Author: வந்தியத்தேவன்
•5:17 AM
பாடசாலை நினைவுகள் எவ்வளவு பசுமையானதோ அதேபோல் ரியூசன் நினைவுகளும் அதே அளவு பசுமையானது. சினேகிதி எழுதிய "ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள் " ஒரு 8 ஆம் அல்லது 9 ஆம் வகுப்புடன் நின்றுவிட்டதுபோல் தெரிகிறது. ஆகவே உயர்தரத்தில் நாங்கள் செய்த குழப்பங்களும் பசுமையான நினைவுகளும் கொட்டில் காலத்து நினைவுகளாக, கொட்டில் என்றவுடன் கள்ளுக்கொட்டிலை நினைக்கவேண்டாம்.

உயர்தரம் படிக்கப்போகின்றோம் என்றவுடன் முதலில் எல்லோரும் கேட்கும் விடயம் எங்கையப்பு ரியூசன் போகப்போறாய்? மட்ஸ் என்றால் வெக்டரிடம் போ அவர் தான் சரியான ஆள் இது ஒருவர், இன்னொருவரோ "இல்லை இல்லை ஆரம்பத்தில் வெக்டரிடம் பார்க்க நல்லையா மாஸ்டரிடம் போ, அவர் தான் அடிப்படையில் இருந்து திறமாகச் சொல்லித் தருவார்" என வகுப்புகள் தொடங்கமுன்னரே குளப்பத் தொடங்கிவிடுவினம்.

ஆனால் அந்தக் காலத்தில் நாம் ஆற்றை பேச்சைக் கேட்டோம். அதனால் கூட்டாளிப் பொடியள் போற ரியூசன் தான் எனக்கும். சாதாரண தரம் வரை இன்னொரு ரியூசனில் படித்துவிட்டு வதிரியிலுள்ள "பீகொன்" என்ற தியேட்டருக்கு எங்கள் வானரப் படை இறங்கியது.

அங்கே ஆரம்பத்தில் புதிய ஆசிரியர்கள் புதிய இடம் என்பதால் கொஞ்சம் அமைதியாகவே இருந்தோம். என்னுடைய பாடசாலை நண்பர்கள், ஏனைய பாடசாலையில் படித்து முன்னைய ரியூசன் நண்பர்கள், அத்துடன் பல புதிய முகங்கள், பருத்தித்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை என பல இடங்களில் இருந்தும் வந்தவர்கள் தான் பலர்.

பெண்வரிசையில் பெண்கள் அவர்களுக்குப் பின்னால் ஆண்கள் என முதல் சில நாட்கள் அனைவரும் இருந்தோம். நாம் செய்த அட்டகாசங்களில் எங்களை முன்னுக்கு விட்டுவிட்டு பெண்களை பின்னால் இருத்திவிட்டார்கள். இந்தக் கொடுமை உயர்தரம் முடியும்வரை தொடர்ந்தது.

பெளதிகவியல் ஆசிரியர் திரு.வர்ணம் அவர்கள், சந்தேகம் எதுவும் இருந்தால் எழும்பிக்கேட்க வெட்கப்பட்டால் துண்டில் எழுதிக்கொடுங்கோ என்றார். இதுதான் சாட்டு என நம்மடை வாரணப் படை ஒருமுறை விஜய் படமான பூவே உனக்காகப் பாடலான "ஆனந்தம் ஆனந்தம் பாடும்" பாடலில் வரும் வரியான "காதலோடு வேதங்கள் 5 என்னுங்கள்" என்ற வரி சரியா நாங்கள் படிக்கின்ற காலத்தில் வேதங்கள் என்றால் 4 எனத் தான் படித்தோம் என எழுதிக்கொடுத்தால், மனிசன் யார் எழுதியது என்பதை அந்த துண்டை வந்தவழியே அனுப்பி கண்டுபிடித்து ஒரு கிழிதான். பெரும்பாலும் மாணவர்களை அவர் ஏசுவதில்லை.

