Author: அருண்மொழிவர்மன்
•6:02 PM



அண்மையில் எனது பெரியம்மா கொழும்பு சென்று திரும்பியபோது எனது அம்மா அவவிடம் எனக்காக கொடுத்துவிட்ட பொருட்களில் நான் முக்கியமாக கருதுவது எனது ஒன்பதாம் ஆண்டு விஞ்ஞான பாட கொப்பி. இலங்கையில் க. பொ. த சாதாரண தர (11ம் ஆண்டு) பரீட்சைக்கான பாடத்திட்டம் ஆரம்பிப்பது ஓன்பதாம் ஆண்டில் இருந்து என்பதால் மிகுந்த உற்சாகமாக படிக்க தொடங்கியிருந்தோம். அப்போது நான் வாசித்த ஒரேயொரு ஆங்கில சஞ்சிகையான the sporststarன் நடுப்பக்கத்தில் அப்போது star poster என்று விளையாட்டு வீரர்களின் அழகிய வண்ணப்படம் வருவது வழக்கம். அதனை தான் நான் எனக்கு விருப்பமான் ஆசிரியர்களின் கொப்பிகளிற்கு உறையிடுவேன். அப்படியாக உறையிட்டு எனக்கு கிடைத்த கொப்பியை பார்த்ததும் எனது மனம் மழையில் நனைந்த துணி போல கனக்கத்தொடங்கியது.

எமக்கு ஒன்பதாம் ஆண்டு முதல் 11ம் ஆண்டு வரை விஞ்ஞானம் படிப்பித்தவர் திரு வை. க. தவமணிதாசன் அவர்கள். கண்டிப்புக்கு பெயர் போனவர். சின்னதாய் ஒரு கவிஞர். “வைகை” என்று ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டவர். அதில்
“வைகை எந்தனுக்கு வாடிக்கை ஆனதற்கு
வைகை முறையே தலையும் தலையெழுத்தும்” என்று மாணவர்களை கடுமையாக கண்டிக்கும் தன் இயல்பு பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அமிலத்துக்கும் காரத்துக்கும் இடையிலான நடுநிலையாக்கல் தாக்கம் பற்றி
அமிலம் + காரம் --> உப்பு + அப்பு (நீர்)
என்று எல்லாம் சுவரசியமாகக் கற்பிப்பார். (இவர் பற்றி முழுமையாக ஒரு தனி பத்தி எழுதவேண்டும். ஆனால் நான் இப்போது கூறவந்ததை முதலில் கூறிவிட்டு பிறகு இவர் பற்றி.) அவருடைய பாட கொப்பிக்கும் எனது வழக்கப்படியே உறையிட்டிருந்தேன். ஆனால் அந்த உறையை பார்த்ததும் என் மனம் பாதிக்கப்பட காரணம் அதில் இருந்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேமியன் மார்ட்டினின் படம். அது (92) அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கியிருந்த காலம். அந்த கொப்பி மீண்டும் எனது கை வந்து சேர்ந்தபோது அவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். என்னை பொறுத்தவரை நான் விட்டுவந்த யாழ்ப்பாணம் இப்போதும் என்மனதில் (10 ஆண்டுகளாகியும் கூட) (F)ப்ர்ட்ஜில் வைத்த பழம்போலதான் உள்ளது. ஆனால் நிஜத்தில் ஒரு தலைமுறை, அதுவும் நாம் பார்த்து, ரசித்து, பழகி, கற்று வளர்ந்த தலைமுறை எம்மை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாற்றாண்டின் அற்புத வீரர் என்று கொண்டாடப்பட்ட சச்சின் , லாரா, ஷான் வார்னே, மக்ராத், ட்ராவிட், இன்ஸமாம், பொலொக் என்று பெரும் சிங்கங்கள் எல்லாம் ஓய்வு பெறும் கால கட்டத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட சச்சினின் சர்வதேச அனுபவமும் எனது விளையாஅட்டு அனுபவமும் ஒரே கால அளவானவை.


