Author: கலை
•7:14 AM

தமிழ் விக்கிப்பீடியா தமிழுக்கான ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். இதற்கு ஒவ்வொருவரும் பங்களிக்க முடியும். எழுதுவதற்கு நேரமில்லாதவர்கள், தமக்குச் சொந்தமான, தம்மிடமிருக்கும் படங்கள், ஒலிக்கோப்புக்கள், ஒளிக்கோப்புக்களை மட்டுமாவது பதிவேற்றம் செய்து வைக்க முடியும். பதிவேற்றம் செய்வது மிகவும் இலகு. இப்படியான பங்களிப்பை அதிகரிப்பதற்கான ஒரு போட்டிதான் இந்த விக்கி ஊடகப்போட்டி. அனைவரையும் பங்குபற்ற அழைக்கிறேன். இது தொடர்பாக எழுதப்படாத அறிவு என்ற தலைப்பில் நக்கீரன் தமிழ்விக்கிப்பீடியா வலைப்பதிவில் எழுதியிருக்கின்றார். அதனையும் பாருங்கள்.
Author: யசோதா.பத்மநாதன்
•4:04 AM


என்ன எல்லாரும் சுகமா இருக்கிறியளோ?

அண்மையில் சிட்னியில் இருக்கும் பிரபலமான கடை ஒன்றுக்குப் போனேன்.

அங்கு,மூங்கிலினால் மிக நேர்த்தியாக வளைத்துச் செய்யப் பட்ட பல வடிவங்களைக் கொண்ட பாத்திரங்கள் வியற்நாம் நாட்டவர்களால் வீட்டுக் கைவினையாகச் செய்து சந்தையிடப் படுகின்றன. மிக இலேசாகவும் வசீகரமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கும் அப்பாத்திரங்கள் புழக்கத்துக்கும் சுகமானவை.இலேசானவை.கூடவே மரத்தினால் வடிவமைக்கப் பட்ட கரண்டிகளும் குடுவைகளும் உள்ளன.அது மாத்திரமன்றி ஓலைகளால் இழைக்கப் பட்ட பெட்டிகள்,பல ரகங்களிலும் பல அளவுகளிலும் மூடிகளோடும் வருகின்றன.

இவற்றைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து விட்டன.இப்போது வாயு,மின்சார அடுப்புகளும் உலோகத்தாலான ஸ்ரிமரும் பாவனைக்கு வந்து விட்டன.பிட்டு அவிப்பது வேலை மினைக்கேடு ஆகி ரெடிமேட் சாப்பாடுகள் வீட்டு மேசைக்கு வர ஆரம்பித்து விட்டன.

இனி ஈழத்து முற்றத்துக்கு யாரும் வந்து முந்தி எப்பிடி நாங்கள் பு(பி)ட்டு அவித்தோம் என்று பார்க்கிற காலம் வரும்.

அதற்காகத் தான் இந்தப் பதிவு.ஏதோ என்னால் முடிந்தது!:)

முன்னர் ஒரு காலம்! இற்றைக்கு 35,40 வருடங்களாவது இருக்கும்!!

அது ஒரு கொண்டாட்ட காலம்! தாயக மண்.போர் மூளாக் காலம்!!

யாழ்ப்பாணத்தில் ஊர் கோயில் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது என் தாயாரின் தாய் தந்தையரின் வீட்டுக்கு மற்றும் தந்தையாரின் தாய் தந்தையர் வீட்டுக்கு போவது வழமை.திருமணமாகி வெளியூர்களில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்களின் சகோதர சகோதரிகளின் குடும்பம் ஒன்று கூடும் காலமும் அது தான்.

பலாப்பழம்,வெத்திலைத் தட்டம்,பாக்குரல்,மூக்குப் பேணி,சிவப்பு சீமேந்துத் தரை,பனையோலை,முள்முருக்கு, கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் வாழைக்குலை, மற்றும் வெங்காயம்,மாட்டுக் கொட்டில்,மாதுளங்கன்று,கிளி கோதிய மாம்பழம்,விழுந்து கிடக்கும் விளாம்பழம்,புலவு என்று அழைக்கப் படும் தோட்டம்,கற்தறை,அதற்குள்ளும் செழித்து வளர்ந்திருக்கும் புகையிலைத் தோட்டங்கள்,செம்மண்,கிணறு,துலா,நெசவுசாலை,காங்கேசன் துறை சீமேந்துக் கூட்டுத் தாபனத்து விசில் ஓசை,எண்ணை வைத்து வாரி இரட்டை பின்னலோடு திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டு வெள்ளைச் சீருடையில் சைக்கிள் ஓடும் மாணவிகள் மற்றும் மாணவர்கள்,இரவு 8.30க்கு காங்கேசன் துறையில் வந்து நிற்கும் யாழ்தேவி ,திருவிழாக்காலங்கள்,வாழையிலைச் சாப்பாடு,தண்னீர் பந்தல்,காப்புகள்,அம்மம்மா குழல்....என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நினைவுகள்!

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் நினைவுகளிலும் நிழலாடக் கூடும்!

அத் திருவிழாக் காலங்களில் வீட்டிலும் திருவிழாத் தான்.மாலை ஆறுமணி அளவில் சமையலறை பக்கமாய் மிக அமளியாய் இருக்கும்.தென்னந்தும்பும் சாம்பலும் கொண்டு விளக்கப் பட்ட வெங்கலப் பானையில் காய்ந்த தென்னம் மட்டைகளாலும் பன்னாடை மற்றும் பனை மட்டைகளாலும் எரிக்கப் படும் அடுப்பில் மருமக்களும் மச்சாள் மார்களுமாகக் குழல் புட்டு/ நீத்துப் பெட்டியில் பிட்டு அவிக்கும் வாசம் தூள் கிழப்பும்.

