Author: யசோதா.பத்மநாதன்
•4:58 AM
கோயில், திருவிழா,வரலாறு, கொண்டாட்டம் எண்டு இருக்கிற இந்த நேரத்தில பேய்க்கதை கதைக்கிறன் எண்டு ஒருதரும் என்னை பேசாதைங்கோ.பானையில இருக்கிறது தானே அகப்பையில வரும்!:)

தமிழர்கள் வாழ்வில் இறப்புக்குப் பின் வாழ்வு,பேய், பிசாசு, முனி,சுடலைமாடன் பற்றிய நம்பிக்கைகள் பல பல நூற்றாண்டுகளாக நிலவி வருகின்றன.அவை மதம் சார்ந்தும் இருந்து வந்துள்ளன.எனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்களுடய அபிப்பிராயங்களைப் முடிந்தால் பதிந்து செல்லுங்கள்.

அது என் பாடசாலைக் காலம்.6,7,8,9 ஆம் வகுப்புக் காலங்களாக இருக்கும். நான் படித்தது ஒரு எல்லைப் புறத்துக் கலவன் பாடசாலை. அங்கு பாடசாலை ஆரம்பித்த பின் 5 நிமிடங்களும்; மதிய இடைவேளையின் பின் 5 நிமிடங்களும் நாம் அமைதியாக இருக்க வேண்டும். அதனைக் கவனிக்க மாணவத் தலைவர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் நிற்பார்கள்.(உயர் வகுப்பு மாணவர்கள்). எங்கள் வகுப்புக்கு ஒவ்வொரு முறையும் விக்னேஸ்வரன் என்று ஒரு அண்ணர் வழக்கமாக வருவதும், ஒவ்வொருமுறையும் நான் கதைத்து என்னை எழுப்பி விடுவதும் நாளாந்த வழக்கம்.பிறகு அவர் என்ன ஆனார் என்று எனக்குத் தெரியவில்லை.

காலங்கள் கடந்தன.6,7 வருடங்களாயிற்று. காலம் என்னை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தது. ஒரு விடுமுறைக் காலமொன்றில் மீண்டும் அந்தக் கிராமத்துக்கு வந்தேன்.நாட்டுப் பிரச்சினைகள் வலுப்பெற்று போக்குவரத்துகள் துண்டிக்கப் பட்டிருந்த காலமது.எனக்கு என் தந்தையார் புதிய லுமாலா சைக்கிள் வாங்கித் தந்திருந்தார்.மகிழ்ச்சிக்கோர் அளவில்லை.அதே நேரம் என் தங்கைக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைத்திருந்தது. அந்த அனுமதிப் பத்திரம் நாம் கொடுத்திருந்த கொழும்பு முகவரி ஒன்றுக்கு வந்திருந்தது.அது கொழும்பிலிருந்து வந்த ஒருவரிடம் கொடுக்கப் பட்டு, அவர் தன் வீட்டுக்கு வந்து அதனைப் பெற்றுச் செல்லும் படி தகவல் அனுப்பி இருந்தார்.

நான் ஒற்றைக்காலில் நின்று நான் போய் பெற்று வருகிறேன் என்று அனுமதி பெற்றுக் கொண்டேன். காரணம் புதிய லுமாலா சைக்கிளில் ஓடுவது தான்.அப்போது நேரம் மாலை 3,4 மணி இருக்கும். எனக்கு அந்தப் பாதை அவ்வளவு பழக்கமில்லாவிட்டாலும் போவேன் என்று சொல்லி விட்டேன். 6 மணிக்குப் பின்னர் அதனால் தேக்குமரக் காட்டினை ஊடறுத்து யானைகள் வருவது வழக்கம். நிண்டு மினைக்கெடாமல் உடனடியாக வந்து விட வேண்டும் என்று அப்பா கூறினார். நானும் பெருமாள் மாடு மாதிரித் தலையாட்டி விட்டுப் புறப்பட்டேன்.

சொன்னபடி கடிதத்தைப் பெற்றுக் கொண்டு உல்லாசமாக வந்து கொண்டிருந்தேன். நேரம் 5சொச்சமாக இருக்கும். காட்டுப் பிரதேசம். ஒற்றையடிப் பாதை. யாருமில்லை. ஆனால் எனக்குப் பயமும் இல்லை. தேக்கங்காட்டைக் கடந்து விட்டேன்.சற்றுத் தூரம் வந்த பின் தான் கவனித்தேன். நான் வருகின்ற பாதை பிழையானது என்று.இப்போது இருட்டு பூதாகரமாகத் தெரியத் தொடங்கியது.திரும்பிப் போவது சாத்தியமில்லை என்று தோன்றியது. காரணம் யானைகளை நான் சந்திக்கக் கூடும்.எனவே தொடர்ந்து அதே பாதையில் போவது என்றும்; நிச்சயமாக அது ஒரு கிராமத்தைச் சென்றடையும் என்றும் நம்பினேன். சைக்கிளை வேகமாக உளக்கத் தொடங்கினேன்.

