Author: ஃபஹீமாஜஹான்
•5:07 AM



யாழ்ப்பாணத்தவர்கள் தான் சரியாகத் தமிழைப் பேசுவதாக நினைத்துக் கொண்டிருப்பதைப்போலவே எங்கள் ஊர் மக்களும் தாங்கள் தான் சரியான தமிழைப்பேசுவதாக நினைத்து வெளியூர் மக்களின் தமிழை நையாண்டி செய்து கொண்டிருப்பவர்கள்.(எங்கள் பிரதேசம் எனும்போது வடமேல்மாகாணம், குருநாகல் மாவட்டம், இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில், ஹிரியால தேர்தல் தொகுதி மக்களையே குறிப்பிடுகிறேன்.)இதிலிருக்கும் முரண்நகை என்னவென்றால் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சூழலில் வாழும் இம் மக்கள் பேசும் தமிழ் உச்சரிப்புக்கள் சரியான தமிழ் உச்சரிப்புக்களாக இருப்பதில்லை.(இந்த அழகில் தான் தமிழைச் சரியாகப் பேசுகிறோம் என்று மற்ற மக்களைப் பார்த்து நையாண்டி செய்கின்றனர்)

ர,ண,ள,ழ உச்சரிப்புகள் இவர்களது சொல்லகராதியில் இல்லை.

ஊர் மொழியில் இதனை எழுதினேன் என்றால் இதன்பிறகு எனது பெயரைப் பார்த்தாலே ஈழத்து முற்றத்திலுள்ளவர்கள் ஓடத்தொடங்கிவிடுவார்கள் என்பதால் சில சொற்களை மாத்திரம் தருகிறேன்.

ஒவ்வொரு சொற்களாகப் பார்ப்போம்.

1.என்ன? - என்த?, ஏத்த,? (* இந்தச் சொல்லையே வேறு பிரதேசங்களில் என்தேன்? என்னதேன்? ஏதேன்? எனா? என்றெல்லாம் கூறுவர்)

2. ஏன்? - ஏ? எய்யா?

3. நுளம்பு - நெலும்பு

4. மரம் - மறம்

5. மழை - மல

6.தேநீர்- தேத்தண்ணி (இதே சொல் கிழக்கில் "தேயில குடிப்பம்" )

7.அவர் உன்னை வரச் சொன்னார்- அவறு ஒன்ன வறட்டாம் - அவறு ஒன்ன வறச் சென்னார்

8.மறந்துவிட்டது - நெனவாத்துப் பெயித்து

9. ஆற்றில் குளிக்கப் போவோம்- ஆத்துக்கு முழுக பொம்.

10. எருமை மாடு - கிடாமாடு

இதற்கு மேல் எழுதினால் என்னிடமுள்ள கொஞ்சத் தமிழ் சொற்களும் ஆபத்தில் வீழ்ந்துவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

(கானா பிரபாவின் நீண்ட நாள் வேண்டுகோள் இன்று நிறைவேறுகிறது)
Author: தமிழ் மதுரம்
•7:07 PM
’என்ன சின்னாச்சி, உன்ரை பேரன் சாப்பிட மனமில்லாதவன் போல எதைக் குடுத்தாலும் வேண்டாம் வேண்டாம் என்கிறான். என்ன விசயம்?
’’அதடி பிள்ளை உவனை முந்த நாள் உந்தக் ஆறுமுகத்தாற்றை பொட்டையின்ரை கலியாணத்துக்கெல்லே கூட்டிக் கொண்டு போனனாங்கள். அவன் தனக்குப் பருப்புக் கறியும் சோறும் நல்ல விருப்பம் என்டு, போட்டு ஒரு பிடியெல்லே பிடிச்சவன். அது தான் ஆரோ நாவூறு கொண்டு போட்டினம் போல.
’’சரி சும்மா வளவளவெண்டு கதைக்கிறதை விட்டிட்டு பொழுது பட முதல் ஓடிப் போய் வேப்பமிலையும், செத்தல் மிளகாயும், உப்பும் எடுத்துக் கொண்டுவா! உவனுக்கு ஒருக்கால் தடவிப் போடுவம். பிறகு இரவுச் சாப்பாடு சாப்பிடும் போது ஞாபகப்படுத்தடி பிள்ளை, ஒருக்கா தோண்டியும் கொட்டுவம்.


