Author: வந்தியத்தேவன்
•4:38 PM
வழக்கம் போல பிள்ளையார் கோயில் ஆலமரத்தடி இளந்தாரிப் பொடியளினால் களைகட்டியது. ஒரு பக்கம் ஆடு புலி ஆட்டம் விளையாடும் பொடியள் இன்னொரு பக்கம் தாயம் எறியும் கூட்டம், இன்னொரு பக்கம் 304 கடதாசிக் கூட்டம் விளையாடும் கோஷ்டி என அமளிதுமளிப்பட்டது.



வழக்கமாக 12 பேர் விளையாடுகின்ற 304 இண்டைக்கு சில வழமையான கையள் வராதபடியால் 8 பேருடன் தொடங்கியது.

"கேள்வி" என அழகன் தொடங்க பிரபா "உதவி" என்றான் அழகனும் உதவிக்கு மேலே என தன்ரை பக்க மாறனை கேட்கச் சொன்னான். மாறன் ஒரு தொன்னூறு என இழுக்க எதிர்க்கோஷ்டியினர் அனைவரும் மேலே என மாறனுக்கே விட்டுவிட்டார்கள்.

"உவன் உப்பிடித்தான் தாள் இல்லாமல் சும்மா கேட்பான் " என அழகன் மாறனைப் பேசியபடியே "சரி சரி துரும்பைக் கவிழ்" என்றான்.

"டேய் அழகா நீதானே இறக்கம் நல்ல தாளாப் பார்த்து இறக்கு" மாறன்.

"நல்ல தாளோ, சரி இந்தா டயமண்ட் வீறு" என அழகன் டயமண்ட் ஜக்கை இறக்கினான்,

"நல்ல காலம் நானும் உந்த கோதாரி டயமண்ட்டில் தான் கேட்டனான் தப்பிட்டேன்" என்ற படி பிரபா டயமண்ட் மணலை இறக்கினான்.

"அடப்பாவி மணலை மட்டும் வைத்துக்கொண்டே கேட்டிருக்கின்றாய் தப்பிவிட்டாய்"

"உவன் ரவி நல்லா அடுக்குவான் ஆனால் ஒருநாளும் வெல்ல அடுக்குவதில்லை எதாவது ஒரு தாளை மாத்தி அடிக்கி குழப்பிபோடுவான்" என ரவியின் அடுக்கை குறை சொன்னான் சீலன்.

முதல் ஆட்டம் முடிந்தது, அழகன் கார்ட்சை புறிக்கத் தொடக்கினான். கடைசிக் கை போட்டதுதான் "மடக்கு" என்றான் பிரபா.

"ஆடத்தன் அவங்களைக்கு அணைஞ்சுபோச்சு, எங்கடை பக்கம் கலாவரை ஆனாலும் ஒருதனும் கேட்கவில்லை" சலிப்புடன் அடுக்கல் மன்னன் ரவி.

ரவி சொன்னது போல பிரபாவும் ஆடத்தன் வீறை மேசையில் ஓங்கி அடித்தான். அவனுக்கு பக்கத்தில் இருந்த மாறன் ஆடத்தன் ஆசை இறக்கவும் பிரபா "கோட்"
என ஏனைய தாள்களை கோட்டடித்தான்.

இந்த முறை நீங்கள் மடக்கினாலும் அடுத்த முறை நான் கம்மாறீஸ் அடிக்கின்றேன் இது சீலன்.

டேய் நீ இனத்துக்கு இனம் போடுகின்ற சின்னபெடியன் கம்மாறிஸ் அடிக்கபோறீயோ என அவனை மாறன் நக்கலடித்தான்.

இப்படியே ஒருத்தரை ஒருதர் நக்கலடித்தபடி பெரிதாக அலாப்பல்கள் இல்லாமல் நிறைவடைந்தது.

சொல் விளக்கம் :

கடதாசிக் கூட்டம் :

கார்ட்ஸ் விளையாடுபவர்களை எங்கடை ஊரில் கடதாசிக் கூட்டம் என்பார்கள்.

கையள் :

கார்ட்ஸ் விளையாட்டில் பங்குகொள்ளும் நபரை கை என அழைப்பார்கள். உதாரணமாக "மச்சான் ஒரு கை குறையுது நீயும் வா" என்றால் ஒராள் குறைவாக உள்ளது என்பதாகும்.

கேள்வி :

விளையாட்டுத் தொடங்கும்போது கார்ட்சினை பங்கிட்டவருக்கு பக்கத்தில் இருப்பவர் பெரும்பாலும் இந்தக் கேள்வியுடன் தான் ஆரம்பிப்ப்பார். புள்ளிகள் அடிப்படையில் இது 50 (சாதாரண 50) ஆகும். இதன் ஆங்கிலப் பிரயோகம் தெரியவில்லை.

உதவி ;

கேள்வி கேட்டவரின் எதிரணி உறுப்பினர் (பெரும்பாலும் கேள்வி கேட்டவருக்கு அருகில் இருப்பவர்) கேட்பது இதன் பெறுமதி சாதாரண 60 புள்ளிகள் ஆகும்,

மேலே :
ஒருவர் தன்னால் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாமல் தன் அணியைச் சேர்ந்த ஏனையவர்களிடம் விட்டுவிடுவது,

தாள் :

சீட்டு ஒன்றை தாள் என்பார்கள். உதாரணமாக நல்ல தாள் வாய்க்கவில்லை.

