Author: வர்மா
•10:02 PM
கூடை மேல கூடை வைச்சு கூடலூரு போறவளே, உன் கூடக்கொஞ்சம் நானும் வாரன் கூட்டிக்கிட்டு போனால் என்ன’ வரிகளை கேட்டவுடன் ஆஹா என்ன அருமை பாடல் என்று சொல்லத்தோன்றும்.

நாயகி இடுப்பில் கூடையுடன் செல்கையில் இந்த பாடல் தொடங்கும், பாடல் தொடர்ந்து செல்கையில் கூடை என்ற சொல் வந்தாலும் நாயகியின் இடுப்பில் கூடை இருக்காது. இயக்குநர் கூடையை மறந்துவிட்டார்.

அவ்வாறு தான் எங்கள் ஊரிலும் கூடைகள் மறந்து கூடைக்காரிகளும் இல்லாமல் போய்விட்டனர்.


யாழ்ப்பாணத்தின் ஊர்களில் கூடைக்கார(காரி) வியாபாரிகள் கடந்த காலங்களில், குறிப்பாக சொல்ல போனால் இறுதி யுத்தம் முடிவடைவதற்கு முந்திய காலத்தில் வியாபார ரீதியில் கொடிகட்டி பறந்தவர்களாக காணப்பட்டனர்.

மீன்கள், பழங்கள், சிறிய அழகுசாதன பொருட்கள் சில வேளைகளில் புடவைகள் கூட கூடைக்காரிகளால் விற்பனை செய்யப்பட்டன.

கூடைக்காரிகளுக்கு தனிச்சிறப்பு இருந்தது. நம்பிக்கை, நாணயம் என்ற வியாபார அடையாளங்கள் யாரிடம் இருக்கின்றதோ தெரியவில்லை, இந்த கூடைக்காரிகளிடம் இருந்ததை காணமுடிந்தது. ஊரிலுள்ள குடும்பங்களுடன் நெருக்கமான உறவு முறையை பேணி ஒவ்வொரு வீட்டின் விடயங்கள், அந்தரங்கங்களை அறிந்தவர்களாக இந்த கூடைக்காரிகள் இருந்தனர்  

45 அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்மணியொருவர் தலையில் கூடைக்குள் 10 கிலோ எடையுள்ள பொருட்களை வைத்து ஊர் ஊராக சென்று விற்பனையில் ஈடுபடுவார். தலையில் கனம் குறையும் போது, அவரது இடுப்பிலுள்ள பையில் கனம் அதிகரிக்கும்.

தொடக்கத்தில் ‘மீன் வேணுமோ மீன்…. என்று தொடங்குபவர் நாட்கள் செல்ல, தங்கச்சி கமலா மீன் கொண்டு வந்திருக்கன் வாணய், அங்கால போகனும்’ என்ற அளவுக்கு வீடுகளில் உள்ளவர்களுடன் உறவுகள் அதிகரிக்கும்.

அவர்கள் கொண்டு வரும் மீன்கள் நல்ல மீன்களாக தான் இருக்கும். மீனின் செவியை இழுத்து பார்த்தால், மீனின் ப+, சமந்தா உதட்டுக்கு லிப்ஸ்ரிக் அடிச்சது போல் சிவந்து போய் இருக்கும். தரமான மீன். வேறு பேச்சுக்கே இடமில்லை. விலையும் கட்டுப்படியானதாக தான் கொடுப்பார்கள். 100 ரூபாயுக்கு மீனை மீனவரிடம் வாங்கிவரும் கூடைக்காரி 120ரூ பாவுக்கும் கொடுத்துவிட்டு செல்வார். ஆனால் வெளியில் அதே மீன், 150, 200ரூ பாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.

இவர்களிடம் வாங்கினால் சிக்கனம். பணம் இல்லையென்று வீட்டுக்காரி வீட்டில் சமைக்காமல் இருக்க தேவையில்லை. கூடைக்காரி கடனுக்கும் மீன் தருவார். புதிதாக திருமணம் ஆன பொண்கள் எங்கேயாவது வீட்டில் இருந்தால், மீன் சமைத்து எப்படி கணவனை மடக்குவது என்பதையும் கூடைக்காரி சொல்லி கொடுப்பார்.


‘இஞ்சி, உள்ளிக்க போட்டு, ஊற வைச்சு, அதை தேசிக்காய் புளியில லேசா தடவிட்டு குழம்பு வை, பேந்து பாரனம்மா’ என்று கூடைக்காரி சொல்ல புது மணப்பெ

ண்களும் சமையல் கற்றுக்கொள்வார்கள்.

அது வியாபார தந்திரம், நல்லா சமைத்து கணவனுக்கு போட காலப்போக்கில் வீட்டில் ஆட்கள் கூடும், மீனும் கூட வாங்குவார்கள்… ‘நீண்டகால வியாபார திட்டமிடல்’ அது. பல்தேசிய கம்பனிகள் தான் அப்படி திட்டமிட முடியும் என்றும் இல்லைத்தானே.

கூடைக்காரியின் சமையல் குறிப்பால் சமையல் கற்றுக்கொண்டு, நல்ல சமையல்காரிகள் ஆகின பெண்கள் நிறை இருக்கிறார்கள்.

கூடைக்காரி மீனின் ரகங்கள், சுவைகள் சொல்ல எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் போல் வாய் ஊறும். அப்படி வாயில் வெற்றிலையை போட்டு ரசிச்சு ருசிச்சு மீன்கள் பற்றி கூறுவார்கள்.

இதேபோல் தான் பழங்கள் விற்கின்றவர்களும். கூடுதலாக தென்மராட்சி பக்கம் இருந்து நிறை கூடைக்காரிகள் மாம்பழத்தோடு ஊருக்குள் திரிவார்கள். கறுத்தக்கொழும்பான் மாம்பழம், சுவை அதிகம். அதுவும் அவர்கள் சொல்லும் ‘கறுத்தக்கொழும்பான்’ என்ற வார்த்தையில் சுவை அதிகம்.

மருந்து மாத்திரை என்ற பேச்சுக்கே இடமில்லை. மரத்திலிருந்து லாவகமாக பிடுங்கி, வைக்கோல் போர்வைக்குள் பதுக்கி வைத்து பழுக்க வைத்த பழங்கள். கூடைக்குள் இருக்கும் பழங்களில் பழத்தின் பாலுடன் சேர்த்து வைக்கோல் ஒட்டியிருக்கும்.

பழம் தலைப்பக்கம் மெல்லிய மஞ்சளாக இருக்கும். கீழ் கொஞ்சம் பச்சையாக தான் இருக்கும். வைக்கோலில் பழுக்க வைக்கிற பழங்கள் முழுவதும் மஞ்சள் ஆவது கிடையாது. இப்படி 2 நிறத்தில் இருக்கும். மருந்தடித்தால் தான், ‘ஈமா வாற்சன்’ போல மஞ்சள் கலரில் இருக்கும்.


‘பழம் எல்லாம் செம மலிவு’ என்று கூடைக்காரி சொல்வாள். கிழமைக்கு 20 பழம் ஒவ்வொரு வீட்டிலும் விற்பனையாகும். நல்ல வியாபாரம். சீசனுக்கு மட்டும் வியாபாரம். சீசன் வியாபாரம் முடிய, வேறு விற்பனை. அழகு சாதனம், வேறு பழங்கள் உள்ளிட்ட விற்பனை என அவர்கள் வாழ்க்கை வியாபாரம், உறவுகள், சந்தோசம், பணம் என்று ஜாலியாக சென்றது.

யார் கண் வைத்தார்களோ தெரியவில்லை. கூடை தூக்கி வியாபாரம் செய்வதற்கு புதிய கூடைக்காரிகள் முன்வரவில்லை. இருந்த கூடைக்காரிகளும் வயது போய் இயலாத நிலைமை, அதிகரித்த விலைவாசியில் குறைந்த விலையில் மீன்களை பெற்று, ஊர்களில் விற்பனை செய்ய முடியவில்லை. சந்தையில் அதிக விலைக்கு மீன்களை வாங்க வேண்டிய நிலை. சந்தையில் கேள்வி அதிகம். கூடவே கொழும்பு கம்பனிக்கும் மீன் ஏற்றுகின்றோம் என சிலர் மீன்களை விலையேற்றிவிட்டனர்.

அவர்களுடன் போட்டிபோட்டு மீனவர்களிடம் இருந்து மீன்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியவில்லை. அதிக விலைக்கு கொள்வனவு செய்தால் ஊரில் குறைந்த விலையில் வாங்கி பழக்கப்பட்டவர்கள் அறாவிலை கேட்கின்றனர்.

வியாபாரம் கைநழுவிவிட்டது. மீன்கள் கூடைக்காரிகளின் கூடைகளின் ஏற மறுக்க, கூடைகளை வீட்டு தவாரத்தில் கூடைக்காரிகள் தூக்கி போட்டுவிட்டனர்.

வீட்டு கதவுகள் இறுகப்பூட்டப்பட்டு கூடைக்காரிகளை வரவேற்க தயாராகவில்லை. ஏமாற்று வழிகள் வீடுகளுக்குள் நுழைவதால் வீட்டுக்காரர்கள் இவ்வாறான முடிவுகளை எடுத்தனர். இதனால் நல்லவர்களான கூடைக்காரிகள் இல்லாமல் போனார்கள்.