மேற்படி உரையாடலின் மூலம் நான் சொல்லவருவது என்னவென்று புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தடவிப் போடுதல் என்றால் என்ன? ஊரில் வடிவான பிள்ளையள் என்றால், தன்ரை பிள்ளையின் அதீத சுட்டித்தனச் செயற்பாட்டால் யாராவது நாவூறு கொண்டு போட்டார்கள் என்ற நினைப்பில் தன் பிள்ளையின் நாவூற்றினை/ கண்ணூற்றினை அகற்ற வேண்டும் நோக்கில் ‘உப்பு, செத்தல் மிளகாய், வேப்பமிலை’ இந்த மூன்றையும் இணைத்து அங்காலை திரும்பு, இங்காலை திரும்பு என்று சொல்லி உடம்பெல்லாம் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தடவிப் போட்டு அப்பிடியே நீ இந்தப் பக்கம் பார்க்காதை என்று சொல்லி ‘’தூ... தூ... தூ.. என்று மூன்று தரம் துப்பிப் போட்டு நெருப்பினுள்/ அடுப்பினுள் போடுவார்கள்.


நெருப்பினுள் போடும் போது சின்னச் சின்ன வெடிச்சத்தோடை அந்த உப்பு, வேப்பமிலை, செத்தல் மிளகாய் வெடிச்சு எரியும், நிறைய நெரம் வெடிச்செரிந்தால் நிறைய நாவூறு என்று சொல்லுவார்கள். இப்பிடியான விசயம் நடக்கிற நேரம் ‘ நான் படிச்ச விஞ்ஞானத்தின் படி உப்பை நெருப்புக்கை போட்டால் வெடிக்கும் தானே என்று நான் ஒருவரிடம் கேட்டு விட்டேன். பிறகு நாவூறு எரியுதென்று சும்மா ‘’பேக்காட்டல் விடுறீங்களோ?
உனக்கு விசயம் விளங்காது. நீ சின்னப் பொடியன். சொல்லுறதைக் கேள் என்று அதட்டிப் போட்டார்கள். (இது ஒரு மூட நம்பிக்கை தானே???)


இந்தப் பழக்கம் இன்றும் எமது ஈழத்தவர்கள் மத்தியிலே இருக்கிறது. ஒரு சிலர் இந்த உப்பு செத்தல் மிளகாய், வேப்பிலை போன்றவற்றால் தடவிப் போட்டு அடுப்பிற்குள், நெருப்பினுள் போடுவார்கள். வன்னிப் பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் இந்த மூன்று பொருட்களினாலும் தடவிப் போட்டுக் கிணற்றினுள் போடுவார்கள்.


இதிலை இரண்டு முறைகளுமே ஈழத்தில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிற பாட்டிமாரிடம் வழக்கத்தில் உள்ளன.

இனித் தோண்டிக் கொட்டுதல் பற்றிப் பார்ப்போம்: இந்தக் தோண்டிக் கொட்டுதலினை ‘சாப்பிட மனமில்லாது ஒருவர் அடம் பிடிக்கும் போது செய்வார்கள். உணவினை எடுத்து ஒரு பிடி பிடித்து அவரின் வாயிற்குள் உண்ணக் கொடுத்து, அந்தப் உணவினை அப்படியே நெருப்பினுள்/அடுப்பினுள் துப்பச் சொல்லுவார்கள். இப்படி மூன்று முறை நாவுறு கழியட்டும் என்று சொல்லிச் செய்வார்கள். இறுதியாக ஒரு சொட்டுத் தண்ணியும் கொடுத்து அப்பிடியே அதனையும் துப்பச் சொல்லுவார்கள்.


இப்பத் தான் நாவூறு கழிச்சிருக்கிறம். கொஞ்ச நேரம் பொறுத்துச் சாப்பிடலாம் என்று சொல்லித் தான் சாப்பாடு கொடுப்பார்கள்.