துரும்பு :

Trump பே துரும்பு எனப்படுகின்றது. துருப்புச் சீட்டின் மருவிய வடிவம் இந்த துரும்பாகும்.

வீறு : ஜாக்(Jacks).

மணல் : ஒன்பது (Nine)

ஆசு : Ace

ஆஸ் (Ace) என்பதன் மருவிய பதம்

அடுக்குதல் :

அடுக்குதல் என்பது சீட்டினை ஒருவிதமான வரிசைப்படுத்தலில் அடுக்குதல். ஏதாவது ஒரு அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தாள்கள் செல்லும், சிலவேளைகளில் அடுக்கு பிழைத்தால் தோல்வி தான்.

புறித்தல் :
சீட்டினை அனைத்து விளையாடும் உறுப்பினர்களிற்க்கும் பங்கிடுதல்.

மடக்கு :

ஒருவர் தன்னுடைய கையில் இருக்கும் தாள்கள் அனைத்தும் எதிரணி உறுப்பினர்களால் வெட்டமுடியாமல் விளையாடுவது.

கோட்(Coat) :

மடக்கியவர் கடைசியாக கோட் எனச் சொல்லி தன்னுடைய தாளை அல்லது தாள்களை இறக்கவேண்டும்.

ஆடத்தன் : Hearts

உவீத்தன் : Diamonds

கலாவரை : Clubs

ஸ்பேட் (Spades) அதே பெயரில் தான் அழைக்கப்படுகின்றது.

கம்மாறிஸ் : Caps

ஒரு அணியினருக்கு சகல தாள்களும் கிடைத்தால் கடைசியாக அடிப்பது கம்மாறீஸாகும்.

சில சொற்களின் ஆங்கிலச் சொற்கள் தெரியவில்லை. மேலதிக தகவல்களை கார்ட்ஸில் வித்துவம் கூடிய நண்பர்கள் சொல்லவும். இந்த 304 விட ரம்மி, 31 (முப்பத்தியொன்று), கழுதை, பிரிஜ்(Bridge) போன்ற ஏனைய கார்ஸ்ட் விளையாட்டுகளும் பிரபலம் வாய்ந்தவை.
Author: கரவைக்குரல்
•9:58 AM
ஒரு வேலையை சும்மா முடிக்கவே ஏலாது பாருங்கோ,அதைவிட அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் முடிக்க முடியாது எண்டால் அதிலை உண்மை இருக்குது பாருங்கோ,என்னதான் பெரிய திட்டம் போட்டு செய்தாலும் அதற்கு எதிரான கருத்துடையவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாத விடயம்.நிகழ்வுகள் முடிந்த பின் அப்படியாக நிகழ்வுகள் சம்பந்தமாக அதை நிராகரித்து கருத்துரைப்பவர்களும் இருகிறார்கள்,அதேபோல ஆமோதித்து கருத்துரைபவர்களும் இருக்கிறார்கள்,அவையெல்லாம் நிகழ்வு அமைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதோடு எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,
இப்படியாக நிகழ்வினால் வரும் எதிர்பார்க்கமுடியாத கஷ்டங்களாலும் தடங்கல்களாலும் சிலர் நிகழ்வினை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கும்போது ”என்ன ஆக்கினை பிடிச்ச வேலையில் தலை குடுத்தேனோ” என்று மனம் கசந்து கொள்வார்கள் சிலர்.

அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் வெற்றியும் உண்டு,தோல்வியும் உண்டு பாருங்கோ,வெற்றிபெற்றால் ”ஆகோ ஓகோ எண்டு வேலை போகுது” எண்டு சொல்லும் எங்கடை சனம், தோல்வியிலை போனால் “ஐயோ ஆக்கினை பிடிச்ச வேலையிலை தலை வைச்சு படுக்கிறதேயில்லை எண்டு தலையிலை கை வைப்பினம்,

இப்படியாக “ஆக்கினை” என்பது ”கஷ்டம் கொடுத்தல்” என்பதாகவும் அதனுடன் சேர்ந்து வரும் ”விழுந்த வேலை” என்பதற்கு தனியாக கருத்துக்கொடுக்காமல் ஆக்கினையில் அதாவது கஷ்டம் கொடுக்கும் வேலையில் பங்கெடுத்துவிடல் அல்லது முற்றுமுழுதாக ஈடுபட்டுவிடல்” என்றவறாக கருத்துக்கொடுக்க முடியும், அதை சிலர் "ஆக்கினை விழுந்த வேலை" என்பதை "ஆக்கினை பிடிச்ச வேலை" என்றும் சொல்லிக்கொள்வர்.

சிலருக்கு சிலர் எப்போதும் கஷ்டம் கொடுத்தபடியே இருப்பதாக அந்தச் சிலர் உணர்வார்கள்,அந்த வேளைகளிலும் கூட ”இவன் எப்பவும் ஒரே ஆக்கினை தான்”அல்லது ”ஒரே ஆக்கினை பிடிச்சவன்” எண்டு மனதோடு திட்டுவதும் உண்டு் எங்கடை சனம்.
அதைவிட அற்புதமாக ”ஆக்கினை விழுவானே” எண்டு முதியவர்கள் சிலர் கோவத்திலும் சிலர் நட்பிலும் மற்றவர்களை ஏசுவதுமுண்டு.

