Author: கானா பிரபா
•3:22 AM


"என்ன பிள்ளை வீடெல்லாம் ஒரே மச்ச வெடுக்கா இருக்கு, நாறல் மீனைப் பார்க்காம வாங்கீட்டியோ"
வீட்டு வாசல் படியை மிதிக்கும் முன்னமே ஐயாத்துரை அண்ணை கேட்கிறார்.


மேற்குறித்த வாக்கியத்தில் வரும் "மச்சம்" , "வெடுக்கு" ஆகியவை புதுமையான சொற்களாகக் குறிப்பாகத் தமிழகத்தவருக்குத் தென்படும்.

மச்சம் என்பது மீன் என்பதன் ஒத்த சொல் என்பது எல்லோரும் அறிந்ததே. அதற்கு நெருக்கமான உதாரணமாக கிருஷ்ண பரமாத்மாவின் "மச்ச அவதாரம்" என்பது மீன் வடிவம் எடுத்ததாக இதிகாசம் சான்று பகரும்.

ஈழத்துப் பேச்சு வழக்கில் மச்சம் என்பதைப் பொதுவாக மாமிசம் என்ற வகையறாவுக்கு ஒத்த கருத்தாகப் பாவித்து வருவது வழமை. எனவே வீட்டில் மீன் கறி என்றால் மட்டுமல்ல, கோழி, ஆடு, மாடு எதைக் கறியாக்கினாலும் "மச்சம்" என்ற பொது வழக்கில் அழைப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக தாவர உணவுகளை "சைவம்" சமைத்தேன் என்று அடையாளப்படுத்துவார்கள்.
தமிழக நண்பர் ஒருவர் கருத்துப்படி அசைவ உணவை "மச்சம்" என்று தமிழக வழக்கில் பாவிப்பதில்லை என்று சொன்னார். ஆனால் ஈழ வழக்கோடு பெரிதும் பொருந்திப் போகும் குமரி மாவட்டத்திலாவது இப்படியான சொற் பிரயோகம் இருக்கா என்ன?

அடுத்ததாக வரும் சொல் "வெடுக்கு"
மாமிசம் சமைத்தால் இயல்பாகவே கிளம்பும் வாசனையைத் தான் "வெடுக்கு" என்ற அடைமொழியிட்டுக் குறிப்பிடுப்பிடுவார்கள். "வெடுக்கென ஓடினான்" என்பதில் வரும் வேகம், விரைவு என்ற தொனியில் மாமிசம் காய்ச்சும் போது திடீரென நாசியைத் துளைக்கும் வாசனை மேலெழுந்து வருவதால் தானோ என்னவோ "வெடுக்கு" என்று அழைக்கிறார்கள்.
"வெடுக்கு" என்ற பதம் தவிர "வெடில்" என்றும் சம அர்த்தத்தோடு பேசுவார்கள். அதாவது "மீன் நாற்றம்" என்பதை "மீன் வெடுக்கு" "மீன் வெடில்" என்றும் சொல்லுவார்கள்.

புகைப்படம் நன்றி: இணுவில் கெளரி லோகேஸ்வரன் இணுவிலுக்குப் போன போது எடுத்தது facebook இல் போட்டவ
Author: கானா பிரபா
•3:55 AM
வைரவர் கோயிலுக்குப் படையல் செய்யும் மும்முரத்தில் அம்மா அடுக்களையில் இருக்கிறார். மெல்லப் போய்ப் பார்த்தால் ஒரு பெரிய அலுமினியப்பாத்திரத்துக்குள் ஏதோ கிண்டிக் கொண்டிருந்தார். அந்தப் பாத்திரத்துக்குள் சர்க்கரை, தேங்காய்ப்பூ, பயறு எல்லாம் சேர்ந்த கலவையாக கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் பார்க்க வந்த சனம் மாதிரி நெருக்கமாக இருக்கினம். மெல்ல மெல்லக் கிளறி சர்க்கரை நொந்து நூலாகும் வரையும் ஆக்கி விட்டு விட்டுத்தான் பேசாமல் விட்டார் அம்மா.

அடுத்தது என்ன? இன்னொரு பெரும் பாத்திரத்துக்குள் அரிசிமாவையும், கொஞ்சம் உப்பையும் போட்டுக் கொதிநீரை வாரி இறைத்து விட்டு அந்தப் பாத்திரத்தில் இருக்கும் மாவையும் கிளறோ கிளறென்று கிளறிப் பதமாக்கி விட்டுப் பின்னர் ஒவ்வொரு உருண்டையாக உருட்டிப் பின் வட்டமாக்கிவிட்டு, மற்றப் பாத்திரத்தில் இருந்த பயறு, தேங்காய்ப்பூ, சக்கரைப்பூக் கூட்டணியினரைத் திரட்டிய மாவுக்குள் மெதுவாகத் தள்ளி விட்டு மூடிக்கட்டி உருண்டையாக்கித் தலையில் ஒரு குடும்பி மாதிரி வைத்து விட்டார். ஆகா மோதகம் தயார். அதையே இன்னும் நீட்டான இலைவடிவமான தினுசாக மாற்றி விட்டு உள்ளுக்குள் அந்தக் கூட்டணியை வைத்துப் பூட்டி கொஞ்சம் பற்களைக் காட்டினால் கொழுக்கட்டை தயார்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். முன்னர் எட்டிப்பார்க்கும் போது கலவையாக இருந்த அந்தப் பயறு, சர்க்கரை, தேங்காப்பூ சேர்ந்த கூட்டணியைத் தான் "உள்ளுடன்" என்று அழைப்பார்கள்.
பெரும் எடுப்பிலான திருவிழாக்கள் என்றால் அயலவர்கள் ஒன்று சேர்ந்து, பதமாகச் செய்த உள்ளுடனை திரட்டி வைத்த மாவில் மோதகம், கொழுக்கட்டை பிடித்துக் கொண்டே உள்ளூர் , உலக அரசியல் பேசிக் கொண்டே காரியத்தை முடிப்பார்கள்.

கொஞ்சம் பணக்கார விட்டு மோதகம், கொழுக்கட்டை என்றால் முந்திரிகை வத்தல், கற்கண்டும் கடிபடும்.

மோதகம், கொழுக்கட்டை போன்றவற்றின் உள்ளே அமைந்திருப்பதால் "உள்ளுடன்" என்று வந்திருக்குமோ அல்லது "உள்ளுடல்" தான் "உள்ளுடன்" ஆகியதோ தெரியாது. தமிழகத்திலும் இந்தச் சொல் உபயோகத்தில் இருக்கிறதா என்ன? இல்லாவிட்டால் எப்படிச் சொல்வார்கள்?

