Author: யசோதா.பத்மநாதன்
•5:57 PM
கோவியாதைங்கோ பிள்ளையள்!எல்லாரும் உதில ஒருக்கா இருங்கோ சொல்லுறன்.

உங்களுக்கு நான் இண்டைக்கு ஒரு கதை சொல்லப் போறன். ஓலப் பெட்டி பின்னிற மாதிரி நாங்கள் முந்திப் புழங்கின கொஞ்சச் சொல்லுகள வச்சு ஒரு சம்பவம் பின்னியிருக்கிறன்.அந்தக் காலத்தில இப்பிடித் தான் நாங்கள் தமிழ் கதைச்சனாங்கள்.எங்க நீங்கள் அதின்ர கருத்தச் சொல்லுங்கோ பாப்பம்!


********************************* ******************************


ஞாட்புக்கு முற்பட்ட காலம் அது!

18ம் நூற்றாண்டு!!

சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தாள் சந்தனா.அது ஓர் அதிகாலைப் பொழுது! மழை பெய்து ஈரலிப்பாக இருந்தது நிலம்.சில் என்ற குளிர்காற்று முகத்தில் வீசியது.தோட்டப் புறம் நிலவொளியில் மங்கலாய்த் தெரிந்தது.கிணற்றங்கரையை அண்டிய வெளியில் செம்மண் பூமியில் செழிப்பாய் வளர்ந்திருந்த துவர்க்காய் மரங்களும் கிஞ்சுகத்தில் படர்ந்திருந்த தாம்பூலவல்லிக் கொடிகளும் அதற்கருகாக அமைந்திருந்த காரவல்லிப் பந்தலும் கண்களுக்கு மங்கலாய்த் தெரிந்தன.தூரத்தே கொஞ்சம் புற்பதிகள் அசைவதையும் கண்கள் கண்டு கொண்டன.நேரம் அண்னளவாக 4.45 மணி இருக்கும் போலத் தோன்றியது.கீழ் திசையில் ஒரு பிரகாச நட்சத்திரம்.

புழைக்கடைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் சந்தனா.வாய்க்காலும் வரம்புகளும் மரங்களுமான பெரிய வளவு அது.அங்கே வத்சலையும் வந்சமும் நின்றிருப்பது தெரிந்தது.முன்னொரு காலத்தில் பகடுகளும்,மேதிகளும், குரச்சைகளின் ஒலியுமாக இந்த இடம் களை கட்டி இருக்கும் என அறிந்திருந்தாள் அவள்.அவை எல்லாம் அழிந்து போய் இன்று அந்த இடத்தை வத்சலை நிரப்பி இருக்கிறது.

கிணற்றங்கரை நோக்கி விரைந்தாள் அவள்.அது சற்றே தொலைவு.கபோதம் ஒன்று விழித்துக் கொண்டு சிறகடித்தது.மண்டூகம் ஒன்று தூரமாய்க் கத்துவது காதில் வந்து விழுகிறது.அதற்கு,நேற்றய மழை தந்த குதூகலம் போலும்! மண்நிலம் மழையினால் கழுவுண்டு ஓலைகளையும் குப்பைகளையும் ஒரு புறமாய் ஒதுக்கி அவள் நடந்து போக வழி சமைத்திருந்தது. செம்பட்டுக் கம்பளம் போல நடைபாதை.தூரத்தே கச்சோதம் வெளிச்சத்தைச் சிந்தி சிந்தி மறைவதும் கண்ணுக்குத் தெரிகிறது.கடவுள் வழிகாட்டுகிறாரோ? அதிகாலைப் பொழுதுகள் அழகானவை; அலங்காரமானவை.மழையினால் கழுவுண்டு விடிகின்ற பொழுதுகள் இன்னும் அம்சமானவை.

உள்ளங்கால் ஈரம் உணர சில்லென வீசிய குளிர்காற்று முகத்தை வருடிச் சென்றது.சிமிக்கிகளைப் போல மந்தாரப் பூக்கள் பாதையின் இரு மருங்கும் தொங்கியிருக்க அவைகளுக்குள் சிற்சில சுரும்பும் கேசவமும் சிறகடிக்கும் ரீங்காரமும் காதில் விழுகிறது.கோகிலத்தின் குரலும் தூரமாய் கேட்கிறது.உடனே சந்தனாவுக்கு அவந்திகையின் நினைவு எழுந்தது.அண்மைக்கால சினேகிதமாய் அவளோடு ஒட்டி உறவாடும் உறவது.கசனத்தைக் கண்டு நேற்று அவள் தந்தை தன் பயணத்தை நிறுத்திச் சற்றே தாமதமாய் புறப்பட்டது அவளுக்கு ஏனோ சட்டென்று நினைவு வந்தது.ஏன் தந்தை இன்னும் சகுனங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தான் இன்னும் அவளுக்குப் புரியாத புதிர்.

ஓர் இளவரசியைப் போல இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் உணர்ந்தவாறும் நடந்து சென்று கிணற்றில் தண்ணீரை முகர்ந்து தன் மீது விரைவாக ஊற்றித் தன்னை உவளித்து உலர்த்திக் கொண்டு வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள் சந்தனா.இனி அவள் தாமதிக்கக் கூடாது.அவள் நவநீத நிறம்.வலப்புற சூழி கொண்ட குந்தளம்.கங்கதம் கொண்டு அதனைச் சீர் செய்து கொண்டாள்.அருகிலே இருந்த படிமக்கலத்தின் உதவியோடு அங்கராகம் இட்டுக் கொண்டாள்.மாலதியும் மெளவலும் நினைவுக்கு வர அவையும் அங்கு அரங்கேறின.



