Author: கானா பிரபா
•4:20 AM
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஈழத்துமுற்றத்தில் பதிவிட வந்திருக்கின்றேன். இந்தப் பதிவில் விசேஷமாக ஈழத்துப் பேச்சுவழக்கில் உறவுமுறைகள் என்ற அம்சத்தை எடுத்து, வழக்கில் உள்ள சொற்களைத் தரலாம் என்றிருக்கின்றேன். ஒரு சில சொற்கள் எனது முந்திய பதிவிலும், சக குழுமப்பதிவர்களது பதிவுகளிலுமாக ஈழத்து முற்றத்தில் வந்திருக்கின்றன. இந்தப் பதிவில் விடுபட்டுப் போன மேலதிக சொற்களோடு அமையவிருக்கின்றது. அந்தவகையில் ஈழத்தில் உறவுமுறைகளை அழைக்கும் சொல்லாடல்களை அடுத்துப் பார்ப்போம்.

அப்பு - இந்தச் சொல் பொதுவாக ஒருவரின் தாய் அல்லது தகப்பனின் தந்தையை அழைக்கப் பயன்படும் உதாரணமாக பாட்டன் என்ற சொல்லுக்கு சம அர்த்தம் கொடுக்கும். ஆனால் நமது தலைமுறைக்கு முந்திய காலத்தவர் தமது பெற்ற தந்தையை அதாவது அப்பா என்ற சொல்லுக்குப் பதிலாக அப்பு என்றே வழங்கி வந்தனர். இன்றும் சிலர் தமது தந்தையை அப்பு என்றே அழைப்பர்.

"உன்னுடைய அப்பு எங்கே" என்பது "உன்ர கொப்பு எங்கை" என்று ஈழத்துப் பேச்சுவழக்கில் அமையும்

ஆச்சி- இந்தச் சொல் பொதுவாக ஒருவரின் தாய் அல்லது தகப்பனின் தாயை அழைக்கப் பயன்படும் உதாரணமாக பாட்டி என்ற சொல்லுக்கு சம அர்த்தம் கொடுக்கும். ஆனால் நமது தலைமுறைக்கு முந்திய காலத்தவர் தமது பெற்ற தாயை அதாவது அம்மா என்ற சொல்லுக்குப் பதிலாக ஆச்சி என்றே வழங்கி வந்தனர். இன்றும் சிலர் தமது தாயை ஆச்சி என்றே அழைப்பர்.

"உன்னுடைய ஆச்சி எங்கே" என்பது "உன்ர கோச்சி எங்கை" என்று ஈழத்துப் பேச்சு வழக்கில் அமையும்

அம்மான் - மாமா என்ற உறவுமுறைக்குச் சம அர்த்தத்தில் பாவிக்கப்படுவது. கூடவே ஒருவரை மரியாதையாக அழைப்பதற்கும் அதாவது நேரடி மாமா உறவு முறை இல்லாதவருக்கும் இது அழைக்கப்படும்.
"உன்னுடைய மாமா எங்கே" என்பதை "உன்ர கொம்மன் எங்கே" என்று பயன்பாட்டில் வழங்குவர்

பெரியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் மூத்த சகோதரரைப் பெரியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் மூத்த சகோதரர்

குஞ்சியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய சகோதரரைப் குஞ்சியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரர்

சீனியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் கடைசிச் சகோதரரை குஞ்சியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரர்

குஞ்சியம்மா - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய சகோதரியை குஞ்சியம்ம என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரி

சீனியம்மா - தகப்பன், அல்லது தாய் வழித் தாயின் உடன்பிறந்தோரில் கடைசிச் சகோதரியை குஞ்சியம்ம என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரி

மேற்கண்ட உறவுமுறைகளை நேரடி இரத்த பந்தங்கள் தவிர்த்து மரியாதை நிமித்தம் வழங்கும் பொதுப்பெயர்களாகவும் கொள்ளப்படுகின்றன.
Author: ஹேமா
•2:06 AM

ஏனப்பா....ஏன் என்ர குஞ்சைப் போட்டு அடிக்கிற !

அதுசரி ...உங்கட பிள்ளைக்கு ஒண்டெண்டா உடன வந்திடுவியள்.அதுவும் துண்டை முறுக்கித் தோள்ல போட்டுக்கொண்டு.

நீ இஞ்ச வாடாப்பு ராசா...ஏன் கொம்மா இப்பிடிப் போட்டுக் கும்முறா உன்னை?

