Author: யசோதா.பத்மநாதன்
•4:12 AM
பிள்ள சினேகிதி சொன்ன குலகுலயா முந்திரிக்கா பாட்டு ஞாபகம் இருக்கே? இதுகளும் அதுகளப் போல தான்.ஆனா என்ன கொஞ்சம் பொம்பிளப் பிள்ளயள் விளையாடுற விளையாட்டு.அவ்வளவு தான்.

கிள்ளுப் பிறாண்டி நுள்ளுப் பிறாண்டி:-

நாலஞ்சு பேர் வட்டமா இருப்பினம்.இரண்டு கையையும் முன்னால் பரப்பி வத்திருப்பார்கள்.ஒருவர் இந்தப் பாடலை இப்படிப் பாடுவார்.
கிள்ளுப் பிறாண்டி நுள்ளுப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ?

கிள்ளிப் பிராண்டி என்னும் போது அவர் ஒருவரது கையை நுள்ளுவார். பின்னர் நுள்ளுப் பிராண்டி என்னும் போது வரிசைக் கிரமமாக வரும் அடுத்தவரின் கையை நுள்ளுவார்.கொப்பன் தலையில் என்னும் போது அது அடுத்தவரது கையிற்கான நுள்ளாக இருக்கும்.என்னபூ என்பது 4வது கையிற்கான நுள்ளாக இருக்கும்.அவர் ஒரு பூவின் பெயரைச் சொல்ல வேண்டும்.பொதுவாக முருக்கம் பூ என்று சொல்வார்கள்.

பாடல் பிறகு இப்படித் தொடரும்.

முருக்கம் பூவத், தின்றவளே,
பாதி விளாங்காய், கடித்தவளே,
பாட்டன், கையை, மு, ட, க், கு,

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு கையிற்கான நுள்ளாக வந்து கடைசியாக முடக்கு என்ற சொல் தனித்தனி எழுத்துக்கான நுள்ளாக இருக்கும். கு என்ற சொல் முடிகின்றவர் தன் கையை மறு புறமாகத் திருப்பி வைக்க வேண்டும்.பூவின் பெயரை வேறொன்றாகக் கூறும் போது வேறொருவரது கை திரும்புகின்ற வாய்ப்புக் கிட்டும்.அந்தக் கு என்ற சொல் மீண்டும் திருப்பிய கையில் வந்து முடிந்தால் அவர் தன் கையை எடுத்துக் கொள்ளலாம்.

பாடல் மீண்டும் அவ்வாறே தொடரும்.அப்படி முதலில் யாருடய கை முழுவதுமாக விடுபடுகிறதோ அவர் வெற்றி பெற்றவர்.
இப்போது நினைத்தால் இதிலெல்லாம் என்ன சுவாரிஸம் இருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் அப்போதெல்லாம் இது தான் திறம்.

ஆச்சுப் பிச்சிலி ஆச்சுப் பிச்சிலி

இது ஒரு சின்ன முசுப்பாத்தி விளையாட்டு.கைகளை அகல விரித்துக் கொண்டு ஆச்சுப் பிச்சிலி ஆச்சுப் பிச்சிலி என்று சொல்லிக் கொண்டு சும்மா சுத்துவது தான். இறுதியில் தலை சுற்றி ஒவ்வொருவராக தொப்புத் தொப்பென்று விழுவோம். அதெற்கெல்லாம் பெரிய வெற்றி பெற்றது போல் பெரிய சிரிப்பெல்லாம் சிரித்துக் கொள்வோம்.பாசாங்காக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கொளவதற்கும் ஒரு சிரிப்பு. இதில் திறிலான சம்பவம் தலை சுற்றுவதை அநுபவிப்பதாகத் தான் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.

இன்னொரு பாட்டிருக்கிறது. அதனை ஏன் பாடினோம் என்று இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் பாடல் ஞாபகமாக இருக்கிறது. பாடல் இது தான்.

