Author: M.Rishan Shareef
•6:18 PM
காலச்சுவடு பதிப்பகம் மற்றும் தமிழியல் இணைந்து நடத்தும் எட்டு ஈழத்து நூல்களின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 03, 2010) மாலை ஆறு மணிக்கு, இந்தியா, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது.


இது சம்பந்தமாக காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் திரு.கண்ணன் சுந்தரம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் திரு.கானா பிரபாவுக்கு வழங்கிய அறிமுகம் கீழே...






Author: கரவைக்குரல்
•10:55 AM
ஈழத்து முற்றத்திலிருந்து மகிழ்ச்சியுடன் உல்லாசமாயிருக்கும் அனைத்துப்பதிவர்களுக்கும் வணக்கம்.
நானும் உங்களுடன் இணைந்துகொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி.
ஆரம்பத்தில் என்ன பதிவிடுவது என்ற சின்ன எண்ணச்சிக்கலில் இருந்த எனக்கு இதன் ஆரம்பகர்த்தாவாகிய கானாவின் ஆமோதித்தலுடன் என் கரவைக்குரல் பதிவில் இட்ட பதிவை மீள்பதிவிடுகிறேன்,ஏனென்றால் இது எம் ஈழத்துடன் கொஞ்சம் தொடர்புபட்ட பதிவாகையாலும் ஈழத்துமுற்றத்தில் இருக்கும் எல்லா பதிவர்களும் பார்த்திருப்பார்களோ என்ற எண்ணத்தினாலும் இதை மீள்பதிவிடுகிறேன்,



"சீனப்பா சீனப்பா" என்று ஒருவர் இருந்தார் கரவெட்டி கோவிற்சந்தைக்கு கிட்டடியில்.இது ஏதோ அரசகதை சொல்ல தொடங்குவது போலல்லவா இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகனசேவை ஓடி பிரசித்தமான ஒருவர்.அவரைத்தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் தொடர்ந்து சேவை செய்தவர்கள்
இதை ஏன் சொல்கிறேனென்றால் இவர்கள் கையில்தான் தட்டி வான் என்று சொல்லப்படும் ஒருவாகனத்தை நான் சிறுபராயம் முதலே கண்டவன். இப்போது ஒரு சில வாகனங்கள் கொடிகாமத்துக்க்கு ஓடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது ஈழத்திலிருந்து.

தட்டிவானில் நானும் பயணித்தவன் ஒரு சிலகாலங்கள் பாடசாலைக்கு.அதில் பின்னுக்கு உள்ள தட்டியில் நின்று செல்வதில் ஒரு அளவுகடந்த சந்தோசம். அதுவும் இன்னும் ஒருவிடயம் ஊர்களுக்கு இடையிடையே இந்த தட்டிவான் பயணிக்கும்போது சிறுபராயம் ஆகையால் சத்தம்போட்டு,கும்மாளம் அடித்து செல்வது வழமை.
வாகனத்துக்கு முன்னே ஆசிரியர் ஈஸ்வரநாதன் இருப்பார். அவர் கொஞ்சம் " என்ன..... சத்தம் ......." என்று கேட்க கொஞ்சம் குறையும். பின்னர் அதுவும் கொஞ்சம் மறந்து போக அது கூடும்.



