குல்லம் கொண்டுவா என்டுதான் சொல்லுவினம் சுளகு கொண்டுவா என்டு சொல்றேல்ல...
ஓமோம் வயலுக்க நிண்டால் அப்பிடிச் சொல்லமாட்டினம். எங்கட ஐயாவும் அப்பிடித்தான். அதமாதிரி நெல்லு அளக்கேக்கயும் முதலாவது கொத்தை ஒன்டு என்டு சொல்றேல்ல..லாபம் என்டுதான் சொல்லுவினம்.

நான் இன்டைக்கு வேலையால வாறன் அப்பம்மா சிரிச்சு சிரிச்சு கதைச்சுக்கேக்குது...ஆரெண்டு பார்த்தால் என்ர ரீச்சர். அவா என்னட்ட வந்திருக்கிறா அவவை இருத்திவைச்சு நடக்குது அப்பம்மான்ர கச்சேரி.
ரீச்சர் உள்ளுக்க வந்து இருந்த உடனே முதல் கேள்வி கேட்டாவாம் "அப்ப பிள்ளை நீங்கள் எந்த ஊர்?"
ரீச்சர் குமிழமுனை என்டு சொல்லி வாய்மூடேல்ல கேட்டாவாம் நீங்கள் தங்கண்ணைன்ர மகளே என்டு...ரீச்சர் நல்லாப் பயந்திருப்பா இதென்னடா வந்த இடத்தில வம்பாப்போட்டென்டு.
அப்பம்மாக்கு 80 வயசாகப்போகுது ரீச்சருக்கு 50 வயசாகப்போகுது. நான் வீட்டுக்குள்ள வாறன் ஏதோ ஏதோ கதையெல்லாம் நடக்குது. ஏதோ குல்லம் புசல் கொம்பறை கொத்து மரக்கால் பச்சைக்குிறியன் அணில்குிறியன் என்றெல்லாம் புரியாத பாசைல நடக்குது கதை. சத்தியமா அவை கதைச்சதொண்டும் எனக்கு விளங்கேல்ல.
இடையில புகுந்து விளக்கம் கேக்கலாமெண்டால் இரண்டுபேரும் நிப்பாட்டுற மாதிரித் தெரியேல்ல. அப்பம்மா கேக்கிறா உங்கட வீட்டுக்கு நிலையம் பாத்து தந்தது எங்கட அவர்தானே.
சரி இதுக்குமேல பொறுக்கேலாது...நான் கேட்டிட்டன்.
நான்: நிலையம் பார்க்கிறதோ?? அப்பிடியென்டால் என்ன?
அப்பம்மா : தாத்தாதான் இவேன்ர வீட்டுக்கு கிணத்துக்கு எல்லாம் நிலையம் பார்த்துக்குடுத்தது. எந்த இடத்தில கிணறு தோண்டலாம்...வீட்டுக்கு வாசல் எங்க வைக்கலாம் இதுகள் எல்லாம் பார்த்துச் சொல்றது.
நான்: என்னத்த பார்த்துச் சொன்னவர்?
அப்பம்மா: இதுக்கு என்னத்த சொல்றது நான்? அவர் அதுகள் எல்லாம் படிச்சுத் தேர்ந்தவர்.
வைத்தியம் பார்க்கிறது...தொய்வு பார்க்கிறது என்டு அவர் எல்லாம்
தெரிஞ்சவர். குமிழம்முனையில தாத்தான்ர படம் இல்லாத வீடில்லை.
நான்: கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ கொம்பறை கொறியன் என்டெல்லாம் சொன்னீங்கள்..அதெல்லாம் என்ன?
ரீச்சர் : வெப்பில் கொடி வெட்டிக்கொண்டு வந்து குடில் மாதிரிச் சுத்திக்கட்டிப்போட்டு மேல பச்சைமண் பூசி மெழுகுறது. அந்து பிடிக்காமல் இருக்க வேப்பக்கொட்டை கொண்டு வந்து போடுறது சுத்தவர. கொம்பறைக்குள்ள மூட்டைக்கணக்கில நெல்லைக்கொண்டுவந்து கொட்டி வைச்சால் அடுத்த வருசம் வரைக்கும் இருக்கும். சோத்துக்கும் எடுக்கிறது விதைக்கவும் எடுக்கிறது.
நான் : என்ன ரீச்சர் நீங்களும் அப்பம்மா மாதிரிக் கதைக்கிறீங்கள்...அந்து என்டால் என்ன.