படிமக்கலத்தின் முன்னால் உள்ள முக்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.அந்த யெளவன மங்கைக்கு செவிப்பூ வெகு வசீகரம்.அங்குலியில் உகிர் அழகாகச் சீர் செய்யப் பட்டிருந்தது.அவை மொட்டுக்களை ஒத்திருந்தன.அவள் ஒட்டமும் அதரமும் மாதுளம் பூ.உள்ளே இருப்பனவோ மாதுளை முத்துக்கள்.அருகே அழகைக் கூட்டிய படி அங்கிதம் ஒன்று.அது சிறுவயது விளையாட்டால் கிடைத்த பரிசு.கிலுத்தைத்தில் இருந்து கூர்ப்பரம் வரை அணிகள் அழகு செய்தன.அந்தச் சியாமளவல்லி தவள வண்ண சேலையில் சோபிதமாய் நின்ற நிலை ஒரு கவிதை.முகமோ மஞ்சரி.அவள் கோகில வாணி,ஞமிலினதும் வெருகலினதும் தோழி.அவள் எகினத்தின் சாயல்.

ஆனால் அவளுக்கு வைரிகளும் இருந்தார்கள்.துந்துளம் அவள் பரம வைரி.பிபீலிகையும் நளிவிடமும் அவள் வீட்டின் விருந்தாளிகள் என்பதில் அவளுக்கு பலத்த ஆட்சேபம் இன்றுவரை இருக்கிறது.கூடவே இப்போது நிலந்தியும் சேர்ந்து விட்டிருக்கிறது.இது பற்றி எத்தனையோ தரம் அவள் தந்தையிடம் முறைப்பாடு செய்தாயிற்று. எனினும் எந்த விடயமும் இன்று வரை நடந்த பாடாயில்லை.

அதே போல அவளுக்குச் சில ஆசைகளும் இருந்தன.அரச கதைகளைக் கருத்தூன்றிப் படிப்பதால் விளைகின்ற ஆசைகள் அவை.சாரங்கத்தையும் நேமியையும் சிதகத்தின் கூட்டையும் காணவேண்டும் என்பது அவள் நெடு நாளைய கனவு.தோழி ஒருத்தி கொண்டு வந்து கொடுத்திருந்த சசலத்தைப் பார்த்து அவளுக்கு வியப்போ வியப்பு!சசலம் கொண்டு அவள் செய்யும் நுட்பமான தையல் வேலைக்கு அவள் தோழியர் கூட்டம் அடிமைப்பட்டுக் கிடக்கும்.கோமளவல்லியான அவள் ஞெள்ளல் பொருந்தியவள்.பொற்பும் போதமும் நிறைந்தவள்.பிங்கல அனிகலன்களை அவள் அணிந்து கன்னல் மொழி பேசி வந்தால் காண்போர் மனம் கொள்ளை கொண்டு போகும்.

அவள் புறப்பட்டு விட்டாள்.இனித் துச்சில் புறமாக ஓதம் வந்ததால் பங்கமுற்றிருந்த பகுதியைத் தாண்டி நடந்தால் சற்றே வெளிச்சம் தென்படும்.தால வரிசை செறிந்த மார்க்கம் புலப்படும்.அதனைக் கடந்தால் விடங்கம் அலங்கரித்த மறுகு வரும்.அதனூடு போனால் பாகசாலை தெரியும்.அவள் விரைந்து நடந்தாள். கபித்தமும் சிந்தகமும் அவ்விடத்தைச் சுற்றி வளர்ந்து இருந்தன.அவற்றினிடையே ஒன்றிரண்டு ஆசினியும் அலங்கரித்தன.அவை செழுமையைப் பறைசாற்றிய வண்னம் அந்த இடத்துக்கு ஒரு வித சோபிதத்தை அளித்துக் கொண்டிருந்தன.

பாகசாலையை நெருங்கியதும் உள்ளே சில ஆட்களும் குமுதமும் தெரிந்தன.ஏனென்றால் அது பாதிக் குந்தும் கூரையும் மட்டும் கொண்டமைந்தது.அதனால் உலூகலம்,முசலம்,வட்டிகை,நவியம்,சூர்ப்பம்,தாம்பு,குழிசி,என்பன கிடப்பதும் தெரிந்தன.ஞிகிழியில் இருந்து வந்த வெளிச்சத்தில் மும்மரமாய் வேலை செய்து கொண்டிருந்த தொண்டர்கள் தென்பட்டனர்.அவர்கள் மீது தென்பட்ட சுவேதம் தவள நிற பெளவம் போல மிளிர்ந்து தனிச் சோபையை அவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தது.அது தொண்டுமை தந்த பரிசு அவர்களுக்கு.அது பக்தித் தொண்டுமை!


அதனருகே பதிவான சிறு குடில் பகுதி கீசகம் கொண்டு முழுமை பெற்றிருந்தது.அதற்கருகே நறுமருப்பும் உருளரிசிச் செடிகளும் இறும்பு போல அடர்ந்திருந்தன.அதற்குள் சசம் பதுங்கி இருப்பது வழக்கம் என்பது ஒரு சிலருக்கே தெரியும். சந்தனாவுக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை.தெரிந்திருந்தால் அதுவும் வேண்டும் என்று கேட்டிருப்பாள்.