இம் முறைகள் இரண்டும் ஈழத்தில் இற்றைவரை முதியவர்கள் வாயிலாக வழக்கத்திலுள்ளன.
இது பற்றி மேலதிக விடயங்களை யாராவது அறிந்திருந்தால் சொல்லுங்கோ.


இனி பொருள் விளங்காத ஒரு சில நண்பர்களுக்காகப் பொருள் விளக்கங்கள்.



*நாவூறு கொண்டு போட்டீனம்: ஊர் கண்ணு பட்டுப் போச்சு.
*ஒரு பிடியெல்லே பிடிச்சவன்: ஒரு பிடி பிடித்தல் என்பது நல்லா ஆசையாக விடாமல் மூச்சு வாங்கப் போட்டுச் சாப்பிடுவது/ உணவு உண்பதனைக் குறிக்கும்.


*வளவளவெண்டு கதைக்கிறது: ஓயாமல் கதைத்தல், தொடர்ச்சியாக உரையாடுதல்.


*பொழுது பட முதல்: இருள்வதற்கு முன்/ அந்தி சாய முதல்.

*தடவிப் போடுதல்: திருஷ்டி கழித்தல்/ கண்ணூற்றினை அகற்றுவதற்குச் செய்யப்படும் ஒரு வகை செயற்பாடு.


தோண்டியும் கொட்டுதல்: உணவு உண்ணுதலின் போது காணப்படும் நாவூற்றினை அகற்றச் செய்யும் முறை.


*பேக்காட்டல்: ஏமாற்றுதல்/ பூச்சாண்டி காட்டுதல்/ சுத்துமாத்துச் செய்தல்.


*அடுப்பு: எங்கடை ஊரிலை விறகின் மூலம் வீட்டிற்குள்/ சமையலறையில் உணவினைச் சமைக்கும் இடத்தினை அடுப்படி/ அடுப்புப் போட்டு என்று சொல்லுவார்கள்.. இப்போதெல்லாம் நவீன பெயர்களிலை இதனை அழைக்கத் தொடங்கி விட்டார்கள்.


என்னை இப் பதிவினை எழுதத் தூண்டிய நண்பர் கானாபிரபாவின் ’’கண்ணூறு படப்போகுது, நாவூறு கழிப்பம்....! பதிவினைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
Author: Pragash
•11:48 AM
தம்பி பொழுது இருளுது. மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து எண்ணையை விட்டு ஆயத்தப்படுத்தியாச்சோ? படிக்கவேணுமெல்லோ? அம்மாவின் குரல் குசினிக்குள் இருந்து கேட்டது. வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு, ஜாம் போத்தல் விளக்கு மண்ணெண்ணெய், ஒரு சிறிய துணி இவற்றுடன் முற்றத்து வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு, முதல் நாள் இரவின் கரிபுகை மண்டிப்போய் இருந்த அரிக்கன் லாம்பின் சிமினியை மெதுவாக கழற்றி அதில் படிந்திருந்த புகையை துடைக்க துவங்கினேன். எனது பள்ளிக்கால பதின்ம வயதுகளில், இருள் சூழும் மம்மல் பொழுதுகளில் சிமினி துடைக்கிறதும், மண்ணெண்ணெய் விட்டு விளக்கு திரியை சரிபார்ப்பதும், திரி கட்டையாகிப்போனால் துணியை கிழித்து புது திரி சுற்றி போடுவதும் எனது அன்றாட கடமைகளில் ஒன்றாகி போனது. 

பொருளாதார தடையின் இன்னொரு பகுதியான மின்சார வெளிச்சம் இல்லாத அன்றைய நாட்களில் வீடுகளிற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தவை அரிக்கன் லாம்புகளும், சிமினி விளக்குகளும், ஜாம் போத்தல் விளக்குகளும், மெழுகுதிரிகளும் சில குப்பி விளக்குகளும் தான் ஒவ்வொரு வீடுகளிலும் சிமிட்டி சிமிட்டி இருளை விரட்டிக்கொண்டிருந்தன. இந்த விளக்குகளிற்கு எல்லாம் ஆதார சுருதி இந்த மண்ணெண்ணெய். அன்று இருந்த பொருளாதார நிலைமையில் நிவாரணத்திற்கு சங்கங்களில் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றாக இந்த மண்ணெண்ணையும் இருந்தபடியாலோ என்னவோ கடைகளில் கூட தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டிருந்தது. 

