்பான். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத்தைப் பரப்பிக் கொடுங்கோலாக்கி நாற்பது வருசம் ஆள்வர். அவரை ஒல்லாந்தர் வென்று சமய விசயத்தில் அவரைப் போற் கொடியராகி நூற்றிருபது வருசம் அரசு செய்வர். அதன் மேல் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர் - ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதி ஆட்சி செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்திலும் மீள்வதில்லை" என்றார்.

இதையே திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டும் சொல்கின்றது இப்படி
"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".

சுபதிருஷ்டிமுனிவர் குறி சொன்ன அந்தக் கொடிய நிகழ்வுகள் அடுத்த பதிவுகளில் தொடர்கின்றன.

உசாவ உதவியவை:
1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
3. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

சித்திரம்:
1. map by *MUNSTER*, c.1588 (ebastian Münster (1488-1552) was a German cartographer, cosmographer) - Columbia University வரலாற்றுத் தளம்
2.போர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம் - Library of congress an illustrated guide
This entry was posted on 1:38 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On August 2, 2009 at 8:12 PM , சி தயாளன் said...

இந்த வரலாற்று தகவல்களை திரட்டி வெளியிட்டமைக்கு நன்றி..

 
On August 3, 2009 at 4:22 AM , கானா பிரபா said...

மிக்க நன்றி டொன் லீ

 
On August 4, 2009 at 1:07 AM , யசோதா.பத்மநாதன் said...

மிக அருமை.

வரலாற்றுச் சான்றுகளோடு எளிமையாகவும் அதே நேரம் விளக்கமாகவும்,சுருக்கமாகவும், (வரலாற்றில் அது தான் மிகக் கடினம்)அமைந்திருக்கிறது பதிவு.

தொடரட்டும்.