Author: கானா பிரபா
•4:15 AM

பதிவர் சகோதரி மணிமேகலா சொன்னது போல ஒரு பெரிய கலியாண வீட்டைச் செய்த திருப்தியோடு தமிழ்மண நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறது எமது ஈழத்து முற்றம். கடந்த வாரம் முழுவதுமே எமது குழும அங்கத்தவர்களது பதிவுகளாக மொத்தம் 18 பதிவுகளை நட்சத்திர வாரப்பதிவுகளாகக் கொடுத்திருந்தோம். தனிப் பதிவராக நான் உட்பட இந்த நட்சத்திர வாரத்தில் பங்கேற்ற சக பதிவர்கள் ஒருசிலரும் நட்சத்திர வார அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், முழுமையான ஒரு குழுமப்பதிவில் ஒவ்வொருவருடைய சிந்தனைகளும் பரந்து பட்ட அனுபவங்களுமாகத் திரட்டிய இந்த அனுபவம் எங்கள் எல்லோருக்குமே புதியது. அதற்காக எம்மை நட்சத்திர வாரத்தில் பங்கேற்கச் செய்த தமிழ்மணம் குழுவுக்கும், இந்த நட்சத்திர வாரத்தில் பங்களித்த சக உறவுகளுக்க்கும், பின்னூட்ட மட்டுறத்தலோடு அவ்வப்போது ஆலோசனைகளைத் தந்துதவிய சக மட்டறுத்துனர் வந்தியத்தேவன் மற்றும் சினேகிதி, ஈழத்து முற்றத்துக்கான இலச்சினை வடிவமைப்புக்கு உதவிய மயூநாதன், எம்மை ஊக்கப்படுத்திப் பதிவுகளை வாசித்தோர், பின்னூட்டியோர் எல்லோருக்கும் இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்
கானா பிரபா
(ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவர்கள் சார்பில்)

ஈழத்து முற்றம் தமிழ்மண நட்சத்திர வாரப்பதிவுகள்


நட்சத்திர வாரத்தில் ஈழத்து முற்றம்

அல்வாயில் ஒரு மழைக்காலம் - சினேகிதி

என் ஜன்னலின் சினேகிதி - ரிஷான் ஷெரீப்

மட்டக்களப்புச் சொற்கள் - விசரன்

கணவன்/கணணி/வீடு. - ஹேமா

பொங்கல்/ வளந்து வைத்தல், உரு ஆட்டம் - வி.ஜெ.சந்திரன்

கொழும்பிலிருந்து வன்னியூடாக யாழ்ப்பாணம் - மணிமேகலா

கப்பலேறிப்போனோம் கசங்கிப்போய் வந்தோம் - வடலியூரான்

கொண்டல்மரமே! - ந.குணபாலன்

எங்கடை ஊர் உலகக்கோப்பை - வந்தியதேவன்

ஊரும் பெயரும் - வர்மா

ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு - மாயா

எக்சியூஸ் மீ உதவ முடியுமா? - சின்னக்குட்டி

ஈழத்துச் சதன் - சுபாங்கன்

பண்டிதர் க.சச்சிதானந்தன். - தமிழன் - கறுப்பி


நிர்ப்பந்திக்கப்பட்டவைகள்.
- ஹேமா

புனிதப் பூமி ரட்சிக்கப்பட்ட பாவி - விசரன்

சைக்கிள் ஓடப் பழகின கதை - வடலியூரான்

படலைகள்: - சங்கடப் படலை - மணிமேகலா
Author: வடலியூரான்
•1:07 PM
கொழும்பு மாதிரி பெரிய நகரங்களிலெல்லாம் ஓரளவு வசதியான குடும்பமெண்டால் தேப்பனுக்கொரு கார்,தாய்க்கொண்டு, பெடியனுக்குமொண்டு, பெட்டைக்குமின்னுமொண்டெண்டு ஆளாளுக்கொரு காரை அல்லது சில வேளைகளில் ஒண்டுக்கு மேற்பட்ட கார்களையும் வைச்சிருப்பினம்.அதை மாதிரித்தான் எங்கன்ரை வீடுகளிலும் ஆளாலுக்கொரு வாகனம் வைச்சிருப்பம்.(நாங்களும் வசதியான ஆக்கள் தானே?)






எங்கன்ரை வாகனத்துக்கும் பென்ஸ் கார் மாதிரியெண்டிற அளவிலையில்லாட்டிலும் ஏதோ றோட்டாலை போறவாறாக்களுக்குக் கேக்கிற மாதிரியெண்டாலும் சத்தம் போடிற நல்ல ஹோர்ண்(Horn) இருக்குது, சிக்னல் இருக்குது, கூலிங் சிஸ்ரம் இருக்குது, அக்சிலேற்றர்(Accelator) இருக்குது.என்ன எங்கன்ரை வாகனம் ரீற்ரீற் எண்டதுக்குப் பதிலாக "ட்றீங் ட்றீங்" எண்டு ஹோர்ண் அடிக்கும்.எங்கன்றை வாகனங்களுக்கு ட்றைவர் கையாலேயே சிம்பிளாக சிக்னல் காட்டலாம்.




வருடிச் செல்லும் வசந்தக் காற்று கறண்ட் இல்லாமலே தலையைத் துவட்டிச் செல்லும்.அக்சிலறேசன்(Accelaration) பண்ணிறதெலாம் ட்றைவரின்ரை தனித் திறமையிலை தான் இருக்குது.என்ன நான் சொன்ன, சொல்ல வந்த வாகனமென்னெண்டு விளங்கியிருக்கும்.வேறையென்ன ஈழத்து சராசரி மக்களின் வாழ்வைத் தன் தோளில்(சீற்றில்) சுமந்து,குளிரிலும் பனியிலும் கிடந்து,கல்லுகள்,முள்ளுகளிடம் குத்து வாங்கி, குண்டடிப் பட்டு,ஓடாய்த் தேய்ந்து, உப்புக் கடலுக்குள்ளாலும், உழுத நிலத்துக்குள்ளாலும் மக்களோடு மக்களாக இடம் பெயார்ந்து, மக்களின் அத்தியாவசியப் பொருட்களடங்கிய ட்றங்குப் பெட்டிகளையும் உர பாக்குகளையும் சுமந்து மக்களின் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்குபற்றிய துவிச்சக்கரவண்டி/சைக்கிள் தான் அந்த வாகனம்.






இறக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆசைப்பட்டு ஏறிப் புட்டேன் ஐயோவோடை பைக்கில் என்று எங்கடை பைக்கில் ஏற அந்தக் காலத்திலை(மிகச் சின்ன வயசிலை) யாரும் தயாராக இல்லையென்றாலும் எங்களுக்கு 3ம், 4ம் ஆண்டு பள்ளிக்கூட காலங்களிலெல்லாம் சைக்கிளொண்டு வாங்கி,இறக்கை கட்டிப் பறக்கும் ஆசை மட்டும் மனசுக்குள்ளே பறந்து கொண்டேயிருக்கும்.






ஐந்தாம் ஆண்டிலை நடக்கிற ஸ்கொலசிப்(Scholarship) பாஸ் பண்ணினா ஒரு அரைச் சைக்கிளோ, முழுச் சைக்கிளோ வாங்கித் தரவேண்டுமென்பதே பெரும்பாலான பெடியள்,பெட்டையளினால் பெற்றாரிடம் முன்வைக்கப் படும் விண்ணப்பமாகவிருக்கும்.ஸ்கொலஸிப் பாஸ் பண்ணிறமோ இல்லையோ சைக்கிள் மட்டும் எப்பிடியாவது வாங்கித் தருவினம் அல்லது வாங்கித் தரத்தான் வேணும் எண்டது அங்கை எழுதப் படாத விதி.எண்டாலும் சைக்கிள் வாங்கித் தாறம் எண்டு சொன்னால் பெடியன் கொஞ்சம் ஊண்டிப் படிப்பானெண்டது அவையின்றை அங்கலாய்ப்புத் தான்.





ஸ்கொலஸிப்புக்கு படிக்கிறமோ இல்லையோ எப்பாடா ஸ்கொலஸிப் முடியும் எப்பாடா சைக்கிள்ளை இரண்டு கையையும் விட்டிட்டு மைனர் குஞ்சு மாதிரிப் பறக்கலாம் எண்டு கனவுகளுக்கும் நினைப்புகளுக்கும் குறைவில்லாமல் இருக்கும்.ஹெட் லைற்றை(Head Light) எந்த மாதிரியான் ஒரு ஒறேஞ் துணியாலை கட்ட வேணும், Bar க்கு எந்த மாதிரி குஞ்சங்கள் வைத்த சொவெர் போட வேணூம், பின்னுக்கு டைனமோவுக்கு கீழை எப்பிடி இரண்டு சிவத்த சிக்னல் லைற் போட வேணுமெந்த மாதிரியான லுமால கரியல் போட வேணும், எந்த மாதிரியான "ப" ஸ்டண்ட் போட வேணும்,மட்காட் கம்பியிலை எந்த மாதிரியான பந்துக் குஞ்சம் வைக்க வேணும், முன்னுக்கு சொக்கஞ்சோர் (Shock Absorber) எப்பிடி இருக்கோணும், ஹாண்டில் கவர்(Handle Cover) எப்பிடி இருக்கோணும் எண்டு ஒவ்வொரு பர்ட்ச் உம் எப்பிடி இருக்கவேணுமெண்டெல்லாம் றோட்டாலை போய் வாற ஓரளவு பெற்றர்(Better - பரவாயில்லாத) ஆன சைக்கிளையெல்லாம் பார்த்து,அதெல்லாத்தையும் சேர்த்து ஐந்தாம் ஆண்டிலேயே நான் கண்ட ஒரு பெஸ்ற்(Best) ஆன கற்பனைச் சைக்கிள் எனக்கு இன்றும் கண் முன்னே நிற்கின்றது.எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோர் கண்ட,காண்கின்ற கனவு இது.





ஸ்கொலஸிப்பும் பெரிசா இல்லாட்டிலும் ரியூசனுக்குப் போகாமலே ஏதோ மட்டு மட்டாக பாஸ் பண்ணிப் போட்டன்.என் கனவுச் சைக்கிளை வாங்குவதற்குப் பொருளாதார நிலை அந்த நேரம் வீட்டில் இல்லையென்பதே காரணமாகவிருந்தாலும்,"இப்ப நீ சின்னப் பொடியன் தானே ஏன் இப்ப அரைச் சைக்கிள் எடுத்துப் பிறகு முழுச் சைக்கிள் எடுப்பான்.ஒரேயடியாக நீ வளர்ந்தாப் போலை பெரிய சைக்கிளா எடுப்பம்,அதோடை நீ இன்னும் சைக்கிள் ஓடப் பழகயில்லை,பேந்து புதுச் சைக்கிள்ளை பழக வெளிக்கிட்டு போட்டுடைச்சுப் பழுதாக்கிப் போடுவாய்" எண்டும் காரணம் சொன்னாலும் எனக்கு அதில் பூரண உடன் பாடில்லாமல் இருந்தது.





ஒரு பொருளை தாறன் எண்டு சொல்லிப் போட்டு அதை தராமல் விடுகின்ற போது அல்லது அது கிடைக்காமல் விடுகின்ற போது ஏற்படுகின்ற ஏமாற்றம்,இயலாமை, உள்ளக் குமுறல் கொடுமையானது.எல்லாரும் ஏதேதோ விதங்களில் பல்வேறு ஏமாற்றங்களைக்கடந்து வந்திருப்போமாகையால் எனக்கு அந்த வயதில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஏமாற்றத்தினை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.எனக்கும் அதுவும் அந்தச் சிறிய வயதில் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்றதொரு உணர்வு இருந்தாலும் கூட வீடே சொன்ன "வேறை ஒரு சைக்கிள்ளை ஓடப் பழகீற்றுப் புதுச் சைக்கிள் எடுப்பம் என்ற காரணம் சரியாகப் பட்டதால்" அவர்களுக்குக் கட்டுப் பட்டேன்.





எனது அப்பா வழியால் வந்த மச்சாளின் மச்சான் ஓடிய சைக்கிளொன்றே எனக்கு ஓடிப் பழகக் கிடைத்தது.அதிலை கிடந்த ஒரிஜினல் பெயின்ற்(Paint) எல்லாம் உரிந்து ஏதோ ஒரு சொல்ல முடியாத நிறத்தில் சைக்கிள் இருந்தது.நான் கற்பனை செய்த சைக்கிளுக்கு சரி தலைக்குத்தனமா நான் நினைத்திருந்த பாட்ஸ்(Parts) எல்லாத்தையும் நினைத்தாலும் பூட்டேலாதமாதிரி தலைகுத்துக் கரணமாக இருந்தது அந்த கால்ச் சைக்கிள்.என்ன இது பழகத்தானே ,பழகினாப் போலை கொஞ்ச நாள் செல்ல என்ரை கனவுச் சைக்கிளில் கலக்கலாம் தானேயென்றிட்டு பழகத் தொடங்கினேன்.





எங்கன்டை வீட்டு வளவுக்கை தென்னை,வாழைகளுக்குத் தண்ணீ மாறுறதுக்கெண்டு பெரிய உயரமான வாய்க்காலொண்டு போகுது.அதன் வரம்பு உச்சியிலே சைக்கிளை ஏத்திப் போட்டு,அப்பா இடப்பக்க ஹாண்டிலையும்(Handle) பின் கரியரையும் பிடிச்சுக் கொண்டு என்னை சீற்றீலை இருத்திப் போட்டு,என்னை உழக்கச் சொல்ல, மெல்ல மெல்ல ஆனால் முழு ரவுண்டும்(Round) செயினைச்(Chain) சுத்தாமல் டக்கு டக்கு எண்டு பெடலைத் தட்டிக் கொண்டே மெது மெதுவாக ஓடினேன்.




முதல் மூன்று தரமும் அப்பா கூடப் பிடித்துக் கொண்டு வந்த படியால் ஏதோ ஓடுவன் மாதிரித் தான் கிடந்துது.நாலாம் முறை ஓடத் தொடங்கி கொஞ்சத்தாலை அப்பா முன் ஹாண்டிலில் வைத்திருந்த கையை எடுத்துப் போட்டு கரியரை மட்டும் பிடித்துக் கொண்டு வந்தார்.கை நடுங்கி நடுங்கி ஹான்டில் அங்கேயும் இங்கேயும் ஆடினாலும் ஏதோ ஓடிக் கொண்டிருந்தன் நான்.அவர் பின் கையையும் எடுத்த கையோடை பதறியடித்துக் கொண்டு போய் அங்காலை நிண்ட வாழைக்குள்ளை சைக்கிளை விட்டன்.




இரண்டு வாழைகளுக்கிடையிலை முன் சில்லுப் போய்ச் செருகுப் பட்டதாலை சைக்கிள் அப்பிடியே நிண்டிட்டுது. நான் விழயில்லை.எண்டாலும் அப்பாட்டைச் சொன்னன் இனிக் கையை விடாதையுங்கோ எண்டு.அவரும் "இப்ப சும்மா விட்டுப் பாத்தன் இனி விடேல்லை " எண்டார்.அடுத்த முறையும் வரம்பில ஏறி அப்பா கரியரைப் பிடிக்க மெல்ல மெல்ல ஓடி,இந்த முறையும் சொல்லாமல் கொள்ளாமல் கையை எடுத்துப் போட்டார்.




நானும் வடிவாத் தான் ஓடிக் கொண்டிருந்தனான் போலை, எண்டாலும் பின்னுக்குத் திரும்பி இவர் பிடிக்கிறாரோ இல்லையோ எண்டு பாக்க வெளிக்கிட்டுப் பராதிப் பட்டுக் கொண்டு போய் முதல் முறை விழுந்தாச்சுது.நிலத்திலை கிடந்த சல்லிகள் உரஞ்சி முழங்காலால் இரத்தம் கசிந்தது.தண்ணியாலை கழுவிப் போட்டு அண்டையான் சைக்கிள் ஓட்டம் அதோடை விட்டாச்சுது.பிறகும் ஒவ்வொரு நாளும் அந்த வரம்பின் உச்சியில் ஏறி சறுக்கீஸ் மாதிரி அதாலை சறுக்கிக் கொண்டே விழுந்து எழும்பி அந்தக் கால்ச் சைக்கிளை ஓடப் பழகியாச்சுது.




