Author: Subankan
•4:49 PM
சிறுவயதில் ஒருநாள் அம்மாவுடன் இருந்து வானொலி கேட்பதற்காய் வானொலியைத் திருகியபோதுதான் ஈழத்துச்சதன் முதன்முதலாய் எனக்கு அறிமுகமானார். விதம்விதமான குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க அது என்ன என்ற எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க பெரும்பாடுபட்டார் அம்மா. இந்தியத் தொலைக்காட்சிகள் எதுவுமே அறிமுகமாகியில்லாத காலத்தில் ‘மிமிக்ரி’ என்ற சொல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லையாயினும், மிமிக்ரி என்றால் என்ன என்பது அன்று எனக்குப் புரிந்துபோனது. அவரது விளக்கத்தில் இருந்த ஈழத்துச்சதன் என்ற பெயரும் அதன் வித்தியாசத்தன்மை காரணமாக மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டது.
அதன்பிறகு அவரது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குக்கூட சந்தர்ப்பங்கள் ஏதோ அதிஷ்டத்தில்தான் அமைந்தாலும் அவரது நிகழ்ச்சியை முதன்முதலில் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்தது. பாடசாலையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவரது நிகழ்ச்சிக்கு ஐந்து ரூபா டிக்கெட் எடுத்து அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன் வரிசைகளில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அவரது உருவம் என ஒன்றை மனதில் கற்பனை செய்துகொண்டு காத்திருந்தபோது அங்கே வந்த குள்ளமான அந்த மனிதரை “’இவர்தான் ஈழத்துச்சதன்” என்று அருகிலிருந்து ஏமாற்றமளித்தான் அவரை ஏற்கனவே அறிமுகமான நண்பன் ஒருவன்.
பறவைகள், விலங்குகள் என்று பலவற்றையும் தனது வாய்மொழியால் மட்டுமல்ல, உடல்மொழியாலும் அன்று கண்முன் கொண்டுவந்திருந்தார் ஈழத்துச்சதன். அங்குமிங்கும் தாவி குரங்குச்சேட்டைகளை நிகழ்ச்சினார். அங்கு குரங்குகள் பேன் பார்த்தன. யானைகள் பிளிறின. காட்டு விலங்குகள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டன. எங்கள் ஆண்கள் பாடசாலையில்கூடப் பெண்கள் ஒன்றுகூடிச் சிரித்துக்கொண்டார்கள். சனிக்கிழமைகளில் எள்ளுச்சாதம் வைத்துவிட்டுக் காட்டுக்கத்தல் கத்தினாலும் எட்டிக்கூடப் பார்க்காத காகங்கள் எல்லாம் அவரது ‘கா கா’ என்ற குரலுக்கு நூற்றுக்கணக்கில் மண்டபத்தை முற்றுகையிட்டுக்கொண்டன. இத்தனைக்கும் அவர் கையில் ஒலிவாங்கி என்பதே கிடையாது. அது அவருக்குத் தேவையும் கிடையாது.
அவர் அன்று நிகழ்த்தியவைகளுள் எனக்கு இன்னும் மறக்காமல் இருப்பது மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள். ஒருவகையில் எமது அடையாளமாகவே பார்க்கப்பட்ட ஒன்று. போச்சியால் சிறிது தினரை ஊற்றி வாயால் ஊதிவிட்டு சொக்கை இழுத்து கிக்கரை சிலமுறை உதைந்துப் ‘இஞ்சின் பிடிக்காமல்’ போகவே மீண்டும் போச்சி- தினர்- கிக்கர், இம்முறை படபடவென பெரிய சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகி ஒருமுறை சுற்றிவர மண்டபம் முழுவதும் கரும் புகை நிரம்பி கைதட்டலில் கரைந்தது.
ஈழத்துச்சதன் எம்முடனேயே வாழ்ந்த ஒரு அற்புதமான கலைஞன். எமக்கு அன்றிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களாலும் வானொலி நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டு பெரிதாகக் கவனிக்கப்படாமலேயே கடந்துபோனவர். இன்று தொலைக்காட்சிகளில் அசத்திக்கொண்டும், கலக்கிக்கொண்டும், சிலவேளைகளில் கடுப்பேற்றிக்கொண்டும் இருக்கும் கலைஞர்களைப் பார்க்கும்போது ஈழத்துச்சதனின் ஞாபகமும் வந்துபோகும்.
