Author: சினேகிதி
•5:07 PM
குல்லம் கொண்டுவா என்டுதான் சொல்லுவினம் சுளகு கொண்டுவா என்டு சொல்றேல்ல...

ஓமோம் வயலுக்க நிண்டால் அப்பிடிச் சொல்லமாட்டினம். எங்கட ஐயாவும் அப்பிடித்தான். அதமாதிரி நெல்லு அளக்கேக்கயும் முதலாவது கொத்தை ஒன்டு என்டு சொல்றேல்ல..லாபம் என்டுதான் சொல்லுவினம்.



நான் இன்டைக்கு வேலையால வாறன் அப்பம்மா சிரிச்சு சிரிச்சு கதைச்சுக்கேக்குது...ஆரெண்டு பார்த்தால் என்ர ரீச்சர். அவா என்னட்ட வந்திருக்கிறா அவவை இருத்திவைச்சு நடக்குது அப்பம்மான்ர கச்சேரி.

ரீச்சர் உள்ளுக்க வந்து இருந்த உடனே முதல் கேள்வி கேட்டாவாம் "அப்ப பிள்ளை நீங்கள் எந்த ஊர்?"

ரீச்சர் குமிழமுனை என்டு சொல்லி வாய்மூடேல்ல கேட்டாவாம் நீங்கள் தங்கண்ணைன்ர மகளே என்டு...ரீச்சர் நல்லாப் பயந்திருப்பா இதென்னடா வந்த இடத்தில வம்பாப்போட்டென்டு.

அப்பம்மாக்கு 80 வயசாகப்போகுது ரீச்சருக்கு 50 வயசாகப்போகுது. நான் வீட்டுக்குள்ள வாறன் ஏதோ ஏதோ கதையெல்லாம் நடக்குது. ஏதோ குல்லம் புசல் கொம்பறை கொத்து மரக்கால் பச்சைக்குிறியன் அணில்குிறியன் என்றெல்லாம் புரியாத பாசைல நடக்குது கதை. சத்தியமா அவை கதைச்சதொண்டும் எனக்கு விளங்கேல்ல.

இடையில புகுந்து விளக்கம் கேக்கலாமெண்டால் இரண்டுபேரும் நிப்பாட்டுற மாதிரித் தெரியேல்ல. அப்பம்மா கேக்கிறா உங்கட வீட்டுக்கு நிலையம் பாத்து தந்தது எங்கட அவர்தானே.

சரி இதுக்குமேல பொறுக்கேலாது...நான் கேட்டிட்டன்.

நான்: நிலையம் பார்க்கிறதோ?? அப்பிடியென்டால் என்ன?

அப்பம்மா : தாத்தாதான் இவேன்ர வீட்டுக்கு கிணத்துக்கு எல்லாம் நிலையம் பார்த்துக்குடுத்தது. எந்த இடத்தில கிணறு தோண்டலாம்...வீட்டுக்கு வாசல் எங்க வைக்கலாம் இதுகள் எல்லாம் பார்த்துச் சொல்றது.

நான்: என்னத்த பார்த்துச் சொன்னவர்?

அப்பம்மா: இதுக்கு என்னத்த சொல்றது நான்? அவர் அதுகள் எல்லாம் படிச்சுத் தேர்ந்தவர்.
வைத்தியம் பார்க்கிறது...தொய்வு பார்க்கிறது என்டு அவர் எல்லாம்
தெரிஞ்சவர். குமிழம்முனையில தாத்தான்ர படம் இல்லாத வீடில்லை.

நான்: கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ கொம்பறை கொறியன் என்டெல்லாம் சொன்னீங்கள்..அதெல்லாம் என்ன?

ரீச்சர் : வெப்பில் கொடி வெட்டிக்கொண்டு வந்து குடில் மாதிரிச் சுத்திக்கட்டிப்போட்டு மேல பச்சைமண் பூசி மெழுகுறது. அந்து பிடிக்காமல் இருக்க வேப்பக்கொட்டை கொண்டு வந்து போடுறது சுத்தவர. கொம்பறைக்குள்ள மூட்டைக்கணக்கில நெல்லைக்கொண்டுவந்து கொட்டி வைச்சால் அடுத்த வருசம் வரைக்கும் இருக்கும். சோத்துக்கும் எடுக்கிறது விதைக்கவும் எடுக்கிறது.