என்னதான் சொல்லுங்கோ, எனக்கு மோதகம் சாப்பிடுறதிலும் பார்க்க அந்த மாவுக்குள் இருக்கும் "உள்ளுடன்" சமாச்சாரம் என்றால் கொள்ளைப் பிரியம். என் சின்ன வயசில் எனக்குக் கிடைக்கும் மோதகத்தின் தோலை (மா பகுதி) உரித்து அம்மாவின் கையில் கொடுத்து விட்டு சாவகாசமாக இந்த உள்ளுடனைச் சாப்பிட ஆரம்பிப்பேன். இதுக்காகவே எனக்காக மோதகம் உருட்டாத உள்ளுடன் பாகத்தை கொஞ்சமாக முற்கூட்டியே எடுத்து வைத்து விட்டு அம்மா மோதகம் செய்வது வழக்கம். இப்ப மட்டும் என்னவாம். உணவகத்தில் விற்கும் கொழுக்கட்டையை வாங்கி ஒரு கப்பில் போட்டு விட்டு கரண்டியால் "உள்ளுடன்" சாப்பிடும் வழக்கம் இன்னும் இருக்குப் பாருங்கோ.
தொட்டில் பழக்கம் சிட்னி வரைக்குமாமே ;)
Author: Unknown
•4:31 AM
எனக்குத் தெரிஞ்ச மட்டில ஒரு காலத்தில, அதாவது 1996க்கு முன் பருத்தித்துறை கூட எங்களுக்கு ஒரு வெளியூர் மாதிரி இருந்தது. அப்பா சைக்கிளில அல்லது ஏதேனும் அவசரம் எண்டால் மோட்டார் சைக்கிளில் பருத்தித்துறைக்குப் போவார். யாழ்ப்பாணம் போறது வெளிநாடு போறமாதிரி (எல்லாம் வெடிவால் முளைக்கும் வரைதான்). நான் அப்போ ஒருமுறைக்குமேல் போன அதிகதூரம், மந்திகை ஆஸ்பத்திரி. தம்பி பிறந்த போது ஒருக்கால், அக்காவுக்கு மகன் பிறந்த போது ஒருக்கால், மச்சளுக்கு மகள்கள் பிறந்தபோது இரண்டுதரம் என்று பத்து வயதுக்குள்ளாகவே நான்கு தரம் போய்வந்த இடம் மந்திகை ஆஸ்பத்திரிதான். அப்பா பருத்தித்துறையில இருக்கிற காணிக்கந்தோருக்குப் போய் வரும் நாட்களிலெல்லாம் அப்பாவின் வரவை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கும். ஏனெண்டால், அவர் வாங்கிவரும் கள்ளத்தீனுக்காக.

கள்ளத்தீன் எண்டால், கடையில வாங்கிச் சாப்பிடுற வடை, போண்டா, வாய்ப்பன் முதலான வீட்டில் செய்யப்படாத பொருட்கள். எங்கள் ஊரில் கடையில் வாங்கிச் சாப்பிடுகிற இடியப்பம், பிட்டு எல்லாமே கள்ளத்தீன் தான். இதனால அப்பா பருத்தித்துறையிலிருந்து என்ன வாங்கிவந்தாலும் அது கள்ளத்தீன் என்றே அழைக்கப்பட்டது. அப்பா பருத்தித்துறையிலிருந்து வாங்கிவரக்கூடிய கள்ளத்தீன்களில் சிறப்பானவை தோசை, வெள்ளையப்பம், தட்டவடை ஆகிய மூன்றும். உழுந்துவடை, பருப்புவடை, போளி போன்றன யாழ்ப்பாணம் போய்வரும்போது வாங்கிவருவார். வல்வெட்டித்துறைப் பக்கம் போனால் எள்ளுப்பா. இந்த உணவுகளைப் பற்றி கொஞ்சம் கதைப்போமே.

பருத்தித்துறை தோசையின் புகழுக்குக் காரணம், அதன் அளவு. சின்னவயதில் எனக்கெல்லாம் ஒரு தோசை சாப்பிட்ட இரண்டு நாளைக்கு நிற்கும். அநேகமாக இரண்டு வகை சம்பல் தருவார்கள். பச்சை மிளகாயில் அரைத்த பச்சைச் சம்பல் அல்லது வெள்ளைச் சம்பல் என்று அழைக்கப்படும் சம்பல் ஒன்று, மற்றது செத்தல் மிளகாயில் அரைக்கப்பட்ட உருது சம்பல் அல்லது சிவத்த சம்பல். இதோ, எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அதே போல் பருத்தித்துறை வெள்ளையப்பமும் ஒரு சிறப்பான விஷயம். எங்கள் அம்மா எத்தனை முறை முயன்றும் அந்த மென்மையும், சுவையும் வரவில்லை. வெள்ளையப்பத்துக்கான ஸ்பெஷலான சம்பலோடு ஒரு பதினைந்து வெள்ளையப்பம் உள்ளே இறங்கினாலும் வயிறு நிரம்பாது. அப்படி பூ போல இருக்கும் வெள்ளையப்பம்.

தட்டவடையும் அப்படியே. அந்த ருசியை எங்கள் வீட்டுப் பெண்களால் ஏனோ கொண்டுவர முடிவதில்லை. 2002க்குப் பின்னான சமாதான காலத்தில் ஊருக்குவந்த பெரிசுகள் எல்லாரும் கேட்டு வாங்கி வெளிநாட்டுக்குக் கொண்டு போனது பருத்தித்துறைத் தட்டவடையை தான். இதுவும் கணக்கில்லாமல் சாப்பிடத் தூண்டும் ஒரு போதை வஸ்து என்றே சொல்லலாம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு இரவில் சாப்பாட்டுக்குப் பின் இரண்டு பருத்தித்துறைத் தட்டவடையைக் கொறித்துவிட்டுப் படுத்தால் காலையில் வயிறு அற்புதமாகச் சுத்தமாகும். நம்வீட்டுப் பெண்கள் சுடும் தட்டவடையைச் சாப்பிட்டால்...ம்ஹூம் அதை எல்லாம் இங்க சொல்லமுடியாது.

இந்த உணவு வகைகள் பருத்தித்துறையில் பரவியிருந்த பல உணவகங்களில் கிடைத்தன. ஆனால் வெள்ளையப்பமும், தோசையும் உணவகங்களில் வாங்கிச் சுவைப்பதை விட, பருத்தித்துறையின் குறுக்குத் தெருக்களிலுள்ள வீடுகளின் மதில்களில் சின்னதாக ஓட்டை போட்டு, சின்னச் சின்ன கதவுகள் போட்டு பெரும்பாலும் காலை அல்லது மாலையில் கடைவிரிக்கும் அந்த ஊர்ப் பெண்களின் கையால் கிடைக்கும் தோசை அல்லது அப்பம்தான் சிறப்பானது. என்ன இவர்களின் சில கடைகளின் முன்னால் சாக்கடை ஓடும். அப்படியான கடைகளைத் தவிர்க்க வேண்டும். என்னுடைய ஊர் வாழ்க்கையின் கடைசிக் காலங்களில் அங்கே ‘ராஜா' உணவகம் என்று ஒருவரின் கடையில் இவையெல்லாம் சுத்தமாகக் கிடைத்தன.