பிட்டும் தேங்காய் பூவும் தரும் வாசம் என்பதையும் தாண்டி பனை ஓலையால் கூம்பு வடிவில் தயாரிக்கப் படும் நீத்துப் பெட்டிக்கும் மூங்கில் குளாயினால் செய்து பருத்தித் துணி கொண்டு சுற்றப் பட்ட பிட்டுக் குழலினால் அவிக்கப் படும் பிட்டு மீண்டும் பனை ஓலைப் பெட்டிக்குள் கொட்டப் படும்.பிட்டின் வாசமும் தேங்காய்ப்பூ வாசமும்,பனை ஓலையின் வாசமும் சேர்ந்து ஒரு வித வாசம் அந்த வீடு பூரா பரவும்.

அதன் வாசமும் சுவையும் தனி.அதற்கு நல்லெண்னையில் பொரித்த கத்தரிக்காய் பொரியல் மத்தியானத்துக் குழம்பு அல்லது முட்டைப் பொரியல் என்று இப்படி ஏதேனும் இதுந்தால் அது இன்னும் விஷேசம்.

சரி இதற்குப் பொருத்தமா ஏதாவது கூகுளில் படம் ஏதாவது இருக்கிறதா பார்ப்போம் என்று பார்த்தால் மாதேவி என்றொரு சகோதரி பல அரிய - இப்போது பெரும்பாலும் கானக் கிடைக்காத படங்களைப் பதிவேற்றி இருக்கிறார்.(http://maathevi.wordpress.com/)
ஈழத்து முற்றத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் நன்றியோடு அவரிடம் இருந்து சில படங்களை இங்கும் காட்சிக்கு வைக்கிறேன்.

படங்களுக்கு மிக்க நன்றி மாதேவி.

இது அரிக்கன் சட்டி.இதனை ஒரு வித தாள லயத்தோடு லாவகமாக ஆட்டி அரிசியில் இருந்து கல்லைக் களைவார்கள்.



இது திரிகை.தானியங்களை மாவாக்க தரையிலே (நிலத்திலே) துணி விரித்து நடுவில் இருக்கும் துளையினுள் தானியத்தினைப் போட்டு கரையில் இருக்கும் தடியினைப் பற்றிய படி சுற்றச் சுற்ற தானியம் மாவாகி கீழே கொட்டுண்ணும்.



இது அம்மி.இதில் அரைச்சு அரைச்சு அம்மி தேய்ந்து போய் விடும்.அப்போதெல்லாம் அம்மி பொழிவதற்கென்று ஆக்கள் வருவார்கள். அம்மியில் சின்னன் சின்னனாய் நுனி கூரான ஆயுதத்தால் சிறு சிறு பள்ளங்களை உருவாக்கி விடுவார்கள். அதன் பின் இலகுவாக அரைத்து விடலாம். அரைத்துச் சாப்பிடும் சம்பலின் சுவையை மறக்குமா நாக்கு? அதுவும் கருவேப்பிலை வச்சரைச்ச சம்பலும் புட்டும்!!



இது கொக்கத் தடி என அழைக்கப் படுவது.உயர இருக்கும் பழங்கள், கெட்டுகளை கைக்குக் கொண்டுவந்து தருவது இது தான்.



இது தயிர் கடையிற மத்து.தயிரில் இருந்து வெண்ணையையும் மோரையும் பிரித்தெடுக்கப் பயன் படுவது.



உரல்! மறக்க முடியுமா இதை? ’உரல் மாதிரி ஏன் நிக்கிறாய்’ என்று பேசுவதில் இருந்து இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அது மாத்திரமா? அது ஒரு ஜிம் மாதிரி! இயற்கையான எக்சசைஸ்.குறிபாகப் பெண்களுக்கு.அரிசியை நனையப் போட்டு இடிப்பது, மிளகாய் வறுத்து இடிப்பது என்று அதன் பயன் பாடு பல விதத்தில்.பொக்குணி உரல் என்று இன்னொன்று இருக்கிறது.மரத்தால் செய்யப் பட்ட இது இடிச்சு இடிச்சு பள்ளம் விழுந்து போய் இருக்கும்.தோசைக்கு இடிச்ச சம்பல் இதில செய்தா வலு சோக்கா இருக்கும்!



அடுப்பு! பறன் மீது அமைந்திருக்கும். பறனுக்கு கீழே விறகும் தென்னம் மட்டைகளும் இருக்கும். போர் காலங்களில் அவசர கால பங்கராகவும் அது பயன் பட்டது. கொங்கிறீற்ரால் அமைக்கப் பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம்.சூட்டடுப்பு என்று ஒன்று பெரிய அடுப்புக்கு அருகாக இருக்கும். அதற்கு விறகு வைக்கத் தேவை இல்லை. பெரிய அடுப்பின் பிள்ளை அடுப்பு மாதிரி அது.பெரிய அடுப்பில் இருந்து வரும் நெருப்பும் சூடும் அதற்குப் போதும்.



ஆ,..! இது தான் நீத்துப் பெட்டி, மற்றும் இடியப்ப உரல். இதைத் தேடிய போது தான் மாதேவியின் வலைப்பதிவினைக் கண்டடைந்தேன். மீண்டும் நன்றி மாதேவி!இதற்குள் அவிக்கும் புட்டுக்கு தனி வாசம். தனி மகத்துவம்!எங்கட ஊர் பாசையில சொல்லுறதெண்டா, ‘சொல்லி வேலையில்லை’



பாக்கு வெட்டி! பாக்கு வெட்ட!!இப்ப காணக் கிடைக்குமோ தெரியாது!குறிப்பா வெளிநாட்டில பிறந்த தமிழ் பிள்ளையளுக்கு கட்டாயம் இது ஒரு புதினமாத்தான் இருக்கும்!



சட்டியும் அகப்பையும்! களிமண்ணில் செய்து சுட்டெடுத்த சட்டி!தேங்காய் துருவிய சிரட்டையில் செதுக்கித் துளையிட்டு தடியினைச் சீவி உள் நுளைத்து செம்மையுறச் செய்யப் பட்ட அகப்பை!! நெருப்படுப்பில் சமையல்!! - அது ஒரு காலம்! இயற்கையோடு இசைவுற வாழ்ந்த கடந்த நூற்றாண்டு!