எவ்வளவு தேடியும் ஈழத்துச்சதனின் புகைப்படம் ஒன்றுகூட இணையத்தில் தட்டுப்படவில்லை. இணையத்தில் ஏறும் எல்லாமே நிரந்தரம் என்றார் சுஜாதா. அந்த நிரந்தரத்தன்மை ஈழத்துச்சதனுக்கு எழுத்தில் மட்டும்தான் வாய்த்திருக்கிறது போலும்.
ஈழத்துச்சதன் – வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட (பிர)தேசத்தில் வாழ்த்து, இப்போதும் எம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதமான கலைஞன்.
பன்றித்தலைச்சி அம்மன், கீரிமலை, மாவிட்டபுரம் போன்ற ஊர்ப் பெயர்கள்
சரித்திரத்துடன் சம்பந்தப்பட்டன. அரசனின் மகளின் பன்றி முகம் போன்று
இருந்ததால் அவள் வழிபட்டு மனித முகமாகியதாகக் கூறப்படுகிறது. கீரிமுகம்
உடைய ருகுல முனிவர் சாபவிமோசனம் அடைந்த இடம் கீரிமலை, குதிரை முகம்
நீங்கிய இடம் மாவிட்டபுரம், பரந்தனில் விளையும் உப்பை வெளிநாட்டுக்கு
கொண்டு செல்ல மரக்கலம் சென்றுவர தொண்டமான் என்னும் மன்னன் அமைத்த
கால்வாய் தொண்டமானாறு.
சில ஊர்ப் பெயர் மரங்களை அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லியடி,
அரசடி, ஆலடி, வேம்படி, இலுப்பையடி, புளியடி போன்ற ஊர்கள் மரங்களை
அடையாளப்படுத்திவைக்கப்பட்டவை. சில இடங்களில் அந்த மரங்கள் இல்லை. ஆனால்,
பெயர்கள் நிலைத்து விட்டது
வவுனியா, மன்னார், வன்னி ஆகிய மாவட்டங்களில் குளங்களின் பெயரையும்,
காடுகளின் பெயரையும் வைத்து ஊர்ப்பெயர்கள் உள்ளன. பாண்டியன் குளம்,
செட்டிகுளம், கூமாங்குளம், நெடுங்குளம், மாங்குளம், குஞ்சுக்குளம்,
குருமன்காடு போன்று பெயர்கள் உள்ளன.
இதேபோல், மலையகத்தில் பல இடங்களில் அப்பகுதி தோட்டங்களின் பெயர்களே அவ்
ஊர்களின் பெயர்களாக அலங்கரிக்கின்றன. இரட்டைப்பாதை, கல்தெக்க பத்த
(இரண்டு கல்லடிப் பாதை) போன்றனவாகும்.
சங்கிலிமன்னன் ஞாபகார்த்தமாக சங்கிலியன் தோப்பு உள்ளது. யானை கட்டப்பட்ட
இடமாகையால் ஆனைக்கோட்டை என்பார்கள். இலங்கையே ஒரு தீவு, இலங்கையைச்
சுற்றி தீவுகள் உள்ளன. நெடுந்தீவு, மண்டைதீவு, அனலைதீவு, பாலைதீவு,
காரைதீவு காரைதீவை இப்போது காரைநகர் என்கிறார்கள்.
வடமராட்சியில் திக்கம் என்ற கிராமம் உள்ளது. பனாட்டுக்குப் பெயர்பெற்ற
அந்த ஊ ரில் வெள்ளைக்காரர்கள் பனாட்டைக்கடித்த பின் "திக்கம்'
என்றார்களாம்.
மட்டக்களப்பில் ஓட்டமாவடி, தம்பிவிலுவில், துரைவந்திமேடு என்ற ஊர்கள் உள்ளன.
வெள்ளைக்காரர் காலத்தில் சில பெண்கள் தண்ணீர் அள்ளிக்கொண்டு வருகையில்
இருட்டிவிட்டதாம். அப்போது எதிரில் வெள்ளைக்காரர் வந்தபோது ஓட்டமாவாடி
என்றார்களாம். அன்றிலிருந்து அந்த இடம் ஓட்டமாவடி என்றாகியதாம்.
