Author: யசோதா.பத்மநாதன்
•7:02 AM
மாங்காய் கடித்துத் தின்ற காலம், விளாங்காய் பங்குக்காய் சண்டை பிடித்த காலம், செம்புளி புளிக்க புளிக்க கண்களைச் சுருக்கிக் கொண்டு சுவைத்த பொழுதுகள்,..... 

அது போல ஒன்று தான் குருத்தோலைகளில் பாம்பும், பம்பரமும், மணிக்கூடும், காப்புகளும், கண்ணாடியும் செய்து ஏதோ ஒரு விதமான பெருமிதத்தோடு கம்பீர ராணிகளாய் நடை போட்டிருந்தோம்.கம்பீர ராஜாக்களும் அது போலத் தான்.

ஆண் பெண் சமரசம் நிலவிய வயது! 

அது ஒரு காலம்! போருக்கு முன்பான குழந்தைகளின் பள்ளிச் சீருடைக் காலம்!







பெரு விரல் காட்டி கோபமும் சின்னவிரல் காட்டி நேசமும் போட்டிருந்தோம். நான் உமக்கு .......... தாறன். நீர் எனக்கு...........தாறீரா என்று அடிக்கடி பண்டமாற்றுகள் செய்து கொண்டோம்.

வீட்டோரப் புழுதிச் சிறுவர்கள் அவிழும் கால்சட்டையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறுகையால் நீண்ட தடியில் ரின் மூடியை இணைத்து வாகன சாரதியாய் ஆகிக் கொள்ள நாம் எல்லாம் பயணிகளாய் பின்னால் ஓடினோம். வர்க்க பேதம் தெரியா மனசுகள். அதில் தான் நமக்கு எத்தனை ஆனந்தம்! பெருமிதம்!! 

சரிந்து நிற்கும் முருங்கை மரம் பஸ்ஸாய் ஆக பேப்பர்கள் எல்லாம் காசாய் ஆனது. தந்தைமார் வேலையால் வரும் நேரம் மண்ணிலும் இலைகுழைகளிலும் சமையல் தயாராது. குரும்பைகளில் தேரும் கோயிலும் சுற்று மதிலும் செலவில்லாமல் தயாரானது.


இயற்கையோடு அதன் போக்கோடு ஒன்றித்து வாழ்ந்த வாழ்க்கை நமது. நம் குழந்தைகளோ தொழில் நுட்ப யுகத்தில் சீமேந்துக் கட்டிடத்தினுள்ளே சுயாதீனமாய் உலா வருகிறார்கள்.

உங்கள் குழந்தைக் காலங்களில் என்ன எல்லாம் செய்தீர்கள்?

படம்: நன்றி, கூகுள் இமேஜ்.

Author: வடலியூரான்
•9:57 PM
மூத்தவன் சுகமா முகாமிலையிருந்து வந்தால் முதலிப் பேத்தியம்மாளே அவனை உனக்கு காவடி எடுக்க வைக்கிறன், இடையிலை நிக்கிற இளையவன் ஒரு பிரச்சினையுமில்லாமல் இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்தால் இத்திமரத்தாளே எனரை இரண்டாவது பெட்டையினரை மூத்த பெடியன் காவடியெடுக்க, நான் பாற் செம்பு எடுப்பன்,எட்டிலை செவ்வாயிருக்கிற என்ரை கடைசிப் பெட்டைக்கு இந்தச் சம்பந்தமாவது முற்றாகி வந்தால் முள்ளு மிதி போட்டு நான் பாற்செம்பு எடுக்கிறன்,என்றை புருசன் ஆசுப்பத்திரியாலை சுகமா வந்து சேர்ந்தால் எனரை அம்மாளாச்சியே என்றை இரண்டாவது பெடியனை உனக்கு காவடியெடுக்க வைச்சு, அஞ்சு கொத்துப் பானையிலை பொங்கி,ஒரு பெரிய பிலாப்பழமும் வெட்டிப் படைக்கிறன் என்பது போன்ற நேர்த்திகள்( கடவுளை நோக்கி வைக்கப்படும் விண்ணப்பம்) சாதாரண, சராசரியான ஈழத்து தாய்மார்களினால் அவர்களின் இஸ்ட தெய்வங்களிடம் வைக்கப்படுவனவாகும்.



நேர்த்தி வைக்கப்பட்ட கோவில்களுக்கு,நேர்த்தி செலுத்த வேண்டிய தினங்களில், காவடியிலோ,பாற்செம்பிலோ, கரகத்திலோ தங்களை வருத்திப் பாலை சுமந்து சென்று அந்தந்தக் கோவில்களின் சுவாமிகளுக்கு அபிசேகத்திற்கு கையளிப்பதால், த்மது பாவங்கள் களையப்பட்டு, நேர்த்திகள் நிறைவேறுகின்றன அல்லது நிறைவேற்றப் படுகின்றன என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.



பாற்காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி,துலாக் காவடி, செடில் காவடி, ஆனந்தக் காவடி, ஆட்டக் காவடி எனப் பல காவடிகள் உள்ளன.இதிலே ஆனந்தக் காவடி, பால் காவடி என்பன செடில் குத்த இயலாதவர்களாலும் பறவைக் காவடி,தூக்குக்காவடி போன்றவை கடும் நேர்த்திக் காரர்களாலும் எடுக்கப்படுபவையாகும்.



செடில் காவடி தான் பெரும்பாலானவர்களால் எடுக்கப்படும், பம்பலான, பார்ப்பதற்கு ரசிக்கக்கூடிய, கண்டு களிக்கக்கூடியதாகவிருக்கும்.அவன் எடுக்கிறான், நான் எடுத்தாலென்ன என திடுதிப்பென ,திடீரென முடிவெடுத்து கோஸ்டியாகக் களமிறங்கக்கூடியதாக இருக்கும்.



கடுமையான நேர்த்திகாரர், காவடி எடுக்கிற கோயிலை விளக்கு வைச்ச தினத்திலையிருந்து, மச்சம்,மாமிசம் சாப்பிடாமல் இருந்து, காவடியோ,பாற்செம்போ எடுக்கிற நாளிலை சாப்பிடாமல் விரதமிருந்து காவடி எடுத்துக் கொண்டு போய், கோயிலை இறக்கினாப் போலை தான் சாப்பிடுவினம்.




காவடி எடுக்கிறதெண்டால் செடில் குத்தினாத்தான் மரியாதை."ஆ.. அவன் ஆயிரதெட்டுச் செடில் குத்தினானாம், கையிலை,நெஞ்சிலை எல்லாம் அலகு குத்தினானான்ம், இத்தினை செடிலை அறுத்தானாம் எண்டதிலை தான் அவன்ரை வீரம்??? தங்கியிருக்குது.செடில் எப்பவும் வந்து வைரவருக்கு முன்னலை வைச்சுத் தான் குத்தப்படும். பறை எல்லாம் சுத்தி நின்று அடித்துக் கொண்டிருக்க அந்த அடியிலேயும், கூடி நிக்கிற சனத்தின்ரை அரோகராக் கோசத்திலேயும் வலி பெரிசாகத் தெரியாது.



வைரவருக்கு ஒரு தேங்காயை அடிக்கச்ச சொல்லிப்போட்டு, முதல் வாய்க்குத் தான் அலகு குத்தப்படும்.எண்டால்த்தான், முதுகிலை குத்தேக்கை வலிச்சாலும் ஆளாலை கத்தேலாமல்ப் போடும் கண்டியளோ.பிறகு செடில் எல்லாம் குத்தினாப் போலை அப்பிடியே காவடியைத் தோளிலை ஏத்தாமல் ஒருக்கால் கோவிலை சுத்திவந்திட்டு, பிறகு ஐயர் காவடியை,பாற்செம்பைத் தூக்கி ஏத்திவிட்டாப் பிறகு, அப்பிடியே ஆடிக் கொண்டு வெளிக்கிடவேண்டியத் தானே.ஒவ்வொரு சந்திகள், கோயில்கள் எல்லா இடமும் நிண்டு, ஆடி, கோயிலுக்குப் போய்ச்சேர எப்பிடியும், சாமம் ஆகிப் போடும்.



சின்னனிலையெல்லாம் எப்பாடா கோவிலிலை "காவடி நாள்" வரும் எண்டு காத்துக் கிடக்கிறது. காவடி பார்க்கவென்ற பொதுவான காரணத்தை தாண்டி, இன்னுமொரு கொஞ்சம் ஸ்பெசலான காரணமும் உண்டு.ஆண்டு இரண்டு,மூன்று களில் படிக்கின்ற காலங்களிலெல்லாம் படிக்கிற புத்தகத்துக்கை வைக்கிறதுக்கு மயிலிறகுகளை இந்தக் காவடிகளிலை ஆட்டையைப் போடலாம் எண்டு தான் உந்தக் காத்திருப்பெல்லாம்.




புத்தகதுக்கை மயிலிறகை வைத்துப் பவுடர் போட்டால் அது குட்டி போடும் எண்டு முந்தி யாரோ இழக்கின கதைய நம்பி பவுடர் எல்லாம் போட்டிருந்திருக்கிறோம்.அதுமட்டுமில்லாமல் அந்த மயிலிறகு உள்ள புத்தகத்தை திறக்கும் போது வானத்தின் கண்ணில் அது பட்டுவிட்டால் குட்டி போடாது எண்டிறது அடுத்த புழுகு.ஆனால் அது குட்டியும் போடயில்லை ஒரு சுட்டியும் போட்வில்லை.





ஆனாலும் வானம் பாத்திடும் எண்டதுக்காகவேண்டி, பக்கத்திலை இருக்கிற நண்பனட்டை என்னட்டையும் மயிலிறகு இருக்குது எண்டதை காட்டாம்ல் இருக்க எப்பிடி முடியும்? மனம் விடாதே.அவனுக்குக் காட்டிறதுக்காக மேசைக்குக் கீழை போய் புத்தகத்தை மேல் பக்கமாய் படக்கென்று திறந்து,நண்பனுக்குக் காட்டி, வானத்துக்குக் காட்டாத கெட்டிக் காரர் நாங்கள் .




நண்பனுக்குத் தான் குடுக்க் மாட்ட்ம்.ஆனால் இந்த மயிலிறகை நண்பிகள் கேட்டால் மட்டும் பல்லையிளித்துக் கொண்டு எடுத்துக் கொடுத்து,செட்டையடித்து பேட்டுக் கோழியை கரக்ற் பண்ண வெளிக்கிடும் சேவலின் புத்தியும் எங்களுக்கு இருந்ததுவும் மயிலிறகின் மெல் ஈர்ப்பு வருவதற்கு அல்லது மயிலிறகை ஆட்டையைப் போட வேண்டியதொரு தேவையை எங்களுக்கு ஏற்படுத்திய இன்னுமொரு காரணம்.




ஆனால் மயிலையோ,மயிலிறகையோ காண ஏலாத எங்கள் ஊரில் மயிலிறகை எடுப்பதற்குரிய ஒரே வழி இந்தக் காவடிக்ளின் போது எடுப்பது தான்.ஆனால் காவ்டியில் உள்ள மயிலிறகு முறிந்து விழுந்து,முறிந்த இடத்தில் நான் நின்று, அந்த இடத்தில் என்னைப் போல மயிலிறகு பொறுக்குவதற்கு காத்துக் கொண்டு நிற்கும் என் சகபாடிகளோடு போட்டி போட்டு, அதுக்குள்ளாலையும் எனக்கு மயிலிறகு கிடைக்கிறது என்பது லேசுப் பட்ட காரியமில்லை.



ஒரே வழி காவடியிலியிருந்து ஆட்டையைப் போடுறது தான்.அதற்கு பொருத்தமான நேரம், காவடிகள், ஆடுபவர்களின் தோளில் ஏற்றுவதற்கு முதல் ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது எடுப்பது தான்.ஆனாலும் அது ஒண்டும் இழுத்தெடுக்க வராது..வழி? பிளேட்டோடை களத்திலை இறங்கி, சத்தம் போடாமல் மண்டி,மண்டி காவடிக்குப் பக்கத்திலை போய் நிண்டு கொண்டு, அறுக்கிறது மாதிரி வேறை யாருக்கும் தெரியாமல் அறுத்தெடுத்துக் கொண்டு போறது தான் வழி.அப்பிடித் தான் ஒருக்கால் செய்ய வெளிக்கிட்டு, அந்தக் காவடிக்காரர் திரத்த வெளிக்கிட , குண்டியிலை குதிக்கால் அடிபட ஓடினதெல்லாம் பழங்கதை.





காவடியென்றால் பறை வேண்டும்.பறை இல்லையென்றால் அந்தக் காவடியில் வேலையே இல்லை.பாப்பவர்களுக்கும் உப்புச் சப்பில்லாதது போல இருக்கும்.ஆடுபவருக்கும் நன்றாக இழுத்து ஆட முடியாது.பண்டைத் தமிழனின் வாத்தியக் கருவியான பறையின் பவர் அத்துணை வாய்ந்தது.பறையில் கட்டப் பட்டிருக்கும் தோலில் ஆழமாக விழும் அடியில் ஏற்படும் அதிர்விலே வரும் சுருதி நரம்புக்குள் புகுந்து, காவடிய ஆடுபவரை துள்ளி ஆடச் செய்யும். எம்மையும் அந்த சுருதிக்கு ஆட அழைக்கும்.அற்லீஸ்ற்(Atleast) கால்களையாவது நம்மையறியாமல் ஆட்டுவிக்கும்.அத்தனை சக்தியுள்ளது.






அது மட்டுமில்லாமல் முதுகிலே ஆழமாக குத்தப் படும் செடிலினால் ஏற்படும் வலியையும் கூட மறங்கடிக்கச் செய்யும்.செடில் அறுத்து, குருதி கொட்டினாலும் துடி துடித்துவிடாமல் தடுத்துவிடக் கூடியது. "டிண்டு டட்டு டட்டு டட்டு டிண்டு டட்டு டட்டு டட்டு டிண்டு டட்டு டட்டு டட்டு " என்று அடிக்கும் அடிக்கு ஆடுபவன், செடில் பிடிப்பவன், காவடிக்கு முன் பைலா ஆடுபவன்,காவடி பார்க்க வந்தவன் எனப் பலரையும் ஆட வைக்கும்.அந்தமாதிரியான ஒரு இசைக் கருவி.



(உங்களுக்காக அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் என்னிடமிருந்த ஒரு காணொளி.)



காவடி போற ரோட்டாலை சனம் வாளிகளிலை தண்ணியள்ளிவைச்சிருக்குங்கள்.அந்தத் தண்ணியை காவடி ஆடுறவனுக்கு ஊத்திறாங்களோ இல்லையோ செடில் பிடிக்கிறவனுக்கும், பைலா ஆடுறபவனுக்கும், சேட்டுக் கழட்டாமல் மாப்பிளை போல வந்து பெண்டுகளுக்கு நல்லபிள்ளை போல நடிக்கிறவனுங்களுக்கும் ஊத்துவாங்கள்.அவங்களைச் சீண்டுவதும் அவங்களுக்கு தண்ணியை ஊத்திப் போட்டு அதைப் பார்த்த சரக்குகள் ஏதாவது ரியாக்சன் குடுக்குதுகளோ எண்டும் ஒரு லுக் விடுவாங்கள்.




காவடியாடுறவங்கள் நேர்த்தி எண்டு சொல்லி எடுத்தாலும், ஆனால் மற்றப் பெடியளுக்கெல்லாம் அது பம்பலாய்ப் போடும்.சரக்குகள் பார்க்குது எண்டால் காவடி ஆடிறவங்கள் நல்லா உன்னி இழுத்து, செடில் அறுக்க வெளிக்கிடுவாங்கள்.சிலவேளையிலை தௌவல் ஒண்டு தான் காவடி எடுத்துது எண்டால், அது பெரிசா இழுத்து ஆட்டாது.ஆனால் செடில் பிடிக்கிறவன் விடமாட்டான்.தான் இழுத்து அறுத்துப்போடுவான்.






இண்டைக்கும் எங்களுக்கெல்லாம் ஏதாவது பாட்டியளுக்குப் போனாலும் அந்தக் காவடிக்கு ஆடிற மாதிரி ஆட்டம் ஒருக்காலெண்டாலும் ஆடாட்டில் ஏதோ பாட்டியிலை ஆடினமாதிரி ஒரு பீலிங் வராதாம் கண்டியளோ.