நான் : என்ன ரீச்சர் நீங்களும் அப்பம்மா மாதிரிக் கதைக்கிறீங்கள்...அந்து என்டால் என்ன.

ரீச்சர் : அப்பம்மாவைக் கண்டது ஊருக்குப்போனது போல இருக்கு. ஊர்ப்பக்கம் போய் 20 வருசமாகப்போது. மறந்துபோன சொல்லெல்லாத்தையும் ஞாபகப்படுத்திட்டா. பச்சைக்குறியன் எல்லாம் சுத்தமா மறந்திட்டம். இந்தச்சொல்லெல்லாம் நடுகிலும் பாவிச்சனாங்கள்.

நான் : ஹி ஹி...அந்து..

ரீச்சர் : அந்து பிடிக்காமல் என்டால் பூச்சி பிடிக்காமல்

நான் : அப்ப பச்சைக்குறியன் எண்டால்...



அப்பம்மா : நாலு சுண்டு நெல்லு = ஒரு கொத்து.
பத்து கொத்து = ஒரு மரக்கால்
28 கொத்து = ஒரு புசல்
பச்சைக்குறியான் என்றது பச்சைக்குறி போட்ட சாக்கு ; அதுக்குள்ள 3 புசல் போடலாம். போட்டு சணல் போட்டுத் தைக்கிறது.
அணில்குறியன் சாக்கில 78 கொத்துப் போடலாம்.

நான் : ஓ அப்ப உங்கட வயல்ல எத்தின கொத்து நெல்லு வரும்?

அப்பம்மா : என்ன எங்கட 2 வயல்லயும் சேர்த்தா 200-250 மூடைக்கு வரும்.

நான் : ஆஆஆஆஆ..அவ்வளவு நெல்லா? அப்ப நீங்கள் உங்களுக்கு கஸ்டம் அப்பா எல்லாம் சந்தைக்கு கச்சான் கொண்டுபோய் விக்கிறவர் என்றெல்லாம் சொன்னீங்கள்.

அப்பம்மா: பின்ன குடிமக்களுக்கு குடுக்க சாமான்கள் வேண்ட எண்டு குடுக்கிறது போக ...

ரீச்சர் : குடிமக்கள் என்றால் விளங்காது.

அப்பம்மா : அதான் மோனை தலைமயிர் வெட்ட வந்தால் எங்கட வீட்டில மட்டும் 10 பேர் அப்ப 2 மூடை நெல்லு குடுப்பம்.

நான் : 2 மூடை??? ஏன் அவ்வளவு.

அப்பம்மா : ஒரு வரியத்துக்கு 2 மூடை குடுக்கத்தானே வேணும்.

நான் : ஏதோ குல்லம் கொண்டுவாறதெண்டு சொன்னீங்கள்?? ஏன் வயலுக்க நிண்டு சுளகு என்டு சொல்லக்கூடாது? சொன்னால் என்ன நடக்கும்?

அப்பம்மா: அப்பிடிச் சொல்றேல்ல. சொன்னால் கூடாதாம். குல்லம் என்டுதான் சொல்றது.

நான்: அதான் ஏனென்டு கேக்கிறன்..சொன்னால் என்ன நடக்கும்.

அப்பம்மா: சொன்னால் விளைச்சலுக்குக் கூடாதாம்.

நான்: குல்லம் என்று சொல்றதுக்கும் சுளகு என்றதுக்கும் என்ன வித்தியாம்...2ம் சொல்லுத்தானே.

(பதில் வரேல்ல).

நான்: ம் அப்ப இப்ப எவ்வளவு காணியிருக்கு உங்களுக்கு??? இப்ப எங்க இருக்கு....

அப்பம்மா: ஒன்டுமில்லாமல் போச்சு.