கிட்டத்தட்ட 6 மணியளவில் ஒரு கிராமத்தை வந்தடைந்தேன். தெய்வாதீனமாக அது எனக்குத் தெரிந்த அயல் கிராமம் தான். அத்துடன் அங்கிருந்து யாழ் கண்டி வீதியூடாக என்வீட்டுக்குப் போகவும் எனக்குத் தெரியும்.சுமார் 15 நிமிடங்களில் வீட்டுக்குப் போய் விடலாம். மனதில் ஒரு நின்மதி. தூரத்தே மனிதர்களும் தெரிய ஆரம்பித்தார்கள்.

திடீரென்று பின்னால் விக்னேஸ்வரன் அண்ணர் சைக்கிளில் வந்தவாறு என்னை என் இயற் பெயர் சொல்லி அழைப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். காணவில்லை. என்னடா இது, கூப்பிட்டார் அதற்குள் எங்கு போய் விட்டார் என்று நினைத்தவாறு போக சற்று அப்பால் அவரது சகோதரி சீதாராணி என்று பெயர். அவ மாடுகளைப் பட்டிகளில் சேர்ப்பித்துக் கொண்டு நின்றார்.படிக்கிற காலங்களில் என் பஸ்களில் வரும் 2 வகுப்புக் கூடப் படித்தவர் அவர்.விக்னேஸ்வரனின் தங்கை என்று எனக்குத் தெரியும்.

அவருக்கு என்னைக் கண்டதும் ஆச்சரியம். பல வருடங்களின் பின் (குறைந்தது 4,5 வருடங்களாவது இருக்கும்)கண்டதால் நலம் விசாரித்தார். நானும் நின்று நடந்ததைச் சொன்னேன். பேச்சு வாக்கில் அவரது அண்ணர் விக்னேஸ்வரன் அண்ணரை வளைவான முடக்கொன்றில் கண்டது பற்றியும் அவரை பிறகு காண முடியவில்லை என்பது பற்றியும் பிரஸ்தாபித்தேன்.அவர் சாதாரணமாகக் கதைத்து விட்டு வீட்டுக்கு வந்து தேனீர் குடித்து விட்டுச் செல்லுமாறும் தான் கூட வந்து என் வீட்டில் விட்டு விடுவதாகவும் கூறினார்.

நான் கூடச் சென்று தேனீர் குடிக்கும் போது எங்கு தன் அண்ணரைக் கண்டது என்று வினவினார். நான் அந்த குறிப்பிட்ட பகுதியை விபரித்தேன். அதற்கு அவர் தன் அண்ணன் சில வருடங்களுக்கு முன் மாற்று இயக்கம் ஒன்றில் இருந்ததற்காகப் புலிகளால் சுடப்பட்டு இறந்தார் என்றும்; நான் கடந்து வந்த அந்த குறிப்பிட்ட இடம் ஒரு சுடலை என்றும்; அங்கு தான் தன் அண்ணர் பின்னர் புதைக்கப் பட்டார் என்ற தகவலையும் சொன்னார்.

நம்புங்கள். அது வரையும் இந்தத் தகவல் ஒன்றும் எனக்குத் தெரியாது.

இதிலிருந்து நான் கண்டு கொண்ட உண்மை,

1.இறப்புக்குப் பின்னும் உயிர் அழிவதில்லை.

2.அதற்கென்று சில சக்திகள் உண்டு.

3.எங்களை அது இனங் கண்டு கொள்கிறது.

மொத்தத்தில் பேய்கள் உண்டென்ற பல தமிழர் நம்பிக்கையில் எனக்கும் நம்பிக்கை உண்டு.


உங்கள் அபிப்பிராயங்களையும் சொல்லிச் செல்லுங்கள்.

