Author: Pragash
•9:31 AM
இடுப்பில் இருந்து நழுவிக்கொண்டு இருக்கும், பொத்தான் அறுந்த அரைக்கால் சட்டையை இறுக இழுத்து பிடித்துக்கொண்டு, அரிவி வெட்டுக்கு ஆயத்தமாய், மஞ்சள் நிற நெல்மணிகளின் பாரம் தாங்காமல் கதிர் தலைசாய்த்து படுத்திருந்த வயல் வரப்புகளின் வேகமாய் ஓடிக் கொண்டிருக்க, சுருக் .காலில் ஏதோ குத்த வேகம் தடைப்பட்டது. ஆ வென லேசாக முனகிக் கொண்டு ஒற்றை காலில் கெந்தியபடி, பாதத்தை தூக்கி பார்த்தால். அதில் எதுவும் இல்லை. அப்படி எண்டால் குத்தினது நெருஞ்சி தான். வரப்பில் இருந்த நெருஞ்சி செடியை பார்த்ததும் முள்ளு குத்தின வலி மறந்து போக, மெல்ல குனிந்து அதன் சின்னஞ்சிறு இலைகளை மெதுவாக விரல்களால் வருட, இலைகள் மெதுவாக ஒடுங்கி சுருங்கும் வடிவை பார்த்தபடி மனம் அதில் லயித்தது.
என்ன ராசா தொட்டா சிணுங்கி காலில குத்திப்போட்டுதோ? தொட்டாசிணுங்கி மேலிருந்த கவனம் கலைய நிமிர்ந்து பார்த்தேன்.கசங்கிய நைந்த நூல்புடவையும் தலையில் இறுக கட்டிய முண்டாசுத்துணி, கையில் அரிவிச்சத்தகத்துடன் ஒரு மூதாட்டி புன்முறுவலுடன் கேட்டபடி வரப்புகளில் போய்க்கொண்டிருந்தார். பின்னால் ஆண்களும் பெண்களுமாக நாலைந்து பேர் கையில் சத்தகங்களுடன் வரிசையாக போய்க்கொண்டிருந்தனர். எங்கேயோ அரிவி வெட்டுக்கு போய்க்கொண்டிருக்கினம் போல. ஏற்கெனவே ஆங்காங்கு வெட்டு நடந்துகொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. சிலவயல்களில் வெட்டு முடிந்து நெல் போர் (சில இடங்களில் சூட்டுப்போர் என சொல்கிறார்கள்) குவித்து வைத்திருந்தார்கள். மாரிமழையில் வெள்ளம ததும்பி, தளம்பி நின்ற பச்சைப்பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியான வயல்வெளிகள் மாறி, வெள்ளம் வற்றி மஞ்சள் கதிர் காற்றிலாடிய காட்சிகளை காண இனி அடுத்த வருடம் வரைக்கும் காத்திருக்க வேணும்.பெரும்பாலும் யாழ்ப்பாணத்துக்காணிகளில் மாசி நடுப்பகுதியில் அரிவி வெட்டு துவங்கி விடும். 

ஈழத்து விவசாயப்பிரதேசங்களில் நெற்செய்கை இரண்டு போகங்களில் செய்யப்படுவதுண்டு. ஒன்று பெரும்போகம், பருவமழையை அண்டியகாலங்களில் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்துகாணிகளில் பெரும்பாலானவை பெரும்போக காணிகள். மற்றது சிறு போகம், ஆறு குளங்களை அண்டிய பிரதேசங்களில் செய்யப்படுவது. வன்னி பிரதேசங்களில் இரண்டு போகமும் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில ஆறு குளம் ஏதும் இருக்கோ? நான் அறிஞ்ச வரைக்கும் வழுக்கையாறு ஒன்று தான் யாழ்ப்பாணத்தில இருக்குது என நினைக்கிறேன். ( வீட்டுக்கிணத்தில வளர்க்கிறதுக்கு, வழுக்கையாத்தில போய் கெளுத்தி மீன் பிடிச்சுக்கொண்டு வந்து வீட்டு கிணத்தில விட்ட அனுபவம் ஒன்றிருக்கு.). இப்ப பெரும்போக அறுவடை தான் நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில அரிவி வெட்டிக்கொண்டிருந்த ஒரு வயல் பக்கமாய் போய் வரப்பில் அமர்ந்து கொண்டேன். வெட்டுபவர்கள் குனிந்த நிலையிலேயே வெட்டும் லாவகமும், ஒரு கை கதிர்களை அடியோடு சேர்த்து கொத்தாக பிடிக்க மறுகையில் இருந்த அரிவி சத்தகம் சரக் சரக் எனும் சத்தத்தோடு கதிர்களை அறுக்கும் வேகமும் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். 