இப்படியாக ”ஆக்கினை” என்பது ஈழத்து வழக்கோடு ஒட்டிவிட்ட சொல்.இது வயது வந்த எம் முதியோர்களால் இப்போதும் அடிக்கடி கேட்ககூடியதாக இருக்கும்.
என்றாலும் நடுத்தர வயதானவர்களாலும் இளையோர்களலும் இடையிடையே இக்காலங்களில் சொல்லப்பட்டாலும் சிறியவர்களால் அது சொல்வது மிகக்குறைவு என்று சொல்லலாம்.என்றாலும் இந்த சொல் வழக்கொழியும் மற்றைய சொற்களைப்போல அல்லாமல் சிலகாலம் எம்மவர்கள் வாயில் நின்று நிலைக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது,இது சம்மந்தமான உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கோவன்.

சரி இவன் என்ன ஆக்கினை விழுவான் சும்மா என்னடா உளறிகொண்டிருக்கிறான் எண்டு நினைக்கிறீங்க என்ன? உங்களுக்கும் ஆக்கினை தராமல் நானும் போட்டு வாறன்,இன்னுமொரு சொல் நினைவுவரேக்கை நான் வாறன், மற்றவைக்கு ஆக்கினை தராமல் இருப்போமாக.


குடுதேனோ- கொடுத்தேனோ எங்கடை- எங்களுடைய
நினைவுவரேக்கை- நினைவு வரும்பொழுது
Author: கரவைக்குரல்
•10:10 AM
ஈழத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள பல்வகையான சொற்களை ஈழத்தின் முற்றம் வாயிலாக கொண்டுவரும் பதிவர்களோடு நானும் கைகொடுக்கலாம் என்னுடைய எண்ணம்,அப்படியான சில சொற்கள் காலப்போக்கில் இல்லாது போய்விடுமோ என்ற அச்சம் ஒருபுறமிருக்க அதை என்றும் நிலைத்துவிட வேண்டும் என்ற பெருமுயற்சியில் ஈழத்துமுற்றம் பங்களித்துக்கொண்டு இருக்கிறது.சில சொற்கள் சொல்லும்போது அவை ஈழத்து மொழி நடையில் ஒரு அழகைத்தரும் சொற்களாகக்கூட இருக்கின்றன,

ஆனால் ஈழத்து வழக்கில் எத்தனையோ பல சொற்கள் கொஞ்சம் வழக்கில் குறைந்துகொண்டு போவதை அவதானிக்க முடிகிறது,கவலைக்குரிய விடயமும் கூட
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............

இவையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் சொல்ல வந்த விடயத்தை நான் அயத்துப்போடுவன் போல கிடக்கு.

பொதுவாக அயத்துப்போனன் எண்டு இப்போதும் சில வயது வந்தவர்களால் தான் சொல்லப்படுவதை இன்றைய காலங்களில் அவதானிக்கமுடியும்,

“என்னணை அம்மா நேற்று உங்களை ரெலிபோன் (தொலைபேசி) கதைக்க வரச்சொன்னனான் எல்லோ ஏனெணை வர இல்லை?" எண்டு அடிக்கடி தன் தாயின் மீது அக்கறையாக வெளி நாட்டிலை இருந்து கதைக்கும் மகன் கேட்க

”அட ஒம் தம்பி் நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா,என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி” எண்டு அந்த வயது வந்த அம்மா சொல்கிறார்,

இந்த உரையாடல் மூலம் இப்போது அந்த “தீர அயத்துப்போதல்” என்பதன் அர்த்தம்
புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும்.”தீர” எனபது ”முழுவதும்” என்பதாகவும் ”அயத்துப்போதல்” என்பது ”மறந்துவிடுதல்” என்று பொருள் கொடுக்க முடியும்,இதை பொதுவாக இந்தக்காலங்களில் பேச்சுவழக்கில் ”முழுக்க மறந்துபோச்சு” என்று சொல்லுவினம்.

பொதுவாக இந்த காலத்து இளம்பாரயம் மட்டுமல்ல அதைவிட கொஞ்சம் வயது கூடிய மட்டங்கள் கூட ”அயத்துப்போனன்” என்ற சொல்லை பாவிப்பதே இல்லை என்றுதான் சொல்லலாம்.அப்படியிருக்கும்போது அது எப்படி அடுத்த பராயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்பது கேள்விதான்,காலப்போக்கில் இந்த சொல்லை அயத்துப்போவார்களோ என்ற ஏக்கமும் இருக்கு,


இங்கு முத்தம்- முற்றம், உன்ணாணை-பொதுவாக சத்தியம் செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று,
Author: கானா பிரபா
•4:33 AM

வயசானவர் ஒருவர் ஏதாவது விடயம் பற்றிப் பேசும் போது இடையில் இளையவர் ஒருவர் மாற்றாக ஏதாவது சொன்னால் போதும் "என்ன விண்ணாணம் பேசுறாய்" என்று கேட்பார் அந்த வயசானவர்.

குறித்த விடயம் பற்றி ஒரு கருத்து சொல்லப்படும் போது அது அந்த விடயத்திற்கு முரணாக இருந்தால் அல்லது குறித்த அந்த விடயத்தை முன்வைத்தவர் ஏற்காது போனால் தான் இந்த விண்ணாணம் என்ற வார்த்தை பிரயோகம் வந்து விழும்.