எங்கள் வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு ஒன்றும், பித்தளையில் செய்த திரி விளக்கு ஒன்றும், ஜாம் போத்தல் விளக்கொன்றுடனும் தான் பொழுது இருட்டியதில் இருந்து படுக்கைக்கு போகும் வரையான சகல கடமைகளும் இந்த மூன்று விளக்குகளுடனுமே நடந்தேறும். இதில் ஜாம் போத்தல் விளக்கு மட்டும் எங்களுடன் விடியும் வரைக்கும் துணையிருக்கும். அது தான் எங்களுக்கு விடிவிளக்கு. மறுநாள் பள்ளிக்கூடத்தில் கூட எமது பாடப்புத்தகங்களை புரட்டும் போது அதில் கூட மண்ணெண்ணெய் மணம் வீசும் அளவிற்கு மண்ணெண்ணெய் எமது வாழ்வுடன் ஒன்றிப்போனது. 


பின்னூட்டங்களை பார்த்த பின்பு ஒரு பின்குறிப்பு: ஜாம் போத்தல் விளக்கு என்றால் என்ன என்பது பற்றி கேட்கப்போகும் தலைமுறைக்காக கீழே உள்ள படம். 



ஜாம் போத்தல் விளக்கு என பெயர் வந்த காரணம், முன்னர் தக்காளி ஜாம், விளாம்பழ ஜாம் அடைத்து வரும் போத்தல்களிலேயே இது தயாரிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவும் நேரங்களில் கை கொடுக்கும் சிக்கன விளக்காக பயன்பட்டது. கீழே அனா பின்னூட்டத்திலேயே ஜாம் போத்தல் விளக்கை கண் முன்னே கொண்டுவந்துள்ளார். இந்த பதிவிலும்  இதை பற்றி தரப்பட்டுள்ளது.
Author: வர்மா
•2:20 AM
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் வடமராச்சிக்கு மாற்றலாகிச் சென்றார். அரசாங்க உயரதிகாரியான அவர் அனைவரிடமும் சகஜமாக பழகுவார். அவருடைய சகோதரி இலண்டனில் வசிக்கிறார். லண்டனில் வசிக்கும் தனது சகோதரிக்கு உணவுப்பொருட்களை அடிக்கடி அனுப்புவார்.
“லண்டனில் தங்கச்சி இருக்கிறா லண்டனுக்கு அனுப்புறதுக்கு இங்கை நல்ல சாப்பாட்டு சாமான் என்ன கிடைக்கும்” என்று வடமராச்சி அலுவலகத்திலுள்ள நண்பரிடம் கேட்டார்.
“புண்ணாக்கு” என்று வடமராச்சியைச் சேர்ந்த நபர் பக்கெ பதில் கூறினார். யாழ்ப்பாண அதிகாரி திகைத்தவிட்டார். அவருடைய திகைப்பைப் பொருட்படுத்தாத வடமராச்சி நண்பர் தொடர்ந்தார்.
“புண்ணாக்கு உடம்புக்கு நல்லது. பொலிகண்டி, வல்வெட்டித்துறையில் சொன்னால் கையால இடிச்சுத் தருவார்கள் நாங்களும் புண்ணாக்கைத்தான் அனுப்புகிறோம்” என்றார்.
யாழ்ப்பாண அதிகாரியின் திகைப்பை கொஞ்சநேரம் ரசித்த வடமராச்சி நண்பர். “எள்ளுப்பாகை நாங்கள் எள்ளு புண்ணாக்கு என்போம் சிலவேளை புண்ணாக்கு என்றும் சொல்வோம்” என்றார். கையால் இடித்த புண்ணாக்கு கடையில் வாங்குவதை விட சுவையாக இருக்கும். நீங்கள் வடமராச்சிக்கு போனால் புண்ணாக்கு வாங்க மறந்து போகாதையுங்கோ.