காம்புச் சத்தகம்! இது வால்புறம் கூராக இருக்கும்.பெட்டி இளைக்கப் பயன் படுவது.ஓலை வார, மற்றும் இளைக்கப் பட்ட பெட்டிக்குள் ஓலையை செலுத்த ஓலையை பக்கவாட்டுக்கு கூராக வெட்டவும் அது சமயத்துக்குப் பயன் படும்.மேலும் கூரான பகுதி துளையிட்டு ஈர்க்கில் சொருகப் பயன் படும்.



ஆட்டுக் கல்! வேறையென்ன தோசைக்கு அரைக்கத் தான். தோசைக்கு இட்லிக்கு மாவாட்ட!கருங்கல்லு மேட்.இப்ப கிறைண்டர் வந்து விட்டதால் இதுவும் இனி மியூசியம் குவாலிட்டி!!



சுளகும் இடியப்பத் தட்டும்! சுளகு அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க,தானியங்களில் இருந்து குறுணிகளை, மேலும் கஞ்சல்களை வேறாக்க என்று பலதுக்கும் பயன் படுவது.அதனை பயன் படுத்துவதிலும் ஒரு லாவகம் இருக்கும்.’தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்கு படக்கெண்டு அடிக்குமாம்’ என்று ஒரு பழமொழி ஈழத்தில் வழக்கில் இருந்தது. கடசி வரைக்கும் அந்த லாவகம் எனக்கு கைவரவே இல்லை என்பது ஒரு தனிப்பட்ட சோகம்.

இடியப்பத் தட்டு மூங்கில் நார்களினால் பின்னப் படுபவை. பின் நாட்களில் அவை வெள்ளை நிறப் பிளாஸ்டிக்கிலும் வந்த ஞாபகம்.இப்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அந் நாட்களில் கதிரைகளும் இந் நார்களினால் பின்னப் படுபவையே!



திருவலகை! இது தான் சமையலறை நாயகன்.இல்லை, நாயகி.இதில இருந்து முழுத் தேங்காயும் துருவி எடுத்து முதல் பால், இரண்டாம் பால், கப்பிப் பால் என்று பிறிம்பாக எடுத்து வைத்து விட்டால் ஊர் சமையலில் பாதி வேலை முடிந்ததற்குச் சமன். இப்ப இங்கு தாய் லாந்தில் இருந்து ரின்னில் தேங்காய் பால் வருகிறது.குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.என்றாலும் யாரும் அதில் சமைப்பதில்லை!!



வெத்திலத் தட்டம்!வெத்திலை வைக்கப் பயன் படுவது.யாரும் வீட்டுக்கு வந்தால் முதலில் நீட்டப் படுவது. மணியாச்சியின்ர பேவரிட்.



இதுவும் மாதேவியின்ர வலைப் பக்கத்தில் தான் இருந்தது.வெத்திலைத் தட்டத்திற்கு அருகில் இருப்பதை பூட்டுச் செம்பு எண்டு எழுதி இருக்கிறா.அது வெத்திலையை ஸ்ரொக் பண்ணுற சாமானா இருக்கலாம்.ஆரும் தெரிஞ்சா சொல்லுங்கோ என்னெண்டு! மணியாச்சிக்கே தெரியேல்ல எண்டா பாருங்கோவன்! என்னென்ன சாமானெல்லாம் ஊரில புழக்கத்தில இருந்திருக்கு!!



இதுக்குப் பேர் விசிறி. பனையோலையில செய்யிறது.வெய்யில் காலத்தில விசுக்கிறது.இப்ப நீங்கள் பதிவ வாசிச்சும் நல்லாக் களைச்சுப் போயிருப்பியள். அவ்வளவு நீட்டாப் போச்சுது.

விசிறி வேணுமோ?






விசேட நன்றி;மாதேவி.
(http://maathevi.wordpress.com/)
Author: கலை
•4:32 AM
சில சிலேடை வார்த்தைகளை இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்துத் தாத்தா, பேத்திக்குச் சொல்லிக் கொடுத்தது. ஒரே வசனத்தை வேவ்வேறு பொருளில் கூறுவது.

1. யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்று வைக்க வேண்டிய பதாகையில் "யாழ்ப்பாணம் வர வேற்கிறது" என்று எழுதி விட்டார்களாம். அதனை வாசித்தவர், "யாழ்ப்பாணம் வர, வேர்க்கும்தான்" என்றாராம்.

2. ஆசிரியர் "சீனி தின்றால் இனிக்கும்" என்று எழுதினாராம். உடனே மாணவன் "அதெப்படி, சீனி தின்ன, றால் இனிக்கும்?" என்று பகிடி விட்டானாம். காரணம், அவன் அர்த்தம் கொண்டது, "சீனி தின், றால் இனிக்கும்".

3. ஒரு கடையில் "இன்றுமுதல் தோசைக்கு சம்பல் இல்லை" என்று எழுதி வைத்திருந்தார்களாம். ஒருவர் வந்து சாப்பிடத் தொடங்கிவிட்டு, கொஞ்ச நேரத்தில் "சம்பல் கொண்டு வாங்கோ" என்றாராம். அதற்கு கடைக்காரர், "அதானே எழுதிப் போட்டிருக்கு. தெரியேல்லையோ?" என்றாராம். அதற்கு சாப்பிட வந்தவர், "இது இரண்டாவது தோசை எண்டதாலதான் கேக்கிறன். கொண்டு வாங்கோ" என்றாராம். அவர் வாசித்தது (அல்லது அப்படிக் காட்டிக் கொண்டது), " இன்று, முதல் தோசைக்குச் சம்பல் இல்லை" என்பதாகும்.

4. "வாரும், இரும், படியும்". இதனை "வாரும் இரும்படியும்" என்றும் சொல்லலாம்.

அடுத்தது சிலேடை இல்லை. ஆனாலும் உண்மையாக நடந்ததென்று தாத்தா கூறினார்.

முன்பு ஒரு தடவை (முன்னொரு காலத்திலே) அவரது தம்பியை அம்மா கடைக்கு அனுப்பும்போது, ஒரு துண்டில் எழுதிக் கொண்டு போகச் சொன்னாராம். அம்மா சொல்லச் சொல்ல, அவர் ஒரு சிறிய துண்டில் எழுதினாராம்.

