Author: கலை
•3:51 AM
இந்த நத்தார் விடுமுறைக்கு ஒரு சின்ன சுற்றுலா போய் வந்தன். அதுல பொறுக்கின சில சொற்களும், கூடவே நினைவுக்கு வந்த சில பழைய சொற்களும் இங்க தாறன்.

உண்ணாணை

ஆச்சி சொல்லுவா, ‘உண்ணாணை நான் அங்க போட்டுத்தான் இப்ப வாறன்'. இதில, இந்த உண்ணாணை என்பது உன் + ஆணை, அதாவது 'உன்மேல் ஆணையாகச் சொல்கிறேன்' என்னும் பொருள்பட ஒரு சத்தியம் செய்வதுபோல சொல்லப்படுகிறது என நினைக்கிறேன். தற்போது இந்தச் சொல்லை யாராவது பயன்படுத்துகிறார்களா தெரியவில்லை.

அயத்துப் போனன்

இதுவும் ஆச்சி சொல்வதுதான். ”உண்ணாணை, அதை நான் அயத்துத் துலைஞ்சு போனன்”. அதாவது 'அதை மறந்துவிட்டேன்'.

அயந்துபோனன்

”நான் நல்லா அயந்துபோனன். அதில நீ வந்தது சத்தமே கேக்கேல்லை”. நான் நன்றாக நித்திரையாகி விட்டேன் / தூங்கி விட்டேன் என்ற பொருள்படும். 'தூங்கிறது' என்பதுகூட வேறு பொருள்தானே? ”அவள் தூங்கிட்டாளாம்” என்னும்போது, 'கழுத்தில சுருக்குப் போட்டு தற்கொலை செய்திட்டாளாம்' என்ற பொருள் படும்.

போந்த பொலிஞ்ச

ஒரு நல்ல வாட்ட சாட்டமான (குண்டான என்பதை இப்படி நாகரீகமாக சொல்லுறன்) ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கூறியது. “நீர் நல்ல போந்த பொலிஞ்ச Santa வாத்தான் இருக்கிறீர்”. நத்தார் காலமானதால், காலத்துக்கேற்ற படி (பகிடியாக) சொன்னார்.

கம்பி நீட்டிறது

அவளை தனிய விட்டால் கம்பி நீட்டினாலும் நீட்டிடுவாள்” என்றால், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிடுவாள் என்பதாகப் பொருள் வரும்.

பேய்.... உடன் வரும் சொற்கள் :)

கவனிக்க! பேய்க்கதை என்பது பேயைப்பற்றின கதையல்ல :). ”என்ன பேய்க்கதை கதைக்கிறாய்?, என்றாலோ அல்லது “சும்மா பேய்க்கதை கதையாதை” என்றாலோ, அதில 'பேய்க்கதை' என்பது 'விசர்க்கதை' அல்லது 'அர்த்தமற்ற கதை' என்பதாகப் பொருள்படும்.

அதே நேரம், ”அந்தாள் பேய்க்கடி கடிக்கும்” என்றாலோ, அல்லது “அந்தாள் பேய் அறுவை அறுக்கும்” என்றாலோ, ‘அந்த ஆள் நிறையவே வேண்டாத பேச்சுக்கள் பேசி நம்மை உண்டு, இல்லையெண்டு ஆக்கிவிடும்' என்பதாகப் பொருள்படும். அதாவது இந்த இடத்தில் ‘பேய்' என்பது, ‘நிறைய' என்ற பொருளில் வரும்.

(இதையெல்லாம் இங்க எழுதி நான்தான் இப்ப பேய் அறுவை அறுக்கிறேனோ தெரியேல்லை, ஹி ஹி. அதால இப்போதைக்கு நிப்பாட்டுறன்).


This entry was posted on 3:51 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On December 30, 2009 at 5:05 AM , கானா பிரபா said...

போந்த பொலிஞ்ச// உண்ணாணை இண்டைக்குத் தான் உந்தச் சொல்லைக்
கேள்விப்படுகிறன் ;)

நல்லாயிருக்கு

 
On December 30, 2009 at 8:09 PM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

பொலியிறது என்றால் நிறைய விளைவது என்டு தான் எனக்குத் தெரியும். //போந்த பொலிஞ்ச // புதிதாய் அறிந்து கொண்டேன்.

 
On January 2, 2010 at 2:29 PM , கலை said...

//பொலியிறது என்றால் நிறைய விளைவது என்டு தான் எனக்குத் தெரியும்.//குண்டாய் இருக்கிற ஆக்களைப் பாத்து 'விளைஞ்சுபோய்' இருக்கிறதாயும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன். அப்ப அந்த அர்த்தத்திலதான் போல சொல்லுகினம். அதோட குண்டா இருக்கிறவையை ‘நல்ல தொக்கை' எண்டும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன். அந்தச் சொல் எப்படி வந்ததெண்டு தெரியேல்லை.

 
On February 10, 2010 at 3:10 AM , தமிழன்-கறுப்பி... said...

அட.. பேய்காய்தான் நீர்.

:)

 
On February 18, 2010 at 1:42 AM , Sivaa said...

உங்கள் வலைபக்கத்தை இன்றுதான் கண்டேன்
மிக அறிவான விடயங்கள் உள்ள பக்கம்