சகஜம்---------------------------------ஏற்றதாழ்வு இன்றிப் பழகுவது
பக்கெனபதில்--------------------உடனடியாக பதில்
கையால் இடிச்ச-------------உரலில் போட்டு உலக்கையால் இடிப்பது
Author: M.Rishan Shareef
•6:18 PM
காலச்சுவடு பதிப்பகம் மற்றும் தமிழியல் இணைந்து நடத்தும் எட்டு ஈழத்து நூல்களின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 03, 2010) மாலை ஆறு மணிக்கு, இந்தியா, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது.


இது சம்பந்தமாக காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் திரு.கண்ணன் சுந்தரம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் திரு.கானா பிரபாவுக்கு வழங்கிய அறிமுகம் கீழே...






Author: Subankan
•7:04 AM

“என்ன அன்டி, கையில பாக்கையும் காவிக்கொண்டு வந்திருக்கிறியள்? என்ன விசயம்?”
“ஒண்டுமில்லை, சண்முகமண்ணேன்ட கடையில நல்ல வெள்ளைச் சீனி வந்திருக்கு. கொழும்பு விலையைவிட கிலோ இருவது ரூவாதான் கூடவாம். அதுதான் வேணுமெண்டா வாங்கிவையுங்கோவெண்டு சொல்லிட்டுப் போக வந்தனான்”

எந்த ஒரு பொருளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைதான் இந்தக் கொழும்புவிலை. என்னதான் அதிகபட்ச விலை என்றாலும், தரைவழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல கட்டுப்பாடுகளுக்கும் தடைகளுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த கடல்வழிப் போக்குவரத்தாலும் இந்த விலை எங்களுக்கு எப்படியும் குறைந்தபட்ச விலையிலும் குறைவாகத்தான் இருக்கும்.



ஊர்க்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சமயங்களில் கொழும்பு விலையின் இரண்டு, மூன்று மடங்கைவிட அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களும் இங்கே சகஜம். இந்த விலை அதிகரிப்பை பொருளின் தேவை, கடல்மார்க்கத்தில் எடுத்துவர ஆகும் செலவு, யுத்த சூழ்நிலை முதற்கொண்டு கடையில் இருக்கும் பதுக்கல் வரை தீர்மானிக்கும்.

இந்தக் கொழும்புவிலை என்பது பல ஆண்டுகாலப் பாவனையால் நம்மவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது. எந்தப் பொருளையும் அதன் கொழும்புவிலையுடன் ஒப்பிடுவதும், அதுகுறித்து அடுத்தவருடன் பேசிக்கொள்வதும், அதேபோல கொழும்புக்கு வருபவர்கள் குறைந்தவிலையால் தேவைக்கு அதிகமாக வாங்க விரும்புவதும் எம்மவரிடையே இயல்பான ஒன்று.

இந்த விலைவித்தியாசத்தால், கொழும்பிலிருந்து ஊருக்குப் பயணப்படும் ஒவ்வொருவரும் தமது சக்திக்கும் அப்பாற்பட்ட பொருட்களை தம்முடன் எடுத்துச்செல்வார்கள். மாரளவு தண்ணீரில், தலையில் பொருட்களைச் சுமந்துசென்றும், படகிலும், பின் முன்னாலும் பின்னாலும் பலகை அடித்த மண்ணெய் மோட்டார்சைக்கிளிலும் கொம்படி ஊரியான் பாதையில் பயணித்து, வீடு வந்து சேர்கையில் பொருட்கள் தமது உண்மையான தன்மையையே பல நேரங்களில் இழந்துவிட்டிருந்தாலும், கொழும்பிலிருந்து வந்தால் இப்படியாக பொருட்கள் காவிவருவதும், அதை உறவினர், அயலவருடன் பகிர்வதும் ஏறத்தாள எழுதப்படாத சட்டம்போன்றது.