என்னடா தம்பி பார்க்கிறாய்? நீயும் வெட்டிப்பாக்கிறியா? வயலில் வெட்டிக்கொண்டிருந்த பெரியவர் அழைக்கவும், நானும் வலு சந்தோசமா ஓடிப்போய் அவரின் கையில் இருந்த சத்தகத்தை வாங்கிக்கொண்டேன். பார்த்து வெட்டு கையை கிய்யை அறுத்துப்போடாதை சொல்லிக்கொண்டே சத்தகத்தை தந்தார். பார்க்கும்போது இலகுவாய் ப்பூ இவ்வளவுதானா என தெரியும் அவ்வேலை எவ்வளவு கடினமானது என சத்தகத்தை கையில் வாங்கிய சிலநிமிடங்களில் விளங்கியது. ஓரடி வெட்டுவதற்குள் முதுகு விண் விண்ணென்று வலித்தது. இவர்கள் வயல் வேலையிலேயே தொடர்ந்து ஈடுபடுவதால் இவர்களுக்கு இது பழக்கமாகி விட்டிருக்கும். நானும் மெல்ல முதுகை நிமிர்த்தவும் பெரியவர் சிரித்தார். சத்தகத்தை அவர் கையில் கொடுத்து விட்டு மெல்ல நழுவினேன். உச்சிவேளை நெருங்கும் சமயத்தில் கிட்டத்தட்ட அரைவாசி வயலுக்கு மேல் வெட்டி முடித்திருந்தார்கள். வெட்டிய நெல்கதிர் கற்றைகள் அழகாக அடுக்கி வைத்திருந்தனர். இனி மத்தியான சாப்பாட்டிற்கு பிறகு போரடிப்பு நடக்கும் இதுமுதல்அடிப்பு.ஆண்கள் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். 

வயலின் ஒரு மூலையில் பெரிய சாக்குப்படங்கு ஒன்று விரிக்கப்பட்டிருக்க, அதன் மேல் ஒருவர் கயிற்று துண்டொன்றுடன் ஆயத்தமாக நின்றிருந்தார். பெண்கள் ஆங்காங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த கதிர்களை (நெற்போர்) பெரிய கத்தையாக ஒன்று சேர்த்து தலையில் சுமந்து கொண்டு வந்து படங்கின் மேல் நின்று கொண்டிருந்தவரிடம் கொடுக்க, அவர் அதை கையில் வைத்திருந்த கயிற்றால் ஒரு சுற்று பிடித்து வாங்கி படங்கின் மீது ஓங்கி நாலைந்து தரம் அடித்தபின் அந்த கத்தையை படங்கிற்கு வெளியில் ஆயத்தமாக நிற்கும் இருவரிடமும் எறிய, அவர்கள் லாவகமாக பிடித்து வைக்கோல் போர் அடுக்குவது போல் வட்டமாக கூம்பு வடிவில் அடுக்கி (சூடுவைப்பு) கொண்டிருந்தனர். அதில் இன்னும் கதிர்கள் உதிராமல் இருந்தன. படங்கில் நிற்பவர் கதிர்கத்தையை அடித்த இடத்தில் நெல்மணிகள் குவிந்து கொண்டிருந்தன. 

வேலை சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் நடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக மாலை நான்கு மணியளவில் கதிரடிப்பு நிறைவு பெற்றதும், இன்னொருவர் கொண்டுவந்திருந்த சுளகில் நெல்லை அள்ளி தலைக்கு மேல் தூக்கி பிடித்து காற்று வீசும் திசையில் சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டிருந்தார். அதற்கு பெயர் நெல் தூற்றுதல். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" எண்டொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பியள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதே காரியத்தை முடித்துக்கொள் என பொருள் வரும்படியான பழமொழி அது. அந்த பழமொழிக்கு அடிப்படையாக இருக்கும் ஒரு செயல் இது தான். கொட்டும்போது நெல்மணிகள் நேராக கீழே விழ அதில் இருந்த வைக்கோல் தூசிகள் அகன்று வீசும் காற்றின் திசையில் பறந்து போய்க்கொண்டிருந்தன. 


எல்லாம் முடிந்தாயிற்று. வயல் சொந்தக்காரர் தயாராக கொண்டு வந்திருந்த சாக்குப்பைகளில் குவிந்திருந்த நெல்லை போட்டு கட்டி, மாட்டுவண்டியில் ஏற்றிவிட மாடுகள் மெல்ல வீடு நோக்கி நகரவாரம்பித்தன. காலையில் கதிர்கள் தலைசாய்த்து படுத்திருந்த வயலில் இப்போது பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் பிளாஸ்டிக் படங்கால் மூடிக்கட்டப்பட்ட சூட்டுப்போர் ஒன்று தலை நிமிர்ந்து நின்றிருந்தது. அறுவடையான வயலில் இப்போது வெண்கொக்குகளும், புறாக்களும் காகங்களும் மேய்ந்து கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்து காணிகள் எல்லாம் பரப்புக்கணக்கில் தான் அளவிடப்படுகின்றன. வேறு அளவீடுகள் ஏதும் இருந்தால் சொல்லுங்கோ. ஏக்கர் கணக்கு காணிகளை பாக்கிறதென்டால் வன்னிக்கு தான் போகவேணும். 


