Author: ந.குணபாலன்
•3:32 PM

தென்புலத்தோர் வழிபாடு 

ஒருவர் மோசம் போய்விட்டார் என்றால், யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கில் அவர் மோட்சம் போய்விட்டார் என்று விளக்கம். தென்புலத்தார் வழிபாடு தமிழர் வாழ்வில் மிக முக்கியமானது. இங்கே நான் கண்டுகேட்டு, கைக்கொண்ட சில பல எடுத்துக் காட்டுக்கள் சில.

தென்புலத்தார் என்று திருக்குறள் கூறும் மறைந்த மூதாதையரை வழிபடும் முறைகள் இடத்துக்கிடம், ஊருக்கூர் வேறுபடும். ஒருவர் இறந்தபின் அவர் உடலை, தலை தெற்குத் திசையில் இருக்க வளர்த்தி தலைமாட்டில் ஒரு விளக்கைக் கொளுத்தி வைப்பார்கள். இறந்தவர் உடல் எரியூட்டப் படும் வரை அந்த வீட்டில் அடுப்பு எரிக்கமாட்டார்கள். அதன்பின்னே அந்தியேட்டி வரை இறந்தவரை வளர்த்தி இருந்த இடத்தில் தெற்குப்பக்கமாக விளக்கு இராப்போலாய்( இரவு பகலாய்) எரியும். விளக்கடியில் ஒரு தண்ணீர்ச் செம்பு நாளாந்தம் மூன்றுநேரமும் புதிதாக வைக்கப்படும். மூன்றுநேரமும் விளக்கடியில் உணவு வகைகள் படைக்கப்படும். இறந்தநாளை முதலாவது நாளாகக் கொண்டு ஒற்றைப்பட்ட நாளில் அனேகமாக மூன்றாம் நாள் காடாற்று/பால்தெளித்தல்/சாம்பல் அள்ளுதல் செய்வர். அதேபோல ஒற்றைப்பட்ட நாளில் (5ம், 7ம் நாள்) எட்டு/ செலவு/எட்டுச்செலவுப் படையல் நடைபெறும். எட்டு =எள்+தூ அதாவது எள்தூவுதல் என்பதன் சுருக்கமே அன்றி எட்டாம்நாள் என்ற கருத்தல்ல. ஆனால் எள் தூவுதல் என்பது எட்டிலன்று இப்போது இல்லை. அந்தியேட்டி வரை விளக்கடியில் தங்களால் இயன்ற வசதிக்கு ஏற்றபடி தின்பண்டங்களைப் படைப்பர். அந்தியேட்டியில் மரக்கறி உணவு படைக்கப்படும். அதன்பின்னே அடுத்தடுத்த நாட்களில் அவரவர் வசதிக்கேற்ப மச்சப்படையல் வைப்பார்கள். இறந்தவர் மது, புகை பழக்கம் உள்ளவராயின் அவைகளும் படையலில் இடம் பெறும். வரியாவரியம் வரும் திவசங்களில் மரக்கறி உணவுப் படையலும், மறு தினங்களில் மச்சப்படையலும் இருக்கும். 

அதைவிட ஆடிப்பிறப்பன்று பனங்கட்டிக் கூழும், கொழுக்கட்டையும், பழங்களும் பிதிருக்குப் படைக்கப்படும். தீபாவளிக்கு முதல்நாளும் மச்சப்படையல் படைப்பார்கள். மார்கழி மாசம் பிதிர்கள் தவத்துக்குப் போகும் காலம் என்று சொல்லி அவர்கள் தவத்திற்குப் போகுமுன்னே விளக்கீட்டிலன்றும் பழங்களுடன் கொழுக்கட்டையும் படைக்கப்படும். தைப்பொங்கலன்று வெள்ளாப்பில் சூரியனுக்குப் பொங்கிய பின்னே, தவத்துக்குப்போன பிதிர்கள் திரும்பி வந்தனர் என்று சொல்லி செக்கலிலே மச்சப்படையல் குறிப்பாகக் கணவாய்க்கறியும் சோறும் படைக்கப்படும்.