வெள்ளைக்காரத் துரை ஹெலியில் வந்து இறங்கிய இடம் துரைவந்து இறங்கிய மேடு.
காலப்போக்கில் மருவி துரைவந்த மேடு ஆகியதாம்.
இராமாயண காலத்திலே இலக்குவனைப் பார்த்து தம்பி இழு வில் என்று ராமன்
கூறிய இடம் தப்பிலுவில் ஆகிறதாம்.
யாழ்ப்பாணப் பஸ் நிலையத்தில் நின்ற பஸ் ஒன்றின் சில்லில் மிதித்து ஒருவர்
ஏற முற்பட்டு விழுந்தாராம். ஏன் சில்லாலை ஏறினாய் என்று நடத்துடன்
கேட்டபோது நீ தானே சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை ஏறு என்று சொன்னாய்
என்றாராம். கே.எஸ்.பாலச்சந்திரனின் அண்னை தனி நடிப்பில் முழு இலங்கையையும் சிரித்து
மகிழ்ந்த காட்சி அது.
அதேபோல் யாழ்ப்பாணத்தில் குப்பிளான் எனும் ஊர் உள்ளது. அங்கு புகையில்
செய்கை அதிகம் இடம்பெறும். வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் அங்கு
புகையிலை நடுவதற்காக பாத்தியாக நிலத்தை அமைத்த போது அதை கண்ட
வெள்ளைக்காரர் விளக்கம் கேட்க அது தண்ணீர் ஓடாது நிற்கவே அவ்வாறு
செய்வதாக கூறினார். அதற்கு அவர்கள் குட் பிளான் என ஆங்கிலத்தில் கூறிய
வார்த்தை மருவி தற்போது குப்பிளான் ஆகியது.
அதேபோல், பூநாறிமடம் எனும் ஓர் இடத்திற்கு அந்த மடத்தின் அருகில் உள்ள
மரம் ஒன்றில் பூ விலிருந்து வரும் வாசனை துர்நாற்றம் வீசுவதுபோல்
இருக்கும். இதனால் அந்த இடத்திற்கு பூநாறி மடம் என்று பெயர் வந்தது.
காட்டின் பெயருடன் சில ஊர்களின் பெயர்கள் உள்ளன. வவுனியாவில்
குருமன்காடு. தென்னிந்தியாவின் கொச்சியில் இருந்து வந்தவர்கள் கொழும்பில்
கடைபரப்பிய இடம் கொச்சிக்கடை. அங்கிருந்து வந்த மிளகாயை சிங்களத்தில்
கொச்சிக்காய் என்பார்கள்.
கோழிக்கோட்டில் இருந்து வந்த வாழைப்பளத்தை சிங்கள மக்கள் கோழிக்கோடு
என்பார்கள். மைசூரில் இருந்துவந்த பருப்பைமைசூர் பருப்பு என்றார்கள்.
மடு, மோட்டை போன்றவை இருப்பதனால் சேமமடு, இரணைமடு, பாலமோட்டை,
நொச்சிமோட்டை எனவும். தந்தை செல்வாவின் ஞாபகார்த்தமாக
செல்வபுரம் உடுப்பிட்டியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ராஜலிங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட கிராமம் ராஜகிராமம்.
ஊர்ப்பெயரைப் பிரபலப்படுத்துவதில் எழுத்தாளர்கள் பெரும்பங்கு
வகிக்கின்றனர். சில்லையூர் என்று வேறு சிலரும் பெயருடன் இணைத்து எழுதினாலும் சில்லையூர் என்றதும் செல்வரா ஜனின்
பெயரே மனதில் பதியும்.
அதேபோல் காரை. சுந்தரம்பிள்ளை, அல்வையூர் கவிஞர்.மு.செல்லையா, மாவை
வரோதயன், கல்லாறு சதீஷ், வடகோவை வரதராஜன், காவலூர் ஜெகநாதன், லுணுகலை
ஸ்ரீ, தெளிவத்தை ஜோசப், வதிரி சி.ரவீந்திரன் வாகரைவாளன் , தாளையடி
சுபாரத்தினம் செம்பியன் செல்வன் போன்றவர்கள் ஊர்ப்பெயருடன் வலம்வரும்
எழுத்தாளர்கள்.