மிச்ச கதை கேக்க ஆறுதலா வாறன் என்டிட்டு போட்டா ரீச்சர்.

வேலைகாரன் கம்பின்ர தலை கொக்கின்ர தலை போல இருக்குமாம். அதால வைக்கோலை தட்டிக்கொண்டு போறதாம். மிச்சமொன்டும் ஞாபகம் வரேல்ல...அடுத்த முறை அப்பம்மா கதைக்கேக்க றக்கோர்ட் பண்ணி வைக்கிறன்.

{ஈழமுற்றத்தில இது சினேகிதின்ர குதியம் குத்தல் வாரம் :) கவலைப்படாதயுங்கோ கொஞ்ச நாளைக்கு நான் எழுத மாட்டன்.}
This entry was posted on 5:07 PM and is filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

25 comments:

On July 3, 2009 at 10:33 AM , வந்தியத்தேவன் said...

சினேகிதி கலக்கலா குதியன் குத்துறியள். பேசாமல் ஈழத்து முற்றத்தில் உங்கள் அப்பம்மாவை இணைத்துவிடுங்கோ. சில சொற்கள் தெரியும் பல புதுசு. குமுழமுனை வடமராட்சி கிழக்கோ?

 
On July 3, 2009 at 6:15 PM , யசோதா.பத்மநாதன் said...

பிள்ள உது வன்னியில் பேச்சு வழக்கோ மோன?

உவன் பிள்ள வந்தி என்ன எனக்கு போட்டிக்கு ஆள் சேக்கிறானாமோ?:)மணியாச்சி பாவமெண்டு ஒருக்கா சொல்லி விடணை:))

உந்த நிலையம் பாக்கிறதப் பற்றி சொன்னாயடி மோன.இப்பதான் எனக்கு ஞாபகம் வருகுது.ராமச் சந்திரன் அண்ணை எண்டு அங்க ஒரு அண்ணை இருந்தவர். நிலையம் பாக்கத் திறமான ஆள்.அவர் என்ன செய்வார் தெரியுமே? கையில ஒரு சக அடையாளமா ஈர்க்கிலை செய்து நடுக் கைவிரல் நுனியில பிடிச்சுக் கொண்டு வலு அவதானமா காணிக்கை நடப்பார். ஊற்று இருக்கிற இடம் வந்த உடன அந்த ஈர்க்கில் நல்லாச் சுத்தும். உடன அந்த இடத்தில தடி ஒண்ட நட்டு விடுவார்.அந்த இடத்தில கிணறு வெட்டினாச் சரி.

எங்கட வீட்டுக்குக் கிணறு வெட்டினது இப்பிடித்தானடி மோன.

 
On July 3, 2009 at 7:50 PM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
உவன் பிள்ள வந்தி என்ன எனக்கு போட்டிக்கு ஆள் சேக்கிறானாமோ?:)மணியாச்சி பாவமெண்டு ஒருக்கா சொல்லி விடணை:))//

நான் சும்மா சொன்னது ஆச்சி நீங்களிருக்கைக்கே வேறையாரும் தேவையோ :)

 
On July 3, 2009 at 7:56 PM , சினேகிதி said...

குமிழமுனை முல்லைத்தீவுப்பக்கம். அப்பம்மாவை முல்லைத்தீவில போய் இருந்தவையாம் கனகாலம்.

 
On July 3, 2009 at 7:59 PM , சினேகிதி said...

\\பிள்ள உது வன்னியில் பேச்சு வழக்கோ மோன?\\

ஓமென்டுதான் நினைக்கிறன் மணிப்பாட்டி. ஆனால் சில சொற்கள் வடமராட்சிப்பக்கமும் பாவிக்கிறதாம் என்று அம்மா சொன்னா.

நிலையம் எடுக்கிறது நல்ல விளக்கம். அப்பம்மா ஏதோ 1948ல காப்புலியள் இருந்தவை அதால பொம்பிளைப்பிள்ளையளை பூட்டி வைக்கிறது என்டெல்லாம் நிறையக்கதை சொன்னா...ஆறுதலாக் கேட்டு எழுதுறுன்.