ஓம்...ஓம்...அப்பிடியே சொல்லிக் கிளிக்கத்தான் போகுது குரங்கு.வாய் மட்டும்தான் வங்காளம்போல...அதுவும் என்னட்ட மட்டும் !

சரி..சரி...இப்ப என்னப்பா நடந்தது அதைச் சொல்லன் நீ .

ஓம் ஓம்....கால் முளைச்சிட்டுதெல்லோ உங்கட நோஞ்சானுக்கு.உங்கால இஞ்சாலயெண்டு அந்த வளைவு மூலை வளவு வரைக்கும் வெளிக்கிட்டுடார் இப்பல்லாம்...துலைஞ்சவன்.

அதுக்கேனப்பா இப்பிடி அலம்புற.சின்னதுகள் எண்டா வீட்டுக்குள்லயே புளுக்கை போட்டுக்கொண்டு உன்ர சீலைக்குள்ளயே கிடக்குமோ.வெளில போய்க் கீய்த்தானே வருங்கள்.நீ ஏன் இந்தப் பாடு படுறயப்பா.

ஓ...ஓ...இப்பிடியே அவனுக்குச் வக்காளத்து வாங்கி வாங்கியே அவன் நாசமாய்ப் போறான்.அங்கத்தைப் பெடியள் எல்லாம் உதவாததுகள்.அதுகளோட பிழங்கிப் பழகி ஒரு சதத்துக்கு உதவாம வருது உது.எல்லாத்துக்கும் நல்லா வாயடிக்குது.

சரி...விடு விடு...அவன் கெட்டிக்காரன்.சரியாயிடுவான்.

ஓம்...ஓம் உப்பிடியே சொல்லிச் சொல்லித்தான் கழுதை குட்டிச்சுவர்ல ஏறி நிக்குது.பிறகு உதே வாய் என்னைத்தான் குற்றம் சொல்லும்.வளத்த வளப்பைப் பார் எண்டு.அப்ப கேட்டுக்கொள்றன் உங்களை.

யேய்...கொஞ்சம் சும்மா இரு பாப்பம்.சும்மா முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுற.புத்தி இருக்கோ உனக்கு.நீ ஒரு சென்மம்.

அதெண்டாச் சரிதான்.நான் புத்தி கெட்டவளெல்லோ.இஞ்ச வாருங்கோ.
சொல்லித் தாங்கோவன்.

என்ன....நானும் பாத்துக்கொண்டிருக்கிறன்.சத்தம் உச்சத்தில ஏறிக்கொண்டேல்லோ போகுது.கவனமாயிரு...சொல்லிட்டன்....ஓம்.
சும்மா இருங்கோப்பா.ஏதோ நான் சத்தம் போட்டா அடங்கிற ஆள்மாதிரி.பேசாமப் போங்கோ பாப்பம்.

யேய்...இப்ப வாய் மூடப்போறியோ இல்லையோ.இல்லாட்டி...!

ஓம்...ஓம் என்னத்தைச் சொன்னாலும் அடக்கிப்போடுவியளே...இது உங்கட குடும்பத்துக்கே பழக்கிப்போன ஒண்டெல்லோ...

யேய்....இப்ப என்ன உனக்கு....என்னண்டாலும் என்னோட இருக்கட்டும்.தேவையில்லாமலுக்கு என்ர குடும்பத்தை இழுத்தியெண்டா...
சொல்லிட்டன் ஓம்...

அடப் போங்கோப்பா...உங்கட கும்பத்தைப் பற்றித் தெரியதோ.உலுத்துக் கெட்ட குடும்பம்.என்ர அப்பர் சொன்னதைக் கேக்காம உங்களுக்குப் பின்னாலதான் துலைவன் எண்டு அழுங்கு பிடிச்சுக்கொண்டு வந்த எனக்கு வேணும்....வேணும்....இதுவும் வேணும்.....இன்னமும் வேணும்.

ஓமடி நானும் அப்பிடித்தான்.என்ர தலையெழுத்து.எங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோட எண்டதுபோல சனியன் உன்னோட மாரடிக்க வேண்டிக் கிடக்கு.

ஓம்...ஓம் என்னவோ சும்மா கூட்டிக்கொண்டோ வந்தனியள் வந்த மாதிரியல்லோ.எங்கட அப்பரிட்ட விடாப்பிடியா நண்டுபோல நிண்டு 15 பவுண் நகை வாங்கேக்க உங்கட மார் அடிக்கேல்லையோ.