தாயில்லாதவர்கள் சித்திராப்பருவத்திலும், தகப்பன் இல்லாதவர்கள் ஆடியமாவாசையிலும் விரதம் இருப்பார்கள். நீர்க்கரையில் எள்ளுந் தண்ணீரும் இறைத்தும், பெற்றவரின் பெயரில் மோட்ச அருச்சனை செய்தும் தென்புலத்தாரை வழிபடுவர். முன்னைய காலங்களில் ஆண்மக்கள் மட்டுமே கடைக்கொண்ட இவ்விரதங்களை, இன்று பெண்மக்களும் கடைப்பிடிப்பதைக் காணக் கூடியதாய் இருக்கிறது.

நல்லநாள் பெருநாள் என்று சொல்லி, தைப்பொங்கல், சித்திரை வரியப்பிறப்பு, தீபாவளி நாட்களுக்கு முதல்நாள் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது இறந்தவரை நினைவு கூர்வர். பழஞ்சலிப்பு என்று சொல்லப்படும் இந்த வழமை நானறிய 70ம் ஆண்டுகள் வரை எங்கள் பக்கம் இருந்தது. இன்று அற்றுப்போய் விட்டது.

ஒரு சிறு குறிப்பு: 
thenpulam> templum>temple
அதாவது தென்புலத்தாரை வழிபட்ட இடமே templum என்று இலத்தீன் மொழிக்கு மாறி ஆங்கிலத்தில் temple என்று ஆனதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
Author: வந்தியத்தேவன்
•7:18 PM
எங்கட விஜெயின் எல்லுபோலை என்ரை சுயபுராணம் என்ட பதிவிலை நாங்க பின்னூட்டத்திலை இயத்துகள் பற்றிக் கொஞ்சம் கதைச்சிருக்கோம். அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக இந்தப் பதிவில்.

பொதுவாக எங்கடை ஊர்களிலை சைவத்திற்க்கு பிறம்பாக மச்சத்திற்க்கு பிறம்பாக இயத்துகள் இருக்கும். சில இடங்களில் இரண்டு குசினி கூட இருக்கும். அதவாது ஒரு குசினி சைவச் சமையலுக்கு இன்னொரு குசினி மச்சத்துக்கு, திருவிழாக்காலங்களில் மச்சக்குசினி பூட்டியபடியே இருக்கும். திருவிழா முடிந்து திறந்துபார்த்தால் சந்திரமுகி அறைபோல் இருக்கும்.

பொதுவாக ஈழத்து சைவசமயத்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சைவச் சாப்பாடுதான். பொதுவாக தமிழர்களின் கடவுளாக முருகனைச் சொல்லுவார்கள் அதனால் தான் என்னவோ எங்கடை ஆட்கள் முருகனிற்க்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் சைவம் தான். எங்கடை வடமராட்சி கடற்கரைக் கிராமத்தைச் சேர்ந்த மீன் பிடிப்பவர்கள் வியாழக்கிழமை இரவு பெரும்பாலும் மீன் பிடிக்கச் செல்வதில்லை. ஏனென்டால் அடுத்த நாள் விற்கமுடியாது. நல்லூர்த் திருவிழா நாட்களிலும் யாழ்ப்பாணத்தில் மீன் இறைச்சி விற்பனை குறைவு என்பார்கள். எங்கடை ஊரிலை ஒரு சில கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கூட வெள்ளிக்கிழமை மச்சம் சாப்பிடுவதில்லை.

பொதுவாக திங்கள் தொடக்கம் வியாழக்கிழமை மச்சம் காய்ச்சுகிறவர்கள். வெள்ளிக்கிழமை விரதம் காய்ச்ச பிறம்பான இயத்தையே பயன்படுத்துவார்கள். அந்த நாளிலை பாருங்கோ மண் சட்டிகள், மண் பானைகள் தான் உணவு சமைக்கப் பயன்படுத்துவது. அப்போ ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சட்டியே பாவிக்கலாம் தானே.