ஒரு நாள் வழமை போலவே சத்தங்கள்போட்டவாறே ஊர்களுக்கு இடையிலே வாகனம் நகர்ந்து செல்கிறது. அணிஞ்சிலடி என்று சொல்லப்படும் ஒரு இடம், அங்கு கொஞ்சம் உள்ளுக்குள் தென்னைகள் அதிகம். அது அங்கிருந்தவகளுக்கு நன்றாகத்தெரியும். அதில் உள்ள தென்னைகளில் உள்ள தென்னோலைகளை ஒவ்வொன்றாக இழுத்து அதை முறிதெடுத்து கொடிகாமம் வீதிவழியே இழுத்துக்கொண்டவாறே ;சென்று அதை சாமியன் அரசடியில் விடுவதில் மிகப்பெரிய சந்தோசம் சிறுவர்களுக்கு. இதை முன்னால் இருந்த ஆசிரியர் அவதானித்தாலும் யார் இதை செய்கின்ற மகான் என்று அவருக்கு தெரியாது.கடைசியில் ஒரு நாள் முடிவெடுத்து எல்லொருக்கும் கொஞ்சம் பதம் பார்த்தார் ஆசிரியர் பக்கத்திலிருந்த பூவரசு மரத்தடியினால்.இதில் கோசலன் மற்றும் நான் எல்லோரும் அடிவாங்கியதாக நினைவு
இப்படி ஒருவித்தியாசமான சுகங்கள் இந்த வாகனத்தில்.
இப்படியான தட்டிவான்கள் இப்போதும் கொடிகாமத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு தட்டுப்பாடான காலத்தில் இந்த வாகனம் மிகப்பெரும் உதவியாக இருந்தது என்பது உண்மைதான்.இப்போது அந்த வாகனம் "அவ்வளவு சரியில்லை" என்றும் "நாகரிகம் இல்லை" என்றும் ஒதுக்கிவருவதும் சுட்டிக்காட்டபட வேண்டிய விடயம். அதை விட்டுவிட்டு இப்போது நாகரிகமான வாகனங்கள் தேடிவருவதும் அறிய முடிகிறது.இந்த வாகனத்தை வைத்திருப்பவர்களும் அதேபோல வடமராட்சி பிரதேசத்தில் இந்த வாகனம் ஓடுவது பற்றி சிலர் நையாண்டி பண்ணுவதும் காணமுடிந்தது.
இது நம்பாதைகள் பற்றி சிந்திக்காத,அறியாத நம்மவர்கள் உள்ளத்திலுருந்து வந்து அவர்கள் வாயினூடாக மட்டும் தான். ஆனால் கொடிகாமசந்தைக்கு இது தான் இருக்கின்ற வாகனங்களில் சிறப்பு.
இப்படியான வாகனம் போலவே ஐக்கிய அரபு இராச்சியம் டுபாயிலும் காணமுடிந்தது.
அதுவும் பாடசாலை சேவைக்கே முற்றுமுழுதாக பயன்படுத்திவரப்படிகிறது.முற்றிலும் சிறிய அளவிலான யன்னல்கள் சூழ்ந்திருக்க ஒருவழிப்படுத்தபட்ட பாதுகாப்பான கதவு,ஆனால் இங்கு தட்டி என்று சொல்லப்படும் பின்னுக்கு அமையும் பகுதி இல்லை.சிலவேளைகளில் தென்னோலை விளையாட்டைப்பற்றி கேள்விப்பட்டாங்களோ தெரியாது.இங்கும் பிள்ளைகள் சந்தோசமாக செல்லும்போது இந்த பதிவு என்னை இடச்செய்திருக்கிறது.அதுமட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளிலும் அதேபோல அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது சேவையில் இருக்கிறது என்று அறிய முடிகிறது.
மொத்தத்தில் தட்டி வான் என்பது யாழ்ப்பாணத்தில் அருகிவருகிறதோ என்று சிந்தித்த போது அது டுபாய் மற்றும் மற்றைய நாடுகளில் ஓடுவது அதன் இருப்பை தெளிவுபடுத்தியிருக்கிறது.,
Author: Unknown
•9:43 AM
'சினேகிதி' போட்ட 'வெள்ளி பார்ப்பம் வாங்கோ' பதிவுதான் இந்தப் பதிவுக்குத் தூண்டி. அதனால சினேகிதிக்கு முதற்கண் நன்றி. இந்த வெள்ளி பார்த்தல் என்கிற சொல்லாடல் இன்னும் ஒரு கோணத்திலும் பயன்படுவதுண்டு அல்லவா? அது பற்றின பதிவுதான் இது.