ராஜாவும் இன்னும் சில உணவகத்தாரும் காலையிலேயே தோசை, வெள்ளையப்பம் விற்க ஆரம்பித்தார்கள். அப்போ அதிகாலையில் ரியூசனுக்குப் போகிறபடியால் வீட்டில் தரும் காசில் பருத்தித்துறையில் வாங்கி உண்ண ஆரம்பித்தோம் (பள்ளியும், ரியூசனும் பருத்தித்துறையில்தான் அமைந்திருந்தன). நாங்கள் காலையிலேயே வெள்ளையப்பம். தோசை எல்லாம் இறுக்கிவிட்டுப் போவது வழக்கம். அப்படியான நாட்களில் வகுப்பில் தூங்காமல் இருப்பதற்குப் படும் பாடுதான் அதிகம். ஒருமுறை நூலகத்தில் தூங்கி ரகுவரன் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் அதிகம். கொஞ்சக் காலம் போனதும் புரிந்தது, அந்தத் தூக்கம் பருத்தித்துறை தோசை அல்லது வெள்ளையப்ப மகிமை என்று. என்னதான் வாத்திமாரிடம் அடிவாங்கும் அபாயம் இருந்தாலும், தோசை, வெள்ளையப்பம் சாப்பிடும் அந்த அபாரமான அனுவத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. நான் இன்னொருமுறை ஊர் மீளும்போது அந்த அபார அனுபவம் கிடைக்குமா என்பது சந்தேகம். யாராவது சமீபத்தில் பருத்தித்துறைப் பக்கம் போயிருந்தால் சொல்லுங்களேன்... தோசையும், வெள்ளையப்பமும், தட்டவடையும் இன்றைக்கும் விற்கிறார்களா??

Author: யசோதா.பத்மநாதன்
•6:28 AM
ஆருக்கு மாங்காய் சம்பல் வேணும்?

இந்த பாண் சாப்பிடுறவை, புட்டுச் சாப்பிடுறவை, தோசை சாப்பிடுறவை, இட்லி சாப்பிடுறவை மரவெள்ளிக்கிழங்கும் சம்பலும் வேணுமெண்ணுறவை இல்ல ரொட்டி தான் எனக்கு வேணும் எண்ணுறவை எல்லாரும் இப்ப என்னோட சண்டைக்கு வரக் கூடாது.ஏனெண்டா நீங்கள் தான் இண்டைக்குச் சம்பல் செய்யப் போறீங்கள்.அதோட இதுக்குத் தேவையான பொருளுக்குள்ள முக்கியம் அம்மி குழ(ள?)வி, உரல் உலக்கை.அதோட குனிஞ்சு வளைஞ்சு வேலை செய்யிறவையும் வேணும்.எல்லாரும் ஓமோ?

இப்ப குல குலயா முந்திரிக்கா விளையாடிக் களைச்சுப் போனன் எண்டு ஒருத்தரும் சாட்டுச் சொல்லிப் போட்டு ஓடக்கூடாது.எல்லாரும் கால் முகம் கழுவி சாமியக் கும்பிட்டுட்டு ஓடி வாங்கோ. இப்ப பள்ளிக் கூட லீவு தானே? ஆன படியா இனி வீட்டு வேலையும் கொஞ்சம் பழகுங்கோ! ஆம்மிளைப்பிள்ளயள், பொம்பிளப்பிள்ளயள் எல்லாரும் தெரிஞ்சிருக்க வேண்டிய விசயம் இது.

25 வருசத்துக்கு முன்னம் ஈழத் தமிழரின்ர சாப்பாட்டில இந்தச் சம்பலும் அம்மிகுழவி, உரல்உலக்கையும் முக்கிய சாமான்கள்.

சரி, வந்திட்டியளோ?சம்பலில கன வகை இருக்கு பிள்ளயள்.தேங்காய் சம்பல், அதிலையும் உவன் பிள்ள சொன்ன மாதிரி சிவப்புச் சம்பல், பச்சை சம்பல்(வெள்ளச் சம்பல்?),சட்னி - இதுகள விட இஞ்சிச் சம்பல், மாங்காய் சம்பல் எண்டும் சிலது இருக்கு.இப்ப சட்னியப் பற்றி எழுதினா பிறகு இட்லி எப்பிடிச் செய்யிறதெண்டு கேப்பீங்கள்.இடிச்ச சம்பல் எண்டு சொன்னா ஆச்சியாச்சி தோசை சுடணை எண்ணுவியள்.அதில பிறகு எண்ணை தோசை, வெங்காயத் தோசை ஆளாளுக்குச் சுடச் சுடத் தாணை எண்ணுவியள்.பிறகு இது சமையலறையாப் போடுமோ எண்டு தான் எனக்குப் பயம்.கூழ் காரரும் காவல் நிக்கினம்.அதால இஞ்சிச் சம்பல் மாங்காய் சம்பல் இதுகளப் பற்றி மட்டும் சொல்லுறன்.எல்லாத்திலயும் சின்னச் சின்ன மாற்றங்கள் தான்.பிறகு உங்கட ரசனை, விருப்பம், ருசிக்கேற்ற படி நீங்கள் மாத்திறது தானே!

அதோட இன்னொரு விசயம் பிள்ளயள். கவனமாக் கேக்கிறியளே? சமையல் ஒரு கலை. இதுக்கு ஆர்வம் இருக்க வேணும்.கைப் பதம் எண்டு ஒண்டு இருக்குது.ஏனோதானோ எண்டு செய்யக் கூடாது.முழு மன ஈடுபாட்டோட செய்யவேணும். அதுக்கொரு மனம், ரசனை, விருப்பம் எல்லாம் வேணும்.கலை உணர்வோட, மன விருப்பத்தோட, அளவான சூட்டோட,அன்போட,பரிமாறுறதில எல்லாம் ஒரு ருசி இருக்குது.நான் சொன்னா நம்ப மாட்டியள். இதெல்லாம் அனுபவத்தோட தான் வரும்.அதோட சாப்பிடுறவையும் ரசனையோட சாப்பிடுறவையா இருந்தா இன்னும் விசேசம்.