வியாழக்கிழமை இரவே மச்ச இயத்துகளை கழுவி வீட்டுக்குப் பின்புறம் ஒரு உறியிலை போட்டுவிடுவார்கள். இரண்டு குசினி இருந்தால் மச்சக் குசினிக்கையே வைத்துவிடுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் தற்செயலாக மச்சச் சட்டிகளைத் தொட்டால் அவ்வளவுதான் பெரிசுகள் உடனே குளிச்சிட்டுத்தான் வீட்டுக்கை எடுப்பார்கள். இதெல்லாம் ஒரு பத்து பதினைந்து வருசத்துக்கு முந்தின கதைகள். இப்போ பிறம்பான சட்டிகள் பாவிச்சாலும் அவ்வளவும் கெடுபிடிகள் இல்லை.

இதிலை பிறகு கோயில்த் திருவிழா நாட்களுக்கு பிறம்பாக இன்னொரு வகையான சட்டிகள். வெள்ளிக்கிழமை சமைக்கும் விரதச் சட்டிகள் விரத நாட்களில் பாவிப்பது குறைவு. திருவிழா முடிந்ததும் அவற்றைக் கழுவி இன்னொரு இடத்தில் கவிழ்ந்து விடுவார்கள். பிறகு இன்னொரு கோயில்த் திருவிழாவுக்குத் தான் எடுப்பார்கள்.

ஆனால் கந்த சட்டிகாலங்களில் புதிய சட்டிகள், பானை வாங்கித் தான் சமையல். கந்த சட்டிக்கு சாதாரண வெள்ளிக்கிழமைகளில் பாவிக்கும் சட்டிகளோ, இல்லை கோயில்த் திருவிழாக்களுக்கு பாவிக்கும் சட்டிகளோ பாவிப்பதில்லை. கந்த சட்டி தொடங்கும் காலத்தில் புதிய சட்டிகள் வாங்குவார்கள். முதல் நாள் வீடெல்லாம் தூசி தட்டி வடிவாக கழுவித் தான் விரதம் தொடங்குவார்கள்.

எங்கட சனம் கந்தபுராணக் கலாச்சாரத்தை பின்பற்றுவதாலோ என்னவோ கந்த சட்டி விரதத்திற்க்கு அனைத்து இயத்துகளும் பிறம்பாகவே இருக்கும்.

வெள்ளிக்கிழமை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சைவம் சாப்பிடுகிற பழக்கம் இருக்கிறது. இதற்கான காரணம் அந்தப் பக்கங்களில் உள்ள கோயில்களே காரணமாகும்.

வலிகாமத்தில் உள்ள மக்கள் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமைகளில் விரதம் சாப்பிடுவார்கள், தென்மராட்சி மக்களும் அங்கேயும் ஒரு துர்க்கை அம்மன் கோயில் இருப்பதால் செவ்வாய்க்கிழமை விரதம் தான். அதே போல் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோயில் பக்கம் இருக்கும் மக்களும் செவ்வாய்க்கிழமை விரதம்.

வடமராட்சி மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஸ்பெசல் ஏனென்றால் அவர்கள் வல்லிபுரக் கோயில் விரதம் என்பதால் அன்றைக்கும் சைவம் தான். கீத்தின் வல்லிபுரக்கோவில் பதிவில் சாயினி கூட இதனைக் குறிப்பிட்டிருகிறார். என்டை கூட்டாளி ஒருவன் அவனும் வடமராட்சிதான் வெள்ளிக்கிழமை மச்சம் சாப்பிட்டாலும் ஞாயிற்றுக்கிழமை கடைசிவரை மச்சம் சாப்பிடமாட்டான் எனென்டு கேட்டால் பிறகு இரவு கனவிலை பாம்பு வரும் என்பான்.

இடப்பெயர்புகளும், புலம் பெயர்களும் இந்த சட்டிக் கலாச்சாரத்தை அந்த இடங்களின் இயந்திர வாழ்க்கைகளினால் சிலவேளை கைவிட்டிருக்கலாம். ஆனாலும் இன்றும் ஒவ்வொரு விரதத்திற்க்கும் தனித்தனியாக சட்டிகள் வைத்திருக்கும் கலாச்சாரம் எங்கள் கிராமங்களில் நிலவுகின்றது.