Author: தமிழன்-கறுப்பி...
•9:06 AM
சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்


பாரதிதாசன் முதல் பலரும் எடுத்தாண்டிருந்த இந்த அழியாத வரிகளை அறிந்த அளவுக்கு அந்த வரிகளுக்குரிய முகத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. புதிரும் எளிமையும் நிரம்பிய அந்த முகம் என்னுடைய தெருவில்தான் இருந்தது என்பதை நான் எவ்வளவு தாமதமாக கண்டுகொண்டேன் என்பது இன்னமும் என்னால் ஈடு செய்ய் முடியாத அறியாமைகளில் ஒன்று. நான் ஒரு பொறுப்பற்றவனாக இருந்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. இந்த முகத்துக்குரிய அந்த கற்றலை சுமந்தலைந்த உயிரை கண்டுகொண்டிருந்தும் அந்த அறிவை பயன்படுத்தவே இல்லை என்பது எனன்னுடைய ஈடு செய்யவொண்ணா இழப்பு.

அலட்சியமாக அணிந்திருக்கிற வேட்டியும் சட்டையும், கலைந்திருக்கிற முடியும் அந்த முகத்தாடே கூட வந்தது போன்ற கண்ணாடியும் அதனுள்ளே படித்துக்களைத்த அறிவு நிரம்பிய கண்களும் என எளிமையின் உருவமாய உலவிக்கொண்டிருந்த அந்த மனிதருக்கு பெயர் க.சச்சிதானந்தன். இவருக்கு பல பட்டங்களும் விருதுகளும் இருந்தாலும் எங்களுடைய வட்டத்தில் சச்சி என்றே பேசிக்கொள்வோம், தெரியாதவர்களிடம் சொல்கையில் பண்டிதர் சச்சி (Prof - Sachi).

எழுதியே கரைந்த எனக்குப்பிடித்த சில எழுத்தாளுமைகளைப்போல சச்சி கற்றுக்கரைந்த ஒரு ஆத்மா. படிக்கப்படிக்க வருகிற ஞானம் என்னவென்பதை சச்சியின் மிக எளிமையான வாழ்வை நேரில் கண்டவர்களுக்கு தெரிந்திருக்கலாம். சில சமயங்களில் குடையும் பல நேரங்களில் குடையில்லாமலும் தும்பளை ரோட்டில் நடந்து போகிற சச்சியை பார்த்தால் இவர்தான் கலாநிதி பட்டம் வாங்கின கற்றவர்களுக்கெல்லாம் கற்பிக்கிற பண்டிதர் க.சச்சிதானந்தன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.அறிவு நிரம்பி வழிய நடக்கிற உருவம் அது.


சின்ன வயது தமிழ் புத்தகத்தில் பார்த்த பண்டிதர் சச்சியோடு நான் பேசவேண்டும் என நினைத்துக்கொண்டது ஆசிரியர் ரகுவரன் அவர்களின் ஊரும் வாழ்வும் புத்தகவெளியீட்டிற்கு பிறகுதான் அதுவரையும் ஒரு பெரிய பண்டிதரிடம் புதிர்மாதிரி உலவிக்கொண்டிருந்த அவரிடம் எப்படி அணுகுவதென்று தெரியாமல்தான் தடுமாறிக்கொண்டிருந்தேன். அந்த புத்தக வெளியீடு தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் நடந்தது. அங்கே வந்திருந்த மற்றவர்கள் எல்லாம் ஏதேதோ பேச தான் பிறந்த வளர்ந்த தும்பளை முன்னாளில் எப்படி இருந்தது என்பதை அந்த ஊரை அதன் வாழ்வை குறித்து பேசிய சச்சி; இயல்பான, அணுகக்கூடிய மனிதராக எனக்குத்தோன்றினார்.எழுத்துக்கும் வாழ்வுக்கும் நெருக்கமுள்ளவர்களாக ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.அதில் சச்சியையும் சேர்த்துக் கொண்டேன்.


அதற்கு பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரோடு சின்னச்சின்னதாய் பேசியிருக்கிறேன். கடைசி வரைக்கும் அவரோடு ஆறுதலாக இருந்து கேட்டறிவதற்கான சந்தர்ப்பத்தை அந்த நேரத்தில் என்னால் உருவாக்க முடியாதிருந்தது. அது என் வயதின் பலவீனமாய் இருக்கலாம். அவரோடு இருந்து கதைக்கவும் பழகவும் விரும்பிய நேரத்தில் அதனை செய்ய முடியாத தூரத்தில் நான் இருந்தேன். இவ்வளவு ஏன் அவர் மறைந்து போன விசயம் கூட இரண்டு மாதங்கள் தாமதமாகவே எனக்கு வந்து சேர்ந்தது.