அரிவி வெட்டு = அறுவடை, அரிவிச்சத்தகம்= அறுவடைக்கு பாவிக்கிற அரிவாள் இது இடத்துக்கிடம் பெயர் மாறுபடலாம். வேறு பெயர்கள் தெரிந்தால் சொல்லுங்கோ. படங்கு= இது சாக்குகளை இணைத்து செய்வது. சிலபேர் போரடிப்புக்கு என பிரத்தியேகமாய் செய்த பாய் பாவிப்பினம். அதை கதிர்ப்பாய் என்று சொல்லுவினம். போரடிப்பு= வெட்டினவுடன் வயலிலேயே கதிர்களை அடித்து நெல்லை சேகரிப்பது. ஆனாலும் எல்லா நெல்லும் இதில் உதிர்ந்து விழாது. அடுக்கி சூடு வச்சு நன்றாக காய்ந்த பின்னர் ஓரிரு மாதத்திற்கு பிறகு மாடுகளை வைத்து மிதித்து நெல்மணிகளை உதிரவைப்பது சூடடிப்பு. இதை பற்றி பிறகு நான் எழுதுகிறேன். ஈழத்தில் பெரும்பாலும் ஆங்கில நாள்காட்டி முறை பயன்படுத்தினாலும் விவசாய செய்கைகளுக்கு தமிழ் நாள்காட்டி முறையே பயன்படுத்தபடுவது வழக்கம்.          

Author: Pragash
•5:54 AM
என்ன மூர்த்தியர் இண்டைக்கு வேலியடைப்போ? ஒழுங்கையால போன சுந்தரம் மாமா கேட்டுக் கொண்டே சைக்கிளை விட்டிறங்கி அருகில் வந்தார். ஒமண்ணை நல்ல நேரத்தில தான் நீங்களும் வந்திருக்கிறியள். வந்து ஒருகை குடுங்கோவன், அதுக்கென்னப்பா நானும் வாறன். இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே நானும் வீட்டில சும்மா தான் இருந்தனான். சொல்லிக் கொண்டே சுந்தரம் மாமாவும் அப்பாவும் நானும் கதியால் வேலியில கிடந்த பழைய உக்கிப் போன கிடுகுகளை அறுத்து கொட்டி சுத்தப்படுத்திய பின்னர் வீட்டுக்கு பின்பக்க தாழ்வாரத்தில் அடுக்கி இருந்த கிடுகுகளை எடுத்து கொண்டு வந்து வேலி நீளத்துக்கும் அடுக்கி கொண்டிருக்கிறம்.

யாழ்ப்பாணத்தில் வசதியான ஆக்கள் எண்டால் வீட்டை சுத்தி மதில் எழுப்பியிருப்பினம். சில பேர் எண்ணை பீப்பாய் தகரத்தில வேலி அடைச்சிருப்பினம். நடுத்தர வர்க்க சாதாரண குடும்ப வீடுகளில் சுத்தி கிடுகுவேலியோ பனை ஓலை வேலியோ தான் இருக்கும். என்னதான் வீட்டை சுத்தி மதில் எழுப்பினாலும் அது இயற்கைக்கு மாறான சூழல் தான். கிடுகு,பனை ஓலை வேலி எண்டால் அந்த வீட்டுக்கும் வளவுக்கும் ஒரு தனி களையே வந்த மாதிரி இருக்கும். பனை ஓலையும் தென்னோலையும் யாழ்ப்பாணத்தில இலகுவாய் கிடைக்க கூடிய பொருட்கள் தான். பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஒவ்வொருத்தர் வீட்டு வளவிலும் ஒரு அஞ்சு பத்து தென்னை மரமோ, பனை மரமோ கட்டாயம் இருக்கும். எங்கடை வீட்டிலையும் ஒரு ஏழு தென்னை மரம் இருந்ததாய் நினைப்பு. ஒவ்வொரு நாளும் மரத்தில இருந்து விழும் காய்ஞ்ச தென்னோலையை அம்மா இழுத்து கொண்டு போய் கிணத்தடியில போட்டு விடுவா. 

குடும்பத்தில எல்லாரினதும் குளிப்பு முழுக்கெல்லாம் அதுக்கு மேல நிண்டுதான் நடக்கும் . அப்பத்தான் ஓலை நல்லா நனையும். காஞ்ச ஓலையில கிடுகு பின்ன முடியாது, நல்லா ஊறவேணும். ஒரு அறுபது எழுபது மட்டை சேர்ந்தாப்போல ஏதாவது ஒரு ஞாயிற்று கிழமை கிடுகு பின்ன முற்றத்தில இறங்கிடுவம். கிடுகு பின்னிறதே ஒரு தனிக்கலை தான். அம்மா பின்னும் போது நானும் முதுகுக்கு பின்னால நிண்டு கொண்டு எனக்கும் கிடுகு பின்ன பழக்கி விடும்படி நச்சரிப்பதுண்டு. நச்சரிப்பு தாளாமல் அவவும் சொல்லி குடுக்க ஏழு வயசிலேயே நானும் நல்லா கிடுகு பின்ன பழகீட்டன். கிணத்தடியில இருந்து நனைஞ்ச தென்னோலையை முற்றத்து மண்ணில இழுத்து கொண்டு வந்து பலகை கட்டையை போட்டு குந்தி இருந்து பின்னும் போது, முற்றத்து புழுதி மண்ணும் நனைஞ்ச ஓலை மணமும் சேர்ந்து கலவையாய் ஒரு அலாதியான வாசம் வரும் பாருங்கோ, அதெல்லாம் அனுபவிக்க குடுத்து வச்சிருக்கோணும்.   