ரீச்சர் : அப்பம்மாவைக் கண்டது ஊருக்குப்போனது போல இருக்கு. ஊர்ப்பக்கம் போய் 20 வருசமாகப்போது. மறந்துபோன சொல்லெல்லாத்தையும் ஞாபகப்படுத்திட்டா. பச்சைக்குறியன் எல்லாம் சுத்தமா மறந்திட்டம். இந்தச்சொல்லெல்லாம் நடுகிலும் பாவிச்சனாங்கள்.
நான் : ஹி ஹி...அந்து..
ரீச்சர் : அந்து பிடிக்காமல் என்டால் பூச்சி பிடிக்காமல்
நான் : அப்ப பச்சைக்குறியன் எண்டால்...

அப்பம்மா : நாலு சுண்டு நெல்லு = ஒரு கொத்து.
பத்து கொத்து = ஒரு மரக்கால்
28 கொத்து = ஒரு புசல்
பச்சைக்குறியான் என்றது பச்சைக்குறி போட்ட சாக்கு ; அதுக்குள்ள 3 புசல் போடலாம். போட்டு சணல் போட்டுத் தைக்கிறது.
அணில்குறியன் சாக்கில 78 கொத்துப் போடலாம்.
நான் : ஓ அப்ப உங்கட வயல்ல எத்தின கொத்து நெல்லு வரும்?
அப்பம்மா : என்ன எங்கட 2 வயல்லயும் சேர்த்தா 200-250 மூடைக்கு வரும்.
நான் : ஆஆஆஆஆ..அவ்வளவு நெல்லா? அப்ப நீங்கள் உங்களுக்கு கஸ்டம் அப்பா எல்லாம் சந்தைக்கு கச்சான் கொண்டுபோய் விக்கிறவர் என்றெல்லாம் சொன்னீங்கள்.
அப்பம்மா: பின்ன குடிமக்களுக்கு குடுக்க சாமான்கள் வேண்ட எண்டு குடுக்கிறது போக ...
ரீச்சர் : குடிமக்கள் என்றால் விளங்காது.
அப்பம்மா : அதான் மோனை தலைமயிர் வெட்ட வந்தால் எங்கட வீட்டில மட்டும் 10 பேர் அப்ப 2 மூடை நெல்லு குடுப்பம்.
நான் : 2 மூடை??? ஏன் அவ்வளவு.
அப்பம்மா : ஒரு வரியத்துக்கு 2 மூடை குடுக்கத்தானே வேணும்.
நான் : ஏதோ குல்லம் கொண்டுவாறதெண்டு சொன்னீங்கள்?? ஏன் வயலுக்க நிண்டு சுளகு என்டு சொல்லக்கூடாது? சொன்னால் என்ன நடக்கும்?
அப்பம்மா: அப்பிடிச் சொல்றேல்ல. சொன்னால் கூடாதாம். குல்லம் என்டுதான் சொல்றது.
நான்: அதான் ஏனென்டு கேக்கிறன்..சொன்னால் என்ன நடக்கும்.
அப்பம்மா: சொன்னால் விளைச்சலுக்குக் கூடாதாம்.
நான்: குல்லம் என்று சொல்றதுக்கும் சுளகு என்றதுக்கும் என்ன வித்தியாம்...2ம் சொல்லுத்தானே.
(பதில் வரேல்ல).
நான்: ம் அப்ப இப்ப எவ்வளவு காணியிருக்கு உங்களுக்கு??? இப்ப எங்க இருக்கு....
அப்பம்மா: ஒன்டுமில்லாமல் போச்சு.
மிச்ச கதை கேக்க ஆறுதலா வாறன் என்டிட்டு போட்டா ரீச்சர்.
வேலைகாரன் கம்பின்ர தலை கொக்கின்ர தலை போல இருக்குமாம். அதால வைக்கோலை தட்டிக்கொண்டு போறதாம். மிச்சமொன்டும் ஞாபகம் வரேல்ல...அடுத்த முறை அப்பம்மா கதைக்கேக்க றக்கோர்ட் பண்ணி வைக்கிறன்.
{ஈழமுற்றத்தில இது சினேகிதின்ர குதியம் குத்தல் வாரம் :) கவலைப்படாதயுங்கோ கொஞ்ச நாளைக்கு நான் எழுத மாட்டன்.}