அவர் கைப்பட எழுதிய சில பக்கங்கள் ஊரில் இருக்கிற என் புத்தக கட்டுகளுக்கிடையில் இருக்கிறதென நம்புகிறேன். ஈழத்து முற்றத்தில் அவரைக்குறித்து பகிர கிடைத்த சந்தர்பத்தை எனனால் சரியாக பயன்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. ஏறக்குறைய ஈழத்து முற்றம் தளத்தை நான் மறந்து விட்டிருந்தேன்(குழுமம் மன்னிக்குமாக). கொஞ்சம் தாமதமாகவே குழுமத்தின் அறிவிப்பை வாசித்திருந்தேன். என் கைவசமிருந்த அவரது மறைவு குறித்த நினைவோடையாக வெளிவந்த ஆனந்தத் தேன் என்கிற குறிப்பு புத்தகத்தலிருந்து அவரது வாழ்க்கைக்குறிப்பை இந்த சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறேன்.

ஈழத்தின் தமிழ் வரலாற்றுக்கு ஒரு பெரும் இழப்பாகிப்போன மனிதர்களை நேசித்த அந்த அறிவு, அதன் கடைசி காலங்களில் மிகுந்த வேதனைக்குள்ளாகியிருந்ததற்கு எமது நாடு பழிசுமந்தே ஆகவேண்டும்.


வாழ்க்கைக் குறிப்பு.

பிறப்பு : 19.10.1921

தந்தை : தும்பளை, கணபதிப்பிள்ளை.

தாய் : மாவிட்டபுரம், தெய்வானைப்பிள்ளை

ஆரம்பக்கல்வி : காங்கேசன் துறை நடேஸ்வராக்கல்லுரி.

தந்தையாரிடம் வானியலும் சொதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குரக்களிடமம் சமஸ்கிருதக்கல்வியும் பயின்றார்.

இடை நிலைக்கல்வி : பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம் மற்றும் ஹாட்லிக்கல்லூரி. ( 1936-37)

உயர் கல்வி : பரமேஸ்வராக் கல்லூரி (1938-1940)

மதுரைப்பண்ணடிதர் பட்டம் - இலங்கை,இந்தியா இரு நாடுகளிலும் முதன்மைச்சித்தி
(1941.09.30)

1946 - 1945: சுவாமி விபுலானந்தருக்கு ஆராய்ச்சித்துணைவர்

1946 : நீர் கொழும்பு St Mary's College இல் கணித ஆசிரியர்.

1947 – 1959: உடுவில் மகளிர் கல்லூரியில் கணித ஆசிரியர், தமிழ் சிறப்புப் பட்டம்

26.08.1949 : திருமணம்

1960 : பரமேஸ்வராக்கல்லூரியில் கணித ஆசிரியர்.

1961 : யாழ் இந்துக்கல்லுரியில் தமிழாசிரியர்

1962- 1965 : யாழ்,மத்திய கல்லூரி கணித ஆசிரியர்

1965 - 1967 அரசினர் பாடநூற்சபை எழுத்தாளர்.

1967 - 1981 : பலாலி ஆசிரியர் கலாசாலை உளவியற் பேராசிரியர்

1978 : M Phil in Psychology (London)

2001 : கலாநிதிப்பட்டம் (யாழ் பல்கலைக்கழகம்)

21.03.2008: மறைவு.

எழுதிய நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

1. ஆனந்தத்தேன் (கவிதை) 1955
2. தியாக மாமலை வரலாறு (1959)
3. யாழ்ப்பாணக்காவியம் (1998)
4. தமிழர் யாழியல் - ஆராய்ச்சி (1967)
5. மஞ்சு காசினியம் : இயங்கு தமிழியல் (2001)
6. Fundamentals of Tamil Prosody (2002)
7. இலங்கைக்காவியம் : பருவப் பாலியர் படும்பாடு (2002)
8. மஞ்சு மலர்க்கொத்து (சிறுவர் பாட்டு) (2003)
9. எடுத்த மலர்களும் கொடுத்த மாலையும் - கவிதை (2004)
10. S.J.V. Chelvanayaham ( In Print)


கட்டுரைகள் கவிதைகள்
#
தமிழன் (மதுரை) சக்தி ஈழகேசரியில் இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள்இ ஈழகேசரியில் தொடராக வெளிவந்த அன்னபூரணி என்ற முழு நாவல் - (1942) Ceylon Daily News இல் உளவியற் கட்டுரை.
#யாழ் பல்கலைக்கழக வெள்ளி விழாவின்போது சமர்ப்பித்த வானியல் (ஆராய்ச்சி)
#
ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தில் படிக்கப்பட்ட தமிழ் ஒலி மூலங்கள். (1989)
#
கலாநிதி கு.சிவப்பிரகாசம் நினைவாக வாசிக்கப்பட்ட உளவியல் அடிப்படையில் உவம இயல். (1990)
#
யாழ் பல்கலைக்கழகத்தில் வாசிக்கப்பட்ட இடைச்சொல் பற்றிய மூன்று எடுகோள்கள் (1991)
முதலிய எண்ணிறைந்தவை

பெற்ற விருதுகள்.