எஙக்டை ஊரிலையும் பண்டாரி அம்மன்கோவிலிலை ஒவ்வொரு சித்திரை வருச்ப் பிறப்பண்டைக்கு பின்னேரம் தான் காவடியும், அடுத்தநாள் வேள்வியும் நடக்கும்.இந்தமுறையும் அதுக்குத்தான் போறதுக்காண்டி நாளைக்கு வெளிக்கிடிறன். போனால்த் தானே செடிலுகள் பிடிச்சு,கூத்துகள் அடிச்சு, முசுப்பாத்தியா இருக்கும்.அதுதான் அவசரமா ,திருப்பியும் பாக்காமல் எழுதிப் போட்டிட்டிப் போறன்.ஆச்சியும் பிறகு கோவிச்சுப் போடுவா, எல்லாரும் கலியாண வீட்டோடை தன்னைத் தனிய விட்டுட்டுப் போட்டாங்களெண்டு. அது தான் எதோ படக்கெண்டு எழுதிக் கிடக்குது.ஏதாவது பிழையள் கிடந்தால் சொல்லுங்கோ.

உன்னி - கொஞ்சம் ஊண்டி இழுத்தல் எண்டு சொல்லலாம்
தௌவல் - நோஞ்சான்/ஏலாவாளி மாதிரியான ஆக்கள்
செடில் - முதுகிலே அல்கால் குத்த்ப்படுவது
Author: வடலியூரான்
•1:07 PM
கொழும்பு மாதிரி பெரிய நகரங்களிலெல்லாம் ஓரளவு வசதியான குடும்பமெண்டால் தேப்பனுக்கொரு கார்,தாய்க்கொண்டு, பெடியனுக்குமொண்டு, பெட்டைக்குமின்னுமொண்டெண்டு ஆளாளுக்கொரு காரை அல்லது சில வேளைகளில் ஒண்டுக்கு மேற்பட்ட கார்களையும் வைச்சிருப்பினம்.அதை மாதிரித்தான் எங்கன்ரை வீடுகளிலும் ஆளாலுக்கொரு வாகனம் வைச்சிருப்பம்.(நாங்களும் வசதியான ஆக்கள் தானே?)






எங்கன்ரை வாகனத்துக்கும் பென்ஸ் கார் மாதிரியெண்டிற அளவிலையில்லாட்டிலும் ஏதோ றோட்டாலை போறவாறாக்களுக்குக் கேக்கிற மாதிரியெண்டாலும் சத்தம் போடிற நல்ல ஹோர்ண்(Horn) இருக்குது, சிக்னல் இருக்குது, கூலிங் சிஸ்ரம் இருக்குது, அக்சிலேற்றர்(Accelator) இருக்குது.என்ன எங்கன்ரை வாகனம் ரீற்ரீற் எண்டதுக்குப் பதிலாக "ட்றீங் ட்றீங்" எண்டு ஹோர்ண் அடிக்கும்.எங்கன்றை வாகனங்களுக்கு ட்றைவர் கையாலேயே சிம்பிளாக சிக்னல் காட்டலாம்.




வருடிச் செல்லும் வசந்தக் காற்று கறண்ட் இல்லாமலே தலையைத் துவட்டிச் செல்லும்.அக்சிலறேசன்(Accelaration) பண்ணிறதெலாம் ட்றைவரின்ரை தனித் திறமையிலை தான் இருக்குது.என்ன நான் சொன்ன, சொல்ல வந்த வாகனமென்னெண்டு விளங்கியிருக்கும்.வேறையென்ன ஈழத்து சராசரி மக்களின் வாழ்வைத் தன் தோளில்(சீற்றில்) சுமந்து,குளிரிலும் பனியிலும் கிடந்து,கல்லுகள்,முள்ளுகளிடம் குத்து வாங்கி, குண்டடிப் பட்டு,ஓடாய்த் தேய்ந்து, உப்புக் கடலுக்குள்ளாலும், உழுத நிலத்துக்குள்ளாலும் மக்களோடு மக்களாக இடம் பெயார்ந்து, மக்களின் அத்தியாவசியப் பொருட்களடங்கிய ட்றங்குப் பெட்டிகளையும் உர பாக்குகளையும் சுமந்து மக்களின் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்குபற்றிய துவிச்சக்கரவண்டி/சைக்கிள் தான் அந்த வாகனம்.






இறக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆசைப்பட்டு ஏறிப் புட்டேன் ஐயோவோடை பைக்கில் என்று எங்கடை பைக்கில் ஏற அந்தக் காலத்திலை(மிகச் சின்ன வயசிலை) யாரும் தயாராக இல்லையென்றாலும் எங்களுக்கு 3ம், 4ம் ஆண்டு பள்ளிக்கூட காலங்களிலெல்லாம் சைக்கிளொண்டு வாங்கி,இறக்கை கட்டிப் பறக்கும் ஆசை மட்டும் மனசுக்குள்ளே பறந்து கொண்டேயிருக்கும்.






ஐந்தாம் ஆண்டிலை நடக்கிற ஸ்கொலசிப்(Scholarship) பாஸ் பண்ணினா ஒரு அரைச் சைக்கிளோ, முழுச் சைக்கிளோ வாங்கித் தரவேண்டுமென்பதே பெரும்பாலான பெடியள்,பெட்டையளினால் பெற்றாரிடம் முன்வைக்கப் படும் விண்ணப்பமாகவிருக்கும்.ஸ்கொலஸிப் பாஸ் பண்ணிறமோ இல்லையோ சைக்கிள் மட்டும் எப்பிடியாவது வாங்கித் தருவினம் அல்லது வாங்கித் தரத்தான் வேணும் எண்டது அங்கை எழுதப் படாத விதி.எண்டாலும் சைக்கிள் வாங்கித் தாறம் எண்டு சொன்னால் பெடியன் கொஞ்சம் ஊண்டிப் படிப்பானெண்டது அவையின்றை அங்கலாய்ப்புத் தான்.





ஸ்கொலஸிப்புக்கு படிக்கிறமோ இல்லையோ எப்பாடா ஸ்கொலஸிப் முடியும் எப்பாடா சைக்கிள்ளை இரண்டு கையையும் விட்டிட்டு மைனர் குஞ்சு மாதிரிப் பறக்கலாம் எண்டு கனவுகளுக்கும் நினைப்புகளுக்கும் குறைவில்லாமல் இருக்கும்.ஹெட் லைற்றை(Head Light) எந்த மாதிரியான் ஒரு ஒறேஞ் துணியாலை கட்ட வேணும், Bar க்கு எந்த மாதிரி குஞ்சங்கள் வைத்த சொவெர் போட வேணூம், பின்னுக்கு டைனமோவுக்கு கீழை எப்பிடி இரண்டு சிவத்த சிக்னல் லைற் போட வேணுமெந்த மாதிரியான லுமால கரியல் போட வேணும், எந்த மாதிரியான "ப" ஸ்டண்ட் போட வேணும்,மட்காட் கம்பியிலை எந்த மாதிரியான பந்துக் குஞ்சம் வைக்க வேணும், முன்னுக்கு சொக்கஞ்சோர் (Shock Absorber) எப்பிடி இருக்கோணும், ஹாண்டில் கவர்(Handle Cover) எப்பிடி இருக்கோணும் எண்டு ஒவ்வொரு பர்ட்ச் உம் எப்பிடி இருக்கவேணுமெண்டெல்லாம் றோட்டாலை போய் வாற ஓரளவு பெற்றர்(Better - பரவாயில்லாத) ஆன சைக்கிளையெல்லாம் பார்த்து,அதெல்லாத்தையும் சேர்த்து ஐந்தாம் ஆண்டிலேயே நான் கண்ட ஒரு பெஸ்ற்(Best) ஆன கற்பனைச் சைக்கிள் எனக்கு இன்றும் கண் முன்னே நிற்கின்றது.எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோர் கண்ட,காண்கின்ற கனவு இது.





ஸ்கொலஸிப்பும் பெரிசா இல்லாட்டிலும் ரியூசனுக்குப் போகாமலே ஏதோ மட்டு மட்டாக பாஸ் பண்ணிப் போட்டன்.என் கனவுச் சைக்கிளை வாங்குவதற்குப் பொருளாதார நிலை அந்த நேரம் வீட்டில் இல்லையென்பதே காரணமாகவிருந்தாலும்,"இப்ப நீ சின்னப் பொடியன் தானே ஏன் இப்ப அரைச் சைக்கிள் எடுத்துப் பிறகு முழுச் சைக்கிள் எடுப்பான்.ஒரேயடியாக நீ வளர்ந்தாப் போலை பெரிய சைக்கிளா எடுப்பம்,அதோடை நீ இன்னும் சைக்கிள் ஓடப் பழகயில்லை,பேந்து புதுச் சைக்கிள்ளை பழக வெளிக்கிட்டு போட்டுடைச்சுப் பழுதாக்கிப் போடுவாய்" எண்டும் காரணம் சொன்னாலும் எனக்கு அதில் பூரண உடன் பாடில்லாமல் இருந்தது.





ஒரு பொருளை தாறன் எண்டு சொல்லிப் போட்டு அதை தராமல் விடுகின்ற போது அல்லது அது கிடைக்காமல் விடுகின்ற போது ஏற்படுகின்ற ஏமாற்றம்,இயலாமை, உள்ளக் குமுறல் கொடுமையானது.எல்லாரும் ஏதேதோ விதங்களில் பல்வேறு ஏமாற்றங்களைக்கடந்து வந்திருப்போமாகையால் எனக்கு அந்த வயதில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஏமாற்றத்தினை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.எனக்கும் அதுவும் அந்தச் சிறிய வயதில் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்றதொரு உணர்வு இருந்தாலும் கூட வீடே சொன்ன "வேறை ஒரு சைக்கிள்ளை ஓடப் பழகீற்றுப் புதுச் சைக்கிள் எடுப்பம் என்ற காரணம் சரியாகப் பட்டதால்" அவர்களுக்குக் கட்டுப் பட்டேன்.





எனது அப்பா வழியால் வந்த மச்சாளின் மச்சான் ஓடிய சைக்கிளொன்றே எனக்கு ஓடிப் பழகக் கிடைத்தது.அதிலை கிடந்த ஒரிஜினல் பெயின்ற்(Paint) எல்லாம் உரிந்து ஏதோ ஒரு சொல்ல முடியாத நிறத்தில் சைக்கிள் இருந்தது.நான் கற்பனை செய்த சைக்கிளுக்கு சரி தலைக்குத்தனமா நான் நினைத்திருந்த பாட்ஸ்(Parts) எல்லாத்தையும் நினைத்தாலும் பூட்டேலாதமாதிரி தலைகுத்துக் கரணமாக இருந்தது அந்த கால்ச் சைக்கிள்.என்ன இது பழகத்தானே ,பழகினாப் போலை கொஞ்ச நாள் செல்ல என்ரை கனவுச் சைக்கிளில் கலக்கலாம் தானேயென்றிட்டு பழகத் தொடங்கினேன்.





எங்கன்டை வீட்டு வளவுக்கை தென்னை,வாழைகளுக்குத் தண்ணீ மாறுறதுக்கெண்டு பெரிய உயரமான வாய்க்காலொண்டு போகுது.அதன் வரம்பு உச்சியிலே சைக்கிளை ஏத்திப் போட்டு,அப்பா இடப்பக்க ஹாண்டிலையும்(Handle) பின் கரியரையும் பிடிச்சுக் கொண்டு என்னை சீற்றீலை இருத்திப் போட்டு,என்னை உழக்கச் சொல்ல, மெல்ல மெல்ல ஆனால் முழு ரவுண்டும்(Round) செயினைச்(Chain) சுத்தாமல் டக்கு டக்கு எண்டு பெடலைத் தட்டிக் கொண்டே மெது மெதுவாக ஓடினேன்.




முதல் மூன்று தரமும் அப்பா கூடப் பிடித்துக் கொண்டு வந்த படியால் ஏதோ ஓடுவன் மாதிரித் தான் கிடந்துது.நாலாம் முறை ஓடத் தொடங்கி கொஞ்சத்தாலை அப்பா முன் ஹாண்டிலில் வைத்திருந்த கையை எடுத்துப் போட்டு கரியரை மட்டும் பிடித்துக் கொண்டு வந்தார்.கை நடுங்கி நடுங்கி ஹான்டில் அங்கேயும் இங்கேயும் ஆடினாலும் ஏதோ ஓடிக் கொண்டிருந்தன் நான்.அவர் பின் கையையும் எடுத்த கையோடை பதறியடித்துக் கொண்டு போய் அங்காலை நிண்ட வாழைக்குள்ளை சைக்கிளை விட்டன்.




இரண்டு வாழைகளுக்கிடையிலை முன் சில்லுப் போய்ச் செருகுப் பட்டதாலை சைக்கிள் அப்பிடியே நிண்டிட்டுது. நான் விழயில்லை.எண்டாலும் அப்பாட்டைச் சொன்னன் இனிக் கையை விடாதையுங்கோ எண்டு.அவரும் "இப்ப சும்மா விட்டுப் பாத்தன் இனி விடேல்லை " எண்டார்.அடுத்த முறையும் வரம்பில ஏறி அப்பா கரியரைப் பிடிக்க மெல்ல மெல்ல ஓடி,இந்த முறையும் சொல்லாமல் கொள்ளாமல் கையை எடுத்துப் போட்டார்.




நானும் வடிவாத் தான் ஓடிக் கொண்டிருந்தனான் போலை, எண்டாலும் பின்னுக்குத் திரும்பி இவர் பிடிக்கிறாரோ இல்லையோ எண்டு பாக்க வெளிக்கிட்டுப் பராதிப் பட்டுக் கொண்டு போய் முதல் முறை விழுந்தாச்சுது.நிலத்திலை கிடந்த சல்லிகள் உரஞ்சி முழங்காலால் இரத்தம் கசிந்தது.தண்ணியாலை கழுவிப் போட்டு அண்டையான் சைக்கிள் ஓட்டம் அதோடை விட்டாச்சுது.பிறகும் ஒவ்வொரு நாளும் அந்த வரம்பின் உச்சியில் ஏறி சறுக்கீஸ் மாதிரி அதாலை சறுக்கிக் கொண்டே விழுந்து எழும்பி அந்தக் கால்ச் சைக்கிளை ஓடப் பழகியாச்சுது.




பிறகேன் பேசுவான் கடைக்குப் போறதெண்டால்,பால் குடுக்க்ப போறதெண்டால்(மாட்டுப் பால்), வாசிக சாலைக்குப் போறதெண்டால் என்ரை குட்டிச் சைக்கிளை எடுத்துக் கொண்டு உழக்கித் தள்ளவேண்டியது தான்.




பிறகு அப்பாவின்ரை முழுச் சைக்கிளை எடுத்து அதைக் கெந்திக் கெந்தி, இடைக்குள்ளாலை காலை விடிட்டு, பிறகு பாருக்கு(Bar) மேலாலை காலைப் போட்டு, அதுக்குப் பிறகு சீற்றிலையிருந்து ஓடியெண்டு அதையும் ஓடப் பழகியாச்சுது.அதொண்டும் ஒருநாள் இரண்டு நாளிலை பழகினதில்லை.நாள்க் கணக்கில், மாசக் கணக்கில், எத்தனை விழுந்தெழும்பல்கள்,உரஞ்சல்களுக்குப் பிறகு நடந்தது.




பிறகு ஒரு கை விட்டிட்டு ஓடப் பழகி, இரண்டி கைவிட்டிட்டு, டபிள்,ட்றிபிள்ஸ்(Double,Triple) ஒரு சைக்கிளை ஓடிக்கொண்டு மற்றச் சைக்கிளை பரலலாக இழுத்துக் கொண்ட்டொறதெண்டு கன டெக்னிக்(Technique) எல்லாம் சைக்கிள் ஒடுறதில எக்ஸ்பேட்(Expert) ஆனாப் போல தானா வந்திடும்.பிறகு ஒரு மாதிரி 8ம் ஆண்டு படிக்கேக்கை எனக்கு முழுச் சைக்கிளொண்டு புதுசா எடுத்துத் தந்திச்சினம்.என்ரை கனவுச் சைக்கிள் மாதிரியே இருக்காட்டிலும் பெரும்பாலானவை இருந்தது,மீதியை நான் பொருத்திக் கொண்ட்டு என்கனவுச் சைக்கிளை மிதித்து ஊருக்குள்ளே கலர் காட்ட வெளிக்கிட்டேன்.