இஞ்ச பார்...சும்மா எல்லாத்துக்கும் எதிர்த்துக் கதைக்காத.வாய் காட்டாத.ஒண்டு வச்சனெண்டா உனக்கு.நல்லா வாங்கப்போற...

ஓம்..ஓம்....அதுக்குத்தானே அப்பர் என்னைப் பெத்து உங்களிட்ட வாய்க்கரிசி போட்டவர்.அடிப்பியள் நீங்கள்.

(ப்ப்ப்ளார்.............)

என்ர ஐயோ...கடவுளே அடிச்சுப் போட்டியளெல்லோ..இவ்வளவு காலமும் இல்லாம கை நீட்ற அளவுக்கு உங்கட கை வளந்திட்டுதெல்லோ.இனியும் இந்த விசரி உங்களோட இருந்தாளெண்டா....நான் போறன் என்ர வீட்டுக்கு.

போடி...போ என்னவோ உவ இல்லாட்டி உலகமே இல்லையாக்கும்.வாழ ஏலாதோ...பெரிய இவவெண்டு நினைப்பு இவவுக்கு.

ஓம் ...இப்ப உங்களுக்குத் தெரியாது.கொஞ்சம் பொறுங்கோ.நாளைக்கு றோட்டில நிப்பியள்...யாரடா ஒரு சொட்டுக் கஞ்சி ஊத்துவினம் எண்டு கிளிஞ்ச சாரத்தோட நிப்பியள் பாருங்கோ...அப்ப தெரியும்.

ஓமடி போடி...நீ இல்லாட்டி ஒரு ஆண்டி மடம்...அரச மரம்...சந்தி மடம்...
கிடைக்காமலே போகும்.

சரி சரி நான் வெளிக்கிடுறன்.ரெண்டொருநாள் செல்ல எங்கட வீட்டுப் பக்கம் "இஞ்சாரப்பா".... எண்டுகொண்டு வருவியள்...சமாதானம் பேசிக்கொண்டு...அப்ப பேசிக்கொள்றன் உங்களை.

ஓ...அப்பிடி ஒரு நினைவிருக்கோ உனக்கு.என்னவோ பூனை கண்ணை மூடிக்கொண்டா பூமியே இருண்டு போகுதெண்டு நினைப்பாம் அதுக்கு.....விளங்கிச்சோ... ஒருக்காலும் நான் உன்ர வீட்டுப்பக்கம் வரன் தெரியுமோ.

அதையும் நான் பாத்துக்கொள்றன்...கொப்பரும் பிள்ளையுமாக் கிடந்து காயுங்கோ....வாறன்.

**************************************

அம்மா.....அம்மா....அம்மாய்..அம்மா வேணும் எனக்கு.அப்பாய்....அம்மாய்

என்னடா இப்ப உனக்கு.அம்மாய் கொம்மாய் சும்மாய்...அதான் போட்டாளெல்லோ....
உன்னாலதான் எல்லாம் ....இனிமேல்பட்டு அந்தப் பக்கம் அந்தப் பெடியளோட போவியே....எங்கயடா அந்தத் தடி.அறுந்தவள் அதையும் எடுத்து ஒளிச்சுப்போட்டுப் போட்டாளே.இரு....கிளுவங் கம்புதான் உனக்குச் சரி.

டேய் நில்லடா....ஓடினா இன்னும் உதைப்பன்....

(அடி...1...அடி2 3 4 5 6 )

ஐயோ....அம்மா.....அப்பா....அடிக்கிறார்.


பாலாஜியிட்ட இருந்து எங்கட மொழி அசைவில் எடுத்து மீள்பதிவாக்கினது பாருங்கோ.இதுதான் என்ர முதல் பதிவும் ஈழத்து முற்றத்தில.
Author: கானா பிரபா
•1:26 AM
"வெள்ளென எழும்பி இறைப்புக்குக் போக வேணும்" இது கிராமப்புறங்களில் சரளமாகப் பாவிக்கும் ஒரு உரையாடல் வாக்கியம். இங்கே வெள்ளென என்பது சீக்கிரமாக, வேகமாக போன்ற பதங்களின் ஒத்த சொல்லாக அமைகின்றது. வெள்ளென என்பது எவ்வளவு தூரம் தமிழக மொழிவழக்கில் புழக்கத்தில் இருக்கின்றது என்று தெரியவில்லை. ஆனால் ஈழத்தில் இந்தச் சொல் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. (கிழக்கு) வெளுப்பானதும் என்பது மருவி வெள்ளென என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன். வெள்ளென என்பதை எழுத்து வழக்கில் பயன்படுத்துவது மிகக்குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம்.