இவற்றை எல்லாம் பார்த்த படி ஞெள்ளல் பொருந்திய பாவனபக்தியோடு மதுரமான சந்தனா சசியோடு விரைந்து நடந்தாள்.அவள் கம்பீர மகிஷி.சுதந்திர ராணி.இயற்கையோடு உறவாடும் உள்ளத்தினள்.பக்தி கொண்ட பாவை.அவள் மனமெல்லாம் நேமி நாதம் கேட்கும் ஆசை.

சயந்தன தரிசனத்துக்காகத் தான் இந்த அவசரமெல்லாம்.”

********************** *********************** *************

எங்கே, சொற்களுக்குப் பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

ஞாட்பு -
சுரும்பு -
கேசவம் -
கோகிலம் -
அவந்திகை -
கசனம் -

உவளித்து -
படிமக்கலம் -
நவநீதம் -
சூழி -
குந்தளம் -
கங்கதம் -
அங்கராகம் -
மாலதி -
மெளவல் -

அங்குலி -
உகிர் -
ஒட்டம் -
அதரம் -
அங்கிதம் -
கிலுத்தம் -
கூர்ப்பரம் -

சியாமளம் -
மஞ்சரி -
கோகிலம் -
ஞிமிலி -
வெருகல் -
எகினம் -

துந்துளம் -
பிபீலிகை -
நளிவிடம் -
நிலந்தி -

சாரங்கம் -
நேமி -
சிதகம் -
சசலம் -
கோமளம் -
ஞெள்ளல் -
பொற்பு -
போதம் -
பாவனம் -
பிங்கலம் -
கன்னல் -

துச்சில் -
ஓதம் -
பங்கம் -
தால வரிசை -
மார்க்கம் -
விடங்கம் -
மறுகு -
பாக சாலை -
கபித்தம் -
சிந்தகம் -
ஆசினி -

குமுதம் -
உலூகலம் -
வட்டிகை -
நவியம் -
முசலம் -
சூர்ப்பம் -
தாம்பு -
குழிசி -


சுவேதம் -
தவளம் -
பெளவம் -

சீசகம் -
நறுமருப்பு -
உருளரிசி -
சசம் -

மதுரம் -
சசி -
நேமிநாதம் -
சயந்தனம் -
Author: யசோதா.பத்மநாதன்
•5:58 PM


’மோனை இஞ்ச ஒருக்கா வா ராசா.நாரீக்க பிடிச்சுக் கொண்டுது.அங்கால இங்கால அரக்க ஏலாமல் கிடக்குது.உந்தப் பரியாரியார் தந்த தைலம் உங்கனக்க அந்த வெத்திலத் தட்டத்துக்குக் கிட்டதான் எங்கயோ வச்சனான் ஒருக்கா எடுத்துத் தா.’ - காலை நீட்டி முதுகை சுவருக்கு காட்டிய வண்ணம் உட்கார்ந்திருந்த மணியாச்சி பேரனைக் கூப்பிட்டாள்.

’உனக்கணை அசைய ஏலாமல் கிடக்குது அதுக்கிடையில முற்றத்துக்குப் போக நிக்கிறாய்.முதல் எழும்பி நிக்கப் பார்’ பேசிக்கொண்டே ஏதோ வேலையாக நிக்கிறான் பேரன்.

‘இல்ல ராசா கலியாண வீடெண்டா சும்மாவே! அங்க எத்தின இனசனம் வரும்;எவ்வளவு வேலையள் இருக்கும்.எல்லாப் பிள்ளையளும் என்ர கையுக்க வளந்ததுகள் எல்லாம் வெளிநாடெண்டு ஓடி விட்டுதுகள். இப்பிடி ஒரு நல்ல நாள் பெருநாளில தானே எல்லாரையும் காணலாம்.அண்டைக்கு இவன் எங்கட மாணிக்க வாசகரைத் தெரியுமெல்லே? அவன அண்டைக்கு சங்கக் கடை வாசலடியில் கண்டனான்.அவன்ர மோளுமெல்லே வெளி நாட்டால வாறாளாம்.இதுகள் எல்லாத்தையும் விட்டிட்டு இஞ்ச சும்மா இருக்கச் சொல்லுறியே? எங்கட பரியாரியார் தந்த தைலத்த மூண்டு தரம் போட்டுட்டு நிமிந்து மூண்டு நாளைக்குப் படுத்தனெண்டா அது என்ன எழுப்பிப் போடும் மோனை.நீ ஒண்டுக்கும் யோசியாத.

மெய்யே மோன! அந்தச் சின்னப் பொடிச்சி பூக்களை எல்லாம் புடுங்கிப் பூமாலை கோத்துக் கொண்டு திரிவாள் - பேருகளும் எல்லே இப்ப மறந்து போகுது,.. அவளும் வருவாளே? முன்ன எத்தின பொடியள் ராசா! வர்மா, வலசு,வந்தி அவங்கள்,இவங்கள் எண்டு - இந்த நாசமாப் போன மறதியால ஒண்டும் எனக்கு ஞாபகமும் வருகுதில்ல - அவங்கள் எல்லாம் வருவாங்கள் தானே!