விண்ணாணம் என்றால் என்ன என்று அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். அதில் நாகரீகம், மாசாலம், வெட்கம் என்று சம அர்த்தங்கள் போடப்பட்டிருந்தன. இங்கே வெட்கம் என்ற அர்த்தத்தில் நம்மூரில் இந்த இந்த விண்ணாணம் பயன்படுவதில்லை. எனவே மற்றைய இரண்டு அர்த்தங்களையும் கொண்டு பார்த்தால், நாகரீகம் என்பது ஏற்கப்படும் சொல்லாகப் படுகின்றது. மாசாலம் என்று போட்டிருக்கே அது என்ன என்று பார்த்தால் ஓர் மாய வித்தை என்று விளக்கப்பட்டிருக்கிறது அகராதியில்.

ஆக, விண்ணாணம் என்ற சொல்லை மாயவித்தை, அல்லது நாகரீகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கலாம். விண்ணாணம் என்பது விஞ்ஞானத்தின் மருவிய பேச்சு வழக்கின் கிண்டல் தொனியாகவும் மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

புகைப்படம் நன்றி: Boston.com
Author: வந்தியத்தேவன்
•12:04 AM
குதிரை ஓடுதல் என்ற சொல் இலங்கையில் பரவலாக கள்ளமாக சோதனை எழுதுதல் அதாவது ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் ஆள்மாறாட்டம் செய்து சோதனை எழுதுதல் என்பதாகும்.

பெரும்பாலும் ஓஎல்லுக்கும் ஏஎல்லுக்கும் தான் இந்த குதிரை ஓட்டம் நடைபெறும். இது தண்டனைகுரிய குற்றமாகும் ஆனாலும் சிலர் துணிந்து எழுதுவார்கள் பிடிபட்டால் அதிகாரிகளால் எச்சரிக்கை செய்தே பெரும்பாலும் அனுப்பபடுவார்கள் காரணம் குதிரை ஓடுபவர் நன்றாகப் படிக்ககூடியவராக இருப்பார், அவரது எதிர்காலத்தை கருதி அவரை எச்சரிக்கையுடன் விட்டுவிடுவார்கள். இதுவரை நான் ஆண் குதிரைகளையே கண்டிருக்கின்றேன். பெண் குதிரைகள் ஓடுவதில்லை என நினைக்கின்றேன். காரணம் அவர்களுக்கு இந்த கள்ளவேலைகளில் அவ்வளவு விருப்பமில்லை.

இனி என்ரை சொந்தக் கதை சோகக் கதைக்குப்போவோம். என்னுடைய வலைமனையில் இருந்ததை திருத்து எழுதியிருக்கின்றேன். அந்தப் பதிவு நான் வலையுலகத்தில் காலடி எடுத்துவைத்தபோது எழுதியது. நிறையப் பிழைகள் இருக்கின்றது. ஆகவே இது ஒரு மீள் பதிவு அல்ல திருத்திய வடிவம்.

நான் உயர்தரம் படிக்கும்போது எனக்கும் அப்படி ஒரு நிலமை ஏற்பட்டது. கல்விப் பொதுத் தராதர(சாதாரணதரம்/ ஓஎல்) பரீட்சை பொதுவாக டிசெம்பர் மாதத்தில்தான் இடம் பெறும். நான் என்ரை ஓஎல் சோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டு உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன் . பொதுவாக டிசம்பர் விடுமுறை என்பதால் வீட்டுக்காரர் எல்லோரும் கொழும்புக்கு சென்றுவிட்டார்கள். நான் மட்டும் வீட்டிலை, ரியூசனுக்கு ஒழுங்காச் செல்லவேண்டும் எனக் கண்டிப்புடன் சொல்லிவிட்டு அவர்கள் என்னை வீட்டிலை தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். 30 நாள் லீவிலை நான் 5 நாள் மட்டும் ரியூசன் சென்றது வேறு கதை.

ஒரு நாள் இரவு கூட்டாளிப் பொடியன் ஒருவன் இன்னொரு தெரிந்த பொடியனுடன் வந்து "மச்சான் இவன் ஓஎலிலை கணக்கு பாடம் சென்ற வருடம் பெயிலாகிவிட்டான் அவனுக்கு ஏ எல்( Advanced Level ) படிக்க கணக்கு பாஸ் பண்ணவேண்டும் இவனுக்கோ கணக்கு சுத்த சூனியம். நீ தான் இவனுக்காக குதிரை ஓடவேண்டும்" என்றான்.

நானோ முதலில் பயத்தில் மறுத்துவிட்டேன். எனக்கு உந்த ரிஸ்க் எடுக்கிற வேலையெல்லாம் சரிப்பட்டுவராது. அதாலை அவனிடம் "அட விசரா நான் பிடிபட்டால் என் படிப்பும் போய்ச்சு இவன்ரை படிப்பும் போய்ச்சு நான் மாட்டேன்" என்றேன்.

அவனோ விடாப்பிடியாக நீ தான் கணக்கிலை புலியாச்சே(பாப்பாசி மரத்திலை ஏத்துகிறான்) நல்லா எழுதுவாய் சும்மா பாஸ் காணும் இவணுக்கு ஒன்றும் டீயோ(Distinction ) சீயோ(Credit) ஒன்றும் வேண்டாம் ஒரு எஸ்(Simple Pass) போதும்" என்று கெஞ்சினான்.

