Author: யசோதா.பத்மநாதன்
•2:05 AM


 சிலேட்டும் பென்சிலும் என்பது தான் சுமார் 40, 50 வருடங்களின் முன்பு பாலர் வகுப்புகளுக்குச் செல்லும் பாலர்களுக்கு இருந்த ஒரே எழுது பொறி.(எழுதும் உபகரணம்) 

மரச்சட்டமிட்ட, கருமை நிறம் கொண்ட , உடையும் வகை சார்ந்த, அழித்தெழுதும் இயல்பு கொண்ட இதனோடு கூடவே பயணிக்கும் எழுதும் பொறியான நீளக் குச்சி ஒன்றும். 

ஒருவர் இந்த எழுது குச்சையை விட்டு விட்டு வந்திருந்தால் மற்றவர் தன்னுடய இந்த எழுது குச்சியை உடைத்துப் பங்கிடுபவர்களும் பரிமாறிக் கொள்பவர்களுமாக தம் சினேகிதரிடையே இது குறித்ததான ஒரு அன்னியோன்யமும் வகுப்பறைகளுக்குள் சமயா சமயங்களில் மலர்ந்திருக்கும்.

இது எதனால் செய்யப்பட்டது, எப்படி உருவாக்கப் பட்டது என்பது குறித்து என்னால் அறிய முடியவில்லை. எவரேனும் இது பற்றிக் கருத்துத் தெரிவித்தால் அது பயனுடயதாக இருக்கும்.

பிற்காலங்களில்  ஒற்றை றூள், இரட்டை றூள், நாலு றூள், சதுரறூள், கொப்பிகளும் பென்சில் பேனாக்கள் போன்ற பல்வேறு தொழில் நுட்ப எழுது உபகரணங்களும் வந்து இந்த இடங்களை நிரப்பி விட்டன. இப்போது காட்டத்தன்னும் யாரிடமும் இச் சிலேட்டும் பென்சிலும் இருக்கும் என்று தோன்றவில்லை.

இவற்றின் பயன்பாடு இலங்கையில் மாத்திரமன்றி இதே காலப் பகுதியில் இந்தியா போன்ற ஏனைய நாடுகளிலும் நிச்சயமாகப் பயன்பாட்டில் இருந்திருக்கும்.

( இந்த நீலமும் சிவப்புமான;  நீளமானதும் குறுகிய இடைவெளியைக் கொண்டதுமான கோடுகளைக் கொண்ட, இந்த நாலுறூள் கொப்பிகளை வெளி நாடுகளில் கூட நான் கண்டதே இல்லை. இக் கொப்பிகள் அக் காலங்களில் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு பிள்ளைகள் ஆங்கில எழுத்துக்களை உறுப்பாக எழுத மிகப் பயன் பட்ட ஒன்று.)

இவை இரண்டும் தான் பாலர்கள் பள்ளிக்கு அன்றய காலங்களில் கொண்டு செல்பவை.

படங்கள்: நன்றி, கூகுள் இமேஜ்.