என்ன அங்க நெளியிறியள்! நான் கனக்க கதைக்கிறனே? கோவிக்காதைங்கோ பிள்ளயள். முதல் தொடக்கத்திலேயே இந்த அடிப்படையளச் சொல்லிப் போட்டால் நீங்கள் மறக்க மாட்டீங்கள் தானே! அதுக்காகத் தான் சொன்னனான். கோவிக்காதைங்கோ. எனக்குத் தெரியும் நீங்கள் நல்ல ரசனையான பிள்ளையள்:-)

சரி மாங்காய்சம்பல் அரைப்பமே?

தேவையான பொருட்கள்;

காம்பு நீக்கிக் கழுவிய செத்தல் மிளகாய் 8-10 ( உங்கள் உறைப்பின் தேவைக் கேற்ப)
கறள் இல்லாமல் துருவிய தேங்காய் பூ - பாதி மூடி.
நாரில்லாத தோல் சீவிய மாங்காய் -பாதி
உடைத்துக் கழுவிய சின்ன வெண்காயம் - 3-4
உப்பு - தேவையான அளவு
கழுவிய கருவேப்பிலை - ஒரு நெட்டு

செய்முறை;-

இவை எல்லாவற்றையும் ஒரு தட்டில் தனித்தனியாக வைத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில தண்ணியும் கொண்டு அம்மியடிக்குப் போகவும்.

அம்மியையும் குளவியையும் நன்றாகக் கழுவவும். பின் செத்தல் மிளகாயையும் உப்பையும் வைத்து சற்று நீர் தெளித்து விழுதாக (நன்றாக) அரைக்கவும்.பின் மாங்காயை வைத்து அரைக்கவும். (இது வழுகி விழப் பார்க்கும், கவனமாக அரைக்க வேண்டும்.) நன்றாக அரைபட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிப் போடாமல் தேங்காய்ப் பூவை வைத்து அரைக்க வேண்டும். கரைப் பக்கம் போயிருக்கும் தேங்காய்ப்பூ கலவையை வழித்து நடுவில் வைத்து எல்லாப் பூவும் நன்றாகக் அரைபடும் படி உங்கள் கைகள் லாவகமாக இயங்க வேண்டும். (கையைச் சம்பலுக்குள் வைத்தால் அருகில் வைத்திருக்கும் தண்ணீரில் கையைக் கழுவி விட்டு குளவியைப் பிடிக்கவும்).இறுதியாக இறக்குவதற்கு முன் வெங்காயத்தையும் கருவேப்பிலையையும் வைத்து சற்று நசித்து(அரைவாசி அரைத்து) அவை எல்லாவற்றோடும் சேருமாறு செய்யவும்.(வாசமும் சாரமும் அப்போது தான் தூக்கலாக இருக்கும்.) மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் ஒன்றாக வழித்து நடுவில் ஒன்றாகச் சேர்த்து குளவியை உயர்த்தி , குளவியிலிருக்கும் சம்பலையும் அம்மியிலிடுக்கும் சம்பலையும் ஒன்றாக்கி வட்டமாக உருட்டி கழுவிய கிண்ணமொன்றில் வைக்கவும்.(அம்மி குளவியை கழுவி விட மறக்க வேண்டாம்)

மாங்காய் சம்பல் ரெடி.
இது புளிப்பும் உறைப்புமாக நல்லொரு சுவை பேசும்.

பிற்குறிப்பு;

* இதற்கு தேசிப் புளி விடத்தேவை இல்லை.
* இது இட்லி தோசையைத் தவிர மற்றய பாகங்களுக்கு உகந்தது.

*கீழ் வரும் சம்பல் வகைகளுக்கு தேசிப்புளி பாதி மூடி வேண்டும்.
*இதில் மாங்காய்க்குப் பதிலாக ஒரு கை விரலளவு இஞ்சி வைத்தரைத்தால் இஞ்சிச் சம்பல் ரெடி.
*இவை இரண்டும் வைக்காமல் அரைத்தால் சிவப்புச் சம்பல் ரெடி.
*செத்தல் மிளகாய்க்குப் பதிலாக பச்சைமிளகாய் வைத்தரைத்தால் பச்சைச் சம்பல் ரெடி.
*செத்தல் மிளகாயை பொரித்து உரலில் இடித்தால் இடிச்ச சம்பல் ரெடி.இதற்கு பழப்புளி விட வேண்டும்.தாளித்தும் போடலாம்.தோசைக்கு உகந்தது.
*அடுப்பில் வெங்காயம்,,செத்தல் மிளகாய்,கடுகு, சீரகம்,கருவேப்பிலை போட்டு தாளித்து, அளவான தண்ணீரில் பழப்புளி கரைத்து விட்டு, ஒரு கொதி வந்ததும் அதற்குள் அரைத்து வைத்த சம்பலைக் கலந்து ஒரு சூடு வந்ததும் இறக்கினால் சட்னி ரெடி.இது இட்லிக்கு.

ஆருக்கு என்ன வேணும்?
Author: வந்தியத்தேவன்
•12:30 AM
இப்பத்தான் எங்கட வேலணை வலசுண்ட கூழ் குடித்துவிட்டு உங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அப்படியே போற வழியில் இடியப்பமும் சொதியும் சாப்பிட்டுக்கொண்டுபோங்கோ.

பொதுவாக இடியப்பத்தை காய்ச்சல்காரர்டை சாப்பாடு என்பார்கள். ஏனென்றால் பெரும்பாலும் காய்ச்சல் நேரம் இடியப்பம்தான் சாப்பிடுவது. இதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு தோசை இட்டலிபோல இடியப்பம் அவ்வளவு கடினமான (ஹார்ட்) சாப்பாடல்ல. கொஞ்சம் லைட்டான சாப்பாடு. இடியப்பம் உடனடியாக சமிச்சும்போம் இதனாலும் பெரும்பாலானவர்கள் வெளியிடத்திற்க்குச் சென்றால் இடியப்பம் சாப்பிடுவார்கள்.

எங்கட நாட்டிலையே இடியப்பம் சொதி தேங்காய்ப்பூச் சம்பல் உழுந்துவடை கூட்டணி சரியான பேமஸ். இலங்கையின் சகலபகுதியிலும் கிடைக்கும் சாப்பாடுகளில் இதுவும் ஒன்று. சிங்களப்பகுதியில் கூட இடியாப்பையும் கிரி ஒதியும் என அழைப்பார்கள்.

சொதி என்பது தேங்காய்ப்பாலில் செய்யப்படும் ஒரு தண்ணி உணவு. சரியான விளக்கம் தெரியவில்லை. சைவச் சொதி என்றால் வெங்காயம், கறிவேப்பிலை, சில இடங்களில் தக்காளி எல்லாம் போடுவார்கள். மச்சச் சொதி என்றால் மீன் சொதி பிரபலம். கடைகளில் கூடுதலாக சைவச் சொதிதான் கொடுப்பார்கள்.