நானும் கொஞ்சம் யோசிச்சிட்டு வீட்டுக்காரர் ஒருத்தரும் இல்லை களவும் கற்றுமற என பெரிசுகள் சொல்லியிருக்கிறார்கள் ஒருதரம் முயற்சி செய்தால் என்ன என நினைச்சு ஓம் எண்டுவிட்டேன். அத்துடன் என்ரை கண்டிசன் எல்லாம் சொன்னேன். எக்ஸாம் ஹோல் என்ரை பள்ளியாக இருக்ககூடாது என்றேன், அதற்கு அவர்கள் அதில்லை பள்ளிக்கூடம் என்றுவிட்டு ஒரு பிரபல பெண்கள் பாடசாலையை சொல்ல நான் விண்ணில் மிதந்தேன். நான் உடனே அடுத்த கண்டிசனான யார் அங்கே மேற்பார்வையாளர் எனக் கேட்க அவங்களும் அது யாரோ தெரியாத மாஸ்டர்தான் உனக்கு தெரிந்த ஒருதரும் இல்லை பயப்படவேண்டாம் என்றார்கள்.

அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை தபால் அடையாள அட்டை மாத்துவது அவனது அடையாள அட்டையியில் என்னுடைய படம் ஒன்றை மாத்தி ஒட்டவேண்டும். இதற்கென சில பொடியள் இருக்கிறார்கள் அவங்கள் நல்ல வடிவாகச் செய்வார்கள் என அவங்கள் என்ரை படம் ஒன்றை வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். சோதனை அண்டைக்கு பள்ளிக்கூட வாசலில் எனக்கு அடையாள அட்டையைத் தருவதாக சொன்னார்கள்.

விடிஞ்சால் சோதனை நான் சோதனை எழுதும்போது கூட‌ இப்படி பதட்டப்பட்டதில்லை, ஒரே ரென்சன். காலை நேரத்துக்கு எழும்பி குளித்துவிட்டு அப்படியே பிள்ளையாருக்கும் ஒரு சலூட் போட்டுவிட்டு பக்திப் பழமாகா போனால் பிடிக்கமாட்டார்கள் என்ற நினைப்பிலை பள்ளிக்கூட‌ வாசலில் நண்பர்களுக்காக நின்றேன்.

எனக்குத் தெரிந்த பொம்பிளைப் பிள்ளையள் எல்லாம் என்னை ஏதோ நான் அவர்களை சைட் அடிக்க நிற்பதாக நினைத்து ருத்ர பார்வை பார்த்துவிட்டுப்போனார்கள். வாசலிலேயே என் மானம் கொஞ்சம் கொஞ்சமாக கப்பல் ஏறிவிட்டது. சோதனை தொடங்க 15 நிமிடங்கள் இருக்கும்போது தான் அவர்கள் இருவரும் வந்தார்கள் "என்ன மச்சான் இப்படி லேட் பண்ணிவிட்டிர்களே" எனக் கேட்க அவங்களோ "இல்லை இப்ப நீ போனால்தான் சரியாக இருக்கும்" என்றதுடன் என்னை வாழ்த்தியும் அனுப்பினார்கள். (செய்வது கள்ளத்தனம் இதிலை வாழ்த்து வேறை).

நானும் பாண்டியராஜன் முழிமாதிரி கண்ணைப் பிரட்டிகொண்டு என் சீட்டைத் தேடினேன். அவங்கள் முதலிலே சொல்லியிருந்தாங்கள் மச்சான் ரிலாக்சாகபோய் எழுது பயந்துகொண்டுபோனியோ என்றால் பிடித்துப்போடுவார்கள். ஒருமாதிரி சீட்டைக் கண்டுபிடித்து இருக்க மேற்பார்வையாளார் வந்தார். அவரும் என்னை நோக்க நானும் அவரை நோக்க என் மனதில் பெரிய அணு குண்டே வெடித்தது.

அவர் வேறையாரும் அல்ல எனது பாடசாலை இரசாயனவியல் ஆசிரியர் அவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் சேர்ந்துவெடித்தது. ஆனாலும் உடனே அதைக் காட்டிக்கொள்ளாமல் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே அழைத்துச் சென்றார். வெளியிலை வைத்து என்ரை அடையாள அட்டையைச் சோதித்தார். என்ரை பேருக்கு பதிலாக இன்னொரு பெயர் அவ்வளவுதான் தொடங்கினாரே அர்ச்சனை.

மற்ற மாணவர்களுக்கு நான் யார் என்பதைக் காட்டிக்கொடுக்காமல் வெளியே வைத்து சரமாரியாக ஏசினார். இறுதியாக ஓடடா வீட்டை என என்னை துரத்தினார். இதேடை விட்டிருந்தால் பரவாயில்லை. பள்ளி தொடங்கியபின் அம்மாவைக் கூப்பிட்டு என் சாகசத்தைச் சொல்லி வீட்டிலும் எனக்கு அர்ச்சனை கிடைக்கச் செய்தார்.

இதற்க்குப் பிறகு நான் குதிரை ஓடுறது என்றாலே ஓரே ஓட்டம் தான்.

