Author: சினேகிதி
•6:40 AM

லான்ட்மாஸ்ரர் என்றால் என்னென்டு தெரியாதோ???லான்ட்ஐ மாஸ்ரர் பண்றதுதான் லான்ட்மாஸ்ரர் :-))
விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாக நிலத்தைத் தயார்படுத்துறதுக்குப் உபயோகிக்கிற ஒரு இயந்திரம் லான்மாஸ்ரர் (நான் சொல்றது சரிதானே). ரக்ரரால உழுறது போல இதாலயும் உழுறவை. அந்த உழுவை இயந்திரத்துக்குப் பின்னால ஒரு பெரிய பெட்டியிருக்கு அதில ஒரு 10-15 ஆக்கள் பயணம் செய்யலாம். அநேகமாக கோயில் போன்ற கொஞ்சம் தூரப் பயணங்களுக்குப் போறாக்கள் லான்மாஸ்ரரில் போறவை.
நான் வல்லிபுரக்கோயிலுக்கும் செல்வச்சந்நிதி கோயிலுக்கும் லான்மாஸ்ரரில் போயிருக்கிறன். அம்மம்மான்ர வீடு றோட்டுக்கரைல இருக்கு அங்கால முழுவதும் எங்கட தோட்டம்....வல்லிபுரத் திருவிழா நேரம் அந்த றோட்டுக்கரைல நிண்டால் யார் யார் கோயிலுக்குப் பொங்க போயினம் என்டு தெரியும். பெரிய அண்டா, குண்டா, அகப்பை, பாய் மிச்ச தட்டு முட்டுச் சாமான் எல்லாத்தையும் நடுவில வைச்சிட்டு கரைத்தட்டில நிறையப்பேரிருந்து போவினம் கோயிலுக்கு.
லான்மாஸ்ரரில் கனதூரம் போகேலாது பேய் நோ நோகும். ஆனால் குடும்பமாப் பொங்கப் போறவை அப்பிடித்தான் போறவை. காத்துக்கு விழுந்திடுவம் என்று அநேகமா சின்னப்பிள்ளையளை தட்டில இருக்க விட மாட்டினம். நடுவில வயசுபோனாக்கள் காலை நீட்டி கஞ்சி வடிச்சுக்கொண்டிருப்பினம் அவையளோட இருக்கேலாது தட்டிலயும் இருக்கேலாது சில சின்னப்பிள்ளையள் அழுது அடம்பிடிச்சு டிரைவர் பக்கமா இருக்கிற கரைத்தட்டில இடம்பிடிச்சிடுவினம்...அதில பிடிமாதிரி ஒன்டு இருக்கு அதைப்பிடிச்சுக் கொண்டு இருந்தால் விழமாட்டம் என்டு பெருசுகளைச் சமாளிக்கலாம். கோயிலால வரேக்க பானை எல்லாம் கரி பிடிச்சு இருக்கும் அப்ப இன்னும் இடம் காணாமல் போகும் அப்பவும் பாதிக்கப்படுறது சின்னப்பிள்ளையள்தான்.கொடுமை கொடுமை.

உண்மைாய இந்த வாகனம் விவசாயம் செய்யிறாக்கள் வெங்காயம் , புகையிலை ஏற்றி இறக்கப் பயன்படுத்தும் நோக்கில வாங்குவினம் பிறகு அது கோயிலுக்கும் இடம்பெயர்ந்து போறதுக்கும் பாம்பு கடிச்சாக்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகவும் பயன்ட்டுக்கொண்டிருக்கும். வாடகை லான்மாஸ்ரர்களில் அழகான ஓவியங்கள் எல்லாம் கீறி நல்ல கலர்புல்ல வச்சிருப்பினம்.
லான்மாஸ்ரரும் மண்ணெண்ணெயிலதான் ஒடுறதென்று நினைக்கிறன்.
Author: வந்தியத்தேவன்
•4:56 AM
தட்டிவான் யாழ்ப்பாணத்தில் பிரபலமான வாகனம். எனக்கு மிகவும் பழக்கப்பட்டது பருத்தித்துறையில் தொடங்கி நெல்லியடி ஊடக கொடிகாமம் போகும் தட்டிவான் தான். பிரிட்டிஷ்காரனின் தயாரிப்பு. இந்த தட்டிவானில் பயணம் செய்தால் நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் வாகனங்களிலும் பயணம் செய்யலாம்.