செருப்பெண்டால் Bata,Toothpaste என்றால் சிக்னல்,குளிசை என்றால் பனடோல் என்டு ஒவ்வொன்றுக்கும் Trade Mark உள்ளதைப் போல சைக்கிள் என்றால் லுமாலா என்பதும் ஈழவர் வாழ்வில் பிரிக்க முடியாதது.சும்மா சொல்லக் கூடாது வீட்டை இப்பவும் அம்மப்பாவின்ரை சைக்கிள்(பாவனைக் காலம் சரியாகத் தெரியாது 30 க்கு மேலை) அப்பாவின் சைக்கிள்(26 வருசம்) என்ரை சைக்கிள் 12 வருசம் எண்டு, இப்பவும் அந்தச் சைக்கிளெல்லாம் கிண்ணெண்டு கொண்டு தான் நிக்குது.




சைக்கிள் ஓடப் பழகிறதெண்டிறது சும்மா லேசுப் பட்ட காரியமில்லைப் பாருங்கோ.எல்லாராலேயும் பலன்ஸ்(Balance) பண்ணி ஓடேலும் எண்டில்லை.ஆனால் ஓடப் பழகினால் அது நல்லதொரு எக்சர்சைஸ்(Excercise).கீழ்க் கால்,தொடைகள் எல்லாம் இறுகி பார்க்க உடம்பு சும்மா முறிகித் தான் இருக்கும் கண்டியளோ.



அது மட்டுமில்லை சைக்கிளிலை நண்பர்கள் 3,4 பேராய் பரலேலாக ஒராளின்டை ஹான்டிலை மற்றாள் பிடித்துக் கொண்டு ரோட்டு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு பின்னுக்கு வாற வாகனக் காரன் என்னதான் ஊண்டி ஹோர்ண் அடித்தாலும் கேட்காத மாதிரி(உண்மையிலேயே கேட்கிறதில்லை தான்) போறதுவும்,ஊர்க்கதை உலகக்கதையெல்லாம் ரோட்டுகளிலேயே அளந்து கொண்டு போறதுவும்,பெட்டையளின்டை சைக்கிள் செற்றை முன்னுக்கு விட்டிட்டு அவகளுக்கு ஏதாவது சொட்டைக் கதை,சொறிக்கதை சொல்லிக்கொண்டோறதும் அல்லது பெட்டையள் செற் பின்னுக்கு வந்தால் சைற் குடுக்கிறமாதிரிக் குடுத்திட்டு அவகள் முந்த வெளிக்கிடேக்கை முந்தவிடாமல் இழுத்திழுத்து,வீடு மட்டும் கூட்டிக் கொண்டு போய் விடிறதும் ஒரு தனி சுகம் தான்.




இப்படிச் சென்ற என் நண்பர்கள் சிலர் பின்னால் ஹோர்ண் அடித்தது மாவட்ட நீதி பதி தான் என்பது கூடத் தெரியாமல் சென்றதால் ஒரு நாள் சிறை வாசமும் ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்திய சோகமும் உண்டு. அது மட்டுமல்லாது நானும், எனது தனியார் கல்வி நிறுவன நண்பர்களும் இவ்வாறு பரலல்(Parallel) ஆக சென்று கொண்டிருந்த போதுபின்னால் வந்த நீதி மன்றப் பதிவாளர் ஒருவர் எங்களைத் தனித்தனியே போக அறிவுறுத்திச் சென்றது கண்டு பொங்கியெழுந்த நாங்கள் அவரைத் துரத்திச் சென்று,மறித்து "டேய் மாக்கண்டு நீ யாற்றா எங்களை விலத்திப் போ " எண்டு சொல்லுறதுக்கு எண்டு வீறாப்பாகக் கேட்ட அடுத்த நாள் அந்தாள் ரியூசன் நிர்வாக்கியிடம் எல்லாரையும் காட்டிக் கொடுக்க அனைவரும் பெற்றோருடன் சென்று அவரிடம் மன்னிப்புக் கோரியதுடன் வகுப்பில் அனுமதிக்கப் பட்டமை இன்னுமொரு வரலாறு.



உப்புடி கன கதைகள் இருக்குது.என்ன உங்களுக்கும் உப்புடிக் கனவுகள், கற்பனைகள், காயங்கள்,கதைகள் எல்லாம் நடந்திருக்குமெண்டு நினைக்கிறன்.அதுகளையும் கொஞ்சம் சொல்லுங்கோவன்.கேப்பம்.
Author: வடலியூரான்
•1:54 AM
மழை எல்லாருக்கும் பிடிக்கும்.மழையில் நனைய மனம் துடிக்கும்.ஆனால் சளி வந்திடும் எண்டு மூளை அலாம்(Alarm) அடிச்சுப் போடும்.பிறகென்னன்டு நனையிறது...?ஆனால் தமிழ்ப் படங்களிலை மட்டும் ஹீரோவும் ஹீரோயினும் தடிமனெல்லாம் வராமல் எப்படித் தான் மழையிலை நனைஞ்சு லவுசு பண்ணினமோ எண்டு தெரியேல்லை.அதிருக்க,இண்டைக்கு உங்களையும் சேத்து ஒருக்கால் நனைய வைப்பம் எண்டு சின்ன ஒரு பிளான்.பாப்பம்.


வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை,தென் மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை எண்டு இரண்டு காலப்ப்பகுதிகள் தான் இலங்கைக்கு மழையை வழங்குகின்ற காலப்பகுதிகள் எண்டு சின்னனிலை உந்த சமூகக்கல்வியும் வரலாறும் எண்ட புத்தகத்திலை படிச்சதா சின்னதொரு ஞாபகம்.அதிலையும் வடகீழ்ப்ப்பருவக்காற்று மட்டும் தான் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு மழை வழங்குகின்ற காலம்.பொதுவாக ஐப்பசி தொடக்கம் மார்கழி வரை தான் இந்தக்க்காலம்.இயற்கை கூட எங்களை புறக்கணிக்கிறதா..?நாடெங்கும் வருடமெல்லாம் மழை கொட்ட எங்களுக்கு மட்டும் இரண்டு மாத மழை. மழையில்லை,மலையில்லை,நதியுமில்லாமல் நாதிய்ற்ற சனமான ஈழத்துத் தமிழ்ச்சனம்.ம்ம்ம்ம்.




பொதுவாக கும்பத்துக்கை(நவராத்திரி) மழை தொடங்கி, கந்தசசட்டி, பெருங்கதை, திருவெம்பா போன்ற விரதங்களுக்கெல்லாம் கொட்டி,தைப்பொங்கலோடை வெளிச்சிடும் எண்டு பெரியாக்கள் சொல்லுவினம்.அவர்களது அனுபவக் கணிப்பு பெரும்பாலும் பொய்க்காது.சிலவேளைகளிலை முந்திப்பிந்தி, காலந்தப்பிப் பெய்யும். மழை வருமட்டும் எல்லாரும் எப்பாடா மழை வரும் எண்டு பாத்துக்கொண்டிருப்பினம்.என்னடா இன்னும் மழையைக் காணேல்லை,இந்தமுறை வராதோ எண்டு எல்லாரும் மழைக்குத் தவங் கிடப்பினம்.ஐப்பசி மழை வந்தால் தானே வெங்காய நடுகையோ,நெல் விதைப்பையோ தொடங்கலாம்.ஆனால் வந்த பிறகெண்டால் அது வாங்கிற பேச்சு உலகத்திலை ஒருத்தரும் வாங்கியிராத பேச்சாயிருக்கும்."இழவு விழுந்த மழை","அரியண்ட மழை",பெய்ஞ்சால் பெய்ஞ்சு போட்டுப் போகோணும்.இது ஒரு வேலையுஞ் செய்ய ஒரு வழியில்லை.அடுப்பெரிக்க விறகுமில்லை.தெருவாலை போக வழியில்லை,உடுப்புத் தோய்ச்சுக் காயப்போட வழியில்லை,மாடுகளை மேய்ச்சலுக்கு அவிட்டு விடேலாதாம்,கூலி வேலையுமில்லை, அடியோ பிடியோ எண்டு,அது தாராளமாகத் திட்டுவாங்கும்.அந்த மழை பற்றிய பதிவொன்று தான் இது.



"என்ன நேற்றுப் பெய்ஞ்சது காணாதெண்டு இண்டைக்கும் வரப்போகுது போல கிடக்குது.இப்பவே கோலங் கட்டுது.நேற்றையான் மாரி(மாதிரி) பராதியிலை விறகுகளை எடுத்துவைக்க அயத்துப் போகாமல் இப்பவே அதிலை கிடக்கிற கொக்காரையள், மட்டையள், பழம் மூரியள்,பன்னாடையள் கொஞ்சத்தைக் கொண்டு போய் அடுப்பு மாடத்திலை காயப் போடு,அடுப்பு வெக்கைக்கு நேற்றையான் ஈரமெல்லாம் காய்ஞ்சு போடும்.மிச்சத்தைக் கொண்டு போய் குசினிக்குப் புறத்தாலை இருக்கிற பட்டடையிலை அடுக்கி வை.பேந்து நாளைக்கு,நாளையிண்டைக்கு தேவைப்படும் " எண்டு அம்மாவுக்கு, அம்மம்மா ஓடர் போடுறா.



"இஞ்சை முத்தத்திலை காயவைச்ச கொட்டை எடுத்த புளியையும் பினாட்டையும் எடுத்து சைற் அறைக்கை வைச்சுப் போட்டு பினாட்டுப் பாயைச் சுத்திக் கொண்டு போய் சின்னறைக்கை வை பாப்பம்" எண்டு மழை வரவை எதிர் பார்த்து, தம்பி தங்கச்சியோடை பழங்கொப்பியொற்றையிலை கடதாசிக் கப்பல் கட்டும் பணியில் கரிசினையோடை ஈடுபட்டுக் கொண்டிருந்த என்னை அம்மா குழப்பிறா.. நான் ஆஆய்ய்ய்ய்.. எண்டு இழுக்க......., இப்ப உதிலை கிடக்கிற ஈக்குப்பிடியாலை வாங்கப் போறாய்..சொன்னதைச் செய்து பழகு பாப்பம்.. ... பழகிறியள் பழக்கம் இப்பவே......எண்டு அம்மம்மா என்னை உறுக்குறா...நானும் வாய்க்குள்ளை வந்த எதையோ சொல்லிக் கொண்டு சொன்ன வேலையைச் செய்யிறன்...



வானம் இப்ப இன்னும் கொஞ்சம் இருட்டத் தொடங்கீற்றுது.அப்பர் மாலந்தெணித் தோட்டதுக்கை கட்டியிருந்த மாட்டை அவிட்டுக்கொண்டு வாறதுக்கு ஓடிறார்.இப்படி எல்லாரும் ஆளாலுக்கொரு திசையிலை ஓடி ஒவ்வொரு வேலையாப் பாத்துமுடிக்கவும் மழை வரவும் சரியாக்கிடக்குது.மழை கொஞ்சம் கொஞ்சமாத் துமிக்கத் தொடங்கி,கொஞ்ச நேரத்திலை கொட்டத் தொடங்குது.நாங்கள் மூண்டு பேரும் ஆ.. அய்ய்ய்ய் மழை... எண்டு துள்ளிக் குதிக்கிறம்.என்ரை ஒராம் ஆண்டு கொப்பியெல்லாம் கப்பலாக உருமாறி ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டா போய்க் கொண்டிருக்குது.



எங்கட்டை வீட்டிலை இரண்டு முகடுகள் செங்குத்தாச் சந்திக்குது.அதிலை ஒரு பீலி ஒண்டும் இருந்தது.அந்தப் பீலியாலை மழைத் தண்ணி பயங்கர force ஆ வந்து விழும்.அந்தப் பீலித் தண்ணி வந்து விழுகிற இடத்துக்கு கொஞ்சம் தள்ளித் தான் எங்கடை கப்பலுகள் தங்கன்ரை கன்னி அணி வகுப்பைத் தொடங்கி அணி வகுத்துச் செல்லும்.பீலித் தண்ணி விழுகிறதாலை ஏற்படுகின்ற அலைகளாலை எங்கடை கப்பலுகள் ஓரளவு கொஞ்சத் துர்ரத்துக்குப் போகும்.சிலதுகள் உந்தக் குப்பையள் ஏதாவது தடக்கி கொஞ்சத் தூரத்திலேயே நிண்டிடும்.சிலது பிரண்டு,கவிண்டு,தாண்டு போகும்.இதையெல்லாம் தாண்டி ஆற்றை கப்பல் கனதூரம் போகுதெண்டு எங்கள் மூண்டு பேருக்கும் போட்டியாய் இருக்கும்.கொஞ்சம் கடும் மழையெண்டால் ஓட்டுகுள்ளாலையும் அங்கை இஞ்சையெண்டு வீட்டுக்குள்ளையும் ஒழுகத்தொடங்கிவிடும்.பிறகு அந்த ஒழுக்குகளுக்கும் ஒவ்வொரு யத்துகளைக் கொண்டு போய் வைக்கிறதே பெரும் வேலையாப்போடும் எங்களுக்கு.




மழையோ கொட்டோ கொட்டெண்டு கொட்டிக் கொண்டிருக்கும்.எல்லாரும் ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் போட்டுக் கொண்டு கை,காலை குறட்டி வைச்சுக்கொண்டு,மழை எப்பாடா வெளிக்கும் எண்டு வெளிவிறாந்தை தாவாரத்துகு கீழை தூத்துவானம் அடிக்க அடிக்க,அதை ரசிச்சு,அந்த தூவானத்தை அனுபவிச்சுக் கொண்டிருப்பம்.ஆனால் அது விடுமே?அது மின்னல் வெட்டி,முழங்கி,கொட்டோ கொட்டெண்டு கொட்டிக்கொண்டிருக்கும்.மின்னல் வெளிச்சம் தெரியுதெண்டால் எல்லாரும் இரண்டு காதுக்குளையும் விரலை ஓட்டி இடியை எதிர்கொள்ள றெடியாகிடுவம்.



இடி எங்கடை வீட்டுக்கு மேலை விழுந்திடக்கூடாது எண்டதோடை,அது இரதை வாழை மரத்திலை விழுந்தால் அதிலியிருந்து தங்கக்கட்டி கிடைக்குமாம எண்டு அந்தக் காலத்திலை ஆரோ அவிட்டுவிட்ட ரீலை நம்பி, எங்கடை இரதை வாழையிலை இடி விழுந்தால் நல்லாயிருக்கும் எண்டு சின்னப் பிரார்த்தனையும் உள்ளுக்குள்ளாலை நடந்து கொண்டிருக்கும்.இப்ப கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, மழை பெய்யிறது கொஞ்சம் நிண்டிட்டுது.எண்டாலும் கொஞ்சம் கொஞ்சமாத் துமிச்சுக் கொண்டிருக்கும்.எங்கனரை வீடுக்குப் பின்னலை இருக்கிற புளியங்காணி வேலிக்குள்ளாலை ஊரில் வெள்ளம் எல்லாம் எங்கடை வீட்டை ஊடறுத்த்தான் ரோட்டைப் போய்ச்சேரும்.இப்ப முழங்காலுக்கு மேலை வெள்ளம் முத்தத்தாலை ஓடிக்கொண்டிருக்கும்.




மழை விட்டவுடனை அந்த வெள்ளத்துக்கை தெம்பல் அடிச்சு, அந்தத் தெம்பல்த் தண்ணியிலை மற்றாக்களை நனைப்பிக்கிறது தான் எங்கடை அடுத்த விளையாட்டாயிருக்கும். "இஞ்சை மாட்டடி கிடக்கிற கிடையைப் பாருங்கோ.அதுகளும் மழைக்காக்கும் குளம் குளமா மூத்திரம் பெய்ஞ்சு தள்ளியிருகுதுகள்.மாட்டடியெல்லாம் சேறாக்கி வைச்சிருக்குதுகள்.உதிலை கேற்று வாசல்லை உந்த புளியங்காணிக்கிள்ளலை வந்த வெள்ளம் அள்ளிக் கொண்டுவந்த, வெள்ள மண் கொஞ்சத்தை அள்ளிக் கொண்டு வந்து போடுங்கோ பாப்பம்.பாவம் கண்டுத் தாச்சி மாடு பேந்தும் இரவு உந்தச் சக்கலுக்கை தான் படுக்கப் போகுது" எண்டு அப்பாவுக்கு அடுத்த கொமாண்ட் அம்மம்மா போடுறா. (இதெல்லாம் ஒராம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு கால ஞாபகங்கள்..இனி தமிழ்ப் படங்களிலை வாறமாதிரி வேணுமெண்டால் ஒரு " 7, 8 ஆண்டுகளுகுப் பிறகு" எண்டு வசனத்தைப் போட்டிட்டு வாசியுங்கோவன்) .