இலங்கையில் தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை நடக்கின்றது. ஆகையால் காலத்திற்க்கேற்ற பதிவாக இந்தப்பதிவு.
Author: வந்தியத்தேவன்
•9:57 AM
மைம்மலுக்கை சுருட்டும் கையுமாக இருந்த சண்முகம் கிழவன் தெருவாலை போன ஒரு பெட்டையை மட்டுக்கட்டமுடியாமல் "உதார் பிள்ளை " என அவளைக்கூப்பிட்டார்.

"எணே அப்பு அது நான் மணியத்தாற்றை மூத்தது" என பதிலளித்தாள் மணியம் மாஸ்டர்ரை மூத்த பெட்டை மணிமொழி.

"எங்கே பிள்ளை கலாதியாக வெளிக்கிட்டுக்கொண்டுபோறாய்" கிழவன்

"என்ரை கூட்டாளிப் பிள்ளை ஒருத்திக்கு இண்டைக்கு பேர்த்டே அங்கேதான் போறன்" என்ற படி மணிமொழி சைக்கிளை உதைய‌த்தொடங்கினாள்.

பார்ட்டியிலை மணிமொழியின் நண்பின் தாயார் அனைவரையும் நன்றாக உபசரித்தார். எல்லோருக்கும் இன்னொரு தரம் அரியதரம் சாப்பிடக்கொடுத்தார். "பிள்ளையள் இந்த அரியதரத்தை மிச்சம் விடாமல் சாப்பிடுங்கோ, இல்லையென்றால் சக்குப் பிடிச்சுப்போம்" எனக் கூறினார்.

மணிமொழி பக்கத்திலை இருந்த தன் நண்பி தர்சியைப் பார்த்து "தர்சி அங்காலை கதவுக்குப் பக்கத்திலை நிற்கிற பொடியன் என்னைப் பார்த்து இளிக்கிறான், "உவன் என்ரை கூட்டாளி ஒருத்திக்கு டிமிக்கி கொடுத்தவன்" அவனுக்கு பெரிய கெப்பர் பொடிப்பிள்ளை ஒருநாளைக்கு தனிய அம்பிடட்டும் அண்டைக்கிருக்கு உவருக்கு" என்றாள்

"எடியே பிலத்துக் கதையாதே அவனுக்கு கேட்கப்போவுது மற்றது இண்டைக்கு எல்லோரும் உன்னைத்தான் பார்க்கினம் வீட்டைபோய் ஒருக்கா நாவூறு பார்" என்றால் தர்சி.

"சரியடி தர்சி நான் வீட்டை போறன் போற வழியிலை நடனமுருகன் மருந்துக்கடையிலை அம்மாவுக்கு குளிசையும் வாங்கவேண்டும்" என்ற மணிமொழி வீட்டைநோக்கிச் செல்லத்தொடங்கினாள்.

போற வழியிலை சனமெல்லாம் அலார்ப்பட்டார்கள். பக்கத்திலை நிண்ட ஒருத்தரை என்ன பிரச்சனை எனக்கேட்க அவர் புளியடிச் சந்தியிலை ஏதோ கலாதியாம் என்றார்.

பாதையை மாற்றிக்கொண்டு நேரகாலத்திற்க்கு மணிமொழி வீடுபோய்ச் சேர்ந்தாள்.

மைம்மல் ‍- மாலைப்பொழுது.

மட்டுக்கட்டுதல் -அடையாளம் காணுதல்

வசந்தன் அண்ணையை மட்டுக்கட்டமுடியேல்லை என்றால் வசந்தன் அண்ணையை என்னால் அடையாளம் காணமுடியாமல் போயிற்று.

கலாதி - இரண்டு அர்த்ததில் பாவிக்கப்படும் சொல். ஒன்று அழகு இன்னொன்று சண்டை சச்சரவு

உன்ரை உடுப்பு கலாதியாக இருக்கு என்றால் உடை அழகாக இருக்கு என அர்த்தம்.

வகுப்பிலை இண்டைக்கு எனக்கும் பிரபாவுக்கும் கலாதி என்றால் எம்மிருவருக்கும் சண்டை என்ற அர்த்தம் வரும்.

வெளிக்கிடுதல் - உடை அணிதல், தயார் ஆகுதல். கலியாணப்பொம்பிளை இன்னும் வெளிக்கிடவில்லை என்றால் அவர் தயாரில்லை எனப் பொருள் படும். மாப்பிள்ளை இப்போதான் வெளிக்கிடுகிறார் என்றால் அவர் உடை அணிகின்றார் என்ற பொருள்.

கூட்டாளி - நண்பன் நண்பி(பொதுப்பால்)

உதைதல் - காலால் உதைத்தல்

அரியதரம் - சீனி அரிசி மா கலந்து செய்யும் இனிப்பு பண்டம். சிலவேளைகளில் கொஞ்சம் கல்லாக இருக்கும் கடித்தால் விழுகின்ற நிலையில் இருக்கும் பல்லு நிச்சயம் விழும்.

சக்கு - பூஞ்சணம் பிடித்தல்(பூஞ்சணம் என்பது பங்கஸ்)

இளித்தல் - அசடு வழியச் சிரித்தல்

டிமிக்கி கொடுத்தல் - ஏமாற்றுதல். டிமிக்கி எந்த மொழிச் சொல் எனத் தெரியவில்லை.