பல ஆண்டுகளாக நம் பாவனையில் இருந்து இந்தக் கொழும்புவிலை நம் வட்டாரச் சொற்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. தரைவழிப் போக்குவரத்துகள் சீர்செய்யப்பட்டு, விலை வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்ட இன்றும்கூட,
“மச்சான் பைக் ஒண்டு பாத்திருக்கன், இங்கை 1.60 சொல்லுறாங்கள். அங்க எவ்வளவு போகுதெண்டு ஒருக்காப் பாத்துச் சொல்லுறியா”
 என்ற நண்பனின் அழைப்பிலும், ஆப்பிள்களை பைக்குள் அடைந்துகொண்டு யாழ் செல்லும் ஆச்சிகளிலும், “கொழும்பு விலையில்…” என்று ஆரம்பிக்கும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகை விளம்பரங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது இந்தக் கொழும்பு விலை.

Author: Pragash
•9:31 AM
இடுப்பில் இருந்து நழுவிக்கொண்டு இருக்கும், பொத்தான் அறுந்த அரைக்கால் சட்டையை இறுக இழுத்து பிடித்துக்கொண்டு, அரிவி வெட்டுக்கு ஆயத்தமாய், மஞ்சள் நிற நெல்மணிகளின் பாரம் தாங்காமல் கதிர் தலைசாய்த்து படுத்திருந்த வயல் வரப்புகளின் வேகமாய் ஓடிக் கொண்டிருக்க, சுருக் .காலில் ஏதோ குத்த வேகம் தடைப்பட்டது. ஆ வென லேசாக முனகிக் கொண்டு ஒற்றை காலில் கெந்தியபடி, பாதத்தை தூக்கி பார்த்தால். அதில் எதுவும் இல்லை. அப்படி எண்டால் குத்தினது நெருஞ்சி தான். வரப்பில் இருந்த நெருஞ்சி செடியை பார்த்ததும் முள்ளு குத்தின வலி மறந்து போக, மெல்ல குனிந்து அதன் சின்னஞ்சிறு இலைகளை மெதுவாக விரல்களால் வருட, இலைகள் மெதுவாக ஒடுங்கி சுருங்கும் வடிவை பார்த்தபடி மனம் அதில் லயித்தது.
என்ன ராசா தொட்டா சிணுங்கி காலில குத்திப்போட்டுதோ? தொட்டாசிணுங்கி மேலிருந்த கவனம் கலைய நிமிர்ந்து பார்த்தேன்.கசங்கிய நைந்த நூல்புடவையும் தலையில் இறுக கட்டிய முண்டாசுத்துணி, கையில் அரிவிச்சத்தகத்துடன் ஒரு மூதாட்டி புன்முறுவலுடன் கேட்டபடி வரப்புகளில் போய்க்கொண்டிருந்தார். பின்னால் ஆண்களும் பெண்களுமாக நாலைந்து பேர் கையில் சத்தகங்களுடன் வரிசையாக போய்க்கொண்டிருந்தனர். எங்கேயோ அரிவி வெட்டுக்கு போய்க்கொண்டிருக்கினம் போல. ஏற்கெனவே ஆங்காங்கு வெட்டு நடந்துகொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. சிலவயல்களில் வெட்டு முடிந்து நெல் போர் (சில இடங்களில் சூட்டுப்போர் என சொல்கிறார்கள்) குவித்து வைத்திருந்தார்கள். மாரிமழையில் வெள்ளம ததும்பி, தளம்பி நின்ற பச்சைப்பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியான வயல்வெளிகள் மாறி, வெள்ளம் வற்றி மஞ்சள் கதிர் காற்றிலாடிய காட்சிகளை காண இனி அடுத்த வருடம் வரைக்கும் காத்திருக்க வேணும்.பெரும்பாலும் யாழ்ப்பாணத்துக்காணிகளில் மாசி நடுப்பகுதியில் அரிவி வெட்டு துவங்கி விடும். 