இந்த ‘வெள்ளி பார்த்தல்' என்ற சொல்லை அடிக்கடி ஆசிரியர்களிடம்தான் நான் கேட்டிருக்கிறேன். சில சமயங்களில் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தில் மனம் லயிக்காமல் வேறெங்காவது மனம் ஓடிவிடும். எப்படித்தான் கண்டுபிடிப்பார்களோ தெரியாது, சரியாகக் கண்டுபிடிப்பார்கள் ஆசிரியர்கள். ஏதாவது கேள்வியைக் கேட்க, நாங்கள் முழிக்க, ‘வகுப்பில பாடத்தைக் கவனிக்காமல் என்ன வெள்ளி பாத்தனியே' என்பது பல ஆசிரியர்கள் சர்வசாதாரணமாகப் பயன்டுத்தும் ஒரு திட்டு வசனம். அதிலும் எங்களுக்கு கணிதம் படிப்பித்த ஆசிரியர் ஒருவர் ‘எத்தினை வெள்ளியெண்டு எண்ணியாச்சே' என்று கேட்டு நக்கல் செய்வார்.

அதாவது இந்த சந்தர்ப்பங்களில் 'வெள்ளி பார்த்தல்' என்பது நிகழ்காலத்தில் நடப்பதை விடுத்து வேறேதாவதைப் பார்ப்பது என்கிற பொருளில் பயன்படுகிறது. கிட்டத்தட்ட இதே பொருளில் ஏமிலாந்துதல், வாய் பார்த்தல், பிராக்குப் பார்த்தல் (பராக்குப் பார்த்தல்) போன்ற சில சொற்களையும் பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு ஏதாவது ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளை வீட்டில் அப்பா அல்லது அம்மாவிடம் ‘அது எங்களுக்கு படிப்பிக்கேல்லை' என்று காரணம் சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அடிக்கடி நான் சொன்ன காரணங்களில் இது ஒன்று). அப்பா அல்லது அம்மாவிடமிருந்து இப்படியான பதில்களை எதிர்பார்க்கலாம்:

'உன்னை நம்பேலாது... நீ பாடம் படிப்பிக்கேக்கை எங்கையாவது வெள்ளி பாத்துக் கொண்டு இருந்திருப்பாய்'
அல்லது
‘நீ எங்கையாலும் ஏமிலாந்திக்கொண்டு இருந்திட்டு ஏன் படிப்பிக்கேல்லை எண்டு பொய் சொல்லுறாய்'
அல்லது
‘அவயள் படிப்பிச்சிருப்பினம். நீ வகுப்பில எங்கயாலும் வாய் பார்த்துக் கொண்டு இருந்திருப்பாய்'
அல்லது
'பாடம் நடக்கேக்கை எங்கையாலும் பராக்குப் பாத்துக்கொண்டு இருந்திட்டு, பொய்ச்சாட்டு சொல்லிறியோடா?'

மேற்படி சொற்களை வேறு வேறு சந்தர்ப்பங்களில் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான அர்த்தங்களில் பயன்படுத்துவார்கள். பகல் கனவு காணுதல் என்பது கூட ‘வெள்ளி பார்த்தல்' என்பதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான ஒரு சொல்லாடல்தான். சினேகிதி சொன்னது போல வெள்ளி (நடசத்திரம்) பார்த்தல் என்பது அழகான பல நினைவுகளை மீட்டித்தரும் ஒரு அனுபவம். அதுவும் விஞ்ஞான பாடத்தில் இந்த நட்சத்திரக் கூட்டங்கள் பற்றிப் படித்த உடனே அந்த வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு இரவுப் பொழுதுபோக்காகிவிடும். அப்படி இரவில் பார்க்கவேண்டிய வெள்ளியை, பகலில் பார்க்கும், இல்லாத ஒன்றில் கவனத்தைச் சிதறவிடும் செய்கையைத்தான் வெள்ளி பார்த்தல் என்று சொல்லுவார்கள்.