கெப்பர் - தலைக்கனம்

அம்பிடல் - பிடிபடுதல்

பிலத்து - சத்தம். பிலத்து கதையாதே என்றால் சத்தமாக கதையாதே எனப் பொருள்

மற்றது - அடுத்தது

நாவூறு - கண்ணூறு. பொதுவாக ஒருவர் கண் வைத்தால் கண்ணூறு ஏற்படும் எனவும். இன்னொருவரை புகழ்ந்து பேசினால் நாவூறு( நாக்கு+ ஊறு) ஏற்படும் எனவும் சொல்வார்கள். செத்தல் மிளகாய், உப்பு, வேப்பமிலை போன்றவற்றால் நாவூறு பார்ப்பார்கள்.

குளிசை - மாத்திரை

அலார் - அல்லோலகல்லோலப்படல்

குறிப்பு : புதிய சொற்களை அகராதி வடிவில் தராமல் கதைபோல் எழுதக்காரணம் படிக்கின்றவர்களுக்கு இலகுவாக விளங்கும் என்பதற்கேயாகும்.
Author: வர்மா
•2:04 AM
எனது அம்மம்மா அடிக்கடி சொல்லும் வசனம் "கறி புளி முப்பத்திரண்டும் முடிஞ்சுபோச்சு". அந்த முப்பத்துரண்டுமென்னவென்று எனக்குத்தெரியாது. அம்மம்மாவை ஊரில் உள்ள உறவினர்கள் எல்லோரும் அப்புஅம்மா என்றுதான் அழைப்பார்கள்.நாங்களும் அவரை அப்புஅம்மா என்றுதான் கூப்பிடுவோம்..அயலவர்கள் மருந்தாச்சி என்பார்கள். அம்மாவின் தகப்பன் வைத்தியர். இதுபரம்பரைத்தொழில்.

அப்புஅம்மாசொல்லும் முப்பத்திரண்டும் முடிஞ்சுபோச்சு என்பதை அம்மாவும் அடிக்கடி சொல்வார். முப்பத்திரண்டும் என்னவென்று அம்மாவைக்கேட்டேன்.அம்மா சரியானபதில் சொல்லவில்லை.அப்புஅம்மாவிடம் கேட்டேன். அப்புஅம்மாசொன்னபதிலை நம்பமுடியவில்லை இப்படியும் இருக்குமா என்றசந்தேகம் மனதைக்குடைந்தது.

அம்மாவின் தகப்பனை உறவினர்கள் அப்பு என்பார்கள். நாங்களளும் அப்பு என்றே கூப்பிடுவோம். அயலவர்கள் மருந்தப்பு என்பார்கள். அவருடையபெயர் சிலம்பு என்பது பலருக்குத்தெரியாது.

ஜனனம் மரணம் இரண்டையும் நாடிபிடித்து சொல்லிவிடுவார்.நாடியைப்பிடித்து நோயைசொல்லிவிடுவார்.நோயாளியின் கையைப்பிடித்து அவர் இரண்டு நாள் தவணை சொன்னால் கொழும்பில் உள்ள உறவினர்களூக்கு தந்தி அடித்துவிடுவார்கள். சிலநோயளிகளைப்பார்த்து அவர் எதுவும் பேசாமல் போவார் அப்போது உறவினர்கள்மருந்தப்பு ஒண்டும் பற‌யாமல் போறியள் எனபார்கள்.அவர் ஒண்டும் பேசாதுபோனால் காரியத்தைப் பார்க்கவேண்டியதுதான்.

அப்புவுடன் சோர்ந்து இருந்ததனால் அப்புஅம்மாவும் அங்கீகரிக்கப்படாத வைத்தியரானார்.
முப்பத்திரண்டும் என்றால் குசினியில் உள்ள மஞ்சள்,மிளகு.வெந்தயம்,சீரகம் உள்ளி,வெங்காயம்,பெருங்காயம் போன்றவற்றுடன் நோய்தீர்க்கும் சில மரக்கறிகள்என அப்புஅம்மா கூறியதை சிறு வயதில் நான் நம்பவில்லை.

சுமார் 10 வருடங்களுக்குமுன்னர் கிச்சன் கிளினிக் எனும் கட்டுரை கல்கி சஞ்சிகையில் பிரசுரமானது. இலகுவாககிடைக்கக்கூடியஇயற்கைமூலிகள் 64 உள்ளன. அவற்றில் 32 எமது வீட்டுசமையறையில் உள்ளனஎன கல்கியில் படித்தபின்புதான் அப்புஅம்மாவைப்பற்றிபூரணமாக அறியமுடிந்தது.

தங்கச்சியும் மனிசியும் முப்பத்திரண்டும் முடிஞ்சு போச்சு எண்டு சொல்லத்தொடங்கிட்டினம்.

நாடி...................மணிக்கட்டில் உள்ள இரத்தம் ஓடும் நரம்பு
தவணை...............நோயாளி உயிருடனிருக்கும் காலம்.
தந்தி அடிப்பது..........உறவினர் சாகப்போகிறா என்ற அறிவிப்பு
பறயாமல்..............எதுவும் சொல்லாது
காரியம்................இறுதிக்கிரிகைக்கான எற்பாடு
குசினி/அடுப்படி ..................சமயலறை
Author: வந்தியத்தேவன்
•4:56 AM
தட்டிவான் யாழ்ப்பாணத்தில் பிரபலமான வாகனம். எனக்கு மிகவும் பழக்கப்பட்டது பருத்தித்துறையில் தொடங்கி நெல்லியடி ஊடக கொடிகாமம் போகும் தட்டிவான் தான். பிரிட்டிஷ்காரனின் தயாரிப்பு. இந்த தட்டிவானில் பயணம் செய்தால் நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் வாகனங்களிலும் பயணம் செய்யலாம்.