1. சாகித்தியரத்ன - இலங்கையில் இலக்கியத்துக்க வழங்கப்படும் அதியுயர் விருது (199)

2. சம்பந்தன் விருது (2001)

3. வட - கீழ் மாகாண ஆளுநர் விருது (2003)

4. தந்தை செல்வா நினைவு விருது (2004)

5. இலங்கை இலக்கியப்பேரவை விருது (2004)

5. கலாகீர்த்தி தேசிய விருது (2005)

6. இவைதவிர கவிதைக்காக தேசிய மட்டத்திலும் மகாண மட்டத்திலும் பலமுறை பரிசு பெற்றவர்.

_____________________________________________


பண்டிதர் க.சச்சிதானந்தன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெகு குறைவாகவே இருக்கிறதைப்போல உணர்கிறேன். அதற்காகவே அவருடைய பெயரையே தலைப்பாக வைத்திருக்கிறேன். ஊரில் சொல்லியிருக்கிறேன் மேலும் கிடைக்கிற தகவல்களை முடிந்தவரையில் திருத்தமாக பகிர்வேன்.


நன்றி.

ஆனந்தத்தேன்
மதுரைப்பண்டிதர் க.சச்சிதானந்தன்
B.A( Hons) Lond.M.Phil (lond) Ph.D (Jaffna)
நினைவோடை. (04.05.2008)
This entry was posted on 9:06 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On March 11, 2011 at 8:00 PM , கானா பிரபா said...

இப்போது தான் இவரைப் பற்றி அறிந்து கொண்டேன் நல்லதொரு ஆவணம்

 
On March 12, 2011 at 1:17 AM , யசோதா.பத்மநாதன் said...

எனக்கும் இது புதிய தகவல் தான்.

அவர் தமிழில் பண்டிதராகவும்,கணிதத்துறையில் ஆசிரியராகவும்,உளவியலில் கலாநிதிப் பட்டத்தை லண்டனில் பெற்றிருப்பதும் சாதாரண விடயமல்ல.

கண்டு கொள்ளப் படாத ஆளுமைகள்!

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

 
On March 12, 2011 at 1:39 AM , Muruganandan M.K. said...

அவர் இடம்பெயர்ந்து தும்பளையில் இருந்த காலத்தில் மருத்துவனாகவே சந்திக்க முடிந்திருக்கிறது. அவரோடு ஆறுதலாகப் பேச முடியவில்லை என்பது இன்னமும் கவலை அளிக்கிறது. எனது நண்பன் ரரகுவரன் நுர்ல் வெளியீட்டில் நீங்கள் சந்தித்த செய்தி மகிழ்வளிக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.

 
On March 12, 2011 at 10:58 AM , தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு நன்றி
கானா, மணி ஆச்சி, Doctor,
பண்டிதர் சச்சி தும்பளை, மாவிட்டபுரம், எண்டு பல இடங்களில் இருந்திருக்கிறார். ஆனால் அந்த இடப்பெயர்வுக்கு பிறகுதான் எனக்கு அவரை தெரிய வந்தது.

ஊருக்கு போயிருந்த பொழுது உங்கள் பதிவுகள் குறித்தும் ரகுவரன் sir உடன் கதைத்திருந்தேன், இணையத்தில் இருக்கிற வாசிப்பின் தளங்களை குறித்து கொஞ்சம் பேசியிருந்தோம். அவரிடமும் நிறைய கதைக்க இருக்கிறது.

 
On March 15, 2011 at 7:25 AM , வடலியூரான் said...

எனக்கும் என்னருகிலிருந்த அன்னாரை தெரியாமல் விட்டுவிட்டேனோ என்று உள்குத்துகிறது.பகிர்வுக்கு நன்றி

 
On March 15, 2011 at 5:22 PM , Anonymous said...

follow this link to read "anantha thean"

http://noolaham.net/project/38/3799/3799.pdf

 
On May 21, 2011 at 9:05 PM , Anonymous said...

நீங்கள் கூறுவது மறவன் புலவு க. சச்சதானந்தன் பற்றியா? அவர் 2010 தில்லித் தமிழ்ச் சங்கம் நடாத்திய கருத்தரங்கில் அப்துல் கலாம் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்படும் நிகழ்வு http://www.youtube.com/watch?v=rdIHXLlaHHU உள்ளதே? நீங்கள் மறைவு 2008 என இட்டுள்ளீர்கள். இரண்டும் வெவ்வேறு நபர்களா?

 
On July 28, 2013 at 6:31 AM , Unknown said...

இன்றுதான் அறிந்து கொண்டோம். ஈழம் தமிழுக்குச் செய்தது அதிகம். அவரது புகைப்படம் இடம்பெற்றிருந்தால் இன்னும்நல்லது. எமது sankaravadivu.blogspot.com -வலைப்பூவில் மீல்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரைச் சென்றடையட்டும் நல்லோரைப்பற்றிய தகவல்கள் என்னும் நோக்கோடு.