ஆம்பிளையள் எல்லாம் சைக்கிளை எடுத்துக் கொண்டோ,குடையைப் பிடிச்சுக் கொண்டோ மழைப் புதினங்களைக் கதைகிறதுக்காகவேண்டி வாசியாலையிலையோ அல்லது அரசடிச் சந்தியிலையோ கூடுவினம்.கூடி நிண்டு, "மட்டக் களப்பிலை இடுப்பளவுக்கு வெள்ளமாம்..","மலையிலை(திரிகோணமலையை மலை என்றும் அழைப்பார்கள்)காத்துக்கு வீட்டுச் சீற்றெல்லத்தையும் கழட்டிக் கொண்டு போட்டுதாம்","புத்தூர்ச் சந்தியில நிண்ட ஆலமரம் பாறி விழுந்திட்டுதாம்.","இரணைமடுக்குளம் நிரம்பீற்றுதாம்","ஓடக்கரைக்கை சைக்கிளை மேவி வெள்ளம் ஓடுதாம்" எண்டு அடியா பிடியா எண்டு நியூசுகளை அள்ளி விடுவினம்.


CNN, BBC க்காரரெல்லாம் நாங்கள் பேசாமல் தம்பசிட்டியிலையை ஒரு றிப்போட்டரை வசிச்சிருந்திருந்தால் எங்கடை சோலி,ஈசியா முடிஞ்சு போயிருக்கும் எண்டு நினைக்கிற அளவுக்கு கதை களை கட்டும்.ஆனால் அரைவாசிக்கு மேலை அப்பிடி இப்பிடி வாற கதை தானேயெண்டு எங்களுக்கு நாங்களும் அதிலை நிண்டு கதைக்கிற அளவுக்கு வயசுக்கு வந்தாப் போலை தான் விளங்கிச்சுது. சிலவேளைகளிலை எங்கடை வெங்காயப் பயிர்ச்செய்கை தொடங்கினாப்போலை வந்து எங்கடை வாழ்வை நாசமறுத்தும் இருக்குது இந்த மழை.. விடாமல் நாட்கணக்கில் கொட்டித் தீர்த்து வெங்காயம் எல்லாம் வெள்ளத்திலை மூழ்கினாப்போல அந்த வெள்ளத்தை மிசின்(வோட்டர் பம்) வைச்சு இறைச்சு விடவேண்டிய துன்பிய்ல அனுபவமெல்லாம் எங்களுக்கெல்லாம் வந்திருக்குது.வெள்ளத்துக்கு வெங்காயமெல்லாம் அழுக, போட்ட முதலெல்லாம் தோட்டத்துக்கையே தாண்டுபோன சோகங்களும் எங்கள் வாழ்வில் உண்டு.விடாது கொட்டி,எங்கள் வெங்காயங்களை அழுகவைத்து,எங்கள் வெங்காயங்களின் நாற்றம் தாங்காமல் நாங்களே மூக்கைப் பொத்திக்கொண்டோடவேண்டிய துர்ப்பாக்கியநிலைக்கெல்லாம் ஆளாக்கியிருக்கிறது இந்த மழை.ஏன் இந்தமுறையும் கோடைக்காய் செய்யிற நேரம் கொட்டுகொட்டெண்டு கொட்டி,பயிரெல்லாத்தையும் அழிச்சுப் போட்டுது.இப்பவென்னடாவெண்டு பாத்தால் வழமையா வைகாசிப் பறுவத்துக்கே ஒரு அந்தர் ஐயாயிரத்தைத் தாண்டாத வெங்காயம்,இந்தமுறை மாரிக்காய் நடுகைக்கே எண்ணாயிரம்,ஒம்பதாயிரம் விக்குதெண்டால் பின்னைப் பாருங்கோவன்.

என்ன இருந்தாலும் ஊரிலை மழையெண்டால் அந்த மாதிரித் தான் இருக்கும்.அது ஒரு அழகிய மழைக்காலம் தான்.

முத்தம் - இந்த முத்தம் காதலர்கள் பரிமாறிக்கொள்வதல்ல.முற்றத்தின் ஈழத்துப் பேச்சு வழக்கு

பாறி - வேரோடு சாய்ந்து அல்லது வேர் அழுகி, இத்துப் போய் பெரு மரங்கள் விழுவதைக் குறிக்கப் பயன்படும்

பீலி - இரண்டு கூரைகள் சந்திக்கும் போது ஏற்படுத்தும் நீரோட்டத்தை ஏந்துவதற்குப் பயன் படுத்தப் படுகின்ற அமைப்பு. அத்தோடு பனக் கிழங்கின் தண்டும் பீலியென்றே அழைக்கப் படுவதுண்டு.

தாவாரம் - வீட்டு,கொட்டில் நிலத்துக்கும், கூரைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி என்றும் சொல்லலாம்.

தூத்துவானம்/தூவானம் - மழைத்துளிகள் காற்றுக்கு சிறிதாக பறந்து வருதல்

அயத்துப் போதல் - மறந்து போதல்
யத்து - பாத்திரம்
பட்டடை - விறகுகள், பாத்திரங்கள்,வைக்கோல் போன்றவற்றை பக்குவமாக அடுக்கி வைக்கப் பயன்படும் அமைப்பு

மாடம் - இடம் என்றும் சொல்லலாம்.அடுப்புக்கு பின் பக்கம் உள்ள பகுதி தான் அடுப்பு மாடம் எனப்படும்.இதே போல் படமாடம் என்ற சொல்லும் உண்டு

வெக்கை - வெப்பம்
சக்கல் - சகதி
கிடை - நிலை என்றும் சொல்லலாம்.என்ன கிடை இது?அலங்கோலமாகக் கிடக்கும் போதுதான் இது பெரும்பாலும் பாவிக்கப்படும்

மழைக்காக்கும் - மழை என்ற படியால் தான் போலிருக்குது என்று விரித்து விளங்கிக்கொள்ளலாம்

தெம்பல் - வெள்ளத்தினுள் துள்ளிக் குத்த்து விளையாடுதல்
பராதி - வேலைப் பளுவில் கவனிக்காமல் விட்டு விடுதல் கொக்காரை,மூரி,மட்டை,பன்னாடை - பனையிலிருந்து கிடைக்கப்பெறும் விறகுப் பொருட்கள்

பிறத்தாலை - பிறகாலே/பின்னாலே
பேந்து - பிறகு
குறட்டி - உள்ளுக்குள் இழுத்து கை கால்களை மடித்து குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல்

நாளையிண்டை -நாளை மறுநாள்
கண்டுத்தாச்சி - கர்ப்பந்தரித்த மாடு
ஆற்றை - யாருடைய
ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் - வழமையாகப் போடுகின்ற ஒரு சுவேற்றருக்குப் பதிலாக இரண்டு,மூன்று சுவேற்றைகளைப் போடுதல் என்று விரித்து விளங்கிக் கொள்ளப்படலாம்

அவிட்டுவிட்ட ரீலை - புழுகு
பறுவம் - பூரணைதினம்
மேவி - மேலால் என்று தான் இங்கே பொருள் படும்.இன்னொரு பொருள் அவன் மேவி இழுத்திருக்கிறான் என்று அவனது தலை சீவப்பட்டிருக்கும் முறையையும் குறித்துநிற்கவும் பயன்படும்
Author: வடலியூரான்
•1:53 AM
திருவெம்பாவை எண்டு கேள்விப்பட்டிருக்கிறம்,இதென்ன திருவெம்பா?,இப்பிடியொரு சொல்லை நாங்கள் கேள்விப்படவேயில்லையே எண்டு உங்களிலை கொஞ்சப் பேர் நினைக்க வெளிக்கிட்டுடிவியள் எண்டு எனக்குத் தெரியும்.இரண்டும் ஒண்டு தான்.அந்த "வை" யை உச்சரிக்கிறதிலை எங்களுக்கு ஒரு பஞ்சி.பின்னை அது தான் திருவெம்பா எண்டு சொல்லித் தான் சொல்லுவம்.


மார்கழி மாசத்திலை தான் திருவெம்பா வரும்.அதுவும் அந்தக் குளிருக்கை விடிய வெள்ளனவெல்லாம் கோயிலுகளிலை பூசைகள் நடக்கும்.இந்தமுறையும் திருவெம்பா தொடங்கப் போகுதாம் எண்டு போன வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோயிலிலை அறிவிச்சது என்ரை காதிலை கேட்டிச்சுது.அது தான் எனக்கும் முந்தின எங்கடை காலத்து திருவெம்பாப் புதினங்களை ஒரு பதிவா எழுதிப் போடுவம் எண்டொரு யோசனை வர,சட்டுப் புட்டெண்டு இந்தப் பதிவை எழுதிப் போடுறன்.



திருவெம்பா எண்டு சொல்லிச் சொன்னால் ரண்டு விசயம் ஞாபகத்துக்கு வரும்.ஒண்டு எல்லாக் கோயிலிலையும் அவல்,கடலை எண்டு கன சாமானுகள் சாப்பிடக் குடுப்பினம்.மற்றது சங்கூதிப் பண்டாரம்.முதல்லை அவல்,கடலை அலுவலைப் பாத்திட்டு,பிறகு சங்கூதிப் பண்டாரத்தைப் பாப்பம்.ஏனெண்டால் சாப்பாட்டை காத்திருக்க வைக்கக் கூடாதெண்டு சொல்லுவினம்.



முந்தியெல்லாம் சின்னனிலை, ஒராம்,இரண்டாம் வகுப்புப் படிக்கேக்கை,திருவெம்பாக் காலத்திலை விடியக் காலமை 5 மணிக்கே அம்மாவோ,அம்மம்மாவோ அடிச்சு எழுப்பிப் போடுங்கள்."அங்கை கோயில்லை பூசையாகுது.இஞ்சை நீ படுத்துக் கிடக்கிறாய் எண்டு விடியவெள்ளனவே பேச்சு விழத் தொடங்கீடும். நாங்களும் எழும்பி,நித்திரை தூங்கித் தூங்கிப்,பல்லை மினுக்கி,முகத்தைக் கழுவிப் போட்டு,குளிக்கப் பஞ்சியாயுமிருக்கும் அதே நேரம் பயங்கர குளிராயுமிருக்கும்,குளிக்கவே மனம் வராது எண்டாலும் சும்மா ஒரு போமாலிற்றிக்காக(formality)கேக்கிறது.."... என்ன குளிக்கிறதோ.." எண்டு..."...ஆய்.. சின்னப் பிள்ளையள் தானே.. அது காரியமில்லை.." முகத்தைக் கழுவிப் போட்டுப் போ எண்டு அம்மம்மா சொல்லுவா.சிலவேளை அம்மா சுடு தண்ணி வைச்சுத் தருவா.அதுக்கை கொஞ்சம் பச்சைத் தண்ணியை விட்டு,ஒரு வாளிக்கை கலந்து போட்டு,ஒரு வாளித் தண்ணியிலையே குளிச்சுப் போட்டுக் கோயிலுக்குப் போறது.எப்பிடிப் பாத்தாலும் சிலவேளையிலை அரைக் குளிப்பு இன்னும் சில நாள் அதுவும் இல்லை.அவ்வளவு தான்.



பண்டாரி அம்மன் கோவிலை 5 மணிக்குப் பூசை தொடங்கும்.அங்கை தான் முதல்ப் போவம்.ஒரு லக்ஸ்பிறே அல்லது அங்கர் பாக்(Bag) ஐயும்(அந்தக் காலங்களிலை உந்தச் சொப்பின் பைகளின்டை பாவனை மிச்சும் குறைவு)மடிச்சுக் காச்சட்டைப் பொக்கற்றுக்கை வைச்சுக் கொண்டு தான் இந்த வானரப் படையள் கோயிலுக்குப் படையெடுக்குங்கள். போனவுடனை பாக்கிற முதல் வேலை இண்டைக்குச் சுவாமிக்கு என்ன படைச்சுக் கிடக்கிறது எண்டு பாக்கிறது தான்."...ஆ .ஆ.கடலை கிடக்குது..அவலுக்கு கக்கண்டு போட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது...வெள்ளையாக் கிடக்குது...இஞ்சாலை கிடக்கிறது சக்கரைப் பொங்கல்...மோதகமும் கிடக்குது.கனக்கக் கிடக்குது... ஆளுக்கு ரண்டுப் படி குடுப்பினமோ...?அதுக்கிடையிலை கணக்குப் போட்டுப் பாக்கிறது..கோயிலிலை ஒரு 50,60 சனம் நிக்குது..எல்லாருக்கும் ரண்டுப் படி குடுத்து,பேந்து உபயகாரரும் தங்கடை வீட்டையும் கொஞ்சம் மோதகம் கொண்டு போகோணும்.. அப்பிடிப் பாத்தால் உவ்வளவும் காணாது.ஒரு வேளை ஐயர் உபயகாரருக்கெண்டு புறிம்பா உள்ளுக்கை ஒளிச்சு வைச்சிருக்கிறாரோ தெரியாது...சரி அதை விடுவம்...பெரியாக்களுக்குக் குடுக்காட்டிலும் சின்னப் பெடியளுக்கெண்டாலும் குடுப்பினம்...ம்.. பாப்பம்.பிறகு இஞ்சாலை வைரவருக்கு,சின்ன வடை மாலை தானே போட்டுக் கிடக்குது.உந்த வடை மாலையிலை 20 வடையும் வராது போல கிடக்குது.அப்ப உதைச் சனத்துக்குக் குடுக்க மாட்டினம் போல கிடக்குது.அங்காலை 2 தாம்பாளத்துக்கை கதலி வாழைப் பழமும் அடுக்கி வைச்சுக் கிடக்குது.அப்ப அதுவும் குடுப்பினம்.இந்த மனக் கணிப்பெல்லாம் கோயிலுக்குப் போன கையோடையே நாங்கள் செய்து போடுவம்.




அங்காலை ஒரு பக்கத்தாலை பூசையள் நடந்து,திருவெம்பாப் பாட்டுப் படிக்க வெளிக்கிட்டிடுவினம்.சிலவேளை ஐயரே படிப்பார்.இல்லாட்டில் ஆம்பிளையள், பெடியள்,பொம்பிளையள் எண்டு நல்லா "..ஆ. ஆ..." எண்டு இழுத்துப் பாடக் கூடினாக்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாட்டா,ஒரு ஓடரிலை படிப்பினம்."...ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும்." எண்டு தொடங்க,எங்களுக்கு,"எப்ப உந்தப் பாட்டெல்லாம் முடிச்சு அவல் கடலை தரப் போறியள் எண்டு யோசனை ஓடிக் கொண்டிருக்கும்.



இடையிலை ஒரு பாட்டிலை ஒரு வரி வரும்..".. போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்.." எண்டு.நாங்கள் சின்னப் பெடியள் உதைக் கேட்டிட்டு, எங்களுக்கை சிரிச்சுக் கொள்ளுவம்.(பிழையா யோசிச்சுப் போடாதையுங்கோ.எங்களுக்கு உதை மாதிரி ஒரு கூடாத சொல்லொண்டிருக்குதெண்டு அந்தக் காலத்திலேயே தெரியும்.அவ்வளவு தான்.அட.. சொன்னால் நம்புங்கோப்பா.அடம் பிடிக்கிறியளப்பா..ம்ம்)அதெல்லாம் முடிஞ்சு,"போற்றி அருளகநின் ஆதியாம் பாதமலர்,போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்..........போற்றியாம் மார்கழி நீராடேல் ஓர் எம்பாவாய்.."எண்டு 20 ஆம் பாட்டும் முடிய பெடியளின்ரை முகத்தில சந்தோசத்தைப் பாக்கோணும்.அப்பா சொல்லி வேலை இல்லை.





பேந்தென்ன,திருநீறு,சந்தனம் எல்லாம் வாங்கிப் பூசி அடுத்த அற்றாக்குக்கு(Attack) றெடியாயிடுவாங்கள்.அடிபட்டுப் பிடிபட்டு,அந்த லக்ஸ்பிறே பாக்கை நிறைக்கிறதிலை தான் குறியாய் இருப்பம். எங்கடை ஊரிலை உள்ள கோயிலுகள் தங்களுக்கை ஒரு அகிறீமன்ற்(Agreement) வைச்சிருந்ததுகள் போல கிடக்குது.ஒண்டின்ரை பூசை முடியத் தான் மற்றதினரை பூசை தொடங்கும்.எண்டாத் தான் பக்த கோடிகள்(வேறை யார் அவல்,கடலைக்குப் ஓடிற நாங்கள் தான்)கோயிலுக்கு நிறைய வருவினம் எண்டாக்கும்.பண்டாரி அம்மன் கோயில் முடிய வைரகோயில்லை 6 மணிக்கும்.அது முடிய மாலந்தெணிப் பிள்ளையாரிலை 6.30 க்கும்,கடைசியா ஆலடிப் பிள்ளையாரிலை 7 மணிக்கும் பூசை நடக்கும்.



