Author: கானா பிரபா
•6:38 PM
கி.பி 1248 ஆம் ஆண்டு புவனேகபாகு எனும் அமைச்சரால் முதன்முதலாகக் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கி.பி 1450 ஆம் ஆண்டு, சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்துக்குப் பரிகாரம் தேடுவான் போன்று குருக்கள் வளவு என்ற இடத்தில் அழிக்கப்பட்ட நல்லூர்க் கோயிலை மீண்டும் புதிதாகக் கட்டுவித்தான்.

படையெடுப்பின் போது அழிந்துபோன தேவாலயம் இருந்த இடத்தில் மீள ஆலயத்தைக் கட்டாது புதியதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைப்பித்தான். அரண்மனை அரசமாளிகைகள் என்பன அமைந்திருந்த பண்டார வளவு, சங்கிலித் தோப்பு (பின்னர் வந்த பெயர்) என்பவற்றுக்கு அருகில் இக்கோயிலுக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ்விடம் முத்திரைச் சந்தியில் இன்று கிறீஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடமாகும்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலே திருவிழாக் காலங்களில் கூறப்படும் சமஸ்கிருதக் கட்டியம் (புகழ் மாலை) இக் கோவிலை சிறீ சங்கபோதி புவனேக பாகு கட்டினான் எனக் கூறப்படுகின்றது. இது கல்வெட்டாக இல்லாவிடினும் மரபு வழியாக நிலவி வந்துள்ளது. இப்புவனேக பாகு தான் ஆறாவது பராக்கிரம பாகு சார்பிலே யாழ்ப்பாணத்தை வென்று சிறிது காலம் (கி.பி 1450 - 1467) நிர்வாகம் செய்த சபுமால்குமாரய (தமிழில் செண்பகப் பெருமாள்) எனவும, இவனே பின்னர் கோட்டை அரசனாக ஆறாம் புவனேக பாகு எனும் பெயருடன் விளங்கினான் எனவும் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது.

ஏற்கனவே முன்னைய தமிழரசரால் அமைக்கப்பட்டுப் போரின் போது பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத கோயிலை இவன் மேலும் திருத்தியமைத்தமையால் அல்லது விசாலித்தமையால் இவன் பெயர் கோயிற் கட்டிடயத்தில் இடம் பெற்றிருக்கலாம். மேலும் சிலர் இப் புவனேகபாகு தமிழரசனின் மந்திரி என்பர். வரலாற்றிலே ஒரு நிறுவனத்தை நிறுவியவனின் மங்கிப் பின்னர் அதனைத் திருத்தியவனின் பெயர் நிலைபெறுதலுமுண்டு.

கஜவல்லி, மகாவல்லி சமேதராகிய சுப்பிரமணியர் மீது செண்பகப் பெருமாள் மிகுந்த பக்தியுடையவனென்றும், பதினாறு மகாதானங்களையும் புரிந்த சிறப்புடையவன் என்றும் கட்டியம் அவனைப் புகழ்ந்துரைக்கின்றது.
ஆறாம் பராக்கிரமபாகு தன் ஆட்சியின் முடிவிலே முடி துறந்து தன் மகள் வழிப் பேரனும் உலகுடைய தேவியின் மகனுமாகிய ஜய்வீர பராக்கிரமபாகு என்னும் இளைஞனைக் கோட்டை இராச்சியத்தின் அரசனாக முடிசூட்டிவிட்டு கி.பி 1467 இல் இறந்தான். இவற்றை அறிந்த செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலுள்ள தன் படைகளை அழைத்துக் கொண்டு கோட்டைக்குச் சென்று அங்கு போர் புரிந்து அதன் விளைவாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். சிறீ சங்கபூதி புவனேகபாகு என்னும் பட்டப்பெயரோடு அங்கு ஆட்சி புரிந்தான்.


அவனுடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்ளாத சிங்களப் பிரதானிகள் மலைநாட்டிலும் கீழ்நாட்டிலும் கலகம் விளைவித்தார்கள். கீழ் நாட்டில் ஏற்பட்ட கலகத்தைச் சிங்கள நூல்கள் சீஹள சங்கே (சிங்களக் கலகம்) என வர்ணிக்கின்றன. ஆயினும், தனது தம்பியான அம்புலாகல குமாரனின் ஆதாரவுடன் புவனேக பாகு அக்கலகங்களை அடக்கி விட்டான்.
செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கித் தென்னிலங்கைக்குப் போனபின் கனகசூரிய சிங்கையாரியான் தமிழகத்திலுள்ள அரசர்களின் உதவி பெற்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டான். யாழ்ப்பாண இராச்சியமானது கோட்டை அரசனின் மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
உசாத்துணை:
"ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா


நல்லைக்கந்தன் ஆலயத்தில் இந்த ஆண்டின் ஐந்தாம் நாள் திருவிழாப்படங்கள் நன்றி கிளவி தோட்டம் செந்தூரன்.





This entry was posted on 6:38 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On August 2, 2009 at 4:45 AM , யசோதா.பத்மநாதன் said...

பொருத்தமாக வரலாறு வந்து திருவிழாவோடு பொருந்துகிறது.

கிரமமாகவும் தெளிவாகவும் அறியத் தருவதற்கு நன்றி.

தொடர்ந்து தாருங்கள்.

 
On August 2, 2009 at 6:04 AM , கானா பிரபா said...

மிக்க நன்றி

 
On August 2, 2009 at 10:42 AM , வந்தியத்தேவன் said...

பிரபா உலகத்திலையே மிகப்பெரிய கொடுமை பக்கத்தில் இருந்துகொண்டே திருவிழாவுக்கு போகாமல் இருப்பது. கொழும்பிலிருந்து போவது என்றால் எப்படியும் விமான டிக்கெட் 22000 முடியுமாம். இதனைவிட முருகனை ஆறுதலாகப் போய்ப் பார்க்கலாம்.

ஊரிலை கையடக்கத் தொலைபேசி கூடி பெடியள் ஐயரின்ரை மந்திரம் பஞ்சபுராணம் பாடுவது, நாதஸ்வரம் தவில் எல்லாம் நேரடி ஒலிபரப்புச் செய்வார்கள் ஆத்திரம் தான் வரும்.

அதேபோலைத்தான் நீங்களும் தினமும் திருவிழாப்படம் போட்டு கோபத்தைக்கூட்டுகிறீர்கள். என்ன செய்வது அடுத்த திருவிழாவுக்கு நல்லூர்க் கந்தனிடம் இருந்து அழைப்பு வரும் என நினைக்கின்றேன்.