பிறகேன் பேசுவான் கடைக்குப் போறதெண்டால்,பால் குடுக்க்ப போறதெண்டால்(மாட்டுப் பால்), வாசிக சாலைக்குப் போறதெண்டால் என்ரை குட்டிச் சைக்கிளை எடுத்துக் கொண்டு உழக்கித் தள்ளவேண்டியது தான்.




பிறகு அப்பாவின்ரை முழுச் சைக்கிளை எடுத்து அதைக் கெந்திக் கெந்தி, இடைக்குள்ளாலை காலை விடிட்டு, பிறகு பாருக்கு(Bar) மேலாலை காலைப் போட்டு, அதுக்குப் பிறகு சீற்றிலையிருந்து ஓடியெண்டு அதையும் ஓடப் பழகியாச்சுது.அதொண்டும் ஒருநாள் இரண்டு நாளிலை பழகினதில்லை.நாள்க் கணக்கில், மாசக் கணக்கில், எத்தனை விழுந்தெழும்பல்கள்,உரஞ்சல்களுக்குப் பிறகு நடந்தது.




பிறகு ஒரு கை விட்டிட்டு ஓடப் பழகி, இரண்டி கைவிட்டிட்டு, டபிள்,ட்றிபிள்ஸ்(Double,Triple) ஒரு சைக்கிளை ஓடிக்கொண்டு மற்றச் சைக்கிளை பரலலாக இழுத்துக் கொண்ட்டொறதெண்டு கன டெக்னிக்(Technique) எல்லாம் சைக்கிள் ஒடுறதில எக்ஸ்பேட்(Expert) ஆனாப் போல தானா வந்திடும்.பிறகு ஒரு மாதிரி 8ம் ஆண்டு படிக்கேக்கை எனக்கு முழுச் சைக்கிளொண்டு புதுசா எடுத்துத் தந்திச்சினம்.என்ரை கனவுச் சைக்கிள் மாதிரியே இருக்காட்டிலும் பெரும்பாலானவை இருந்தது,மீதியை நான் பொருத்திக் கொண்ட்டு என்கனவுச் சைக்கிளை மிதித்து ஊருக்குள்ளே கலர் காட்ட வெளிக்கிட்டேன்.




செருப்பெண்டால் Bata,Toothpaste என்றால் சிக்னல்,குளிசை என்றால் பனடோல் என்டு ஒவ்வொன்றுக்கும் Trade Mark உள்ளதைப் போல சைக்கிள் என்றால் லுமாலா என்பதும் ஈழவர் வாழ்வில் பிரிக்க முடியாதது.சும்மா சொல்லக் கூடாது வீட்டை இப்பவும் அம்மப்பாவின்ரை சைக்கிள்(பாவனைக் காலம் சரியாகத் தெரியாது 30 க்கு மேலை) அப்பாவின் சைக்கிள்(26 வருசம்) என்ரை சைக்கிள் 12 வருசம் எண்டு, இப்பவும் அந்தச் சைக்கிளெல்லாம் கிண்ணெண்டு கொண்டு தான் நிக்குது.




சைக்கிள் ஓடப் பழகிறதெண்டிறது சும்மா லேசுப் பட்ட காரியமில்லைப் பாருங்கோ.எல்லாராலேயும் பலன்ஸ்(Balance) பண்ணி ஓடேலும் எண்டில்லை.ஆனால் ஓடப் பழகினால் அது நல்லதொரு எக்சர்சைஸ்(Excercise).கீழ்க் கால்,தொடைகள் எல்லாம் இறுகி பார்க்க உடம்பு சும்மா முறிகித் தான் இருக்கும் கண்டியளோ.



அது மட்டுமில்லை சைக்கிளிலை நண்பர்கள் 3,4 பேராய் பரலேலாக ஒராளின்டை ஹான்டிலை மற்றாள் பிடித்துக் கொண்டு ரோட்டு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு பின்னுக்கு வாற வாகனக் காரன் என்னதான் ஊண்டி ஹோர்ண் அடித்தாலும் கேட்காத மாதிரி(உண்மையிலேயே கேட்கிறதில்லை தான்) போறதுவும்,ஊர்க்கதை உலகக்கதையெல்லாம் ரோட்டுகளிலேயே அளந்து கொண்டு போறதுவும்,பெட்டையளின்டை சைக்கிள் செற்றை முன்னுக்கு விட்டிட்டு அவகளுக்கு ஏதாவது சொட்டைக் கதை,சொறிக்கதை சொல்லிக்கொண்டோறதும் அல்லது பெட்டையள் செற் பின்னுக்கு வந்தால் சைற் குடுக்கிறமாதிரிக் குடுத்திட்டு அவகள் முந்த வெளிக்கிடேக்கை முந்தவிடாமல் இழுத்திழுத்து,வீடு மட்டும் கூட்டிக் கொண்டு போய் விடிறதும் ஒரு தனி சுகம் தான்.




இப்படிச் சென்ற என் நண்பர்கள் சிலர் பின்னால் ஹோர்ண் அடித்தது மாவட்ட நீதி பதி தான் என்பது கூடத் தெரியாமல் சென்றதால் ஒரு நாள் சிறை வாசமும் ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்திய சோகமும் உண்டு. அது மட்டுமல்லாது நானும், எனது தனியார் கல்வி நிறுவன நண்பர்களும் இவ்வாறு பரலல்(Parallel) ஆக சென்று கொண்டிருந்த போதுபின்னால் வந்த நீதி மன்றப் பதிவாளர் ஒருவர் எங்களைத் தனித்தனியே போக அறிவுறுத்திச் சென்றது கண்டு பொங்கியெழுந்த நாங்கள் அவரைத் துரத்திச் சென்று,மறித்து "டேய் மாக்கண்டு நீ யாற்றா எங்களை விலத்திப் போ " எண்டு சொல்லுறதுக்கு எண்டு வீறாப்பாகக் கேட்ட அடுத்த நாள் அந்தாள் ரியூசன் நிர்வாக்கியிடம் எல்லாரையும் காட்டிக் கொடுக்க அனைவரும் பெற்றோருடன் சென்று அவரிடம் மன்னிப்புக் கோரியதுடன் வகுப்பில் அனுமதிக்கப் பட்டமை இன்னுமொரு வரலாறு.



உப்புடி கன கதைகள் இருக்குது.என்ன உங்களுக்கும் உப்புடிக் கனவுகள், கற்பனைகள், காயங்கள்,கதைகள் எல்லாம் நடந்திருக்குமெண்டு நினைக்கிறன்.அதுகளையும் கொஞ்சம் சொல்லுங்கோவன்.கேப்பம்.
Author: சஞ்சயன்
•3:12 AM
அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை எனது பெற்றோர்களின் தாய் மண்ணாகிய யாழ்ப்பாணத்திற்கும் எனக்கும் பெரியதொரு தொடர்புமில்லை, பந்தமுமில்லை, விடுமுறைக்கு போய் வரும் இடம் என்பதைத் தவிர.

பால்யத்தின் நேசத்தினாலாலும், மண்ணின் வாசத்தினாலும் என்னை வளர்த்து ஆளாக்கிய பூமியே புனிதப் பூமியாகியிருக்கிறது எனக்கு.  ஆம், மட்டக்களப்பு மண் எனக்கு புனிதப் பூமி
.
ஏறத்தாள 25 ஆண்டுகளின் பின் மீண்டிருக்கிறேன் எனது புனிதப் புமிக்கு, இம்முறை 5 நாட்கள் தங்கியிருந்து சுவைத்துப் போக நினைத்திருக்கிறேன். தோழமைகளின் சந்திப்புக்கள் நிறையவே நடக்கலாம்.

நான் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை மட்டக்களப்பை வந்தடையும் வரை கண்டதையும், இரசித்ததையும், அனுபவித்ததையும் எழுதுவதாகவே யோசித்திருக்கிறேன்.

தந்தையாரின் மூத்த சகோதரியாரை யாழ்ப்பாணம் சென்று பார்த்து விட்டு இன்று காலை மட்டக்களப்பிற்கு புறப்பட்ட போது ஆரம்பிக்கிறது 100:100 வீதமான உண்மையான இந்தக் கதை.

...............

நேரம் 5.30 காலை.. ”டேய் மருமமோனே எழும்புடா நேரமாகுது” என்ற 88 வயது மாமியின் குரலில் விடிந்தது நாள். எழும்பி எல்லாம் முடித்து நேரம் 6.30 ஆன போது போது வந்து சேர்ந்தான் பால்ய சினேகம் (இவனும் மட்டக்களப்பில் தான் படித்தவன்).

"இனி எப்ப பார்ப்பனோ" என்னும் வார்த்தைகளுடன் முத்தமிட்டு அனுப்பினார் மாமி. வரும் வழியில் மச்சாள் வீட்டில் குழல் புட்டும், முட்டைப் பொரியலும் உட்தள்ளி, மோட்டார் சைக்கிலில் உட்கார்ந்த போது நேரம் ஏழு.

நட்பு யாழ்ப்பாணத்தை ஒரு சுற்றுலாபயணிக்கு காட்டுவது போல் காட்டிக் கொண்டு வந்தான். காலையின் சுறுசுறுப்பு தெரிந்தது கடந்து போன மனிதர்களிலும் அவர் மனங்களிலும். மனோகரா தியட்டர் கடந்த போது பழைய ஞாபகங்கள் வந்து போயின.

இராணுவத்தினர் எங்கும் புற்றீசல் மாதிரி நின்றிருந்தாலும் எவருக்கும் எதுவும் செய்யவில்லை. அவர்கள் முகங்களிலும் ஒரு ஆறுதல் தெரிவதாகவே பட்டது எனக்கு. புன்னகைத்தபடி கடந்து போனார்கள் சிலர்.

பஸ்ஸ்டான்ட்க்கு வந்து சேர்ந்தோம்.வவுனியா - மட்டப்பளப்பு ஊடாக காத்தான்குடி, என்று போட்டிருந்த பஸ்இல் ட்ரைவருக்கு பின்னால் ஒரு சீட் தள்ளி யன்னலோம் பிடித்து உட்கார்ந்தேன். நட்பு விடைபெற மனமோ சுற்றாடலை கவனிக்கத் தொடங்கியது.

முன் கண்ணாடியில் "ஓம்" என்பதை புதிய விதத்தில் எழுதுவதாக நினைத்து "ம்"மன்னாவின் வளைவு முடியும் இடத்தை தேவைக்கு அதிகமாகவே நீட்டி கடைசியில் அதை வளைத்தும் விட்டிருந்ததால் அந்த "ம்" பார்வைக்கு "ழ்" போல தெரிந்து "ஓம்" என்பதின் அர்த்தத்தை தூசணம் போல் காட்டிக் கொண்டிருந்தது. சில வேளை ஓம் என்றதுக்குள் எல்லாமே அடக்கம் என்பதை குறிப்பிடத்தான் அப்படி எழுதியிருந்தார்களோ? இந்தளவுக்காவது தமிழைக் கற்றிருக்கிறார்களே என்று சற்று பெருமையாய்த் தான் இருந்தது. அது சிங்களவருக்கு சொந்தமான பஸ்.

பஸ்ஸ்டான்டில் சொகுசு பஸ் கொழும்பில் இருந்து வந்து நின்றது. ஒரு நடுவயதான பெண் அழகாய் பல நகை உடுத்தி, நாகரீகம் தெரிந்தவர் போல (சர்வ நிட்டசயமாய் வெளிநாடு தான்) இறங்கிமுடிய முதல் பலர் அவரை நெருங்கி அக்கா ஓட்டோ வேணுமா என்றனர்.. அவர் அதைக்கவனிக்காமல் தொலைபேசியை காதில் வைத்த 10 நிமிடத்தி;ல் ஒரு ஓட்டோ முன்பக்கத்தில் வேப்பமிலை கட்டியபடி வந்து நின்றது.. என்ன பிள்ளை மெலிஞ்சிட்டாய் என்றவாறு வந்தார் ஒரு தாய் (எனக்கு அந்தத்தாயிடம் உது மெலிவோ ஆ? என்று கேட்க வேணும் போலிருந்தது) ஏன் நம்மவர்கள் சும்மாவெல்லாம் பொய் சொல்கிறார்கள்?
பஸ்ஸில் வந்த சாமான்களில் முக்கால்வாசி அவருடையதாயிருந்தது. ஒட்டோ நிரம்ப அடுத்த ஓட்டோ பிடித்து நிரப்பினாகள் மிச்சத்தை. நானோ, இவ்வளவு பாரத்தையும் எப்படி விமானத்தில் அதுவும் ஒரு டிக்கட்இல் விட்டார்கள் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது அந்த அக்காவும், அம்மாவும் 2 ஓட்டோக்களும் மறைந்து போயின.

நேரம் 7.30 ஒரு தம்பி வந்து அய்யா எங்க போறீங்க என்றார்.. மட்டக்களப்பு என்றதும் மறுபேச்சின்றி 550 ரூபாக்கு டிக்கட் தந்து, தனது பிட்டத்தை அடுத்த சீட் ஹான்டிலில் முண்டு கொடுத்து அடுத்தவருக்கு டிக்கட் எழுதத் தொடங்கினார்.

ட்ரைவர் வந்தார். ஸ்ட்டாட் பண்ணி 4 தரம் தேவையில்லாமல் அக்சிலேட்டரின் அடி மட்டும் அமத்திப் பார்த்தார். பஸ் அசையவில்லை, ஆனால் உயிர் போற மாதிரி கதறியது. பின்னால் வாழைக்குலை இருந்தால் பழுத்திருக்கும்.. அப்படிப் புகைத்தது.

வைரவர் கோயில் தாண்டும் போது வைரவர் கோயில் மணியடித்தது. அதனர்த்தம் "பாவியே  போய் வா" என்பதாயிருக்குமோ?

அப்போது ட்ரைவர்தம்பி பஸ்ஐ மடக்கித் திருப்பி, வீதியில் ஏற்றி ஈவு இரக்கமில்லாத வெகத்தில் ஓடினார். எனக்கு பயமாயிருந்தது. ஆனால் அதை அவர் கவனிப்பதாயில்லை.

எனது மனம் மனோவேகத்தில் மட்டக்களப்பை நோக்கி நகர ஆரம்பிக்க ட்ரைவர் தம்பியோ.. அண்ணண் உங்கட மனதை விட நம்ப பஸ் வேகமாய் போகும் என்று காட்ட முயற்சிப்பது போலிருந்தது அவர் காட்டிய வேகம்.

சூரியன் எப் எம் ரேடியோ போட்டனர். அதில் வந்த ஒரு விளம்பரம் எனது கவனத்தை ஈர்த்தது.. அது இப்படி இருந்தது. "அவுஸ்திரேலிய அரசு இலங்கையருக்கு புகலிட அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும், கப்பலில் அவுஸ்திரேலியா போய் பணத்தை விரயமாக்காதீர்கள் என்றும், அப் பயணம் ஆபத்துக்கள் பல கொண்டது என்றும்"
இந்த விளம்பரத்தை யார் ஸ்பொன்சர் பண்ணியிருப்பார்கள்?

திடீர் என ஒரு பஸ் எம்மை முந்திப் போகிறது.. ட்ரைவர் தனது பரம்பரைமானம் போய்விட்டது போல நினைத்தாரோ என்னவோ கலைக்கிறார், கலைக்கிறார்.. பயங்கரமாய் கலைத்து அதை எட்டிப்பிடித்து முந்திய போது ஒரு விதமாய் ஹோன் அடித்தார். (நக்கலாயிருக்குமோ?). தம்பிமார் இருவரும் ட்ரைவர் அண்ணனை பாராட்டிக்கொண்டிருந்தனர். எனது உயிர் திரும்பக் கிடைத்த சந்தோசத்தில் இருந்தேன், நான்.

வழி எங்கும் இராணுவ முகாம்கள் தங்கள் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தன. மட்டக்களப்புக்கு போய்ச் சேரும் வரை கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான ராணுவ முகாம்களைக் கண்டிருப்பேன். ஆனால் கெடுபிடிகள் இருக்கவில்லை, இருப்பினும் மனதை நெருடியது ரானுவத்தினரின் எண்ணிக்கை. ஆனால் அவர்களின் முகத்திலும் ஒரு வித ஆறுதல் இருந்தது.

பச்சையில் வெள்ளையாய் எழுதப்பட்டிருந்த பெயர்ப்பரகையில் முகமாலை என்றிருந்தது. மனதில் "முகமாலை முன்னரங்கு" என்றும் சொற்பதம் ஞாபகத்தில் வந்து போனது.
நான் போரின் அகோரம் உணர்ந்தது இங்கு தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் "நின்ற பனையை" விட "முறிந்த பனைகள்" அதிகமாயிருந்தன. எறிகணைகளின் அகோரப்பரிமாற்றத்தின் விளைவு அது என்று புரிய அதிக நேரமெடுக்கவில்லை.