முதலில் தட்டிவானின் வடிவமைப்பை பார்ப்போம். முன்பக்கத்தில் மட்டும் கண்ணாடியுள்ள வாகனம். மக்கள் இருக்கும் இடப்பகுதி எல்லாம் திறந்தவெளி. சாவகச்சேரி சந்தைக்கு போகின்ற குஞ்சி ஆச்சி வெத்திலை சப்பித் துப்ப ஏதுவானது. பின்பக்கத்தில் இருக்கும் பலகையில் மீன் பெட்டிகள், மரக்கறி மூட்டைகள் முடிந்தால் மனிதர்களைக்கூட ஏற்றிச் செல்லும் அதிசய வாகனம்.
எப்படியும் காலை 7 மணிக்கு நெல்லியடிச் சந்திக்கு வந்துவிடும். சனமாக இருந்தாலும் கொண்டக்டர் விடமாட்டான் அண்ணே இன்னும் கொஞ்சம் பொறுங்கோ சனம் வரட்டும் என எப்படியும் அரைமணித்தியாலம் அங்கேயே வைத்திருப்பான். பக்கத்து மொடேர்ன் ஸ்டோரில் உதயனையோ, ஈழநாதத்தையோ நின்று நிதானமாக சனம் நிறைந்தபின்னர் ஏறும்பலரைக்கண்டிருக்கின்றேன். சிலவேளை ட்ரைவரே தனக்கு தெரிந்தவர்களுக்கு இப்போ எடுக்கமாட்டான் பக்கத்து சங்குண்ணி கடையில் தேத்தண்ணி குடித்துவிட்டு வாருங்கள் என்பார்.
பெரும்பாலும் ஒரே ஆட்களே தட்டிவானில் பயணிப்பார்கள். இவர்கள் சாவகச்சேரியில் வேலைபார்ப்பவர்கள், கொடிகாமம் சந்தையில் வியாபாரம் செய்பவர்கள், என ஒரே மக்கள் செல்வதால் அவர்களுக்கு பலரையும் பழக்கமாய் இருக்கும் இதனால் ஒருவர் வரப் பிந்தினால் கூட ட்ரைவருக்கு உரிமையாக தம்பி ஆச்சி வரவில்லை சின்னத்தம்பி அண்ணை வரவில்லை கொஞ்சம் பொறுங்கள் என கூறுவார்கள்.
சீட்டுகள் பெரும்பாலும் மரத்தாலே ஆனவை. பின்னுக்கு அரைமுதுகுதான் சாஞ்சு இருக்கமுடியும். இரண்டு சீட்டுக்கு இடையில் தேவைப்பட்டால் இன்னொரு பலகை போட்டு அடிசனலாக ஆட்களை இருத்தும் கலை இவர்களுக்குத் தான் தெரியும்.
நெல்லியடிச் சந்தியில் அரைமணித்தியாலமாக உறுமிக்கொண்டே இருக்கும் சிலவேளைகளில் வெளிக்கிடுவதுபோல் எடுத்து அப்படியே பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்றுச் சுற்றி திரும்ப அதே நிண்ட இடத்தில் கொண்டுவந்து நிப்பாட்டுவார்கள். சிலவேளை சீரிபி தூரத்தில் வ்ருகின்றது என்றால் மட்டும் உடனே எடுத்துப்போடுவார்கள். ஆனாலும் கோயில்சந்தை, அந்தணத்திடலில் சில நிமிடங்கள் எப்படியும் நிண்டுதான் எடுப்பார்கள். திரும்ப மாலையில் கொடிகாமத்தில் இருந்து தட்டிவான் தன் பயணத்தை நெல்லியடி ஊடக பருத்துறைக்கு செல்லும்.
தொண்டைமானாறு செல்வச் சன்னதித் திருவிழா நேரத்தில் நெல்லியடியிலிருந்து கோவில் வரை ஸ்பெசல் சேர்விஸ் விடுவார்கள். அந்த அனுபவமும் சுவையானது. இதனை விட அச்சுவேலியில் இருந்தும் தட்டிவான் சில இடங்களுக்குச் செல்வது ஆனாலும் பயணம் செய்துபழக்கமில்லை. ஏனைய மாவட்டங்களில் நான் தட்டிவான் கண்டதில்லை. வவுனியா, திருகோணமலை, நுவரேலியாப் பகுதியில் சிறிய வான்களில் மக்களை அடைந்து கொண்டு செல்வதைக் கண்டிருக்கின்றேன். கஸ்டமான பயணம் என்றாலும் நம் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணிப்பார்கள்.
வட்டாரச் சொல்லில் தட்டிவான் எப்படி வரும் என எண்ணாதீர்கள். நம்ம வட்டாரத்தில் தட்டிவான் பேமஸ்.
இதேபோல் இன்னொரு வாகனமும் பேமஸ் கண்டுபிடியுங்கள் முடிந்தால் எழுதுங்கள்.