இரசாயனவியல் ஆசிரியர் அன்பாக தில்லை என அழைக்கப்படும் திரு. தில்லைநாதன் ஆசிரியர், இவர் வல்லைவெளி தாண்டி வருபவர் என்பதால் எப்படியும் கொஞ்சம் லேட்டாகத் தான் வருவார். இதனால் இவர் பாடம் வரும்வரை எங்கள் சில்மிசங்களும் கொழுவல்களும் நடக்கும். எங்கடை வகுப்பில் சில பெண் பிள்ளைகள் தில்லை சேரின் பாடத்திற்க்கு இருப்பதில்லை அவர்கள் இன்னொரு ஆசிரியரிடம் இரசாயனவியல் படிக்கச் செல்பவர்கள். ஒருநாள் தில்லை சேர் வழக்குத்துக்கு மாறாக நேரத்துக்கு வந்துவிட்டார். முதல் பாடம் முடிய இவர்கள் கொட்டிலை விட்டு வெளியே செல்ல நாங்கள் சும்மா இருக்காமல் அவர்களின் பட்டப் பெயர்களைச் சொல்லிக் கத்த அதிலை ஒருத்தி எங்களுக்கு அடிப்பன் என கைகாட்டியதும் அதனைத் தில்லை சேர் பார்த்ததையும் நாங்கள் பார்க்கவில்லை.

அண்டைக்கு முழுநேரமும் எங்களுக்கு இரசாயனவியலுக்குப் பதிலாக எச்சும் பெண்களுடன் எப்படி நடக்கவேண்டும் என தில்லை சேர் பாடம் எடுத்தார். அப்படி ஒரு பேச்சு ஒருநாளும் நாங்கள் எந்த ஆசிரியரிடமும் கேட்கவில்லை. இதில் எனன் விசேடம் என்றால் அண்டைக்கு சகல பெண்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆண்களை மட்டும் வைத்துக்கொண்டுதான் அர்ச்சனை நடந்தது.

பிறகு பேப்பர் கிளாஸ் காலங்களில் எங்கடை சங்கரலிங்கம்(ஆறரை அடி உயர மனிதர்) அண்ணையின் ரியூசனில் பின்னேரம் 6 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணிக்குத் தான் வகுப்பு முடியும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து வகுப்புக்கு வருகின்ற பெண்களை நாங்கள் தான் மெய்ப்பாதுகாப்பாளர்கள் போல் அவர்களின் வீடுவரை கொண்டு சென்று விடுவது. இத்தனைக்கும் அதுகள் எங்களுடன் கதையாதுகள், முன்னால் செல்வார்கள் நாங்கள் பின்னால் செல்லவேண்டும், ஏதாவது கதை கேட்டால் யாரும் பார்த்தால் பிரச்சனை என மெதுவாகச் சொல்வார்கள். ஒருக்கால் இருட்டிற்க்குள் இரும்பு மதவடி தோட்டத்திற்க்கை விழுந்து, நாய் திரத்தி என பல அனுபவங்கள் இருக்கின்றன. இப்போ அந்த நண்பிகள் குடும்பமாக வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கின்றார்கள்.

பிறகு நெல்லியடி மொடேர்னில் பெளதிகவியல் பேப்பர் கிளாஸ் கணேசன் ஆசிரியரிடமும் வெக்டர் ஆசிரியரிடமும் எங்களுக்கு முன்னைய பட்சுடன் போனோம். கணேசன் சேர் வகுப்பிலை யாரும் நித்திரை கொண்டால் உடனே அவரைத் தட்டிக்கேட்பார் "யார் கனவிலை வந்தது என", ஆண்கள் என்றால் மீனாவோ ரம்பாவோ எனக்கேட்பார், பெண்கள் என்றால் "ரஜனியோ, கமலோ" எனக் கேட்பார், ஒருக்கால் இப்படித்தான் ஒரு பெடியனைக் கேட்க அவன் "மீனாவும் ரம்பாவும் அல்ல, பக்கத்து லொஜிக் வகுப்பில் இருக்கும் சியாமளாதான் கனவில் வந்தாள்" என்றான் வகுப்பே சிரிப்புத் தான்(சேர் உட்பட).