பின்னி முடிச்ச கிடுகுகளை பத்திரமா ஓரிடத்தில் பாதுகாப்பா அடுக்கி வச்சு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடுகுகள் சேர்ந்தவுடன் வசந்த கால ஆரம்ப நாளொன்றில் வேலியடைப்பு துவங்கும். வேலியடைப்பு எண்டு சாதாரணமா சொன்னாலும் அதுவும் ஒரு குடும்ப நிகழ்வு மாதிரித்தான். காலைமை இரண்டு பேர் மூன்று பேராக துவங்கும் வேலியடைப்பு நேரம் போக போக, தெரிந்த அயலட்டை சனங்களும், நண்பர்களும் கேட்காமலே உதவிக்கு வந்து சேர, ஒரு கலகலப்பான குட்டி கொண்டாட்டமாகவே மாறி விடும். இரண்டு பேர், வேலிக்கு உள்பக்கம் ஒராள், வெளிப்பக்கம் ஒராள், முதல் வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு போக, அடுத்த இரண்டு பேர் இரண்டாவது வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு பின்னால் வருவர். இதுக்குள் என் வயதொத்த சிறுசுகளின் வேலை கிடுகு எடுத்து குடுக்கிறதும், கிடுகை கதியாலுடன் சேர்த்து கட்டும் வரைக்கும் கதியாலோடை சேர்த்து பிடிக்கிறதும், குத்தூசியில கயிறு மாட்டி விடுறதும் எங்கடை வேலை.

வேலியடைப்புக்கு பாவிக்கிற குத்தூசி இரண்டு விதம் இருக்கும். சில பேர் மரத்தில செய்து வச்சிருப்பினம். சில பேர் அரை இஞ்சி கம்பியில செய்து வச்சிருப்பினம். கூர்மையாக இருக்கும் பக்கத்தில கட்டுக்கயிறு கோத்து விடக்கூடிய அளவில் சின்னதா ஒரு துவாரம் இருக்கும். வேலிக்கு வெளிப்பக்கம் இருந்து ஒருத்தர் குத்தூசியில கயிற்றை கோத்து வேலிக்கு உள்பக்கம் நிற்கும் எங்களிடம் "ஆ இந்தா" என குரல் கொடுத்தபடி அனுப்ப நாங்கள் கயிற்றை எடுத்து வைத்து கொண்டு குரல் கொடுக்க, அவர் குத்தூசியை எடுத்து கதியாலின் மறுபுறம் குத்த நாமும் கயிற்றை இழுத்து கோத்து விட்ட பிறகு "ஆ சரி" என குரல் குடுக்க மளமளவெண்டு வேலையும் நடந்து கொண்டிருக்கும். ஒரு புறம வேலியடைப்பு நடந்து கொண்டிருக்க, மறு புறம அயலில் யார் வீட்டில் மாடு கன்று போட்டது, ஆடு குட்டி போட்டதிலிருந்து அன்றைய அரசியல் வரைக்கும் அலசல் நடந்து கொண்டேயிருக்கும். 

இடையில் பதினோரு மணியளவில் அம்மா பெரிய பாத்திரத்தில் எலுமிச்சம்பழ தண்ணீருடன் வந்து பரிமாறவும் நேரம் சரியாயிருக்கும். அன்றைக்கு வேலியடைப்புக்கு உதவிக்கு வந்த எல்லோருக்கும் மதிய சாப்பாடும் எங்கள் வீட்டில் தான்.     இனிமையான பொழுதுகள் மீண்டும் வரப்போவதில்லையே.
Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•11:08 AM
ஊரிலே சொல்லுவார்கள்.. "கார் மோதி ஆள் சரியாம்".

இதைக் கேள்விப்பட்டிருப்பீங்க:
ஓர் ஊரில ஒரு நரியாம்.. அதோட கதை சரியாம்.

நரி இருந்துது, அத்துடன் கதையும் முடிந்தது. இதுதான் எங்களுக்குத் தெரிந்த பொருள். இதுக்கு நீட்டி முழக்கின பொருள்:
ஓர் ஊரில நிறைய்ய்ய்ய்ய்ய நாளா ஒரு நரி இருந்திச்சாம்.. (அப்பிடி நிறைய நாளா இருந்து இருந்து வயது போனதால) நரியின் கதை சரியாம்". அதாவது நரி இறந்து விட்டதாம்.

அதேமாதிரித்தான் முதல் வசனத்துக்கும் பொருள்: "ஆள் சரியாம்" என்றால் ஆள் இறந்துவிட்டார் என்று பொருள்.
Author: கானா பிரபா
•11:45 PM
"அக்கா! உங்கட வீட்டிலை பெரிய "ஏதனம்" ஏதாவது இருக்குதா பொங்கல் பொங்க?

மேற்குறித்த ஈழத்துப் பேச்சாடல் அமைப்பில் வரும் "ஏதனம்" என்பதன் பொருளாக அமைவது பாத்திரம் என்பதாக அமைந்திருக்கும். அதாவது பாத்திரம் ஏதாவது இருக்கிறதா என்பதை ஏதனம் என்ற மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்துவார்கள். பாத்திரம் என்பதைத் தவிர வேறு பொருட்களுக்கு ஏதனம் என்ற சொல் அமைவதாக எனக்குத் தெரியவில்லை (தெரிந்தால் சொல்லலாம்)

"ஏதேனும்" என்ற சொற்பதம் "ஏதனம்" என்று மருவியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகராதியிலும் இந்தச் சொல் காணக்கிடைக்கவில்லை.