அவர் எழுதியது இப்படி...

* தனிமல்லி,
* கால் றாத்தல் பனங்கட்டி,
* ரெண்டு குட்டான் விசுக்கோத்து

அவருடைய அம்மா உண்மையில் சொன்னது....

* தனிமல்லி - கால் றாத்தல்,
* பனங்கட்டி- ரெண்டு குட்டான்,
* விசுக்கோத்து
Author: கானா பிரபா
•4:20 AM
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஈழத்துமுற்றத்தில் பதிவிட வந்திருக்கின்றேன். இந்தப் பதிவில் விசேஷமாக ஈழத்துப் பேச்சுவழக்கில் உறவுமுறைகள் என்ற அம்சத்தை எடுத்து, வழக்கில் உள்ள சொற்களைத் தரலாம் என்றிருக்கின்றேன். ஒரு சில சொற்கள் எனது முந்திய பதிவிலும், சக குழுமப்பதிவர்களது பதிவுகளிலுமாக ஈழத்து முற்றத்தில் வந்திருக்கின்றன. இந்தப் பதிவில் விடுபட்டுப் போன மேலதிக சொற்களோடு அமையவிருக்கின்றது. அந்தவகையில் ஈழத்தில் உறவுமுறைகளை அழைக்கும் சொல்லாடல்களை அடுத்துப் பார்ப்போம்.

அப்பு - இந்தச் சொல் பொதுவாக ஒருவரின் தாய் அல்லது தகப்பனின் தந்தையை அழைக்கப் பயன்படும் உதாரணமாக பாட்டன் என்ற சொல்லுக்கு சம அர்த்தம் கொடுக்கும். ஆனால் நமது தலைமுறைக்கு முந்திய காலத்தவர் தமது பெற்ற தந்தையை அதாவது அப்பா என்ற சொல்லுக்குப் பதிலாக அப்பு என்றே வழங்கி வந்தனர். இன்றும் சிலர் தமது தந்தையை அப்பு என்றே அழைப்பர்.

"உன்னுடைய அப்பு எங்கே" என்பது "உன்ர கொப்பு எங்கை" என்று ஈழத்துப் பேச்சுவழக்கில் அமையும்

ஆச்சி- இந்தச் சொல் பொதுவாக ஒருவரின் தாய் அல்லது தகப்பனின் தாயை அழைக்கப் பயன்படும் உதாரணமாக பாட்டி என்ற சொல்லுக்கு சம அர்த்தம் கொடுக்கும். ஆனால் நமது தலைமுறைக்கு முந்திய காலத்தவர் தமது பெற்ற தாயை அதாவது அம்மா என்ற சொல்லுக்குப் பதிலாக ஆச்சி என்றே வழங்கி வந்தனர். இன்றும் சிலர் தமது தாயை ஆச்சி என்றே அழைப்பர்.

"உன்னுடைய ஆச்சி எங்கே" என்பது "உன்ர கோச்சி எங்கை" என்று ஈழத்துப் பேச்சு வழக்கில் அமையும்

அம்மான் - மாமா என்ற உறவுமுறைக்குச் சம அர்த்தத்தில் பாவிக்கப்படுவது. கூடவே ஒருவரை மரியாதையாக அழைப்பதற்கும் அதாவது நேரடி மாமா உறவு முறை இல்லாதவருக்கும் இது அழைக்கப்படும்.
"உன்னுடைய மாமா எங்கே" என்பதை "உன்ர கொம்மன் எங்கே" என்று பயன்பாட்டில் வழங்குவர்

பெரியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் மூத்த சகோதரரைப் பெரியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் மூத்த சகோதரர்

குஞ்சியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய சகோதரரைப் குஞ்சியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரர்

சீனியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் கடைசிச் சகோதரரை குஞ்சியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரர்

குஞ்சியம்மா - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய சகோதரியை குஞ்சியம்ம என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரி

சீனியம்மா - தகப்பன், அல்லது தாய் வழித் தாயின் உடன்பிறந்தோரில் கடைசிச் சகோதரியை குஞ்சியம்ம என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரி

மேற்கண்ட உறவுமுறைகளை நேரடி இரத்த பந்தங்கள் தவிர்த்து மரியாதை நிமித்தம் வழங்கும் பொதுப்பெயர்களாகவும் கொள்ளப்படுகின்றன.
Author: ஹேமா
•1:30 AM
இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு.

ஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து
போனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம்.
ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே.

என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடாவெண்டா...!

சும்மாயிருங்கோப்பா.அது நல்லசாதிப் பேடுபோல இருக்கு. வளர்ந்து முட்டை போட்டா...பக்கது வீட்ல நல்ல வெள்ளடியன் சேவல்வேற நிக்குது ...பிறகு அடை வச்சுக் குஞ்சு பொரிக்குமெண்டு நான் கற்பனை பண்றன்.

அடி விசரி நீயும் உன்ர கோழிக்கனவும்....!

நீங்கள் பாருங்கோவன் ஒருநாளைக்கு எங்கட வீட்ல வெள்ளடிச் சாவல்ன்ர பமிலியே இருக்கும்.ஆசையா அடை வைக்க நான் ஒரு முட்டை கேக்கக்கூட உவள் சுமதி தரமாட்டன் எண்டவளெல்லே.

என்னவாலும் செய்து துலை. இங்க ஆராச்சும் படலை திறந்து வம்பு சண்டைக்கு வராம இருந்தாச் சரி.எப்பதான் நான் சொன்னதைக் கேட்டிருக்கிற நீ.நான் உன்னைக் கட்டி...உன்ர கொப்பருக்கு உதைக்கவேணும்.பாவம் வயசு போட்டுது எண்டுதான் பேசாமலிருக்கிறன்.இல்லாட்டி....

இல்லாட்டி இல்லாட்டி....கோழி பிடிக்கிறதுக்கும் அப்பருக்கும் ஏன் முடி போடுறியள் இப்ப...

அடி போடி கொப்பரை உதச்சு எதுக்கு.கள்ளக்கோழி அமத்திற
ஆக்கள்தானே நீங்கள்.....சரி சரி விடு !