முகமாலையில் ஒரு இடத்தில், வீதியோரமாக ராணுவத்தினர் எறிகளை கோதுகளை அடுக்கிக் கொண்டிருந்தனர். மலைபோலிருந்தன கந்தகத்தை கக்கி ஓய்ந்த அந்த செப்புக் குடுக்கைகள். (செப்பின்விலை அதிகம் என்பதை அறிவீரா?... அட அட போரினால் கனிவழங்கள் எமது பூமியில்..) போரினால் நாம் பெற்ற நன்மை இது தானோ?

”தம்பீ முறிகண்டியில நிப்பாட்டுவாங்களோ” என்றார், அருகில் இருந்த பெரியவர். அருகிலிருந்தவர் ஒருவர் ”சிலவேளை” என்றார்.
பெரிசு கடுப்பாகிவிட்டார்.
”என்ன சில வேளையோ?” என்றார் குரலை உயர்த்தி.
அவர் அர்ச்சனை போட வேண்டுமாம் முறிகண்டிப் பிள்ளையாருக்கு.. கண் ஒப்பரேசணுக்கு போறாராம் என்றார்.  

முறிகண்டியில் நிப்பாட்டியவுடன் ஓடிப்போய் அர்ச்சனைத் தட்டு வாங்கி, தேங்காய் உடைத்து, பெரிதாய் திருநீறு பூசி வந்தமர்ந்தார் பெரியவர்.

வெளியில் சிவப்பு டீசேட் போட்ட இளைஞர் குழு ஒன்று என் கவனத்தை ஈர்ந்தது. இறங்கிப் போய் பார்த்தேன் அவர்கள் மேலங்கியில் டீ. டீ. ஜி என்றும் டனிஸ் டீமைனிங் (நிலக்கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள்) குரூப் என்றும் எழுதியிருந்தது.

முறிகண்டி கச்சானில் மெய் மறந்திருந்த ஒரு  தம்பிடம் மெதுவாய் கதைகுடுத்தேன்.முழங்காவிலில் வேலை செய்கிறார்களாம்.. அள்ள அள்ள குறையாமல் வருகிறதாம் நிலக்கண்ணி வெடிகள்.

வெடி விளைந்த புமியல்லவா? அது தான் விளைச்சல் பலமாயிருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன். தன்னுயிரை எந்தேரமும் இழக்கக்கூடய தொழிலைச் செய்யும் இவர்களும் புனிதர்கள் தான்.

வழியோரத்தில் பல இடங்களில் மிதி வெடிக்கான எச்சரிக்கை போடப்பட்டிருந்தது. அதனருகிலும் ராணுவ காவலரண்கள் இருந்தன. பல கிலோமீற்றர் நீளத்துக்கு இந்த மிதிவெடி வயல்கள் நீண்டிருந்தன. விதைப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது. அறுவடையை நினைத்தால் பயமாயிருந்தது.

தவிர்க்கமுடியாத காரணத்தால் பஸ் ஒரு  உள்ளூர்ப் பாதையால் சென்றுகொண்டிருந்தது

சிங்களவர்களின் பரதேசத்தில் உள்ள "மகா கண்தரவ" என்னும் குளத்தினருகால் போய்க் கொண்டிருந்தோம். வாய்க்கால்களில் நீர் ஓடிக்கொண்டிருக்க சிறுசுகள் நீந்திக் களித்தன.
திடீர் என ஒரு ஆல மரத்தின் கீழ் முருகனின் பிரதர், பிள்ளையார் தனிமையில் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றியிருந்த இடம் மிக மிக சுத்தமாயிருந்தது. நம்ம பிள்ளையார் இங்கு என்ன செய்கிறார் என்று போசித்தேன். ஓரு வேளை வெளிநாட்டுக் கோயில்களில் இருந்து அகதியாய் வந்து சேர்ந்திருப்பாரோ? இருக்கலாம்.

கண்டி வீதியில் ஓடிக் கொண்டிருந்தது பஸ்

வீதியோர குளத்தில் குளிக்கும் பெண்
மாட்டை இழுத்துப் போகும் கிழவன்
வீதியோரத்தில் மூத்திரம் பெய்யும் சிறுவன்
கடந்து போகும் பாடசாலைச் சிறுமியர்
குந்திருந்து அலட்டும் இளசுகளும் பழசுகளும்
மரக்கறிகள் விற்கும் பெண்கள்
இப்படியாய் கடந்து போய்க் கொண்டிருந்தது பொழுதும் பாதையும்.
பாதையின் நடுவில் ஒரு கோடு போட்டு இரண்டாய் பிரித்திருந்தனர். டரைவர் தம்பீ அந்தக் கோடுகளின் இடது பக்கத்தில் பஸ்ஐ ஓட்டிக் கொண்டிருந்தார்.

ஹபரனை வந்தது. கண்மட்டும் தெரியும் உடையணிந்த இரு பெண்கள் கடந்து போயினர்.
சூரியன் எப். எம் " விடிய விடிய இரவு சூரியன்" என்று ஏதோ விளம்பரம் பண்ணிணார்கள். இவர்களால் ஏனோ மெதுவாய் பேசமுடியாமல் இருக்கிறது. அவசர அவசரமாய் பேசி ஓடுகிறார்கள்.

பஸ் ஒரு மயானத்தை மெதுவாய் தாண்டிக் கொண்டிருக்கும் போது அந்தச் மயானத்தில் இருந்த ஒரு சமாதி என் கவனத்தை ஈர்த்தது. இலங்கையின் வரைபட வடிவில் அமைந்திருந்தது அது. அதன் நடுவில் துப்பாக்கியுடன், ராணுவச்சீருடையில் ஒருவர் சிரித்துக் கொண்டிருக்கும் படம் இருந்தது. இதுவும் பாழாய்ப் போன யுத்தத்தின் எச்சம். ஒரு மகன், சகோதரன், காதலன், தந்தை காற்றில் கரைந்திருக்கிறார் இங்கும்... இது மாதிரி எங்கள் பகுதியிலும் பலர் இருக்கிறார்கள், சமாதியே இல்லாமல்.

"விலங்குகள் கவனம்" என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார்கள்.படம் ஏதும் போடப்பட்டிருக்கவில்லை. இதை எழுதியவர் ஒரு குசும்புக்காரராகத் தான் இருக்க வேண்டும்... இது எந்த விலங்குகளைக் குறிக்கிறது?

பஸ் பொலனநறுவை, மன்னம்பிட்டி தாண்டி வெலிக்கந்தையை அண்மித்து புகையிரதப் பாதைக்கு சமாந்தரமாக போய்க்கொண்டிருந்த போது "ஊத்துச்சேனை முத்து மாரியம்மன்" திருவிழா நடந்து கொண்டிருப்பதாக விளம்பரம் அறிவித்துக் கொண்டிருந்தது. மனதில் வந்து போனது பால்யத்தில் திருவிழாக் காலங்களில் காட்டிய கூத்தும், சேட்டைகளும். அப்பப்பா.. ஈரலிப்பான பருவம் அது. அடித்த லூட்டி கொஞ்சமா  நஞ்சமா?

புனானை புகையிரத நிலையத்தை கடந்து கொண்டிருந்தோம். கைகாட்டி தனது கையை மேலே தூக்கி வைத்திருந்தது. கைகாட்டிகளின் மிடுக்கு அலாதியானது.. கவனித்தப்பாருங்கள் அடுத்த முறை.

கண்முன்னே கடந்து போன இராணுவ முகாமின் வாசலில் "சவால்களின் மீதான வெற்றி" என்று ஆங்கிலத்தில் பெரிதாய் எழுதிப் போட்டிருந்தார்கள்.

அடுத்து வந்த இராணுவ முகாமின் முன்பக்கத்தில் ஒரு அழகிய மரக்குற்றி ஒன்றை வைத்து மிகவும் அழகாக அலங்கரித்திருந்தார்கள். இன்று கடந்து வந்த முகாம்களில் இது வித்தியாசமாய் இருந்தது.

ஓட்டமாவடிப் பாலம்...... எனது புனிதப்பூமியின் ஆரம்ப எல்லை... மனம் பஸ்ஸை விட வேகமமாய பாலத்தைக் கடக்கிறது. அட.... இது புதுப்பாலம்.

எனது புனிதப் புமியில் நான்..  எங்கும் கிடைக்காத ஒரு ஆறுதல் குடிவருகிறது மனதுக்குள். இதையா கேடிக்கொண்டிருந்தேன் 25 வருடங்களாக?
அல் இக்பால் வித்தியாலயம் கடந்து போகிறது எனது மத்திய கல்லூரி மனதில் வந்தாடுகிறது.

சிங்கம், ராவணண் படங்களுக்கான போஸ்டர்கள் அழியாத கோலங்கள், நினைத்தாலே இனிக்கும் படப் போஸ்டர்களை ஞாபகப்படுத்துகிறது.

மட்டக்களப்பு நெடுஞ்சாலை புனரமைக்கப்படுகிறது, கல்லுக்குமியல்களும், கிறவலும், மணலும், தென்னையும், பனையும் கடந்து போகின்றன.
காற்றில் உணர்ச்சிகளின் கலவையாய் நான். நெஞ்சு விம்முகிறது, வயிற்றுக்கள் ஏதெதோ செய்தது, அடிக்கடி கண்கள் குளமாகிக் கொண்டிருந்தன.

கிரான் என்ற பெயர்ப்பலகை கண்ணில் பட்டதும் ஒரு செங்கலடித் தேவதையிடம் பெருங்காதல் கொண்ட இந்த ஊர் நண்பன் மனதில் வந்து போனான். (செங்கலடி என்பது ஒரு ஊர்)

சித்தாண்டியும் கடந்து போயிற்று சித்தாண்டி முருகனும், அப்பாவின் நண்பர் ”கந்தப்போடியாரும்” ஞாபகத்தில் வந்தார்கள்.  முன்பொருமுறை இதேயிடத்தை நான் கடந்த போது  கொன்று வீசப்பட்டிருந்த 12 உடலங்களும், பயம் கலந்த அந்த நாட்களை நான் இன்னும் மறக்கப்படவில்லை என்பதை ஞாபகமூட்டின.

வந்தாறுமூலையும் கடக்கிறது..எங்களின் ஆஸ்தான வாசிகசாலை இங்க தான் இருந்தது. முன்னைநாள் வந்தாறுமூலை மகாவித்தியாலயமும் இன்றைய கிழக்குப்பல்கலைக்கழகமும் கடந்து போக 1980 களின் இறுதியில் இந்த இடத்தில் கைது செய்யப்பட்டு காணாமல் போன பால்ய சினேகம் ”பேக்கரி பாஸ்கரன்” ஞாபகத்தில் வந்து போனான். எத்தனையை இழந்திருக்கிறோம் கொதாரிவிழுந்த போரினால்?

அடுத்தது செங்கலடி.. நமது சிற்றரசின் எல்லை ஆரம்பிக்கும் இடம். பஸ்க்கு முன்னே போகிறது எனது கண்களும் மனமும். செங்கலடிச்சந்தி கடக்கிறது. இந்த இடத்தில் இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட  மிகவும் நெருங்கிய சிறுவனெருவனின் ஞாபகங்களும், பால்யத்து ஞாபகங்களும்,, ”துரோகி” என்று வீதியோரக் கம்பங்களில் தொங்கியவர்களின் நினைவும் மனம் முழுவதையும் ஒரு வித மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம் போன்ற உணர்ச்சிகளால் ஆட்கொண்டிருந்தது. பெருக்கெடுத்த கண்கள் கலங்கி பார்வையை மறைக்க, அதை துடைத்து நிமிரும் போது பஸ் ஏறாவூரை நெருங்கியிருந்தது.

ஏறாவூர் எங்கள் ராஜ்யத்தின் தலைநகர். பிள்ளையார் கோயில் புதுப்பொலிவுடன் தெரிய, அதனருகில் தெரிந்தது ஏறாவூர் காளிகோயில் திருவிழா என்னும் விளம்பரம். உடம்பு தான் பஸ்ஸில் இருந்ததே தவிர மனம் எப்போதோ இறங்கி ஓடிவிட்டிருந்தது ஏறாவூரின் புழுதி  படிந்த வீதிகளில்.
‌புன்னைக்குடா சந்தியை கடந்து இஸ்லாமிய சகோதரர்களின் எல்லைக்குள் போனதும் ஒலிபரப்பாளனாய் வர விரும்பி, திறமையிருந்தும் அரசியல் பலமில்லாததால் தோல்வியுற்ற அப்துல் ஹை ஞாபகத்தில் வந்தார். ஒன்றாய் வாழ்திருந்த சமுதாயங்கள் ஏற்படுத்தப்பட்ட ரணங்களை மறந்து வாழத் தொடங்கியிருப்பது போலிருந்தது. எனது பேராசையும் அது தான்

பழைய ஐஸ்கிறீம் கொம்பனி கடந்து போகிறது. சத்துருக்கொண்டான் வருகிறது. பெயரைக் கவனித்தீர்களா? சத்துருக்கொண்டான். இந்த மண்ணில் எங்கோ ஓரு இடத்தில் பெரும் எண்ணிக்கையில் புதைந்து போன என்னுறவுகள் இருக்கிறார்கள், மெளனமாய்.

நெருங்கிய பால்ய நண்பனொருவனும் இருக்கிறான் அவர்களுடன். 
சபிக்கப்பட்ட பூமியிது.

மனது பழைய ஞாபங்களுக்குள் மூழ்கியிருக்க, தன்னாமுனை தேவாலயம், அதைத் தொடந்து வாவியோரமாய் வரும் நீண்ட பாதை, பின்பு பிள்ளையாரடிக் கோயில் என பஸ் கடந்து கொண்டிருக்கிறது. (பிள்ளையாரடியிலும் ஒரு அழகிய வெள்ளைச்சட்டைத் தேவதை இருந்தாள் 1980 களில்)
வலையிறவு சந்தி சந்தி கடந்து உறணிக்கு முன் ”மட்டக்களப்பு மாநகரம் உங்களை வரவேற்கிறது” என்றிந்தது. தலைவணங்கி மரியாதையை ஏற்றுக்கொண்டேன்.

பஸ்டிப்போ, வயோதிபர்மடம், தோவாலயம் கடந்து கோட்டமுனை சந்தியில் நிற்கிறது பஸ்.

பஸ் டவுன் போவாது.. டவுன் போறவங்க இங்க இறங்கணும் என்ற குரல் கேட்டு இறங்கிக்கொண்டேன். புனிதப்பூமியில் பாவியின் கால்கள்.

நட்பூ வந்து மோட்டார்சைக்கிலில் ஏற்றிக் கொண்டான்....கோட்டைமுனைப்பாலத்தைக் கடந்த போது உப்புக்காற்றும் முகம் தேடிவந்து ஆசீர்வதித்துப் போனது. எங்கள் பாடசாலையும் கடந்து போகிறது. நெஞ்சு முழுவதும் பெருமிதம். கண்களில் கண்ணீர்.பேரானந்தத்தில் நான்.

பாவி ரட்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தான், புனிதப்பூமியில்.
Author: ஹேமா
•6:20 PM
நிர்மலா விரைவாகத் தேங்காயைத் துருவியெடுக்க நினைக்கிறாள்.துருவலை அவளுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.கழன்று கழன்று விழுந்தபடி....!

"இது ஒரு சனியன் திருவலை.எவ்வளவு நாளா நானும் கேக்கிறன் புதுசொண்டு வாங்கித் தாங்கோவெண்டு.கெதியாச் சமைச்சு முடிக்கவேணும்.சுதா வந்திட்டாளெண்டா தெய்ய தெய்ய எண்டு குதிப்பாள்.எப்பத்தான் இந்தத் திருவலைக்கு விடிவுகாலமோ”என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி “அப்பா இந்தாங்கோ தேத்தண்ணி....கேட்டனீங்களெல்லே"என்று கூப்பிட்டபடி வேலை செய்துகொண்டிருந்தவள் பதில் குரல் வராதபடியால் அடுப்படி கருக்குமட்டை இடுக்கு ஓட்டைக்குள்ளால் கூர்ந்து பார்க்கிறாள்.