சினிமாவில் கூட புதிய தலைமுறையினர் பொறுப்பேற்க தொடங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, இளையராஜா, வைரமுத்து, வாலி, போன்ற ஜாம்பவான்களிடமிருந்து செல்வராகவன், கௌதம், முருகதாஸ், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் ஜெயராஜ் போன்றோர் கிட்டதட்ட பதவியேற்று கொண்டனர். எமது பதின்ம வயதுகளில் 27 வயதுகாரரை எல்லம் மிகுந்த மரியாதையுடன் அண்ணே என்று தான் அழைப்பதுடான் வழக்கம். இப்போது அதே 27 வயதில் நாம் இருக்கும்போது பதின்மவயதார் அண்ணே என்றழைக்கும்போது நட்புக்குள் வயதேது என்றுததன் சொல்ல தோன்றுகிறது.


நான் புத்தகம் வாசிக்கதொடங்கிய ஆரம்பகாலங்களில் மரபுக்கவிதைகளையும் கவிஞர்களையும் சாடி மு. மேத்தா, வைரமுத்து போன்றோர் பேசிவந்தனர். இப்போது அவர்கள் எழுதுவது கவிதையே இல்லை என்று பேசும் நவீன இலக்கியகாரர் வந்துவிட்டனர்.


காலம் ஒரு வற்றாத நெடுநதி போல ஒடிக்கொண்டேயிருக்கிறது. அதன் கரையில் அது விட்டுசெல்லும் தடங்கள் பற்றிய விமர்சனங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே அது பல மைல்களை கடந்து சென்று இன்னும் பல புதிய தடங்களை உருவாக்கிவிடுகிறது. சில மாதங்களின் முன்னே எனது நன்பனின் சித்தி மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும்போது அவனுக்கு 6 அல்லது 7 வயது இருந்திருக்கும். எனது மனதளவில் அவன் பற்றிய விம்பம் சிறுவன் என்கிற அளவிலேயே பதிந்துள்ளது. ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது அவன் சொன்னான், “நீங்கள் இங்க இருக்கேக்க உங்களுக்கு இப்ப எங்கட வயதுதானே” என்று. காலம் பயணிக்கும் வேகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றோ என்று எனக்கு சந்தேகம் வந்தது.


எனது சக மாணவி ஒருத்தி, ஏறத்தாழ எமது வயதுடைய எல்லாராலும் காதலிக்கப்பட்டவள், ஆனால் யாரையும் காதலிக்காதவளுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அது பற்றி எனது நண்பன் ஒருவன் சொன்னான் “நாங்கள் கல்யாணம் கட்டி பிள்ளை பெற்றாலும் வயசாச்சே என்ற நினைப்பு வராது, ஆனால் எங்களோட படிச்ச ஒருத்திக்கு கல்யாணம் என்றாலே வயசு போன மாதிரி இருக்கடா” என்றான். எமக்கே தெரியாமல் எம் வாழ்வில் பங்கெடுத்த விடயங்கள் கடந்து போகும் போது தான் புரிகிறது எத்தனை காலம் எம்மை கடந்து போய்விட்டது என்று.

பின்குறிப்பு -
இது ஒரு மீள்பதிவு. 2007ன் தொடக்கத்தில் எழுதப்பட்டது. ஈழத்தமிழ் பேச்சு வழக்கிற்கே உரிய சில சொற்கள் உள்ளதால் இங்கு பதிவிடுகிறேன்


Author: வந்தியத்தேவன்
•12:04 AM
குதிரை ஓடுதல் என்ற சொல் இலங்கையில் பரவலாக கள்ளமாக சோதனை எழுதுதல் அதாவது ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் ஆள்மாறாட்டம் செய்து சோதனை எழுதுதல் என்பதாகும்.

பெரும்பாலும் ஓஎல்லுக்கும் ஏஎல்லுக்கும் தான் இந்த குதிரை ஓட்டம் நடைபெறும். இது தண்டனைகுரிய குற்றமாகும் ஆனாலும் சிலர் துணிந்து எழுதுவார்கள் பிடிபட்டால் அதிகாரிகளால் எச்சரிக்கை செய்தே பெரும்பாலும் அனுப்பபடுவார்கள் காரணம் குதிரை ஓடுபவர் நன்றாகப் படிக்ககூடியவராக இருப்பார், அவரது எதிர்காலத்தை கருதி அவரை எச்சரிக்கையுடன் விட்டுவிடுவார்கள். இதுவரை நான் ஆண் குதிரைகளையே கண்டிருக்கின்றேன். பெண் குதிரைகள் ஓடுவதில்லை என நினைக்கின்றேன். காரணம் அவர்களுக்கு இந்த கள்ளவேலைகளில் அவ்வளவு விருப்பமில்லை.