தமிழக வழக்கில் அண்டா என்று சொல்லும் பாத்திரத்தை ஈழத்து மொழி வழக்கில் சருவச் சட்டி என்று பயன்பாட்டு மொழியாகப் பயன்படுத்துவதையும் காணலாம்.

அலைகள் இணையத்தில் வெளிவந்த
"காய்ச்ச நேரமில்லா கனகமக்கா" என்ற கவிதையை சன்னதமாடி என்பவர் இப்படி எழுதியிருந்தார். அதை ரசித்துப் பகிர்கின்றேன்.

சோத்துச் சட்டி சருவச்சட்டி
மச்சக்கறிக்கு தனிச்சட்டி
இது பொரியல் சட்டி
அது சொதிச்சட்டி
பெரிசா இருக்கிறது குழம்புச்சட்டி
கைபிடி இல்லாதது பால்கறிச் சட்டி
மூடியுள்ள சட்டி புட்டவிக்க
பானை சட்டி பொங்கலுக்கு
மரக்கறிச்சட்டி எப்பன் பெரிசு
புளியாணச் சட்டி இஞ்சாலை
திவசச்சட்டி செற் தனி
மச்சம் மாமிசம் படையல் சட்டி
கஞ்சி வடிக்க பழைய சட்டி
சாதி கூடியவைக்கு தனிச்சட்டி
கொஞ்சம் குறைஞ்சவைக்கு இன்னொன்று
நல்லாக் குறைஞ்சவைக்கு பழைய சட்டி
வேறை சிலருக்கு எவர்சில்வர் சட்டி
கோயிலுக்கு நாலு சட்டி
விரதத்துக்கு விசேடமான சட்டி
காஸ் அடுப்புச் சட்டி புதிசு
சபை சந்திக்கு பதினாறு சட்டியள்
தோட்டத்துக்கு தண்ணி ஊத்த தனிச்சட்டி
குருவிக்கு தண்ணி வைக்க இன்னொண்டு
குடிகாரருக்கு தனிச்சட்டி
கொலக்சனுக்கு வாறவைக்கு ஒரு சட்டி
அங்கை கிடக்குது பாயாசச்சட்டி
மேசைக்குக் கீழை முற்றிலும் புதுச்சட்டி
பறணிலை பலகாரச்சட்டியள்
மேசைக்கு மேலை மூடிச் சட்டியள்
கட்டிலுக்குக் கீழை சருவச்சட்டியள்
சாமி அறையிலை புதுச்சட்டியள்
படுக்கையறை முழுதும் பத்து பதினைஞ்சு
பறணிலை கிடக்கு அண்டா சட்டி
இடியப்பச் சட்டி தோசைச்சட்டி
றவ்வைச்சட்டி
பொரியல் சட்டி புண்ணாக்கு சட்டி
அவியல்சட்டி துவையல் சட்டி
அடுத்தவீட்டுக்கு அனுப்பும் சட்டி
பரிசோடை வாற குடும்பத்துக்கு டிசைன்சட்டி
பரிசில்லாமல் வாறவைக்கு புறம்பான சட்டி
ஒழுங்கா வட்டி தாறவைக்கு ஒருவகைச் சட்டி
ஒழுங்கில்லா மனிசருக்கு ஓட்டைச் சட்டி
முட்டைச் சட்டி முருங்கைக்காய் சட்டி
பெட்டைக்கு சீதனம் குடுக்கும் சட்டி
அப்பச் சட்டி உறொட்டிச் சட்டி
காலைச்சட்டி மாலைச்சட்டி
இரவு நேரம் இன்னொரு சட்டி
வெளி நாட்டு காசையெல்லாம் சட்டிகளாக்கி
காய்ச்ச நேரமில்லா கனகமக்கா
இருக்க இடமில்லாமல்
வீட்டுக்கு வெளியே
விழுந்து படுத்தாள்.

நன்றி: கவிதை பகிர்ந்த அலைகள் இணையம், படம் பகிர்ந்த கூடல் இணையம்

Author: கானா பிரபா
•2:33 AM
"எடியே! ஏனடி இடி விழுந்த மாதிரி கன்னத்திலை கை வச்சுக்கொண்டு யோசினை, கையை உப்பிடி கன்னத்திலை வச்சுக் கொண்டிருக்காதை, தரித்திரம் பிடிச்சுடும்".

மேற்கண்ட ஏச்சு வழக்கமாக ஈழத்துக் கிராமத்தின் பெரியவர்களால் சம்பாஷிக்கப்படும் ஏச்சுக்களில் ஒன்றாக இருக்கும்.

அடியே என்று தமிழக வழக்கில் இருப்பது தான் ஈழத்தில் எடியே என்று அமைந்து காணப்படும்.
எடியே என்பதற்கு ஒத்திசைவாக கேரளத்தின் மலையாளப் பேச்சு வழக்கிலும் "எடி" என்று வழங்கப்படுவதை மலையாளப் படங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதே போன்று மலையாளத்தில் "எடா" என்று புழங்கப்படும் வார்த்தைப் பிரயோகம், தமிழகத்தில் "அடே" என்று வழங்கப்படும் அதே சமயம் ஈழத்தில் "எடேய்" என்று பயன்படுத்தப்படும்.

தமிழகத்தின் ஊர்களில் எடியே, எடி, எடே, எடேய் என்று ஈழத்தில் பயன்படுத்துவது மாதிரி வழக்கம் உண்டா தெரியவில்லை.

