Author: யசோதா.பத்மநாதன்
•4:48 PM
படலை திறந்து தான் இருக்கிறது; உள்ளே வாருங்கள்.:)


வீட்டின் முகம் இது. வீட்டில் வசிக்கும் மனிதர்களின் மன,குண இயல்பை மூன்றாம் நபருக்குக் காட்டும் முதல் இடம் இது தான்.

முதன் முதலாக தெரியாத ஒரு வீட்டுக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.முதலில் நீங்கள் எங்கெல்லாமோ தேடி இடத்தைக் கண்டுபிடித்து முதலில் வந்து நிற்கும் இடம் இது. அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி உங்கள் மனம் முதலில் ஒரு அபிப்பிராயத்தை இதை வைத்துத் தான் எடுத்துக் கொள்ளும்.

அது தான் படலை.

படலைகள் பலவகை.வீதியில் இருந்து வீட்டு வளவுக்கு வரும் வாசலை கட்டுப் பாட்டில் வைத்திருப்பது இதன் தொழில்.படலை கர்ம வீரனைப் போல வீட்டை; வீட்டில் உள்ளவர்களைக் காக்கிறது.

படலை என்பது யாழ்ப்பாணத்துச் சொல் வழக்கு. கேற் என்பதும் இது தான்.இவற்றில் பலவிதங்கள் உண்டு. மரப்படலை,இரும்புப் படலை,ஒற்றைப்படலை, இரட்டைப் படலை,தகரப் படலை,கடவுப் படலை,செத்தைப் படலை,மூங்கில் கழிகளால் கொழுவி அமைக்கப் படும் படலைகளும் உண்டு.படலைகளே அற்ற ஏழைகளின் வீடுகளும் இருக்கின்றன. இப்படிப் பலவகைப்படும் அவை.

சமயங்களுக்கும் இந்தப் படலைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்டால் அப்படி ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்த போதும் இஸ்லாமிய சகோதரர்களின் வீடுகளின் படலைகள் இன்னொரு விதமாக தனித்துவம் கொண்டதாக இருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும். அது ஒரு விதமான மூடிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்.உயரத்தில் ஒரு சிறு ஜன்னல் அதில் காணப்படும். வெளிப்புற சுவர் ஓரம் அழைப்பழுத்தி ஒன்றிருக்கும். (இதனை நான் கொழும்பில் தான் பார்த்தேன்.ஏனையவர்களின் வீட்டுப் படலைகளும் அப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை.)அதனை அழுத்தினால் ஒரு முகம் மட்டும் அந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும். விடயத்தைச் சொன்ன பின் அனுமதி கிட்டும்.

சிங்கள மக்களது படலைகள் நல்ல கலை வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கும். மரமோ, இரும்போ எதுவாக இருந்தாலும் கடைச்சல் வேலைகளுக்கு அவர்கள் மிகப் பிரசித்தம் ஆனவர்கள்.வேல் போன்ற முனைகள் ஒரு வித சீரோடு அதில் அமைந்திருக்கும்.பதிவாக ஆரம்பித்து உட்புறம் வர வர உயர்ந்து காணப்படும் சில. வேறு சில அதற்கு எதிர்புறமாக உயர்ந்தவாறு செல்லும்.கறுப்பும் மண்ணிறமும் கலந்த வர்ண வேலைப்பாடுகள் அதில் அமைந்திருக்கும்.இந்தப் படலையில் அவர்கள் ஏனோ தனிக்கவனம் செலுத்துவதுண்டு.

பொதுவாகச் சில படலைகள் அதன் கம்பி வேலைப் பாட்டிலேயே இரு அன்னங்கள் நீந்துவது போல ;உதயசூரியன் உதிப்பதைப் போல; மலர்ந்த தாமரையைப் போல என்றெல்லாம் கலை பேசும். வேறு சில வீட்டுத் தலைவரின் பெயரைத் தாங்கி நிற்கும். மேலும் சில வீட்டின் பெயரைக் கொண்டிருக்கும்.வர்ணப் பூச்சுக்களால் அதனை வேறுபடுத்தியும் காட்டி இருப்பார்கள் சிலதை.மேலும் சில வீட்டு ஜன்னலின் கம்பி வேலைப் பாட்டை போன்ற வேலைப் பாட்டையும் கொண்டிருக்கும்.பெரும்பாலானவை நல்ல காத்திரமான படலைகளாகவும் இருக்கும். வீட்டினுடய வர்ணத்தை ஒத்த நிறத்தைப் பெரும்பாலும் அவை கொண்டிருக்கும்.

இவை எல்லாம் எத்தகைய கலை வேலைப்பாடு வண்ணங்களைக் கொண்டிருந்தாலும் இவை அமைந்திருப்பதற்கான நோக்கம் பாதுகாப்பு என்ற ஒன்றே!

அதன் சூட்சுமம் படலைகளின் ஓரத்திலோ நடுப்பகுதியிலோ தான் காணப் படும். அவை தான் கொழுவிகள். கூக்குகள்,திறாங்குகள் போன்ற பூட்டும் சாதனங்கள்.சில உட்புறமாக மட்டும் திறக்கக் கூடிய தன்மையை கொண்டனவாகவும் விளங்கும். சில சங்கிலி கொண்ட பூட்டுக்களால் எப்போதும் பூட்டப் பட்டிருக்கும். இரவு வேளைகளில் படலைகளைப் பூட்டி வைப்பாரும் உளர். அது கள்வர் பயத்துக்காக.தோற்றம் எவ்வாறு இருந்தாலும் பூட்டுகள் சரியாக இல்லாவிட்டால் படலைகள் இருந்தும் அவற்றினால் ஒரு பயனும் இல்லாது போய் விடும்.சில வீடுகளில் ’நாய் கடிக்கும் கவனம்’ என்ற எச்சரிக்கைப் பலகையும் வைக்கப் பட்டிருக்கும்.சில படலைகள் ‘கண்ணைப் பார்;சிரி’ என்றும் சொல்லும்.