மாம்பழ மரங்களையே பழங்களின் மொத்த வியாபாரிகள் வாங்கிவிடுகின்றனர். 50 ரூபாயுக்கு குறைவாக கறுத்தக்கொழும்பான் யாழ்ப்பாணத்தில் கொள்முதல் செய்ய முடியாது. மாம்பழ வியாபாரிகளும் பின்வாங்கிவிட்டனர்.

பாரிய வியாபார நிலையங்கள், நிறுவனங்கள் வளர கூடைக்காரிகளின் தேவைகள் மக்களுக்கு இல்லாமல் போனது.

கூடைக்காரிகள் இல்லாமல் போனதால், புதுசா கலியாணம் செய்த பெண்களில் பலர் சமைக்க கஸ்ரப்படுகின்றனர். வீட்டில் சண்டை. சாப்பாடு சரியில்லையென. மாமியார் நாடகம் பார்க்க, சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை. பாவம் பெண்கள் சமையல் குறிப்பை இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து பிறிண்ட் எடுத்து, சமையல் அறையில் மேல் றாக்கையில் செருகி வைத்து பார்த்து பார்த்து சமையல் செய்யும் நிலை.

கூடைக்காரிகள் மொத்தமாக இல்லாமல் போனது என்றில்லை. ஊருக்குள் ஒன்றிரண்டு கூடைக்காரிகள், ஏதோ ஒரு நம்பிக்கையிலும், பெறுமானத்தின் அடிப்படையிலும் தங்கள் தொழில்களை செய்கின்றனர்.

அப்படியொரு கூடைக்காரியை சந்தித்து பின்னரே இதனை எழுதவேண்டும் என்று தோன்றியது.

மக்களை அணுகிய வியாபார முறைகள் என சந்தைப்படுத்தல் கற்கைநெறிகளில் கத்தி கத்தி சொல்லி கொடுக்கின்றனர். ஆனால் மக்களை அணுகிய விற்பனை முறையை எப்போதிருந்தோ எமது கூடைக்காரிகள் மேற்;கொண்டுவிட்டனர் என்பதை உலகம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
குணசேகரன் சுரேன்

Author: வர்மா
•6:18 AM
வரலாற்றுச்சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய‌த்தில் அமைக்கப்பட்ட‌ 33அடி உயரபிரமாண்டமானசிவன் சிலை









படஉதவி சேனையூர் அச்சுதன்


படஉதவி :சேனையூர் அச்சுதன்
Author: வந்தியத்தேவன்
•6:37 AM
பிரபா : என்ன வந்தி கனகாலமா முத்தத்துப் பக்கம் காணவில்லை?

வந்தி : ஒண்டுமில்லையண்ணை கொஞ்சம் சோலி கூட.

பிரபா: உங்கடை சோலியள் எனக்குத் தெரியும் தானே ஹிஹி

வந்தி : ஏனப்பா சபைசந்தியில் என்னுடைய மானத்தை வாங்கிறியள்

பிரபா : உதைவிடுங்கோ ஊரிலை என்ன புதினம்?

வந்தி : வாற ஞாயிற்றுக்கிழமை எங்கடை டாக்குத்தர் ஜீவராஜுக்கு கலியாணம் மலையிலைதான் கலியாணமாம் நேரம் கிடைத்தால் ஒரு எட்டுப் போயிட்டு வரலாம்.

பிரபா : யார் ஜீவநதியின் சொந்தக்காரரோ? அவரும் முத்ததிலை இடைக்கிடை வந்து இளைப்பாருகின்றவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கோ.

வந்தி : ஓம் நான் சொல்லிவிடுகின்றேன். மற்றது அண்ணை எங்கட குழப்படிக்காரியின் கொம்பியூட்டர் பழுதாப்போச்சாம் இப்ப சில நாளாக ஆள் ஒன்லைனிலை இல்லை, ஆள் இருந்தால் நிறைய விடுப்பு கேட்கலாம்.

பிரபா : யாரையப்பா சொல்றியள் ஓ சினேகிதியைச் சொல்றியளோ அவர் ரொம்ப நல்லவராச்சே ஆனாலும் அடிக்கடி விடுப்பு பிடுங்குகின்றேன் என்று எல்லாத்தையும் சொல்லிவிடுவார்.

வந்தி : வேறை என்ன பூராயம் நாட்டிலை?

பிரபா : என்னத்தைச் சொல்வது எங்கட பக்கத்து வீட்டுப் பெடியன் முளைச்சு மூண்டு இலை விடேல்லை யாரோ ஒரு உடுவில் பெட்டைக்கு லைனாம்? எங்கட காலத்திலை உப்பிடியே வந்தி?

வந்தி : ஓமண்ணணை இப்பத்தைப் பொடியள் நல்லா முன்னேறிவிட்டினம், உதைவிடப்பா எனக்கு நேரம் போட்டுது நான் நாளைக்கு வாறன்.

பிரபா : சரி சரி கவனமாக போட்டுவாங்கோ

பொருள் விளக்கம்

சோலி : வேலை அல்லது அலுவல் என்பதை இப்படிச் சொல்வார்கள், இதே நேரம் எந்தவித சண்டை சச்சரவுக்கும் போகாதவரையும் சோலி சுரட்டு இல்லாத பிள்ளை என ஊரிலை சொல்வார்கள்.

உதாரணம் : உவன் வந்தி ஒரு சோலி சுரட்டுக்கும் போனதில்லை.

சபை சந்தி : பொது இடம்

புதினம் : செய்தியைத் தான் புதினம் எனக் கேட்பார்கள். என்ன புதினம் இண்டைக்கு. இதேபோலை புதினத்தை ஆச்சரியம் என்ற பொருள் படும் வகையிலும் பயன்படுத்துவார்கள்.

உதாரணம் :
உங்கைபார் உந்தப் புதினத்தை சிவத்தாரின்ரை பெட்டை மோட்டர்சைக்கிளை போகுது.

மலை : திருகோணமலையை அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை என்றே குறிப்பிடுவார்கள்.

விடுப்பு : வம்பு அளத்தல், கிசுகிசு போன்றவை விடுப்பு எனப் பொருள்படும். இப்படியான கதைகளைப் பேசுபவர்களை விடுப்புப் பிடுங்குபவர்கள் என்பார்கள். இப்போது ஸ்டைலாக விடுப்ஸ் என்பார்கள். மற்றவர்களைப் பற்றிக் கதைத்தல், தேவையற்ற விடயங்கள் பேசுதல் போன்றவன விடுப்பாகும்.

உவர் சரியான விடுப்ஸ் என்றால் ஆள் நல்ல வம்பளப்பார் எனப் பொருள்.

பூராயம் : இதுவும் விடுப்பு போன்ற அர்த்தம் தரும் சொல்தான்.
Author: ARV Loshan
•10:37 PM
நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. ஈழத்து முற்றத்தில் இதுவரை 137 பதிவுகள் இடப்பட்டும் என்னால் ஒன்றைக் கூட வழங்கமுடியவில்லை.

இதுகூட ஏற்கெனவே என் தளத்தில் முன்பு பிரசுரிக்கப்பட்ட ஒரு பதிவே..
நண்பர் வந்தியத்தேவனின் அன்பான வற்புறுத்தல்,மிரட்டலான வேண்டுகோளின் காரணமாக ஈழத்து முற்றத்தில் மீள் பதிக்கிறேன்.

(எனது பதிவுத்தளத்தை விடவும் தொடர் மின்னஞ்சல்களாகவும் யாரோ எழுதியது என்றும் உங்களில் பலபேரை இது வந்து சேர்ந்திருக்கும் என்றும் நினைக்கிறேன்.. பல தடவை "வாசித்துப் பாருங்கள்.. நல்லா இருக்கு" என்றெல்லாம் எனக்கே வருவது வேடிக்கை..)

இதோ நான் வசிக்கும் கொழும்பில் தமிழர் தலைநகரான வெள்ளவத்தையின் தல புராணம்..


வெள்ளவத்தை
கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் -
அதிகமாகத் தமிழ் பேசுவோரே
வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06)
பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம்.
வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது!
கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு!

நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால்
ஏனைய வெள்ளவத்தைவாசிகளும்
கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து!


எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்

பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம்
எனினும்
பெருமளவு வெளிநாட்டுப் பணமும்
உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம்
பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால்
இது ஒரு குட்டி லண்டன் அல்லது
டொரன்டோ(வேறேதாவது வெளிநாட்டு நகரங்களாயிருந்தாலும் போட்டுக்கலாம்)

அடுக்குமாடிகளின் (அபார்ட்மென்ட்) அணிவகுப்புகள்
ஒவ்வொரு வீதியிலும் இரண்டு மூன்று அடுக்குமாடிகள்
கிடைக்கும் சிறுதுண்டு நிலத்திலும்
ஒடுக்கி முடுக்கி ஒரு அபார்ட்மெண்ட் முளைவிடவைக்கும்
மூளை படைத்தோர் எங்கள் பொறியிலாளர்!

வீட்டிற்குள்ளே பைப்பில் நீர் வரத்து குறைவெனிலும்
மழை பெய்யும் காலத்தில் வீதியில் குளமே
கட்டிப் பாசனம் செய்யலாம்!

எங்கள் வெள்ளவத்தை வீதிகளில்
விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒடும்!
பென்ஸ்,பீ எம் டபிள்யூ,பஜிரோ,லாண்ட்ரோவர்,பெராரி
இன்னும் ரோல்ஸ் ரோய்ஸ் கூடக் காணலாம்.
குண்டு குழி வீதிகளில் குலுங்காமல் இவை
பயணிக்க புதியதாய்
நுட்பங்கள் யாராவது உருவாக்க வேண்டும் இனி!