அக்கா வீட்ட போனேன்
பழம் அரிசி தந்தாள்
வேண்டாம் என்று வந்தேன்
வந்த வழியில் பாம்பு
பாம்படிக்கத் தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை.
ஊத்தை கழுவ தண்ணிக்குப் போனேன்
தண்ணி எல்லாம் மீன்
மீன் பிடிக்க வலைக்குப் போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன்
ஊசி எல்லாம் வெள்ளி
வெள்ளி எல்லாம்(அம்மா?) வெள்ளி
பொயிலைக் காம்பை நுள்ளி
வாய்க்கை போடடி கள்ளி.

இப்பாட்டு ஒரு லயத்தோடு பாடப் படும்.

இப்போது இன்னொரு பாட்டும் ஞாபகம் வருகிறது.
இது பலராக பெண்கள் விளையாட்டில் தம்மை இரண்டு பிரிவாகப் பிரிப்பதற்காக இப்பாடலைப் பாடிப் பிரித்துக் கொள்வார்கள். பாடல் இது தான்.எல்லோரும் வட்டமாக நிற்க ஒருவர் தன்னில் இருந்து இப்பாடலை இப்படி ஆரம்பிப்பார்.ஓர் என்று தன் உச்சம் தலையில் கை வைப்பார். அம்மா என்று தன் நெஞ்சில் கை வைப்பார். பிறகு ஒவ்வொரு சொல்லாக ஒவ்வொருவரைச் சுட்டியபடி வருவார்.

ஓர் அம்மா கடைக்குப் போனா
ஒரு டசின் பென்சில் வாங்கி வந்தா
அதன் நிறம் என்ன?( என்ன என்பதில் முடிபவர் ஒரு நிறத்தைச் சொல்ல வேண்டும்)

அவர் சிவப்பு என்று சொன்னால் சி, வ,ப்,பூ என்று ஒவ்வொருவராகச் சுட்டிக் கொண்டு வர வேண்டும்.கடைசி எழுத்தில் முடிபவர் ஒரு புறமாக நின்று கொள்ள வேண்டும். பின்னர் இப்பாடல் மீண்டும் தொடரும். அடுத்த முறை முடிபவர் மறு புறமாக நின்று கொள்ள வேண்டும். இப்படியாகக் கட்சி பிடித்துக் கொள்வார்கள்.

இன்னொரு பாட்டும் இருக்கிறது.' என்னகுத்து? இந்தக் குத்து' என்று முன்னால் நிற்பவரைக் குத்துவது.அதன் தொடக்கம் தெரியவில்லை.

இப்போதெல்லாம் இப்படிப் பாடிக் கொள்கிறார்களா என்றும் தெரிய வில்லை.
Author: சுபானு
•5:02 AM



முற்றம் என்றவுடன் என் ஞாபகத்திற்கு வருகின்ற ஒரு விடயம் நாங்கள் எங்கள் வீட்டு முற்றத்தில் சிறுபிள்ளைகளாக இருந்த போது விளையாடிய விளையாட்டுக்கள்தான். பின்னேரமாகி விட்டாலே சிறுவர்களுக்குச் சந்தோசம் தான். என் வயதையொத்த சிறுவர் சிறுமியர், என் கூடப்பிறந்தவர்கள் என எல்லாம் ஒன்றாகக் கூடிவிடுவோம். பொதுவான நாங்கள் கூடுவத எங்கள் வீட்டு முற்றமாகத்தான் இருக்கும். பின்னர் என்ன விளையாடுவது எனத்தீர்மானிப்போம். அப்போதெல்லமாம் எங்களுக்குக் கிரிக்கட் என்றால் என்னவென்றே தெரியாது. அந்தச் சின்ன வயதில் நாங்கள் எல்லோரும் கீறோ கீறோயின்கள் தான். பொதுவாக எல்லோரும் பங்கேற்கக் கூடிய விளையாட்டைத்தான் தேர்ந்தெடுப்போம்.


நேற்றைக்கு கெந்திப் பிடிச்சு விளையாடினாங்க, அதுக்கு முத நாள் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடினாங்க, அப்ப இன்னைக்கு என்னத்த விளையாடுவம்.. கிளித்தட்டு, இல்லாட்டிக்கு இன்னைக்கும் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுவோமா..? வேண்டாம் இனைக்கு ஓடிப்பிடிச்சு பிளையாடுவம்.. குல குலயா முந்திரிக்கா.... கன..காலம் விளையாடி...