உப்பிடி நிறையக் கதைகள் இருக்கின்றது, உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனைய கதைகள் மீண்டும் வரும்.
Author: சினேகிதி
•7:41 PM
ஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்ட
இங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒரு பெடியன் வெளவால். அவன்ர அம்மா விடிய அரை இருட்டில அவனுக்கு பவுடர் எல்லாம் பூசி அனுப்பி விடுவா. பாவம் அவன் விதியே என்டு வருவான் எங்களோட.தனிய வரேக்க கதைக்க மாட்டான். நசுக்கிடாமல் இருப்பான். பிறகு பின்னேரம் மற்றப் பாடங்களுக்கு ரியூசனுக்கு வரேக்க மற்றப் பெடியங்களோட சேர்ந்த உடனதான் அவனுக்கு வாய் திறவடும். விடிய ரியூசனுக்குப் போட்டு வரேக்க அங்க பக்கத்தில இருக்கிற கொஞ்சம் பெரியண்ணாமார் எங்களோட வாயடிக்கிறதுக்காக பள்ளிக்கூடப் பட்டப் பெயர்களைச் சொல்லி இல்லாட்டி 'எடியே கறுப்பி கொக்காவையும் கூட்டிக்கொண்டு வாறது ரியூசனுக்கு' என்டுவினம். வெளவால் கொஞ்சம் தூரத்திலதான் வருவான். தனக்கு எதும் கேக்காதமாதிரி அப்பாவி மாதிரி மூஞ்சையை வைச்சுக்கொண்டு போவான். நாங்களும் நல்ல திறம்தானே. கறுவா கட்டக்கரி அம்மம்மாட்ட சொல்லி விடுறன் (அப்ப அம்மம்மாமார் பெடியங்களுக்கு காது முறுக்கிறது)இப்பிடி ஏதாவது சொல்லுவம். என்ன பிரச்சனையெண்டால் இந்த அண்ணைமார் ஏதொ ஒருவிதத்தில சொந்தக்காரர இருப்பினம். பெருசா வாய் விடேல்லாது. அளவுக்கு மீறினால் வீட்ட சொன்னால் அவை சொல்லுவினம் அங்கள் சும்மா ஆசைக்குச் சொல்றாங்கள். உங்களை ஆர் வாய்காட்டச் சொன்னதெண்டு.

பிறகு பின்னேரம் ரியூசனுக்குப் போனால் அங்க ஒரே சண்டைதான். ஒவ்வொருநாளும் புதுப்புது விதமான சண்டை வரும்.5ம் ஆண்டு ஸ்கொலர்சிப் வகுப்பெடுத்தது ஈசாக்கா.அநேகமா எல்லாருக்கும் விருப்பமான ரீச்சர். அவாக்கு எங்கட சண்டை தீர்த்து வைக்கிறதே பெரிய பாடு. அநேகமாச் சண்டையைத் தொடக்கிறது பெடியங்களாத்தானிருக்கும். சண்டை முற்றினால் சண்டை பிடிக்கிற பெடியனைப் பிடிச்சு பெட்டையளுக்கு நடுவில இருக்க விட்டிடுவா. பெட்டையளில முட்டக்கூடாதெண்டு வாங்கில்ல 2 பக்கமும் bag புத்தகங்கள் எல்லாம் எடுத்து வைச்சிட்டு மூஞ்சையைத் தூக்கி வைச்சுக்கொண்டு அடிக்கடி முறைச்சுக்கொண்டு இருக்குங்கள் மூஞ்சூறுகள். ஈசாக்கா வீட்ட ஸ்பெசல் கிளாஸ் அல்லது நாடகம் பழக எண்டு போய் அங்கயும் சண்டையெண்டால் பாவம் ஈசாக்கான்ர அம்மா கூட வந்து விலக்குப்பிடிப்பா சில நேரம்.