பேரம் பேசாமல் கேட்பதை சந்தையில்
அள்ளிக் கொடுத்து
சாதாரண மரக்கறி விலைகளையும்
சர்வதேச சந்தை விலையாக உயர்த்தியவர்களும்
எங்கள் வெள்ளவத்தைத் தமிழரே!

எனினும்
தமிழ் மொழியாக்கத்தில் தீவிரமானவர்கள் நாம்!
காய்கறிக் கடைக்காரர் முதல்
காக்கிச் சட்டைக்காரர் வரை அனைவருமே
தமிழறிவர் வெள்ளவத்தையில்!

பஸ் கண்டக்டர் கூட
வெள்ளவத்தை வந்தால்
தமிழிலே பேசித்தான்
டிக்கெட் கொடுப்பார்!

பேச்சு வெற்றியளிக்கும் என்பது இங்கே மட்டும்
பெருமளவில் உண்மை!
பேசிப் பேசியே (தமிழன்) தமிழ் தெரியாதவரும்
தமிழிலேயே பேசுவர்!

எட்டுத்திசையும் அச்சமின்றித் தமிழ் முழங்கும்
தலைநகரின் தமிழ்த் தலைநகரம்
தடுக்கி விழுந்தால் ஆலயம்
தடுமாறி விழுந்தால் சைவக்கடை
ஊர் முழுவதும் நகைக்கடையும் புடவைக்கடையும்
நிரம்பி வழியும் எம்மவரின
வெளிநாட்டுப் பணத்தினால்!


பொலீஸ் பதிவுகளும் இங்குதான் அதிகம்
பொலீஸ் கைதுகளும் இங்கு தான் அதிகம்
வெள்ளை வான்களும் அதிகளவில் அலையும்
வீதிக்கு வீதி லொட்ஜ்களில் ரெய்டுண்டு
எனினும்
வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி
விடுப்புகள் பேசியும்
வீராப்பாய் விண்வீரம் பேசியும்
நிற்கும் எம் இளைஞர் கண்டால்
வாழ்வது நாம் வடக்கிலா கிழக்கிலா என்ற
எண்ணம் எட்டிப் பார்க்கும்!

அண்மைக்கால வெள்ளவத்தையில் புதியதோர் மாற்றம்
ஆன்டிமார் என்ன ஆச்சிமார் கூட
நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை!
முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய்
முகம் தவிர வெறெதையும் மூடாத
புதிய மகளீர்
கண்களுக்கு விருந்தளிக்கும்
கவர்ச்சி catwalk இப்போது
எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம்!

வெறெங்கு எந்த மொழியில் விளம்பரம் செய்தாலும்
வெள்ளவத்தையில் மட்டும்
தமிழ் இல்லையெனில்
வியாபாரம் படுத்துவிடும்!
வங்கி வட்டிக்கடை முதல் வாடகைக் கார் வரை!
(அதில் பாதித் தமிழ் தமிழாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை)

காலை வேளைகளில் கடற்கரையோரம் இன்னுமொரு வேடிக்கை..
நாள் முழுதும் சாப்பிட்டு சேர்த்ததெல்லாம் குறைக்க
காலில் சப்பாத்து அணிந்து அங்கிள்மாரும்,ஆன்டிமாரும்
அணிவகுத்து நடை பழகுவார்கள்..
உடல் மெலிவோ,கொழுப்போ
காலையில் பீச் வோக்கிங் போகாவிட்டால் பாஷன் இல்லைப் பாருங்கோ..

நம்ம வெள்ளவத்தைப் பெண்களின் தமிழே தனியான தமிழ் தான்..
ஆங்கிலேய அழகிகளும் தோற்றுப் போவர்
அவர்கள் ஆங்கில உச்சரிப்பில் ..
ஆனாலும் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று மிக்ஸ் பண்ணி மிதப்புக் காட்டுவதில்
எங்கள் வெள்ளவத்தை பெண்மணிகளை யாருமே வெல்ல முடியாது
(நாங்களும் தான் அந்த ஸ்டைலில் டமில் பேசப் பார்க்கிறோம்..
ம்கூம் முடியவே இல்லை.. அது எங்கள் பெண்களுக்கு மட்டுமே முடியுது)

குண்டுகள் எங்கு வெடித்தாலும்
குண்டுகளை எங்கே போட்டாலும்
கோவில்கள் எங்கள் பெண்களால் நிறையும்
அவருடல்களில் தங்கங்கள் விளையும்
உடல் தழுவிப் பட்டாடைகள் நெளியும்!
கல்யாணங்களோ காசால் களைகட்டும்
தமிழ்நாடும் தோற்றுப் போகும் தடல்புடலில்.

கிடைக்கும் நிலமெல்லாம்
கோடி கொடுத்து வாங்கவும்
நம்மவர் தயாரென்பதால்
இலங்கையின் வேறு பல கோடிகளுக்கு
ஓடிவிட்டார்கள் சிங்களவர்
வெகுவிரைவில் வெள்ளவத்தை முழுவதும்
தமிழொலிக்கம் (தமிழ் மட்டுமே)

கரையோரக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றம் என்று
நாம் பொங்கியெழுந்த காலம் போய்த்
தலைநகருக்குள்ளேயே
தட்டுத் தடங்கலின்றித் தமிழரின்
தொடரான குடியேற்றம் என்று
கொதித்தெழக் கூடும்
(கொட்டாஞ்சேனை மட்டக்குளி போன்றவையும்
இதற்கு பொருத்தமே)




Author: Unknown
•6:08 PM
குப்பை பரவுதல் எண்டால் என்னவோ ஒரு கெட்ட விசயம் எண்டமாதிரி நினைக்காதீங்கோ. இப்ப கிட்டடியில வீட்டாரோட கதைக்கேக்கை இந்தச் சொல் திரும்ப ஞாபகம் வந்தது பாருங்கோ. மற்றப் பாகங்களில என்ன மாதிரி எண்டு தெரியேல்லை, ஆனால் எங்கட ஊரில வயல் விதைப்புக் காலங்களில இந்தக் குப்பை பரவுதல் எண்ட சொல் அடிக்கடி அடிபடும். குப்பை தானாப் பரவாது பாருங்கோ. நாங்களாத்தான் பரவோணும்.

அனேகமா ஆவணிப் நடுப்பகுதி-புரட்டாசி காலகட்டத்தில நாங்கள் எங்கட பெரும்போக நெல் விதைப்புக்கு வயல்களை உழத் தொடங்கீடுவம். ஓம்...ஓம்... நீங்கள் விதைக்கிறதே ஒரு போகம்தான் அதுக்குள்ள என்ன பெரும்போகம் சிறுபோகம் எண்டு புழுகிறாய் எண்டு நீங்கள் சொல்லிறது கேக்குது பாருங்கோ. அப்பிடி உழ முன்னம் வயலுக்கு பசளை போடுற வேலைதான் இந்தக் குப்பை பரவுறது. குப்பை எண்டால், வெறும் குப்பைதான் பாருங்கோ. ஆனால் இந்தக் குப்பை சேக்கிறது பெரிய கதை.

ஒவ்வொரு நாளும் விடிய எழும்பி வீடு கூட்டிறது ஒராள் முத்தம் கூட்டிறது ஒராள் எண்டு மாறிமாறிச் செய்யிறனியள்தானே நீங்கள் எல்லாரும். (எங்கட வீட்டிலை அம்மாவும் அப்பாவும் எங்களை இது செய்ய விடேல்லை எண்டிறது வேற விசயம்). ஊரில முத்தம் கூட்டிறம் எண்ட பேரில வளவு முழுக்க கூட்டுவினம், சரிதானே. எங்கள் எல்லாருக்கும் தெரியும் எங்கட வளவுகளில ஒவ்வொரு நாளும் என்ன குப்பை சேர்றது எண்டு. என்ன சேர்றது?? சொல்லுங்கோ பாப்பம்?...கஞ்சல் அல்லது குப்பை எண்டு நாங்கள் சொல்லுற இலை குழையள் தானே. அதைத்தான் பாருங்கோ சேத்துவச்சு வயல் உழ முன்னம் வயலுக்குள்ள பரவிறது. இதுதான் நான் சொல்ல வந்த ‘குப்பை பரவுதல்'

மற்ற வீடுகளில எப்பிடியோ தெரியேல்லை, நாங்கள் குப்பை சேர்க்கிறது இப்பிடித்தான் பாருங்கோ. கீழ உள்ள படத்தை ஒருக்கா வடிவாப் பாருங்கோ.
இந்த அமைப்புத்தான் எங்கட வீட்டில குப்பை சேர்க்கிறதுக்குப் பயன் படுகிறது. வீட்டின்ர பின்பக்கம் இருக்கிற மதில் ஒரு பக்கமா இருக்க மிச்ச மூண்டு பக்கமும் நல்ல காய்ஞ்ச வடலி ஓலை அல்லது மூரி மட்டை வச்சு அடைப்பினம். ஒரு மூலையில மட்டும் ஒரு சின்ன வாசல் விடுவினம். மதிலும் வேலியும் சந்திக்கிற வாசலுக்கு எதிர்ப் பக்கமாய் இருக்கிற இடத்தில இருந்து, வளைவைக் கூட்டி அள்ளிற குப்பையை எல்லாம் கொண்டேக் கொட்டுவினம். மதில் முண்டு குடுக்கிற பக்கத்தில தொடங்கினால் கனக்கக் கொட்டலாம்தானே... அதுக்குத்தான் அந்த மூலையில் இருந்து தொடங்கிறது. சில பேர் ‘ட' பட மதில் சந்திக்கிற இடத்தில ரண்டு பக்கம் சின்ன வேலி போட்டுக் குப்பை கொட்டுவினம். அது சின்ன இடத்தில நிறையக் குப்பை கொட்டுறதுக்கு இன்னும் திறம் பாருங்கோ.