ஈழத்து விவசாயப்பிரதேசங்களில் நெற்செய்கை இரண்டு போகங்களில் செய்யப்படுவதுண்டு. ஒன்று பெரும்போகம், பருவமழையை அண்டியகாலங்களில் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்துகாணிகளில் பெரும்பாலானவை பெரும்போக காணிகள். மற்றது சிறு போகம், ஆறு குளங்களை அண்டிய பிரதேசங்களில் செய்யப்படுவது. வன்னி பிரதேசங்களில் இரண்டு போகமும் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில ஆறு குளம் ஏதும் இருக்கோ? நான் அறிஞ்ச வரைக்கும் வழுக்கையாறு ஒன்று தான் யாழ்ப்பாணத்தில இருக்குது என நினைக்கிறேன். ( வீட்டுக்கிணத்தில வளர்க்கிறதுக்கு, வழுக்கையாத்தில போய் கெளுத்தி மீன் பிடிச்சுக்கொண்டு வந்து வீட்டு கிணத்தில விட்ட அனுபவம் ஒன்றிருக்கு.). இப்ப பெரும்போக அறுவடை தான் நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில அரிவி வெட்டிக்கொண்டிருந்த ஒரு வயல் பக்கமாய் போய் வரப்பில் அமர்ந்து கொண்டேன். வெட்டுபவர்கள் குனிந்த நிலையிலேயே வெட்டும் லாவகமும், ஒரு கை கதிர்களை அடியோடு சேர்த்து கொத்தாக பிடிக்க மறுகையில் இருந்த அரிவி சத்தகம் சரக் சரக் எனும் சத்தத்தோடு கதிர்களை அறுக்கும் வேகமும் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். 

என்னடா தம்பி பார்க்கிறாய்? நீயும் வெட்டிப்பாக்கிறியா? வயலில் வெட்டிக்கொண்டிருந்த பெரியவர் அழைக்கவும், நானும் வலு சந்தோசமா ஓடிப்போய் அவரின் கையில் இருந்த சத்தகத்தை வாங்கிக்கொண்டேன். பார்த்து வெட்டு கையை கிய்யை அறுத்துப்போடாதை சொல்லிக்கொண்டே சத்தகத்தை தந்தார். பார்க்கும்போது இலகுவாய் ப்பூ இவ்வளவுதானா என தெரியும் அவ்வேலை எவ்வளவு கடினமானது என சத்தகத்தை கையில் வாங்கிய சிலநிமிடங்களில் விளங்கியது. ஓரடி வெட்டுவதற்குள் முதுகு விண் விண்ணென்று வலித்தது. இவர்கள் வயல் வேலையிலேயே தொடர்ந்து ஈடுபடுவதால் இவர்களுக்கு இது பழக்கமாகி விட்டிருக்கும். நானும் மெல்ல முதுகை நிமிர்த்தவும் பெரியவர் சிரித்தார். சத்தகத்தை அவர் கையில் கொடுத்து விட்டு மெல்ல நழுவினேன். உச்சிவேளை நெருங்கும் சமயத்தில் கிட்டத்தட்ட அரைவாசி வயலுக்கு மேல் வெட்டி முடித்திருந்தார்கள். வெட்டிய நெல்கதிர் கற்றைகள் அழகாக அடுக்கி வைத்திருந்தனர். இனி மத்தியான சாப்பாட்டிற்கு பிறகு போரடிப்பு நடக்கும் இதுமுதல்அடிப்பு.ஆண்கள் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். 

வயலின் ஒரு மூலையில் பெரிய சாக்குப்படங்கு ஒன்று விரிக்கப்பட்டிருக்க, அதன் மேல் ஒருவர் கயிற்று துண்டொன்றுடன் ஆயத்தமாக நின்றிருந்தார். பெண்கள் ஆங்காங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த கதிர்களை (நெற்போர்) பெரிய கத்தையாக ஒன்று சேர்த்து தலையில் சுமந்து கொண்டு வந்து படங்கின் மேல் நின்று கொண்டிருந்தவரிடம் கொடுக்க, அவர் அதை கையில் வைத்திருந்த கயிற்றால் ஒரு சுற்று பிடித்து வாங்கி படங்கின் மீது ஓங்கி நாலைந்து தரம் அடித்தபின் அந்த கத்தையை படங்கிற்கு வெளியில் ஆயத்தமாக நிற்கும் இருவரிடமும் எறிய, அவர்கள் லாவகமாக பிடித்து வைக்கோல் போர் அடுக்குவது போல் வட்டமாக கூம்பு வடிவில் அடுக்கி (சூடுவைப்பு) கொண்டிருந்தனர். அதில் இன்னும் கதிர்கள் உதிராமல் இருந்தன. படங்கில் நிற்பவர் கதிர்கத்தையை அடித்த இடத்தில் நெல்மணிகள் குவிந்து கொண்டிருந்தன. 