அதெல்லாம் முடிஞ்சு அடுத்தடுத்த வகுப்புகளுக் வந்தால் படிப்பில போட்டி கூடிடும். பத்தாதக்கு வாத்திமார் வேற எரியுற நெருப்பில எண்ணையை விடுற மாதிரி அடிக்கடி போட்டி வைப்பினம். பெட்டையள் ஒரு ரீம். பெடியங்கள் ஒரு ரீம். எங்கட ரீமுக்கு கேட்ட கேள்விக்கு நாங்கள் பதில் சொல்லாட்டால் அவங்களுக்குப் போயிடும் கேள்வி. 1-2 மார்க்ஸ் இடைவெளியில வெற்றி வந்தால் நாங்கள் அவங்களை அலாப்பியெண்டுறது அவங்கள் எங்களை அலாப்பியெணடுவாங்கள். வெல்லுற ரீம் தோக்கிற ரீமை முறைச்சுக்கொண்டேயிருக்கும். அதுவும் பெட்டையள் கனக்க வாயடிச்சால் ஒரு சிரிப்புச் சிரிச்சுக்கொண்டே அப்பண்ணா சொல்லுவார் 'வாறவன் பாடு கஸ்டந்தான்' (அப்பண்ணா கணிதம் விஞ்சாம் சமூகக்கல்வி இப்பிடி எல்லாம் படிப்பிச்சவர் சதாபொன்ஸ்ல் - இப்ப உயிரோட இல்லை.அவரைப்பற்றித் தனிப்பதிவு போடணும்).

ஏதும் கணக்குத் தந்து போட்டு பெட்டையளின்ர மெதட்ல வேணுமென்டு பிழைகண்டுபிடிப்பார். பெடியங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு நாங்கள் கத்துவம். அவங்கள் அப்பண்ணா எங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு வாங்கிலுக்கு மேல ஏறி நிண்டுகொண்டு கத்துவாங்கள். இங்கயும் இந்தச் சொந்தக்காரப் பெடியங்கள் இருந்து துலைப்பாங்கள் அதால நாம என்ன செய்தாலும் சொன்னாலும் வீடுவரைக்கும் போயிடும்.

கொஞ்சக்காலம் தூரத்துச்சொந்தக்காரர் ஒராள் ரியூசனுக்கு director ஆ வந்திட்டார். அவற்ற மகன் வேற என்ர வகுப்பு.மனுசன் வகுப்புக்கு மேற்பார்வை செய்ய வரேக்க வாத்திமாரிட்ட வேற சொல்லிடும் இவள் எனக்கு மருமகள் என்டு. கறுமம் இதை இப்ப இங்க வந்துச் சொல்ல சொல்லி யாரு கேட்டது. பெடியங்கள் ஒருபக்கம் கத்துவாங்கள். எனக்குப் பயமா வேற இருக்கும். யாரும் குழப்படி செய்தாலும் சொந்தக்காரப்பிள்ளையளுக்குத்தானே அடி விழுறது. சொந்தமெண்டால் யாரும் கேக்கமாட்டினம்தானே. அதும் அவர் தன்ர மகன்களுக்கே ரத்தம் வாறளவுக்கு அடிக்கிற ஆள். இப்பிடி நான் ரியூசனில சுதந்திரமா இருக்கப் பல தடைகள் ஆனால் தடைகளைக் கண்டு துவளும் இனமா நாங்கள் :) எதையும் தாங்கும் இதயம் :)

நான் கனக்க அடிவேண்டினது தமிழ் படிப்பிச்ச மாஸ்டரிட்டதான்.அவருக்குப் பெட்டையள்ல ஏதோ கோவம். எங்கடா அடிக்கலாம் என்டு திரிவார். எங்களுக்கு மட்டுமில்ல பெரியக்காவைக்கும் அடிச்சிருக்கிறார். காதல் தோல்வியோ என்னவோ. யார் செய்ற பாவம் எப்பிடியெல்லாம் விளையாடுது. வகுப்புக்கு முன்னால தோட்டம். தோட்டத்தில வேலை செய்றாக்களை வாய் பார்த்துக்கொண்டிருந்ததுக்காக அவரிட்ட நான் அடி வாங்கியிருக்கிறன். பிறகு அந்த மாஸ்டர் நிர்வாகத்துடன் பிரச்சனைபட்டு அவரை வரவேண்டாம் என்டு சொல்லிட்டினமாம்.