வெள்ளி பார்த்தல் பற்றிய சுவாரஸ்யமான அனுபவங்கள்
ஒரு முறை எங்களின் விஞ்ஞான ஆசிரியர் திரவியநாதன் ஏனோ திடீரென்று மகாபரதத்தில் இருந்து ஏகலைவன் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஏற்கனவே பலமுறை கேட்ட, வாசித்த கதை என்பதால் நான் வெள்ளி பார்க்க ஆரம்பித்து விட்டேன். அந்தக் கதையில் ஏகலைவன் ஒரு நாயின் வாயை அம்பு எய்து கட்டிப் போடுவது பற்றி அவர் சொல்வது காதில் விழுந்துகொண்டிருந்தது. நான் வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருக்க, அதைக் கண்டுபிடித்துவிட்டார். பெயர் சொல்லி அழைத்து ‘நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தனான்' என்று (நல்ல விதமாகத்தான்) கேட்டார். நானும் ‘வெள்ளி பார்த்தல்' குழப்பப்பட்டதால் குழம்பிப் போய் ‘ஆரோ ஒருத்தன் நாய்க்கு (__________)' என்று கொஞ்சம் இரட்டை அர்த்தமாகச் சொல்ல அதற்கு வகுப்பு என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பும், வெள்ளி பார்த்தலை வைத்து திரவியநாதன் அறுத்த அறுவையும் மறக்காது.

இன்னொரு சம்பவம் கனடாவில் நடந்தது. இங்கே சனிக்கிழமைகளில் கிரிக்கெட் விளையாடுவதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்த போது நான் ஒரு சுலபமான பிடியை ‘வெள்ளி பார்த்த' காரணத்தால் விட்டுவிட்டேன். எங்களின் களத்தடுப்பு முடிந்த பின், 'அடுத்த கிழமை விளையாட வருவாய்தானே' என்று எங்கள் அணியில் கூட விளையாடும் மெல்வின் என்னைக் கேட்டான். அப்போது நான் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் சனிக்கிழமை மேலதிக வேலைநேரம் கிடைக்குமா என்று வெள்ளிக் கிழமைதான் சொல்லுவார்கள். அதனால நான் ‘வெள்ளிதான் தெரியும்' என்றேன். ‘இப்பமட்டும் என்ன தெரியுது' என்றான் மெல்வின். சற்று நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டோம். அதாவது சனிக்கிழமை வேலை இருக்கிறதா இல்லையா என்பது வெள்ளிக் கிழமைதான் தெரியும் என்ற அர்த்தத்தில் நான் சொல்ல, நான் ‘வெள்ளி பார்த்து' விட்ட பிடியை நினைவூட்டி இப்ப மட்டும் என்ன தெரியுது என்று சாதாரண உரையாடலிலேயே சிலேடையில் விளையாடினான் மெல்வின்.

Author: சினேகிதி
•3:11 AM




நகைச்சுவைக்கதம்பத்தில் "தேவதையைக் கண்டேன்" படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி.

"என்ன பாபு சைக்கிளுக்கெல்லாம் போர்வை போர்த்து விடுறாய்...ஆ கொசுவர்த்தி வேறயா..முத்தமா...வயித்தெரிச்சலைக் கிளப்பிறாங்களே.."

"பின்ன அது உமா வாங்கிக் கொடுத்த சைக்கிள்."

அடுத்த காட்சியில் தனுஸ்... நட்சத்திர யன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஏனென்று கேட்டால், அந்தப் பாட்டில்தானே தேவயானியும் சரத்குமாரும் ஓகோ என்று பெரியாட்களானாவையாம்.

நேற்றைய நாள் எனக்கு அந்த நகைச்சுவைக்காட்சில தான் தொடங்கினது.விருந்தினர்கள் என்னறையில தங்கியிருந்ததால் நான் நேற்று தங்கச்சியின்ர அறையிலதான் தூங்க வேண்டியிருந்தது. கன காலத்துக்குப்பிறகு யன்னலோரமாய் நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் தூங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறன். பக்கத்தில அம்மாவேன்ரே அறையில இருந்து நட்சத்திர இரவு வானொலி நிகழ்ச்சி காற்றோடு கலந்து வந்தது.