போகாத கோவிலெல்லாம் திருவெம்பாக்குத் தான் போவம்.ஒவ்வொரு கோயில்லையும் திருநீறு,சந்தன்ம் குடுக்க,திரும்பவும் ஏற்கனவே பூசிக்கிடக்கிற திறுநீறு சந்தனத்துக்கு மேலையே பூசுறது.காதிலை பூ வைக்க்கிறது பெரிய பாடாப் போடும்.முதல்க் கோவிலிலேயே பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப்பூவையோ காதிலை லௌட்ஸ்பீக்கரைஇ(Loud Speaker)கட்டிற மாதிரி வைச்சாப் பிறகு மற்றக் கோவிலிலை வாங்கிற பூவை எங்கை தலைக்கு மேலையே வைக்கிறது.அதிலையும் சில பேர் இரண்டு காதிலையும் ஒரு லௌட்ஸ்பீக்கரை முன்னுக்கும் மற்றதை பின்னுக்கும் பாக்கக் கட்டிற மாதிரி, முன்னுக்கும் பின்னுக்கும் பாக்கிற மாதிரி பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப் பூவையோ வைச்சுக் கொண்டு போவாங்கள்.ஒவ்வொரு கோயிலையும் போய் அங்கை தாற போவையும் காதிலை அடைவாங்கள்..ம்ம்ம்.



இப்பிடி எல்லாக் கோயில்லையும் வாங்கினதுகளை வீட்டை கொண்டு வந்து,சில வேளையில காலமைச் சாப்பாடே உதாத் தான் இருக்கும்.சிலவேளையில உதோடை சேர்த்து ஒரு றாத்தல் பாணோடை காலமை அலுவல் முடிஞ்சு போடும்.சாப்பிட்டு முடிய அந்த லக்ஸ்பிறே பாக்கெல்லாம் கழுவிக் கொடியில காயப் போட்டிடுவம்.பிறகு நாளைக்கும் எடுக்கலாம்(றீ ஊஸ் - Re Use)எண்டொரு முற்போக்கு சிந்தனை தான்.சில பேர் இதையே பள்ளிக் கூடத்துக்கு கட்டிக் கொண்டு வந்து இன்டேவலுக்கும்(Interval) சாப்பிடுவாங்கள்.இப்பிடியே திருவெம்பா போகும்.எங்களுக்கும் திருவெம்பாப் பூசை இருக்குது.முட்டிக்கொத்தாத்தைப் பிள்ளையாரிலை(முட்டிக் கொற்றவத்தைப் பிள்ளையார்)6 ம் பூசையும் மாயக்கைப் பிள்ளையாரிலை 7 ம் பூசையும் எங்கடை தான்.அந்த 2 நாளும் உபயகாரர் எண்டு எங்களுக்கு கொஞ்சம் கூட அவல்,கடலை,மோதகம்,வடை,பஞ்சாமிர்தம் எல்லாம் பூசைக்கு வந்த சனம் ஓரளவு போய் முடிய ஐயர் எடுத்துக் கொண்டு வந்து தருவார்.அந்த 2 நாளும் அலுக்க அலுக்கச் சாப்பிட உந்த அவல் கடலைப் பைத்தியம் எல்லாம் அதோடை தன்ரை பாட்டிலை நிண்டிடும்.உதைத் தான் சொல்லிறது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்செண்டு.உதெல்லாம் சின்ன வயசுச் சமாச்சாரங்கள்.




இனி சங்கூதிப் பண்டாரத்துக்கு வருவம்.சங்கூதிப் பண்டாரம் எண்டால் என்னெண்டு தெரியாதாக்களுக்காண்டி,திருவெம்பாக் காலங்களிலை ஊரிலை இருக்கிற பெடியள் எல்லாம் ஒரு குழுவாக சேர்ந்து விடிய வெள்ளன எழும்பி,சேமக்கலம்,சங்கு எல்லாம் ஊதிக்கொண்டு,திருவெம்பாப் பாட்டுப் படிச்சுக் ஒண்டு போறதை தான் சங்கூதிப் பண்டாரம் எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறது.நீங்களெல்லாம் வெடிவால் முளைச்ச வயசுகளிலை, உங்கடை ஊர் சங்கூதிப் பண்டாரங்களிலை ஊதப் போயிருப்பியள்.அது நல்ல பம்பலாத் தான் போகும்.எங்கடை ஊரிலையும் சங்கூதிப் பண்டாரத்துக்கு ஊத போற பெடியள்,ஊரிலை இருக்கிற மற்ற எல்லாக் கோயிலுகள்ளையும் இருந்து சேமக்கலங்கள்,சங்குகள்,ஒரு பெற்றோல் மாக்ஸ்,திருவெம்பாப் பாட்டுப் புத்த்கம் எல்லாம் எடுத்து வைச்சுக் கொண்டு எங்கடை ஊர் வாசிகசாலைக் கட்டிடத்துக்குள்ளை தான் படுப்பாங்கள்.



விடிய 2,3 மணிக்கு எழும்பி,அந்தப் பனிக்குளிருக்கை ஒராள் பெற்றோல்மாக்ஸ் பிடிக்க,இன்னொராள் பாட்டுப் படிக்க,ஒவ்வொரு பாட்டும் முடியிற இடைவெளிக்குள்ளை சேமக்கலம் அடிச்சு,சங்கூத கொஞ்சம்,பக்கப் பாடு,பம்பலுக்கெண்டு ஒரு மிச்சம் எண்டு ஒர் 15 - 20 ஒண்டாப் போகும்.ஊரிலை இருக்கிற எல்லா ரோட்டாலையும் 2,3 தரம் போய் ஊதிப் போட்டு,வந்து 4 ,5 மணிக்குப் படுத்திடுவாங்கள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக் காரர் பெடியளுக்கு ஒரு பெரிய கேத்திலுக்கை தேத்தண்ணியும்,கடிக்கிறதுக்கு,கல்பணிஸோ,மலிபன் பிஸ்கட்டோ இல்லையெண்டால் தட்டை வடையோ(அது தான் எங்கடை பருத்துறை வடை)குடுப்பினம்.



பம்பலாத் தான் இருக்கும்.வெடிவால் முளைச்ச வயசு தானே?வாசியாலைக்கை படுத்திருகேக்கை ஒருத்தன்ர சாரத்தை கலட்டிறது(ஆனால் எல்லாரும் உள்ளை காற்சட்டையும் போட்டு கொண்டு தான் வருவாங்கள்),காலைப் போடுறது,கையைப் போடுறது,நித்திரையைக் குழப்பிறது எண்டு கொசப்பு வேலையளுக்கும் குறைவில்லை.அதோடை சங்கூதிக் கொண்டு போகேக்கை றோட்டுக் கரையோடை காய்ச்சு நிக்கிற கொய்யா,மாதாளை,மாங்காய்,முத்தின வாழைக்குலையெல்லாம் இதோடை காணாமல்ப் போடும்.வாழைக்குலை முத்தாட்டிலும் பரவாயில்லை,திருவெம்பா தொடங்கிறதுக்கு முதல் வெட்டிப் போடோணும் எண்டு வெட்டிப் போடிறளவுக்குக் கூடச் சனம் இருக்குது.


அதோடை பட்ட சீசனும் தொடங்கீடும் எண்டதாலை(பட்டம் பற்றிய முந்தியதொரு என் பதிவு) வேலியளிலை கட்டி கிடக்கிற கமுகஞ்சிலாகையளும் திருவெம்ப்பாவோடை காணாமல் போடும்.அதோடை கடைசி,கடைசிக்கும் முதல் நாளுகளிலை ஒரு பறையை வாடகைக்கு எடுத்து சங்க்கூதிப் பண்டாரத்தோடை சேத்து அடிச்சுக் கொண்டு போற வழக்கமும் எங்கடை ஊரிலை இருந்துது.அந்தக் காலம் 50,100 ரூபா குடுத்தே ஒரு பறையை வாடகைக்கு எடுக்கலாம்.இப்ப 400,500 குடுக்கோணுமாம்.


பறையை ஒரு பெரிய கரியல் உள்ள சைக்கிளொண்டில்(உங்கடை அம்மப்பாமார்,அப்பப்பாமார் வைச்சிருந்திருப்பினம்.பெரிய வெங்காய மூட்டையள்,அரிசி மூட்டையள்,தவிட்டு,புண்ணாக்கு மூட்டையள் ஏத்திக் கொண்டு போகலாம்.இல்லாட்டில் குடும்பம் 4,5 பெடியள் எண்டு கொஞ்சம் பெரிசெண்டாலும் ஒரு பெரிய கரியல் பூட்டினால் தான் எல்லாத்தையும் ஒண்டா இழுத்துக் கொண்டு வல்லிறக்கோயில் மாதிரிப் பெரிய கோயிலுகளுக்குப் போகலாம்.)கட்டி,சும்மா பம்பலா அடிச்சுக் கொண்டு போறது.



ஆரும் பெரிசுகள்,பெடியளை வாசியாலையிலை வைச்சு அப்பிடி இப்பிடியெண்டு பேசியிருந்தால் அவற்றை வீட்டு வாசல்லை கொண்டு போய் விடிய வெள்ள்ன அவரை எழும்புமட்டும் அடிச்சு அவரை எழுப்பிறதுக்குத் தான் பறையடிக்கிறது.அப்பத்தான் அதுகளும் ,"உதகளுக்கேன் புத்தியைச் சொல்லுவான்,உதுகளைத் திருத்தேலாது" எண்டு யோசிக்குங்கள்.


நான் போனமுறை கனகாலத்துக்குப் பிறகு திருவெம்பாக்காலத்திலை ஊரிலை போய் நிண்டனான்.என்ரை ஒண்டை விட்ட அண்ணன் ஒருத்தன்.என்னை விட 3 வயசு கூட.அவன் இப்ப இருக்கிற சங்கூதப் போற பொடியளட்டைச் சொன்னான்"உந்தப் பறை கொண்டோய் அடிக்கிற குரங்குச் சேட்டையொண்டும் செய்யாதையுங்கோ.பாட்டை மட்டும் படிச்சுக் கொண்டு போங்கோ.ஊரிலை சனம் நிம்மதியாப் படுக்கிறேல்லையே?" அதுகளும் விட்டிச்சுதுகளே.உவரென்ன எங்களெக்குச் சொல்லிறது.இந்தமுறை உவற்றை வீட்டு வாசல்லை தான் கொண்டோய் வைச்சு அடிக்கிறது.


அவனுக்கும் தெரியும் தானே.அவனும் உவங்களின்டை வயசெல்லாம் கடந்து வந்தவன் தானே. அவனும் உப்புடி ஆற்றையோ வீட்டு வாசல்லை அடிச்சு ஆரையும் எழுப்பியிருந்திருப்பான் தானே.?பூவரசங் கம்பெல்லாம் முறிச்சு கேற்(Gate) வாசல்லை வைச்சிட்டுத் தான் படுத்தவன்.அவன்ரை வீட்டு வாசல்லை றோட்டுக்கு லைற்ற் போட்டு வைச்சிருக்கிறான்.ஆனால் அதுக்கு சுவிச் கறண்ட் எல்லாம் இவன்ரை வீட்டையிருந்து தான்.விடியக் காலமை வெள்ளன 3 மணிக்குப் போய் நிண்டு கொண்டு அவன்றை வீட்டு வாசல்லை நிண்டு அடிச்சிருந்திருக்கினம்.அவன் எழும்பி வந்து உள்மதிலடியில நிண்டு கொண்டு ஆராக்கள் எண்டெல்லாம் வடிவாப் பாத்துப் போட்டு,லைற்றை நிப்பாட்டிப் போட்டு,பூவரசங்க் கம்போடை மதிலாலை ஏறி றோட்டுக்குக் குதிச்சு,வெளு வெளு எண்டு வெளுத்தெடுத்துவிட்டான்.அவங்கள் சைக்கிள்,பறை எல்லாத்தையும் போட்டிட்டு,அங்காலை இருந்த வேலிக் கண்டாயங்களுக்குள்ளாலையும் மதிலாலையும் ஏறி விழுந்து ஓடித் தப்பிட்டாங்கள். ம்ம்ம்.. அப்பிடி இப்பிடியெண்டு திருவெம்பாக் கால ஞாபகங்கள் பம்பலா,பசுமையா,இப்பவும் கிடக்குது.ம்ம்ம்ம்ம்


புறிம்பு - புறம்பாக/வேறாக
தாம்பாளம் - நைவேத்தியம் சுவாமிக்குப் படைக்கப் பயன் படும் தட்டு
வாசியாலை - வாசிகசாலை
வல்லிறக்கொயில்- வல்லிபுரக்கோவில்
மாதாளை - மாதுளை
முத்தின - முற்றின
கமுகஞ்சிலாகையள் - கமுகம் சலாகை
காரியமில்லை - பெருந்தவறல்ல
சட்டுப் புட்டென - உடனேயே
சேமக்கலம் - ஒரு வகை கோயில் மணி என்று சொல்லலாம்
Author: வடலியூரான்
•3:32 AM
இதென்னடா ஆருக்கோ பேச்சு விழுது எண்டு நினைச்சு பின்னங்கால் பிடரியிலை பட ஓட வெளிக்கிடாதையுங்கோ.நான் வெங்காயம் எண்டு சொன்னது எங்களின்டை செல்வ(ல)த்தை தான்.எங்கன்ரை ஊரிலை அதை "காய்" எண்டும் சொல்லுவம்.எங்கள் எல்லாருக்கும் செல்வதை அள்ளிச் சொரிகின்ற லக்ஸ்மி அது.வெங்காயத் தோட்டத்திலையிருந்து உழைத்து எங்களவர்கள் எங்கேயோ உயரத்துக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள்.எங்களுக்குக் காசு மழைபொழிகின்ற காமதேனு அது.




நாங்கள் அதைக் காலால் உழக்க மாட்டோம்.மாலையாகி,வீட்டை விளக்குக் கொழுத்திய பின்னரோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ யாருக்கும் அதைக் கொடுக்கமாட்டோம்.ஏனென்றால் அவ்வாறு கொடுத்தால் அந்த லக்ஸ்மி எங்களை விட்டுப்போகிறாள் என்ற நம்பிக்கையுடையவர்கள் நாங்கள்.(நீங்கள் சிலவேளைகளில் காசினை வெள்ளிக்கிழ்மைகளிலோ அல்லது விளக்குக் கொழுத்தியபின்னரோ கொடுக்காமால் இருக்கலாம்)நாங்கள் அந்தப் பணத்துக்கு ஈடாக வெங்காயத்தையும் நினைத்துக் கொள்வதால் அதனை மேற்க்கூறிய தருணங்களில் வெளிச்செல்ல அனுமதிக்க மாட்டோம்.




எங்கள் வெங்காயத் தோட்டங்களில் நாங்கள் செருப்புடன் இறங்கவே மாட்டோம்.வேறொருவன் இறங்கினாலும் அவன் காலை உடைக்கவும் தயங்க மாட்டோம்.ஏனென்றால் எங்கள் காசுக்கடவுளை காலால் உழக்குகின்ற செயலாகவே நாங்கள் அதைக் கருதுவோம்.வெங்காயச் சருகு காற்றிலே சரசரத்து ஏற்படுத்துகின்ற சரசரப்போசையும் அதன் வாசமுமே எங்களுக்கு நித்திரையை வரவைக்கும்.கறி,புளிகளில் காரசாரமாய் வெங்காயம் வெளிப்பட்டால் தான் எங்களுக்குப் சாப்பாடு இறங்கும்.இல்லையென்றால் பத்தியப் படாது.நாங்கள் வெங்காயத்தோடை எப்பிடி ஒட்டியிருக்கிறம்.எங்கடை வாழ்க்கையிலை அது எப்பிடிப் பின்னிப் பிணைஞ்சிருக்குது எண்டு சொல்லவெளிக்கிட்டுத் தட்டுத் தடுமாறி வந்த ஒரு சில உதாரணங்கள் தான் உவை.





இப்பிடி எங்கன்ரை மூச்சோடையும்,பேச்சோடையும் கலந்த வெங்காயச் செய்கை பற்றியதொரு பதிவு தான் இது. யாழ்ப்பாணத்தில் வெங்காயச் செய்கைக்கு புன்னாலை கட்டுவன்,இடைக்காடு,ந்வக்கிரி,வலிகாமத்தின் இன்னும் பல பகுதிகள்,தென்மராட்சி மற்றும் வட்மராட்சியில் மந்திகை,வதிரி,புலோலி,பொலிகண்டி போன்றவை பிரசித்தி பெற்ற இடங்களில் சிலவாகும்.