தமிழகத்தில் சட்னி எனப்படும் உணவுதான் நம்ம நாட்டில் சம்பல் என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றது. இதிலும் அரைச்ச சம்பல் இடிச்ச சம்பல் என வகைகள் உண்டு. அத்துடன் வெள்ளைச் சம்பல் சிவப்புச் சம்பல் என கலரைவைத்துக்கூட சம்பல் உண்டு. வெள்ளைச் சம்பல் தேங்காய்ப்பூவுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைப்பது. சிவப்புச் சம்பல் தேங்காய்ப்பூவுடன் சிவத்த் செத்தல் மிளகாய் போட்டு அரைப்பது. சம்பல் பற்றிய மேலதிக விபரங்களை சமையல் ஆச்சிகள் தருவார்கள். எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்.

வடை என்றால் உடனே ஞாபகத்திற்க்கு வருவது யாழ்ப்பாணம் மலாயன் கபே வடையும் கொழும்பு சரஸ்வதி லொட்ஜ் வடையும் தான். ஒருமுறை மாத்தளையில் ஒரு சைவக்கடையில் சுடச்சுட பருப்பு வடை சாப்பிட்டேன் நல்ல உருசியும் மலிவும். இப்போ ஒரு வடை 30 ரூபாவிற்க்கு விற்கிறார்கள். திருகோணமலையில் ஐயர் கடை தோசை நல்ல பேமஸ்.

நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் சைக்கிளில் சென்ற காலத்தில் வல்லை கழிந்ததும் ஆவரங்காலிலோ கொஞ்சம் சைக்கிள் ஓடத் தெம்பிருந்தால் கோப்பாயிலோ ஒரு கடையிலை இறங்கில் காலையிலை என்றால் இடியப்பம் சொதி வடையும் பின்னேரத்தில் என்றால் வடையும் பிளேன் டீயும் குடித்துவிட்டு நல்ல உசாராக பயணம் செய்வது.

யாழ்ப்பாணம் ட‌வுணில்(டவுணா? ரவுணா?)சைவம் என்றால் மலேயன் கபேயிலும் மச்சம் என்றால் வேறுகடையிலும் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அபப்டியே லிங்கத்தில் ஒரு ஐஸ்கிறீமையும் குடித்துவிட்டு ஒரு பீடா சப்பும் இன்பம் மீண்டும் எப்போ வரும்.
Author: வலசு - வேலணை
•8:43 AM
மணியாச்சிட்ட (மணிமேகலா) கூழ்காய்ச்சச் சொல்லிக்கேட்டா, அவா இழுத்தடிச்சுக்கொண்டே போறா. அவ எப்ப கூழ் காய்ச்சிறாவோ? அப்ப எனக்கு குடிக்கிறதுக்கு நேரம் கிடைக்குமோ? இதெல்லாத்தையும் இந்தக்காலத்தில சொல்லேலாது கண்டியளோ. அதுதான் இப்ப நேரம் இருக்கேக்க சும்மா நானும் கூழ்காய்ச்சுவம் எண்டொரு சின்ன ஐடியா. அம்மாணச் சொல்லுறன் எனக்கு முன்னப்பின்ன கூழ்காய்ச்சிப் பழக்கமில்லை. எப்பிடிக் கூழ்காய்ச்சிறதெண்டும் தெரியாது. ஆனா நல்லா முக்குமுட்டக் குடிக்க மட்டும் தெரியும். இப்பதான் முதல்முறையா கூழ்காய்ச்சிப் பாப்பமெண்டு.

நீங்களே சொல்லுங்க பாப்பம் (பார்ப்போம்), ஒடியல்கூழ் குடிச்சு எவ்வளவு காலமாச்சு. இப்ப நெச்சாலும் வாயூறுது கண்டியளோ. 2004-இல கொழும்பில இருக்கேக்குள்ள, வெள்ளவத்தையில இருக்கிற நளபாகத்தில ஒடியல்கூழ் விக்கிறவங்கள் (விற்கிறவர்கள்) எண்டு சொல்லி நானும் என்ரை சிநேகிதப்பெடியன் ஒருத்தனுமாச் சேர்ந்து கூழ் குடிக்கப் போனா, அதுக்குள்ள ஒரு பெரிய நண்டும் மிச்சமெல்லாம் மீன்செதில்களுமாத் தான் கிடந்துது. உறைப்பெண்டா, இப்ப நெச்சாலும் (நினைத்தாலும்) சொண்டெல்லாம் எரியுது. அடுத்தநாள் விடியக்காலமை கக்கூசுக்குள்ள போயிருக்கையுக்கை கீழையிருககிற வாயும் எரிஞ்சுதெண்டதையும் சொல்லோணுமோ? இல்லைத்தானே!

மணிஆச்சி! நீங்க ஆறுதலா நல்ல ரேஸ்ற்றா கூழ்காச்சித் தரோணும். மறந்திடாதைங்கோ. இது சும்மா இப்போதையத் தினவுக்குத்தான்.

கூழ்காச்சுறதெண்டு சொன்னோடனை (சொன்னவுடன்) தான் நாபகம் (ஞாபகம்) வருது, அதுக்கு முதலில பச்சை ஒடியல் மாவும் எல்லோ வேணும். அதுக்கு இஞ்ச எங்க போறது. போன சனிக்கிழமைதான் சிநேகிதப் பெடியன் ஒருத்தன் வீட்ட போகேக்கை அவன் கொடிகாமத்தில இருந்து மாமி கொண்டந்ததெண்டு சொல்லி புழுக்கொடியல் கொஞ்சம் தந்துவிட்டவன் வீட்ட கொண்டுபோய்ச் சப்பெண்டு (சாப்பிடு என்று). அத இடிச்சு மாவெடுத்தாலும் ஒடியல்கூழுக்குப் பாவிக்கேலாது (பயன்படுத்த முடியாது). அப்ப ஒடியல்மாவுக்கு என்ன செய்யிறது?

ஆ! நாபகம் (ஞாபகம்) வந்திற்று. போனமாசம் கடைசி ஞாயித்துக்கிழமை (31-05-2009) பின்னேரம் போல இன்னொரு தெரிஞ்ச அம்மா (அவாவை மணி அக்கா எண்டும் கூப்பிடுறவையாம்) வீட்ட போனனான். வெளிக்கிடேக்க சொன்னன் இண்டைக்கு இரவு மலேசியா போறனென்டு. அப்ப அவா, இலங்கயிலயிருந்து ஒடியல்மா வந்திருக்கு. அங்க மலேசியாவில ஆருக்கும் குடுக்க வேணுமோ எண்டும் கேட்டவா. அவவிட்டக் கொஞ்ச ஒடியல்மா தருவியளோ எண்டு கேட்டுப்பாக்கலாம்.