இரண்டு மாசம் போனபிறகு....

ஏனப்பா ஆரெண்டாலும் தேடினவையே அந்தச் சிவப்பியை.சரியப்பா இண்டைக்குப் போய் அவள் சிவப்பியைக் கொண்டு வந்து விடுவமே.எதுக்கும் வேற கலர் பெயிண்ட் அடிச்சுக் கொண்டு வந்து விடுவமேப்பா.

நாசமாப் போக நீ.ஏன் அதைச் சாகடிக்கச் சொல்றியே.அதுக்குத்தானே அண்டைக்கே சொன்னனான் சட்டிக்க வைப்பமெண்டு.

ஏனப்பா பெயிண்ட் அடிச்சா என்ன.எங்கட புதுக்கோழியெண்டு
சொல்லலாமெல்லோ.உங்களுக்கு அறிவே இல்லையப்பா....

ஓமடி....ஓமடி உனக்கு நிறைஞ்சு வழியுது அறிவு.சும்மா கலர் அடிச்சா மழையில கழுவுப்பட்டுப் போகாதே.சரி கழுப்படாத பெயிண்ட் எண்டா கோழியிண்ட றெக்கை (இறகு) ஒட்டிக்கொள்ளுமெல்லே.

ஓம் எனக்கு விசர்தான்.எனக்கு யோசிக்க வரேல்லத்தானப்பா.சரி பின்னப் போய் கொண்டு வாங்கோ.அதை இப்ப அடையாளம் கண்டு பிடிக்க மாட்டினம்.அது வளந்திட்டுதப்பா.

கோழி கொண்டு வந்துவிட்ட கொஞ்ச நாளான பிறகு பிறகு....

இஞ்சாருங்கோப்பா....எங்கட சிவப்பியக் கவனிச்சீங்களே.உந்த வெள்ளடியன் சிவப்பிட்ட இங்க வருமெண்டு பாத்தா சிவப்பிய மெல்ல மெல்ல தன்ர வீட்டையெல்லே கொண்டு போய்ச் சேர்க்குது.ஒருக்கா அவையளிட்ட சொல்லி இஞ்சால கலைச்சுக்கொண்டு வாங்கோப்பா.நல்ல வடிவா வந்திட்டுது.நான் போய்க்கலைக்க என்னை உச்சுக் காட்டுது.இப்பிடியே அங்க பழகிட்டுது எண்டா அங்கயெல்லே முட்டை போடப்போகுது.நானும்
அடை வைக்கவெண்டு கனவு கண்டுகொண்டிருக்கிறன்.

ஓமடியப்பா நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன்.இப்பெல்லாம் அங்கதான் மினக்கெடுது எடுபட்டுப் போகப்போகுது.எவ்வளவு கஸ்டப்பட்டு சாப்பாடும் போட்டு வளத்துக்கொண்டு வாறம்.ஆனா ஒண்டு இந்தச் சாட்டில உன்ர கொம்மாவும் கொப்பரும் ஒரு கணக்கு ஒதுக்கிப் போட்டினம்.இருக்கட்டும் அவையள்.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.என்னையும் கள்ளக்கோழி மாதிரியெல்லே அமுக்கிப் பிடிச்சனியள்.

ஓஓ...பெடிக்கும் கல்யாணம் செய்து குடுக்கப் போறம்.இப்பத்தான் உங்கட செருக்குக் கதை.வாயை மூடிக்கொண்டு கோழியைக் கலைச்சுக்கொண்டு வாருங்கோ முதல்ல.தம்பி அடுத்தமாசமளவில வாறனெண்டு சொன்னவனப்பா போன்ல.நான் சொல்ல மறந்திட்டன்.வந்தா இனி கொழும்புப் பக்கத்துக்கு விடாம இஞ்சனைக்க ஒரு வேலையப் பாத்துக்கொண்டு இருக்கச் சொல்லவேணும்.

எப்ப எடுத்தவன் தம்பி.எப்ப வாறானாம்.உது சரிவராது.இரு பிடிச்சுக்கொண்டு வாறன்.ஆக மிஞ்சிப்போச்சுதெண்டா தம்பி வந்து நிக்கேக்க கையைக் காலை முறிச்சுச் சட்டிக்கதான் வைக்கவேணும்.

இஞ்சப்பா கொதி வரப்பண்ணாதேங்கோ.சும்மா கறி...சட்டி எண்டுகொண்டிருக்காம போய்த் துரத்திக்கொண்டு வாங்கோ.

போய்க் கொஞ்ச நேரத்தில திரும்பி வாறார்....

இஞ்சாரப்பா....அங்க எங்க காணேல்ல சிவப்பியை.வெள்ளடி மட்டும்தான் நிக்குது.
வெங்காயமடி நீ...சொல்லச் சொல்லக் கேக்கேல்ல.அவளவை சட்டிக்க வச்சுப்போட்டாளவைபோல.இப்ப எனக்கும் இல்ல உனக்கும் இல்ல.....

என்னப்பா சொல்றியள்.நானும் 2-3 நாளாக் கவனிக்கேல்லத்தான் நானும்.கோதாரி போக அவளவை.வயிறு அவிஞ்சு கொள்ளையில போக.பாப்பம் இண்டைக்கு பொழுதுபட அடைய வருதோவெண்டு.

கோழி இரவாகியும் வரேல்ல மரத்தில அடைய. .....

அடுத்த நாள்...உந்தக் கோடாலி எங்கயப்பா.உந்த முருங்கை மரத்தை வெட்டிச் சரிக்கிறன்.பாவங்களெண்டுதான் விட்டு வச்சனான்.முழுக்கொப்பும் இஞ்சாலதான் சரிஞ்சு கிடக்கு.அவ்வளவு குப்பையும் நாங்கள் நித்தமும் கூட்டி அள்ளுறம்.அங்கனேக்க ஒண்டிரண்டு முருங்கக்காயைத் தானே நாங்கள் பிடுங்கிறம்.கீரையும் எப்பாலும் ஒடிச்சு எடுக்கிறம்.அவளவை எங்கட முழுக்கோழியையே திண்டு போட்டாளவையே.

