Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•3:34 AM
இந்தச் சனம் வந்து சாப்பாட்டப் பத்தி எழுத முதல் நான் வந்துத்தன் கிளியேய்.

உங்களுக்குத் தெரியுமா, மட்டக்களப்பிலருந்து கொழும்புக்கும், இலங்கைர வேற பகுதிகளுக்கும் அடுக்கடுக்காத் தயிர் போற. றெயினிலயும் பஸ்சிலயும் இதுகளுக்குத் தனி இடம். பசுந்தயிரும் போகும். எருமைத்தயிரும் போகும். எருமைத்தயிர் கெட்டியா இரிக்கும். அந்தத் தயிர்ச்சட்டியள என்னத்தால கட்டி இரிக்கிற என்டு தெரியுமா? தென்னோலையால!! ஓம் மனே, வடிவா, சட்டி அசங்காமக் கொள்ளாம இரிக்கிற மாதிரி தென்னோலை உறியில போட்டுக் கட்டுவாங்க 8-10 சட்டியை ஒண்டுக்கு மேல ஒண்டு அடுக்கி. பாக்க என்ன வடிவு. காட்டுறத்துக்குப் படம் தேடினதான்.. கிடைக்கல்ல. மட்டக்களப்புக்கு வேற ஊர்க்காராக்கள் வந்தா அவங்க ஊருக்கெண்டுத்து கொண்டு போற சாமான் சக்கட்டுல தயிர்ச்சட்டி கட்டாயம் இரிக்கும்.

தயிர் சாப்பிடுறது மட்டக்களப்பில தனி விதம். மற்ற இடத்தாக்கள் நாங்க தயிர் சாப்பிடுறத்த ஆச்சரியமாப் பாக்கிற. ஏனெண்டு சொல்றன்.

மட்டக்களப்பார், தயிர் சாப்பிடுறண்டா தயிருக்குச் சீனி வேணும். வாழைப்பழமும் வேணும். சோத்தோட சாப்பிடுற எண்டா நீங்க நினைக்கப்படா சோறு கறியோட சேத்து தயிர் சீனி வாழப்பழமெல்லாம் குழைச்சித் தின்றண்டு. அப்பிடி இல்ல. சோறு கறி சாப்பிட்ட பிறகு, அந்தக் கோப்பையிலயே இன்னொருதரம் போல சோறு போட்டு தயிரும், அதுக்குச் சீனியும் வாழப்பழமும் சேத்துச் சாப்பிடுற. இஞ்ச வந்தும் நான் அதையே செய்ய, சனங்கள் ஒரு சாங்கமாப் பாக்குங்கள். நாம அதக் கண்டாலும் காணாத மாதிரி நடத்திறதான். எனக்கெலுவா தெரியும் அப்பிடிச் சாப்பிடுற ருசி எப்பிடியண்டு!! இப்ப சில நெருங்கின ஆக்களுக்குப் பழகித்து. நான் சோறு சாப்பிட்டு முடிய, தயிரெடுத்துத்து சீனிப் போத்தலத் தேடினா ஒரு குருவி ஏனெண்டு பாக்கிறல்ல.

சோறோட சேத்துச் சாப்பிட விருப்பமில்லாட்டி, சாப்பிட்டொழிஞ்ச கையோட தனிய கிண்ணத்தில தயிருஞ் சீனியும் வாழப்பழமும் போட்டுச் சாப்பிடுற. சில பேர் வடிவா இருக்குமெண்டுத்து பழத்தை அரிஞ்சும் தாற. சிலவேள வாழப்பழம் கிடைக்காமப் பொயித்தண்டா தயிரும் சீனியும். ஆனா தயிர் சாப்பிட்டமாதிரியே இரிக்கா.

சா!! என்ன திறமான சாமான் மட்டக்களப்புத் தயிர். அதப் பத்திக் கதைச்சோணயே சாப்பிடோணும் போல கிடக்கு.. மாச்சல் படாம போய் தயிரும் வாழப்பழமும் வாங்கித்து வாறயா மனே? நல்ல புள்ளெலுவா..

----------
அ.சொ.பொ விளக்கம்:
மாச்சல் (மாய்ச்சல்) - சோம்பல்
புள்ளெலுவா (புள்ள எலுவா) - பிள்ளை அல்லவா
திறமான - சிறந்த
Author: மலைநாடான்
•10:19 AM
" மீன்பாடும் தேன் நாட்டின் மட்டு வாவி கரையினிலே ஆடவர் தோளிலும் கா.. அரிவையர் நாவிலும் கா.." ஈழத்துக் கலைஞர் யாழ்ப்பாணம் விரமணிஐயருடன் உரையாடும் சந்தர்ப்பங்களில், ஈழத்தின் கிழக்குக்கரைபற்றிய பேச்சு வரும்போதேல்லாம் அவர் சொல்லி இரசிக்கும் வரிகளவை. அந்த வரிகளின் சொந்தக்காறரும் அநேகமாக அவராகவே இருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.