அட! சத்தியமாச் சொன்னா நம்ப மாட்டியள்! அவவுக்குப் பாருங்கோ ஆயுசு நூறு. இப்ப இத எழுதிக் கொண்டிருக்கேக்க அவவிட்டவிருந்து email ஒண்டு வருகுதெண்டு google talk காட்டுது. கொஞ்சம் பொறுங்கோ, வந்து கதைக்கிறன்.

அப்பாடா! உங்களுக்கும் அடிச்சுது luck பாருங்கோ!. அவவிட்ட கூழ்காச்சுறது எப்பிடியெண்டொரு குப்பி (அட! இது எங்க ஊரு பாசையில்ல. குப்பியெண்டுறது கம்பஸ் பாசையில, விளங்கப்படுத்திறது எண்டு அர்த்தம்) எடுத்தாச்சு. அதோட வாற சனிக்கிழமை வந்தா ஒடியல்மாவும் தந்துவிடுறதெண்டு சொல்லியிருக்கிறா. கொஞ்சக்காலம் பொறுத்தீங்களெண்டால் அவாவையும் எங்கட முத்தத்துக்குள்ள (முற்றத்திற்குள்) கூட்டிக் கொண்டு வந்திரலாம். இப்பதான் அவா தமிழில type பண்ணிப் பழகிறா. அந்தக்காலத்தில அவாவின்ரை கதைகள் எல்லாம் வீரகேசரிப் பேப்பரிலையெல்லாம் வந்திருக்கு. இப்பையும், இந்த தள்ளாடுற வயதிலையும் அவவுக்கு இருக்கிற ஆர்வம், என்னை வியக்க வைக்குது. அவா ஒரு தமிழ்ப் பண்டிதரும் கூட. முடிஞ்சால் அவாவைப் பற்றியே பிறகு ஒரு பதிவிடுகிறேன். அப்ப என்ன மாதிரி நீங்களெல்லாம் வாற சனிக்கிழமை ஒடியல்கூழ் குடிக்க வருவியள்தானே?

முந்தி எங்கட ஊரில, வீட்டில ஒடியல்கூழ் காய்ச்சுறதெண்டால், அண்டைக்கொரு பெரிய கொண்டாட்டம்தான். மீன், நண்டு, றால் (இறால்) எண்டு எல்லாம் வேண்டுறதே (வாங்குவதே) ஒரு பெரிய பம்பல் எங்களுக்கு. நாங்களெல்லாம் அப்ப சின்னப்பிள்ளையள். மாமாவையோட மீன் வாங்கிறதுக்காகக் கடலுக்கே போயிருவம். பொதுவா கூழ்காய்ச்சிறதுக்கு மீன் வேண்டுறதெண்டா தெற்குக் கரைக்கடைக்குத் (கடற்கரை) தான் போறது வழக்கம். அங்கதான் நல்ல கலவாய் மீன் கிடைக்கும். வேறமீனுகள் வேண்டுறதெண்டால் கிழக்குக் கரைக்கடைக்குத்தான் (இதை செட்டிபுலம் கடற்கரை என்றும் சொல்வதுண்டு) போறனாங்கள். எனக்கு கலவாய்மீனக் கண்ணிலயும் காட்டக்கூடாது. அதப் பொரிச்சாக்கூட விழுவிழெண்டு இருக்கும். எண்டாலும் கூழுக்குள்ள போட்டா மட்டும் ஒண்டும் கதைக்காம குடிச்சிடுவன். சிலவேளைல, புங்குடுதீவுப் பாலத்தில போயும் மீன் வேண்டுறது வழக்கம். அதில வெடிபோட்டும் மீன்பிடிக்கிறவை. வெடிபோட்டுப் பிடிக்கிற மீனுகளை அண்டைக்கே சாப்பிட்டிரோணும். அடுத்தநாள் வைச்சாப் பழுதாப் போயிரும். மீன், சின்னநண்டு, கூனிறால் எல்லாம் வாங்கியாந்து (வாங்கிவந்து) வீட்டில சமைக்கச் சொல்லிக் குடுத்திற்று சாட்டி வெள்ளக் கரைக்கடைக்கு குளிக்கப் போயிருவம். குளிக்கப் போறதெண்டா சும்மா பக்கத்து வீடுகளில இருக்கிற அண்ணமார், மாமாமார் எல்லாரும் சேந்தே (சேர்ந்தே) போறது வழக்கம். சைக்கிளில தான் போறனாங்கள். போய்வாறதுக்குள்ள ஒரு சின்ன சைக்கிளோட்டப்போட்டியும் நடந்திரும். குளிச்சிற்று வரேக்குள்ள அங்கனேக்குள்ள எங்கையும் வடலிப் பனைகளைக் கண்டா, இறங்கி பச்சோலையும் வெட்டிக்கொண்டு வாறது வழக்கம். பிறகு அதை வீட்டில வைச்சு சத்தகக்காம்பால கிளிச்சு பிளா (இந்தப் பிளாவிலதான் கள்ளும் குடிக்கிறது) செய்து கொதிக்கக்கொதிக்க கூழ அதுக்குள்ள ஊத்திக்குடிச்சால், பனையோலையின்ர வாசமும் சேர, சொல்லி வேலையில்ல.
Author: யசோதா.பத்மநாதன்
•1:42 AM
19.06.09 வெள்ளிக் கிழமை இண்டைக்கு. ஈழத்து முற்றக்காரர் எல்லாரும் இண்டைக்கு எனக்குச் சொந்தமாப் போச்சினம்.சொந்த பந்தம் எண்டு இருக்கிறது எவ்வளவு சந்தோஷம்!இண்டைக்கு அவை எல்லாரும் என்னட்ட வந்தாலும் வருவினம்.நான் அவைய வரவேற்கத்தானே வேணும்.

அதால இருக்க, நிக்க இப்ப எனக்கு நேரமில்லை.நாற்சார வீடெண்டா சும்மாவே! முதுகொடிஞ்ச வேலை.வீடு தூசு தட்டி,கூட்டி, சீமேந்துத் தரை கழுவி,சாம்பிராணிப் புகை போட்டு,சாமிக்கும் பூவும் விளக்கும் வைச்சு,வெளி முற்றமும் கூட்டிப் பெருக்கி, புழுதி கிளம்பாமல் தண்ணி தெளித்து,தலை வாசலில் மாவிலைத் தோறணமும் கட்டியாச்சு.முற்றத்தில மல்லிகைப் பூக்கள் பந்தலுக்குக் கீழ கொட்டுண்டு கிடக்குது தான். பொறுக்கி எடுக்க இப்ப நேரமில்லை.அதப் பிறகு பாப்பம்.