எங்கடை ஊரிலும் வெங்காயம் பெரும்பாலானவர்களால் செய்கை பண்ணப் படும் ஒரு பயிராகும்.வேறு சிலர் போயிலை(புகையிலை), மற்றும் கத்தரி,மிளகாய்,பூசணி,பயிற்றை,பாகல் போன்ற சில்லறைப் பயிர்களும் பயிரிடுவினம்.வெங்காயத்தை விட பொயிலை வருமானம் கூடின பயிரென்றாலும் அதற்கு அதிகளவு கஸ்ரப்படவேண்டியிருக்கும்.




நான் ஏற்கனவே சொன்னது மாதிரி வெங்காயத்தை நாங்கள் கூடுதலாகக் "காய்" எண்டு தான் சொல்லுவம்.பயிரிடுகின்ற தோட்டத்தை "தறை" அல்லது "தெணி"எண்டு சொல்லுவோம்.அவற்றுக்கும் "ஐயன் தெணி","மாலந்தெணி","வெளித்தெணி","மடத்தெணி","வல்லூட்டி","ஆவலம் பிட்டி","காறவாய்ப்பள்ளம்" எனப் பெயர்கள் எல்லாம் உண்டு.அவற்றின் பரப்பளவு பொதுவாக "பட்டி"யில் தான் அளக்கப்ப்டும்.10 பட்டி ஒரு "பரப்பு" க்குச் சமனாகும்.




எங்கடை ஊரிலை முழுநேர விவசாயிகள் அல்லது முற்றுமுழுதாக விவசாயத்தை நம்பிக் கொண்டிருக்கிறாக்கள் எண்டால் மிச்சும் குறைவு.பெரும்பாலான ஆக்கள் பாட் ரைமா(பர்ட் டிமெ) மற்ற வேலைகளைச் செய்துகொண்டு வெங்காயத்தை முழுநேர வேலைகளை செய்யிறவை.ரீச்சர்(Teacher),போஸ்ற் பீயோன்(Post Peon),கடை முதலாளி, பிரதேச சபை உட்பட ஏனைய அரசாங்க உத்தியாகத்தர்மார்,அதிபர் எண்டு தொடங்குகிற லிஸ்ற் டொக்டர்,இஞ்சினியர்,லோயர்(Lawyer),பாங்க் மனேச்சர்((Bank Manager) வரையாய் அந்த பாட் ரைம்(Part Time) வேலையின் வீச்சு வேறு படும்.




பாட் ரைம் வேலை எண்டு நான் சொன்னது வேலை செய்யிற நேரத்திலையில்லை.வாற வருமானத்தின் படி.அவையளுக்கு உந்தக் கண்டறியாத வேலைகளிலை கிடைக்கிற ச்ம்பளம் வந்து மட்டு மட்டா குடும்பச் செலவுக்கத் தான் காணும்.தங்கடை தொழிலின்ரை வரும்படியை வைச்சுக் கொண்டு அவையளே சொல்லுவினம் தோட்டம் தான் எங்கடை மெயின் வேலை.எங்கடை தொழிலுகள் எல்லாம் சப்(Sub)தான் எண்டு.




என்றை அப்பாவும் ஒரு ரீச்ச்ர்(Teacher) தான்.அவரும் உப்புடி ரீச்சிங்கை(Teaching) பாட் ரைமாச் செய்யிற ஆள் தான்.எனக்கும் அது ஏனெண்டு தெரியேல்லை, எனக்கு அப்பா ஒரு வாத்தியார் எண்டு சொல்லுறதை விட நானொரு தோட்டக்காரன்ரை பெடியனெண்டு சொன்னால் ஒரு கூடுதல் சந்தோசம் மாதிரி.உள்ளூர ஒரு பரம திருப்தி.அது மட்டுமில்லை கம்பசிலையும் என்னட்டை ஜூனியர்ஸ் கண்டுபிடிக்க இல்லையெண்டாலும், அவங்கடை அப்பாவும் ஒரு தோட்டக் காரன் எண்டால் ஒரு ராகிங்கும் செய்யாமலே(ஏதோ பெரிய ராக்கர் தான் போ) விட்டு விடுகின்ற ஒரு வீக்னசும்(weekness) இருந்ததுகொண்டிருந்தது.




என்னதான் அவையள் உத்தியோகம் பாத்தாலும்,படிச்சாலும் அவையள் எல்லாரும் நல்ல "கை பக்குவப்பட்ட" தோட்டக்காராக்கள் தான்.நான் கண்ணாலை கண்ட எத்தினை எங்கடை ஊர்,பிரதேச அண்ணாமார்,தேப்பனோடை சேர்ந்து மம்பெட்டி பிடிச்சு,எருப்பரவிக் கொத்தித் தோட்டஞ்செய்து இண்டைக்கு இஞ்சினியர்,டொக்ரர்மாராய் ஆகியிருக்கினம்.ஒரளவு வயதிலேயே படிப்பு சறுக்கினாலுமெண்டிட்டு கைகாவலா எல்லரும் தோட்ட வேலையளைப் பழகிவைச்சிருக்கிறது தான்.




இரண்டு வேலை தெரிஞ்சிருக்கிறதும் நல்லது தானே.ஆனால் நான் அந்தளவுக்கு ஒண்டும் செய்யவில்லை.ஆனாலும் எல்லா வேலையும் கொஞ்சம் கொஞ்சம் செய்யப் பழகியிருந்தன்.ஆனாலும் பெரிதளவில் உடம்பை முறிச்சுச் செய்யாததாலை(வேறையென்ன பஞ்சி தான்.அதாலை "பம்ஸ்" அடிச்சது தான் அந்தக்காலத்திலை)அந்தளவுக்குக் கைப் பக்குவம் இல்லாட்டிலும் ஏதோ அம்மமாவின்றை ஆக்கினையிலை "ஆம்பிளைப் பிள்ளையாப் பிறந்தனீ, மம்பெட்டி பிடிச்சுப் பழகாமல்...இஞ்சை பார் பெண்ணாப் பிறந்த நானே இந்தவயதிலையும் என்ன பக்குவமா மம்பெட்டி பிடிக்கிறன் ..." எண்டு எதோ பிடிக்கோணும் எண்டதுக்காகவேண்டி மம்பெட்டி பிடிச்சிருக்கிறன்.அதெல்லாம் தெரிஞ்சபடியாலை இண்டைக்கு இந்தப் பதிவை எழுதிறன்.




ஆனால் எங்கடை பொடியள் எவ்வளவு கஸ்ரமான சூழ்நிலைகளிலையும் குண்டுக்குப் பயந்து பங்கருக்கை ஒளிச்சிருந்து குப்பிவிளக்கிலை படிச்சு முன்னுக்கு வந்த ஆக்கள் கனபேர்.அவையள் எல்லாம் எங்களுக்கு,எங்கடை பொடியளுக்கு முன்மாதிரியா இருக்கினம்.இப்பிடிப் பலர் பலவாறு கஸ்ரப்பட்டாலும் எனது பல்கலையில் நான் சந்தித்த எனது தம்பியொருவரைப் பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன்.இந்தப்பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லையெனினும் அதை இங்கே சொல்லிவிடலாம் எண்டு நினைக்கின்றேன்.




பெயர் வேண்டாம்.அவன் பேசாலையிலிருந்து பல்கலை வந்து சேர்ந்தவன்.தகப்பன் போரினால் ஏலாவாளியாக்கப்பட்டபின்னர் தன் குடும்பத்துக்காக தானே வள்ளமேறி,இரவிலே மீன்பிடிக்கச் சென்று,பகலிலே வந்து படித்து பொறியியல்ப் பீடம் ஏகியவன்.பொறியியல் அனுமதி கிடைத்தும் குடும்பநிலை கருதி பல்கலையைத் துறந்து,தூக்கியெறிய வெளிக்கிட்ட வேளையில்,தாயினதும்,வேறு சிலரினதும் நிர்ப்பந்தமான,மண்டாட்டமான வேண்டுதலுக்காக பல்கலை வந்தவன்.இப்படியாக பல கஸ்ரங்களிலும் கல்வியைக் கைவிடாதது ஈழ்த்த்மிழினம்.




இதை இப்போதைய போனும் கையுமாகத் திரிந்து காசையும் வீணாக்கி,காலத்தையும் மண்ணாக்கி,மூஞ்சிப்புத்தகத்தாலை வயித்திலை பிள்ளையை வருவித்துக்கொண்டும் அனைவரையும் பேய்க்காட்டிக் கொண்டிருக்கிற இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது எங்கள் எல்லோரதும் அவா.அது ஒரு புறம் இருக்க நாங்கள் விசயத்திற்கு வருவோம்.




உப்புடியெண்டால் சொல்ல வந்ததை மறந்து போடுவன் அப்பரெல்லாம் தோட்ட சீசனிலை,எட்டுமணி மட்டும் தோட்டத்துக்கை நிண்டு வேலைசெய்து போட்டுத் தான் பள்ளிக்கூடம் போவார்.எங்கன்றை ஊரிலை தொழில்ரீதியாப் பாத்தால் போஸ்ர் பீயோன்மார் தான் கூட.ஒரு ஏழெட்டுப் பேர் இருப்பினம்.ஏன் ஊரிலை போஸ்ற் பீயோன்மார் கூட எண்டு இன்னும் கொஞ்சம் கீழை வாசிச்சுப் போட்டுக் கண்டுபிடியுங்கோ பாப்பம்.




அவையள் என்ன செய்வினம் எண்டால்,விடியக் காலமை மிசினை(நாங்கள் வோட்டர் பம்மை மிசின் எண்டு தான் சொல்லுவம்)கொண்டு போய் தோட்டத்துக்கை பூட்டிப் போட்டு,சேட்டைக் கழ்ட்டி கிணத்துக்குப் பக்கத்திலையிருக்கிற பூவரசமரத்தில கொழுவிப் போட்டு,ஜீன்சை முழங்காலுக்கு மேலை மடிச்சுவிட்டிட்டுத் தண்ணி மாறுவினம்.ஒரூ 8, 8.30 அப்பிடி அவையின்ரை மனுசிமார் தோட்டத்துக்கை சாப்பாடு கொண்டுவர,தோட்டத்துக்கையே சாப்பிட்டு,வாயைக் கொப்பளிச்சுப்போட்டு,மனுசிமாரைத் தண்ணி மாறவிட்டிட்டு,சேட்டையெடுத்துக் கொழுவிக்கொண்டு கந்தோருக்குப் போய் சைனை(Signature) வைச்சிட்டு அண்டைக்குக் குடுக்கவேண்டிய கடிதங்களையெடுத்துக் கொண்டு,தபால் குடுக்கப் போறன் எண்டு சொல்லிக் கொண்டு வெளிக்கிட்டுடுவினம்.





சைக்கிளைத் திரும்பக் கொண்டுவந்து தோட்டத்தடியில் நிப்பாட்டிப் போட்டு,மனுசிமாரை மத்தியானச் சமையலுக்கு அனுப்பிபோட்டு,திரும்பவும் மாற வெளிக்கிட்டுடிவினம்.அப்பக் கடிதம் எண்ணெண்டு குடுக்குறது எண்டு தானே கேக்கிறியள்?அது ஊருக்கை தானே.மாலைக்கை ஆலமரத்துக்கு கீழை இருக்கிற வாசிகச்சாலையிலை வெட்டிக் கதைகதைக்கிறதுக்கு கூடுற பெடியளட்டையோ அல்லது ஆம்பிளையளிட்டையோ குடுத்துவிட்டால் சரிதானே.எல்லா வீட்டையும் கடிதம் போடும்.சிம்பிள் வேலை.சிம்பிளா போஸ்ற் மான் வேலை செய்துகொண்டு தோட்டத்தையும் செய்துகொள்ளலாம்.இப்ப விளங்குதே ஏன் எங்கடை ஊரிலை போஸ்ற்மான்மார் கூட எண்டு.




இனி வெங்காயச் செய்கையின் ஒவ்வொரு படியையும் படிப்படியாகத் தருகின்றேன். நீங்களும் ஒரு தோட்டக்காரனெண்டால் ஏதாவது பிழையெண்டால் சொல்லுங்கோ இல்லையெண்டால் பேஸ்புக்கிலை தோட்டஞ் செய்த எக்ஸ்பீரியன்சை வைச்சுக்கொண்டு இதையும் செய்துபாருங்கோவன்.




வெங்காயம் செய்யும் போகத்தினடிப்படையில் நாங்கள் "கோடைக்காய்","மாரிக்காய்" எண்டு சொல்லுவம்.மாரிக்காய் மார்கழி,தையில் விதைச்சு, மாசி,பங்குனியில் முடியும்.கோடைக்காய் வைகாசி ஆனியில் தொடங்கி ஆடி ஆவணியில் முடியும்.எங்களது இடங்களில் பெரும்பாலும் மாரிக்காய் மட்டுமே நடப்படும்.



கொத்திக் குப்பை தாட்டல்

பெரும்பாலும் ஐப்பசியிலை மாரிகாலம் தொடங்கினாப்போல,ஒரு ஒண்டிரண்டு மழை பெய்ஞ்சு,மண்ணை நனைச்சாப்போல தோட்டத்தைப் பண்படுத்தத் தொடங்கிடுவம்.பழைய கொட்டிலுகளைப் புடுங்கிப் புதுசா மேய(வேய) வெளிக்கிடேக்கை வாற ,அந்தக் கொட்டிலின்றை பழைய கிடுகுகள்,பனையோலைகள்,இலைகுழைகள்,மாட்டெரு,ஆட்டுப்புழுக்கை போன்றவற்றைக் கொத்திதாட்டுத் தான் பண்படுத்தல் தொடங்கும்.


உழுதல்

கொத்திப் பிரட்டி,ஒரு மாதத்திற்கு மேல் அப்பிடியே நிலத்தை விட்டு விட மேலும் மேலும் மழை பெய்ய மண் அடைஞ்சு மண் இறுகி விடும்.பிறகு லான்ட்மாஸ்ரரால்(லன்ட் மச்டெர்) நிலத்தை உழுவார்கள்.அல்லது இதற்குப் பதிலாக இப்போதும் கொத்தலாம்.உண்மையில் கொத்தும் போது தான் ஆழமாக மண் தோண்டப்பட்டு புரட்டப்படுவதால் இதுவே சிறந்தமுறையாகக் கருதப்படுகின்றபோதும் செலவு குறைவு மற்றும் இலகு போன்ற காரணங்களினால் தான் உழப்படுகின்றது.


வாய்க்கல் வரம்பு போடுதல்

பிறகு பெரிய பெரிய மண்கட்டிகள் சின்னஞ்சிறு கட்டிகளாக உடைக்கப்பட்டு கயிற்றுப்பந்தைப் பயன்படுத்தி நேராக வாய்க்கால் வரம்பு போடபப்டும்.


வெங்காயம் நோண்டுதல்/காய் நுள்ளுதல்


வெங்காயத் தாறிலிருந்து வெங்காயத்தை நுள்ளி எடுத்தலைத் தான் வெங்காயம் நோண்டுதல் என்று சொல்லப்படுகின்றது.வெங்காயத்தை நுள்ளியெடுப்பது மட்டுமில்லாமல் வெங்காயத்தின் வெளிச்சரையெல்லாத்தையும் உருத்தி,செத்தல் வெங்காயங்களை ஒதுக்கித் தான் வெங்காயம நோண்டுவோம்.நோண்டியபிறகு பார்த்தால் குங்குமக் கலரோடு வெங்காயாம் சும்மா ஜொலித்துக் கொண்டிருக்கும்.


தெளித்தல்/புழுதித் தண்ணி

வெங்காய நடுகைக்கு முதல்நாள் மிசின் பூட்டி,புதிதாகப் போடப்பட்ட வாய்க்காலில் புழுதித் தண்ணி தாராளமாக பாயவிடப்படும்.ஒரு பழைய சாப்பாட்டு கோப்பை போன்ற ஏதாவது தட்டையான பாத்திரத்தால் எல்லா இடமும் நல்லா தண்ணியை அள்ளித் தெளித்து மண்ணை நன்றாக குளிர்விப்போம்.மண் நன்றாக நனைந்தால் தான் நடுகைக்கு இலகுவாக இருக்கும்.