வெள்ளென என்பதைப் பற்றிப் பேசும் போது "வெள்ளாமை" என்பதைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியவில்லை. வேளாண்மை என்பது விவசாயம் செய்வது என்பதன் பொருளாக அமைவது எல்லோருக்கும் தெரியும். இந்த வேளாண்மை என்பதைப் பேச்சு வழக்கில் வெள்ளாமை என்பதாகப் பாவிப்பதும் ஈழத்துப் பேச்சுவழக்கில் அவதானிக்கக் கூடியதொன்று.

காலைநேரம் என்பதை ஈழத்துப் பிரதேசத்துப் பேச்சு வழக்கில் "காலமை" என்று தான் அதிகம் பயன்படுத்துவார்கள். மூலச் சொல்லில் இருந்து விலகி "மை" என்ற எழுத்தையும் இணைத்ததான இந்த காலமை என்ற பதம் எப்படிவந்தது என்று தெரியவில்லை. "காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா" என்பதை "காலமை தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா" என்று பாடினாலும் சந்தம் கச்சிதமாகப் பொருந்துகிறது இல்லையா?

Picture: Dushiyanthini Kanagasabapathipillai
Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•11:08 AM
ஊரிலே சொல்லுவார்கள்.. "கார் மோதி ஆள் சரியாம்".

இதைக் கேள்விப்பட்டிருப்பீங்க:
ஓர் ஊரில ஒரு நரியாம்.. அதோட கதை சரியாம்.

நரி இருந்துது, அத்துடன் கதையும் முடிந்தது. இதுதான் எங்களுக்குத் தெரிந்த பொருள். இதுக்கு நீட்டி முழக்கின பொருள்:
ஓர் ஊரில நிறைய்ய்ய்ய்ய்ய நாளா ஒரு நரி இருந்திச்சாம்.. (அப்பிடி நிறைய நாளா இருந்து இருந்து வயது போனதால) நரியின் கதை சரியாம்". அதாவது நரி இறந்து விட்டதாம்.

அதேமாதிரித்தான் முதல் வசனத்துக்கும் பொருள்: "ஆள் சரியாம்" என்றால் ஆள் இறந்துவிட்டார் என்று பொருள்.
Author: கானா பிரபா
•2:26 AM
"உவனுக்கு சோறு கறியை விடக் கள்ளத்தீனி தான் விருப்பம்" இது என் அம்மா அடிக்கடி என்னைப் பற்றி மற்றவர்களுக்குப் போட்டுக் கொடுக்கும் ஒரு கருத்து ;).

நாவுக்கு ருசியான தின்பண்டங்கள், குறிப்பாக அவற்றின் மூலம் எந்த விதமான ஊட்டச்சத்துக்களை அதிகம் கொண்டிராத ஆனால் இனிப்பு அல்லது காரமான வகையறாக்களைத் தான் இப்படி "கள்ளத்தீனி" அல்லது "கள்ளத்தீன்" என்று அடையாளப் பெயர் கொண்டு எங்களூரில் அழைப்பார்கள். இதற்கு முன்னர் எழுதிய சொக்கிளேற்றும் விசுக்கோத்தும் பதிவில் இருக்கும் பெரும்பாலான பண்டங்கள் இந்தக் கள்ளத்தீனி வகையறாவுக்குள் அடங்கி நிற்கின்றன.

தமிழகத்தில் கள்ளத்தீனி என்ற சொலவாடை பாவிக்கப்படுகின்றதா என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் நண்பர் திரு அவர்கள் சொல்லியிருந்தார் குமரி பகுதியில் கள்ளப் பண்டம் என்று அழைப்பார்களாம்.
Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•3:02 AM
உங்களுக்கு ஒதிய மரத்தைப் பற்றித் தெரியுமா? கண்டிருக்கிறீர்களா? (மரங்களைப் பற்றித் தொடர் போல ஆரம்பித்த வசந்தனுக்குத் தெரிந்திருக்கக்கூடும்)

நெடு நெடுவென்று வளருமாம்.. ஆனால் யாருமே இந்த மரத்தில் ஏற மாட்டார்களாம். ஏனா? ஏறினால் பலமில்லாத மரத்துக் கொப்பு முறிஞ்சு ஆள் கீழ மண்ணைக் கொஞ்சிக் கொண்டிருப்பார். கை கால் மேலெல்லாம் நோக, நகர இயலாமல் விழுந்து கிடப்பராம்.