சில படலைகளை 45 கலன் கொள்கலனை வெட்டி அழுத்தி நீளமாக்கி அதைக் கொண்டும் படலைகளைச் செய்திருப்பார்கள்.அதன் ஓரத்தைப் பிடித்து தூக்கி கரைக்கு இழுத்துவரவேண்டும்.அது ஏழைகளின் படலை.சிக்கனமான படலை.சிறு காய்கறித் தோட்டங்களுக்கும் அப்படியான படலைகள் இருப்பதுண்டு.

பணக்கார வீட்டுப் படலைகள் கார் போக வசதியாக இரண்டு கதவுகளைக் கொண்டதாக ஒன்றும் அருகாக ஒற்றையாய் ஒரு படலை நடந்து வருபவர்களுக்காகவும் இருக்கும். (படலைகளும் வர்க்க வித்தியாசம் பார்க்கும் போலும்.)

முக்கியமான ஒரு யாழ்ப்பாணப் படலையைப் பற்றிச் சொல்லத் தான் இத்தனை ஆலாபனையும். அப்படலைக்குப் பெயர் ‘சங்கடப் படலை”.சங்கடத்தை (அசெளகரிகத்தை) தீர்க்கும் படலை என்று அதற்குப் பொருள் கொள்ளலாம்.இரண்டு நாளாக இந்தப் படலையின் படத்தைத் தேடியும் அது கிட்டவில்லை.அதனால் இப்படலையை நிச்சயமாக எங்கள் தேட்டங்களில் ஒன்றாக - பண்பாட்டுச் சின்னத்தில் ஒன்றாக கொள்ளலாம்.

அது எப்படி இருக்கும் என்றால் படலைக்கும் ஒரு வீடு இருக்கும். அதாவது இரட்டைப் படலை என்றால் அந்தப் படலைக்கு மேலே சிறு கூரையோடு கூடிய கிடுகினாலோ பனக்கார வீடென்றால் ஓட்டினாலோ வேய்ந்த கூரைப் பகுதி இடுக்கும்.அவை மழையில் இருந்தும் வெய்யிலில் இருந்தும் படலையை மட்டுமல்ல வழிப்போக்கரையும் காப்பாற்றும்.

முற்காலங்களில் அதன் அருகே குடி தண்ணீர் பானையில் வைக்கப் பட்டிருக்கும். மேலும் சில சுமை தாங்கிகளைக் கொண்டிருக்கும். அவை நடந்து போகும் வழிப் போக்கருக்கு நிழலையும் இளைப்பாறலையும் அளிக்கும்.

கூடவே தமிழரின் பண்பாட்டினையும் அது சொல்லி நிற்கும்.

அவை எல்லாம் இன்று அழிந்து வரலாற்று ஆவணங்களாகத் தன்னும் பார்க்க முடியாத நிலையில் போயிற்று.யாழ்ப்பாணத்து படலைகளின் அழகை தன்மையைக் கூறும் படங்கள் எதனையும் வலையிலும் காண முடியவில்லை.



(சங்கடப் படலை என்பது கிட்டத் தட்ட இது போல இருக்கும்.)இனி எவரேனும் தமிழ் பகுதிகளுக்குப் போனால் படலைகளையும் படம் எடுத்து வாருங்கள்.

அது பல கதைகள் பேசும் வரலாற்றுச் சின்னம்.
This entry was posted on 4:48 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On March 13, 2011 at 7:42 AM , ஹேமா said...

உண்மைதான் ....படலைகளுக்குள் நிறையக் கதைகள். சோகம்,
சந்தோஷம்,காதல் என்று நிறையவே.எங்கள் வீட்டுப்படலையில் இரண்டு மான் குட்டிகள் மேய்வதுபோல அழகான படலை.
இப்ப இல்லை அது !

 
On March 13, 2011 at 9:22 AM , ந.குணபாலன் said...

நீங்கள் குறிப்பிடும் சங்கடப்படலை வடிவில் படலைக்குப் பதிலாக மரக்கதவுகள் வைத்து சாந்தினால்(cement) திண்ணையும் குந்தும் வைத்துக் கட்டிக் கூரையாக ஓடு அல்லது

பா (plate) போட்ட இன்னொரு வகை நுழை வாசல் சில வளவுகளுக்கு இருக்கிறது. தலைவாசல் என்று பேர் சொல்லுவோம். வழிப்போக்கர் இருந்து காலாறவும், மழைக்கு ஒதுங்கவும் உதவும்.

 
On March 15, 2011 at 7:33 AM , வடலியூரான் said...

படலையைப் பற்றி இவ்வளவு விசயம் சொல்லியிருக்கிறீயள் அக்கா.படலைகள் காணாமல்ப் போய்க்கொண்டிருக்கின்ற இந்த நாட்களில் படலைபற்றி நல்லதொரு ஆவணப்பதிவு