"எடேய் தம்பி" என்று அன்பாக வழங்கப்படும் சொல் அடிகளை கொஞ்சம் அழுத்திக் கடுமையாகப் பேசினால் அதுவே வன் சொல்லாக அமைகின்றது.

என்னடா இது ஈழத்து முற்றத்தில் எடியூரப்பா என்று நினைத்து வந்தவர்களுக்கு இப்போது விடை கிடைத்திருக்குமே ;)

படம் உதவி: விடை நோக்கி இணையத்தளம்
Author: கலை
•1:30 AM
கொழுவல்!

.......................................

விடுப்பு (பூராயம்) கதைக்கிறவர் ஒருவர்: “அந்த கமலன் வீட்டில அண்ணனுக்கும், தம்பிக்குமிடையில நல்ல கொழுவலாம்”. (சிலபேர் இதை ஒருவித மகிழ்ச்சியுடன் சொல்வார்கள். மற்றவை கொழுவுப்படுறதில இவைக்கு அவ்வளவு மகிழ்ச்சி :)

(பூராயம் என்பது நல்ல பழங்காலத்தில பாவித்த ஒரு சொல் என்று நினைக்கிறன். ஆச்சி சொன்னதைக் கேட்டிருப்பதாக சின்ன ஞாபகம்.)

........................................

அம்மா மகனிடம்: “தங்கச்சியோட ஏன் நீ கொழுவிக்கொண்டு இருக்கிறாய். சும்மா உன்ரை வேலையைப் பாத்துக்கொண்டு போ பாப்பம்”
மகன்: “நானெங்கை கொழுவுறன். அவள்தான் என்னோட கொழுவலுக்கு வாறாள்”.

.........................................

நல்ல நோக்கமுள்ள ஒருவர்: “இவ்வளவுநாளும் நல்ல சினேகிதமா இருந்திட்டு, இப்ப சும்மா தேவையில்லாம கொழுவுப்பட்டுக் கொண்டு இருக்கிறாங்கள். நாந்தான் ஒருமாதிரி சமாதானம் பிடிச்சு விட்டனான்”

..........................................

எனக்கொரு சந்தேகம். 'கொழுவுதல்' என்பதை நேரடியாக யோசித்துப் பார்த்தால், ‘இணைதல் அல்லது இணைத்தல் என்ற பொருள்தானே வரும். அப்படியிருக்க, அதற்கு நேரெதிரான சண்டை பிடித்தல் என்னும் பொருளில் ஏன் ‘கொழுவுத' பாவிக்கப்படுகிறது?

...................................

பி.கு; என்ன கானா பிரபா ஏதாவது சந்தம் தொனிக்குதா? :). ஒரு ‘ழு' எழுத்து வருகுதெண்டு நினைக்கிறன் :)
Author: கலை
•6:41 AM
புழுகமும், புழுகுதலும்!

இந்தச் சொற்கள் எங்கெல்லாம் பாவிக்கிறவை எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் நான் கேள்விப்பட்டது தென்மராட்சியில.

1. புழுகம்/புழுகு = மகிழ்ச்சி

- இண்டைக்கு கானாப் பிரபாட இடுகைக்கு நிறைய பாராட்டு கிடைச்சதுல, ஆளுக்கு நல்ல புழுகம்.

- ஷ்ரேயாட வீட்டை அவடை பெரியண்ணா ஆக்கள் போயிருக்கிறதினால, அவ பெரிய புழுகில நிக்கிறாவாம்.

2. புழுகுதல் = மற்றவரைப் பாதிக்காத பொய்களைச் சொல்லுதல் அல்லது உண்மைகளையே மிகைபடச் சொல்லுதல் / பெரிதுபடுத்திச் சொல்லுதல்

- அவன், நல்லா புழுகுவான். அவன் சொல்லுறதில பாதியைத்தான் உண்மையெண்டு எடுக்கலாம்.

- அவள் புழுகுறதை கேட்டுக் கொண்டு நிண்டா, எனக்கு விசர்தான் (விசரெண்டா இந்த இடத்தில பையித்தியமில்லை, ஒரு எரிச்சல்) வரும். ஏதோ எங்களுக்கு ஒண்டும் தெரியாதெண்ட நினைப்பில புழுகிக் கொண்டே போறது.

சரி, இனி எப்பவாவது, இப்பிடி ஏதாவது ஒரு சொல்லு, அல்லது எங்கட ஊர்ப் பழக்கம் நினைவுக்கு வரும்வரை நான் போட்டு வாறன்.
Author: கானா பிரபா
•1:37 AM

"ஏன் தம்பி! கோயில் பக்கம் காணேல்லை"
"என்ரை ஆச்சி செத்து ஒரு மாசம் ஆகேல்லை எல்லோ, எனக்கு துடக்கு அதுதான் வாறேல்ல"

"என்ன விமலா! வீட்டுக்கு வெளியாலை காணக்கிடைக்கிறேல்லை"
"ஓம் அன்ரி, மூன்று நாள் என்ர துடக்கு முடியேல்லை, அதுக்குப் பிறகு தான் வருவன்"

"தம்பிராசா! நாளைக்கு திருவெம்பாவை, கோயிலுக்கு வருவீர் தானே"
"இல்லையடா சிவம் இன்னும் குழந்தை பிறந்த துடக்குத் தீரேல்லை"

மேலே பார்த்த மூன்று வேறுபட்ட சம்பாஷணைகளிலும் வருகிறது பொதுவான ஈழ மொழி வழக்கான "துடக்கு" என்ற சொற்பதம்".