சும்மா இரடி லூசி.....என்ன என்ன எங்கட கோழியோ....நல்ல பகிடிதான்.உந்த முருங்கை மரம் மாமரத்தால எங்களுக்கு எவ்வளவு லாபம்.இரவில கோழிகள் 2 அதிலதான் அடையுது.இரவோடஇரவா எவ்வளவு மாங்காயை பிடுங்கி வித்தனி.உதுகளை விட்டு வச்சிருக்கிறபடியால்தான் எங்கட 2 தென்னைமரத்தை விட்டு வச்சிருக்கிறாள் சுமதி.தேங்காய் அவைன்ர கிணத்துக்கையெல்லே அடிக்கடி விழுது.எத்தனை தரம் சொல்லிப்போட்டு விட்டு வச்சிருக்கிறாள்.
கோழியைக் காணேல்லயெண்ட கவலை எனக்கு மட்டும் இல்லையே.

பொறுங்கோ பொறுங்கோ நான் கண்டு பிடிக்கிறன் கள்ளரை.நாசம் விழ அவையளின்ர தலையில.நாளைக்கே போய் சாத்திரம் கேக்கிறன்.

மண்டைக்க சரக்கேதாலும் கிடக்கே உனக்கு.நல்லாப் போய்க் கேளு.எங்கப்பன் கொல்லைல இல்லயெண்டு சொல்ற மாதிரி கள்ளி நீதான் எண்டு சாத்திரி சொல்லும்.ஏனெண்டா கோழி எங்கடையில்லை.சும்மா கிடவடி.

இல்லையப்பா உவையளை விடப்படாது.கள்ளர்கூட்டம்.பாருங்கோவன் சரியாக் கண்டுபிடிச்சணெண்டா செய்வினை செய்து கையை அழுகப்பண்ணாட்டி நான் ...நான் இல்லை.சொல்லிப்போட்டன்.

எடி விசரி...எப்பிடியடி கண்டு பிடிப்ப.சும்மா புலம்பாதை.எங்களிட்ட தானா வந்த கோழிதானே.விடு.அவளவை கோழி இறக்கையைக்கூட குப்பையோட குப்பையா எரிச்சுக் கொளுத்தியிருப்பாளவை.அவையளை நான் வேற வழியால சரிப்படுத்துறன்.

உந்தக் கோழியின்ர யோசனைல வந்த கடிதத்தையும் மறந்திட்டன்.இந்தாப்பா தம்பியின்ர எழுத்துப்போல கிடக்கு.ஏன் போன் எடுக்காம கடிதம் போட்டிருக்கிறான்.

அதப்பா நான் அண்டைக்க்குக் கதைக்கேக்க இப்ப கிட்டடியில எடுத்த
போட்டோவொண்டு அனுப்பச் சொல்லிக் கேட்டனான்.அதாத்தான் இருக்கும்.இஞ்ச தாங்கோ.

அன்புள்ள அம்மாவுக்கு சுகம் சுகம்தானே.இன்னும் இரண்டு கிழமைல வாறன் உங்க.அம்மா அப்பா கொழும்பில இருந்து என்ன வாங்கிக்கொண்டு வரவேணும் நான்.சொல்லுங்கோ.கொண்டு வாறன். நானும் சாமான்கள் வாங்கி வச்சிருக்கிறன்.அப்பாவுக்கு ஒரு போனும்கூட.அம்மாவுக்கு கிரண்டரும் புது மொடல்ல.

அம்மா உங்களிட்ட நான் ஒண்டு சொல்லவேணும்.அம்மா நீங்கள் எனக்குக் கல்யாணம் பேசவெண்டு சொன்னியள்.நான் சொல்லப்போறதைக் கேட்டு கொஞ்சம் மனவருத்தம் உங்களுக்கு வரலாம்.அம்மா நான் இங்க ஒரு பிள்ளையக் காதலிக்கிறன் கொஞ்சக் காலமா.அவளைத்தான் கல்யாணம் செய்யவெண்டு சத்தியம் பண்ணிப்போட்டன்.நான் வரேக்க கூட்டிக்கொண்டு வாறன்.நல்ல வடிவாயிருப்பளம்மா.பழகிப் பாத்திங்களெண்டா உங்களுக்கும் பிடிக்கும் அவளை.திடீரெண்டு கூட்டிக்கொண்டு வந்தா உங்களுக்கு அதிர்ச்சியாப்போடும் எண்டுதான் இப்பவே சொல்றன்.ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ.

சரியாப்போச்சு....தலையில இடி விழுகிறமாதிரி உவன் என்ன எழுதிருக்கிறான் எண்டு பாருங்கோப்பா.வீடு வாசல் நகை நட்டெண்டு நான் நல்ல சீதனத்தோட இஞ்ச கல்யாணம் பேசிக்கோண்டு தரகர்மாருக்கும் அள்ளிக்குடுத்துக்கொண்டு திரியிறன்.நாசமா போறன் எண்டு உந்தப் பெடி என்ன சொல்லுதெண்டு.

உதுக்குத்தான் சொன்னனான் கொழும்புப் பக்கம் அனுப்பாதயெண்டு.உனக்கு எல்லாத்திலயும் பேராசை.நல்ல சம்பளம் நல்ல வேலையெண்டு ஒற்றைக்காலில அவனோட ஒத்துப்பாடிக்கொண்டு அனுப்பின.அனுபவி.உதுக்கு நான் என்ன சொல்லக் கிடக்கு. எவளைக் கூட்டிக்கொண்டு வாறானோ.பாத்தியே நீ கள்ளக் கோழி அமத்திப் பிடிச்ச.எங்கட பெடியை யாரோ அமத்திப்போட்டாளவ.சரி கோழி துலைஞ்சமாதிரி திரும்பி எங்களிட்டயாவது வாறானே.அதுவே போதும் சந்தோஷம்.விடு.

அடுத்த பதினைஞ்சு நாள் போக...