பால் வாங்க வாற அம்மானின்ர சின்னப் பொடியன் இன்னும் வரக் காணன். வந்தால் மதிலில ஏத்தி உயரத்தில இருக்கிற செவ்வரத்தம் பூக்களை ஆய்ஞ்சு தரச் சொல்லலாம். அவன் அந்தக் காலமையிலையும் பூவரசமிலையில பீப்பீ ஊதிக் கொண்டுதான் வருவான்.சொல்வழி கேளான்.

தூரத்தில கோயில் மணி கேக்குது.யாரோ ஒரு கறுப்புத் தாத்தா வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நெத்தீல கையில மார்பில எல்லாம் வீபூதி பூசிக் கொண்டு உரத்த குரலில தேவாரம் பாடிக் கொண்டு றோட்டால போகிறார்.மதிலைத் தாண்டி றோட்டில எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிற நித்திய கல்யாணிச் செடியள் பூத்திருக்கிறதெல்லாம் இந்தத் தாத்தாவுக்காகத் தான்.தன்ரை பைக்குள் அதுகளப்போட்டுக் கொண்டு அவர் நடந்து போறார்.

பள்ளிப் பிள்ளைகளும் இப்ப பள்ளிக் கூடம் போகத் தொடங்கி விட்டுதுகள்.நேரம் இப்ப 8 மணி சொச்சமாக இருக்க வேணும்.சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னி திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாப் போறது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்.

எங்கட ஐயாவும் விடிய வெள்ளன புலவுக்குப் போட்டார்.அது அவற்ற முதுசக் காணி.சங்கதி என்னண்டா அவர் காம்புக் சத்தகத்தையும், உழவாரத்தையும்,அலுவாங்கையும் கொண்டு போனாரோ தெரியேல்லை.அசண்டையீனமா விட்டிட்டுப் போட்டார் போல கிடக்கு. கதியால் போட என்ன செய்யப் போறாரோ தெரியாது.அவருக்கும் இப்ப மறதி கூடிப் போச்சு.இப்ப காதும் சரியாக் கேக்கிறயில்ல.ஆனா பாவம், செரியான பிரயாசை.

வெய்யில் ஏறிவிட்டுது இன்னும் பினைஞ்ச பினாட்டையும் புளியையும் நடு முத்தத்தில வைக்கேல்லை எண்டு அம்மா வேற அங்க பிலாக்கணம் பாடத் தொடங்கீயிட்டா.அவவின்ர பூராடம் கேக்கிறதெண்டா அவவின்ர சிநேகிதி பொன்னம்மாக்கா,பொட்டுக்கால வந்து தலைவாசல்ல நிண்டு ஒரு குரல் குடுக்க வேணும்.அப்ப பாக்க வேணும் நீங்கள் அவவ.

இண்டைக்கு நல்லா வெய்யில் எறிக்கும் போல தான் கிடக்கு.புளுக்கொடியலையும் காய விட்டா நல்லது தான்.அதுக்கு முதல் வெத்திலத்
தட்டத்தையும்,பாக்குவெட்டியையும்,பாக்குரலையும் சாவியையும் கொண்டு போய் அவவின்ர கையில் குடுத்துப் போட வேணும்.இல்லாட்டிக்கு அவவிட்ட வாய் குடுத்துத் தப்பேலாது.

ஐயாவுக்கு அடுப்பில குரக்கன் புட்டு அவியுது.அவருக்குச் சலரோகம் கன காலமா இருக்குது.இவ்வளவு காலமும் சாப்பாட்டால தானே கட்டுப் படுத்திக் கொண்டு வாறார்.குரக்கன் புட்டும் எப்பன் பழஞ் சோறும் பழங்கறியளும் கொஞ்சம் சம்பலும் சட்டிக்கை போட்டுக் குழைச்சுப்போட்டு 2 மிளகாய்ப்பொரியலையும் தட்டில வச்சு மூடிவிட்டா மனுசன் வந்து சாப்பிடும்.பாவம் களைச்சுப் போய் வாற மனுசன்.

இனி நானும் நிண்டு மினைக்கிட ஏலாது. மூண்டாவது வளவுக்கை போய் நல்ல தண்ணி அள்ளிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு,மத்தியானப் பாட்டத் தொடங்க வேணும்.வறண்ட பூமி தானே!நிலம் எல்லாம் சுண்ணாம்புக் கல்லு.அதால சவர் தண்ணி.எண்டாலும் சனம் நல்லாப் பாடுபடுங்கள்.

அடுத்த வீட்டு பொன்னம்மாக்கன்ர மே(மோ)ள் பாவாடை ஒண்டு தச்சுத் தாங்கோ எண்டு முந்த நாள் துணியை தந்திட்டுப் போனவள்.குடைவெட்டுப் பாவாடையோ சுருக்குப் பாவாடையோ எண்டு கேக்க மறந்து போனன்.இனி,எக்கணம் வந்து துள்ளப் போறாள்(குதிக்கப் போறாள்)இன்னும் தைக்கேல்லை எண்டு.தண்ணி அள்ளப் போகேக்கை ஒருக்கா கண்டு கேக்க வேணும்.

அது சரி,நீங்கள் எல்லாம் வருவீங்கள் எல்லே? அதால முதலே வேல எல்லாத்தையும் முடிச்சுப் போட்டன் எண்டா நல்லது.பிறகு இடயில ஒருக்கா போய் செல்வி மாட்டுக்கு கழுநீர் தண்ணி வைக்கிறது மட்டும் தான்.மாத்தியானம் ஒருக்கா மாத்தியும் கட்ட வேணும்.சில வேளை நீங்கள் இருக்கிறீங்கள் எண்டுட்டு அம்மா அதச் செய்தாலும் செய்வா.

இஞ்ச பாருங்கோவன்,கோடியில செல்வி குரல் குடுக்குது.இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப் போட்டுது.பாவம் அவளும் இளங் கண்டுக்காறி.உண்ணாணை அது ஒரு லட்சுமி தான்.சொம்பு நிறைய அது தாற பாலக் கறந்து,மண்சட்டியில, சாணத்தால மெழுகின விறகடுப்பில வச்சுக் காச்சினா வாற வாசம் இருக்கே அதுக்கு ஈடு இணை இல்லை.

நீங்கள் எல்லாரும் வாருங்கோ! உங்களுக்கு கொஞ்சம் கற்கண்டு போட்டுக் காச்சி, ஆத்தி அளவான சூட்டோட மூக்குப் பேணியில பக்குவமா ஊத்தித் தாறன்.அதை ஒருக்கா அன்னாந்து குடிச்சுப் பாருங்கோ. பிறகு நீங்களே சொல்லுவியள் நல்லா இருக்கெண்டு.