அதனாலேயே ஆகவும் ஏலாமல் சவண்டு போய்க் கிடப்பவர்களைக் கண்டால் 'என்னடா ஒதிய மரத்தால விழுந்தவன் மாதிரிக் கிடக்கிறா?" என்று 'அன்பாக' விசாரிப்பார்களாம் ஊரவர்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்.. "ஒடியும் மரம்" தான் பேச்சு வழக்கில் ஒதிய மரம் என்று ஆனதா?

அ.பொ.சொ.வி:

கொப்பு - கிளை
மேல் - மேனி
ஆகவும் - அதிகமாக (ரொம்ப)
ஏலாமல் - இயலாமல் / முடியாமல்
சவண்டு -சோர்ந்து
Author: கானா பிரபா
•1:05 AM

இஞ்சை தங்கமக்கா ! எல்லுப் போல சீனி நல்லெண்ணை இருந்தாத் தாங்கோ, ஆனைக்கோட்டைக்கு இவர் வாங்கப் போயிட்டார், வந்தவுடனை தாறன்"

மேற் சொன்ன உதாரணத்தில் வரும் எல்லுப் போல என்ற சொற் பிரயோகம் கொஞ்சம் சிறிய அளவில், அல்லது தமிழக வழக்கில் பயன்படுத்துமாற் போல "கம்மியா" என்ற பொருட் பதத்திற்கு ஒப்பானது.

தாயகத்தில் இருக்கும் காலத்தில் பக்கத்து வேலியால் எட்டி நின்று சீனி, உப்பு, எண்ணெய் போன்ற சாமன்களைப் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவசரம், ஆபத்துக்கு என்று வாங்கும் போது இப்படியான "எல்லுப் போல" என்ற சொல் பயன்பாட்டில் இருக்கும். கொஞ்சம் அதிகப் படியாகக் கேட்கும் தொனியில் கேட்டால் பக்கத்து வீட்டுக்காரர் பயந்து விடுவார்களோ என்ற காரணமாக இருக்குமோ என்னமோ.

"எல்லு" என்பதற்கு அகராதியில் என்ன விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள் என்று பார்த்தால் "நாள்", "சூரியன்" என்று மட்டுமே விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே அகராதியின் விளக்கத்தை இங்கே பொருத்திப் பார்க்க முடியாது. "எள்ளுப் போல" என்பது மருவி "எல்லுப் போல" ஆகியிருக்கலாமோ என்னவோ.

ஜாஸ்தி என்று தமிழகத்தில் வழங்கும் சொற்பதத்துக்குச் சம அர்த்தமாக ஈழத்து மொழி வழக்கில் "கனக்க" என்பது அமையும்.

"கனக்கப் போசாதையும், கண்டீரோ"

"திருவிழாவுக்கு கன சனம் வந்தது"

"கன சாமான்கள் கடையில் வந்திருக்காம்"

போன்ற உதாரணங்கள் "கனக்க" என்பதற்குப் பொருத்திப் பார்க்கப்படும் வார்த்தைப் பிரயோகங்களாகும்.





Author: கரவைக்குரல்
•9:58 AM
ஒரு வேலையை சும்மா முடிக்கவே ஏலாது பாருங்கோ,அதைவிட அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் முடிக்க முடியாது எண்டால் அதிலை உண்மை இருக்குது பாருங்கோ,என்னதான் பெரிய திட்டம் போட்டு செய்தாலும் அதற்கு எதிரான கருத்துடையவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாத விடயம்.நிகழ்வுகள் முடிந்த பின் அப்படியாக நிகழ்வுகள் சம்பந்தமாக அதை நிராகரித்து கருத்துரைப்பவர்களும் இருகிறார்கள்,அதேபோல ஆமோதித்து கருத்துரைபவர்களும் இருக்கிறார்கள்,அவையெல்லாம் நிகழ்வு அமைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதோடு எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,
இப்படியாக நிகழ்வினால் வரும் எதிர்பார்க்கமுடியாத கஷ்டங்களாலும் தடங்கல்களாலும் சிலர் நிகழ்வினை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கும்போது ”என்ன ஆக்கினை பிடிச்ச வேலையில் தலை குடுத்தேனோ” என்று மனம் கசந்து கொள்வார்கள் சிலர்.

அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் வெற்றியும் உண்டு,தோல்வியும் உண்டு பாருங்கோ,வெற்றிபெற்றால் ”ஆகோ ஓகோ எண்டு வேலை போகுது” எண்டு சொல்லும் எங்கடை சனம், தோல்வியிலை போனால் “ஐயோ ஆக்கினை பிடிச்ச வேலையிலை தலை வைச்சு படுக்கிறதேயில்லை எண்டு தலையிலை கை வைப்பினம்,

இப்படியாக “ஆக்கினை” என்பது ”கஷ்டம் கொடுத்தல்” என்பதாகவும் அதனுடன் சேர்ந்து வரும் ”விழுந்த வேலை” என்பதற்கு தனியாக கருத்துக்கொடுக்காமல் ஆக்கினையில் அதாவது கஷ்டம் கொடுக்கும் வேலையில் பங்கெடுத்துவிடல் அல்லது முற்றுமுழுதாக ஈடுபட்டுவிடல்” என்றவறாக கருத்துக்கொடுக்க முடியும், அதை சிலர் "ஆக்கினை விழுந்த வேலை" என்பதை "ஆக்கினை பிடிச்ச வேலை" என்றும் சொல்லிக்கொள்வர்.

சிலருக்கு சிலர் எப்போதும் கஷ்டம் கொடுத்தபடியே இருப்பதாக அந்தச் சிலர் உணர்வார்கள்,அந்த வேளைகளிலும் கூட ”இவன் எப்பவும் ஒரே ஆக்கினை தான்”அல்லது ”ஒரே ஆக்கினை பிடிச்சவன்” எண்டு மனதோடு திட்டுவதும் உண்டு் எங்கடை சனம்.
அதைவிட அற்புதமாக ”ஆக்கினை விழுவானே” எண்டு முதியவர்கள் சிலர் கோவத்திலும் சிலர் நட்பிலும் மற்றவர்களை ஏசுவதுமுண்டு.

இப்படியாக ”ஆக்கினை” என்பது ஈழத்து வழக்கோடு ஒட்டிவிட்ட சொல்.இது வயது வந்த எம் முதியோர்களால் இப்போதும் அடிக்கடி கேட்ககூடியதாக இருக்கும்.
என்றாலும் நடுத்தர வயதானவர்களாலும் இளையோர்களலும் இடையிடையே இக்காலங்களில் சொல்லப்பட்டாலும் சிறியவர்களால் அது சொல்வது மிகக்குறைவு என்று சொல்லலாம்.என்றாலும் இந்த சொல் வழக்கொழியும் மற்றைய சொற்களைப்போல அல்லாமல் சிலகாலம் எம்மவர்கள் வாயில் நின்று நிலைக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது,இது சம்மந்தமான உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கோவன்.

சரி இவன் என்ன ஆக்கினை விழுவான் சும்மா என்னடா உளறிகொண்டிருக்கிறான் எண்டு நினைக்கிறீங்க என்ன? உங்களுக்கும் ஆக்கினை தராமல் நானும் போட்டு வாறன்,இன்னுமொரு சொல் நினைவுவரேக்கை நான் வாறன், மற்றவைக்கு ஆக்கினை தராமல் இருப்போமாக.


குடுதேனோ- கொடுத்தேனோ எங்கடை- எங்களுடைய
நினைவுவரேக்கை- நினைவு வரும்பொழுது
Author: Unknown
•9:43 AM
'சினேகிதி' போட்ட 'வெள்ளி பார்ப்பம் வாங்கோ' பதிவுதான் இந்தப் பதிவுக்குத் தூண்டி. அதனால சினேகிதிக்கு முதற்கண் நன்றி. இந்த வெள்ளி பார்த்தல் என்கிற சொல்லாடல் இன்னும் ஒரு கோணத்திலும் பயன்படுவதுண்டு அல்லவா? அது பற்றின பதிவுதான் இது.

இந்த ‘வெள்ளி பார்த்தல்' என்ற சொல்லை அடிக்கடி ஆசிரியர்களிடம்தான் நான் கேட்டிருக்கிறேன். சில சமயங்களில் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தில் மனம் லயிக்காமல் வேறெங்காவது மனம் ஓடிவிடும். எப்படித்தான் கண்டுபிடிப்பார்களோ தெரியாது, சரியாகக் கண்டுபிடிப்பார்கள் ஆசிரியர்கள். ஏதாவது கேள்வியைக் கேட்க, நாங்கள் முழிக்க, ‘வகுப்பில பாடத்தைக் கவனிக்காமல் என்ன வெள்ளி பாத்தனியே' என்பது பல ஆசிரியர்கள் சர்வசாதாரணமாகப் பயன்டுத்தும் ஒரு திட்டு வசனம். அதிலும் எங்களுக்கு கணிதம் படிப்பித்த ஆசிரியர் ஒருவர் ‘எத்தினை வெள்ளியெண்டு எண்ணியாச்சே' என்று கேட்டு நக்கல் செய்வார்.

