Author: வந்தியத்தேவன்
•12:35 AM
பாண் இலங்கையில் மட்டுமே பாவிக்கப்படும் ஒரு சொல். பாண் என்பது இலத்தீன் மொழி என்கிறார்கள் அறிஞர்கள். ஆங்கிலத்தில் ப்ரெட் எனப்படும் பாண் இலங்கை மக்களின் தேசிய உணவு என்றால் மிகையில்லை.



பெரும்பாலான இலங்கையர்கள் காலை உணவாக உண்பதே பாணாகும். இதற்கான முக்கிய காரணம் இலகுவில் கிடைக்கும் விலை குறைவு(இப்போ பாணின் விலை அதிகம்).

பாணின் சகோதரர்கள் பணிஸ், புழுப்பாண் அல்லது புழுபணிஸ்(சிங்களத்தில் ஹிம்புலா பன்), சங்கிலிப்பாண்,ஜாம் பணிஸ், கறிபணிஸ்(உருளைக்கிழங்கு அல்லது மீன் இறைச்சிக் கறிகள்)ரோஸ்ட் பாண்(இதனை உண்ண ஸ்பெசல் பற்கள் வேண்டும்),கிறீம் பணிஸ் ஆகியோராகும்.

கூடுதலாக பாண் சம்பலுடனுன் உண்பார்கள். இடிச்ச சம்பல் என்றால் அதன் ருசியே தனியாகும். பழங்கறியும் பாணும் இன்னொரு நல்ல கூட்டணி என்பார்கள். இதனைவிட ஜாம், பட்டர் போன்றவற்றுடனும் உண்ணமுடியும்.

காலையில் பலர் கையில் பாண் வாங்கும் பையுடனும் பேக்கரிகளிலும் இல்லை அருகில் இருக்கும் கடைகளிலும் காணப்படுவார்கள். காலையில் அலுவலகம் பாடசாலை செல்வர்களின் வசதி கருதியே பலர் பாணை நாடுகின்றார்கள். ஏனெனில் ஏனைய உணவுகள் தயாரிக்க நேரமெடுக்கும். காலை 6 மணிக்கே எழும்பி அம்மா பசிக்குது என கூவி அழும் சிறுவர்களுக்கு பாணோ பணிசோ சிறந்த உணவு.



ஒரு சிலர் பக்கத்துக் கடைகளில் வாங்காமல் பேக்கரிகளுக்குச் சென்று வாங்குவார்கள். காரணம் சில பேக்கரிகள் பாணிற்க்கு பேமஸ் கொழும்பில் ரோய‌ல் பேக்கரியில் பாண் வாங்க ஒரு பெரிய க்யூவே நிற்கும்.

நாங்கள் பிக் மேட்ச் எனப்படும் கிரிக்கெட் மேட்ச் நாட்களில் மதிய உணவாக பாணும் இறைச்சியும் தான்.சைவம் சாப்பிடுபவர்களுக்கு பருப்புக் கறி. சர்வதேச கிரிக்கெட்டுகளில் மதிய உணவு இடைவேளை 40 நிமிடம்தான் ஆனால் எமக்கோ சாப்பிட்டு முடிஞ்சால் தான் அடுத்த இனிங்ஸ்.

ஒருகாலத்தில் ஊரிலை கோஷ்டி, கூத்து, திருவிழா பார்க்க இரவில் சென்றால் விடியப்புறத்திலை பக்கத்து பேக்கரிகளில் சுடச்சுட பாண் வாங்கி அப்படியே ஒரு கறியும் இல்லாமல் சாப்பிடுவது பழக்கம். சிலவேளை சுடச் சுட பாண் வாங்கிவரும்போது எப்படியும் அரை இறாத்தல் பாண் பிச்சுப் பிச்சு தின்பட்டிருக்கும்.

யுத்தக்காலத்திலை பாணிற்க்கு இருந்த கிராக்கி அதிகம். சிலவேளைகளில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு இறாத்தல் என்ற கஸ்டத்தைக்கூட எம்மக்கள் அனுபவித்தார்கள். பாணிற்கு மா இராது பேக்கரிகாரர் இருக்கிற கொஞ்ச மாவில் ஓரளவு பாண் சுட்டு தருவார்கள். க்யூவில் நிண்டுதான் வாங்கவேண்டும். பல தடவை க்யூவில் சண்டைகள் கூட ஏற்படும். எத்தனையோ நாள் மூன்று நேரமும் பாணையே உண்ட மக்களும் இருக்கிறார்கள். அரிசிக்குத் தட்டுப்பாடு அரிசி விலையோ யானை விலை ஆகையால் மூன்று நேரமும் பாணும் ஏதாவது மரக்கறி கறியும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த பெருமை(?) எமக்கே சேரும். இவை எல்லாம் பழகிய வலிகள் எழுதும்போது கூட கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் சைக்கிள் உழக்கி பருத்தித்துறையில் ஒரு இறாத்தல் பாண் வாங்கிய நினைவுகள் மனதை நெருடுகின்றது.

சில இடங்களில் காலை உணவாகவும் பாண் இரவு உணவாகவும் பாணே உண்கிறார்கள். காரணம் வேலையால் வந்த களைப்பின் காரணமாக இரவுச் சாப்பாட்டையும் பாணாகவே மாற்றிவிட்டார்கள்.

ஒரு மூன்று நாட்கள் தொடர்ந்து பாண் சாப்பிடாமல் விட்டுவிட்டு நாலாம் சாப்பிடும்போது அதன் ருசி தனி.

இலங்கையில் சிலகாலத்திற்க்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி ஏதாவது ஆட்டங்களில் வெற்றியீட்டினால் அடுத்த நாள் பாண் விலை கூடும். 1996ஆம் ஆண்டில் 4.50 சதத்திற்க்கு வாங்கிய பாணின் இன்றைய விலை 40 ரூபாவாகும்.

பாணின் ஏனைய சகோதரர்களின் படங்கள் கிடைக்கவில்லை