முந்தி உந்த விறாந்தையடியிலயும் படலையடியிலயும் நிண்டு கொண்டு எவ்வளவு சமா வச்சுக் கொண்டிருப்பாங்கள்.எத்தின புதினம் கதைப்பாங்கள்.ஒருத்தனையும் இப்பக் காணக் கிடைக்குதில்ல.அவங்கள் எல்லாம் ஆளுக்கொரு மூலையாப் போயிட்டாங்கள்.எல்லாரையும் இப்பிடி ஒரு நேரத்தில தானே காணலாம்.உவன் வடலியூரான் தான் மணியாச்சியயும் மறக்காம அங்கனேக்க இங்கனேக்க ஓடியாடித் திரியிறான்.

எத்தின வேலையள் கிடக்குதங்க.இன்னும் என்ன ரெண்டு,மூண்டு கிளமை தானே கிடக்கு.குருமணல் பறிப்பிக்க வேணும்,முற்றத்தில பந்தல் போடவேணும்,அலங்காரங்கள், சோடினையள், பலகாரச் சூடு,மாவிலத்தோறணம் செய்யக் கொஞ்சம் பொடியள் வேணும்.சொன்னாப் போல கேட்டியே, ராசா! உந்தக் தென் பகுதியாலயும் ஆரோ ரெண்டு பிள்ளையள் வருகினமாம். கேள்விப்பட்டனியே!அதுகளுக்கு எங்கட சாப்பாடு,இருப்பிடங்கள் ஒத்து வருமோ தெரியாது. அதுகள வடிவாக் கவனிச்சுப் போடு என்ன!,ஆ... எங்க விட்டனான். ஓ... அதுதான் உந்த வேலையள்...வாழைக்குலை வாங்க வேணும்,வீட்டுக்குப் பெயிண்ட் வேற அடிக்க வேணும். மேளச் சமாக் காரரைக் கூப்பிட வேணும், சாமான் சக்கட்டு எல்லாம் வாங்க வேணும்.அது சரி,சொன்னாப் போல மணவறக் காறருக்கும் ஐயருக்கும் சொல்லிப் போட்டியே?

காறுகளும்(car) வேணும் ராசா. மதவடிச் செல்லப்பரிட்ட சொல்லிப் போட மறக்காத.பிறகு அந்தாள் நீ முன்ன சொன்னியோ பின்ன சொன்னியோ எண்டு பெரிய வீறாப்புப் பேசிக் கொண்டு நிக்கும். கொழும்புக் காரர் வாற நேரத்தையும் வடிவா ஒருக்காக் கேட்டு வை.ஸ்ரேசனுக்கு நேரத்துக்குக் கொண்டு போட வேணும். ஏற்கனவே களைச்சு விழுந்து வாறதுகள். நாங்கள் பிந்திப் போடக் கூடாது.உதுகள எல்லாம் முதலே சொல்லி வை என்ன? மறந்து போகாமல். பிறகு அங்க பாத்தன் பின்ன பாத்தன் எண்டு அந்தரப் பட்டுக் கொண்டு திரியாமல் இப்பவே கையோட கையா சொல்லிப் போடு.உவன் பிரவா உதுகள எல்லாம் தனியச் செய்யேலாது கண்டியோ!

உவன உந்தத் தைலத்தக் கொண்டந்து தாவெண்டா அவன் எங்கயோ ஓடியிட்டான். நான் என்ர பாட்டில என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறன்.இனி நான் தான் மெல்ல மெல்ல அரக்கி எடுக்க வேணும்.உந்தக் காலத்துப் பொடியள் என்னத்தக் கேக்கிறாங்கள்! அவங்கள் தங்கட பாடு, நான் என்ர பாடு, அப்பூ... முருகா... என்ர ஆண்டவரே... எப்பனும் ஏலேல்லாமல் கிடக்கு...முதுகு நல்லாப் பிடிச்சுக் கொண்டுது....(ஆச்சி மெல்ல நாரியப் பிடிச்சுக் கொண்டு எழும்பிவிட்டா)

மணியாச்சி வெளிக்கிட்டிட்டா. அப்ப நீங்களும் எல்லாரும் வருவியள் தானே?

(படம் நன்றி;கூகுள் இமேஜ்.)

சொல் விளக்கம்:

மணியாச்சி - வேற யார்? நான் தான்:)
வெளிக்கிடுட்டா - புறப்பட்டு விட்டா
மோன - மகனே, மோள் - மகள்
உங்கனேக்க - உவ்விடம் தான் ஏதோ ஓரிடத்தில்.
நாரி -கீழ்முதுகின் முள்ளந்தண்டுப் பகுதி
அரக்க ஏலாமல் - அசைய முடியாமல்
பரியாரியார் - ஆயுள்வேத வைத்தியர்
மெய்யே மோனை - அழைப்புச் சொல் - உண்மையா மகனே என்ற கேள்வியோடு ஆரம்பமாகும் வாக்கியம்.
விறாந்தை - முன் கூடம், படலை - கேற்
சமா,புதினம் - கதை,பேச்சு
குரு மணல் - சீனியைப் போல இருக்கும் வெள்ளை மணல்.
(பெரிய கொண்டாட்டங்களுக்கு முற்றத்தில் இம்மணல் பரப்புவது வழக்கம்.சிலர் படங்கு விரிப்பதும் உண்டு)
எப்பனும் ஏலேல்லாமல் - கொஞ்சமும் முடியாமல்
வீறாப்பு - வீண் பெருமை(இளந் தலைமுறை லெவல் அடிக்கிறது என்பர்).
Author: வடலியூரான்
•10:52 AM
(இந்தப்பதிவு வந்தியண்ணாவின் கொட்டில் காலத்து ஞாபகங்கள் ஐயும் சினேகிதி அக்காவின் ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள். ஐயும் வாசித்து என் நினைவுகள் மீட்டப்பட்ட/தூண்டப்பட்ட பின்னர் எழுதப்பட்டது)

