Author: மாயா
•11:41 AM
80களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் பல கலைஞர்கள் எம் மண்ணை வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் எனும் போது என்றும் மறக்கமுடியாதவர்கள் டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன் ஆகியோராவார்.

 ஈழத்தின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், இலங்கையில் தயாரான வாடைக்காற்று திரைப்படம் , அதன்பின்  ஒலி நாடாவினாலும், மக்களைச் சென்றடைந்து சிரிக்க வைத்தார்கள்;. ஆயினும் இக்கலைஞர்களின் கலைவடிவங்கள் காலவோட்டத்தில் இல்லாது போனது. எனினும் ஆங்காங்கே கிடைத்தவற்றைக்கொண்டு ஒரு முழு ஒலித்தொகுப்பாக உங்கள் முன் பகிர்கிறேன்.

 
நன்றிகளுடன்
மாயா

உசாத்துணை
Author: Admin
•4:28 AM
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னாகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது.

இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர்.

இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

சந்ரு