இனி என்ரை சொந்தக் கதை சோகக் கதைக்குப்போவோம். என்னுடைய வலைமனையில் இருந்ததை திருத்து எழுதியிருக்கின்றேன். அந்தப் பதிவு நான் வலையுலகத்தில் காலடி எடுத்துவைத்தபோது எழுதியது. நிறையப் பிழைகள் இருக்கின்றது. ஆகவே இது ஒரு மீள் பதிவு அல்ல திருத்திய வடிவம்.

நான் உயர்தரம் படிக்கும்போது எனக்கும் அப்படி ஒரு நிலமை ஏற்பட்டது. கல்விப் பொதுத் தராதர(சாதாரணதரம்/ ஓஎல்) பரீட்சை பொதுவாக டிசெம்பர் மாதத்தில்தான் இடம் பெறும். நான் என்ரை ஓஎல் சோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டு உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன் . பொதுவாக டிசம்பர் விடுமுறை என்பதால் வீட்டுக்காரர் எல்லோரும் கொழும்புக்கு சென்றுவிட்டார்கள். நான் மட்டும் வீட்டிலை, ரியூசனுக்கு ஒழுங்காச் செல்லவேண்டும் எனக் கண்டிப்புடன் சொல்லிவிட்டு அவர்கள் என்னை வீட்டிலை தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். 30 நாள் லீவிலை நான் 5 நாள் மட்டும் ரியூசன் சென்றது வேறு கதை.

ஒரு நாள் இரவு கூட்டாளிப் பொடியன் ஒருவன் இன்னொரு தெரிந்த பொடியனுடன் வந்து "மச்சான் இவன் ஓஎலிலை கணக்கு பாடம் சென்ற வருடம் பெயிலாகிவிட்டான் அவனுக்கு ஏ எல்( Advanced Level ) படிக்க கணக்கு பாஸ் பண்ணவேண்டும் இவனுக்கோ கணக்கு சுத்த சூனியம். நீ தான் இவனுக்காக குதிரை ஓடவேண்டும்" என்றான்.

நானோ முதலில் பயத்தில் மறுத்துவிட்டேன். எனக்கு உந்த ரிஸ்க் எடுக்கிற வேலையெல்லாம் சரிப்பட்டுவராது. அதாலை அவனிடம் "அட விசரா நான் பிடிபட்டால் என் படிப்பும் போய்ச்சு இவன்ரை படிப்பும் போய்ச்சு நான் மாட்டேன்" என்றேன்.

அவனோ விடாப்பிடியாக நீ தான் கணக்கிலை புலியாச்சே(பாப்பாசி மரத்திலை ஏத்துகிறான்) நல்லா எழுதுவாய் சும்மா பாஸ் காணும் இவணுக்கு ஒன்றும் டீயோ(Distinction ) சீயோ(Credit) ஒன்றும் வேண்டாம் ஒரு எஸ்(Simple Pass) போதும்" என்று கெஞ்சினான்.

நானும் கொஞ்சம் யோசிச்சிட்டு வீட்டுக்காரர் ஒருத்தரும் இல்லை களவும் கற்றுமற என பெரிசுகள் சொல்லியிருக்கிறார்கள் ஒருதரம் முயற்சி செய்தால் என்ன என நினைச்சு ஓம் எண்டுவிட்டேன். அத்துடன் என்ரை கண்டிசன் எல்லாம் சொன்னேன். எக்ஸாம் ஹோல் என்ரை பள்ளியாக இருக்ககூடாது என்றேன், அதற்கு அவர்கள் அதில்லை பள்ளிக்கூடம் என்றுவிட்டு ஒரு பிரபல பெண்கள் பாடசாலையை சொல்ல நான் விண்ணில் மிதந்தேன். நான் உடனே அடுத்த கண்டிசனான யார் அங்கே மேற்பார்வையாளர் எனக் கேட்க அவங்களும் அது யாரோ தெரியாத மாஸ்டர்தான் உனக்கு தெரிந்த ஒருதரும் இல்லை பயப்படவேண்டாம் என்றார்கள்.

அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை தபால் அடையாள அட்டை மாத்துவது அவனது அடையாள அட்டையியில் என்னுடைய படம் ஒன்றை மாத்தி ஒட்டவேண்டும். இதற்கென சில பொடியள் இருக்கிறார்கள் அவங்கள் நல்ல வடிவாகச் செய்வார்கள் என அவங்கள் என்ரை படம் ஒன்றை வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். சோதனை அண்டைக்கு பள்ளிக்கூட வாசலில் எனக்கு அடையாள அட்டையைத் தருவதாக சொன்னார்கள்.

விடிஞ்சால் சோதனை நான் சோதனை எழுதும்போது கூட‌ இப்படி பதட்டப்பட்டதில்லை, ஒரே ரென்சன். காலை நேரத்துக்கு எழும்பி குளித்துவிட்டு அப்படியே பிள்ளையாருக்கும் ஒரு சலூட் போட்டுவிட்டு பக்திப் பழமாகா போனால் பிடிக்கமாட்டார்கள் என்ற நினைப்பிலை பள்ளிக்கூட‌ வாசலில் நண்பர்களுக்காக நின்றேன்.

எனக்குத் தெரிந்த பொம்பிளைப் பிள்ளையள் எல்லாம் என்னை ஏதோ நான் அவர்களை சைட் அடிக்க நிற்பதாக நினைத்து ருத்ர பார்வை பார்த்துவிட்டுப்போனார்கள். வாசலிலேயே என் மானம் கொஞ்சம் கொஞ்சமாக கப்பல் ஏறிவிட்டது. சோதனை தொடங்க 15 நிமிடங்கள் இருக்கும்போது தான் அவர்கள் இருவரும் வந்தார்கள் "என்ன மச்சான் இப்படி லேட் பண்ணிவிட்டிர்களே" எனக் கேட்க அவங்களோ "இல்லை இப்ப நீ போனால்தான் சரியாக இருக்கும்" என்றதுடன் என்னை வாழ்த்தியும் அனுப்பினார்கள். (செய்வது கள்ளத்தனம் இதிலை வாழ்த்து வேறை).

நானும் பாண்டியராஜன் முழிமாதிரி கண்ணைப் பிரட்டிகொண்டு என் சீட்டைத் தேடினேன். அவங்கள் முதலிலே சொல்லியிருந்தாங்கள் மச்சான் ரிலாக்சாகபோய் எழுது பயந்துகொண்டுபோனியோ என்றால் பிடித்துப்போடுவார்கள். ஒருமாதிரி சீட்டைக் கண்டுபிடித்து இருக்க மேற்பார்வையாளார் வந்தார். அவரும் என்னை நோக்க நானும் அவரை நோக்க என் மனதில் பெரிய அணு குண்டே வெடித்தது.

அவர் வேறையாரும் அல்ல எனது பாடசாலை இரசாயனவியல் ஆசிரியர் அவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் சேர்ந்துவெடித்தது. ஆனாலும் உடனே அதைக் காட்டிக்கொள்ளாமல் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே அழைத்துச் சென்றார். வெளியிலை வைத்து என்ரை அடையாள அட்டையைச் சோதித்தார். என்ரை பேருக்கு பதிலாக இன்னொரு பெயர் அவ்வளவுதான் தொடங்கினாரே அர்ச்சனை.

மற்ற மாணவர்களுக்கு நான் யார் என்பதைக் காட்டிக்கொடுக்காமல் வெளியே வைத்து சரமாரியாக ஏசினார். இறுதியாக ஓடடா வீட்டை என என்னை துரத்தினார். இதேடை விட்டிருந்தால் பரவாயில்லை. பள்ளி தொடங்கியபின் அம்மாவைக் கூப்பிட்டு என் சாகசத்தைச் சொல்லி வீட்டிலும் எனக்கு அர்ச்சனை கிடைக்கச் செய்தார்.

இதற்க்குப் பிறகு நான் குதிரை ஓடுறது என்றாலே ஓரே ஓட்டம் தான்.

இலங்கையில் தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை நடக்கின்றது. ஆகையால் காலத்திற்க்கேற்ற பதிவாக இந்தப்பதிவு.