(யாரும் பயம் கொள்ள வேண்டாம்)
Author: shangar
•7:44 AM
நாவூறு
ஒருவரைப் பார்த்து ஆசைப்படல் அல்லது ஒருவரின் உயர்ச்சியை பார்த்து பிரமித்தல் என்பவற்றினால் சம்பந்தப்படடவருக்கு ஏதேனும் சுகயீனம் அல்லது அவரின் தொழில் பின்னடைதல் என்பன நடந்தால் நாவூறுபட்டுவிட்டது என்று(கண்படுதல்) கூறுவார்கள்.
உதாரணமாக ஒரு குழந்தையை புதியவர் ஒருவர் பார்த்தார் என்று வைத்துக்கொள்வோம். அன்று அக்குழந்தை தேவையில்லாமல் அழுதுகொண்டிருந்து, அல்லது காய்ச்சல் போன்ற சுகயீனம் ஏற்பட்டால் நாவூறு பட்டுவிட்டது
என்பர்.

ஒரு இரும்புத்துண்டை நெருப்பில் காயவைத்து தண்ணீர் உள்ள செம்பிற்குள் காய வைத்த இரும்பை அதனுள் வைக்கும்போது இரும்பின் சூடு நீரினில் சேரும். பின் இந்த நீரினால் சுகயீனமடைந்தவரைக் கழுவினால் சுகம் வரும் என்று நம்பப்படுகிறது.
அடுத்து காய்ந்த மிளகாயை எடுத்து (3,5) 3 முறை தலையை சுற்றிவிட்டு அதில் 3 தரம் துப்பிவிட வேண்டும். அதைக் கொண்டு போய் கிணற்றில் போடுவர்.. அல்லது அடுப்பில் உள்ள நெருப்பில் போடுவர். மிளகாய் வாசனை வராதுவிடில் நாவூறுதான் என்று உறுதிப்படுத்துவர்.
வேப்பிலை, உப்பு, மிளகு,மிளகாய் என்பவற்றை எடுத்து அந்த நபரின் மேல் தடவி தலையையும் சுற்றி பன்னாடையில் அவற்றை வைத்து எரித்து அச்சாம்பலை நெற்றியில் பொட்டாக இட்டுவிடுவர். அப்போது நாவூறு எனின் மிளகாய் எரிந்த வாசனை வராது. இவற்றை நாவூறு கழித்தல் என்று கூறுவர்.

நாவூறு வராமல் இருக்க வசம்பை சுட்டு அதன் சாம்பலை குழந்தையின் உள்ளங்காலில்
போட்டுவிட்டு அக் குழந்தையை புதிய இடத்திற்கு கொண்டு போனாலும் நாவூறு ஏற்படாது என்று நம்பப்படுகிறது.
நாக்கிலே கறுப்பு உள்ளோரை கருநாக்குகாரர் என்றும் அவர் பார்த்தால் நாவூறு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

வயதுக்கு வந்த பெண்பிள்ளையை அழகுபடுத்தி ஆராத்தி எடுத்தபின் தேசிக்காய் , வேப்பிலை கொண்டு ஆராத்தி சுற்றி கழிப்பதும் நாவூறு அல்லது கண்படுதல் என்பவற்றிற்காகத்தான் எனலாம்.

சகுனம்
ஒருவர் வீட்டில் இருந்து வெளிக்கிடும்போது யாரேனும் எதிர்படுபவர் தனக்கு சரியில்
லை என்று நினைத்தால் சகுனம் சரியில்லை எனப்படும். ஒருசிலருக்கு அப்படி எதிர்படுபவரைக் கண்டதும் போக முதலே தான் போகும் காரியம் சரிவராது என்று மனதில் பட்டுவிடும்.

உதாரணத்திற்கு பூனை குறுக்கே போதல், விளக்குமாற்றுடன் ஒருவர் எதிர்படல்,
வெறும் வாளி, பெட்டியுடன் எதிர்படல் , தலைவிரித்துக்கொண்டு எதிர்படல்,(தலைவிரித்து திரிவது பஷன் (fashion) ஆன பி
ன்னருமா.. ) அழுது கொண்டு வருதல் மற்றும் இன்னோரன்னவை அடக்கம். இதற்காக வாசலில் தண்ணீர் நிரப்பிய வாளியில் பூக்களைப் போட்டு வைத்துவிட்டு அதைப்பார்த்துக் கொண்டு போனால் பின்பு என்ன வந்தாலும் கவலைப்படத்தேவை இல்லை என்று நினைக்கின்றனர்.

இவையெல்லாம் அவரவர் நம்பிக்கை தான். சில சில வித்தியாசங்களுடன் பெரும்பாலானவை தமிழ்நாட்டிலும் பின்பற்றப்படுகிறவையே.. இல்லையா?