Author: கலை
•1:11 AM
இந்த இடுகை ஈழத்து முற்றத்தில் எழுதுவதற்கு பொருத்தமானது என்று நம்புகின்றேன்.

ஈழத்து முற்றத்தில் எழுதுவதற்கு ஏதாவது வேண்டும் என்று கேட்டேன். யாழ்ப்பாணத்திலுள்ள ஊர் பெயர்களை வைத்து வரும் கவிதை. ஆனால் ஊர் பெயர்களில், வேறு அர்த்தம் பொதிந்திருக்கும். இதை எழுதியவர் யாரென்பது சொன்னவருக்கு நினைவிலில்லை. யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி

முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய

ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைந்து
ஆனைக் கோட்டை வழி
கட்டுடை விட்டாள்

உடுவிலான் வர
பன்னாலையான் மிக உருத்தனன்

கடம்புற்ற மல்லாகத்தில்
இடை விடாது என அணையென

பலாலி கண் சோர வந்தாள்
ஓர் இளவாலையே

இனி அர்த்தத்தைப் பார்ப்போமா?

*
1. முடிவிலாதுறை = முடிவற்று உறைந்திருக்கும், அல்லது குடி கொண்டிருக்கும்
2. சுன்னாகம் = சுன் + நாகத்தான் = வெள்ளை மலை (இமய மலை = கைலயங்கிரி)
3. வழி = வழியில் வந்தவன்

இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன்,

*
1. முந்தித் தாவடி = முன்னே தாவி வரும்
2. கொக்குவில் மீது வந்தடைய

முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, (மாவிட்டபுரத்தில் வீற்றிருக்கும் முருகன் குதிரையில் வருவாராம்).....

*
1. கொடி + காமத்தாள் = கொடி போன்றை இடையுடைய + ஆசை கொண்டவள்
2. ஆனைக் கோட்டை வழி = பெரிய கோட்டை போன்ற மார்பகம் வழி
3. கட்டுடை விட்டாள் = கண்ணீர் கட்டுடைந்து வழிய நின்றாள்

மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்......

*
1. உடு = நட்சத்திரம் /நிலவு
2. பன்னாலை = கரும்பு
3. உருத்தனன் = தொல்லை கொடுத்தான்

நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்,

*
1. கடம்புற்ற = கடம்பு எனும் பூக்களாலான
2. மல்லாகத்தில் = மார்பகத்தில்
3. இடை விடாது = இடைவெளியெதுவுமில்லாது
4. எனை அணையென = என்னை அணைத்துக் கொள்ளென்று

கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்ளென்று,

*
1. பலாலி கண் = பல + ஆலி = பல கண்ணீர்த் துளிகள்
2. சோர = சொரிந்து
3.. இளவாலை = இளம் வயதுடைய வாலைப் பெண் = குமரிப் பெண்

பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.

இனி முழுமையான அர்த்தத்தைப் பார்ப்பேமா?


இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்......


”நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்” என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.