தம்பி இண்டைகெல்லேப்பா வாறனெண்டவன்.சரி அவனுக்குப் பிடிச்சதாச் சமை.இப்ப என்ன அவன் அவளாரோ ஒருத்தியையும் கூட்டிக்கொண்டுவாறான்.கதைச்சுப் பாப்பம்.புலம்பாமச் சமை அவன் வந்திடுவான்.மெல்ல மெல்ல மாத்திப்போடலாம் அவனை.

சமையல் நடந்துகொண்டிக்கும்போதே ஒரு ஆட்டோ வந்து நிக்குது.....இஞ்சப்பா தம்பி வந்திட்டான் போல.இந்த அடுப்பை பாத்துக்கொளுங்கோ.சீலையச் சுத்துக்கொண்டு ஓடி வாறன்.சொன்னதைவிட நேரத்துக்கு வந்திடான்போல.வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு வாங்கோ.உங்க பக்கமெல்லாம் விடுப்புப் பாக்கும் சனம்.

ஆட்டோவிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் மகன் தன் ஒன்றரை வயதுக் குழந்தையோடு வந்து இறங்குகிறான்.வந்த மகனோடு பேசிச் சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கேக்க சிவப்பியும் 6 குஞ்சுகளோட வேலி நுழைஞ்சு வளவுக்குள்ள வந்துகொண்டிருக்குது.

ஏதோ என்னால.....இவ்வளவுதான் நகைச்சுவை முடியுது !
Author: ஃபஹீமாஜஹான்
•10:45 PM



மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!


ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்



வகுப்பறையினுள்
வந்து விழுந்த நட்சத்திரங்கள்
உங்களைச் சூழவே இருப்பதனால்
இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
வீழ்வதேயில்லை
உம் கிரணங்கள்











எனது குறைபாடுகளை நீங்கள்
முன்வைக்கும் வேளை
தூக்கிவிடும் கரமொன்றையிழந்து
வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்
ஏறமுனைகையில்
படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு
எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்
புறந்தள்ளிவிட்டு
எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்
பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்



நான் என்ன செய்ய வேண்டுமென்றோ
எப்படி உருவாக வேண்டுமென்றோ
அல்லது
உங்களைச் சுற்றிவரும்
ஒரு பிரகாசமான தாரகையாக
மாறுவதெவ்விதமென்றோ தெரியவே இல்லை


கற்றுத் தாருங்களெனக்கு


கொம்புகளும் விசிறிகளுமாகப்
பயங்காட்டுகின்ற சொற்களுக்கும்
பெருக்கலும் வகுத்தலுமாக
இறுக்கமான வாய்ப்பாடுகளுக்குள்
வீற்றிருந்தவாறு
தீராச் சிக்கல் தரும்
எண்களுக்கும் மத்தியில்
முடங்கிக் கிடக்கிறதென்னுலகம்


எனக்கான கெளரவத்தையும்
என் விழிகளுக்கான ஒளியையும்
கண்டடைந்து கொள்ளவே
ஒவ்வொரு காலையிலும் வருகிறேன்
எனினும்
முதுகின் பின்னால் கிடந்த இருளை
என் முன்னே நடக்கவிட்டுப்
பயனேதுமற்ற
பளுமிகுந்த பொதியொன்றைச் சுமந்தவாறு
நிமிர முடியாப் பாதைகளினூடாகத்
தினந்தோறும் திரும்பிச் செல்கிறேன்



நீங்களும் ஒரு தேரோட்டி தான்
விபத்தின்றிக் கழிந்ததில்லை ஒருநாளும்
ஆனால்
மீள மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே?


என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து
தினமும் தண்டனை வழங்கும்
சிறைக்கூடமே எனது வகுப்பறையெனின்
மன்னித்துக் கொள்ளுங்கள்
எப்போது மாறப்போகிறீர்கள் -
நீங்களும் ஒரு ஆசிரியராக ?

ஃபஹீமாஜஹான்
2011.02.21
Author: யசோதா.பத்மநாதன்
•4:15 AM


நேற்றய தினம் ’வானவில்’ என்ற அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.அதில் இருந்த ஒரு கவிதை ஒரு கால கட்டத்து யாழ்ப்பாணத்து வாழ்வு முறையைக் கடித உத்தியில் சுவை படச் சொல்கிறது.

ஈழத்து முற்றத்துக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று கருதி அதனை இங்கே பதிவு செய்கிறேன்.



எந்தன் தேசத்தின் குரல் - எழுதியவர்;தெய்வீகன்


அன்புள்ள
நண்பனுக்கு,

குளிர்நாட்டில் இருந்து நீயனுப்பிய
துண்டு மடல் கிடைத்தது.
மகிழ்ச்சி.
நீ தமிழை மறக்காததையும் நினைத்து.

ஊர் புதினம் கேட்டு எழுதியிருந்தாய்.

பேச்சுவார்த்தை போலவே இங்கு
எதுவுமே நடக்கவில்லை

கொந்தல் மாங்காய் பிடுங்க நாங்கள்
கொக்கத்தடி களவெடுத்த
குமரேசன் பேர்த்தி பிரியாவுக்கு
போன வாரம் கலியாணம்.
கை நிறையக் காசோடு
பறந்து வந்த கனடாக் கணவான்
கொத்திக் கொண்டு போனான்.

வாசிக சாலை‘அமைச்சரவையில்’மாற்றம்
தண்ணீர்ப்ப்பந்தல் போட்ட காசில்
தண்ணி காட்டிப் போட்டர் எண்டு
பேரம்பலத்தாரைத் தூக்கியாச்சு

உனக்காக உன்னுடன் சேர்ந்து
நானும் கலைச்சுத் திரிந்த
பர்வதம் மகள் மைதிலி
இன்னும் காத்திருக்கிறாள்
றெஜீஸ்டர் பண்ணீட்டுப் போன
ஜேர்மன் மாப்பிள்ளை பார்த்து

தூக்குக் காவடியில் தொங்கும் போது
றோட்டோரம் நின்று சிரித்து
சிக்னல் கொடுத்த கலாவையே
எங்கட’புட்போல்’ கண்ணன்
கடைசியில கை பிடிச்சிட்டான்

கனகற்ற வளவுக்கு
சுத்து மதில் அடிச்சதால
எங்கட கிறிக்கெற் கோஷ்டி இப்ப
பள்ளிக்கூட வளவுக்கு
இடம்பெயர்ந்திட்டுது.