இப்படி நேற்றைய பொழுதில் நட்சத்திரங்கள் பலமுறை வந்து போனதால் இரவுப்பொழுதிலும் நட்சத்திரங்களுடன் எனக்குண்டான உறவு பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உலா வரத் தொடங்கின.

நானே ஆச்சரியப்படும்படி மூன்று நான்கு வயதில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடந்த மாதிரி கண்ணெதிரே வந்து போயின.

அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். பாலா அங்கிள் பரா அன்ரி சுந்தி மாமா சாந்தன் மாமா இன்னும் சிலர் இரவு கூடியிருந்து எனக்கு அப்ப விளங்காத பெரிய பெரிய கதையெல்லாம் கதைப்பினம். அம்மா பழங்களரிந்து தருவா. கொண்டே குடுத்திட்டு பரா அன்ரின்ர மடியில இருந்து, “அப்பிடியென்டாலென்ன.. ஏன் அப்பிடிச் சொன்னவை?” இப்பிடி வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருப்பன். என்ர வாயை மூட அவாவும் ஏதாவது சொல்லிச் சமாளிப்பா.

பரா அன்ரிதான் எனக்கு முதல் முதலாக நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தவா. “அங்க பாரு, அதில நல்ல வெளிச்சமா தெரியுது அதான் சுக்ரன்.. விடிஞ்சாப் பிறகும் அந்த நட்சத்திரம் இருக்கும்... அங்க பார் அதில ஒரு வேட்டைக்காரன் அம்பு விடுற மாதிரி இருக்கு. இங்க பார், விருச்சிகம்..” இப்பிடியெல்லாம் சொல்லுவா.

சின்னப்பிள்ளையளிட்ட ஒரு பிடிவாதக்குணம் இருக்கும். தாங்கள் நினச்சதைதான் செய்வினம்... சொல்லுவினம். ஒரு இரண்டு வயசுப் பிள்ளைக்கு ஒன்று இரண்டு சொல்லிக் கொடுத்திட்டு, அடுத்த நாள் “அச்சாக்குட்டியெல்லே... ஒன்று இரண்டு சொல்லிக் காட்டுங்கோ” என்று கேட்டுப்பாருங்கோ. “ஆ ஆ ஆ” என்று காது கேக்காத மாதிரி இருப்பினம்... வாற விசரில நீங்கள் திரும்ப ஒன்று இரண்டு சொல்லச் சொல்லிக் கேக்கமாட்டிங்கள்.. ஆனா தங்களுக்கு விருப்பமான நேரம் தங்கடபாட்டில சொல்லுப்படும்.. “ஒன்ரு ரன்று மூன்ரு..”

அதைப்போல நான் பரா அன்ரிக்கு மட்டும்தான் குட்நைற் சொல்லுவனாம். பரா அன்ரி கொஞ்ச வருசத்தில யாரோ சுட்டுச் செத்திட்டா. நான் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவான்ர ஞாபகம்தான் வரும்.

எல்லாற்ற ஊரிலயும் ஒரு கோயில்... கோயிலுக்கு முன்னால ஏதோ ஒரு மரம் இருக்கும். அப்பிடித்தான் எங்கட ஊரிலயும் ஒரு பிள்ளையார் கோயில். முன்னால ஒரு பலாமரம். அங்கதான் ஊராக்கள் இரவு இருந்து விடுப்புக் கதைப்பினம். நான் அக்கா, சுபாசினி, சுஜி, சிந்து, கவி, யனா, நிமல், டொம்மா... இப்பிடி நிறையப் பேர்.

எங்கள எல்லாம் விளையாட விட்டுப்போட்டு அங்கால அம்மாக்களின்ர மகாநாடு நடக்கும். அப்ப பரா அன்ரி எனக்குக் காட்டின நட்சத்திர உருவங்கள் பற்றியெல்லாம் நான் என்ர குறூப்புக்கு சொல்லிக்கொண்டிருப்பன். பிறகு அக்கான்ர குறூப் ஒருபக்கம், சின்ன குறூப் ஒருபக்கம் பிரிஞ்சு விளையாடுவம். இதையெல்லாம் நினைச்சா அது ஒரு அழகிய நிலாக்காலம்தான்.