அதாவது இந்த சந்தர்ப்பங்களில் 'வெள்ளி பார்த்தல்' என்பது நிகழ்காலத்தில் நடப்பதை விடுத்து வேறேதாவதைப் பார்ப்பது என்கிற பொருளில் பயன்படுகிறது. கிட்டத்தட்ட இதே பொருளில் ஏமிலாந்துதல், வாய் பார்த்தல், பிராக்குப் பார்த்தல் (பராக்குப் பார்த்தல்) போன்ற சில சொற்களையும் பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு ஏதாவது ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளை வீட்டில் அப்பா அல்லது அம்மாவிடம் ‘அது எங்களுக்கு படிப்பிக்கேல்லை' என்று காரணம் சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அடிக்கடி நான் சொன்ன காரணங்களில் இது ஒன்று). அப்பா அல்லது அம்மாவிடமிருந்து இப்படியான பதில்களை எதிர்பார்க்கலாம்:

'உன்னை நம்பேலாது... நீ பாடம் படிப்பிக்கேக்கை எங்கையாவது வெள்ளி பாத்துக் கொண்டு இருந்திருப்பாய்'
அல்லது
‘நீ எங்கையாலும் ஏமிலாந்திக்கொண்டு இருந்திட்டு ஏன் படிப்பிக்கேல்லை எண்டு பொய் சொல்லுறாய்'
அல்லது
‘அவயள் படிப்பிச்சிருப்பினம். நீ வகுப்பில எங்கயாலும் வாய் பார்த்துக் கொண்டு இருந்திருப்பாய்'
அல்லது
'பாடம் நடக்கேக்கை எங்கையாலும் பராக்குப் பாத்துக்கொண்டு இருந்திட்டு, பொய்ச்சாட்டு சொல்லிறியோடா?'

மேற்படி சொற்களை வேறு வேறு சந்தர்ப்பங்களில் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான அர்த்தங்களில் பயன்படுத்துவார்கள். பகல் கனவு காணுதல் என்பது கூட ‘வெள்ளி பார்த்தல்' என்பதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான ஒரு சொல்லாடல்தான். சினேகிதி சொன்னது போல வெள்ளி (நடசத்திரம்) பார்த்தல் என்பது அழகான பல நினைவுகளை மீட்டித்தரும் ஒரு அனுபவம். அதுவும் விஞ்ஞான பாடத்தில் இந்த நட்சத்திரக் கூட்டங்கள் பற்றிப் படித்த உடனே அந்த வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு இரவுப் பொழுதுபோக்காகிவிடும். அப்படி இரவில் பார்க்கவேண்டிய வெள்ளியை, பகலில் பார்க்கும், இல்லாத ஒன்றில் கவனத்தைச் சிதறவிடும் செய்கையைத்தான் வெள்ளி பார்த்தல் என்று சொல்லுவார்கள்.

வெள்ளி பார்த்தல் பற்றிய சுவாரஸ்யமான அனுபவங்கள்
ஒரு முறை எங்களின் விஞ்ஞான ஆசிரியர் திரவியநாதன் ஏனோ திடீரென்று மகாபரதத்தில் இருந்து ஏகலைவன் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஏற்கனவே பலமுறை கேட்ட, வாசித்த கதை என்பதால் நான் வெள்ளி பார்க்க ஆரம்பித்து விட்டேன். அந்தக் கதையில் ஏகலைவன் ஒரு நாயின் வாயை அம்பு எய்து கட்டிப் போடுவது பற்றி அவர் சொல்வது காதில் விழுந்துகொண்டிருந்தது. நான் வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருக்க, அதைக் கண்டுபிடித்துவிட்டார். பெயர் சொல்லி அழைத்து ‘நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தனான்' என்று (நல்ல விதமாகத்தான்) கேட்டார். நானும் ‘வெள்ளி பார்த்தல்' குழப்பப்பட்டதால் குழம்பிப் போய் ‘ஆரோ ஒருத்தன் நாய்க்கு (__________)' என்று கொஞ்சம் இரட்டை அர்த்தமாகச் சொல்ல அதற்கு வகுப்பு என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பும், வெள்ளி பார்த்தலை வைத்து திரவியநாதன் அறுத்த அறுவையும் மறக்காது.