நீங்கள் கட்டாயம் எல்லாரும் வருவீங்கள் தானே? நீங்கள் வருவீங்கள் எண்டுதான் இவ்வளவு ஆரவாரம்.மறக்கக் கூடாது.வந்திட வேணும்.


குறிப்புகள்:


செட்டாக - நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி - அகில்

பொறுக்கி - கைகளால் ஒன்றொன்றாக எடுத்தல்

அம்மான் - மாமா

பொடியன் - பையன், அதன் பெண்பால் பொடிச்சி/பெட்டை

சொல் வழி - புத்திமதி

கேளான் - கேட்க மாட்டான்

சொச்சமாக - கிட்டத்தட்ட

கொட்டுண்டு - சிந்துப் பட்டு

ஆய்ந்து - பிடுங்கி

காணன் - காணவில்லை

வீபூதி - திருநீறு

பள்ளி - பாட சாலை

சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்

குருத்துகள் - இளம் பிள்ளைகள்

புலவு - தோட்டம்

முதுசம் - பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி - புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் - கவலையீனம்

கதியால் - வேலி

காம்புக் சத்தகம் - ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் - குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு - ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை - முயற்சி

புளுக்கொடியல் - பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி - பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் - வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி - பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் - புறுபுறுத்தல்

பூராடம் - விடுப்பு,விண்ணாணம்

கோடி - கொல்லைப் புறம்

பொட்டு - வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை - உன் மீது ஆணையாக

எப்பன் - கொஞ்சம்

வளவு - காணி

சவர் - உப்பு

எல்லே - அல்லவா

ஏலாது - முடியாது

மே(மோ)ள் - மகள்

பாவாடை - முழங்கால் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் - இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் - கோவிக்கப் போகிறாள்

போகேக்க - போகும் போது

களு நீர் - சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் - வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி - பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அன்னாந்து - மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் - ஆர்ப்பரிப்பு

( இவை யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும், பழக்க வழக்கங்களும்,வாழ்க்கை முறையும், நாம் நாளாந்தம் பாவிக்கும் சொற்களும் ஆகும்.)

ஏனைய பிரதேசங்களின் காலை, மாலை நேரங்களையும் ஆண்களின், பெண்களின் சிறுவர்களின் வாழ்க்கை முறைகள், எண்ணப் பாங்குகள் பற்றியும் அறிய ஆவல். இது முன்பொரு முறை என் பதிவொன்றில் எழுதப் பட்டது தான். சிறு மாற்றங்களோடு அறிமுகப் பதிவாக இங்கு இடப் படுகிறது.
Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•3:34 AM
இந்தச் சனம் வந்து சாப்பாட்டப் பத்தி எழுத முதல் நான் வந்துத்தன் கிளியேய்.

உங்களுக்குத் தெரியுமா, மட்டக்களப்பிலருந்து கொழும்புக்கும், இலங்கைர வேற பகுதிகளுக்கும் அடுக்கடுக்காத் தயிர் போற. றெயினிலயும் பஸ்சிலயும் இதுகளுக்குத் தனி இடம். பசுந்தயிரும் போகும். எருமைத்தயிரும் போகும். எருமைத்தயிர் கெட்டியா இரிக்கும். அந்தத் தயிர்ச்சட்டியள என்னத்தால கட்டி இரிக்கிற என்டு தெரியுமா? தென்னோலையால!! ஓம் மனே, வடிவா, சட்டி அசங்காமக் கொள்ளாம இரிக்கிற மாதிரி தென்னோலை உறியில போட்டுக் கட்டுவாங்க 8-10 சட்டியை ஒண்டுக்கு மேல ஒண்டு அடுக்கி. பாக்க என்ன வடிவு. காட்டுறத்துக்குப் படம் தேடினதான்.. கிடைக்கல்ல. மட்டக்களப்புக்கு வேற ஊர்க்காராக்கள் வந்தா அவங்க ஊருக்கெண்டுத்து கொண்டு போற சாமான் சக்கட்டுல தயிர்ச்சட்டி கட்டாயம் இரிக்கும்.

தயிர் சாப்பிடுறது மட்டக்களப்பில தனி விதம். மற்ற இடத்தாக்கள் நாங்க தயிர் சாப்பிடுறத்த ஆச்சரியமாப் பாக்கிற. ஏனெண்டு சொல்றன்.

மட்டக்களப்பார், தயிர் சாப்பிடுறண்டா தயிருக்குச் சீனி வேணும். வாழைப்பழமும் வேணும். சோத்தோட சாப்பிடுற எண்டா நீங்க நினைக்கப்படா சோறு கறியோட சேத்து தயிர் சீனி வாழப்பழமெல்லாம் குழைச்சித் தின்றண்டு. அப்பிடி இல்ல. சோறு கறி சாப்பிட்ட பிறகு, அந்தக் கோப்பையிலயே இன்னொருதரம் போல சோறு போட்டு தயிரும், அதுக்குச் சீனியும் வாழப்பழமும் சேத்துச் சாப்பிடுற. இஞ்ச வந்தும் நான் அதையே செய்ய, சனங்கள் ஒரு சாங்கமாப் பாக்குங்கள். நாம அதக் கண்டாலும் காணாத மாதிரி நடத்திறதான். எனக்கெலுவா தெரியும் அப்பிடிச் சாப்பிடுற ருசி எப்பிடியண்டு!! இப்ப சில நெருங்கின ஆக்களுக்குப் பழகித்து. நான் சோறு சாப்பிட்டு முடிய, தயிரெடுத்துத்து சீனிப் போத்தலத் தேடினா ஒரு குருவி ஏனெண்டு பாக்கிறல்ல.

சோறோட சேத்துச் சாப்பிட விருப்பமில்லாட்டி, சாப்பிட்டொழிஞ்ச கையோட தனிய கிண்ணத்தில தயிருஞ் சீனியும் வாழப்பழமும் போட்டுச் சாப்பிடுற. சில பேர் வடிவா இருக்குமெண்டுத்து பழத்தை அரிஞ்சும் தாற. சிலவேள வாழப்பழம் கிடைக்காமப் பொயித்தண்டா தயிரும் சீனியும். ஆனா தயிர் சாப்பிட்டமாதிரியே இரிக்கா.

சா!! என்ன திறமான சாமான் மட்டக்களப்புத் தயிர். அதப் பத்திக் கதைச்சோணயே சாப்பிடோணும் போல கிடக்கு.. மாச்சல் படாம போய் தயிரும் வாழப்பழமும் வாங்கித்து வாறயா மனே? நல்ல புள்ளெலுவா..

----------
அ.சொ.பொ விளக்கம்:
மாச்சல் (மாய்ச்சல்) - சோம்பல்
புள்ளெலுவா (புள்ள எலுவா) - பிள்ளை அல்லவா
திறமான - சிறந்த