எங்களோட படிச்ச பெடியங்கள் சில பேர் facebook இருக்கிறாங்கள். கிட்டடில ஒருத்தர் message பண்ணியிருந்தார். அதுவும் தன்ர பட்டப்பெயரைப் போட்டு ஞாபகம் இருக்கோ என்டு கேட்டு. ஓமோம் நீர் வைச்சிருந்த அந்த bag கூட ஞாபகம் இருக்கெண்டு பதில் போட்டன்.நிறையப்பேர் கொழும்பிலும் வெளிநாட்டிலும்தான் இருக்கிறாங்கள். என்னோட நடுக அராத்துப்படுற ஒரு பெயடின் இப்ப என்ன செய்றான் என்டு விசாரிச்சன் ..அவன் சிலோன் பாங்ல வேலை செய்றானாம்.அவன் சரியான கட்டைப்புட்டு ஆனால் சத்தமெண்டா தொண்டைகிழியக் கத்துவான் :)கையை வேற ஆட்டி ஆட்டிக் கதைப்பான். இப்பிடி 12 வருடங்களுக்குப்பிறகு பழைய வால்கூட்டங்களுடன் கதைத்தது சந்தோசமாத்தான் இருந்தது. ஆனால் அவங்கள் செஞ்ச அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமே. கிணத்தில தண்ணி குடிக்கப்போனால் பெட்டையள் வந்தால் தண்ணி ஊத்த மாட்டாங்கள். வாளியைப் பொத்தெண்டு வைச்சிட்டுப் போடுவாங்கள். இதை ஒருநாள் யாரோ ஒரு வாத்தியார் பார்த்திட்டு முறைப்பாடு செய்ததால பெட்டையள் என்டாலென்ன பெடியங்கள் என்டாலென்ன கிணத்தில இருந்து தண்ணியள்ளினா வாளில தண்ணிமுடியும் வரைக்கும் தண்ணிகுடிக்க வாறாக்களுக்கு ஊத்தோணும். இவங்கள் ஒருநாள் வாளிக்க குட்டிப்பாம்பு ஒண்டு நிண்டது கண்டிட்டும் காணாத மாதிரி ஒரு பிள்ளை தண்ணிகுடிக்க குனிஞ்சாப்பிறகு ஊத்திறமாதிரி ஊத்திட்டு பாம்பு என்டிட்டு ஓடிட்டாங்கள். அது பாவம் ஒரே அழுகை. சைக்கிள் சீட்ல வெடிகொளுத்திப்போட்டிருக்கிறாங்கள். தாங்கள் செய்ததெல்லாத்தையும் நாங்கள் செய்தது என்டு பொய் சொல்லி மாட்டி விடுவாங்கள். இதால எத்தின தரம் மொத்த வகுப்புக்கும் சேர்ந்து punishment கிடைச்சிருக்கு. அதும் அப்பண்ணா சரியான பிடிவாதக்காரன். தான் நினைச்ச பதில் வரும் வரைக்கும் விடவே மாட்டார். கோவத்தில வகுப்பெல்லாம் கூட கான்சல் பண்ணியிருக்கிறார். இப்ப அப்பண்ணாவும் இறந்த பிறகு ரியூசன் எப்படி நடக்குதோ தெரியா. என்ர அம்மா சித்தி மாமாக்கள் என எல்லாரும் படித்த ரியூசன் அது.

என்னடா ரியூசன் என்டாலே பெடியங்களைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறன் என்டு நினைக்காதயுங்கோ. ரியூசனை நினைச்சால் வாற சந்தோசமான விசயங்கள் மட்டும் எழுதியிருக்கிறன். சோகங்களை உள்மனது ஞாபகம் வைத்துக்கொள்வதில்லையாம். நவசியண்ணா (இன்னுமொரு கணித ஆசிரியர் - அப்பண்ணாவின் அண்ணா) அவர் மந்திகை வைத்தியசாலையில் உடல் நலமற்று இருந்தது நாங்கள் பார்க்கப் போனது பிறகு அவர் ஒருநாள் இறந்துபோனது நாங்கள் எல்லாம் அந்த மாமரத்தின்கீழ் நின்று கதறிக் கதறி அழுதது இப்படி எல்லாமே ஞாபகம் வருது. அங்கு படித்த யாரும் இங்கு இருப்பின் தொடர்ந்து எழுதுங்கள்.