சாறுதல்

அடுத்தநாள்,அதாவது வெங்காய நடுகையன்று காலையில் நிலம் சாறப்படும்.சாறுதல் என்பது கொத்துதல் மாதிரித்தான்.ஆனால் கொத்துதல் இல்லை.மண்வெட்டியை சிறிதளவே தூக்கி,அதிகளவு ஆழமாகத் தோண்டாமல்,சிறு சிறு கட்டிகளாக அல்லது தூளாக மண் வருமாறு கொத்துதல் ஆகும்.சின்னக் கொத்துதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


பாத்தி கட்டுதல்

ஒராள் முன்னுக்கு சாறிக் கொண்டுபோக,மற்றவர் அந்த மண்ணை நன்றாக உருத்தி,மண்ணைப் பதமாக்கி,மடை விட்டு, நடுகைக்கு ஏற்றாற் போல பாத்தி கட்டிக் கொண்டுபோவார்.

நடுகை

நடுகை இன்றைக்கு நடுகை என்றால் விடியக் காலமை வெள்ளன மாயக்கைப் பிள்ளையாரட்டை போய் கற்பூரங் கொழுத்தி,சிதறு தேங்காய் அடிச்சுப் போட்டு அவற்றை கோயில் வாசலிலை கிடக்கிற கொஞ்சம் பூவையும் எடுத்துக் கொண்டு வந்து வீட்டிலை ராசியான கைக்காரர் யாராவது நாள்க்காயை நடுவினம்.(நிச்சய்மா அந்த ராசியான கைக்காரன் நான் இல்லை.என்ரை மூண்டு வயசிலை என்ரை ராசி எப்பிடி இருக்குது எண்டு பாக்கிறதுக்காக வேண்டி,என்ரை கையைப் பிடிச்சு நாள்க்காயை நட்டிச்சினமாம்.அந்த வருசம் மழை வந்து கொட்டோ கொட்டெண்டு கொட்டி,எல்லாத்தையும் அழிச்சுப்போட்டிச்சுதாம்.ம்ம்ம் என்னதொரு ராசி...!!!)அதிலையிருந்த நான் ஒரு நாளும் நாள்க்காயை நடுறதில்லை.நாள்க்காயை நட்ட பின்னர் நடுகைப் பெண்டுகள் வந்து வெங்காயத்தை கட்டின பாத்திகளிலை மள மளவெண்டு நட்டுக் கொண்டு போவினம்.


மிதந்த காய் ஊண்டுதல்

நடுகை பெண்டுகள் அவசரத்திலை காய் ஊண்டிக்கொண்டு போகேக்கை சில காய்கள் வடிவாக மண்ணுக்குள் ஊண்டுப்பட்டிருக்காது.அப்பிடி ஊண்டுப் பட்டிருக்காவிட்டால் வெங்காயம் சிலவேளைகளில் தண்ணி மாறும் போது அடித்துக் கொண்டு செல்லப் படலாம் எனபதோடு அவை உருண்டு,திரண்டு,விளையமாட்டாது.நன்றாக விளைந்தால் தானே நல்ல நிறை நிக்கும்.நாங்களும் நல்ல லாபம் எடுக்கலாம்.அப்பிடி வடிவாக ஊண்டப்படாத காய்களை வெங்காயம் முளைவிடத் தொடங்கிய பிறகுதான் அவதானிக்கலாம்.வெங்காயம் நட்டு ஒரு 5,6 நாளைக்குப் பிறகு அப்பிடி வடிவாக ஊண்டப்படாத காய்களை ஒரு குத்தூசியால் நிலத்தில் குத்தி அந்த துளைக்குள் இந்தக் காய்களை ஊண்டிவிடுதலைத் தான் மிதந்த காய் ஊன்டுதல் எண்டு சொல்லிறது.


தண்ணி மாறுதல்

கூடுதலாக கிணத்திலையிருந்த மிசினாலை இறைச்சுத் தான் தண்ணி மாறுவம்.முதல்த்தண்ணி வெங்காயம் நட்டு ஒரு பத்துநாளுக்குப் பிறகுதான் இறைப்பம்.அதுக்குப் பிறகு ஒவ்வொரு 4,5 நாளுக்கொருக்கால் தண்ணி மாறுவம்.இந்தத் தண்ணி மாறுறதெண்டுறது பயங்கர கரைச்சலான விசயம்.பாத்தால் சிம்பிளான வேலை மாதிரித்தான் தெரியும்.அனுபவம் இல்லையோ நிச்சயமா ஏலாது.உடைக்காமல் மாறவேணும்.இடைக்குள்ளை எங்கையாவது உடைச்சுதெண்டால் அள்ளிப் போடுறதுக்கும் மண் எடுக்கேலாது.ஏனெண்டால் வெங்காயம் எல்லா இடமும் நடப் பட்டிருக்கும்.தண்ணி மாறேக்குள்ளையும் அடித்தறையிலையிருந்து தலைப்பு தறை வரை போகேக்கை இடப்பக்கமா மாறிகொண்டு போனால், தலைப்பிலிலையிருந்து திரும்பி வரேக்கை வலப்பக்கமா வெட்டிக் கட்டிக் கொண்டுவரலாம்.


புல்லுப்ப்டுங்குதல்/உரம் போடுதல்/மருந்தடித்தல்

இது உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச வேலைகள் எண்ட படியால் இதுக்கு விளக்கம் தேவையில்லயெண்டு நினைக்கிறன்.


பூ முறித்தல்


வெங்காயம் ஒரு 65 - 70 நாள்ப்பயிர்.அது ஒரு 45 - 50 நாளுக்குப் பிறகு மொட்டுவிட்டுப் பூக்கத் தொடங்கும்.அந்தப் பூவை நாங்கள் முறித்துத் தந்தால் நீங்கள் அதை சுண்டி சாப்பிடிருப்பியள்.அதை முறிக்காமல் விட்டால் வெங்காயம் விளையாது எண்டபடியால் தான் அதை முறிக்கிறது.ஏனெண்டால் வெங்காயத்தின்றை சத்தெல்லாம் பூவுக்குப் போகும் எண்டு பெரியாக்கள் விளக்கம் குடுப்பினம்.


நனைத்தல்

ஆகலும் கடைசியான இறைப்பை நனைத்தல் என்று சொல்லுறது.இதற்கும் ஒரு கோப்பையால் அள்ளித் தெளித்து வரம்பு,வாய்க்கால் எல்லாம் நன்றாக ஈரமாக்குவோம்.அப்படியென்றால் தான் கிண்டுவதற்கு நன்றாக இருக்கும்.


கிண்டி விரித்தல்

நனைத்ததற்கு அடுத்தநாள், வெங்காயத்தைக் கிண்டி அடுக்கி விரித்து,பச்சையாக இருக்கும் வெங்காயத்தாறு காயும்வரை ஒரு கிழமை வரை வெங்காயம் தோட்டத்திலேயே விடப்படும். முடிச்சல் வெங்காயம் காய்ஞ்சபிறகு,கையால் பிடிக்கக்கூடியளவு தாற்றுடன் வெங்காயத்தை எடுத்து,கடல் தண்ணியில் ஊறப்போட்ட, பனஞ்சார்வோலை ஈர்க்காலே அளாவி,தாற்றை ஒரு மடிப்பு மடிச்சுக் கட்டி அந்த ஈர்க்கை ஒரு இழுப்பு இழுத்து வெங்காயப் பிடி கட்டுவோம்.


பிணைச்சல்

இப்படியாக முடியப்பட்ட வெங்காயப் பிடிகள் நான்கை ஒன்றாக இணைத்து ஒரு பிணைச்சல் கட்டப்படும்.ஏற்றி,இறக்குவதெல்லாம் இந்தப் பிணைச்சல்களினால் இலகுவாக்கப்பட்டுவிடும். இந்தப் பிணைச்சல்கள் எல்லாத்தையும் ஒரு லான்ட் மாஸ்ரரில்(Land MAster) ஏற்றிக்கொண்டு,வந்து வீட்டை சேர்ப்பிக்கவேண்டியது தான் அடுத்த வேலை.இந்த ஒரு நாளுக்காகத்தான் நாங்கள் சின்ன வயதுகளில் ஏங்கித் தவித்து, காத்திருந்திருப்போம்.எல்லாம் ஒரு லான்ட் மாஸ்ரர் சவாரிக்காகத் தான்.லோட் நிரம்பிற அளவுக்கு,வெங்காயம் ஏத்தி முடிய எங்களையும் அந்த வெங்காயங்களுக்கு மேலை ஏத்திவிடச்சொல்லி நாங்கள் பிடிக்கிற அடம் தாங்காமல் அம்மப்பா தூக்கி ஏத்திவிட்டுவிடுவார்.ஏத்திவிட்டால், லான்ட் மாஸ்ரர் ஓடேக்கை பயமாத்தான் இருக்கும் எண்டாலும்,வெங்காயப் பிடியின்ரை மூட்டுக்கை கையைக் கொளுவி, ஒரு உடும்புப் பிடியைப் பிடிச்சுக்கொண்டு,ஏதோ பட்டத்து இளவரசன் பல்லக்கிலை போற மாதிரி ஒரு பீலிங்கோடை தான் நாங்கள் ஊர் ரோட்டுகளாலை லான்ட்மாஸ்ரரிலை அண்டைக்குப் போவம்.அந்த இளவரசனுக்குக் கூட அப்பிடியொரு இறுமாப்பு இருந்திருக்காது.ஆனால் எங்களுக்கு ஒரு திமிர் இருந்து கொண்டேயிருந்திருக்கும்.எங்கடை வயதையொத்த குஞ்சு,குருமனெல்லாம் எங்களைப் பாத்து வாயைப் பிளந்து பொறாமைப் பட்டு நிண்டு கொண்டிருக்குங்கள்.எங்களுக்கும்,எங்களுக்கெல்லாம் தங்கடை தோட்ட வெங்காய முடிச்சலுக்கு திமிராய் போன எங்களது வட்டப் பொடியளுக்கு நாங்களும் கொஞ்சமும் குறைஞ்சாக்கள் இல்லையெண்டு காட்டோணும், எண்டு காட்டவேணுமெண்டதுக்காகவேண்டி,அப்பிடியொரு திமிர் வந்து தொற்றிப் போடும்.அந்த நாளெல்லாம் இனி வராது.ம்ம்ம்..


தூக்குதல்

பிறகென்ன,வீட்டை கொண்டு வந்த வெங்காயத்தை எங்கை நிலத்திலேயே வைச்சிருக்கிறது.அப்பிடிக் கிடந்துதெண்டால்,காய் அண்டுப்பட்டு(நசிபட்டு)பழுதாப் போடும்.அதாலை வெங்காயத்துக்கெண்டு பிரத்தியேகமாப் பாவிக்கிற கொட்டிலுகளுக்கையோ அல்லது எங்களது வீட்டு அறைகளுக்குள்ளேயோ ஒவ்வொரு பிணைச்சலா நைலோன் கயித்திலை கட்டித் தூக்குறதைத் தான் தூக்குதல் எண்டு சொல்லுவம்.


வித்தல் (விற்றல்)

இப்படியொண்டைச் சொன்னால் நீங்கள் எனக்கு இப்ப அடிக்கத் தான் வருவியள் எண்டு எனக்குத் தெரியும்.என்ன நல்ல விலையாப் பாத்து விக்க வேண்டியது தான்.உதுகும் தெரியாதே..?உது கஸ்ரம் இல்லைத் தானே..கூடுதலாக வைகாசி பறுவம் தாண்ட தான் வெங்காயம் சும்மா நெருப்பு விலை விக்கும்.



(இப்ப என்ன போகுது... நாலை முக்கால், ஐஞ்சு போகுதாம்... எண்டால் இப்ப வெங்காயம் ஒரு அந்தர் 4750,5000 ரூபா வரை விக்குதாம் எண்டு அர்த்தம். என்ன நீங்களும் நட்டியள் எண்டால் நல்லா உழைக்கலாம்.மனுசிமாரட்டை ஒரு flat தா எண்டு சீதனம் தா எண்டு வாங்கிறதை விட,ஒரு 250,300 பட்டி தறை சீதனமா வாங்கினால் ஒரு பத்து வருசதுக்கிடையிலை நீங்களே 3 flat வாங்கிற அளவுக்கு உழைச்சுப்போடலாம்.


சில வட்டார சொற்கள்


பத்தியப்படாது - சாப்பாடு திருப்தியாக இல்லாவிட்டல் இப்படி சொன்னாலும் இதன் அதிக பயன் பாடு மருத்துவதுடனேயே வருகின்றது.ஒருவர் நோய்வாய்ப் பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு உண்ணக் கொடுக்கும் விசேட கவனிப்புள்ள உணவுகளை "பத்தியச் சாப்படு" என்று ஈழத்திலே அழைப்பார்கள்

போயிலை
- புகையிலை,வெற்றிலைத் தாம்பூலத்துடன் சேர்த்து சாப்பிடப்படுவது பாணி போட்டு பதமாக்கப்பட்ட புகையிலை.
சில்லறைப் பயிர்கள் - சிறு வருமானம்/கைச்செலவுக்கு வருமானம் தரும் பயிர்கள்
மிச்சும் குறைவு - மிகக் குறைவு
வரும்படி - வருமானம்
கை பக்குவப்பட்ட - செய்கின்ற தொழிலில் கை தேர்ந்த
கீழை - கீழே
கந்தோர் -அரசாங்க வேலை திணைக்களம் உருத்தி -நீக்கி
சரை - கோது என்றும் சொல்லலாம்.இங்கு வெங்காயத்தை சுற்றியிருக்கின்ற காய்ந்த தோல் என்றும் சொல்லலாம்
வெங்காயம் நோண்டுதல் - வெங்காயம் நுள்ளுதல்
புழுதி - காய்ந்த மண் என்றும் சொல்லலாம்.காற்றுக்குத் தூசியை அள்ளித் தெளித்தவாறு பறக்கும்
மடை - தண்ணிபாய விடப்படும் பாதை விடியக் காலமை -அதி காலை
வெள்ளன -முதலே/வேளையில்
நாள்க்காய் -நல்ல நாளில், சுபநேரத்தில் நாள்க்காய் நடப்பட்டுத் தான் வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்படும்.
அடித் தறை - தோட்டத்தின் ஆரம்ப எல்லை தலைப்புத் தறை - தோட்டத்தின் முடிவு எல்லை கிழமை - கிழமை என்றால் திங்கள்,செவ்வாய் என நாட்களைக் குறித்தாலும் வாரம் என்றொரு சிறப்புப் பதமும் ஈழத்தில் உண்டு.
பனஞ் சார்வோலை ஈர்க்கு - பனையின் குருத்திலிருந்து ஓலையை நீக்கி எடுக்கப்ட்ட ஈர்க்கு
அளாவி - சுற்றி என்றும் சொல்லலாம் அல்லது வளைத்து என்றும் கொள்ளலாம்
அண்டுப்பட்டு - இது அமத்துப் பட்டு என்ற பொருளில் தான் இங்கே வரும்
பறுவம் - பௌர்ணமி
மம்பெட்டி - மண்வெட்டிதான் இவ்வாறு அழைக்கப்படும்.அது "ப" அல்லது பிக்காஸ்,என்றும் "வ்" போன்ற வடிவுடைய மண்வெட்டி தோட்ட மண்வெட்டி என்றும் தண்ணி மாறப் பயன்படுகின்ற மண்வெட்டி கட்டை மண்வெட்டி என்றும் வகைப்படுத்தப்பட்டு அழைக்கப்படும்

(இன்று எனது வலைப்பூவுக்கு முதலாவது பிறந்தநாள்)
Author: வடலியூரான்
•5:37 AM
என்னத்தைத் தான் இண்டைக்கு தியேட்டரிலை பெஸ்ற் ஷோ(First Show), நெற்றிலே(இன்டெர்னெட்) பாட்டு, படம், ட்ரெயிலர் பார்க்க முடியுமெண்டாலும் அண்டைக்கு(95 களுக்கு முதல்)ஒரு வசதிகளுமில்லாமல் இருக்கேக்கை பார்த்த படங்கள் மாதிரியோ, அல்லது அதிலிருந்த சந்தோசம் மாதிரியோ வராது கண்டியளோ.அது தான் அந்த நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.



ஊரிலை ஒரு கலியாண வீடு,சாமத்திய வீடு முடிஞ்சால் ஊர் முழுக்க அந்தக் கலியாண வீடோ,சாமத்திய வீடோ நடந்த வீட்டுக்காரரிட்டை, "என்ன கொப்பி வந்திட்டுதோ? எப்ப வரும்? வந்தா எங்களுக்குஞ் சொல்லுங்கோ" எண்டு நச்சரிச்சு நச்சரிச்சே தொலைச்சுப் போடுங்கள்.அதுகளும் படத்துக்கு சொல்லாட்டிலும் ஏதாவது குறைவருமோ எண்டிட்டு ஊர் முழுக்க காட்(Card) குடுக்காத குறையாப் படத்துக்குச் சொல்லுவினம்.