முதலில் தட்டிவானின் வடிவமைப்பை பார்ப்போம். முன்பக்கத்தில் மட்டும் கண்ணாடியுள்ள வாகனம். மக்கள் இருக்கும் இடப்பகுதி எல்லாம் திறந்தவெளி. சாவகச்சேரி சந்தைக்கு போகின்ற குஞ்சி ஆச்சி வெத்திலை சப்பித் துப்ப ஏதுவானது. பின்பக்கத்தில் இருக்கும் பலகையில் மீன் பெட்டிகள், மரக்கறி மூட்டைகள் முடிந்தால் மனிதர்களைக்கூட ஏற்றிச் செல்லும் அதிசய வாகனம்.

எப்படியும் காலை 7 மணிக்கு நெல்லியடிச் சந்திக்கு வந்துவிடும். சனமாக இருந்தாலும் கொண்டக்டர் விடமாட்டான் அண்ணே இன்னும் கொஞ்சம் பொறுங்கோ சனம் வரட்டும் என எப்படியும் அரைமணித்தியாலம் அங்கேயே வைத்திருப்பான். பக்கத்து மொடேர்ன் ஸ்டோரில் உதயனையோ, ஈழநாதத்தையோ நின்று நிதானமாக சனம் நிறைந்தபின்னர் ஏறும்பலரைக்கண்டிருக்கின்றேன். சிலவேளை ட்ரைவரே தனக்கு தெரிந்தவர்களுக்கு இப்போ எடுக்கமாட்டான் பக்கத்து சங்குண்ணி கடையில் தேத்தண்ணி குடித்துவிட்டு வாருங்கள் என்பார்.

பெரும்பாலும் ஒரே ஆட்களே தட்டிவானில் பயணிப்பார்கள். இவர்கள் சாவகச்சேரியில் வேலைபார்ப்பவர்கள், கொடிகாமம் சந்தையில் வியாபாரம் செய்பவர்கள், என ஒரே மக்கள் செல்வதால் அவர்களுக்கு பலரையும் பழக்கமாய் இருக்கும் இதனால் ஒருவர் வரப் பிந்தினால் கூட ட்ரைவருக்கு உரிமையாக தம்பி ஆச்சி வரவில்லை சின்னத்தம்பி அண்ணை வரவில்லை கொஞ்சம் பொறுங்கள் என கூறுவார்கள்.

சீட்டுகள் பெரும்பாலும் மரத்தாலே ஆனவை. பின்னுக்கு அரைமுதுகுதான் சாஞ்சு இருக்கமுடியும். இரண்டு சீட்டுக்கு இடையில் தேவைப்பட்டால் இன்னொரு பலகை போட்டு அடிசனலாக ஆட்களை இருத்தும் கலை இவர்களுக்குத் தான் தெரியும்.

நெல்லியடிச் சந்தியில் அரைமணித்தியாலமாக உறுமிக்கொண்டே இருக்கும் சிலவேளைகளில் வெளிக்கிடுவதுபோல் எடுத்து அப்படியே பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்றுச் சுற்றி திரும்ப அதே நிண்ட இடத்தில் கொண்டுவந்து நிப்பாட்டுவார்கள். சிலவேளை சீரிபி தூரத்தில் வ்ருகின்றது என்றால் மட்டும் உடனே எடுத்துப்போடுவார்கள். ஆனாலும் கோயில்சந்தை, அந்தணத்திடலில் சில நிமிடங்கள் எப்படியும் நிண்டுதான் எடுப்பார்கள். திரும்ப மாலையில் கொடிகாமத்தில் இருந்து தட்டிவான் தன் பயணத்தை நெல்லியடி ஊடக பருத்துறைக்கு செல்லும்.

தொண்டைமானாறு செல்வச் சன்னதித் திருவிழா நேரத்தில் நெல்லியடியிலிருந்து கோவில் வரை ஸ்பெசல் சேர்விஸ் விடுவார்கள். அந்த அனுபவமும் சுவையானது. இதனை விட அச்சுவேலியில் இருந்தும் தட்டிவான் சில இடங்களுக்குச் செல்வது ஆனாலும் பயணம் செய்துபழக்கமில்லை. ஏனைய மாவட்டங்களில் நான் தட்டிவான் கண்டதில்லை. வவுனியா, திருகோணமலை, நுவரேலியாப் பகுதியில் சிறிய வான்களில் மக்களை அடைந்து கொண்டு செல்வதைக் கண்டிருக்கின்றேன். கஸ்டமான பயணம் என்றாலும் நம் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணிப்பார்கள்.

வட்டாரச் சொல்லில் தட்டிவான் எப்படி வரும் என எண்ணாதீர்கள். நம்ம வட்டாரத்தில் தட்டிவான் பேமஸ்.

இதேபோல் இன்னொரு வாகனமும் பேமஸ் கண்டுபிடியுங்கள் முடிந்தால் எழுதுங்கள்.