Author: அருண்மொழிவர்மன்
•6:02 PM
அண்மையில் எனது பெரியம்மா கொழும்பு சென்று திரும்பியபோது எனது அம்மா அவவிடம் எனக்காக கொடுத்துவிட்ட பொருட்களில் நான் முக்கியமாக கருதுவது எனது ஒன்பதாம் ஆண்டு விஞ்ஞான பாட கொப்பி. இலங்கையில் க. பொ. த சாதாரண தர (11ம் ஆண்டு) பரீட்சைக்கான பாடத்திட்டம் ஆரம்பிப்பது ஓன்பதாம் ஆண்டில் இருந்து என்பதால் மிகுந்த உற்சாகமாக படிக்க தொடங்கியிருந்தோம். அப்போது நான் வாசித்த ஒரேயொரு ஆங்கில சஞ்சிகையான the sporststarன் நடுப்பக்கத்தில் அப்போது star poster என்று விளையாட்டு வீரர்களின் அழகிய வண்ணப்படம் வருவது வழக்கம். அதனை தான் நான் எனக்கு விருப்பமான் ஆசிரியர்களின் கொப்பிகளிற்கு உறையிடுவேன். அப்படியாக உறையிட்டு எனக்கு கிடைத்த கொப்பியை பார்த்ததும் எனது மனம் மழையில் நனைந்த துணி போல கனக்கத்தொடங்கியது.
எமக்கு ஒன்பதாம் ஆண்டு முதல் 11ம் ஆண்டு வரை விஞ்ஞானம் படிப்பித்தவர் திரு வை. க. தவமணிதாசன் அவர்கள். கண்டிப்புக்கு பெயர் போனவர். சின்னதாய் ஒரு கவிஞர். “வைகை” என்று ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டவர். அதில்
“வைகை எந்தனுக்கு வாடிக்கை ஆனதற்கு
வைகை முறையே தலையும் தலையெழுத்தும்” என்று மாணவர்களை கடுமையாக கண்டிக்கும் தன் இயல்பு பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அமிலத்துக்கும் காரத்துக்கும் இடையிலான நடுநிலையாக்கல் தாக்கம் பற்றி
அமிலம் + காரம் --> உப்பு + அப்பு (நீர்)
என்று எல்லாம் சுவரசியமாகக் கற்பிப்பார். (இவர் பற்றி முழுமையாக ஒரு தனி பத்தி எழுதவேண்டும். ஆனால் நான் இப்போது கூறவந்ததை முதலில் கூறிவிட்டு பிறகு இவர் பற்றி.) அவருடைய பாட கொப்பிக்கும் எனது வழக்கப்படியே உறையிட்டிருந்தேன். ஆனால் அந்த உறையை பார்த்ததும் என் மனம் பாதிக்கப்பட காரணம் அதில் இருந்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேமியன் மார்ட்டினின் படம். அது (92) அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கியிருந்த காலம். அந்த கொப்பி மீண்டும் எனது கை வந்து சேர்ந்தபோது அவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். என்னை பொறுத்தவரை நான் விட்டுவந்த யாழ்ப்பாணம் இப்போதும் என்மனதில் (10 ஆண்டுகளாகியும் கூட) (F)ப்ர்ட்ஜில் வைத்த பழம்போலதான் உள்ளது. ஆனால் நிஜத்தில் ஒரு தலைமுறை, அதுவும் நாம் பார்த்து, ரசித்து, பழகி, கற்று வளர்ந்த தலைமுறை எம்மை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாற்றாண்டின் அற்புத வீரர் என்று கொண்டாடப்பட்ட சச்சின் , லாரா, ஷான் வார்னே, மக்ராத், ட்ராவிட், இன்ஸமாம், பொலொக் என்று பெரும் சிங்கங்கள் எல்லாம் ஓய்வு பெறும் கால கட்டத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட சச்சினின் சர்வதேச அனுபவமும் எனது விளையாஅட்டு அனுபவமும் ஒரே கால அளவானவை.