எஙகளுக்குப் புகழ்ச்சி பிடிக்காது எண்டாலும்,எங்கடை சேர்மார், டிரெகடர்மார்(Director) "செம்மரியளே","மாடுகளே","எருமையளே","நாயளே","பேயளே","பிசாசுகளே" எண்டு எங்களை விளித்துப் புகழாமல் இருக்கமாட்டினம்.மைகிறேசன் விசா(Migration Visa) எடுத்து நிரந்தரமாப் நாட்டை விட்டுப் போறதைப் போலவோ அல்லது ஸ்ருடென்ற்(Student), வேர்க்(Work) விசா எடுத்து ரெம்பரரியாப்(Temporary)போறதைப் போலவோ எங்களை டியூசனுகளாலை கூடுதலா டெம்பரரியாகவும் சிலவேளைகளில் பேர்மனன்ட் ஆகவும் திரத்துவினம்.




இவ்வாறான பல துரத்தப்பட்ட துன்பியல் சந்தர்ப்பங்கள் எங்கடை வாழ்க்கையிலை இருந்தாலும் சயன்ஸ் சென்டர்(Science Center) இல் ஓ/எல் (O/L) வரை படிக்கும் போது திரத்தப்பட்டதில் இரண்டு துரத்தல்கள்,மெகா துரத்தல்கள் தான்.அவற்றில் ஒன்றைத் தான் இன்று பதிவதாய் உத்தேசம்.இது நடந்தது நாங்கள் ஒ/ல் படிச்சுக்கொண்டிருக்கேக்கை.தமிழர் பிரதேசங்களில் ரியூசனுகள் எல்லாம் கூடுதலாக கொட்டிலுகளில் தான் நடாத்தப்படும்.கொட்டில் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்காக,கொட்டிலெனப்படுவது யாதெனில், தகரத்தாலோ,கிடுகாலோ வேயப்பட்ட கூடாரம் என்றாவது இப்போதைக்குப் புரிந்தால் சரி.எங்களது பிரதேசங்களின் போர்ச்சூழல்கள்,அதனால் வந்த பொருளாதார வரட்சி என்பன கொட்டிலுகளுக்குள் தான் எம் கல்வியை முடக்கிவிட்டிருந்தது.



ஒரு ரியூசன் எண்டால் இஞ்சை கொழும்பிலை எப்பிடி ரொயிலற்(Toilet) வாசலிலை கிச்சன்(Kitchen) இருக்கிற கொடுமையெல்லாம் இருக்குதோ அதைபோல அங்கை ஒரு கொட்டிலுக்குப் பக்கத்திலை இன்னுமொரு கொட்டில் இருக்கும்.இரண்டு கொட்டிலுக்குமிடையிலை இடைவெளி இரண்டு அடிகூட வராது. ஒரு கொட்டிலிலை வாத்தியார் "இளையான் குடிமாறநாயனாரைப் பற்றி இலக்கியப் பாட்டுப் படிச்சு, பொருள் சொல்லிக் கொண்டிருக்க, இஞ்சாலை மற்றக் கொட்டிலுக்கை இன்னொரு வாத்தியார் மனித இனப் பெருக்கம் பற்றிப் படிச்சுக் கொண்டிருப்பார்.இரண்டு வாத்திமாரும் நல்லா போட்டிபோட்டுக் கொண்டு வாய் கிழியக் கத்திப் படிப்பிச்சுக் கொண்டிருப்பினம்.





கொட்டிலின்ரை கரையிலை இருக்கிற பெடியனுக்கு, ஒரு காதுக்கை இளையான்குடிமாற நாயனாரும் மற்றக் காதுக்குள்ளை இனப்பெருக்கமும் கேக்கும்.கொஞ்ச நேரத்தாலை அவனுக்கு எதைக் கேக்கிறது எண்டு தெரியாமல் இளையான் குடிமாற நாயனாரின்டை பாட்டைக் கேட்டு நான் என்ன பாட்டே எழுதப் போறன்.அதை விட இனப் பெருக்கத்தைக் கேட்டாலும் ஏதோ வாழ்க்கைக்கு கொஞ்சம் பிரியோசனமா இருக்கும் எண்டிட்டு அங்கால்ப் பக்கக் காதை வடிவாத் திறந்து, அங்காலை நடக்கிறதை வடிவா கேட்கத் தொடங்கிடுவான்.அதோடை அங்கால் வகுப்பு பெட்டையளை சைற் அடிச்சுக் கொண்டிருக்கலாம்.சின்னக் கல்லுகள் எடுத்து அவகளின்ரை காலுக்குக் கீழை எறிஞ்சு விளையாடிக் கொண்டிருக்கலாம்.சிலவேளைகளில் சிரிப்பாளுகள்.சிலவேளைகளில் முறைப்பாளுகள்.சிலவேளைகளிலே பேசாத பேச்செல்லாம் பேசுவாகள்.என்ன தான் இருந்தாலும் அந்தப் பேச்சு வாங்கிறதிலையும் ஒரு "இது" இருக்குத் தான்.கரையிலை இருக்கிற அவன் மட்டுமில்லை, வகுப்பிலை இருக்கிற எல்லாரும் உதை தான் செய்து கொண்டிருப்பாங்கள்.