தமிழக மொழிவழக்கில் பெரிதும் பாவிக்கப்படும் "தீட்டு" என்ற சொல்லே ஈழ மொழி வழக்கில் "துடக்கு" என்று பரவலாகப் பயன்பட்டு வருகின்றது.

"துடக்கு" என்பது தமிழக மொழிவழக்கில் பயன்பாட்டில் உள்ளதா என்று அறியேன், இந்தச் சொல்லுக்கு ஆசூசம், கட்டு, சிக்கு, துடக்கென்னேவல், மகளிர் சூதகம் போன்ற சொற்களை ஒத்த சொற்களாகக் காட்டுகின்றது ஈழத்து அகராதி நூல்.

யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி
இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கும் இந்த தீட்டு/துடக்கு என்பது ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை. பொதுவாக இறப்பு வீட்டில் சாப்பிட்ட, நீர் அருந்திய இரத்த சம்பந்தமில்லாதோருக்கும் இந்தத் துடக்கு இப்படியானவகையில் தொடர்பு பட்டு வந்து விடுவதாகவும் கொள்ளப்படுகின்றது. எனவே குறித்த இறப்பு வீட்டில் "துடக்குக் கழித்தல்", அல்லது "தீட்டுக் கழித்தல்" முடியும் வரை சுபகாரியங்கள், கோயிலுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள். கோயிலுக்கு நிதமும் செல்லும் வழக்கம் கொண்டோர் வெளி வீதியில் மட்டும் நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள். துடக்குக் கழித்தல் என்பது அந்தந்தப் பிரிவு மக்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. சிலர் 30 நாள் முடிவிலும், இன்னும் சிலர் அதுவும் அந்தணர்கள் 21 நாள் முடிவிலும் இப்படியான தீட்டுக் கழித்தலைச் செய்து முடிக்கின்றார்கள். குறித்த தீட்டுக் கழித்தல் நாளில் வீட்டுக்கு அந்தணர் வந்து சடங்கு செய்து இதை நிறைவேற்றுவார்.

அடுத்ததாக மகளிரின் மாதவிடாய் நாட்களிலும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இப்படியான "துடக்கு" ஏற்படுவதாகவும் கொள்ளப்படுகின்றது.

மூன்றாவதாக ஒரு வீட்டில் பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளை பிறந்து முப்பது நாள் முடிவில் துடக்கு கழிக்கும் வரை "துடக்கு" இருப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

துடக்கு பற்றி இப்படி ஒரு விளக்கம் இருந்தாலும் இன்னொரு துடக்கும் இருக்கிறது . அது என்ன தெரியுமா?
ஒரு காரியத்தைத் "தொடக்குதல்" (ஆரம்பித்தல்) என்பதை துடக்குதல் என்றே ஈழ மொழி வழக்கில் பேச்சு வழக்காகப் பாவிப்பார்கள்.
"தொடங்கீட்டீங்களா" என்று ஒரு தமிழக நண்பர் சொன்னால் அதையே
"துடங்கீட்டீங்களோ" என்று ஈழ நண்பர் பேசுவார்.

படம் நன்றி: http://www.sulekha.com/





Author: கானா பிரபா
•2:01 AM
"கண்ணுபடப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! சுத்தி போட வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இது ஒரு பிரபலமான தென்னிந்திய திரையிசைப்பாடல். இந்தப் பாடலை ஈழத்துப் பாடலாக்கும் வாய்ப்பு வந்தால் "கண்ணூறு படப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! நாவூறு கழிக்க வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இப்படித்தான் பாடவேணும் போல.


"கண்ணு படப்போகுது" என்று என்று தமிழக மொழிவழக்கில் பரவலாகப் பேசும் வார்த்தைப் பிரயோகம் ஈழத்து மொழி வழக்கில் "கண்ணூறு பட்டுடும்" என்றே புழக்கத்தில் பயன்படும். கண்ணூறு என்பதைப் பிரித்துப் பார்த்தாலே புரிந்து விடும் இந்த சொல் கொண்டு வரும் விளக்கம். கண்+ஊறு என்று பிரித்துப் பொருள் உணர்ந்தால் பிறரது கண்பார்வை பட்டால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற மூதாதய நம்பிக்கையே இது கொண்டு வரும் விளக்கம். பெரும்பாலும் குழந்தைகளைப் பாதுகாக்கவே இப்படியான சொற்பிரயோகமும் பயன்படுத்தப்படுகின்றது.