சண்டை நடக்கும்போதும் நாங்கள் ஒரு அஞ்சு குடும்பம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பங்கர் கிண்டினாங்கள். சண்டை நேரத்தில அந்த பங்கர்தான் எங்களுக்குப் பள்ளிக்கூடம். விளையாட்டுத்திடல் எல்லாம். திருவலகை, திரிபோசா மா, சீனி.. ஹி ஹி... அதான் சாப்பாடு. அங்க யாரும் செல் விழுந்து சாகேல... தப்பித் தவறி விழுந்திருந்தா எல்லாரும் சேர்ந்து செத்திருப்பம்.

வேப்ப மரத்துக்குக் கீழதான் பங்கர். பங்கருக்குப்போற வழி வீட்டில இருந்துதான் துவங்கும். வெளீல நிண்டு பார்த்தா பங்கர் இருக்கெண்டே தெரியாது. அப்பிடித்தான் ஒருநாள் பயங்கரச்சண்டை. புக்காரா சகடை எல்லாம் இரைஞ்சுகொண்டு போனது. செல் கூவிக்கொண்டு போனது.
அடுத்த நாள் ஒரே அமைதி. பார்த்தா நோட்டீஸ் விட்டிருக்கு. வடமராட்சி சனம் எல்லாம் தென்மராட்சிக்குப் போகவேணுமாம். ஊராக்களுக்குப் போற எண்ணமே கிடையாது. நாங்கள் ஒரு காலமும் வெளிக்கிட்டதில்லை.. இந்தியன் ஆமி வந்தநேரம்கூட நாங்கள் இங்கதானே இருந்தனாங்கள் என்று எல்லாரும் கதை. நாங்கள் எங்கட பாடு.

எங்களுக்கெல்லாம் அப்ப அது ஒரு பம்பல் மாதிரி. ஆக்கள் கூடியிருக்கிறதே ஒரு விளையாட்டு மாதிரி. ‘போறேல்ல’ என்று முடிவெடுத்த உடனே அம்மாக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டுது.

இந்தியன் ஆமி வந்தநேரம் அக்காக்கு கால்ல செல் பட்டதால அம்மாக்கு பயம். சரியெண்டு எல்லாரும் சாவகச்சேரிக்குப் போறதெண்டு முடிவாச்சு. இரவு ஒன்றரைக்கு மாமாவோட நானும் அக்காவும் அம்மாவும் அன்ரியும் ஒரு சைக்கிள்ல. இப்பிடி எல்லாரும் சேர்ந்து சைக்கிள்ல வெளிக்கிட்டம். எங்கயோ ஒரு இடத்தில கொஞ்ச நேரம் நின்றிட்டு திரும்பக் கொஞ்ச நேரம் சைக்கிள உருட்டிக்கொண்டு போனம். ஆமிக்காரன்ர பரா லைற் வெளிச்சம் மாறி மாறி வந்துகொண்டு இருந்திச்சு.

சில பேர் கதைச்சுக்கொண்டு வந்தினம். சில பேர் வீட்டில இருக்கிற ஆட்டுக்குட்டி கோழிக்குஞ்சையெல்லாம் நினைச்சுக்கொண்டாக்கும் மௌனமா நடந்தினம். நான் சைக்கிள்ல சொகுசா இருந்துகொண்டு நட்சத்திரங்களோட கதை.

“அம்மா, பரா அன்ரி சொன்ன அந்த வேட்டைக்காரனைக் காணேல்ல.”

“வாய மூடிக்கொண்டு வாடி.. சும்மா நொய் நொய் எண்டு கொண்டு.. நாளைக்கு உயிரோட இருப்பமோ தெரியேல்ல, இப்பத்தான் வேட்டைக்காரனைத் தேடுறா.”