மணியத்தார் கிணத்துக் கட்டிலிருந்தபடியே யோசித்துக்கொண்டிருந்தார்
"அப்பா தேத்தண்ணி கேட்டுப்போட்டு என்ன இஞ்ச வந்து யோசிச்சுக்கொண்டிருக்கிறியள்" என்றாள்.ஒண்டுமில்லப் பிள்ளை.அம்மா வந்திட்டாவோ.கொக்காளும் (அக்கா) இண்டைக்குத்தானே வாறன் எண்டவள்.அவள் பின்னேரமாத்தான் வருவாள் (மாலை நேரம்).அவன் ஆனந்த்க்கும் ஏதோ உடம்பு சரில்ல வருத்தமாக்கிடக்கு எண்டவள்.டொக்டரிட்டயும் போய்ட்டு அங்கயிருந்து பஸ் பிடிச்சு வர எப்பிடியும் மாலை சரிஞ்சிடும்.அதுதான் இவன் கண்ணனின்ர ஞாபகமும் வந்திட்டுது.எனக்கென்ன பிள்ளை உங்கட நாலு பேரின்ரயும் யோசனைதானே”என்றார் பெருமூச்சோடு மணியத்தார்.

"சரி இந்தாங்கோ குடியுங்கோ முதல்ல.அம்மா அநேகமா இப்ப வந்திடுவா.
சீட்டுக்காசு குடுத்திட்டு,நாளையான் சமையலுக்கு மிளகாய்த்தூள் இல்ல.இடிக்கவேணும்.அதுக்கும் சரக்குச் சாமான்கள் வாங்கத்தானே போனவ.வெயிலுக்க இராம நிழலாய்ப் பாத்து இருங்கோ.தலைச் சுத்து வந்திடும்.சுதா நெசவால வந்திடுவாள்.நான் கெதியாச் சமைச்சு முடிக்கவேணும்.பசியோட வந்து என்னைத் திண்டு கை கழுவுவாள்."என்று சொல்லிக்கொண்டே அடுப்படி நோக்கி நடந்தாள் நிர்மலா.

அம்மா கமலமும் தட்டிப் படலையைத் தூக்கித்திறந்து திரும்பவும் சாத்துவது தெரிகிறது.அம்மா வந்திட்டா.அண்ணா சுவிஸ்ல இருந்து உண்டியலில காசு அனுப்பியிருக்கிறார்.முதல் வேலையா சுத்தவர வேலியை இறுக்கமா அடைப்பிக்க வேணும்.துருவலையின் ஞாபகமும் வந்துபோகிறது நிர்மலாவுக்கு.

கமலம் நேராக மணியத்தாரைக் கிணற்றுக்கட்டில் கண்டுவிட்டுக் கிணற்றடிகே வர "என்னப்பா காசு தந்தவங்களே கடையில."என்றாள்.

மணியத்தாரும் "ஓமப்பா ரெண்டரைதான் (2 1/2 இலடசம்) தந்தவங்கள்.மிச்சம் நாளைக்கு வரட்டாம்.எனக்கும் முழுக்காசும் கொண்டுவரப் பயமாக்கிடந்துது.அதுதான் நானும் சரியெண்டு விட்டுப்போட்டு வந்திட்டன்."
என்றார் மணியத்தார்.

நிர்மலாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.அதன் ஏற்பாடுகளுக்குத்தான் மகன் கண்ணன் சுவிஸ்ல இருந்து பணம் அனுப்பியிருந்தான்.மணியத்தாரும் கமலமும் ஐயர், மேளம் ,பந்தல் ,சமையல் என்று திருமணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றிக் கதைத்துத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

மணியத்தார் பெரிதாகப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டபடி "பாவம் கண்ணனும் ஒருத்தனாய்ப் பிறந்து எங்களுக்காக எவ்வளவு கஸ்டப்படுறான்.படு சுட்டித்தனமா படிச்சுக்கொண்டிருந்த என்ர பிள்ளையை எங்கட நாட்டு நிலைமையாலயும் வீட்டு நிலையாலயும் எங்களோட சேத்து வச்சிருக்க முடியாமப் போச்சு.என்னையும் ஆண்டவன் வேளைக்கு (நேரவேளைக்கு) நோயாளியா ஆக்கிப்போட்டான்.மூண்டு பெட்டைக் குஞ்சுகளையும் பெத்தும் போட்டன்.பாவம் அவன்தான்".என்று வானத்தைப் பார்த்தபடி மனம் நொந்து சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார்.

”சரியப்பா கனக்க யோசிக்காதேங்கோ.என்ன செய்யிறது எங்கட தலை விதியோ அதுகளின்ர தலைவிதியோ மூண்டு பெட்டையளுக்க தனியனாப் பிறந்திட்டான்.அவனை இஞ்சயும் வச்சிருக்க பயந்துதானே கடனை உடனப்பட்டு காணியையும் ஈடு வச்சு அனுப்பினனாங்கள். அந்தக் கையோட நீங்களும் ஏனோதானோவெண்டு செய்துகொண்டிருந்த வேலையையும் செய்யேலாம படுக்கையில விழுந்த்திட்டியள்.அவன்ர கை அசையிறபடியால்தான் மூத்தவளையும் ஏதோ எங்களால் முடிஞ்சளவுக்குக் கரை சேர்க்கக்கூடியதா இருந்தது.உங்கட டொக்டர் செலவும் எவ்வளவு போயிருக்கும் பாருங்கோ.அவன் போய் 10-15வருஷமாகுது.
கடன் அடைச்சு காணி மீண்டு அக்காளுக்கும் சீதனமா வீட்டோட காணி,நகை,காசு எண்டு குடுத்துக் கல்யாணம் செய்து குடுத்து இப்ப நிர்மலாவுக்கும் அவன்தானே எல்லாம் செய்யிறான். பாவம்தான் என்ர பிள்ளை.எங்களால ஓடாய்ப்போகுது.

இதிலயும் ஒண்டு விளங்குதே.நாங்கள் குடுத்து வச்சனாங்கள் எண்டு நன்றியோட அந்த மருதடியானை கையெடுத்துக் கும்பிட்டுக் கொள்ளுங்கோ.மற்ற வீட்டுப் பிள்ளைகள்போல வெளிநாடு எண்டு போனவுடன தறுதலையாய்த் திரியாம எங்களை மறந்து போகாம ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் செய்திட்டன் எண்டு சொல்லாம பிள்ளை எங்கட நிலவரம்தெரிஞ்சு எங்களோட ஒத்துழைச்சு எங்களிலயும் எவ்வளவு பாசம் வச்சிருக்கிறான்.

அவனுக்கும் 38 வயசாகுது.நிர்மலான்ர கல்யாணம் முடிய அடுத்த வருஷத்தில சுதாவுக்கும் இவனுக்குமாச் சேத்து எங்கையெண்டாலும் மாத்துச் சம்பந்தம் அமைஞ்சாக்கூடப் பரவாயில்ல.இன்னும் வயசு போகவிடாமலுக்கு கட்டாயமாச் செய்திடவேணும்”.என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தபடியே இருவரும் அந்த இடத்தால் எழும்பி வர சுதாவும் நெசவால் வர மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆயத்தமானார்கள்.

நிர்மலாவுக்கும் திருமணம் பக்கத்துக் காளிகோவிலில் சந்தோஷமாக சுற்றம் சூழலோடு நிறைவேறியது.அவளின் கணவர் ஒரு தபால்நிலையத்து அதிகாரியாக இருந்தார்.அவளும் புகுந்த வீட்டோடு ஒன்றிவிட்டாள்.

வருடங்கள் இரண்டு ஆகிவிட்டிருந்தது.சுதாவுக்கு வரன்கள் பார்த்தபடி இருந்தார்கள்.சரியாக இன்னும் அமையவில்லை.இப்படியிருக்க மணியத்தாருக்கும் கமலத்திற்க்கும் மேலதிகமாய் ஒரு ஆசை குடியேறிக்கொண்டிருந்தது.

இரண்டு பெட்டச்சியையும் ஊரோட கட்டிக் கொடுத்தாச்சு.சின்னவளுக்குக் கொஞ்சம் கூடுதலாகச் சீதனம் கொடுத்தாலும் பரவாயில்லை.வெளிநாட்டில மாப்பிள்ளை பார்க்கலாம் என்று.இதைப் பற்றிக் கண்ணனிடமும் கலந்து கதைத்தும்விட்டார்கள்.கண்ணனும் தன்னைமீறிய செயலாக இருந்தாலும் பெற்றவர்களின் ஆசையும் தன் கடமையும் என்று சம்மதித்தபடி சரி பார்ப்போம் என்றுவிட்டான்.கண்ணனுக்குள்ளும் ஆயிரம் கனவுகள்.ஆனால் யாரிடம் மனம்விட்டுத் தன் ஆசைகளை எண்ணங்களைச் சொல்லமுடியும்.தன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது மட்டுமே ஒருகணம் யோசித்துச் சிரித்துக்கொள்வான்.பிறகும் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தன் வேலைகளோடு தன்னைக் கரைத்துக்கொள்வான்.

"இரண்டு பெரிய பாரத்தை இறக்கி வச்சு என் கடமையைச் சரிவரச் செய்திட்டன்.இனி என்ன தங்கச்சி சுதா மட்டும்தானே.பிறகு எனக்கு என்ன.சுதந்திரமாயிடுவன்.அப்பா அம்மாவையும் கடைசி வரைக்கும் பாத்துக்கொள்ளவேணும்.ம்ம்ம்...எல்லாம் நல்லதாவே நடக்கும்.அநேகமா லண்டனில பாத்திருக்கிற மாப்பிள்ளை சரிவரும் எண்டுதான் நினைக்கிறன்.லல்லி அக்காவுக்கு ஒருக்கா போன் பண்ணவேணும்.

ஞாபகமா கலண்டர்ல எழுதிவிடவேணும்.நாளண்டைக்கு டொக்டர்.அடிக்கடி முள்ளந்தண்டு குடைஞ்சு நோகுது.இந்தக் குளிர் நாட்டில ஐஸ்பெட்டிக்குள்ள இருக்கிற செத்த கோழிபோலத்தானே இங்க எங்கட வாழ்க்கை.எங்கட ஊர் வாழ்க்கை சுவாத்தியம் எல்லாம் எங்களுக்கு எவ்வளவு நல்லாயிருக்கும்.நாரி,மூட்டு,முது,கை,கால் எண்டு எல்லாமே வலிக்குது."

என்று தனக்குத் தானே மனதிற்குள் பேசியபடியே 3 1/2 க்கு வேலை முடித்து வீட்டுக்கு வந்தவன் பாபுவும் இண்டைக்கு வரப் பிந்தும்.அடுத்த வேலைக்கு 6 மணிக்குப் போகவேணும் என்றபடி ரேடியோவைப் போட்டுவிட்டு சமைக்க ஆயத்தப்படுத்தினான்.

பாபுவும் கண்ணனுமாக ஒரு அறையில் வசிக்கிறார்கள்.ஒத்துப்போகும் புரிந்துகொண்ட ஒரு நல்ல நண்பன்.என்ன....தண்ணியடிச்சுப்போட்டு கொஞ்சம் அரசியல் சினிமா எண்டு உளறுவான்.கண்ணன் தன் களைப்போடு அந்த அறுவையெல்லாம் ம் கொட்டிக் கேக்கவேணும்.இதொண்டுதான் எரிச்சல் வரும் அவனில.

4-5 மாதங்கள் போயிருக்கும்.சுதாவின் திருமணம் சரி என்கிற பேச்சளவில் நின்றுகொண்டிருந்தது.லண்டன் மாப்பிள்ளை என்றவுடன் சீதனம்தான் கூடுதலாகக் கேட்கிறார்கள்.லல்லி அக்கா எப்பிடியும் பேசிச்சமாளிச்சுச் சரிப்பண்ணிடுவா.சுதாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிட்டுது.எப்பிடியும் இதைச் சரியாக்கிடவேணும்.

பழைய லோன் இன்னும் 5 மாசம் கட்டக் கிடக்கு.புது லோன் எடுத்தா அதைக் கழிச்சுத்தான் தருவாங்கள்.பாப்பம்.......சாமாளிப்பம் என்று நினைத்துக்கொண்டவன்.

அன்று வங்கிக்குப் போய் கடன் எடுப்பது பற்றினதான பத்திரங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு அப்படியே வைத்தியரிடமும் போய் வந்தான்.இண்டைக்கு லீவு.பாபுவும் நேரத்துக்கு வந்திடுவான்."சொல்ல மறந்த கதை" என்று நல்ல படம் ஒண்டு வந்திருக்கு.கடையில கொப்பி ஒண்டு எடுத்துக்கொண்டு வந்தனான்.பின்னேர வேலை மட்டும்தான்.வந்து சாப்பிட்டு முடிச்சிட்டுப் படம் பாத்திட்டுத்தான் படுக்கவேணும்.

இண்டைக்கு பாபு சமைக்கிறன் எண்டவன்.எனக்கும் முதுகு சரியா வலிக்குது.நல்லா ஐஸ் கொட்டிக்கிடக்குது.சவம் பிடிச்ச ஊர் இது.எங்கட தலைவிதி.நாசம் கட்டினவங்கள் எங்களை ஊரோட நிம்மதியா இருக்கவிடுறாங்களே என்றும் நடுவில்அலுத்துக்கொண்டவன்.....விண்டர் சூவும் (குளிர்காலச் சப்பாத்து) பழுதாப்போச்சு.இந்த வருசம் இதோடயே சமாளிக்கலாம்.அடுத்த வருஷம் வாங்கிக்கொள்ளலாம்.என்று மனதோடு பேசிக்கொண்டே சோபாவில் சாய்ந்தவன் தான் அப்படியே நித்திரையாகிவிட்டான்.

பாபு வந்து கதவைத் திறக்கவே திடுக்கிட்டு விழித்த கண்ணனிடம் பாபு " என்னடா மச்சான் பின்னேர வேலைக்கு நேரமாச்சு.இன்னும் படுத்திருக்கிற."என்றான்.

"ஓமடா மச்சான் அசந்து போனன்." என்றபடி முகத்தைக் கழுவி வெளிக்கிட்டபடியே தன் தங்கையின் திருமணம் பற்றியும்,அதற்காக வங்கியில் கடன் எடுப்பது பற்றிக் கதைத்திருப்பது பற்றியும்,வைத்தியர் முதுகுவலி பற்றியும்,சொல்லிக்கொண்டே வேலை முடித்து வந்து இருவருமாகப் படம் பார்த்துவிட்டுப் படுக்கலாம் என்றும் சொல்லிவிட்டு வேலைக்குப் போய்விட்டான்.

பாபு கோழி ஒன்றை ஐஸ்பெட்டிக்குள்ளால் எடுத்து ஊறவிட்டுவிட்டு சமையலுக்குண்டான மற்றைய ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தான்.
கதவு திறக்கும் சத்தம்கேட்டுத் திரும்பியவன் போய்க் கொஞ்ச நேரத்திலேயே கண்ணன் திரும்பி வந்ததைக் கண்டு திடுக்கிட்டான்.

"என்னடா மச்சான் என்ன நடந்தது"என்று பாபு கேட்கவும்" "இண்டைக்குச் சரியா ஏலேல்ல மச்சான்.குனிஞ்சு நிமிந்து ஒண்டும் செய்ய ஏலாம இருக்கு.முதுகு குடைஞ்சு நோகுது.நாளைக்கு கிறங் (சுகயீனம்) சொல்லிட்டு டொக்டரிட்ட போனாத்தான் நல்லது" என்றபடி படுக்கைக்குப் போய்விட்டான்.

அதே இரவு கண்ணன் வலியால் துடித்துப்போக அவசர அழைப்பு வைத்திய வாகனத்திற்கு தொலைபேசியில் அழைத்துக் கொண்டு போய்ச் சேர்த்தான் பாபு வைத்தியசாலைக்குக் கண்ணனை.

அடுத்த நாள் விடிந்தது ஆனால் கண்ணனுக்கு இருளாக.வைத்தியர் சொன்னது அதிர்ச்சியாக்கியது கண்ணனை."இனி ஒரு நாளுக்கு 4-5 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்யமுடியாது என்றும் பாரமான பலமான வேலைகள் எதுவுமே செய்யக்கூடாதென்றும் தொடர்ந்தும் செய்தால் பக்கவாதத்திற்குண்டான அறிகுறிகள் தெரிகிறதென்றும், பிறகு எழும்பி நடமாடவே முடியாத நிலைமை வந்துவிடுமென்றும்" உறுதியாகத் தெரிவித்தார்.