ஈழத்து முற்றத்தில் உரையாட அழைத்தபோதே, வடக்கின் பேச்சுக்களைப் பதிவு செய்ய பலர் இருக்கின்றார்கள். ஆகவே கிழக்கின் மொழியைப் பதிவு செய்ய எண்ணியிருந்தேன். முன்னைய பதிவொன்றில் மணிமேகலை என்ற சகோதரியும் இதே கருத்தைப் பின்னூட்டத்தில்
காலாகாலமாக ஈழத்து வரலாற்றில் ஈழத் தமிழர் என்றால் யாழ்ப்பாணத்தவர் என்றும் ஈழத் தமிழ் யாழ்ப்பாணத் தமிழ் என்றும் ஒரு பரவலான எண்ணப் பாங்கு வளர்ந்திருக்கிறது.
அதன் தவறு யாராலும் சுட்டிக் காட்டப் படவில்லை.
இனியேனும் நாம் அந்தத் தவறுகளை விடாமல் மற்றவர்களையும் (மட்டக் களப்பு,திருகோணமலை,மலையகம்)சேர்த்து கொண்டு போக வேண்டிய கடமை நம்மெல்லோருக்கும் உண்டு.
நம் கடந்த கால வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடங்களைப் படிக்க வேண்டியதும் நமது கடமையாகும்.
அப்போது தான் நாம் வளர்ந்திருக்கிறோம் என்று அர்த்தம்.
இது என் அறிவுரையல்ல; ஒரு ஆதங்கம் அவ்வளவு தான்.
எனத் தெரிவித்திருந்தார். சகோதரி உங்கள் விருப்பமும் இணைந்ததே இவ்விடுகை.
என் வளர்விலும் வாழ்விலும் நிறைந்த அந்த மக்களின் மொழியில் அவர்களின் மனந்தெரியும்.

கிழக்கு மக்களின் பேச்சு மொழியில் அதிலும், குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேச மக்களின் பேச்சில் 'கா' எனும் ஒலி நயம் கலந்திருக்கும். அதிலம் அங்குள்ள பெண்கள் அதை மிக லாவகமாக பேச்சு மொழியில் சேர்ப்பார்கள்.
" ஏங்கா மறுகா போவிகளா..?" ( ஏனக்கா மறுபடியும் போவீர்களா )
"இல்லை மக்கா..இன்னிக்கு போறதிக்கு இல்லக்கா.." (இல்லை மக்களே இன்று போவதிற்கில்லை)
" சொன்னாக்கா கேக்கனும் மக்கா.." (சொன்னால் கேட்கணும் மக்களே)
இப்படி பேச்சு வழக்கில் சரளமாக கா வந்து சேரும்.
இந்தப் பெண்களின் பேச்சில் கலந்திருக்கும் மற்றுமொரு சொல்
"கிளி". இது அவர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு மொழியடையாளம்.
"ஏன்ங்கிளி..?" " இல்ல கிளி" இது ஆண், பெண் வித்தியாசமில்லாது, இளையவர்களை அழைக்கும் போது சேர்த்துக் கொள்வார்கள். இந்த வகையில் " ஏன் மக.."" என்ன மகா" என்பதையும் சேர்க்கலாம்.
பெண்கள் இதனை சரளமாகப் பேசுவார்கள் எனினும், ஆண்களின் உரையாடலிலும் அப்படியே கலந்திருக்கும். மிகச்சிறந்த ஊடகவியலாளனாக அறியப்பட்ட தராக்கி சிவராம் அப்படிப் பேசுபவர்களில் ஒருவர். மிக அழகாகவும், இயல்பாகவும், இந்த மொழிநடையில் அவர் பேசுவார்.
"ஆளே!.. என்னாளே..?" (என்னடாப்பா என்பது போல்)
"ஓண்டாப்பா" ( ஓமடாப்பா என்பது போல)

அது சரி தொடக்கத்தில் சொன்னபடி அரிவையர் நாவில் கா வருவது புரிகிறது, அதென்ன ஆடவர் தோளில் கா என்கிறீர்கள் அப்படித்தானே..?
முன்னைய நாட்களில் மட்டக்களப்புப் பகுதியில் சில்லறை வியாபரிகள், மீனவர்கள், தங்களுடை பொருட்களை, நீளமான கயிறுகளில் இணைக்கப்பட்ட கூடைகளில் வைத்து , கயிற்றின் நுணியை நீளமான தடிக்கம்புகளில் கோர்த்த பின் தடிகளைத் தோளில் சுமந்து செல்வார்கள். தூக்குபவரின் முன்னும் பின்னும் பொருட்கள் கூடைகளில் தூக்கிச் சொல்லப்படும். அந்தத் தூக்குத்தடியை ' கா ' என்று அழைப்பார்கள்.

அதுவே ஆடவர் தோளில் கா, அரிவையர் நாவில் கா

மக்கா மறுவாட்டி பாப்பம்...