சினிமாவில் கூட புதிய தலைமுறையினர் பொறுப்பேற்க தொடங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, இளையராஜா, வைரமுத்து, வாலி, போன்ற ஜாம்பவான்களிடமிருந்து செல்வராகவன், கௌதம், முருகதாஸ், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் ஜெயராஜ் போன்றோர் கிட்டதட்ட பதவியேற்று கொண்டனர். எமது பதின்ம வயதுகளில் 27 வயதுகாரரை எல்லம் மிகுந்த மரியாதையுடன் அண்ணே என்று தான் அழைப்பதுடான் வழக்கம். இப்போது அதே 27 வயதில் நாம் இருக்கும்போது பதின்மவயதார் அண்ணே என்றழைக்கும்போது நட்புக்குள் வயதேது என்றுததன் சொல்ல தோன்றுகிறது.
நான் புத்தகம் வாசிக்கதொடங்கிய ஆரம்பகாலங்களில் மரபுக்கவிதைகளையும் கவிஞர்களையும் சாடி மு. மேத்தா, வைரமுத்து போன்றோர் பேசிவந்தனர். இப்போது அவர்கள் எழுதுவது கவிதையே இல்லை என்று பேசும் நவீன இலக்கியகாரர் வந்துவிட்டனர்.
காலம் ஒரு வற்றாத நெடுநதி போல ஒடிக்கொண்டேயிருக்கிறது. அதன் கரையில் அது விட்டுசெல்லும் தடங்கள் பற்றிய விமர்சனங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே அது பல மைல்களை கடந்து சென்று இன்னும் பல புதிய தடங்களை உருவாக்கிவிடுகிறது. சில மாதங்களின் முன்னே எனது நன்பனின் சித்தி மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும்போது அவனுக்கு 6 அல்லது 7 வயது இருந்திருக்கும். எனது மனதளவில் அவன் பற்றிய விம்பம் சிறுவன் என்கிற அளவிலேயே பதிந்துள்ளது. ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது அவன் சொன்னான், “நீங்கள் இங்க இருக்கேக்க உங்களுக்கு இப்ப எங்கட வயதுதானே” என்று. காலம் பயணிக்கும் வேகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றோ என்று எனக்கு சந்தேகம் வந்தது.
எனது சக மாணவி ஒருத்தி, ஏறத்தாழ எமது வயதுடைய எல்லாராலும் காதலிக்கப்பட்டவள், ஆனால் யாரையும் காதலிக்காதவளுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அது பற்றி எனது நண்பன் ஒருவன் சொன்னான் “நாங்கள் கல்யாணம் கட்டி பிள்ளை பெற்றாலும் வயசாச்சே என்ற நினைப்பு வராது, ஆனால் எங்களோட படிச்ச ஒருத்திக்கு கல்யாணம் என்றாலே வயசு போன மாதிரி இருக்கடா” என்றான். எமக்கே தெரியாமல் எம் வாழ்வில் பங்கெடுத்த விடயங்கள் கடந்து போகும் போது தான் புரிகிறது எத்தனை காலம் எம்மை கடந்து போய்விட்டது என்று.
பின்குறிப்பு -
இது ஒரு மீள்பதிவு. 2007ன் தொடக்கத்தில் எழுதப்பட்டது. ஈழத்தமிழ் பேச்சு வழக்கிற்கே உரிய சில சொற்கள் உள்ளதால் இங்கு பதிவிடுகிறேன்
Author: Unknown
•12:20 PM
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிப்போய் விட்டிருப்பது இந்த மினி வான். அதுவும் நெல்லியடி-யாழ்ப்பாணம் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம். அதுவும் இந்த ஏ/எல் படிக்கிற காலத்தில ரியூசன் எண்டு சொல்லிப்போட்டு கொப்பிய மடிச்சு ஜீன்ஸ்சுக்குள்ள சொருகிக்கொண்டு ராஜா டாக்கீஸ்சிலயும் மனோகராவிலயும் புதுப்படம் பாக்க நாங்கள் கூட்டமாக் கிளம்பிப் போறது இருக்கே, அது ஒரு சுகம் பாருங்கோ.