கண்ணன் தன் 43 வயதின் வாழ்நாடகளில் கடந்த காலத்தில் தன் கடமைகளைச் சரிவரத் தான் செய்துவிட்ட பெருமிதத்தோடு ,அதேநேரம் தனதென்ற தன் வாழ்வு தன்னை விட்டுப்போய்விட்ட வேதனையோடு இதை அப்பா அம்மாவுக்குச் சொல்லலாமா வேண்டாமா என்கிற யோசனையோடும் முற்றிலும் பனியால் மூடப்பட்ட சுவிஸ்ன் உயர்ந்த மலைகளைப் பார்த்தபடியே தானும் மலையாய் மலைத்து நிற்கிறான்.
Author: Subankan
•4:49 PM

சிறுவயதில் ஒருநாள் அம்மாவுடன் இருந்து வானொலி கேட்பதற்காய் வானொலியைத் திருகியபோதுதான் ஈழத்துச்சதன் முதன்முதலாய் எனக்கு அறிமுகமானார். விதம்விதமான குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க அது என்ன என்ற எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க பெரும்பாடுபட்டார் அம்மா. இந்தியத் தொலைக்காட்சிகள் எதுவுமே அறிமுகமாகியில்லாத காலத்தில் ‘மிமிக்ரி’ என்ற சொல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லையாயினும், மிமிக்ரி என்றால் என்ன என்பது அன்று எனக்குப் புரிந்துபோனது. அவரது விளக்கத்தில் இருந்த ஈழத்துச்சதன் என்ற பெயரும் அதன் வித்தியாசத்தன்மை காரணமாக மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டது.

அதன்பிறகு அவரது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குக்கூட சந்தர்ப்பங்கள் ஏதோ அதிஷ்டத்தில்தான் அமைந்தாலும் அவரது நிகழ்ச்சியை முதன்முதலில் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்தது. பாடசாலையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவரது நிகழ்ச்சிக்கு ஐந்து ரூபா டிக்கெட் எடுத்து அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன் வரிசைகளில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அவரது உருவம் என ஒன்றை மனதில் கற்பனை செய்துகொண்டு காத்திருந்தபோது அங்கே வந்த குள்ளமான அந்த மனிதரை “’இவர்தான் ஈழத்துச்சதன்” என்று அருகிலிருந்து ஏமாற்றமளித்தான் அவரை ஏற்கனவே அறிமுகமான நண்பன் ஒருவன்.

பறவைகள், விலங்குகள் என்று பலவற்றையும் தனது வாய்மொழியால் மட்டுமல்ல, உடல்மொழியாலும் அன்று கண்முன் கொண்டுவந்திருந்தார் ஈழத்துச்சதன். அங்குமிங்கும் தாவி குரங்குச்சேட்டைகளை நிகழ்ச்சினார். அங்கு குரங்குகள் பேன் பார்த்தன. யானைகள் பிளிறின. காட்டு விலங்குகள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டன. எங்கள் ஆண்கள் பாடசாலையில்கூடப் பெண்கள் ஒன்றுகூடிச் சிரித்துக்கொண்டார்கள். சனிக்கிழமைகளில் எள்ளுச்சாதம் வைத்துவிட்டுக் காட்டுக்கத்தல் கத்தினாலும் எட்டிக்கூடப் பார்க்காத காகங்கள் எல்லாம் அவரது ‘கா கா’ என்ற குரலுக்கு நூற்றுக்கணக்கில் மண்டபத்தை முற்றுகையிட்டுக்கொண்டன. இத்தனைக்கும் அவர் கையில் ஒலிவாங்கி என்பதே கிடையாது. அது அவருக்குத் தேவையும் கிடையாது.

அவர் அன்று நிகழ்த்தியவைகளுள் எனக்கு இன்னும் மறக்காமல் இருப்பது மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள். ஒருவகையில் எமது அடையாளமாகவே பார்க்கப்பட்ட ஒன்று. போச்சியால் சிறிது தினரை ஊற்றி வாயால் ஊதிவிட்டு சொக்கை இழுத்து கிக்கரை சிலமுறை உதைந்துப் ‘இஞ்சின் பிடிக்காமல்’ போகவே மீண்டும் போச்சி- தினர்- கிக்கர், இம்முறை படபடவென பெரிய சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகி ஒருமுறை சுற்றிவர மண்டபம் முழுவதும் கரும் புகை நிரம்பி கைதட்டலில் கரைந்தது.

ஈழத்துச்சதன் எம்முடனேயே வாழ்ந்த ஒரு அற்புதமான கலைஞன். எமக்கு அன்றிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களாலும் வானொலி நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டு பெரிதாகக் கவனிக்கப்படாமலேயே கடந்துபோனவர். இன்று தொலைக்காட்சிகளில் அசத்திக்கொண்டும், கலக்கிக்கொண்டும், சிலவேளைகளில் கடுப்பேற்றிக்கொண்டும் இருக்கும் கலைஞர்களைப் பார்க்கும்போது ஈழத்துச்சதனின் ஞாபகமும் வந்துபோகும்.

எவ்வளவு தேடியும் ஈழத்துச்சதனின் புகைப்படம் ஒன்றுகூட இணையத்தில் தட்டுப்படவில்லை. இணையத்தில் ஏறும் எல்லாமே நிரந்தரம் என்றார் சுஜாதா. அந்த நிரந்தரத்தன்மை ஈழத்துச்சதனுக்கு எழுத்தில் மட்டும்தான் வாய்த்திருக்கிறது போலும்.

ஈழத்துச்சதன் – வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட (பிர)தேசத்தில் வாழ்த்து, இப்போதும் எம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதமான கலைஞன்.

Author: மாயா
•11:41 AM
80களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் பல கலைஞர்கள் எம் மண்ணை வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் எனும் போது என்றும் மறக்கமுடியாதவர்கள் டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன் ஆகியோராவார்.

 ஈழத்தின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், இலங்கையில் தயாரான வாடைக்காற்று திரைப்படம் , அதன்பின்  ஒலி நாடாவினாலும், மக்களைச் சென்றடைந்து சிரிக்க வைத்தார்கள்;. ஆயினும் இக்கலைஞர்களின் கலைவடிவங்கள் காலவோட்டத்தில் இல்லாது போனது. எனினும் ஆங்காங்கே கிடைத்தவற்றைக்கொண்டு ஒரு முழு ஒலித்தொகுப்பாக உங்கள் முன் பகிர்கிறேன்.

 
நன்றிகளுடன்
மாயா

உசாத்துணை
Author: வந்தியத்தேவன்
•10:25 PM
பாடசாலை லீவு விட்ட ஒரு சித்திரை வெயில் நாள்.
"டேய் வந்தி வந்தி" யாரோ ஒரு கூட்டாளி எங்கடை வீட்டு படலைக்கு வெளியே நின்று கூப்பிட்டான்.

"லீவு விட்டால் போது உடனே வந்திடுவாங்கள்" எனப் புறுபுறுத்தபடி அம்மா
"தம்பி உவன் பிரபாபோல கிடக்கு, கிரிக்கெட் அது இது எனக் கேட்பான் போய்விடாதை" என்றார் அம்மா.

"சும்மா இரணை லீவுக்கை விளையாடாட்டில் பிறகு ஏனனை லீவு" என்றபடி பேட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தால் பிரபா, வர்மா, வடலி, கிருத்தி என ஒரு குறூப்பே விக்கெட்டுகள் டெனிஸ் போலுகள் என மேட்சுக்கு ரெடியாக இருந்தார்கள்.

"யாரோடை மச்சான் இண்டைக்கு மட்ச்? " வந்தி

"வேறை யாரோடை வழக்கம்போல பக்கத்து ஊர்க்காரன்களுடன் தான் நேற்று எங்கடை கிரவுண்டிலை தோற்றபடியால் இண்டைக்கு அவங்கடை கிரவுண்டுக்கு வரட்டாம் " வடலி

"உவங்களுக்கு வேறை வேலை இல்லை எப்படியும் வெல்லும் வரை மேட்ச்சுக்கு கேட்பான்கள்" கிருத்தி

"பொறடா இந்த முறை உவங்களுக்கு நல்ல அடி கொடுத்தால் அடங்கிவிடுவான்கள் பிறகு கொஞ்ச நாளைக்கு வரமாட்டார்கள்" வர்மா

இப்படித்தான் எங்கடை கிரிக்கெட் பொழுது விடியும். எங்கடை ஊர்களிலை எந்த விளையாட்டுக்கும் பருவகாலம் என்பதே கிடைக்காது. கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் கிரிக்கெட், கால்பந்து எல்லாம் விளையாடியிருக்கின்றோம்.

பள்ளிக்கூடம் லீவு விட்டால் போதும் கிரிக்கெட் மட்டையுடன் கிரவுண்டில் நிற்பதுதான் எங்கள் தலையாய வேலையே. கொஞ்சம் வயசு போனதுகள் எம்மைப் பார்த்தால் உந்தகிளைமாரிகளுக்கு விடிஞ்சால் பொழுதுபட்டால் உதுதான் வேலை வெயில் குடிக்கிறதுக்கென்றே வந்து நிற்கின்றார்கள் என்பார்கள். குறிப்பாக கிரவுண்டைச் சுத்தி இருக்கின்ற வீட்டுக்காரர்களுக்கு நாங்கள் கொடுக்கின்ற கரைச்சல் பல, தண்ணி குடிக்க போறது, பந்து அவர்கள் முற்றத்தில் போனால் எடுக்கபோறது. சிலர் பேசாமல் இருப்பார்கள் சிலர் கொஞ்சம் புறுபுறுப்பார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரை ஊருக்கு ஊர் விளையாடும் விளையாட்டுகள் வேறுபடும். சில ஊர்கள் கால்பந்துக்கு பெயர் போனவை சில ஊர்கள் கிரிக்கெட்டுக்கு பெயர் போனவை. உலகக்கோப்பைப் போட்டிகள் நடப்பதால் எங்கடை ஊரிலை நாங்கள் ஆடிய கிரிக்கெட் பற்றிச் சில சுவாரசியங்கள்.

எங்கடை ஊரிலை பக்கத்து ஊர்க்காரர்களுடன் விளையாடுவது எமக்குள் நாமே கன்னை புறிச்சு விளையாடுவது என பலவகையாக கிரிக்கெட் விளையாடுவோம். பக்கத்து ஊர் கழகங்களுடன் விளையாடும் போது போட்டியில் சூடு பறக்கும் சிலவேளைகளில் விக்கட், துடுப்பால் அடிபாடு கூட நடக்கும். ஆஷாஸ் தொடர், காவஸ்கர் போர்டர் தொடர் எல்லாம் எங்களுக்குத் தெரியமுன்னரே (அதாவது உலக அறிவை வளர்க்கமுன்னரே)பக்கத்து ஊர்க்காரர்களுடன் நாங்கள் தொடர்போட்டிகள் விளையாடி இருக்கின்றோம்.

முதலில் எத்தனை போட்டிகள் எங்கே விளையாடுவது என்பது தீர்மானிக்கப்படும். அவர்களின் கிரவுண்டில் 3 போட்டி என்றால் எங்கடை கிரவுண்டிலை 3 போட்டி என எமக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் போடப்படும். ஏற்கனவே இரண்டு கிரவுண்டிலையும் விளையாடி ஏதும் பிரச்சனைகள் நடந்தால் இரண்டு டீமுக்கும் பொதுவான கிரவுண்டில் போட்டி நடத்துவது என தீர்மானம் போடப்படும்.

அடுத்த பிரச்சனை அம்பயர் அடிக்கடி எல்பி கொடுக்காத வெறுமனே போலர் வீசுகின்ற போலை எண்ணவும் அவுட் என்றால் கையைத்தூக்கவும் பவுண்டரிக்கு கையை விசுக்கவும் தெரிந்தவராக இரண்டு தலையாட்டிப் பொம்மைகள் அம்பயராக இருந்தால் போதும் ஆனால் சிலவேளை எங்கடை ஆட்களே நாங்கள் பேட் பண்ணும் போது அம்பயராகவும் அவங்கடை ஆட்கள் அவங்கள் பேட் செய்யும் போது அம்பயராகவும் தலையாட்டுவார்கள் ச்சீ கடமையாற்றுவார்கள். எப்பவாவது ஒரு நாளைக்கு இரண்டு டீமுக்கும் பொதுவான அம்பயர் கடமை ஆற்றுவார். பெரும்பாலும் வன் டவுனாக வருபவன் அம்பயராக கடமையாற்றுவான் தான் அடிக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாற்றில் இரண்டு மூன்று முறை எல்பி கொடுக்காமல் நான்காவது முறை கொடுத்துவிட்டு அவுட்டானவனிடம் உனக்கு 3 தரம் நான் கொடுக்கவில்லை திரும்ப திரும்ப கொடுக்காமல் விட்டால் அது பிழை என அரிச்சந்திரனின் பக்கத்துவீட்டுக்காரன் போல லெக்சரடிப்பான். அவுட்டானவன் அம்பயராகி அவனைப் பழிக்கு பழிவாங்கிய கதையும் நடக்கும்.

இதெல்லாம் பேசி முடிச்ச பின்னர் எத்தனை ஓவர், யார் பந்து கொண்டுவருவது, யார் பட் கொண்டுவருவது எல்லாம் நிர்ணயித்து போட்டி நடக்கும் நாள், நேரம் எல்லாம் முடிவு செய்யப்படும்.

போட்டி தொடங்கும் போது ஸ்கோர் போடும் அணியினருக்கு பக்கத்தில் மற்ற அணியின் பீல்டிங் செய்யாத ஒருவர் அல்லது ஒரு தவ்வலை பக்க‌த்தில் இருத்திவிடவேண்டியதுதான், அவனின் கடமை கள்ளரன்ஸ் போடாமல் கவனமாக ஸ்கோர் பதிவாகின்றதா என்பதை அவதானிப்பது. இதிலை சிக்கல் என்னவென்றால் பெரும்பாலும் சின்னப்பொடியளை இதற்கு நியமிப்பதால் அவனுக்கு மாங்காயோ நெல்லிக்காயோ லஞ்சமாக கொடுத்து எப்படியும் ஒரு இருபது இருபத்தைஞ்சு ரன்ஸ் கள்ள ரன்ஸாக இருக்கும். ஒரு சில ஸ்கோர்போடுபவர் மட்டும் நேர்மை நீதி நியாயமாக இருப்பார்கள். தோற்கின்ற நிலை வந்தால் கள்ள ரன்ஸ் உறுதியாக போடப்படும்.


ட்வெண்டி ட்வெண்டி வரமுன்னரே அதனை விளையாடிய பெருமை எமக்கு உண்டு, பெரும்பாலும் அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட போட்டியே நாங்கள் விளையாடுவது. நல்லா விசுக்க கூடியவர்கள் ஓப்பனராக இறங்குவார்கள். இதிலை ஒரு சிக்கல் ஓப்பனராக இறங்குகின்றவன் தனக்காக பீல்டிங் நேரத்தில் தனக்காக இன்னொருவனை அலையவிட்டுவிட்டுப் போய்விடுவான். நானும் கிரிக்கெட் விளையாடினான் எனச் சொல்லும் சின்னப்பொடியள் அந்தக் கடமையை சிவனே என செய்வார்கள்.

மற்றும்படி ரூல்ஸ் எல்லாம் வழக்கமான கிரிக்கெட் தான். என்ன ஒரு பக்கம் விக்கெட் இருக்கும் பெயில்ஸ் இருக்காது மற்றப் பக்கம் ஓரு கல்லு. ரன் அவுட்டாக்குவதற்க்கு அந்தக் கல்லில் பந்தைக் குத்தினால் சரி, சிலவேளை போலர் காலை கல்லில் ஊண்டிக்கொண்டு பந்தைப் பிடித்தால் அவுட் தான்.