வேலை சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் நடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக மாலை நான்கு மணியளவில் கதிரடிப்பு நிறைவு பெற்றதும், இன்னொருவர் கொண்டுவந்திருந்த சுளகில் நெல்லை அள்ளி தலைக்கு மேல் தூக்கி பிடித்து காற்று வீசும் திசையில் சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டிருந்தார். அதற்கு பெயர் நெல் தூற்றுதல். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" எண்டொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பியள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதே காரியத்தை முடித்துக்கொள் என பொருள் வரும்படியான பழமொழி அது. அந்த பழமொழிக்கு அடிப்படையாக இருக்கும் ஒரு செயல் இது தான். கொட்டும்போது நெல்மணிகள் நேராக கீழே விழ அதில் இருந்த வைக்கோல் தூசிகள் அகன்று வீசும் காற்றின் திசையில் பறந்து போய்க்கொண்டிருந்தன. 


எல்லாம் முடிந்தாயிற்று. வயல் சொந்தக்காரர் தயாராக கொண்டு வந்திருந்த சாக்குப்பைகளில் குவிந்திருந்த நெல்லை போட்டு கட்டி, மாட்டுவண்டியில் ஏற்றிவிட மாடுகள் மெல்ல வீடு நோக்கி நகரவாரம்பித்தன. காலையில் கதிர்கள் தலைசாய்த்து படுத்திருந்த வயலில் இப்போது பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் பிளாஸ்டிக் படங்கால் மூடிக்கட்டப்பட்ட சூட்டுப்போர் ஒன்று தலை நிமிர்ந்து நின்றிருந்தது. அறுவடையான வயலில் இப்போது வெண்கொக்குகளும், புறாக்களும் காகங்களும் மேய்ந்து கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்து காணிகள் எல்லாம் பரப்புக்கணக்கில் தான் அளவிடப்படுகின்றன. வேறு அளவீடுகள் ஏதும் இருந்தால் சொல்லுங்கோ. ஏக்கர் கணக்கு காணிகளை பாக்கிறதென்டால் வன்னிக்கு தான் போகவேணும். 


அரிவி வெட்டு = அறுவடை, அரிவிச்சத்தகம்= அறுவடைக்கு பாவிக்கிற அரிவாள் இது இடத்துக்கிடம் பெயர் மாறுபடலாம். வேறு பெயர்கள் தெரிந்தால் சொல்லுங்கோ. படங்கு= இது சாக்குகளை இணைத்து செய்வது. சிலபேர் போரடிப்புக்கு என பிரத்தியேகமாய் செய்த பாய் பாவிப்பினம். அதை கதிர்ப்பாய் என்று சொல்லுவினம். போரடிப்பு= வெட்டினவுடன் வயலிலேயே கதிர்களை அடித்து நெல்லை சேகரிப்பது. ஆனாலும் எல்லா நெல்லும் இதில் உதிர்ந்து விழாது. அடுக்கி சூடு வச்சு நன்றாக காய்ந்த பின்னர் ஓரிரு மாதத்திற்கு பிறகு மாடுகளை வைத்து மிதித்து நெல்மணிகளை உதிரவைப்பது சூடடிப்பு. இதை பற்றி பிறகு நான் எழுதுகிறேன். ஈழத்தில் பெரும்பாலும் ஆங்கில நாள்காட்டி முறை பயன்படுத்தினாலும் விவசாய செய்கைகளுக்கு தமிழ் நாள்காட்டி முறையே பயன்படுத்தபடுவது வழக்கம்.