அங்கை என்ன பிளாஸ்ரிக்கும் பொலித்தீனுமா வளவுகளில கிடக்கிறது. எங்கையாவது அங்கை ஒண்டும் இங்கை ஒண்டும் இருக்கும். அதுகளை ஒரு பக்கமாய் இன்னொரு இடத்திலை எறிஞ்சிட்டு, வடிவா மக்கி எருவாகக் கூடிய இலை தழை போன்ற குப்பையளை மட்டும் நான் மேல கீறிக்காட்டின வடிவில இருக்கிற குப்பை கொட்டிற இடத்தில கொட்டுவம். இருந்திட்டு பஞ்சீல பொலித்தீன், கண்ணாடி, பிளாஸ்ரிக் எண்டு என்னத்தையாவது ஒண்டாய்க் கொண்டே கொட்டிறதை அப்பா கண்டா பேசுவார். அந்தப் பயத்திலையே சரியாக் கொட்டுறது. சில பேர் குப்பையோடு சேத்து மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை எல்லாம் கொட்டுவினம். நாங்களும் அப்பிடித்தான். சிலபேர் ரண்டையும் தனித்தனியாக் கொட்டிறவை.

வயல் உழுகிற காலத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தக் குப்பையளை ற்க்ரர் லையோ, லாண்ட் மாஸ்ரரிலையோ, மாட்டு வண்டிலிலையோ ஏத்தி வயலுக்குக் கொண்டுபோறது. நான் அறிஞ்ச காலத்தில நாங்கள் றக்ரர் இல்லையெண்டால் லாண்ட்மாஸ்ரர் மட்டும்தான் பாவிச்சனாங்கள். மாட்டு வண்டியிலை ஏத்திறது சரியான வேலை மினைக்கேடு பாருங்கோ. இதைக் ‘குப்பை ஏத்திறது' எண்டுதான் சொல்லிறனாங்கள். குப்பை ஏத்திறது எண்டால் சும்மா விசயமில்லைப் பாருங்கோ. ஒரு நாளும் ஒரு வீட்டுக் குப்பை வயலுகளுக்குக் காணாது. எவ்வளவு தட்டு வயல் கூட இருக்கோ, அவ்வளவுக்கு அவ்வளவு குப்பை கூட வேணும். இதனால எங்கட வீட்டுக் குப்பை மட்டுமில்லாமல், வயல் செய்யிறது கௌரவக் குறைவு எண்டு நினைக்கிற பலபேர் வீட்டுக் குப்பையையும் போய்க் கேட்டு வாங்கி வயலுக்குக் கொண்டுவந்து போடுவம். போட்டு கொஞ்சக்காலம் வயலுக்கை மக்கவிட்டு அதுக்குப் பிறகு உழுது பயிரிட, அனேகமா மழையும் கை கொடுத்தால் அமோகமா விளையும் நெல்.

இது தனிய நெல் வயலுக்கு மட்டும் செய்யிறேல்லை. கனபேர் தோட்டக் காணியளுக்கும் இதே முறையிலை குப்பை பரவிப் பண்படுத்திறவை. நாங்கள் வயல்க் காணியள் மட்டும்தான் செய்தனாங்கள். அதுவும் வெளிநாட்டுக்கும், கொழும்புக்கும் மாறிப் போனாக்கள் பராமரிக்கச் சொன்ன வயல்களை எல்லாம் பண்படுத்தி நெல் விதைச்சனாங்கள். சில காலங்களில சில வயல்களை (குளங்கரை, காவில், கிராய், வல்லை ஆகிய நாலு இடங்களில வயல் செய்தனாங்கள்) ஆருக்காவது குத்தகைக்குக் கொடுக்கச் சொல்லி உரிமையாளர்கள் சொன்னால், அந்தக் குத்தகைக் காசைப் பொறுப்பாக வாங்கிக் கொடுப்பதும் எங்கட வேலை. ஆனா அனேகமா நாங்கள்தான் அந்த வயல்களை விதைக்கிறது. ஆகக் குறைந்தது எங்கட உறவுகளின் 7 வீடுகளில் குப்பை ஏற்றுவதுண்டு.

நேரடியாக வயலில் இறங்கி நான் வேலை செய்யவில்லை. எல்லாம் அப்பாதான். ஆனால் இந்தக் குப்பை பரவுதல் எனக்கு ஏனோ பிடிச்சிருக்கு. உரம் போட்டுப் பண்படுத்திறம் எண்ட பேரில நிலத்தைப் புண்படுத்தாமல் இயற்கைப் பசளைகளை வீசி எறிந்து தன்னிச்சையாகவே நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வந்திருக்கிறோம். என்னதான் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாய் உரம் அது இது எண்டு எல்லாம் வந்தாலும், பயிரிடுவதுக்கு முன் நிலத்தைப் பண்படுத்த எங்கட ‘குப்பை பரவுதலுக்கு' நிகராக ஒண்டுமே கண்டுபிடிபடேல்லை எண்டதில பெருமையா இருக்குப் பாருங்கோ.

பி.கு-1: கனடாவிலையும் முத்தம் கூட்டுறனாங்கள், வின்ரரிலை. எல்ல குப்பை எல்லாம் வெள்ளையா, படு குளிரா இருக்கும் (ஸ்னோவைச் சொல்லுறன்). அடுத்தது வீட்டுக் குப்பைகளை அகற்ற எண்டு சொல்லி பச்சை, நீலம், சாம்பல் எண்டு மூண்டு கலரில மூண்டு கலன்கள் தந்திருக்கிறாங்கள் பாருங்கோ, வெள்ளிக்கு வெள்ளி தலையிடிதான். மற்றபடி கோடை காலத்தில Backyard இல சில பயிர்கள் போடுவினம். அதுவும் இல்லையெண்டால் அங்க வெயிலுக்க தோட்டம் செய்திட்டு இஞ்ச வந்த எங்கட சனம் முக்கால்வாசிக்கு விசர் பிடிச்சிடும்.

பி.கு-2: யாழ்ப்பாண மக்களை எங்களை விடுங்கோ. உந்த வன்னிச் சனம் மும்முரமாய் வயல் செய்யிறதுகள். இப்ப அதுகளுக்கு வாழ்க்கையே உடைஞ்ச மாதிரி. என்ர மச்சாளின்ர புருசன் சொன்னார், ‘எங்களை எங்கட சொந்த இடங்களுக்கு விட்டா வயல் செய்து இழந்த சொத்தெல்லாம் 5 வருசத்தில மீட்டிடுவன்' எண்டு. உண்மைதான் பாருங்கோ. வெளிநாடுகளுக்கு வந்து உழைக்கிறதை விட வயலை நம்பி உழைக்கலாம்தான். ஆனா எல்லாத்துக்கும் சில சில விசயங்கள் கூடி வரோணும்தானே. பாப்பம்..

விரைவில திரும்பவும் சந்திப்பம்....
Author: M.Rishan Shareef
•11:25 PM
        கோடை காலங்களில் எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில்தான் இரவுகளில் மொட்டைமாடியில் உறங்கும் எண்ணம் உதிக்கிறது. அதன் தரையும் வெப்பம் உமிழும்தான் எனினும் இரவில் நேரம் கடக்கும்போது தென்றல் சற்றுச் சினேகமாகி குளிராக வீசும். பகல் முழுதும் அனல் சுமந்தலைந்த காற்று, இரவாகுகையில் நிலவிடம் போய்க் குளிர்ச்சியை வாங்கிவருகிறது. இதமான ஒரு தாலாட்டினைப் போல உடல் தடவித் தடவி வீசிப் போகிறது.

        அப்படியான ஒரு நிலையில்தான் மொட்டைமாடி உறக்கம் வாய்த்தது. மொட்டைமாடிகள் அகலமான தொட்டில்கள். ஆட மாட்டாது. அசைய மாட்டாது. எனினும் மனதில் நிம்மதி நிறைந்திருப்பவர்களுக்கு அதன் பரப்பெங்கும் ஆழமான உறக்கத்தை ஏந்திவருகிறது. அறைக்குள் விடிகாலைவரை சிறு வெளிச்சமும் தன்னை அண்டாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவர்களுக்கு மொட்டை மாடி உறக்கம் சரிப்பட்டுவராது என நினைக்கிறேன்.

        இங்கெல்லாம் விடிகாலை நான்கு மணிக்கே உலகின் முதல் கீற்று கண்தடவிப் பார்க்கிறது. பிறகு மரண வீட்டுக்குத் தொலைவிலிருந்து வரும் உறவுகள் போல, சிறிது சிறிதாகக் கீற்றுக்கள் சேர்ந்துவருகின்றன. அத்தோடு காற்றை விழுங்கிய வெயிலைப் பின்னாலேயே கூட்டிவருகின்றன.