திருஷ்டி சுத்தி போட வேணும் என்று தமிழக வழக்கில் இருக்கும் சொற்பயன்பாட்டையே "நாவூறு கழிக்க வேணும்" என்று ஈழமொழி வழக்கில் பயன்படுத்துவார்கள். நாவூறு என்பதற்கு ஈழத்து மொழி அகராதியில் "நாத்தோஷம்" என்றே விளக்கப்படுகின்றது. அதாவது ஒரு அழகான குழந்தையைப் பார்த்து "ஆகா இந்தப் பிள்ளை கொழு கொழுவென்று எவ்வளவு அழகான, துறுதுறுப்பான பிள்ளையாக இருக்கிறதே" என்று ஒருவர் நாவூறு பட்டால் அந்தப் பிள்ளைக்கு தோஷம் வந்து விடும் என்ற மூதாதய நம்பிக்கையே இங்கே சுட்டப்படுகின்றது. பொதுவாக ஈழத்தின் வாழ்வியலில் ஒரு குழந்தை பிறந்து விட்டால், தேங்காச்சிரட்டையில் (கொட்டாங்குச்சி என்று தமிழக வழக்கில் சொல்லப்படுவது)கருநிறப் பொட்டைத் தயாரித்து குழந்தையின் நெற்றியில் ஒரு பெரும் பொட்டை இடுவதோடு கன்னத்தில் சின்னஞ்சிறு குட்டிப் பொட்டு எதுக்குப் போடுவார்கள் வேறு எதெற்கு நாவுறு படாமல் தான்....
Author: கலை
•3:06 PM
*****
ஈழத்து முற்றத்தில இப்ப கொஞ்ச நாளா, நிறைய கேட்டு மறந்திருந்த சொற்கள் நினைவுபடுத்தப்பட்டிருக்கு. அப்படியே எனக்கும் சில சொற்கள் நினைவுக்கு வந்தது.

1. ஆச்சி முந்தி கேப்பா “என்ன நீ கிரந்தம் பறையிற?” என்று. ஏதாவது விடயத்தை சரியாக சொல்லாமல், அல்லது புரிய வைக்காமல் இருந்தால், (அல்லது உளறுவதுபோல் தோன்றினால்) இந்தக் கேள்வி வரும். 'பறையிறாய்' என்பது 'கதைக்கிறாய் / பேசுகிறாய்' என்பது. பறையிறது என்பது மலையாள சொல் போல என நினைக்கிறேன்.

2. இதுவும் ஆச்சி சொல்லிக் கேள்விப்பட்டதுதான். ”எப்பன் சொதி குத்தட்டோ?”. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, “கொஞ்சம் சொதி விடட்டுமா?” என்பதைத்தான் அப்படிக் கேட்பா. ‘விடட்டுமா?' என்பதை, ‘குத்தட்டுமா?' என்று கேட்பது யாழில் தென்மராட்சி வழக்கா என்று தெரியவில்லை. வேறு பகுதிகளிலும் இப்படி கேட்பார்களா என்பது தெரியவில்லை.

3. 'மல்லுக்கட்டிறது' என்னும் சொல் தற்போதும் பலர் பாவிக்கிறார்கள் என நினைக்கிறேன். ”எதுக்கு வீணா மல்லுக்கட்டுறாய்?” என்றால், ”ஏன் வீண் விவாதம் செய்கிறாய் அல்லது சண்டை பிடிக்கிறாய்?” என்பதைக் குறிக்கும்.

******
இந்தியத் தமிழர்களுடன் பேசும்போது அவர்கள் வித்தியாசமாக உணர்ந்த சில சொற்கள்.

1. குழப்படி = குறும்பு

2. கெதியா = விரைவாக

3. யாழ் நண்பர் ஒருவரின் வீட்டு விருந்தில் ஒரு தடவை நடந்த விடயம் நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் குடும்பமும் வந்திருந்தார்கள். அப்போது உணவு பரிமாறியபோது, ”நல்ல வடிவாச் சாப்பிடுங்கோ” என்று பரிமாறியவர், சொன்னபோது, அந்த இந்தியப் பெண், ‘திருதிரு' வென விழித்தார். மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் வந்தபோது, பொறுக்க முடியாமல், 'எப்படி வடிவா சாப்பிடுறது?' என்று கேட்டார். 'வடிவு', என்பது 'அழகு', அப்படியென்றால், 'எப்படி அழகாக சாப்பிடுவது?' என்பதுதான் அவரது கேள்வி. ஆனால் அப்படிச் சொல்வது, ”நல்ல நிறைய, தாராளமாக சாப்பிடுங்கோ” என்பதைத்தான் என அவருக்கு விளக்கினேன்.

4. வெளிக்கிட்டாச்சோ? = தயாராகியாச்சா? (கிளம்பியாச்சா?)
எங்கேயாவது வெளியே செல்ல தயாராகுவதைக் குறிக்கும். சில சமயம் ஆடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொள்வதை மட்டுமே குறிக்கும். உதாரணமாக, திருமணத்திற்கு ‘பொம்பிளையை வெளிக்கிடுத்தியாச்சோ?' என்பார்கள்.

5. மோனை' என்று தம்மை விட வயது குறைந்தவர்களை விழிப்பார்கள். தாத்தா, அம்மம்மா, மாமா, மாமி எனப் பலரும், இப்பவும் ‘மோனை' என்று அழைப்பார்கள். பெயர் சொல்லி அழைப்பதை விட, ‘மோனை' என்ற அந்த அழைப்பில் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதான உணர்வு இருக்கும்.

6. நாம் பயன்படுத்தும் உறவு முறைகள் சிலவும் வித்தியாசமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
குஞ்சையா (சித்தப்பா), குஞ்சம்மா (சித்தி). பழைய காலத்தில், அம்மாவை 'ஆச்சி' என்றும், அப்பாவை 'ஐயா' என்றும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் பின்னர், பாட்டியைத்தான் ஆச்சி என அழைக்கும் வழக்கம் வந்தது.