 
On July 4, 2009 at 9:21 AM , வலசு - வேலணை said...

குடிமக்கள் என்ற சொல்லின் இந்த விளக்கத்தை முதன்முதலின் பஞ்சமர் என்ற நாவலினூடகவே அறிந்தேன்.
வன்னியிலும் குடிமக்கள் என்றா சொல்கிறார்கள்?

 
On July 4, 2009 at 10:04 AM , சினேகிதி said...

\\குடிமக்கள் என்ற சொல்லின் இந்த விளக்கத்தை முதன்முதலின் பஞ்சமர் என்ற நாவலினூடகவே அறிந்தேன்.
வன்னியிலும் குடிமக்கள் என்றா சொல்கிறார்கள்?\\

அப்பம்மா சொன்ன கதை 1948 ல தொடங்குது...அப்பேக்க குடிமக்கள் என்டு சொல்லியிருக்கினம் போல. 2ம் உலகப்போர் கதை யெல்லாம் சொன்னா. குடிமை குடிமக்கள் 2ம் பாவிச்சிருக்கினம்.

 
On July 4, 2009 at 7:15 PM , வலசு - வேலணை said...

//
அப்பம்மா சொன்ன கதை 1948 ல தொடங்குது...அப்பேக்க குடிமக்கள் என்டு சொல்லியிருக்கினம் போல. 2ம் உலகப்போர் கதை யெல்லாம் சொன்னா. குடிமை குடிமக்கள் 2ம் பாவிச்சிருக்கினம்.
//

தகவல்களுக்கு நன்றி சிநேகிதி

 
On July 4, 2009 at 8:10 PM , நிவேதா/Yalini said...

இந்த மற்றாக்கள்ட கதைக்குள்ள மூக்கை நுழைச்சுக்கொண்டு ஒட்டுக்கேக்கிறதை நாங்கள் 'ஓப்பிளஸ்' எண்டுறனாங்கள்..:-)

 
On July 4, 2009 at 8:13 PM , வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி நல்ல தகவல். நெல் அளவை முறைகளை சிறுவயதில் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன்.


இந்த அளவையில் பறை என்றும் ஒரு அளவு இருக்கு,

சுண்டு,
கொத்து,
பறை
மரகால்
புசல்

இவை நெல்லு, அரிசி அளவைக்கு பயன் படுத்துறது தானே

இப்ப 1 சுண்டு எண்ட அளவுக்கு மில்மெய்ட் ரின் தானே பாவிக்கிற.

இப்ப கூட ஊரில் நாளாந்த சமையலுக்கு அரிசி சுண்டு கணக்கில் தான் அளந்து சமைப்பார்கள்.

கொத்துக்கு பாவிக்கிற அளவு கலனுக்கு இன்னொரு பயன்பாடு இருக்கு தெரியுமோ?? :)

சாமத்திய சடங்குகளிலை அதிலை நெல்லு? அரிசி போட்டு காம்பு சத்தகத்தில் வெத்திலை, தேசிக்காய் குத்தி வைத்திருப்பார்கள்.

 
On July 4, 2009 at 8:18 PM , வி. ஜெ. சந்திரன் said...

சரியாக நினைவில்லை
2 பறை = ஒரு புசல் என்று நினைக்கிறேன்.

 
On July 4, 2009 at 8:30 PM , சினேகிதி said...

\\இந்த மற்றாக்கள்ட கதைக்குள்ள மூக்கை நுழைச்சுக்கொண்டு ஒட்டுக்கேக்கிறதை நாங்கள் 'ஓப்பிளஸ்' எண்டுறனாங்கள்..:-)\\

கொழும்புக காத்து இங்காலயும் அடிக்குதா :) ம் அப்பிடிப்பார்த்தால் என்னைப்பார்க்க வந்தாக்களைப்பிடிச்சு வைச்சு O+ O- போட்டது அப்பம்மாதான் அப்பா அவாதான் அதெல்லாம்.