இன்னொரு முக்கியமான பிரச்சனை இருக்கு போட்டி முடிஞ்ச பின்னர் தோத்த அணியினரின் கையெழுத்தை வென்ற அணி தங்கடை ஸ்கோர் போட்ட கொப்பியில் வாங்கவேண்டும், பெரும்பாலும் தலைவர் என எவரும் இல்லாதபடியால் யாருமொரு அப்பாவியின் கையெழுத்தை வாங்கிவிடுவார்கள், உப்பிடித்தான் ஒருக்கால் என்னெட்டை கையெழுத்தை வாங்க எங்கடை டீமில் இருக்கும் ஒரு அண்ணை "டேய் உவங்கள் அலாப்பி வென்றுவிட்டார்கள் சைன் வைக்காதை" என்றான் ஆனாலும் அவங்கள் என்னை வளைஞ்சுப் பிடித்துவிட்டார்கள் நானும் என்ன செய்வது என விளங்காமல் கையெழுத்தை வைத்துவிட்டு வந்துவிட்டேன் எங்கடை குறுப்போ எனக்கு ஒரே ஏச்சுத்தான், நான் சிரித்துக்கொண்டு "நான் என்ன பேயனா என்டை சைனை வைக்க நான் சும்மா ஒரு பெயரைக் கிறிக்கிவிட்டு வந்திடேன்" என்றேன், இப்படியான மோசடிகளில் இருந்து தப்ப சைனுடன் கீழே பெயரை எழுதவேண்டும் என்ற கட்டாயம் சில இடங்களில் இருந்தது.

எதிரணியினர் தொடரில் தோற்றால் அடுத்த தொடருக்கு பரப்பளவு குறைந்த வெட்டைகளை தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த மேட்சைப் பற்றிப் பேசும் போது இந்த முறை தங்கத்தான் வெட்டையில் தான் விளையாடவேண்டும் என்பார்கள். தங்கத்தான் வெட்டை என்பது ஒரு சின்ன வெளியான காணி சுத்தவர பனை மரம் எல்லாம் வளர்ந்து நிக்கும். பந்து பனையில் பட்டு பிடிச்சால் அவுட் போன்ற ஐசிசிக்கு தெரியாத புது ரூல்ஸ் எல்லாம் அங்கே உருவாகும். சின்ன இடம் என்பதால் சிக்சர் சிக்சராக அடிக்கலாம். இதேபோல் சிலவேளைகளில் தோட்டத் தறைகளில் எல்லாம் அங்கே எந்தப் பயிரும் இல்லையென்றால் போட்டி நடக்கும். செம்மண் தோட்டத்தில் விளையாடினால் உடுப்பெல்லாம் ஊத்தையாகிவிடும். வீட்டிலை அம்மாட்டை ஏச்சு தான் வாங்கவேண்டும் என சிலர் தோட்டத்தில் விளையாட வர மறுத்துவிடுவார்கள்.

இதை விட எங்கடை ஊருக்குள்ளையே இரண்டாக அணி பிரிச்சு விக் மேட்ச் நடத்துவது வழக்கம். இது ஒரு சனிக்கிழமையில் தான் பெரும்பாலும் நடைபெறும், காரணம் ஞாயிற்றுக்கிழமையில் பலர் சைவ உணவு என்பதால் சனிக்கிழமை வைத்தால் தான் இறைச்சி வாங்கிக் காச்சி பாணுடன் சாப்பிடலாம்.

போட்டிக்குச் சில நாட்களுக்கு முன்னரே விளையாடுகின்ற பொடியளிடம் காசு வாங்கி ஆயத்தம் எல்லாம் நடக்கும். வாங்குகின்ற காசில் தான் இறைச்சி, பாண் எல்லாம் வாங்கவேண்டும். கிரிக்கெட் விளையாடுவதை விட இறைச்சியும் பாணும் சாப்பிடுவதுதான் முக்கியம். வீரர்கள் வெள்ளை ஜீன்ஸ் வெள்ளை ரீசேர்ட் எல்லாம் போட்டு ரியலான டெஸ்ட் மேட்ச் போலவே வெளிக்கிட்டு வருவார்கள். ஸ்பீக்கர் எல்லாம் கட்டி நேர்முக வர்ணனைகூட நடக்கும்.

"முழுவேகத்துடன் வீசப்பட்ட அந்தப் பந்தை சுபாங்கன் பைன் லெக்கில் அடித்து நான்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். "

"மாயாவின் துடுப்பில் பட்ட பந்து நேராக விக்கட் காப்பாளரிடம் செல்கின்றது, மாயா ஆட்டம் இழக்கின்றார்"

இப்படி அழகுதமிழில் வியூகம் அமைத்த இடங்கள் மாத்திரம் ஆங்கிலத்துடன் வர்ணணை நடக்கும்.

இந்த போட்டியைப் பார்க்க எப்படியும் பார்வையாளர்கள் வருவார்கள். குறிப்பாக பெண்கள் வந்தால் சிலருக்கு கொண்டாட்டம் அடி அடி என அடிப்பார்கள். அதிலும் அவரின் மனதுக்குப் பிடித்தவர் அந்த கூட்டத்தில் இருந்தால் சிக்சர் எல்லாம் பறக்கும் சிலவேளை சிக்சரடிக்கப் போய் அவுட்டான சோகமும் நடந்திருக்கின்றது.

ரியூசனுக்கு ரியூசன் கூட விளையாடி இருக்கின்றோம். எங்கடை ரியூசன் வென்றால் அண்டைக்கு ஒரே ஆர்ப்பாட்டம் தான் எல்லாம் கூடப் படிக்கின்ற பெட்டையளுக்கு கலர்ஸ் காட்டத்தான். தோத்துப்போய் வந்தால் அவை எங்களை நக்கலடிப்பார்கள். யாரோ ஒரு உளவாளி என்ன ஸ்கோர் யார் டக்கவுட்டானான் யார் கேட்ச் விட்டான் என சகலதையும் சொல்லிவிடுவான். எல்லாத்தையும் சொல்லி சொல்லியே நக்கலடிப்பார்கள், ஆனாலும் எமக்கு வெட்கம், மானம் ரோஷம் எதுவும் இல்லாதபடியால் நாமும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

இப்படித்தான் எங்கடை கிரிக்கெட் வாழ்க்கை ஒரு காலத்தில் இருந்தது.மீண்டும் ஊருக்குப் போய் கிரிக்கெட் விளையாட ஆசை நடக்குமா? ம்ம்ம் அது ஒரு கனாக் காலம்.



சொல் விளக்கம்
பெரும்பாலன சொற்கள் ஏற்கனவே ஈழத்துமுற்றப் பதிவுகளில் இருந்தாலும் புதிய வாசகர்களுக்காக இந்த விளக்கம்.

கூட்டாளி - நண்பன்
படலை - Gate பெரும்பாலும் வேலி உள்ள வீடுகளுக்கு படலை தான் இருக்கும் இதுவும் பனை ஓலை அல்லது கிடுகால் அமைந்திருக்கும், சில இடங்களில் தகரத்திலும் இருக்கும்.
புறுபுறுத்தல் சத்தம் வெளியே வராமல் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தல்
கிளைமாரி வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுத்தும் இளைஞர்கள்
கன்னை - குழு
புறி - பிரிப்பது
எல்பி - LBW எல்பிடவுள்யூவைத்தான் சுருக்கமாக எல்பி
தவ்வல் - சின்னப் பையன்
கள்ள ரன்ஸ் - களவாக போடப்படும் ஓட்டம்
விசுக்குதல் - அதிரடியாக ஆடுதல்
அலையவிடுதல், அலைதல் - பீல்டிங் செய்தல்
அலாப்பி - ஏமாத்தி விளையாடுதல்
ஏச்சு - திட்டுதல்
வெட்டை - சிறிய மைதானம்
தோட்டத் தறை - தோட்டம் செய்யும் நிலம்
ஊத்தை - அழுக்கு
விக் மேட்ச் - பெரிய அளவில் ஆடும் கிரிக்கெட்
பாண் - Bread இதைப் பற்றிய பதிவே ஈழத்துமுற்றத்தில் இருக்கின்றது
கலர்ஸ் காட்டுதல் - பந்தா பண்ணுதல்

படங்கள் இலங்கை வலைப் பதிவர்கள் கிரிக்கெட் போட்டியில் இருந்து எடுக்கப்பட்டவை
Author: வடலியூரான்
•4:18 AM
பயணங்கள்,சுற்றுலாக்கள்,உலாத்தல்கள் எப்போதும் மனதுக்கு சந்தோசத்தை வரவழைக்கக் கூடியவை.அதிலும் பிரிந்த உறவுகளைக் காணச் செல்வது என்பது இன்னும் ஒருபடி கூடுதல் சந்தோசத்தைத் தரக்கூடியவை தான்.எல்லாவற்றையும் விட போர்,தொழில்,படிப்பு எனப் பல காரணங்களினால் பிரிந்திருந்த/பிரித்துவைக்கப்பட்டிருந்த உறவுகளை,ஊர்ச்சொந்தங்களைக் காணச்செல்லும் போது மனதில் ஏற்படும் கிலேசம் அலாதியானது.அனுபவிக்க சுவையானது.ஆனால் அந்தப் பயணங்களே சோகமாய்முடிகின்ற சோகம் ஈழத்தில் மட்டுமே அரங்கேறமுடியும்.அப்படியானதொரு சோகமான/சுமையான அலைச்சல்ப் பயண அனுபவமொன்று தான் இந்தப்பதிவு.




கொழும்பிலிருந்து 2008/04/06 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பத்து மணி தொடரூந்தில்(ரயில்)பல்கலை நண்பர்கள் பத்துப் பேர் ஒரு படையாய் திருகோணமலையை நோக்கிப் புறப்பட்டோம்.மறுநாள் காலை ஏழுமணியளவில், எங்களை தலைநகர் நண்பர்களான சைந்தனும்,பிரதீசனும் வரவேற்றனர்.வந்ததில், பாதி சைந்தனின் வீட்டிலும் மீதி பிரதீசனின் வீட்டிலுமாக தஞ்சம் புகுந்தது.சைந்தன் வீட்டில் என்னுடன் பால்குடி,றமணன்,தனேசன் ஆகியோர் தங்கினர்.சயந்தனின் அம்மாவின் அன்பான உபசரிப்பும்,கனிவான பேச்சும்,சுவையான சாப்பாடும்,நோகடிக்காத நக்கல்களும் ,மற்றும் சைந்தனின் அப்பா,தம்பியின் உதவி,ஒத்தாசைகளும் நன்றாகவே அனைவரையும் கவர்ந்தது.





திங்கட்கிழமை மதியமளவில் யாழ் நோக்கிய கப்பல் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்றே நாங்களனைவரும் கோணமலையில் கால்பதித்திருந்தோம்.ஆனால் எங்கள் எதிர்பார்ப்பெல்லாம் காங்கேசந்துறையிலுருந்து புறப்பட்ட கிறீன் ஓசன்(Green Ocean) கப்பல் கடற்காற்றுக் காரணமாக காங்கேசந்துறைக்கே திரும்பவும் அனுப்பப்பட்ட சேதி கேட்டுத் தவிடுபொடியானது.நாங்களும் கப்பல் வரும் வரும் என்று எதிர்பார்த்தே களைத்துவிட்டிருந்தோம்.




ஏழு தரம் கப்பல் பயணங்களுக்காக திருகோணமலை சென்றிருந்த போதும் அவ்வளவு பரிச்சயப்பட்டிராத திருகோணமலை நகர் வீதிகளில் நண்பர்களனைவரும் மிதிவண்டியிலும்(சைக்கிள்),ஈருருளியிலும்(மோட்டார்சைக்கிள்),நடையிலுமென நடையளந்தோம்.மாலைப் பொழுதை திருகோணமலைக் கடற்கரையில்(Beach)ஆனந்தமாய்க் கழித்தோம்.அன்றைய பொழுது பெரும்பாலும் பிரயோசனமற்றதாகவே கழிந்திருந்ததனாலும்,அடுத்தநாளும் கப்பல் வருவது உறுதியில்லை என்பது உறுதியாகத் தெரிந்திருந்ததனாலும்,அடுத்தநாள்ப் பொழுதை முற்கூடியே திட்டமிட்டிருந்தோம்.




முதல்நாள் போட்ட திட்டத்தின்படி செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு சிறிய ஹையேஸ் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி,கன்னியா வெந்நீர் ஊற்றுக்குச் சென்றோம்.இலங்கைத் தமிழ் மன்னனான இராவணனால் அருகருகே அம்புகளால் துளைக்கப்பட்டு,ஆவி பறக்கும் சூட்டோடுடனொன்றும்,"ஆ.. குளிருது" எனக் கத்தச் சொல்லும் குளிரோடின்னுமொன்றுமென வெவ்வேறு வெப்பநிலைகளயுடைய நீரை அருகருகிலிருக்கும் ஏழு கிணறுகள் கக்குவகைக் கண்ணுற்று அதசயித்தோம்.





போகும் வழியெங்கும்,எம்மண் கபளீகரம் செய்யப்பட்டு,வரலாற்று சின்னங்கள், வரலாறுகள் சிதைக்கப்பட்டு,அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்ட,மாற்றப்பட்ட சோகங்களை,வலிகளை,வேதனைகளை,ரணங்களை,எமது இயலாமைகளையும் கூடவே நெஞ்சில் ஏற்றிக் கொண்டே சென்றிருந்தோம்.திருகோணமலை நெல்சன் திரையரங்கில் தனுசின் "யரடி நீ மோகினி" படத்தின் மதியக் காட்சியினைப் பார்த்தோம்.பின்னேரப் பொழுதுப் வழைமை போலவே பீச்(கடற்கரை),கொத்துரொட்டிக்கடை என கரைந்தது.




அடுத்த நாளும் என்ன செய்வதென்றே தெரியாத நிலை.ஆனாலும் அன்று கப்பல் வருவதற்கு அதிகளவு சாத்தியமுள்ளதாக கொஞ்சம் நம்பிக்கையான செய்தியொன்றினைக் கேள்வியுற்றோம்.ஆனாலும் உறுதி செய்யப் படாததால் அன்று புதன்கிழமை காலையிலே ஈழத்திலே பாடல்பாடப் பெற்ற தலங்களிலொன்றான திருக்கோணேஸ்வரத்துக்கு சென்றோம்.பாவிகளான எங்கள் இனம் வழிபடுவதலானோ என்னவோ கோணைநாதரும் பழைய டச்சுக் கோடை வாசலோடு வெளியே வரமுடியதவாறு அல்லது வெளியே வரவிருப்பமின்றி உள்ளேயே பூட்டப்பட்டுக் கிடந்தார்.எத்தனை தடைகள்,முள்ளுக் கம்பிகளின் உச்சப் பாதுகாப்போடு,உயர் பாதுகாப்பு வலயத்தில் அவர் அமைதியாக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.




அமைதியான சூழலில்,அமைந்திருந்த ஆலயத்தையும்,கோணமலையிலிருந்து கொண்டு மூன்று பக்கம் தரையாலும்,ஒரு பக்கம் கடலாலும் சூழப்பட்டிருந்த திருகோணமலை நகரினதும்,சிறு குன்றுகளினதும் அழகையும்,போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்ப்ட்டு கடலில் மூழ்கினாலும் வெளித்தள்ளிக் கொண்டிருந்த புராதன ஆலயத்தின் சில பகுதிகளையும் கண்ணுற்றவாறே திரும்பிவந்து கொண்டிருந்தபோது, கப்பல் வந்த சந்தோசச் சேதி கேட்டு,திருகோணமலைக் கச்சேரிக்கு(அரசாங்க அதிபர் இல்லம்-இந்திய பாசையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்)மூட்டை முடிச்சுகளுடன் ஓடினோம்.





தூக்குத் தராசில் நிறுத்து,எங்களது ஒவ்வொருவரது பொதிகளின் நிறையும் 30 கிலோவைத் தாண்டவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அந்த "ஒன்றுக்கும் உதவாத" பஸ்களில் ஏறினோம்.துணையின்றி நடக்க முடியாத கிழவியென்றாலும் தன்னைவிடப் பெரிய மூட்டை முடிச்சுகளைக் காவிச்செல்லும் ஈழப்பரம்பரையில் வந்த நாங்கள் எல்லாரும் அந்த பஸ்களீன் அரைவாசிக்குமேல் நாங்கள் ஊருக்கு கொண்டு செல்லும் பெட்டி,படுக்கைகள்,தின்பண்டங்கள்,உடுதுணிகள்,ரயர்கள்,துணிகள்,சின்னப்பிள்ளைகளூக்கு விளைய்யாட்டுச் சாமான்கள் என அனைத்தாலும் நிரம்பியிருந்தோம்.