நாங்கள் சாவகச்சேரிக்குப் போய் மாமாவீட்டதான் இருந்தனாங்கள். பக்கத்து வீட்டில தயா என்றொரு பெடியன். மனவளர்ச்சி குன்றியதால அவன் செய்யிற வேலையெல்லாம் சிரிப்பா இருக்கும். சாத்திரம் சொல்லுறன் என்று போட்டு திருநீறு எடுத்துகொண்டுவந்து எதிர்பார்க்காத நேரம் தலையில கொட்டிப்போடுவான். சில நேரம் வீட்ட நின்றிட்டு சொல்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு ஓடிடுவான். அங்க இருந்த ஒரு மாதமும் தயாதான் கூட்டு. நாங்கள் திரும்ப ஊhருக்கு வர தயாவையும் வேற எங்கேயோ போட்டினம்.
அங்க இருந்த நேரம் பலா மரத்தில ஏறி பலாப்பழம் புடுங்கியிருக்கிறன்" :-) எங்கட ஊரில எல்லாம் பலா மரம் இல்லை.

ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ விஞ்ஞானப் புத்தகத்தில நட்சத்திரக்கூட்டங்கள் உருவங்கள் பற்றி ஒரு பாடம் இருக்கு. அப்ப புத்தகத்தில போட்டிருப்பினம், ஆசிரியர் மாணவர்கள் இரவுவேளையில் ஒன்று கூடி நட்சத்திரங்களைப் பற்றிப் படிக்கிறதென்டு... அக்கா வேற அப்பிடி ஒருநாள் இரவு போனவா. அதால நான் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனான். என்ர வயசு பிள்ளைகள் குடுத்து வைக்கேல்ல போல. ஊரில சண்டையும் ஊரடங்குச்சட்டமும் மாறி மாறி வாறதால இரவு போயிருந்து வான் வெளியில நட்சத்திரங்களையும் வால் நட்சத்திரத்தையும் பார்க்கிற நாள் எங்களுக்கு வரவே இல்லை.

இப்பிடி நட்சத்திரங்களுடனான என் உறவு வெளிநாடு என்று வெளிக்கிட்ட பிறகு நிலவறை வாழ்க்கையில் துண்டிக்கப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு தூங்கச்சென்றதால், நான் மேல சொன்ன ஞாபகங்கள் எல்லாம் வந்து போயின... அந்தக் கொஞ்சநேர சந்தோசம்கூடப் பொறுக்காமல் பனி கொஞ்சம் கொட்டத்தொடங்க நட்சத்திரங்கள் என்னோடு விடைபெறாமலே போய்விட்டன.

ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்.
ம்... கனக்கக் கதைக்க வேணும். அந்த நாள் எப்ப வருமோ? :)


பின்குறிப்பு : இதுவும் மீள்பதிவு தான் :(
Author: வந்தியத்தேவன்
•4:54 AM
இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி குடும்பத்தின் இன்னொரு வெளியீடான இளைஞர்களினால் அதிகம் படிக்கப்படும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் எங்கட ஈழத்துமுற்றம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 21.07.2009 செவ்வாய்க்கிழமை மெட்ரோ நியூசில் இந்ததகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் தங்கள் தினசரியில் தினமும் ஒரு இணையம் பற்றிய தகவல்களைச் சுருங்கத் தருகிறார்கள். அந்த வகையில் ஈழத்துமுற்றம் பற்றிய சிறிய தகவல் வெளியாகியுள்ளது.



கடந்தமாதம் உருவாகி தவழ்ந்து இன்றைய சினேகிதியின் வண்டவாளங்கள் மூலம் 50 பதிவுகளைத் தொட்ட எங்கட முற்றம் இந்த தகவலின் மூலம் இன்னும் சிலரைச் சென்றடையக்கூடும்.

ஈழத்துமுற்றம் சொந்தக்காரர்கள் சார்பாக மெட்ரோ நியூசுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சொந்தக்காரர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்:
கிட்டத்தட்ட 50 சொந்தக்காரர்கள் இருந்தும் இதுவரை ஒரு சிலரே முற்றத்தில் பதிவு செய்துள்ளார்கள். பலர் பின்னூட்டங்கள் இட்டாலும் அவர்களிடமிருந்து காத்திரமான பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.