 
On July 4, 2009 at 9:12 PM , நிவேதா/Yalini said...

:-)))

 
On July 5, 2009 at 10:59 AM , சினேகிதி said...

\\இந்த அளவையில் பறை என்றும் ஒரு அளவு இருக்கு,\\


பறை நான் கேள்விப்படேல்ல. பறவெட்டி என்டு சொல்றது....அது நான் நினைக்கிறன் ஒரு சுண்டு முழுக்க நிரப்பாமல் முக்காவாசி அரிசி எடுத்தா பறவெட்டி???? மணிப்பாட்டி உங்களுக்குத் தெரியுமா?

 
On July 6, 2009 at 3:53 AM , Vasanthan said...

பறைவெட்டி எண்டது முக்காற்சுண்டைக் குறிக்காது எண்டு நினைக்கிறன்.
வழமையா சுண்டு எண்டது பேணில முழுக்க நிரப்பிறது, அதாவது பேணி மட்டத்தைவிடவும் அரிசியோ நெல்லோ உயர்ந்து கூம்பாக நிக்கும். அப்பிடி நிரப்பித்தான் அளக்கிறது. பறைவெட்டி எண்டால் கூம்பாக உயர்ந்து நிக்கிறதை அகற்றிப்போட்டு பேணிமட்டத்துக்கு அளக்கிறது. ஆக பேணி முழுமையாகத்தான் இருக்கும். ஆனால் மேல இருக்கிற கூம்பு வடிவம் மட்டும் அகற்றப்பட்டிருக்கும். மா அளக்கேக்க இது பெரிய வித்தியாசத்தைத்தரும். பேணி மட்டத்துக்குக் கையால ஒரு வெட்டு வெட்டிறது நல்ல அழகாயிருக்கும்.

இப்பிடி அளக்கிற முறையைத்தான் பறைவெட்டி (அல்லது பறைதட்டி?)எண்டு சொல்லிதெண்டுநினைக்கிறேன்.
================
வந்தியத்தேவன்,
நீர் உந்தச் செய்திகள் ஒழுங்காப் பாக்கிறேலயோ? முந்தி ஒருத்தருமறியாத வன்னியின் ஊர்ப்பெயர்களை உலகத்துக்குக் கொண்டுசேர்த்தது போர். சிறிலங்கா இராணுவத்தின்ர இறுதிப்போர் நடவடிக்கைகளில குமுழமுனையும் பிரபலமாக அடிபட்ட பெயர். குமுழமுனை கைப்பற்றப்பட்டதை அரசதரப்பு பெருவெற்றியாகப் பலநாட்கள் சொல்லிக்கொண்டிருந்தது. வன்னியின் தென்கிழக்குப் பரப்பில் முதன்முதல் இழக்கப்பட்ட முக்கியபடைநிலை குமுழமுனையாகத்தான் இருக்கும்.

 
On July 6, 2009 at 11:38 AM , வந்தியத்தேவன் said...

வசந்தன் செய்திகள் பார்ப்பதுதான் ஆனால் சிலவேளைகளில் மறந்துபோய்விடுவதுண்டு. எற்கனவே வடமராட்சி கிழக்குப் பகுதியில் இதே பேரின் சாயலைக்கொண்ட ஊர் இருந்த ஞாபகம் வந்தது.

 
On July 6, 2009 at 11:40 AM , வந்தியத்தேவன் said...

வசந்தன் பறைவெட்டி பற்றிய உங்கள் விளக்கம் சரியானது. பெரும்பாலும் சுண்டு என்பது ரின் மில்க் பேணியால் அளக்கப்படும். கொத்திலும் பறைவெட்டுவது உண்டு. சிலர் சுண்டிலும் பறைவெட்டுவது உண்டு.

 
On July 6, 2009 at 11:52 AM , சினேகிதி said...