        கோடை காலக் காலை வெயில் சுளீரென அடிக்கும். அதன் மறைமுகக் கரங்களால் 'உறங்கியது போதும்.விழித்துக்கொள்' என உடல் தட்டித் தட்டி எழுப்பும். புருவங்கள் சுருக்கி, சிறிதாய் விழி திறந்துபார்க்க வானம் மிக அழகான நீல நிறத்தைத் தன் மேல் பூசிக் குளித்து, வெயிலில் காய்ந்துகொண்டிருக்கும். மொட்டை மாடிக்கருகில் மரங்களிருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். இளங்காலையில் சிறு குருவிகள், பட்சிகள் அவற்றில் வந்தமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும். கிளியின் ஓசையை 'கீ கீ' என்பது போல, பூனையின் ஓசையை 'மியாவ்' என்பது போல சில பட்சிகளின் ஓசையை என்னால் மொழிபெயர்க்க இயலவில்லை. அதன் ஒலியை உள்வாங்கும்போது இரசிக்கத் தெரிகிறது. ஆனால் தமிழின் எந்த எழுத்துக்களால் அதனைச் சுட்டி விளிப்பது எனத் தெரியவில்லை.

        பறவைகள் மனிதரை விடவும் அறிவார்ந்தவை என எண்ணுகிறேன். சில மனிதனின் மொழியை அப்படியே உள்வாங்கி மீளப் பேசுகின்றன. அதற்காக அவை எழுதி வைத்துக் கொள்வதில்லை. ஆய்வுகள் செய்வதில்லை. ஆனாலும் பேசுகின்றன. மனிதனால் இவ்வளவு வளர்ந்தும், இவ்வளவு கற்றும் பறவைகள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றன என அதன் மொழியைக் கிரகிக்க முடியவில்லை. கற்றுக் கொள்ள முடியவில்லை.

        பறவைகளுக்கும் எனக்குமான உறவுகள் சிறுவயதிலிருந்தே வாய்த்தது. எனது சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த வயலில் கோவணம் கட்டி வயலுழும் விவசாயியுடனும், ஏர் சுமக்கும் எருமை மாடுகளுடனும் சேர்ந்து சேற்றில் கால்கள் முழங்கால்வரை புதையப் புதைய அலைந்திருக்கிறேன். நாற்று முளைத்து பிடுங்கி நடும் காலங்களில் நானும் என் சிறுவிரல்களால் நாற்று, நாற்றாய்ப் பிரித்து சேற்றில் ஊன்றியிருக்கிறேன். அவ்வேளை காலுக்குக் கீழால் நண்டுகள் குறுகுறுக்கும். எனினும் கடித்து வைத்ததில்லை. வயல் அறுவடைக் காலங்களில் கூலிப் பெண்கள் வெட்டித் தரும் கதிர்களைக் கட்டுக் கட்டாகக் கொண்டு சேர்த்து அடுக்கியிருக்கிறேன். உடலெல்லாம் அரிக்கும். எனினும் அதிலோர் ஆனந்தம் இருக்கிறது. பின்னர் அக் கட்டுக்களையெல்லாம் ஒன்றாக அடுக்கி, மாடுகளைக் கொண்டு கதிர்களை மிதிக்கச் செய்வார்கள். எல்லாம் முடிந்த பின் நிலத்தில் கிடக்கும் நெல்லை மட்டும் கூட்டியெடுப்பார்கள். வைக்கோல் தனியாகக் குவியும்.

        அறுவடைக் காலங்களில் சில சமயம் வெட்டப்பட்ட கதிர் நாற்றுக்களுக்குள் சின்னஞ்சிறு குருவிக் கூடுகளிருப்பதைக் கண்டிருக்கிறேன். வயற்குருவி, நெல்லுக்குருவி அல்லது மழைக்குருவியின் கூடாக இருக்கலாம். அதற்குள் சில சமயம் முட்டைகளும், குஞ்சுகளும் கூட இருந்திருக்கின்றன. வண்ண வண்ண முட்டைகளை மூலையொன்றில் ஒன்றாகச் சேர்த்துவைத்திருக்கிறேன். குஞ்சுகளை தாய்ப்பறவை வந்து எடுத்துப் போகட்டுமென அப்படியே கூட்டுக்குள் விட்டு வைத்திருக்கிறேன். மொட்டையாகிப் போன வயலில் தாய்க் குருவிகள் வந்து இரைந்து இரைந்து தன் கூட்டினைத் தேடும். தாய்க் குருவிகளைக் கண்டதும் எனது கைக்குள் கூட்டினை வைத்து வான் நோக்கி ஏந்தி நிற்பேன். அவை ஒரு போதும் அருகினில் வந்து குஞ்சுகளை எடுத்துப் போனதில்லை.

        எங்கள் வீட்டுவேலியில் அடர்ந்து போய்க் குட்டையாகி பூக்காத, காய்க்காத எலுமிச்சை மரமொன்று இருந்தது. அதன் உட்புறத்தில் ஒரு முறை கொண்டைக் குருவிகள் கூடுகட்டி விட்டன. குருவிகள் அருகிலாச் சமயம் ரகசியமாக எட்டிப் பார்ப்பேன். நான் பார்த்திருக்க முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அவையெல்லாம் பறக்கப் பழகியபின்பு கூடு வெறுமையாகிப் போகும். கூடும் இற்றுப் போய்விடும். பிறகோர் நாள் சோடிக் குருவிகள் மீண்டும் பறந்துவரும். புதிதாய்க் கூடு கட்டும். முட்டையிடும். குஞ்சு பொறிக்கும். எல்லாம் பறக்கப் பழகிய பின்பு கூடு இற்றுப் போகும். இப்படியாக ஒரு சுழற்சி முறையில் நடைபெற்று வருகையில் காய்க்காத குட்டை எலுமிச்சை மரம் முட்டைகளைப் பூவாகப் பூப்பது போலவும், குஞ்சுகளைக் காயாக்கிப் பார்ப்பது போலவும் தன்னை மலடென்று காட்டிக் கொள்ளாமல் மகிழ்வோடு காற்றில் அசைந்தாடும்.

        எல்லாம் நல்லபடியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஓர் நாள் ஒரு திருட்டுப் பூனை அம் மரத்தின் கிளைகளுக்கிடையில் ஒளிந்திருந்த சிறு கூட்டைத் தன் பேய்நகங்களால் பிய்த்தெறிந்து குஞ்சுகளை ருசி பார்த்து விட்டது. சோடிப் பறவை வந்து குஞ்சுகளைத் தேடிக் கீச்சிட்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அவை மரத்திடம் இது குறித்து நியாயம் கேட்பது போலத் தோன்றியது. 'நல்லபடியாகப் பார்த்துக் கொள்வாயென்றுதானே உன்னிடம் விட்டுப் போனோம்' எனச் சண்டை பிடிப்பது போலிருந்தது. அதன் பிறகு எக்காலத்திலும் அக்குருவிகள் அம்மரத்தில் கூடு கட்டவென வரவில்லை. பின்னர் எந்தக் குருவிகளும் வரவில்லை. பின்னர் மரம் குற்றவுணர்வால் இற்றுப் போகத் தொடங்கியது.

        என் வீட்டில் சிறு குழந்தைகள் நடமாடத் தொடங்கிய நேரம், வீட்டுத் திண்ணையில் எப்பொழுதும் முறுக்குத் துண்டுகள், பிஸ்கட் துகள்கள் சிதறிக் கிடக்கும். இளங்காலையிலேயே சாம்பல் குருவிகளும், மைனாக்களும் வந்து அவற்றை இரையெனக் கொத்திக் கொண்டிருக்கும். இம் மைனாக்கள் வருவதை வீட்டுச் சிறுவர்கள் மிக நன்றாக அவதானித்திருக்கிறார்கள். சிறுவர்களின் அவதானம் நம்மை விடவும் கூர்மை வாய்ந்தது. மைனாக்களுக்கு முதலில் திண்ணையில் உணவிட்டு, பிறகு தலைவாசலில் உணவிட்டு, பிறகு சிறிது சிறிதாக வீட்டுக்குள்ளேயே வந்துபோகப் பழக்கியிருந்தார்கள். அவை வெகு இயல்பாக உள்ளே வந்து உணவுண்டு சென்றன. அவை வந்து அச்சமேதுமின்றி திருப்தியோடு உண்டு செல்வது வீட்டிலிருந்த எல்லோருக்குமே மிக ஆனந்தமாக இருந்தது. பிறகு வந்த அடைமழை நாட்களில் மைனாக்கள் வரவில்லை. பெய்த மழையில் அவை தங்கள் பழகிய தடங்களை மறந்து போயிற்று. மழை அழித்துப் போயிற்று.



        அதன் பிறகு ஒரு சேவலும் கோழிகளும் வளர்த்தோம். அது அதிகாரம் அதிகமிக்க சிவப்பும் மஞ்சள் நிறமும் கலந்த அழகுச் சேவல். பெரிய சேவல். வீட்டார் தவிர்ந்த வேறு யாராவது நமது வீட்டு எல்லைக்குள் நுழைந்தால் பழக்கப்படுத்திய காவல் நாயைப் போல விரட்டி விரட்டிக் கொத்தக் கூடியது. மேலே பாய்ந்து பாய்ந்து விரட்டக் கூடியது. அது போல இல்லை அதன் பெட்டைக் கோழி. மிகச் சாதுவானது. காலையில் கூட்டினைத் திறந்துவிட்டதும் எங்கோவெல்லாம் போய் மேயும். சரியாகப் பத்து மணிக்கும் பதினொரு மணிக்குமிடையில் வீட்டுக்கு வந்து முற்றத்தில் கிடந்த அதன் கூட்டுக்குள் ஏறி முட்டையிட்டுச் செல்லும். அதன் முட்டைகளைச் சேர்த்து வைத்து நாங்கள் ஒரு முறை அதனை அடைகாக்க வைத்து பன்னிரெண்டு குஞ்சுகளைப் பெற்றோம். கைக்கடக்கமான கோழிக் குஞ்சுகள் மிக அழகானவை. அவையும் பார்த்திருக்க வளர்ந்தன.

        எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கின்றன என எண்ணி மகிழ்ந்த நாட்களில்தான் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட கோழிக் குஞ்சுகள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின. சில காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அனாதைப் பிணங்கள் போல உடலில் காயங்களோடு முற்றத்தில் இரத்தம் வடியச் செத்துக் கிடந்தன. பிறகுதான் இரவுகளில் திருடனைப் போல வரும் கீரிப் பிள்ளைகள் வேட்டையைக் காட்டுவது புரிந்தது. நாம் ஆசையாகப் பார்த்து இரசித்து வளரும் உயிர் கண்ணெதிரே செத்துக் கிடப்பதை காணச் சகிக்கமுடிவதில்லை ஒரு போதும். மிகுந்த கவலையடையச் செய்யும் கணம் அது. பிறகு எஞ்சியிருந்த எல்லாக் கோழிகளையும் அதன் குடும்பத்தோடு விற்றுவிட்டோம்.

        அதன் பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யமானது. முற்றத்தில் கோழிக்கூடு பாழடைந்து போய் வெறுமையாகச் சில மாதங்கள் அப்படியே கிடந்தன. நான் அதைப் புதுப்பித்தேன். கீரிப்பிள்ளைகள் வந்துபோன ஓட்டைகளை அடைத்தேன். நெளிந்திருந்த வலைக்கம்பிகளைச் சீரமைத்தேன். உயிர்கள் வாழ்ந்துபோன பரப்பு வெறுமையாகக் கிடக்கக் கூடாதென நான் வீட்டில் சொல்லி, கழுத்தில் சிவப்பு மாலையிட்ட பச்சைக் கிளியொன்றை கடையில் வாங்கிவந்து வளர்க்கத் தொடங்கினேன். அது பேசப் பழக்கும் பருவம் தாண்டிய கிளி. கூட்டுக்குள் தவறியேனும் விரலொன்றை இட்டால் கொத்திவிடும் முரட்டுக்கிளி. கொய்யாவும், பச்சை மிளகாயும், பழங்களும், பிசைந்த சோறும், பிஸ்கட்டும் இட்டுவளர்த்து வந்தோம். அதன் கூட்டுக்குள் எப்பொழுதும் பழங்களும் உணவுப் பொருட்களும் இறைந்து கிடக்கும்.

        இதுபோல கோடை நாளொன்றின் மாலைவேளையொன்றில் அந்தக் கிளிக் கூட்டிற்கு வெளியே அடைக்கப்பட்ட வலைக்கம்பிகளில் தொங்கியபடி இன்னுமொரு கிளியைக் கண்டோம். கூட்டுக்குள்ளிருந்த கிளி தன் உணவைக் கொத்தியெடுத்து, வெளியிலிருந்த கிளிக்குத் தன் சொண்டுகளால் ஊட்டிக் கொண்டிருந்தது. இது சில நாட்கள் தொடர்ந்தது. ஒரு நாள் கூட்டின் கதவை இலேசாகத் திறந்துவைத்து தூரத்திலிருந்து பார்த்திருந்தேன். பல நிமிடங்கள் கழிந்தபின்னர் வெளியிலிருந்த கிளி தானறியாமலே உணவின் மேல் ஈர்க்கப்பட்டு, அல்லது மற்றக் கிளியின் மேல் ஈர்க்கப்பட்டு கதவு வழியாகக் கூட்டுக்குள் வந்துவிட்டது. கதவை அடைத்து விட்டேன்.

        அவை இரண்டும் கூட்டுக்குள் இடைவிடாது காதல் செய்தன. இரண்டுமாகச் சேர்ந்து உணவிடும்போது,  தண்ணீர் வைக்கும் போது என் கைகளைக் கொத்திக் காயப்படுத்தின. இனி வளர்க்கச் சரிப்பட்டு வராது என உணர்ந்த நாளில் கூட்டினைத் திறந்து கிளிகளைப் பறக்கவிட்டேன். சடசடத்துப் பறந்த கிளிகள் அருகிலிருந்த மாமரத்தில் போய் நின்றன. பிறகு எங்கோ தொலைவு நோக்கிப் பறந்தன. எப்பொழுதாவது சில கிளிகள் மாம்பழம் கொத்த வருகையில் அவற்றுக்குள் அவையிரண்டையும் கண்களால் தேடுவேன்.

        பிறகு அதே கூட்டுக்குள் லவ்பேர்ட்ஸ் வளர்த்தேன். கிளிவகைதான் எனினும் சிறியவை. பல வர்ணங்களைக் கொண்டவை. விடிகாலையில் எழுந்ததுமே வாய் ஓயாத மனிதர்களைப் போலச் சத்தமாகக் கதைத்துக் கொண்டிருப்பவை. மிக அழகானவை. இரு சோடிகள் வாங்கிவந்து கூட்டினுள் இட்டேன். ஆணும் பெண்ணுமாகத் தனித்தனியே பிரிந்து அவை காதல் செய்தன. கொஞ்சிக் கொண்டன. பருகவென வைக்கும் நீரில் குளித்துக் கொண்டன. பட்சிகளை விற்றவரின் ஆலோசனைப் படி கூட்டுக்குள் செதுக்கித் துளையிட்டு மூடிய தேங்காய் மட்டைகள் இரண்டைத் தொங்கவிட்டேன். அவை முட்டைகளிட்டன. அடை காத்தன. குஞ்சுகள் பொறித்து அவையும் வளர்ந்து பெரிதாகின. இதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஆண் பட்சிக்கோ, பெண் பட்சிக்கோ சோடி இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சோடியில்லையென்றால் அத் தனிப் பட்சி மற்ற எல்லாப் பட்சிகளோடும் மிக மூர்க்கமாக, இரத்தம் கசியச் சண்டையிடும். கொத்திக் கொள்ளும்.

        அதனால் கூட்டுக்குள் தனிப்பட்சி உருவாகினால் உடனே அதனை வேறு தனிக்கூட்டுக்கு மாற்றி அதை மட்டும் விற்றுவிடுவேன்.  இப்படியாகக் குருவிகள் பார்த்திருக்கப் பெருகிற்று. உணவிட்டுச் சமாளிக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியாக தேங்காய் மட்டைகளைத் தொங்கவிடக் கூட்டுக்குள் இடமற்றுப் போயிற்று. அதைவிடவும் முக்கியமாக, விடிகாலையில் எல்லாமாக எழுப்பும் சத்தத்தில் வீட்டில் எல்லோரினதும் உறக்கம் போயிற்று. பிறகு அவற்றை அக் கூட்டோடே விற்றுவிட்டோம். இப்பொழுது முற்றத்தில் எந்தக் கூடுகளும் இல்லை. வளர்ப்புப் பட்சிகளும் இல்லை.

        இவையெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள். நாம் நேசித்துப் பாதுகாக்கும் எதுவும் நம்மை விட்டுப் பிரிந்துபோனால் எளிதில் மறந்துவிடுவதற்கில்லை. பறவைகள் வானில் பறக்கையில் தங்கள் தடங்களை விட்டுப் போவதில்லை. மனிதக் கண்ணுக்குப் புலப்படா வான்வெளிப் பாதைகளை அவை தம் விழிகளில், பறக்கப் பயன்படும் சிறகுகளில் ஒளித்துவைத்துக் கொண்டிருக்கின்றன.  சரியான திசையில், சரியான இலக்குகளுக்குப் போய்ச் சேர அப் பாதைகள் வழிகாட்டுகின்றன. பாதைகள் மட்டுமிருப்பினும் போதாது. பறக்கும் சுதந்திரம் வேண்டும். வாழும் சுதந்திரம் வேண்டும். தனது இருப்பைத் தான் தீர்மானிக்கும் உரிமை வேண்டும்.

        பட்சிகளுக்கே இப்படியென்றால் ஆதி முதல் ஒன்றாக வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனிடமும் வாழ்வு குறித்தான எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்? எவ்வளவு ஆசைகள் அவனை வழிநடத்தியிருக்கும்? சுதந்திரமாக, தனது இருப்பை, தனது பாதையைத் தேர்ந்தெடுத்த மனிதன் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பான்? அவனது வசிப்பிடங்களில் பிற ஏதேனுமொரு காரணியால் அவனது அமைதிக்குப் பங்கம் வரும்வரையில் நான் மேற்சொன்ன லவ்பேர்ட்ஸ் பறவைகள் போல ஒன்றாகச் சோடியாகக் கலந்து மகிழ்வாகப் பேசி மகிழ்ந்து, சிரித்து... ஒவ்வொரு மனிதனும் தன் கணங்களை மகிழ்வோடு நகர்த்தியிருப்பான்.