என்ன பிரச்சினை எண்டால் நெல்லியடியிலையும் சரி, பருத்தித் துறையிலையும் சரி ரீல்ஸ் தியேட்டர் இல்லை. நாங்கள் படம் பாக்கிறது ப்ரொஜெக்டர் வச்சு வி. எச். எஸ். டெக்கில போடுற படங்களைத் தான். அதால நல்ல படம் ஏதாவது வந்தா கள்ளமா யாழ்ப்பாணம் போய்த்தான் படம் பார்ப்பம். இதில நெல்லியடியில ராஜலக்ஷ்மி என்றொரு தியேட்டரைப் பற்றிச் சொல்லோணும். அங்க பல்கணில ஒரு நாள் நாங்கள் ஏழு பேர் மட்டும் இருந்து படம் பாக்கேக்க கீழ இருந்த ஆக்களோட ஒரு கொழுவல். மேலையிருந்து பச்சைத் தூசணமா எல்லாம் பேச அவங்கள் எங்கட தூசணத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பேசாம இருந்துட்டாங்கள். படம் முடிஞ்சு கீழ வர, கீழ இருந்த ஆக்களில ஒராள் எங்களுக்குப் படிப்பிக்கிற வாத்தியார். ‘ஆ, நடக்கட்டும் நடக்கட்டும்' எண்டுட்டு மனுசன் போக எங்களுக்கு ஒரே மானக்கேடாப் போச்சு.
அதேமாதிரி அதே பல்கணியில ஒரு நாள் வேற படம் பாக்கேக்க என்ர ஜீன்ஸ் பொக்கட்டில இருந்த சைக்கிள் திறப்பு கீழ விழுந்து போட்டுது. இருட்டுக்குள்ள கீழ கைய விட்டுத் தடவினா ஏதோ தொள தொள தண்ணிமாதிரி இருக்க பயந்து போனன். உடன தியேட்டரில வேலை செய்யிற ஒரு பொடியனக் கூட்டிவந்து லைட் பிடிச்சுப் பாத்தா ஆரோ ஒரு புண்ணியவான் வெத்திலையச் சப்பி இருக்கிற சீட்டுக்குப் பக்கத்திலயே துப்பி வச்சுட்டுப் போயிருந்தார். அண்டையோட ராஜலக்ஷ்மித் தியேட்டரை விட்டாச்சு. அதே நெல்லியடியில இருந்த பழம் பெரும் மகாத்மா தியேட்டரில் பல்கணி இல்லாதபடியால் பெரிசாப் போறது இல்லை. ஏனெண்டால் பல்கணியில இருக்கிறபோது வர்ற ஒரு மிதப்பு கீழ இருந்து பார்க்கிறபோது வர்றதில்லை.
ரீல்ஸ் படம் பார்க்க யாழ்ப்பாணம் போறது ஒரு நல்ல அனுபவம். எப்ப போறது எண்டு முதலே பிளான் போட்டு அந்த நேரத்துக்கு ரியூசன் இருக்கிறதா ஒரு கிழமைக்கு முன்னமே வீட்டில பில்ட்-அப் குடுத்து, ரியூசன் போறமாதிரி கொப்பி புத்தகம் எல்லாம் கொண்டுதான் வெளிக்கிடுவம். (என்ர அப்பர் அந்த நாளில் யாழ்ப்பாணம் போகக்கூடாது என்பது எனக்கான கூடுதலான பிரார்த்தனை). ஒரு வழியாக மூத்தவிநாயகர் கோவில் அல்லது கண்ணன் வீடு எண்டு இரண்டில் ஒரு இடத்தில சைக்கிளை விட்டுட்டு மினிபஸ் ஏறுவம். ஏற்கனவே மினிபஸ் ஃபுட் போட்டில ஆக்கள் நிறம்பி வழிய வந்தாலும் அதில போகாட்டா எங்கட சுதா யாழ்ப்பாணம் வரமாட்டான். எண்டபடியால் அதில ஏறி யாழ்ப்பாணத்தில போய் இறங்கும் வரை கபி குஷி கபி கம் தான். (பெண்கள் மன்னிப்பார்களாக)
யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில இறங்கி தியேட்டருக்கு விறுவிறுவெண்டு நடந்து போவம். அனேகமா எங்கட நித்து அட்வான்ஸ் புக்கிங் செய்திருப்பதால டிக்கட்டுக்கு அடிபடுறதில்லை. அப்பிடி அடிபட வேண்டி வந்தாலும் போற அத்தினை பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் இறுக்கமாப் பிடிச்சபடி ஒற்றுமையா முன்னுக்குப் போயிடுவம். மனோகாரா தியேட்டரில மட்டும் ஜெயன் ஒராளைச் சினேகம் பிடிச்சு இருந்ததால எங்களுக்கு ராஜ மரியாதை இருக்கும். இதில பெரிய பகிடி என்னெண்டால் அங்க ஒரு காலத்தில விஜய்க்கு அபிசேகம் எல்லாம் செய்தவங்கள். அதில கடுப்பாகிப்போய் விஜயிண்ட செண்டிமெண்ட் சீனுக்கு நாங்கள் ‘ஹஹ்ஹஹ்ஹா' எண்டு ராஜலக்ஷ்மி தியேட்டர் ஞாபகத்தில சிரிக்க 'எவண்டா அவன் (கீறிட்ட இடம்)' எண்டு கீழையிருந்து வந்த குரலில் அடங்கிப் போவம்.
பிறகு படம் பாத்த களைப்பில அங்க இருக்கிற பல ஐஸ்கிரீம் கடைகளில ஏதாவது ஒண்டிலையோ, ரொலெக்ஸ் சாப்பாட்டுக் கடையிலையோ சாப்பிட்டுட்டுத் தான் வருவம். (தியேட்டரில் குடிக்கிற சோடா வேற கணக்கு). ஒரு முறை உப்பிடித்தான் தியேட்டரில வாங்கின சோடா மிஞ்சிப்போக அதை நானும் நிதியும் குடிச்சுத் தள்ளினம். தியேட்டரில இருந்து பஸ் ஸ்டாண்ட் வரக்கு முன்னம் முட்டீட்டுது. பிறகு ஒரு பாருக்குள்ள போய் அன்-லோட் பண்ண வேண்டி வந்தது. நல்லகாலம், ஆராவது கண்டிருந்தால் எங்கட நல்ல பேர் கெட்டுப்போயிருக்குமல்லோ. வீட்ட திரும்பிவரக்கு முன்னம் எனக்கு திரும்ப முட்டி, வீட்ட வந்தவுடன 10 நிமிஷமா அன்-லோட் பண்ணினது வேற கதை.
என்ன தியேட்டர் போகேக்கையும் சரி, வரேக்கையும் சரி ஒரே கூத்தும் கும்மாளமுமா இருப்பம். அனேகமா ஏதாவது நல்ல நாள் பெருநாளிலையும் இப்பிடி படம் பாக்கப் போறதால எங்கள மாதிரி ஆகக் குறஞ்சது அஞ்சு செட்டாவது ஒரு மினி வானில வரும். அண்டைக்கு பஸ்சில வாற பெரிசுகள் எல்லாத்துக்கும் திண்டாட்டம்தான். ட்ரைவர் கொஞ்சம் வயது போனவர் எண்டால் அவருக்கும் திண்டாட்டம்தான். 'அண்ண, உந்தப் பாட்டுப் பெட்டியப் போடு' எண்டு தொடங்கி ஒரே தொல்லை பண்ணுவாங்கள். இதெல்லாத்தையும் சமாளிச்சு பஸ் ஓடுறதுதான் அவர்களின் கெட்டித்தனம்.
பி.கு: அந்தப் பண்டிகைக் கால சினிமா பார்க்கும் அனுபவமும், சந்தோஷமும், மனநிறைவும் இங்கே ஏ.ஸி தியேட்டர்களில், டி.ரி.எஸ் சவுண்டில் எந்த நெருக்கடியும் இல்லாமல் பார்க்கும் படங்களில் எல்லாம் இல்லை.