உதை மாதிரித் தான் ஏ.எல்(A/L) படிக்கேக்கையும் மற்ஸ்(Maths)காரருக்கு நல்லையா சேர் இஞ்சாலை படிப்பிச்சுக் கொண்டிருக்கேக்கை அங்காலை பக்கத்திலை பயோ(Bio)காறருக்கு தம்பர் சோலொஜி(Zoology) இல்லாட்டில் குணசீலன் பொட்னியோ(Botany) படிப்புச்சுக் கொண்டிருந்தால் மற்ஸ் வகுப்பு அந்த மாதிரித்தான் போகும்.தம்பரட்டை பெட்டையள் குட்டு வாங்கிறதையும்,தம்பர் பெட்டையளின்ரை கொப்பியைத் தூக்கியெறிஞ்சு "ஓடடி என்ரை முகத்திலை முழியாதையடி" எண்டு திரத்திறதையும்,குணசீலன் "நாயே,பேயே, என்னத்துக்கு இஞ்சை வாறனியள்.அம்மா அப்பவின்ரை காசையும் கரியாக்கி,அதுகளையும் பேக்காட்டி,உங்களையும் நீங்களே பேக்காட்டிக் கொண்டு, பேருக்கு பையோ படிக்க எண்டே வாறனியள்?" எண்டு இதை விட இன்னும் காரசாரமாவெல்லாம் பேச்சு விழும்.மற்ஸ் பெடியளுக்கு இஞ்சை நல்லையர் எழுதிற கணக்கு உள்ளை போகாது.(பின்ன என்னெண்டு போகும்).நல்லையா சேரும் பேசுவார்."டேய் உங்கை என்ன பராக்குப் பாக்குறியள்.உங்களையும் உப்பிடி விட்டால் தான் திருந்துவியள்.பேசாமல் கணக்கைச் செய்யுங்கோ பாப்பம்" எண்டு எங்கடை பராக்கை திருப்பிறதுக்காண்டி சிலவேளைகளிலை சில "உண்மைச் சம்பவங்களை" ச்சொல்ல வெளிக்கிடுவார்.ஆனால் பெடியள் கவனிக்கோணுமல்லோ!!!




இனிக் கொட்டிலுகளைப்பாத்தாலும் ஒரு 4,5 பேர் ஒன்றாக இருக்கக்கூடின மாதிரி நீட்டு வாங்கில்கள் மாதிரித்தான் மேசைகள் இருக்கும்.மேசையிலே இடமேதும் மிஞ்சாமல் மேசைமுழுவதும் பேனைகளால்,வட்டாரி,பிரிவாரி கூர்களினால் கிறுக்கப் பட்டிருக்கும்.பெடியள் எல்லாம் கணக்கைத் தான் படிச்சு மேசையிலை எழுதினவங்களாக்கும் எண்டு நினைச்சுப்போடாதையுங்கோ.ஒரு பெடியனையும் இன்னுமொரு பெட்டையையும் கூட்டித் தான் அதிலை எழுதியிருப்பாங்கள்.ஒரு நண்பனின் காதலை அவன் காதலிப்பவளிடம் அல்லது அவளின் தோழிகளுக்கு மறைமுகமாகத் தெரிவிப்பதற்கு அவனது நண்பர்களோ அல்லது சிலவேளைகளில் ஒருவனே தான் இன்னாரைத்தான் காதலிக்கிறேன் என்று தன் நண்பர்களுக்கும் தான் நேசிப்பவளுக்கும் தெரிவிப்பதற்கும் இது ஒரு ஊடகமாகப் பயன்படும்.




அந்தக்காலத்திலையே பேஸ்புக்கும் எஸ்.எம்.எஸ் ஐயும் கண்டுபிடிச்சிருந்தாங்கள் எண்டால் அந்த மேசையள் எல்லாம் உந்தக் குத்துக்கள்,கிறுக்கல்களையட்டையிருந்து தப்பியிருந்திருக்கும்.இணைந்த இதயங்களைத் துளைத்துச் செல்லும் அம்புகளும்,அந்த இதய்ங்களுக்குள் காதலர்களின் முதல் எழுத்துக்களும்,கண்களினூடு இரத்தம் சிந்துவதாக வரையப்பட்ட கிறுக்கல்கலும் கால்ம் கடந்தும் காதல் பேசிக் கொண்டிருக்கும்.காதலர்கள் பிரிந்திருந்தாலும் காலம் காலமாக காதல் செய்துகொண்டிருக்கும்.புதியதலைமுறைக் காதலர்களுக்கு,அந்தக் காதல்களின் ஆழத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும்.