        அது போன்ற மனிதர்கள்தான் இன்று முள்வேலி திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு  நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். எனக்கே நான் நேசித்த பட்சிகள் குறித்தான நாட்கள் இன்னும் மறக்கவில்லை. நினைக்கும் கணந்தோறும் அவை வண்ணச் சிறகுகளை அசைத்தபடியும் அதன் மொழிகளை உதிர்த்தபடியும் மனம் முழுதும் பறந்துகொண்டே இருக்கின்றன. தனக்கான மண்ணில் அழகாகக் கூடுகட்டி வாழ்ந்து, ஆயுதங்களின் அறுவடை நாளில் தம் கூட்டினைக் குடும்பத்தைத் தொலைத்துத் தனித்துப் போன அப்பாவி வயற்குருவிகளாய் இன்று அடுத்தவேளை உணவை, நீரை அந்நியரிடம் எதிர்பார்த்தபடி பசியோடும், உடல் வருத்தங்களோடும் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களுக்குள் எத்தனை பட்சிகள் இருக்கும்? பட்சிகளை விடுவோம். அவர்களது பால்யங்களுக்குள், பழைய நாட்களுக்குள் வந்துபோனவர்கள் சுகமாயும், வலியாயும் எத்தனை தடங்களை விட்டுப் போயிருப்பார்கள் ? அந்த மனங்களுக்குள் தாம் நேசித்த எத்தனை எத்தனை மனிதர்கள் இருப்பார்கள்? தம் வாழ்வு குறித்தான எத்தனை எத்தனை கனவுகள், ஆசைகள் இருந்திருக்கும்? எல்லாம் பொசுங்கிப் போயிற்றா ?

        நான் ஒற்றைக்கிளிக்கு உணவிட்டுக் காட்டி, தந்திரமாக மற்றக் கிளியையும் பிடித்ததைப் போல, பத்து ஏக்கர் நிலத்துக்குள், பல இலட்சம் மக்கள் சேர்க்கப்பட்டு, இன்று அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முள்வேலி எல்லைக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். கோழியின் குஞ்சுகளைக் கீரிப் பிள்ளைகள் இழுத்துச் சென்று, இரத்தம் வடிய வடியக் கொன்று தின்றதைப் போல இளைஞர்கள், யுவதிகள் ஏதும் செய்யவியலாக் கதறல்களுக்கு மத்தியில் எந்தத் திசைக்கென்றறியாது, என்ன நோக்கங்களுக்கென்றறியாது இழுத்துச் செல்லப்படுகிறார்கள். வாழ்வு குறித்தான உரிமைகளும், ஆசைகளும், கனவுகளும் அப்படியே அழிந்து போக சடலங்களாகிப் போகிறார்கள். முள்வேலிக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எல்லா உயிர்களின் வாழும் உரிமையை, இருப்பின் அசைவுகளை அதைத் தாண்டிய ஆயுதக் கரங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.

        நம் உடலில் சாதாரண ஒரு சிறு கீறலுக்கே எவ்வளவு துடித்துப் போகிறோம்? சிறு உராய்வு, குருதிக் கசிவுக்கே எத்தனை மருந்திடுகிறோம்? அங்கெல்லாம் அழிவாயுதங்கள் தம் பசி போகச் சப்பித் துப்பியவையாய் அங்கவீனர்களாக கை இழந்து, கால் இழந்து எஞ்சிய உயிரோடும், எஞ்சிய உடலுறுப்புக்களோடும் ஒழுங்கான மருத்துவ வசதிகளின்றி, வலிகளில் துடித்தபடி பல்லாயிரக் கணக்கானோர், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகப் பரிதவித்துக் கிடக்கிறார்கள். உறவுகள் அழுதழுது ஓய்ந்து பார்த்திருக்கப் பலர் செத்துப் போகிறார்கள். இன்னும் ஒரு வேளை உணவின்றி, நீரின்றி பட்டினியால் பலர் செத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் நேசிக்கும் உயிர்கள் நாம் பார்த்திருக்க உயிரற்றுப் போவதென்பது, அசைவற்றுப் போவதென்பது எவ்வளவு வேதனைக்குரிய விடயம்? எவ்வளவு துயரத்தை அது எடுத்துவரும்?

        அந்தத் துயரங்களையெல்லாம் மனதிலும் உடலிலும் சுமந்தவாறு அங்கு உங்கள் தாய், தந்தையரைப் போன்றே பெற்றவர்கள் இருக்கிறார்கள். உங்கள் நண்பர்களைப் போன்றே நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் பெண்களைப் போன்றே பெண்கள் இருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளைப் போன்றே குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லோருமாக மொத்தத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். எல்லோருக்குமாக வதைப்படவும் ஆயுதங்களாலும், பட்டினியாலும், நோயாலும் செத்துப் போகவும் இப்பொழுது இருப்பவர்கள் மட்டும் போதும்.

        இன்னும் முந்தைய வலிகளின்போது வடுக்கள் சுமந்து, உயிர் வாழவென அகன்றுபோய் வேற்று தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களையெல்லாம் மீளவும் தம் தேசத்துக்கு அழைத்துக் கொள்ளப்போவதாகக் காற்றோடு வரும் செய்திகள் சொல்கின்றன. இருப்பவர்களுக்கே இடமற்று, உணவற்று, நீரற்றுப் போனநிலையில், இருப்பவர்களுக்கே வாழும் உரிமைகளற்ற நிலையில், எம் அகதிகளை ஏந்தியிருக்கும் நாடுகளே... அது மட்டும் உண்மையானால்,  உங்களையே நம்பிவந்த எம் மக்களை, உங்கள் சக மனிதர்களை இம் முட்சிறைகளுக்குத் திருப்பியனுப்பிவிடாதீர்கள்.  உங்கள் தேசத்தின் ஒரு மூலையில் அவர்கள் உயிருடனாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.

        கொல்லும்போது வெறுமனே பார்த்திருந்தது போல, கொல்லப்படவும் மனிதர்களை அனுப்பி அவர்களது கண்ணீரால், இரத்தத்தால், உயிர்களால் உங்களுக்கான சாபங்களை நிரப்பிக்கொள்ளவேண்டாம்.
இறுதியாக எனது பழைய கவிதையொன்று !




எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்


காற்றினைப் போல்
எங்கள் வாழ்க்கை
ஓரிலக்கில்லாமலும்...
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்...

ஓடும் நதியினைப் போல்
எங்கள் பயணம்
ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்...
திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்...

வானவில்லினைப் போல்
எங்கள் சந்தோஷம்
நிலைத்து நிற்காமலும்...
உடனே கலைந்து போவதாயும்...

மயானபூமியைப் போல்
எங்கள் கனவுகள்
பயமுறுத்தும் அமைதியோடும்...
எலும்புக்கூடுகளின் ராஜ்ஜியங்களோடும்...

பாழடைந்த வீட்டினைப் போல்
எங்கள் எதிர்காலம்
எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டும்...
எவராலும் கவனிக்கப்படாமலும்...

மீஸான்கட்டைகளைப் போல்
எங்கள் சமூகம்
அழிந்துகொண்டே இருப்பதாயும்...
அடையாளத்துக்காக வேண்டி மட்டுமாயும்...

மணல்மேட்டினைப் போல்
எங்கள் தேசம்
சரிந்துகொண்டே இருப்பதாயும்...
விலங்குகளின் எச்சங்களைச் சுமந்துகொண்டும்...

ஊசலாடும் ஒட்டடைகளைப்போல்
எங்கள் உயிர்கள்
எவராலும் வேண்டப்படாத குப்பையாயும்...
எப்பொழுதிலும் அறுந்துவிழக்கூடியதாயும்...

எங்களது உயிர்கள்
எடுக்கப்படும் கணப்பொழுதுகளில்
என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..
ஓர் அழகிய பாடலின்
ஆரம்ப வரிகளை
முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?

* மீஸான் கட்டை - கல்லறை அடையாளம் / நடுகல்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


# நன்றி - யுகமாயினி இதழ் - ஜூலை, 2009

# நன்றி - புகலி இணைய இதழ்
# நன்றி - திண்ணை இணைய இதழ்
Author: வந்தியத்தேவன்
•7:09 PM
ஈழத்தின் மூத்த கவிஞர் இ.முருகையன் பற்றிய தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்ட நினைவு மலர் சில நாட்களும் முன்னர் வாசிக்க கிடைத்தது. அதனைப் பற்றிய சிறிய விளக்க குறிப்பே இந்தப் பதிவு.



மூத்த கவிஞர் இ.முருகையன் என்ற தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் திரு.சோ.தேவராஜாவின் குறிப்புடன் கவிஞர் முருகையனின் வாழ்க்கை குறிப்பு ஆரம்பிக்கின்றது.

முருகையனின் படைப்புலகும் மொழிச் சிந்தனையும் என்ற தலைப்பில் திரு.சி.சிவசேகரம் அவரது மொழி ஆற்றல் பற்றி எழுதியிருக்கிறார்.

" தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்க்கு முருகையன் ஆற்றிய பணியைப் பற்றி அவருடன் அரச கரும மொழித் திணைக்களத்திற் பணியாற்றியோர் மட்டுமே முழுமையாக அறிவர். தமிழில் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் கற்பிக்கத் தேவையில்லை என்று நினைத்தோருக்கும் தமிழரின் வாயிற் புதிய கலைச் சொற்கள் நுழையாத விதமாக அவற்றைப் புனைவோருக்கும் நோக்கங்கள் வேறாயிருந்தாலும் அவர்களது போக்கிற் போக விட்டிருந்தால் நவீனச் சிந்தனைகளைத் தமிழிற் கூறுவது இயலாமலே போயிருக்கும். 1957 முதல் 1960களின் இடைப்பகுதிவரை முற்போக்கான பார்வையுடைய அறிஞர்களுடன் இணைந்து முருகையன் ஆற்றிய பணியின் விளைவாகத் தமிழ்க் கலைச் சொற்கள் வளமும் செழுமையும் பெற்றன."

