Author: கானா பிரபா
•4:20 AM
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஈழத்துமுற்றத்தில் பதிவிட வந்திருக்கின்றேன். இந்தப் பதிவில் விசேஷமாக ஈழத்துப் பேச்சுவழக்கில் உறவுமுறைகள் என்ற அம்சத்தை எடுத்து, வழக்கில் உள்ள சொற்களைத் தரலாம் என்றிருக்கின்றேன். ஒரு சில சொற்கள் எனது முந்திய பதிவிலும், சக குழுமப்பதிவர்களது பதிவுகளிலுமாக ஈழத்து முற்றத்தில் வந்திருக்கின்றன. இந்தப் பதிவில் விடுபட்டுப் போன மேலதிக சொற்களோடு அமையவிருக்கின்றது. அந்தவகையில் ஈழத்தில் உறவுமுறைகளை அழைக்கும் சொல்லாடல்களை அடுத்துப் பார்ப்போம்.

அப்பு - இந்தச் சொல் பொதுவாக ஒருவரின் தாய் அல்லது தகப்பனின் தந்தையை அழைக்கப் பயன்படும் உதாரணமாக பாட்டன் என்ற சொல்லுக்கு சம அர்த்தம் கொடுக்கும். ஆனால் நமது தலைமுறைக்கு முந்திய காலத்தவர் தமது பெற்ற தந்தையை அதாவது அப்பா என்ற சொல்லுக்குப் பதிலாக அப்பு என்றே வழங்கி வந்தனர். இன்றும் சிலர் தமது தந்தையை அப்பு என்றே அழைப்பர்.

"உன்னுடைய அப்பு எங்கே" என்பது "உன்ர கொப்பு எங்கை" என்று ஈழத்துப் பேச்சுவழக்கில் அமையும்

ஆச்சி- இந்தச் சொல் பொதுவாக ஒருவரின் தாய் அல்லது தகப்பனின் தாயை அழைக்கப் பயன்படும் உதாரணமாக பாட்டி என்ற சொல்லுக்கு சம அர்த்தம் கொடுக்கும். ஆனால் நமது தலைமுறைக்கு முந்திய காலத்தவர் தமது பெற்ற தாயை அதாவது அம்மா என்ற சொல்லுக்குப் பதிலாக ஆச்சி என்றே வழங்கி வந்தனர். இன்றும் சிலர் தமது தாயை ஆச்சி என்றே அழைப்பர்.

"உன்னுடைய ஆச்சி எங்கே" என்பது "உன்ர கோச்சி எங்கை" என்று ஈழத்துப் பேச்சு வழக்கில் அமையும்

அம்மான் - மாமா என்ற உறவுமுறைக்குச் சம அர்த்தத்தில் பாவிக்கப்படுவது. கூடவே ஒருவரை மரியாதையாக அழைப்பதற்கும் அதாவது நேரடி மாமா உறவு முறை இல்லாதவருக்கும் இது அழைக்கப்படும்.
"உன்னுடைய மாமா எங்கே" என்பதை "உன்ர கொம்மன் எங்கே" என்று பயன்பாட்டில் வழங்குவர்

பெரியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் மூத்த சகோதரரைப் பெரியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் மூத்த சகோதரர்

குஞ்சியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய சகோதரரைப் குஞ்சியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரர்

சீனியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் கடைசிச் சகோதரரை குஞ்சியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரர்

குஞ்சியம்மா - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய சகோதரியை குஞ்சியம்ம என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரி

சீனியம்மா - தகப்பன், அல்லது தாய் வழித் தாயின் உடன்பிறந்தோரில் கடைசிச் சகோதரியை குஞ்சியம்ம என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரி

மேற்கண்ட உறவுமுறைகளை நேரடி இரத்த பந்தங்கள் தவிர்த்து மரியாதை நிமித்தம் வழங்கும் பொதுப்பெயர்களாகவும் கொள்ளப்படுகின்றன.
Author: Admin
•4:28 AM
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னாகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது.

இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர்.

இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

சந்ரு