இன்னொரு சம்பவம் கனடாவில் நடந்தது. இங்கே சனிக்கிழமைகளில் கிரிக்கெட் விளையாடுவதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்த போது நான் ஒரு சுலபமான பிடியை ‘வெள்ளி பார்த்த' காரணத்தால் விட்டுவிட்டேன். எங்களின் களத்தடுப்பு முடிந்த பின், 'அடுத்த கிழமை விளையாட வருவாய்தானே' என்று எங்கள் அணியில் கூட விளையாடும் மெல்வின் என்னைக் கேட்டான். அப்போது நான் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் சனிக்கிழமை மேலதிக வேலைநேரம் கிடைக்குமா என்று வெள்ளிக் கிழமைதான் சொல்லுவார்கள். அதனால நான் ‘வெள்ளிதான் தெரியும்' என்றேன். ‘இப்பமட்டும் என்ன தெரியுது' என்றான் மெல்வின். சற்று நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டோம். அதாவது சனிக்கிழமை வேலை இருக்கிறதா இல்லையா என்பது வெள்ளிக் கிழமைதான் தெரியும் என்ற அர்த்தத்தில் நான் சொல்ல, நான் ‘வெள்ளி பார்த்து' விட்ட பிடியை நினைவூட்டி இப்ப மட்டும் என்ன தெரியுது என்று சாதாரண உரையாடலிலேயே சிலேடையில் விளையாடினான் மெல்வின்.

Author: மொழிவளன்
•10:03 AM
குறிப்பாக தமிழ் நாட்டு தமிழரிடையே வழக்கில் இல்லாத ஒரு சொல், ஈழத் தமிழர்களின் பேச்சில் பயன்படுகின்றது. இச்சொல்லை நானும் பலமுறை கேட்டிருப்பினும் அதன் பயன்பாடு குறித்த காரணமோ தெளிவோ தெரிந்திருக்கவில்லை.

அச்சொல் இது தான் "எம்டன்".

"உவன் பெரிய எம்டன் போலக்கிடக்கு."

"உவனிட்ட பழகைக்க கொஞ்சம் கவனமாத்தான் பழக வேணும், ஆள் சரியான எம்டன்".

இப்படியாக ஈழத்தமிழர் பேச்சு வழக்கில் பயன்படும் ஒரு சொல் தான் இந்த "எம்டன்".

இச்சொல்லின் பயன்பாடு குறித்து அறிந்திராதப் போதும், அன்மையில் வாசிக்க கிடைத்த முருகர். குணசிங்கத்தாரின் பொத்தகத்தின் ஊடாக அறியக் கிடைத்தது.

இலண்டன் தேசிய ஆவணக் காப்பகத்தில் ஈழத் தமிழரின் வரலாற்று ஆய்வுக்கான மூலாதாரங்களின் சேகரிப்பின் போது இந்த "எம்டன்" எனும் பேச்சு வழக்கு எம்மிடையே இருப்பதற்கான காரணியையும் வியப்புடன் கூறியிருந்தார்.

"ஜேர்மன் போர்க்கப்பலும் எம்டன் பயணங்களும்" எனும் தலைப்பில் கிடைத்த பதிவுகளின் படி "எம்டன்" எனும் ஜேர்மனிய கப்பல், மிகப் பலம் வாய்ந்த பிரித்தானியக் கடற்படையிடம் சிக்காது, பிரித்தானியக் கடற்படையின் அனுமதியும் இன்றி, பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்த துறைமுகங்களான ஆப்பிரிக்கத் துறைகள், தார்-எஸ்-சலாம், மொம்பாஸா, விக்றோரியா, கொச்சின், உற்பட திருக்கோணமலை, யாழ்ப்பாணம் துறைமுகங்களிற்குள்ளும் ஊடுறுவி பிரித்தானிய கடற்படைத் தளங்களின் தகவல்களை திரட்டி சென்றுள்ளது.

இவ்வாறான ஒரு தந்திரோபாயமான நடவடிக்கையை "எம்டன்" ஜேர்மனியக் கப்பல் செய்து முடித்ததால், இச்செயலின் பின்னரான வியப்பும், அதன் தந்திரோபாய நடவடிக்கையும் ஈழத்து தமிழரிடையே, மிகவும் (தந்திரக்காரனை) தந்திரமாக செயல் படும் ஒருவரை "எம்டன்" என்றழைக்கும் பேச்சு வழக்காக தோன்றியுள்ளது.