கொட்டிலுக்குக் கீழை செம்மண் புழுதி போட்டு ந்நிரவப்பட்டிருக்கும்.யாராவது செருப்பைக் கழட்டிப் போட்டு, ஏ. கே(A.K)த தனமா(ஆர்வக் கோளாறைத் தான் ஏ. கே எண்டு ஸோட் அன்ட் ஸ்வீற்றாச் சொல்லுறது பாருங்கோ)வகுப்பைக் கவனிச்சுக் கொண்டிருந்தால் பின்னுக்கு இருக்கிறவங்கள் செருப்பை எடுத்து மண்ணுக்கை தாட்டுப் போடுவாங்கள்.வகுப்பு முடிஞ்ச பிறகு அவன் நிண்டு கண்ணிவெடி எடுக்கிற மாதிரித் தான் எல்லா இடமும் கிளறி எடுப்பான்ன். சிலவேளையிலை அதை பெட்டியளின்ரை வாங்கிலுக்குக் கீழையும் தட்டி விடுவாங்கள்.அவனும் பெட்டையள் போகும் மட்டும் பாத்துக் கொண்டிருந்து எடுத்துக் கொண்டு போறதைப் பாக்க பாவமாயும் இருக்கும் பம்பலுமாய் இருக்கும்.அதோடை மண்ணுக்கை இருந்து கால் எல்லாம் உழக்குப் பட்டு,ரியூசன் முடிஞ்சு வீட்டை போகேக்கை சீமெந்து குழைக்கிற வேலை செய்து போட்டுப்போற மாதிரித் தான் கால் எல்லாம் சிவப்படிச்சிருக்கும்.






இப்படியான ஒரு கொட்டிலுக்கை அண்டைக்கு நடக்கவேண்டிய எங்கடை பாடத்து சேர் வரேல்லை.வகுப்பிலை பாடம் நடக்காத சந்தர்ப்பங்களிலை பெடியள் எல்லாம் எழும்பி கொட்டிலுக்குப் பின்னாலை போய் நிண்டு கொண்டுதான் கதைச்சுக் கொண்டு நிப்பம்.பெட்டைய்ள் தங்கடை இடங்களிலை இருந்துகொண்டு தங்களுக்கை கதைச்சுக் கொண்டிருப்பாகள்.நாங்கள் பெடியள் ஒரு 50 - 60 பேர் எண்டபடியாலை ஒரு கொஞ்சம், கொஞ்சமாப் பிரிஞ்சு கூட்டம் கூட்டமா நிண்டு கொண்டு ஒவ்வொருத்தரும் கதைச்சுக் கொண்டு நிண்டனாங்கள்.



இப்பிடி நிக்கேக்கை ஒருத்தன்,நிலத்திலையிருந்த மண்ணை கையிலை அள்ளி,கொட்டிலுக்குப் பின்பக்கம் கிடுகாலை கட்டியிருந்த மறைப்பை விலத்திப் போட்டு,பெட்டையளுக்கை எறிஞ்சு போட்டான்.உண்மையிலேயே தனியே ஆண்கள் பாடசாலைகளிலே படிச்சதாலோ என்னவோ தெரியாது, எங்களுக்கெல்லாம் அந்த வயதுகளில் எங்கள் மனங் கவர்ந்தவர்களைத் தவிர மற்றப் பெண்களெல்லாம் ஒரு விரோதிகள் போலவே தெரிந்தார்கள்.கத்திறது,கூவடிக்கிறது,பேசக்கூடாததெல்லாம் பேசிறது.பட்டம் பழிக்கிறது,இப்படி மண் எறியிறது,பேனையாலை எறியிறது,றொக்கற் அடிக்கிறது,பக்கத்திலை வட இந்துப் மகளிர் கல்லூரியிலை நெற்போல்(Net Ball) விளையாடிக்கொண்டு நிக்கிற பெட்டையளுக்கு சின்னக் கல்லுகளாலை எறியிறது எண்டு எங்கள் வக்கிரங்கள் வன்முறைகளாக வெளிவந்து கொண்டிருந்தது.(இப்பவெல்லாம் அப்பிடியில்லை.நல்ல பெடியள் தான். அட நம்புங்கோப்பா...!!!)



அவன் எறிஞ்சவுடன்,அவகளுக்கும் எங்களை மாதிரி பெடியங்களைக் கண்டால் பேயைக் காணிறது மாதிரிக் கிடக்குறதாக்கும், போய் எங்கடை டிரக்டர் அமாவாசையட்டைச் சொல்லிப்போட்டாகள்.சிங்கம் சத்தம் போடாமல் வந்திருக்குது.இந்த விசயம் ஒண்டும் தெரியாமல்,நாங்கள் கொஞ்சப்பேர் செற்றாகிக் கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள்.அதுவும் அந்த எறி விழுந்த இடத்துக்குப் பக்கத்திலை அப்பிடியொரு எறியே விழுந்ததே தெரியாமல்.அமாவாசை வந்தவுடனை ,எறிஞ்சவங்கள் உட்பட, அமாவாசையைக் கண்ட பெடியள் எல்லாம் ஓடித் தப்பீற்றாங்கள்.நாங்கள் தான் அம்பிட்டம்.அமாவாசை பேச்செண்டால் பேச்சு.சொல்லி வேலை இல்லை.



ஓடுங்கோ செம்மரியளே இலை தொடங்கிப் பேச்செண்டால் அப்பா.தாங்கேலாது.ஆனால் அதிலை ஒரு துளியும் தூசணம் இல்லை.சத்திய்மாய் சொல்லுறன் மருந்துக்கும் இல்லை.ஆனால் தூசணத்தை விட கர்ண கொடூரமான வார்த்தைகள்.அதைக் கேட்டு அதன் அர்த்தம் புரிகின்ற போதுதான் இந்தத் தூசணத்தைப்பேசிறதை விட இது எவ்வளவு பெபோமன்ஸ்(Performance),பவர்(Power) கூடினது எண்டது தெரியவரும்.எல்லாரையும் கொட்டிலாலை திரத்திக் கொண்டு போய் ரோட்டிலை விட்டாச்சுது.எறிஞ்சது ஆரெண்டு சொல்லுங்கோ.இல்லாட்டில் எல்லாரும் ஒத்தபடி போய் கொம்மா கொப்பாவோடை வாங்கோ.இல்லையெண்டால் வரவேண்டாம் எண்டாச்சுது.