இண்டைக்கு இரவு படமெண்டால் எல்லா வீடுகளிலும் 5,6 மணிக்கே கோதம்ப மாப் புட்டை(கோதுமை மா) அவிச்சது பாதி,அவிக்காதது மீதியெண்டு அவிச்சுக் கொட்டிப் போட்டு பெண்டுகளும் அவையளோடை பிள்ளையளும் எல்லாரும் நடையைக் கட்டிப்போடுவினம்.ஆம்பிளையளும் அவையளுக்குப் பிறகாலை ஒரு பெட் ஷீற்றை(Bed Sheet)மடிச்சு கமக்கட்டுக்கை வைச்சுக் கொண்டு படையெடுப்பினம்.பேந்தேன் பேசுவான்,படம் போடுற வீடு கலியாண வீடு மாதிரித் தான் மாறிப் போடும்.


சரியெண்டு படம் பார்க்கப் போனால் அண்டைக்கு திருவிழாத் தான். அப்பவெல்லாம் "எஞ்சின்" இலையிருந்து தான் "கறண்ட்" வரும்.எஞ்சினெண்டால் நீங்கள் இப்ப பார்க்கிற ஜப்பானிலையிருந்து வாற "ஜெனறேற்றர்" எண்டெல்லாம் நினைக்காதையுங்கோ."வோட்டர்ப் பம்பையும்" மோட்டரையும் வைச்சு எங்கன்றை ஆக்கள் கண்டு பிடிச்சது.(கஷ்ரங்கள் எங்களைச் சூழ்ந்த போது தான் எங்கன்ரையாக்கள் எத்தினையைக் கண்டு பிடிச்சாங்கள்.வால் கட்டையில அடிக்கிற வெடியிலையிருந்து வானத்திலை பறக்கிற பிளேன் வரைக்கும்)



வோட்டர்ப் பம்மின்றை புட்வால்வ் (நீரை கீழிருந்து எடுத்து மேலே தள்ளும் பின்பக்கத்திலுள்ள குழாய்)கலட்டிப் போட்டு அதையும் மோட்டரையும் பலகையிலை வைச்சுத் தறைஞ்சு தான் "மேட் இன் -- "ஜெனரேற்றைச் செய்ஞ்சிருப்பாங்கள் எங்கடையாக்கள்.முதல்லை வோட்டர்ப் பம்மின்றை காபரேற்றருக்கை கொஞ்சம்,கொஞ்சமாப் ரின்னரைப் பனுக்கி பனுக்கி அதை ஸ்டார்ட்(Start)பண்ண வைக்கிறதுக்குள்ளை அதை இழுத்து இழுத்து இழுக்க்கிறவனுக்கு மூச்சுப் போடும்.அது ஸ்டார்ட் எடுத்தாப் போலை கொஞ்ச நேரம் சோக்கிலை(chock) ஓடி, ஒரு கட்டத்துக்குப் பிறகு தான் அந்த Bar(பட்டி)ஐ மோட்டரிலை கொழுவுவாங்கள்.கேட்டால் இல்லையெண்டால் இஞ்சினுக்கு லோட்(Load) கூடி இஞ்சின் ஸ்டார்ட் எடுக்க மாட்டாதாம் எண்டு விளக்கம் வேறை குடுப்பாங்கள்.சரியெண்டு ஒருமாதிரி இஞ்சின் ஸ்டார்ட் பண்ணினாப் பிறகு T.V யிலை படம் வாறது தான் பெரிய கதை





எங்கன்ரை ஊரிலை செல்லக்கண்டண்ணை தான் ரீ.வி, டெக் வைச்சு வாடகைக்கு விடுறவர்.ஆள் ரீ.வி, டெக்கை ஓட்டத்துக்கு கொண்டு வந்தால் எங்களை மாதிரி சின்னப் பெடியளையெல்லாம் தொட விட மாட்டார்.நாலைஞ்சு வருசமாக அதைத் தங்கக்கட்டி மாதிரித் தான் வைச்சுப் பாவிச்சுக் கொண்டு வந்தார்.ரீ.வி டெக் வந்த அந்த பெட்டியைத் திறந்து, றெஜிபோமைக் கலட்டி,பொலித்தீன் பாக்குக்குள்ளாலை(Bag)அதை எடுத்து ஒரு ரீப்பொயிலை டெக்கையும் ஒரு மேசையிலை ரீ.வி யையும் வைச்சு அதுக்கு மேலை ஒரு ஒறேஞ் கலரிலை நல்ல ஒரு துணியையும் விரிக்கிறதுக்கிடையிலை "அரக்கடா..இதைக் கவனமாப் பிடி..,ஆ.ஆ ....மெள்ள .. ஆ மெள்ள ஆ.. பாத்து..." எண்டு இஞ்சத்தை எப்.எம் ரேடியோக் காரர் கணக்கா செய்யிறது கால்வாசி,சொல்லுறது முக்கால் வாசி எண்டது கணக்கா மனிசன் ஒரு ரணகளப் படுத்திப் போடும்.ஆனாலும் அந்தக் நாங்கள் காலத்திலை ஆளைப் பார்த்து வாயைப் பிளந்து தான் இருக்கிறம்.



செல்லக்கண்டண்ணையின்டை 21 இஞ்சி சொனி(Sony) ரீ.வியின் வலப் பக்க மேல் மூலையில 8 பட்டன் மாதிரி இருக்குது.அதுக்குக் கீழே ஒரு சின்னப் பெட்டிமாதிரி இருக்குது.அதுக்குள்ளை கொஞ்சக் கட்டைகள் கிடக்குது.

ஆள் வந்து, முதலாவது பட்டினை அமத்திப் போட்டு,அதுக்குக் கீழையிருக்கிற சின்னப் பெட்டியின்றை சின்னக் கதவை திறந்து,அதுக்குள்ளை இருக்கிற கட்டையளை ஒவ்வொன்றாச் சுத்தத் தொடங்குவார்.பிறகு கொஞ்சத்தாலை அடுத்த பட்ட்ன் எண்டு ஒரு மாதிரிச் சுத்திக் கொண்டு போகேக்கை திடீரெண்டு கறுப்பும்வெள்ளையும் புள்ளிகள் வந்திடும்.உடனை நாங்களெல்லாம் "ஆ.. படம் வரப் போகுது ..ஐ.." எண்டு ஒரே "கெக்கக்கை பிக்கை" எண்டு கைதட்டிக் கூ அடிச்சுச் சிரிப்பம்.திடீரெண்டு அதுவும் போடும்."பங்கை பார் நீங்கள் கத்தினபடியால தான் ரீவி பிழைப் பட்டுப் போச்சுது.சத்தம் போடாமல் இருங்கோ பார்ப்பம்" எண்டு யாராவது பெரிசுகள் பின்னுக்கு இருந்துகொண்டு அதட்டுங்கள். நாங்களும் அதுகளை எதோ உண்மையெண்டு நம்பி "கப் சிப்" எண்டு சைலென்றாயிடுவம்.செல்லக்கண்டண்ணைக்கும் கோபம் வந்திடும்.



செல்லக்கண்டண்ணையும் கோபத்தோடை ரீவிக்கு ரெஸ்ராலை குத்தி குத்தி,முறுக்க,திடீரெண்டு பாத்தால் எல்லாம் கறுப்பாக் கிடக்கும்.நடுவிலை மட்டும் மேலையிருந்து கீழை இரண்டு வெள்ளைக் கோடு மாதிரிப் போகும்.பேந்தென்ன எங்களுக்குத் துள்ளிக்குதிப்புத் தான்.அதுகும் கொஞ்சத்தாலை போடும்."உங்களுக்கு அப்பவும் படிச்சுப் படிச்சுச் சொன்னான்...பாத்தியளே இப்பவும் போட்டுது.. சத்தம் போடாமல் இருங்கோ பாப்பம்.." எண்டு அதட்டல் பிறகும் வரும்.செல்லக்கண்டண்ணையும் முறுக்கிக் கொண்டே போகும்.திடீரெண்டு பாத்தால் வானவில் மாதிரி கலர் கலரா கோடுகள் மேலையிருந் கீழை வாறமாதிரி இருக்கும்.அப்ப இனிப் படந்தொடங்கப் போகுது எண்டு நாங்கள் எங்கடை எக்ஸ்பீரியன்சிலை சொல்லிப் போடுவம்.



நாங்கள் சொன்ன மாதிரித் தான் திடீரெண்டு பாத்தால் மாப்பிளைக்கு அறுகம்புல்லு வைக்கிற சீன் போய்க் கொண்டிருக்கும்.எல்லாரும் உடனை முதல்லையிருந்து விடுங்கோவன் எண்டு செல்லக்கண்டண்ணையைக் கெஞ்ச "ஏன் இதிலையிருந்து பாருங்கோவன்" எண்டு செல்லக்கண்டண்ணையும் பெண்டுகளுக்குப் பஸ் அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொண்டு ரிவைண்ட்(Rewind) பண்ண,ஆக்களெல்லாம் படத்திலை பின்னுக்கு ஓடிப் போய்க் கொண்டிருப்பினம். பேந்தென்ன நாங்கள் எங்கடை "கெக்கக்கை பிக்கையைத்"7 தொடங்கிடுவம்.





உந்தத் திருவிழாவுகள் எல்லாம் முடிஞ்சு ஒரு மாதிரி நிறைகுட செற்றோடை இருக்கிற ஒரு பெரிய கப்பல் வாழைப் பழச் சீப்புக்குப் பக்கத்திலை குத்துவிளக்கைப் பாக்காமல் வீடியோவைப் பாத்துக் கொண்டு குத்துவிளக்குக் கொளுத்திற மாப்பிளையின்டை தாய் தேப்பனோடை படம் தொடங்கும்.பின்னாலை Background இலை "பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதைத் தொடங்கிவிடு.." எண்டு பாட்டும் பரலலா(Parallel) போய்க்கொண்டிருக்கும்.

பிறகு மாப்பிளைக்கு அறுகம் பால் வைக்கிறது,அவர் குளிக்கிறது,அவர் வெளிக்கிட்டாப் போலை,பொம்பிளை வெளிக்கிட்டாப்போலை,மணவறை, பந்தி,கால் மாறிப் போறது,ரெஜிஸ்ரேசன் எண்டு ஒவ்வொரு லொக்கேசனுகள், அதுக்கு டெக்கரேசனுகள்,மேக்கப்புகள் எண்டு எல்லாம் மாறும்,பின்னாலை போற பாட்டுகளும்,"மாசி மாசந் தான் கெட்டி மேளதாளந்தான் ..","செம்மீனே செம்மீனே .ஒங்கிட்டை சொன்னேனே..","ஆடியில சேதி சொல்லி ஆவணில சேதிவச்ச மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு தான்..","ராசி தான் கை ராசி தான்...ஒம் மொகமே ராசி தான்..","ஆனந்தம் ஆனந்தம் பாடும்.." எண்டு மாறிக் கொண்டே போகும்.பொம்பிளை தோழியோடை மணவறைக்கு வரேக்கை, "மணமகளே மணமகளே வா .. உன் வலது காலை எடுத்து வைத்து வா " எண்டோ " வாராயோ தோழி.. வாராயோ.. மணப் பந்தல் காண வாறாயோ" எண்டு ள்.ற்.ஈஸ்வரி பாடின பாட்டையோ போட மறக்க மாட்டங்கள்.



தாலி கட்டுக்கள்,சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு மாப்பிளை, பொம்பிளையள் கலியாண உடுப்பு மாத்தின பிறகு வாற சீனுகளுக்கு ஏன் " சின்ன ராசாவே சிட்டெறும்பு என்னைக் கடிக்குது அடிக்கடி ராத்திரி துடிக்குது .." எண்டு போடுறவங்கள் எண்டு 2,3 வருசம் கழிஞ்சாப் போலை தானே எங்களெக்கெல்லாம் விளங்கிச்சுது.அதை எல்லாம் இதிலை எழுதேலாது தானே.எண்டபடியால் அதை விடுவம்.



எல்லாரும் கலியாணவீட்டுப் படத்திலை தாங்கள் எப்ப வருவம் எண்டு வாயைப் பிளந்து பாத்துக் கொண்டிருப்பினம்.வந்தால் காணும் பேந்தேன் பேசுவான் "பங்கை பாரன் நான் நிக்கிறன்.." எண்டு சங்கக் கடையிலை மா வாங்கிறதுக்கு நிக்கிற கியூவிலை(Queue)ஏதோ முதல் இடம் பிடிச்சது கணக்கா துள்ளிக் குதிப்பினம்.



படம் பாக்கப் போனால் அண்டைக்கு விசுக்கோத்துக்கள், வடையள், வாழைப்பழங்கள், தேத்தண்ணி எண்டு வயித்துப் பாட்டுக்கும் நல்ல கவனிப்பாத் தான் இருக்கும்.பேந்தென்ன கையை வைச்சால் அம்பிடிற எல்லாத்தையும் அள்ளி ஒரு முழக்கு ஒண்டு முழக்கித் தள்ளவேண்டியதுதானே.


ஒரு மாதிரி கலியாணவீட்டுப் படம் முடிஞ்சால் அடுத்த சோ(Show) தொடங்கும்.வசந்த மாளிகை, கௌரவம், பூவேலி, மின்சாரம் அது சம்சாரம், ஓர் ஊரில ஒரு ராஜகுமாரி,முந்தானை முடிச்சு, பாட்ஷா, அண்ணாமலை,காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், அவள் வருவாளா,ஆசை,மேட்டுக்குடி,சூரிய வம்சம், புன்னகை மன்னன், மூன்றாம் பிறை,பதினாறு வயதினிலே,சலங்கை ஒலி,தர்மா,உளவுத்துறை எண்டு இடையில ஒரு காலகட்டத்திலை வந்த படங்கள் எல்லாம் எங்கடை ஊரிலை சக்கை ஓட்டம் ஒடித் தள்ளிச்சுது.எனக்குத் தெரிஞ்சு நான் வசந்தமாளிகை படத்தை மட்டும் அஞ்சு தரம் பாத்தனான் எண்டால் பின்னைப் பாருங்கோவன்.கலியாண வீட்டுக் கொப்பிக்குப் பிறகு2,3 சினிமாப் படங்களும் போட்டு முடிக்க விடிஞ்சு போகும்.விடிய எங்களை மாதிரி கொஞ்சம் ரீவிக்கு முன்னாலையே அனாதைப் பிணங்களை மாதிரிப் படுத்துக் கிடக்குங்கள்.



இப்பிடியெல்லாம் கஸ்ரப்பட்டுப் படம் பாத்ததெல்லாம் அந்தக் காலம்.ஆனால் இண்டைக்கு எங்கடை ஊரிலை கூடுதலாக எல்லா வீடுகளிலும் பெரிய 21 இஞ்சி fலற் ஸ்க்றீன்(Flat Screen)ரீவீயள் கிடக்குது.டெக்குகள்,சிடிக்கள்(CD),டிவிடி பிளேயருகள்(DVD),படக் கொப்பிகள் எல்லாம் இருக்குது.ஆனால் பாக்கிறதுக்கு ஆக்களும் இல்லை.இருக்கிற ஆக்களுக்கு நேரமும் இல்லை.அவர்களுக்கும் பாக்கிற மனநிலையும் இல்லை.அங்கையொண்டு இஞ்சையொண்டு எண்டு எங்கன்ரை இனம் எல்லா இடமும் சிதறி, சந்தோசத்தைத் தொலைச்சுக் கிடக்குது.என்ன தான் கஸ்ரப்பட்டாலும் அந்தக் கால வாழ்க்கையே எவ்வளவோ பரவாயில்லை எண்டதோடை நிம்மதியானதும் சந்தோசமானதும் எண்டு என்ரை மனஞ் சொல்லுது.நீங்கள் என்ன சொல்லுறியள்.


கொப்பி - காணொளி பிரதி - வீடியோ

பேந்தேன் பேசுவான் - பிறகேன் பேசுவான்

தறஞ்சு -அறைதல்

ரின்னர் - பெற்றோல் போன்ற எரி பற்றுக் கூடிய எரிபொருள்

அரக்கடா - விலத்து

மெள்ள - மெல்ல

இஞ்சத்தை - இந்த தேசத்தின்

பங்கை பார் -அங்கை பார்

கப் சிப் அமைதியாயிருத்தல்

கால் மாறிப் போதல் - மாப்பிளை வீட்டுக்கு பொம்பிளை செல்லல்

சங்கக் கடை - நிவாரணம் குடுக்கப்படும் கடை(றடிஒன் ஷொப்)