Author: மொழிவளன்
•6:09 AM
வட்டார வழக்குகள் எனும் போது யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு, யாழ்ப்பாணம் அல்லாத தமிழர்களின் பேச்சு வழக்கில் இருந்து வேறுப்பட்டாலும், அவை “அமெரிக்கன் செலாங்”, “பிரிட்டிசு செலாங்” போன்றதான ஒரு வழக்காகவே பார்க்கலாம்.

இருப்பினும் சொற்களை உச்சரிப்பதில், யாழ்ப்பாணத் தமிழரின் ஒலிப்பு மிகவும் துல்லியமானது.

எடுத்துக்காட்டு:

“தேங்காய்” எனும் சொல்லை எடுத்துக்கொண்டோமானால், இந்த “தேங்காய்” எனும் சொல்லை நாம் உச்சரிக்கும் பொழுது, தேங்-காய் என்பதனை துல்லியமாகவே உச்சரிக்கின்றோம். இச்சொல்லின் கடைசி எழுத்தான “ய்” மௌனமாக ஒலிக்கப்பட்டாலும், இவ்வுச்சரிப்பை அவதானித்தால் “தேங்” என்பதுடன் “காய்” என்பதும் மிகத் துல்லியமாக ஒலிக்கப்படும்.

இவ்வாறு வேறு சில சொற்கள்:

புடலங்கா(ய்)
மாங்கா(ய்)
கத்தரிக்கா(ய்)
பூசணிக்கா(ய்)

அதேவேளை கொழும்பு தமிழர், தமிழகத் தமிழர் உச்சரிக்கும் பொழுது இந்த “தேங்காய்” என்பதில் “காய்” என்பது சரியாக உச்சரிக்கப்படுவதில்லை. தேங்-காயீ என்பது போன்று சிலரும், தேங்-கா என்பது போன்று "ய்" ஒலிப்பின்றிய சிலரும் உச்சரிக்கின்றனர்.

இதில் கத்தரிக்கா(ய்), பூசணிக்கா(ய்) போன்றச் சொற்களை, கத்தரிக்கா, பூசணிக்கா என சின்னக்கா, பெரியக்கா போன்றும் உச்சரிக்கின்றனர்.

இங்கே "காய்" அக்கா ஆகிவிடுகின்றது.

உயிர் – மெய்

யாழ்ப்பாணத் தமிழர் பேசும் பொழுது சொற்களை மிகவும் கடினப்பட்டு ஒலிப்பதாக என்னுடன் சிலர் வாதிட்டனர். உண்மையில் யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் சொற்களை உச்சரிக்கும் போது அதில் உயிர் மெய் எழுத்துக்கள் திருத்தமாகவும் துல்லியமாகவும் உச்சரிக்கப்படுகின்றது.

எடுத்துக்காட்டு:

மலர் – இதில் “ம்” எனும் மெய் எழுத்தும் “அ” எனும் உயிர் எழுத்தும் துல்லியமாக உச்சரிக்கப்படும்.

ம்+அ+ல்+அ+ர் = மலர்

இவ்வாறான துல்லியமான ஒலிப்புக்களையே மற்றோர்கள் கடினத்துடன் உச்சரிக்கப்படுவதாகக் நினைக்கின்றனர். அதேவேளை மற்றோரின் உச்சரிப்புக்களில் உயிர்-மெய் எழுத்துக்கள் துல்லியமாக ஒலிக்கப்படாமல், மேலெழுந்த வாரியாக உச்சரிக்கப்படுகின்றது. இன்னும் சிலரோ மலரு.. என்றும் உச்சரிக்கின்றனர்.

இது குறித்த உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கோவன்.

அன்புடன்
மொழிவளன்