எங்கடை பெடியளட்டை அண்டைக்கும்,இண்டைக்கும்,எண்டைக்கும் இருக்கிற ஒரு நல்ல விசயம் என்னெண்டால் என்னதான் குறளி வேலை பாத்தாலும்,அதைச் செய்ஞ்ச குறளி யார் எண்டு தெரிஞ்சாலும் ஒருத்தரையும் எவர் வந்து கேட்டாலும் காட்டிக் குடுக்கமாட்டம்.அப்பிடியான எங்களட்டை அமாவாசை கேட்டால் மட்டும் சொல்லி போடுவமே. என்ன? அமாவாசை உறுக்கிப் பாத்தார்.ஒருத்தனும் மருந்துக்கும் வாய் திறக்கேல்லை. ஒருத்தனும் மசியிறான் இல்லையெண்டவுடனை ஓடுங்கோடா செம்மரியளே எண்டார்..


எங்களுக்கென்ன நாங்கள் பாட்ச்(Batch) முழுவதும் ஒன்றாய், ஒற்றுமையாய் ரோட்டிலை சந்தோசமா நிண்டம்.அடுத்தடுத்த நாளும் வீட்டையிருந்து ரியூசனுக்கு போற மாதிரி வெளிக்கிட்டுப் போய் ரோட் டியூட்டி(Road Duty) பாத்திட்டுப் போறது.அந்தப் பாதையாலை போய் வாற யாராவது பெடியளின்டை தாய் தேப்பன்,இன சனம்,ஆரும் தெரிஞ்சாக்கள் கண்டால், அவனுக்கு வீட்டை தோலுரிப்ப்த் தான்.இல்லையெண்டால் ஒரு பிரச்சினையுமில்லை.


ரோட்டிலையும் எவ்வள்வு நேரம் தான் சும்மா நிக்கிறது.அதுவும்
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியது. கவரேஜ் கூடின இடமது.எங்களை விட 2 வயசு கூடின அக்கா அவா.அவவுக்குப் பட்டம் "சிங்குச்சா".அப்பிடிக் கூப்பிட்டால் அவவுக்குப் பிடிக்காது எண்டு எங்களுக்குத் தெரியும்.உப்பிடியெண்டு விசயம் தெரிஞ்சால் கட்டாயம் அப்பிடித் தானே கூப்பிடவேணும்.அது தானே முறை,நாங்கள் தான் இப்பிடிக் கோணங்கித் தனமான பழ்க்கவழக்கங்களைப் பழகி வைச்சிருக்கிறம் அல்லோ?கத்தினம்,போனவள் திரும்பி வந்தாள்.தொடங்கினாள்.பிளடி பூல்(Bloody fool),இடியட்(Idiot),நொன் சென்ஸ் (Non Sense)எண்டு,இண்டைக்கு கொழும்பிலை நாங்கள் இன்று கேட்கிற பேச்செல்லாத்தையும் நாங்கள் அண்டைகே வாங்கிப்போட்டம்.


அதெல்லாம் முடிய எங்கடை பாட்சி(Batch) இல் தங்கச்சி மாரை வைச்சிருந்த,ஒரு சில அக்காமரும்(எப்பிடியோ அது அவையின்ரை கடமை தானே அது) எங்கள் மேல ந்ல்லபிப்பிராயம் வைத்திருந்த ஒரு சில நண்பிகளும் அமாவாசைக்கு ஐஸ் வைச்சு எங்களை உள்ளுக்கு எடுத்திச்சினம்.ஒரு 4,5 நாள் ரோட்டு வாசத்தை விட ரியூசன் வாசத்துக்கு உட்புகுந்தோம்.அப்பிடியே எங்கள் கலைக்கப்பட்ட படலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நேரம் வந்தால் கலைக்கப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பத்தைப் பற்றிப் பதிவிடுகின்றேன்


அம்பிட்டம் - அகப்பட்டோம்
குறளி - நசுக்கிடாமல்/சத்தம் போடாமல் படு பொல்லாத ஆப்படிக்கிற வேலைகளைப் பார்க்கிற ஆக்களைச் சொல்லுறது. இது போன்றவற்றைத் தான் இந்தியாவில் மொள்ளமாரி,முடிச்சவுக்கி என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் உறுதிப் படுத்தவும்

அண்டைக்கு - அன்று

மசியிறது - மசிந்து கொடுக்கவில்லை என்றால் அவர்களின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கவில்லை என்று பொருள்படும்

பராக்கு - தன்னையே மறந்து வாய் பார்த்துக்கொண்டு நிற்றல்
தோலுரிப்பு - தோலுரிப்பு என்றால் ஊருக்கு நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய முகத்திரையக் கிழித்தல் என்று சொல்லலாம்.ஆனால் இங்கு சொல்லவந்த அர்த்தம் அதுவல்ல.இன்று உனக்கு வீட்டே தோலுரிப்பு என்றால்,இன்று உனக்கு வீட்டை நல்ல அடி/சாத்து விழப் போகுது என்று அர்த்தம்.