விளையாட்டு என்னமோ ஓடிப்பிடிச்சு பாணிதான். ஆனாலும் ஓடுகின்ற இடத்தையும் அளவையும் துரத்துகின்ற ஆளையும் தெரிவுசெய்து விளையாடும் பாணிதான் இந்த குல குலயா முந்திரிக்கா, என்ற பாடலுன் விளையாடும் விளையாட்டில் உள்ள வித்தியாசம். எனக்குத் தெரிந்து ஈழத்து முற்றங்களை மாலை நேரப்பொழுதுகளில் அலங்கரிக்கும் விளையாட்டுக்களில் இந்த விளையாட்டும் ஒன்று. அதுவும் சிறுபிள்ளைகளிடையே பாடலிசைடன் ஆண் பெண் பால் வேறுபாடுகளின் வித்தியாசம் தெரியதா, புரியாத காலகட்டங்களில் மகிழ்ச்சியாக விளையாடும் விளையாட்டுத்தான் இந்த குல குலயா முந்திரிக்கா ஓடிப்பிடிச்சு விளையாட்டு.


எல்லோரும் ஒரு வட்ட வடிவில் நிலத்தில் வெறும் தரையில் உட்காந்து கொள்வோம். ஒருவர் மட்டும் நின்றுகொண்டிருப்பார். அவரின் கையில் சிறு மரக் குளையைக் கொடுத்து
விடுவோம். பின்னர் அந்த நபர் அந்த வட்டவடிவத்தை வெளிப்புறமாக அதாவது அனைவருக்கும் பின்னால் சுற்றிவருவார். அப்படி வரும்போது அந்த நபர் ..


குல குலயா முந்திரிக்கா..
நிறைய நிறைய சுத்தி வா ..
குல குலயா முந்திரிக்கா..
நிறைய நிறைய சுத்தி வா ..
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டதில் இருக்கான் கண்டுபிடி..



என்ற பாடலைப் பாடிக்கொண்டு சுற்றிவரவேண்டும். அப்படி வரும்போது அவர் கையில் உள்ள அந்த குளையை யாரும் ஒருவர் பின்னால் போட்டு விடுவார். அதாவது கையில் உள்ள குளை முந்திரிக் குலையாகவும் அதனைக் கொள்ளையடித்தவர் அந்தக் கூட்டத்தில் உள்ள ஒருவர் அதாவது யாருக்குப் பின்னால் அந்தக் குழை கிடக்கின்றதோ அவர்தான். அந்தப் பாடல் முடிக்கும்போது குளை யாருக்குப் பின்னால் உள்ளதோ அவர் எழுந்து குளை போட்ட நபரைப் பிடிக்கவேண்டும். அதுவும் குளை போட்ட நபர் வந்து ஓடிவந்த ஒரு முழுச்சுற்று வட்டத்தைச் சுற்றி எழும்பியவரின் இடத்தில் அவர் பிடிப்ப முதல் இருந்து விட்டார் என்றால் போட்டியில் கிளை போட்ட நபர் வெற்றிபெற்றதாக அர்த்தம். மாறாக வந்து உட்கார முதல் அவர் பிடிபட்டார் என்றால் வேறு என்ன குளை போட்ட நபர் தோல்விதான். இதில் சுவார்சியம் என்னவென்றால் பின்னால் வந்து அந்தக் குளையினைப் போடுவதால் முன்னால் பார்த்துக்கொண்டு இருக்கும் அவருக்குத் தெரியாமலே போய்விடும் தனக்குத்தான் போடப்பட்டது என்று. அப்படியிருக்கும் போது போட்டவர் மீண்டும் அனைவரையும் சுற்றிவந்தால் வெற்றியவருக்கே...


பாடிப்பாடி விளையாடுவது என்பது எவ்வளவு சந்தோசம் என்பது அந்த விளையாட்டை விளையாடியவர்களுக்குத்தான் தெரியும்.

இதனை விடவும் பாடிப்பாடி விளையாடும் விளையாட்டுக்கள் பல ஈழத்தில் வழக்கத்தில் உள்ளன. எதிர்வரும் பதிவுகளில் அவற்றையும் தருகின்றேன்.