வழமை போலவே
வள்ளியரிண்ட வளவு
பங்குப்புளி உலுப்பும் போது
இம்முறையும் நல்ல சண்டை
ஊர் கூடி வேடிக்கை
இரண்டு பேரையும் பொலிஸ்
தூக்கிப் போச்சுது

நாங்கள் ஊமைக் கொட்டையால
எறிஞ்சு கால் முறிச்ச
கிடா மறி எல்லாத்தையும் வித்திட்டு
வடிவக்கான்ர வளவு வாங்கினதோட
இரண்டு மாட்டையும் வாங்கி விட்டிருக்கிறார்
குமார லிங்கத்தார்.

இறைப்புக்கு இஞ்சின் விட்டு
பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த தருமர்
மறைப்புக்கு மதில் கட்டிற அளவுக்கு
ரெண்டு பெடியளையும் சுவிஸுக்கு அனுப்பீட்டார்

முந்திப் பார்த்தா
மூஞ்சியைத் திருப்பிற பத்மா
இப்ப சாதுவா சிரிச்சிட்டுப் போகுது
புருசனோடு போகும் போது.

வேலியே பத்தி விடுமளவுக்கு
வேகிற வெய்யில்
வேறெ என்ன சொல்ல?

அலாரம் வைத்தெழும்பும்
அவதியான நாடெண்டாலும்
அடிக்கடி கடிதம் போடு
நீ வந்து போன சந்தோசம் வருமெனக்கு.

இப்படிக்கு,
இன்னும் இங்குள்ளவன்.

(நன்றி: வானவில்;தொகுப்பாசிரியர்.லெ.முருகபூபதி;அவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கம்;2007 ஜனவரி)


(கிராமத்துக்குத் திரும்பும் ஒருவன் தன் கிராமத்தை அண்டியவுடன் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து ஆற்றங்கர மரமே! அரச மர நிழலே...என்று பாடும் பாடலில் வரும் ஒரு கிராமத்து வாஞ்சையினை ஒத்ததாக இந்தக் கவிதை யாழ்ப்பாணத் தமிழில் கிட்டத்தட்ட போரின் ஆரம்பகாலத்து இளைஞரது வாழ்வியலை சொல்வதைப் போல அமைந்திருக்கிறது.)



சொல் விளக்கம்;பாரதத்துத் தமிழர்களுக்காக!




கொந்தல்: கிளி கோதிய,மரத்தில் இருக்கும் மாங்கனி.

கொக்கத்தடி:கூரான வளைந்த கத்தியுடன் கூடிய மிக நீண்ட தடி.(உயரத்தில் இருக்கும் கனிகளையோ குழைகளையோ வெட்ட இது பயன் படும்) அநேகமாக யாழ்ப்பாணத்து எல்லா வீட்டு வளவுகளிலும் இது இருக்கும்.

வாசிக சாலை: யாழ்ப்பாணத்து ஒவ்வொரு கிராமத்தின் மத்தியிலும் இது இருக்கும்.வாசிக்கும் சாலை; அதனால் வாசிப்பதற்குரிய பத்திரிகைகள்... போன்றன இருக்கும்.இளைஞர்கள் மாலையில் கூடி ஊர்வம்பு,அரசியல்..என்று பலவற்றையும் பேசும் இடமும் கூட.சமூக,கிராம முன்னேற்றம் கருதி அதற்கு தலைவர்,செயலாளர் என்றெல்லாம் ஆட்கள் இருப்பர்.’அமைச்சரவை’ என்று கவிதை குறிப்பிடுவது அந்த நிவாகத்தினரையே.

தண்ணீர்ப் பந்தல்: கோயில் திருவிழாக்காலங்கலில் பாதசாரிகள்,பக்தர்களுக்குப் பந்தல் போட்டு குளிர் பானங்கள்,மோர், தேசிக்காய் கரைசல் என்பன கொடுக்கும் இடம்.பாதசாரிகளுக்கு அது நிழலுமாகும்.

தண்ணி காட்டுதல்: ஏமாற்றுதல்

தூக்கியாச்சு: வெளியேற்றப்பட்டு விட்டார்.

வளவு: காணி

பங்குப் புளி உலுப்புதல்: புளிய மரத்தில் பங்கு போட்டு புளியம்பழம் பெற்றுக் கொள்ளுதல் ஒரு யாழ்.மரபு.அதில் சண்டைகளும் சாதாரணம்.ஒருவர் மரத்தில் ஏறி மரத்தை உலுப்பப் பழங்கள் கொட்டுண்ணும்.துணி அல்லது பாய் விரித்து அவற்றை எடுத்துக் கொள்வார்கள்.

பொலிஸ் தூக்கிப் போச்சுது: இந்த இடத்தில் பொலிஸ் கொண்டு போய் விட்டார்கள் என்ற அர்த்தத்தில் வரும்.

ஊமைக் கொட்டை: ஊமல் கொட்டை என்பதன் மருபு. இது காய்ந்த பனங்கொட்டையைக் குறிக்கும்.

கிடா:மறி: ஆண் ஆடு,மற்றும் பெண் ஆடு

இறைப்புக்கு எஞ்சின் விட்டு: யாழ்ப்பாணம் ஆறுகள் அற்ற வரண்ட செம்மண் பூமி. அங்கு கிணறுகள் வழியாகவே பாசனம் செய்யப் படுவது வளமை.சில ஏழை விவசாயிகளிடம் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் இருப்பதில்லை. அதனை வாடகைக்கு அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.அதனைக் குறிப்பது இது.

பிழைப்பு: வருமானம்

முந்தி: முன்னர்

சாதுவா: கொஞ்சமாக

(இளைஞர்களிடையே இழையாக ஓடும் ஒரு நட்பின் அன்னியோன்னியம் அவற்றில் தொனிப்பது இக் கவிதையின் சிறப்பு.இப்போது மறைந்து போன ஒரு பண்பாட்டின் மிருதுவானதோர் இழையும் கூட.)