இதுவும் இலங்கை உணவுப்பழக்கங்களைக் குறித்தான ஒரு ஒலியுரையாடல். பிட்டு சொதி என்று நீள்கிறது. சோமிதரன் மற்றும் என்னோடு இடையில் சிநேகிதியும் வந்திட்டு போயிருக்கிறா.. கேட்டுப்பாருங்கள். ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஆண்டு 2007 யூன்
இப்பத்தான் எங்கட வேலணை வலசுண்ட கூழ் குடித்துவிட்டு உங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அப்படியே போற வழியில் இடியப்பமும் சொதியும் சாப்பிட்டுக்கொண்டுபோங்கோ.
பொதுவாக இடியப்பத்தை காய்ச்சல்காரர்டை சாப்பாடு என்பார்கள். ஏனென்றால் பெரும்பாலும் காய்ச்சல் நேரம் இடியப்பம்தான் சாப்பிடுவது. இதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு தோசை இட்டலிபோல இடியப்பம் அவ்வளவு கடினமான (ஹார்ட்) சாப்பாடல்ல. கொஞ்சம் லைட்டான சாப்பாடு. இடியப்பம் உடனடியாக சமிச்சும்போம் இதனாலும் பெரும்பாலானவர்கள் வெளியிடத்திற்க்குச் சென்றால் இடியப்பம் சாப்பிடுவார்கள்.
எங்கட நாட்டிலையே இடியப்பம் சொதி தேங்காய்ப்பூச் சம்பல் உழுந்துவடை கூட்டணி சரியான பேமஸ். இலங்கையின் சகலபகுதியிலும் கிடைக்கும் சாப்பாடுகளில் இதுவும் ஒன்று. சிங்களப்பகுதியில் கூட இடியாப்பையும் கிரி ஒதியும் என அழைப்பார்கள்.
சொதி என்பது தேங்காய்ப்பாலில் செய்யப்படும் ஒரு தண்ணி உணவு. சரியான விளக்கம் தெரியவில்லை. சைவச் சொதி என்றால் வெங்காயம், கறிவேப்பிலை, சில இடங்களில் தக்காளி எல்லாம் போடுவார்கள். மச்சச் சொதி என்றால் மீன் சொதி பிரபலம். கடைகளில் கூடுதலாக சைவச் சொதிதான் கொடுப்பார்கள்.
தமிழகத்தில் சட்னி எனப்படும் உணவுதான் நம்ம நாட்டில் சம்பல் என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றது. இதிலும் அரைச்ச சம்பல் இடிச்ச சம்பல் என வகைகள் உண்டு. அத்துடன் வெள்ளைச் சம்பல் சிவப்புச் சம்பல் என கலரைவைத்துக்கூட சம்பல் உண்டு. வெள்ளைச் சம்பல் தேங்காய்ப்பூவுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைப்பது. சிவப்புச் சம்பல் தேங்காய்ப்பூவுடன் சிவத்த் செத்தல் மிளகாய் போட்டு அரைப்பது. சம்பல் பற்றிய மேலதிக விபரங்களை சமையல் ஆச்சிகள் தருவார்கள். எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்.
வடை என்றால் உடனே ஞாபகத்திற்க்கு வருவது யாழ்ப்பாணம் மலாயன் கபே வடையும் கொழும்பு சரஸ்வதி லொட்ஜ் வடையும் தான். ஒருமுறை மாத்தளையில் ஒரு சைவக்கடையில் சுடச்சுட பருப்பு வடை சாப்பிட்டேன் நல்ல உருசியும் மலிவும். இப்போ ஒரு வடை 30 ரூபாவிற்க்கு விற்கிறார்கள். திருகோணமலையில் ஐயர் கடை தோசை நல்ல பேமஸ்.
நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் சைக்கிளில் சென்ற காலத்தில் வல்லை கழிந்ததும் ஆவரங்காலிலோ கொஞ்சம் சைக்கிள் ஓடத் தெம்பிருந்தால் கோப்பாயிலோ ஒரு கடையிலை இறங்கில் காலையிலை என்றால் இடியப்பம் சொதி வடையும் பின்னேரத்தில் என்றால் வடையும் பிளேன் டீயும் குடித்துவிட்டு நல்ல உசாராக பயணம் செய்வது.
யாழ்ப்பாணம் டவுணில்(டவுணா? ரவுணா?)சைவம் என்றால் மலேயன் கபேயிலும் மச்சம் என்றால் வேறுகடையிலும் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அபப்டியே லிங்கத்தில் ஒரு ஐஸ்கிறீமையும் குடித்துவிட்டு ஒரு பீடா சப்பும் இன்பம் மீண்டும் எப்போ வரும்.