அனைவரும் ஏறியபிறகும் பட்டப்பகலில் நட்டநடு வெயிலில் வேர்க்க,விறுவிறுக்க,கால்கள் கடுகடுக்க பஸ்ஸினுள்ளே நின்றோம்.பின்னர் ஒருவாறாக 2 மணிக்கு புறப்பட்ட பஸ் படையணி சீனக்குடா துறைமுகவாசலை 30 நிமிடத்தில் அடைந்து,மீண்டும் அங்கு காத்திருக்கத் தொடங்கியது.ஒரு 10, கிலோமீற்றருக்கும் குறைவான அந்த பஸ்பயணத்துக்கு, ஆளுக்கு 100 ரூபாவும் ஒவ்வொரு பயணப்பொதிக்கும் மேலதிகமாக 100 ரூபா வீதமும் வாங்கிக் கொள்ளையடித்த உலகமகா கொள்ளைக்கூட்டம் சனத்திடம் காசைப் புடுங்கிச்சென்றது.தமிழில் தரச்சொல்லிக்கேட்டுத் தராவிட்டால்,சிங்களத்தில் மிரட்டுவதாய் இருந்தது அவர்களது உத்தி.





மீண்டும் சீனக்குடாவில் ஒன்று,ஒன்றரை மணிநேரக் காத்திருப்புக்குப் பின்னர் உள்ளனுமதிக்கப் பட்டோம்.எதற்கும் வரிசையில் நின்று பழகிய அல்லது வரிசையில் நின்றால் தான் உங்களுக்கு பிச்சையோ அல்லது ஏதுமோ தரமுடியும் என்று பழக்கப்பட்ட/அச்சுறுத்தப்பட்ட எமது சனம் பஸ் நிறுத்தப்பட்டதும் இறங்கி ஓடி வயதுவந்தவர்களையும் தள்ளிவிழுத்தி,பயணப்பொதிகளையும் ஏறி உழக்கிக்கொண்டு வரிசையிலே இடம்பிடிக்க செம்மறி ஆட்டுகூட்டம் போல ஓடியது.வரிசையிலே காய்ந்து கருவாடாகி பைகளையெல்லாம் எடுத்து எறிந்து,கொட்டிச்சிந்தி பயணப்பை சோதனை முடிய,உடற்சோதனை,அதுமுடிய கைத்தொலைபேசிகளைக் கையளிக்க அடுத்த வரிசை(கைத்தொலைபேசிப் பாவனையைக் கப்பலில் அனுமதித்தால் கப்பலின் நடமாட்டங்கள் தரவுகடத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையாம் இது)என்று ஒரு பாடாகிப் போய்விட்டது.






தலையில் போட்ட தொப்பி தொடக்கம்,பேர்ஸுக்கையிருந்த நயினாதீவு நாகபூசணியம்மன் படம் வரைக்கும் ஒவ்வொன்றும் அக்குவேறு,ஆணிவேராகப் பிரிக்கப்பட்டு,ஒவ்வொன்றுக்கும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுக்கப்பட்டோம்.வீட்டுக்குக் கொண்டு செல்லவென வாங்கிவந்த ஷேவிங்க் ரேஸர்கள்,நெருப்பெட்டியள்,பிளேட்டுக்கள் என்று எங்கள் காசிலே வாங்கப்பட்ட பொருட்களெல்லாம் எல்லாம் எங்கள் கண்முன்னே எங்களைக் கேளாமலே தூக்கியெறியப்பட்டன(ராசாக்கள், ஏன் உங்களை கேக்கோணும்???).என்று இவ்வாறு முதற்கட்டச்சோதனை முடிந்தபின்னர் பஸ்களில் மீண்டும் ஏற்றப்பட்டு,துறைமுகத்தில் இறக்கப்பட்டு,மீண்டும் துறைமுகப் பாதுகாப்புப் படையினரால் அடுத்தகட்டச் சோதனை என்று,இதெல்லாம் முடிந்து கப்பலில் ஏற பின்னேரம் ஐந்தைத் தாண்டியிருந்தது.




அதற்குள்ளும் பஸ்களில் "உது நான் பிடிச்சு வைச்சிருந்த சீற்..நீ என்னெண்டு இருக்கலாம் எண்டு அதுக்குள்ளை குடும்பிபிடிச்சண்டை.எவ்வளவு தான் கஸ்ரம் வந்தாலும் எங்கடை சனம் திருந்த மாட்டுது எண்டது மட்டும் நிச்சயம்.கூடவே வந்திருந்த 400,500 சனமும் சோதனைகளை முடிச்சு கப்பல் வெளிக்கிடத்தொடங்க இரவு ஏழுமணியைத் தாண்டியிருந்தது.திருகோணமலைத் துறைமுகத்தின் இயற்கை அமைப்பையும்,அதன் வனப்பையும்,அதற்குள் அமைந்திருந்த,ஒளிந்திருந்த இயற்கையான பாதுகாப்பையும் பார்த்தபோது தான் ஏன் சர்வதேச,பிராந்திய வல்லூறுகள் அதையே வட்டமிடுகின்றன என்ற இரகசியத்தைப் பரகசியமாக்கியது.





கப்பல் துறைமுகத்தைவிட்டு மெதுவாக நகர்ந்து,பாதுகாப்புக் காரணங்களுக்காக கரையோரமாகச் செல்லாமல்,செங்குத்தாக நேரடியாக சர்வதேசக் கடலெல்லையினூடே பயணித்தது.நானும் அவ்வப்போது சென்ற இடங்களிலெல்லம் சாப்பிட்ட சாப்பாடுகள்,கப்பல் புறப்பட்டு,கப்பல் குலுக்கத் தொடங்கியதும் வயிற்றைக் குமட்டச்செய்தது.நானும் பேசாமல் சத்திக் குளிசைப்போட்டிட்டு சத்தம் போடாமல்ப் படுத்திட்டன்.கடற்காற்றினால் கப்பல் அலைகளால் தூக்கிவீசப்பட்டு,முன்னோக்கி குற்றிக்குற்றி எழும்பிப் போய்க்கொண்டிருந்தது.தண்ணி கப்பலின்றை மூன்றாம் தட்டுவரை எழும்பி அடித்தது.கப்பலில் சனமெல்லாம் மாறிமாறி கப்பலுக்குள்ளும்,வெளியிலும் சத்தியெடுத்துக்கொண்டிருந்தது.சத்தியெடுக்காவிட்டாலும் அந்தக் காட்சிகளைப்பார்த்தால் சத்தி தானாகவே வந்துவிடும்.சின்னப்பிள்ளைகளின்ரை ஓலம் காதைக்கிழித்தது.




கப்பல் அன்று பகல்முழுவதும் ஓடியது.உந்தா கரை தெரியுது.அந்தா கரை தெரியுது என்று யாரையாவது ஏமாற்றி எங்கடை இயலாமைகளை வெளிப்படுத்துவதைவிட வேறு பொழுதுபோக்கு எங்களுக்கு இருந்திருக்கவில்லை."கரை தட்டும்",தட்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த சனமெல்லாம் சோர்ந்தே போய்விட்டது.எங்கடை சனத்திடம் காசைத்த்ட்டிப் பறித்தசாதி,கப்பல் சிற்றுண்டிச்சாலையிலும் தேனீர்,சிற்றுண்டிகளை அகோரவிலைக்குவிற்று மீண்டும் காசை வாரிச்சுருட்டிக்கொண்டது.ஒரு தேத்தண்ணி(அது தேத்தண்ணியே இல்லை.கசாயமோ எந்தக் கண்றாவியோ தெரியாது)40 ரூபாக்கும்,ஒரு நூடில்ஸ் 80 ரூபாக்கும் விற்கப்பட்டது.சனத்துக்கும் இருந்த பசிக் கொடுமையிலை எதையாவது வாங்கிச் சாப்பிடவேண்டும் என்ற அங்கலாய்ப்பிலே அந்த ஒறுத்தவிலையிலும் வாங்கி தின்று குடித்தது.அது ஏற்கனவே வயிற்றுக்குள் இருந்த சாப்பாட்டையும் சத்தியாக கப்பலுக்குள்ளும் கடலுக்குள்ளும் எடுத்துத் தள்ளவைத்தது.




அதற்குள்ளும் அந்தச் சனங்கள்,கொழும்பிலையிருந்து வீட்டுக்குப் போகேக்கை நாலு அப்பிளாவது வாங்கிக் கொண்டு போகாட்டில் அதுகள் என்ன நினைக்குங்கள் என்று கப்பலில் இருந்த கன்ரீனில் அப்பிளின் விலையைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்டது.வெளியில் 20 ரூபாவுக்கிருந்த அப்பிள் அங்கு 60 - 100 வரை விற்கப்பட்டது. இப்படி கஸ்ரங்கள் எல்லாத்தையும் தாங்கிக்கொண்டிருந்த சனத்துக்கு கப்பல்,காங்கேசந்துறைத் துறைமுகத்தை நெருங்கி நங்கூரம் போட்டதால் பெரிய சந்தோசம்.அங்கும் மேலும் அரைமணித்தியாலக் காத்திருப்பு.



எங்கட சனத்தை எவ்வளவு நேரமும் காத்திருக்கவைக்கலாம் தானே.ஏனென்றால் அதுகள் என்ன சொன்னாலும் செய்யிற செம்மறியள் தானே?,அதுகளுக்கு வேறைவேலைவெட்டி இல்லைத்தானே,அதுகளுக்கு நேரத்தின் அருமை தெரியாதுதானே.இந்தச்சனம் அடிமைகள் போல்,ஆட்காட்டி விரலின் அசைவுகளுக்கெல்லாம் ஒத்திசைந்து,மசிந்துகொடுக்க வேண்டும் என்பது அவர்களின் நினைப்பு.நாங்கள் என்ன செய்ய? அந்தக் காத்திருப்புக்குப்பினர், காங்கேசந்துறைமுகத்திலிருந்து வந்த கடற்படைச்சுழியோடிகள் கப்ப்லின்கீழ் சுழியோடிச்சென்று கப்பல்வரும் வழியில் எந்தவொரு வெடிபொருளும் இணைக்கப்படவில்லை என்று கப்பலையும்,சனத்தைக் கப்பலுக்கை வைத்தே மீண்டும் ஒரு சோதனை செய்தபின்னர்,கப்பலைத் துறைமுகத்தினுள் உள்நுழைய அனுமதித்தனர்.




ஆனால் எமது துரதிஸ்டம்,ஒரே ஒருகப்பல் மட்டுமே கரை நெருங்கக்கூடிய காங்கேசந்துறைமுகத்தில் ஒருகப்பல் ஏற்கனவே சாமான் இறக்கிகொண்டிருந்ததால் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டு,வேறு கொள்கலன்களினால் தரையிறக்கப்பட்டோம். யாழ்மண்ணிலே எமது கால்பட ஏறத்தாழ 24 மணித்தியாலங்களை அதாவது ஒருநாளை நாங்கள் கடலிலே,கப்பலிலே செலவழித்தபின்னர், அடுத்தநாள் வியாழன் மாலை ஏழுமணியளவில் கால் பதித்தோம்.ஏற்கனவே 24 மணித்தியாலத்துக்குமேல் சாப்பாடு தண்ணியில்லாமல்,சாப்பிட்டதையும் சத்தியெடுத்து மிகவும் சோர்ந்திருந்த நாங்களே(இளைஞர்கள்)கப்பலிலிருந்த சாமான்களையிறக்கப் பணிக்கப்பட்டோம்.




எதிர்த்தவர்கள் கை ஓங்கப்பட்டு,சீருடைகளால் மௌனிக்கப்பட்டு அடிமைகள் போல் நடத்தப்பட்டனர்.சனமெல்லாம் சீருடையினரால் ஓட்டப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த இலங்கை.போக்குவரத்துக்.சபை பஸ்களிலும் அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகள்,மற்றும் குடாநாட்டுக்கு வந்திருந்த தபால்கள்,மற்றும் சில தனியார் வியாபாரிகளின் பொருட்களும் காங்கேசந்துறைமுகத்துக்கு மா ஏற்றிச் செல்லவந்திருந்த லொறிகளிலும் ஏற்றப்பட்டன.கப்பலில் வந்திருந்த ஸ்கூட்டி பெப்(Scooty Pep) மோட்டார்சைக்கிளை தரையில் நின்றிருந்த லொறிக்கு ஏற்றச்சொல்ல உத்தவிடும் அதிகாரத்தை எங்களிடம் இல்லாத "கருவி" ஒன்று அவனுக்குக் கொடுத்திருந்தது.




ஒருவாறாக எல்லாம் ஏற்றப்பட்டபின்னர்,பஸ்களில் சனம் போக,லொறிகளில் சாமான் பாக்குகள்(Bags) தெல்லிப்பளை வரை பின் தொடர்ந்தன.அங்கும் அடுத்த சோதனை,பதிவுகள்,பாஸ் நடைமுறை,படமெடுப்புக்கள் என எல்லாம் முடிய இரவு 8.30 ஐத் தாண்டியிருந்தது.பின்னர் எங்களின் பொதிகளை எடுக்க லொறிகளுக்குச் சென்றால் 10 கிலோமீற்றருக்குப் பொதிகொண்டு வந்த கூலியாக ஒவ்வொரு பொதிக்கும் 100 ரூபா கேட்டான்கள்."நாங்கள் தான் ஏலாமல் இருந்தாலும் தூக்கி ஏத்தினாங்கள்.பிறகேன் எங்களிட்டையே காசு கேட்கிறியள்?" என்று ஏற்கனவே அலுத்துப் போயிருந்த 3 நாள் திருகோணமலை வாழ்க்கை,ஒருநாள் கப்பல் பயணம்,இந்த அலுப்போடை சாமானைத் தூக்கி ஏத்தவைச்ச ஆத்திரம் எல்லாத்தையும் சேர்த்துக் கேட்டால் "அதைப்பற்றி எங்களட்டைக் கேளாதையுங்கோ.100 ரூபா வந்து லொறியின் கூலி.ஏற்றுகூலியில்லையென்றான்.இந்த வாய்கலப்புக்களின் சத்தம் கேட்டு இரண்டு சோடி சப்பாத்துக்கள் எங்களை நெருங்கிவருவது தெரிகிறது.இப்போது எங்களுக்கு 100 ரூபா பெரிதில்லை.உதுக்குப் போய்க்கதைப்பது புத்திசாலித்தனமில்லை என்பது புரிகிறது.நிசப்தமகியவாறே காசைத் தூக்கி கடுப்போடு தூக்கி எறிஞ்சுபோட்டு பைகளைதூக்கிகொண்டு நடக்கிறோம்.





சரி எவ்வளவு கஸ்ரங்கள்,வேதனைகள்,கட்டுப்பாடுகள்,இருத்தியெழுப்புக்கள் எங்கள் வீடுகளூக்குப்போவதற்கு மட்டும் என்று எங்களையே நொந்துகொண்டு,விரக்தியின் உச்சியில் இன்றைக்காவது எப்பிடியும் வீட்டை போய் சேருறது தான் எண்டு 9 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலாகும் இடத்தில் 9.05 அளவிலே தீர்மானித்து அங்கு எஞ்சிநின்ற அந்தக் "கடைசி" வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தினோம்.அங்கிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீக்கு அப்பால் இருக்கும் எங்கள் பிரதேசத்துக்கு செல்ல நான்,பால்குடி,கருணையூரான்,கௌரி அண்ணா,பிரதாப் அண்ணா,சுரேஸ்,இரண்டு பெண் நண்பிகள் என 15 பேர் என ஒரே ஒரு வயது வந்தவரைத்தவிர எல்லா இளந்தாரிகளும் புறப்பட்டோம்.




நான் தெல்லிப்பளைக்கு வந்து சேர்ந்தவுடனேயே வீட்டே தொலைபேசி நான் வந்திறங்கியதைச்சொல்லியிருந்தபோதும், இன்றே வீட்டே வருகிறேன் என்று சொன்னால் பேச்சு விழும் என்றபடியால் யாழ்ப்பாணத்தில் எனது நண்பர்கள் வீட்டிலே தங்கிவருவதாக்வே சொல்லியிருந்தேன்.உண்மையிலேயே யாழ்ப்பாண நகர நண்பர்களான கழுவாவும்(கஜானந்) தனேசனும் தங்கள் வீடுகளில் இரவு தங்கிவிட்டு காலையில் செல்லுமாறே கேட்டிருந்தார்கள்.ஆனால் இன்றே எப்பிடியாவது வீட்டே போய்ச்சேர்வது என்று என்று எல்லாரும் முடிவெடுத்து ஒவ்வொரும் புறப்பட்டோம்.




ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் உயிரைக்கையிலே பிடித்துக்கொண்டு,சில இடங்களில் நட்ட நடுவீதியில் சாமான்களைக் கொட்டிக்காட்டி,சில இடங்களில் அடிவாங்கப்பாத்து,பல இடங்களில் "அவர்களிடம்" பேச்சு வாங்கி வீடு போனோம்.அதுவும் ஒரு இடத்தில் அவன் நிறுத்தச் சொல்லியும் இரவிலே சரியாக கவனிக்காததால் நிறுத்தாமல் சென்றதால் பின்னுக்கிருந்து அவன் வானத்தை நோக்கி துப்பாக்கியைத்தூக்கி லோட்(Load) பண்ணிக்கொண்டோடிவந்தான்.அப்போது பக்கத்திலிருந்த கருணையூரான் நகைச்சுவையாகவோ அல்லது சீரியசாகவோ சொன்ன "வெடி வைச்சானெண்டால் பின் சீற்றிலை இருக்கிற நானும் நீயும் தான் முதலிலை போவம்" எண்ட அந்த சீரியசான ஜோக்கை நான் செத்தாலும் மறக்கமாட்டன்.அந்த நேரத்தில் அப்படித் தான் நிலமையிருந்தது.




பட்டப் பகலிலேயே பலரும் பாத்திருக்கச் சுடப்பட்டாலே "இனந்தெரியாதவகளால்" விரும்பியோ, விரும்பாமலோ உரிமைகோரும்/உரிமைகோரவைக்கப்படும் மண்ணிலே,ஊரடங்குச் சட்ட நேரத்திலே அதுவும் நிறுத்தச் சொல்ல்வும் நிறுத்தாமல் சென்றால் அந்தச் சூட்டுக்கு காரணத்தைக் கண்டுபிடிப்பது என்பதுவோ அவர்களுக்கு கடினமாய் அமைந்து விடப்போவதில்லை.காரணமில்லாத "எல்லாவற்றுக்கும்" காரணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றபோது இது ஒன்றும் கடினமல்லவே. நாங்கள் சென்ற வழியிலே அந்தக் "கடைசி" வாகனம் மூன்று இடத்திலே நின்றது.



நட்டநடு நிசியினிலே,நாய்கள் குரைக்கையிலே,சுடுகாடு போல எங்கும் சனநடமாட்டமில்லாத, இருட்டுக்குள்ளை பாதையும் தெரியாமல் நாங்கள் அந்தரப்பட்டுப் போய்க்கொண்டிருந்தாலும், போற வழிகளில் எங்கன்றை வாகனம் நிக்கேக்கையெல்லாம் இறங்கித் தள்ளி ஸ்டாட்(Start) பண்ணிப் போகேக்கையெல்லாம் சத்தம் கேட்டு சனம் றோட்டு லைற்றைப் போடுதுகளேயொழிய ஒரு சனமும் ஆபத்துக்கு உதவுவதற்கு வர தயாரில்லை.அந்தளவுக்குப் பயப்படுத்தப்பட்டிருந்ததுகள்.என்ன செய்யிறது எண்டு எங்களது சனத்தின்ற நிலையை நினைச்சு நாங்களே தள்ளி ஸ்டாட் பண்ணிகொண்டு போய் வீடு சேர்ந்தோம்.



வீட்டை போய் இறங்க இரவு 12.30 ஆகியிருந்தது.வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டுப் பார்த்தேன்.எவரும் வரவில்லை.Bag ஐத் தூக்கி உள்ளேபோட்டுவிட்டு,மதிலாலை ஏறிக்குதிச்சு உள்ளே போய், உள்கதவு திறப்பு எங்கே வைப்பார்கள் என்பது என்க்கு ஏற்கனவே தெரியும் என்பதால் யன்னலைத் திறந்து, உள் கதவைதிறந்து கொண்டு உள்ளே போய் வீட்டுக்காரையெல்லாம் எழுப்பினேன்.ஒரு சாப்படும் வீட்டையிருக்கவில்லை.அகோரபசி வேறை.அதுக்குப் பிறகு தான் அம்மா புட்டு அவிச்சு தந்தாப்போலை அஞ்சாறு நாள்ச் சாப்பிடாததெல்லாத்தையும் ஒண்டாச் சேத்து ஒரு பிடிபிடிச்சிட்டுப் படுக்க 1.30 ஆகி விட்டிருந்தது.எனது வாழ்க்கையில்லே அந்தப்ப்யணத்தை செத்தாலும் மறக்கமாட்டன்.உதிலே இருக்கிற யாழ்ப்பாணத்துக்கு போக நாங்கள் கொஞ்ச நாள் பட்ட பாடு,படாதபாடு.உலகிலே வேறு எந்தவொரு இனமும் ஈழத்தமிழ்ச்சனம் மாதிரிக் ஒரு விசயத்துக்கும் கஸ்ரப்ப்ட்டிருக்கது.
Author: யசோதா.பத்மநாதன்
•9:24 PM
-பாடலூடாக ஒரு பயணம் -


உங்களில் அனேகமானோருக்கு தங்கத் தாத்தா.நவாலியூர் சோம சுந்தரப் புலவரைத் தெரிந்திருக்கும்.அவர் 1880ம் ஆண்டு ஆனி மாதம் 12ம் திகதி பிறந்தவர்.சிறுவர்களுக்காக அவர் பாடிய, ’ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம்’ என்ற பாடலும் ’கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா’ என்ற பாடலும் ’பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்’ என்ற பாடலும் அவரை எங்களுக்கு நன்றாக ஞாபகப் படுத்த வல்லவை.


அவருடய கண்களினூடாக கொழும்பில் இருந்து வன்னியூடாக யாழ்ப்பாணம் போவோம் வாருங்கள்.



இப்போது நாம் நிற்பது கொழும்பு மாநகர்.இது நாம் புறப்படப் போகிற இடம்.காலை வேளை.கொழும்பு மாநகர் களையோடு திகழ்கிறது.நெய்தல் கரையோரம்.எல்லோரும் மக்களையும் மாளிகைகளையும் கடைகளையும் தான் கண்டு களிப்பர். இவருக்குத் தெரிவதோ கடற்கரை.கடலுக்கருகில் இருக்கிறது இந்தக் கரையோரப் பட்டினம் இவருக்கு இப்படிப் புலப்படுகிறது என்று பாருங்கள்.ஒரு கடற்க் காட்சி விரிகிறது இப்படி.

‘கலைப் பட்டினம் கரைப் பட்டினம்
கலப்பட்டினம் பெருமை
தலைப்படினம் வரை பட்டிடாத்
தலைப்பட்டினம் கொழும்பு’

கலைப் பட்டினம் கலைகள் மலிந்திருக்கிற பட்டினம்.அது ஓரு கரையோரப் பட்டினம்.கலப் பட்டினம்-அதாவது மரக் கலங்கள் நிறைந்திருக்கின்ற பட்டினம்.தலைப்பட்டினம் பெருமை தலைப்பட்டிரா பட்டினம்.அதாவது தலைப்பட்டினம் இனங்கள் கலப்புற்றும் பெருமை தலைக்கேறாத பட்டினம்.இதற்குப் பெருமை சொல்ல ஒரு பட்டினம் இல்லாத பெருமைக்குரிய பட்டினம். அது கொழும்பு தலைப்பட்டினம் என்கிறார் அவர்.

இந்தத் தலைப்பட்டினத்தில் இருந்து பேருந்து புறப்படுகிறது.செழிப்பான தென்பகுதியில் இருந்து பேருந்து புறப்படுகிறது. செழிப்பான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு வருகிறார் தங்கத் தாத்தா.அங்கே ஒரு காட்சி;பாடலில் விரிகிறது இப்படி;


‘சரிந்த வேங்கை முரிந்த கோங்கு
நகர்ந்த சாந்து விழுந்த வேய்
இரிந்த மிருகமெழுந்த பறவை
இழிந்த அருவி கழிந்தவே’

மங்கலந் திகழ் மாப்பிள்ளைமார் வர
மாமன் பக்கம் வரவெதிர் கொள்ளல் போல்
பொங்கும் வெள்ளப் புது மண நீர் வர
புரளு மீனிரை போயெதிர் கொள்ளுமே’



சரிந்து விளங்குகின்றன மலைகள்.அங்கே மலையின் பக்கமாக கோங்குகள் முறிந்து விழுந்து கிடக்கின்றன.அதற்கப்பாலே சந்தன மரங்கள் மூங்கில் காட்டின் பக்கமாக சாய்ந்து வளர்ந்துளள்ளன.அதற்குள் இருந்து மிருகங்களின் குரல் எழுகிறது.அதைக் கேட்டு பறவைகள் எழுந்தோடுகின்றன.இவற்றை எல்லாம் பார்த்தும் கேட்டும் கொண்டு அருவி நுரை புரள மலையிலிருந்து கீழிறங்கி வருகிறது.

அவ்வாறு விழுகின்ற அருவியைப் பார்க்கின்ற போது எப்படி இருக்கின்றதென்றால் மங்கலத்துக்குரிய மாப்பிள்ளைமார் வர மாமனார் பக்கம் வந்து எதிர்கொண்டழைப்பதைப் போல பொங்கிக் கரைபுரண்டோடும் புது மணல் நீரினை மீன் கூட்டம் போய் எதிர் கொள்கின்றனவாம்.இவ்வாறு செழிப்புற்றிருக்கிறது பூமி.பச்சைப் பசேல் என்று செழித்தோங்கியுள்ள பசுமையான மரங்கள். பெறுமதி மிக்க மரங்களும் கூடவே. அந்தச் செழிப்பின் நடுவே ஓரருவி. கரைபுரண்டு வெள்ளம் பாய இயற்கை தன் வனப்பை எல்லாம் கொட்டி வைத்திருக்கிறது அங்கே.

நாம் அவற்றை எல்லாம் தாண்டி வருகிறோம்.இப்போது காட்சி மாறுகிறது.வரண்ட மண்ணினூடு அனுராதபுரக் காடு வருகிறது.அது வரட்சியையும் கூடவே இழுத்து வருகிறது.



மனித நடமாட்டங்களும் குறைந்து போய் விட்டது. அது இன்னும் இயற்கையின் காட்டு வனப்பு முழுமையாக சூழ்ந்திருக்கிற தேசப்பரப்பு. வனத்தின் ஆரம்பம் இங்கு தான் இருக்கிறது.மெல்ல மெல்லக் காடுகள் கண்களுக்குப் புலனாகின்றன.ஆங்காங்கே குரங்குகள் தாவித் திரிகின்றன.அவை எதனையோ தேடித் திரிவதைப் போல தோன்றுகிறது. கொஞ்சம் பொறுங்கள் அது பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்கிறது.ஒரு குரங்கு இதோ ஒரு பெண்னை நெருங்கி வருகிறது.



‘வண்னானின் மொழி கேட்டு
வனம் விடுத்த சீதை தனை
இந் நாளும் தேடுதல் போல்
இக்குரங்கு நெருங்கிடுமே’

பெண்ணே கவனம். முன்பொருமுறை வண்ணான் ஒருவர் கதைத்த ஒரு சிறு சொல்லினால் தீக்குளித்து கற்புள்ளவள் என்று நிரூபித்து வருமாறு இராமனால் வனத்துக்கு அனுப்பப் பட்ட சீதையினை தேடுவதைப் போல இக் குரங்குகள் வருகிற பெண்களைப் பார்த்துத் திரிகின்றன.

நாம் சற்றே அவர்களிடம் இருந்து தப்பி சற்றே அப்பால் நகருவோம். மாங்குளம் இதோ வந்து விட்டது. அதுவும் காடுதான்.அது மிருகங்கள் சூழ்ந்திருக்கின்ற காடு. அங்கே

‘காமர் நெடுங் காட்டினிலே
காணுமொரு மாபுதினம்
மாமரைகள் ஒலி கேட்டு
தாமரைகள் ஆயினவே’


பெரிய மரைகள்(மானைப் போன்ற ஒருவகை ஜாதி)அவை சத்தம் வைக்கின்றன. அதனால் ஏனைய மரைகள் தா - மரை; தாவுகின்ற மரைகள் ஆகிவிட்டன.இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு போகின்ற போது இதோ முறிகண்டி வந்து விட்டது.பேரூந்து நிறுத்தப் பட்டு விட்டது.பிள்ளையாரை தரிசித்து சற்றே சிரம பரிகாரம் செய்த பின் தான் பேருந்து நகரும்.நாம் இனி சற்றே இறங்கி, கால் கைகளை நீட்டிச், சற்றே சிரம பரிகாரங்களையும் செய்து தண்ணீரில் கால்முகம் கழுவிப் பிள்ளையாரை தரிசிப்போம்.




‘முன்னவன்செங் கைத்தனுவிற்
பாரதத்தைப் பொறித்த
முறிகண்டி வாரணத்தின்
முளரடி பணிவாம்’

இனி யாழ்ப்பாணம் கொஞ்சத் தூரம் தான்.இதோ பளை வருகிறது; பனை தெரிகிறது.பனை தெரிந்தாலே யாழ்ப்பாணம் வருகிறது என்று தானே அர்த்தம்.


கோணிலைகள் மாறிமழை வாரிவறந் தாலும்
கொடியமிடி வந்துமிக வேவருத்தினாலும்
தாணிழ லளித்துயர் கலா நிலைய மேபோல்
தந்துபல வேறு பொருள்தாங்கு பனையோங்கும்’

கோணிலை - கோள் நிலை.கோள்நிலைகள் மாறி மாரிமழை வரத் தவறினாலும் மிடி - வறுமை. கொடுமை மிக்க வறுமை வந்து மிக வருத்தினாலும் தான் நின்று நிழல் அளித்திடும் கலா நிலையத்தைப் போல பல பொருட்களைத் தந்து எங்களைக் காக்கும் பனை இதோ வந்து விட்டது என்பது பாடலின் பொருள்.

சரி அவற்றை எல்லாம் பார்த்தபடி இதோ யாழ்ப்பாணம் வந்து விட்டோம்.யாழ்ப்பாண பட்டினத்தின் சிறப்பென்ன தெரியுமா? அது ‘எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் என்பது போல பொன்னைப் போல சிறப்புற்றுத் திகழும் இலங்கைக்கு சிரசினைப் போல இருக்கிறது யாழ்ப்பாணம்.அது புண்ணிய பூமி.பாருங்கள் பாடலை,




‘எண்சாணுடம்பினுக்குச் சென்னி சிறந்திடும்
என்றே உரைப்பரது போல
பொன் சேரிலங்கை சிரமெனவே வரும்
புண்ணியமோங்கிடும் யாழ்ப்பாணம்’

இப்போது யாழ்ப்பாணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது ஒருவாறு புலப்பட்டிருக்கும்.எண்சாண் உடம்புக்குச் சிரசினைப் போல இலங்கைக்கு யாழ்ப்பாணம் விளங்குகின்றது. அங்கே புகழ் பெற்றிருக்கிறது நல்லூர் கந்த சுவாமி கோயில். அங்கு வருவோர் எல்லாம் கந்தனைத் தரிசிக்காமல் செல்வதில்லை. வாருங்கள் சென்று நாமும் தரிசிப்போம்.

‘முன்னம் புவனேக வாகு மணி நல்லை
முன்னி வகுத்திடும் வேற் கோட்டம்
மன்னு முயிர்கட் கிருவகை நோய்கட்கும்
மருந்து கொடுக்கும் அருட் கோட்டம்’

முன்னம் - முன்னுதல் எண்ணுதல்.முன்னர் புவனேக பாகு என்ற மன்னன் நல்லையிலே அமைத்திட்ட வேல் கோட்டம். மண்ணிலே வாழுகின்ற உயிர்களுக்கு இருவகையான நோய்கள் வருவதுண்டு.ஒன்று உடல் நோய். மற்றயது ஆண்ம நோய்.அவ்வகையான இருவகை நோய்களுக்கும் மருந்து கொடுக்கும் அருள் கோட்டம் நல்லூர்.என்பது பாடலின் பொருள்.



இந்த நல்ல நாளிலே திருவிழாக் கொண்டாட்டத்துக்கு வருகின்ற பக்தர்களைப் போல ஈழத்து முற்றத்துக்கு நட்சத்திர அந்தஸ்து பொலிந்திருக்கின்ற இந் நன் நாளிலே இங்கு வருகிற எல்லோருக்கும் யாழ்ப்பாணத்து நல்லைக் கந்தனின் அருள் சித்திப்பதாக!

(பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்களின் இலக்கிய வழி என்ற நூலில் இருந்து சம்பவங்கள் எடுத்தளப் பட்டுள்ளன. படங்கள் கூகுள் இமேஜ்.இரண்டுக்கும் நன்றிகள்)!