இவ்வாறு திரு.சிவசேகரம் முருகையனின் மொழி ஆற்றலைப் பட்டியலிடுகின்றார்.

கவிஞர் கல்வயல்.வே.குமாரசாமியின் முருகையன் என்ற எண்சீர் விருத்தக் கவிதையும் இரண்டு வெண்பாக்களும் முருகையனின் சிறப்பை இயம்புகின்றன. (கவிதையில் நான் கொஞ்சம் பலவீனம் அந்தக் கவிதைகள் என் பார்வைக்கு வெண்பாவாகவும் எண்சீர் விருத்தமாகவும் தெரிந்தபடியால் அப்படி எழுதியிருக்கின்றேன்)

"கவிதை, கட்டுரை, நாடகம், பா நாடகம், பாட்டுக்கூத்து, வானொலி நாடகம், பாடநூலாக்கம், கலைச் சொல்லாக்கம், மொழி பெயர்ப்பு முதலான பல்வேறு துறைகளில் முருகையன் ஈடுபட்டார். செய்வன திருந்தச் செய்யும் சங்கற்பத்துடன் அவர் செயற்பட்டதால் அவர் தொட்டன யாவும் துலங்கின" என பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் தன்னுடய மானிட முன்னேற்றத்தை விழைந்த முருகையன் என்ற கட்டுரையில் முருகையனின் பல்வேறு துறைகள் பற்றி கூறியிருக்கின்றார்.

1960களின் தொடக்கத்தில் நன் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஆதர்சமாக அமைந்த மூன்று முக்கியமான கவிஞர்களுள் முருகையனும் ஒருவர், மற்றவர்கள் நீலாவணன் ,மஹாகவி என ஈழத்தின் கவிதை மூம்மூர்த்திகள் பற்றி ஆரம்பித்து முருகையன் பற்றிய பல்துறை ஆய்வுகள் பற்றிய சுருக்கமான விடயங்களுடன் வீரகேசரியில் வெளிவந்த, பேராசிரிய எம்.ஏ.நுஃமானின் "தன் படைப்புகளால் நிலைத்து வாழும் முருகையன்" என்ற கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றது.

"முருகையன் பொதுவுடமை இயக்கத்தின் மாக்சிச லெனினிச நிலைப்பாட்டை முன்னெடுத்த கட்சியுடனும் அதன் தோழர்களோடும் நெருக்கமாக இருந்து வந்தார். கட்சியின் முடிவுகள் தீர்மானங்கள் பற்றி அறிந்துகொள்வதிலும் அவை பற்றிய தனது கருத்துகள் ஆலோசனைகளை முன் வைப்பதிலும் அவர் தனது பங்கை வகித்து வந்தார்" என்று சி.கா.செந்தில்வேல் முருகையன் அவர்கள் எப்படி ஒரு பொதுவுடமைவாதியாக இருந்தார் என்ற கருத்துகளை "பொதுவுடமை இயக்கத்திற்க்கு உரமிட்டு நின்றவர்" என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

"செம்மை+எளிமை= முருகையன்" என்ற தலைப்பில் சோ.பத்மநாதன் எழுதிய அவரின் கவிதைகள் பற்றிய சுருக்கமான கட்டுரையில்

"வாயடைத்துப்போனோம்
வராதாம் ஒரு சொல்லும் "

என்ற யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டபோது பாடியது.
"இரண்டாயிரம் வருடப்
பழைய சுமை எங்களுக்கு "

என்பது ஓர் அற்புதமான கவிதை. தமிழர் சமுதாயம் மீது வைக்கபப்ட்ட துணிச்சலான விமர்சனம்.

என முருகையனின் கவிதைகள் பற்றிய தன் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்துகின்றார்.

"இரண்டாயிரம் வருடப்
பழைய சுமை எங்களுக்கு "

என்ற கவி வரிகளை வைத்து
"தமிழ் மக்களும், சிங்கள மக்களும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட, கவிஞர் முருகையன் குறிப்பிடும் "இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமையை" இறக்கி வைக்க இயலாதவர்களாக தமது வாழ்க்கைப் பயணத்தை இடர் மிகுந்த காட்டு வழியில் துயரங்கள் இழப்புகளுடன் தொடர நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்" என "கவிஞர் முருகையனின் ஒரு கவிதைப் படிமம்" என திரு. க.தணிகாசலம் குறிப்பிட்டுள்ளார்.

"பாடு பொருளையும் செய்யுள் வகைகளையும் பொறுத்தவரை, ஈழத் தமிழ் கவிதை, இலக்கியப் பரப்பில் விரிவும் ஆழமும் கொண்ட கவிதைகளைப் படைத்தோருள் அவர் முதன்மையானவர் என்பேன். அவரது பா நாடகங்களும் குறுங்காவியங்களும் ஈழத் தமிழ்க் கவிதைக்கு பெருமை சேர்ப்பன. அனைத்திலும் மேலாக அவரது செய் நேர்த்தி அனைவரும் பின்பற்ற உகந்தது. " என புதிய பூமியில் திரு.சிவா என்பவர்களால் எழுதப்பட்ட "முருகையனின் கவிதையின் உயர்வும் உன்னதமும்" என்ற ஆக்கமும் சுவையாக இருக்கின்றது.

இது தவிர தேசிய கலை இலக்கிய பேரவை வவுனியாக் கிளை, சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன் , பயில்நிலம் மாணவர்கள், புதிய மலையகம் மகேந்திரன், எஸ்.டொன் பொஸ்கோ போன்றவர்களின் கண்ணீர் அஞ்சலிகளும், இதயராசன், பூமகன், மு.நாவலன், சிங்காரம் மலர், அழ பகீரதன் போன்றவர்களின் கவிதாஞ்சலிகளும் முருகையன் புகழ் பாடுகின்றன.

பின்னிணைப்பாக கவிஞர் முருகையனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளும் கட்டுரைகளும், அத்துடன் இவரின் நூல்களின் பட்டியல்களும் நாடகங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளன.

சிறிய நூலாக இருந்தாலும் முருகையனின் பெருமைகளை திறம்படச் சொல்லியிருக்கும் பாங்குக்கு தமிழ்பேசும் நல்லுலகம் என்றைக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு நன்றியுடையவர்களாகவே இருக்கும்.

மூத்த கவிஞர் முருகையன் அவர்கள் தமிழ்க் கவிதைக்கு மிக்க வளஞ் சேர்த்தவர். அவரைக் "கவிஞர்க்குக் கவிஞர்"(A poet's Poet) எனப் பேராசிரியர் கைலாசபதி அழைத்தது வெறும் புகழுரையன்று. அது அவர் ஆய்ந்தறிந்து சொன்ன பேருண்மை. கவிஞர் என்ற வகையிலும் கவிதை சார்ந்த படைப்புகளுடுமே பலரும் முருகையன் அவர்களை அறிவர் என்பதாற் திறனாய்வு, மொழியியல், மொழி பெயர்ப்பு முதலாய பல்வேறு துறைகளிலும் அவரது சீரிய பங்களிப்புப் பற்றிப் பேசப்படுவது குறைவு. எனினும் முருகையன் அவர்களது பெருஞ் சிறப்பு மானிடஞ் சார்ந்த, விஞ்ஞான ரீதியான, மனித நேய உலக நோக்கு. அதுவே அவரை நெறிப்படுத்தியதும் நம்மனைவர்க்கும் இனிய ஒருவராக அவரை என்றென்றும் வைத்திருபதுமாகும். அவரது அமரத்துவமான ஆக்கங்களுடும் அதுவே நம்முடன் தொடர்ந்து வாழும்.
Author: வந்தியத்தேவன்
•1:52 AM
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பில் எம்மவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஈழத்துமுற்றம் இயங்குவதுபோல் எமக்கான ஒரு கூகுள் குழுமத்தை அமைத்திருக்கின்றோம்.

இதில் இலங்கையில் இருக்கும் பதிவர்கள் மட்டுமன்றி ஏனைய நாடுகளில் இருக்கும் சொந்தங்களும் இணைந்து உங்கள் கருத்துகளைப் பரிமாறலாம். இதன் மூலம் எங்கள் உறவுகள் வலுவடைவதுடன் நிறையப் பிரச்சனைகளைப் பேசித்தீர்க்கலாம்.

ஆகவே இந்தக்குழுமத்தில் இணைந்து எம்முடன் கைகோருங்கள். அத்துடன் உங்கள் ஆக்கங்களின் தொடுப்புகளை இங்கே பதிவதன் மூலம் மேலும் பலரிடம் உங்கள் படைப்புகள் எடுத்துச் செல்லப்படும்.

நன்றி,

Group Address : http://groups.google.com/group/srilankantamilbloggers
Author: சயந்தன்
•1:15 AM
இதுவும் இலங்கை உணவுப்பழக்கங்களைக் குறித்தான ஒரு ஒலியுரையாடல். பிட்டு சொதி என்று நீள்கிறது. சோமிதரன் மற்றும் என்னோடு இடையில் சிநேகிதியும் வந்திட்டு போயிருக்கிறா.. கேட்டுப்பாருங்கள். ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஆண்டு 2007 யூன்