\\பேணி மட்டத்துக்குக் கையால ஒரு வெட்டு வெட்டிறது நல்ல அழகாயிருக்கும்\\

இதிலயும் அழகிருக்கா :)

\\இப்பிடி அளக்கிற முறையைத்தான் பறைவெட்டி (அல்லது பறைதட்டி?)எண்டு சொல்லிதெண்டுநினைக்கிறேன்.
\\

பறைதட்டியுதட பறைவெட்டியும் ஒன்டா???? பறைதட்டி எண்டால் ஒரு விசயத்தை எல்லாரிட்டயும் போய் உளறி வைக்கிறதைத்தானே பறைதட்டி என்றது???

 
On July 6, 2009 at 11:53 AM , சினேகிதி said...

\\வசந்தன் செய்திகள் பார்ப்பதுதான் ஆனால் சிலவேளைகளில் மறந்துபோய்விடுவதுண்டு. எற்கனவே வடமராட்சி கிழக்குப் பகுதியில் இதே பேரின் சாயலைக்கொண்ட ஊர் இருந்த ஞாபகம் வந்தது.\\


அப்பிடியா என்ன ஊர் அது?

 
On July 6, 2009 at 2:49 PM , வி. ஜெ. சந்திரன் said...

//பறைதட்டி எண்டால் ஒரு விசயத்தை எல்லாரிட்டயும் போய் உளறி வைக்கிறதைத்தானே பறைதட்டி என்றது??//
ஓம், ஒரு விசயத்தை எல்லாருக்கும் உளறுற ஆக்களை ஓட்டை வாய் எண்டும் சொல்லுறது.

உண்மையிலை பறை தட்டி காரணப் பெயர் தானே,
பழைய காலத்திலை அரசர் மாரின் செய்தியளை ஊரூரா அறிவிக்கிற முரசு அறைந்து அறிவிக்கிற முறை,
முரசு = பறை அறைந்து அறிவிக்கிற,
எண்டது பறை தட்டி எண்டு வந்திருக்கும் எண்டு நினைக்கிறன்.

ஆனா எங்கட ஊரிலை ஒரு குடும்பம் இருந்தது, அவைக்கு பிள்ளை பிறந்தா உடனை எங்கட ஊரில் இருக்கிற பிள்ளையார் கோயில், வீரபத்திரன் கோயிலுகளை சுத்தி பறை அடிக்க வைக்கிறவை (உண்மையான மேளம்). ஒரு விசேசமும் இல்லமை கோயில்லை மேளம் அடிச்சு கேட்ட ஊரிலை எல்லாருக்கும் தெரியும் அவை வீட்டை பிள்ளை பிறந்திருக்கெண்டு. அவைக்கு எனக்கு தெரிய 10 - 12 பிள்ளையள்.

 
On July 6, 2009 at 6:12 PM , கானா பிரபா said...

சம்பாஷணை வடிவில் இந்த மொழி வழக்கைப் பகிர்ந்தது சிறப்பாக இருக்கு

 
On July 6, 2009 at 8:04 PM , சினேகிதி said...

\\ஓம், ஒரு விசயத்தை எல்லாருக்கும் உளறுற ஆக்களை ஓட்டை வாய் எண்டும் சொல்லுறது\\

aka BBC , Veerakasari :)

\\சம்பாஷணை வடிவில் இந்த மொழி வழக்கைப் பகிர்ந்தது சிறப்பாக இருக்கு\\

இது உண்மைாயாவே நடந்த சம்பாஷணை றக்கோட்ட பண்ணாம விட்டிட்டன் அதால அப்பம்மா சொன்ன எல்லா விசயத்தையும் ஞாபகம் வைச்சு எழுத முடியேல்ல.

 
On July 20, 2009 at 11:59 AM , சினேகிதி said...

\\சம்பாஷணை வடிவில் இந்த மொழி வழக்கைப் பகிர்ந்தது சிறப்பாக இருக்கு\\

:) நன்றி.

 
On July 20, 2009 at 5:23 PM , VSK said...

ஈழத் தமிழை அறியத் தந்தமைக்கு நன்றி!

 
On July 25, 2009 at 8:47 AM , சினேகிதி said...

நன்றி சங்கர் அண்ணா.