Author: யசோதா.பத்மநாதன்
•6:32 AM

ஒருகாலம் அது!

முன் விறாந்தை வைத்த மதில் கட்டிய வீடுகளும் மான் கொம்பு பதித்த சுவர்களும் பின்னல் வேலைப்பாடு கொண்ட கதிரைகளும் (அதில் தவறாமல் ஒரு சாய்வு நாற்காலி கொலுவீற்றிருக்கும்) இரண்டு பக்கமும் திறக்கத் தக்கதாகப் திறம் பலகையில் செதுக்கிய சின்ன ஜன்னல் மற்றும் காத்திரமான உள்புறம் திறாங்கு வைத்த வெளிப்புறம் பித்தளைக் குமிழியும் திறப்புத் துவாரமும் கொண்ட கதவுகளும் இரவு நேரத்தில் மங்கலாக எரியும் மின் விளக்குகளும் ஒரு விதமான யாழ்ப்பாணத்து வாழ்வைச் சொல்லும்.

அது போல கிடுகு வேலிக்குள் அல்லது சுற்று மதிலுக்குள் சமத்தாக வீற்றிருக்கும் நாற்சார வீடுகளும் யாழ்ப்பாணத்துக்கு ஒரு தனிக் களையைக் கொடுத்திருந்தன ஒரு காலம். அது தொலைக்காட்சிகள் அற்றிருந்த காலம்.அப்போதெல்லாம் இரவுச் சமையலும் அடுக்களை வேலைகளும் முடிந்த பின்னால் பக்கத்து வீட்டுக்காரரும் கூடி இரவுச் சமா வைப்பது இப்படியான விறாந்தைகளில் தான். (சமா; கூடி நாட்டு நடப்புகள் மற்றும் விடயங்களைப் பேசுதல்)

அந்த வனப்பையும் வாழ்வையும் கொண்டிருந்த வீடுகளுக்குள் பந்திப்பாய்களும் அண்டா குண்டாக்களும் விஷேச தினங்களுக்காகத் தனியறையிலும் பறன்களிலும் வீற்றிருக்கும்.

அவற்றில் சில இங்கே:







கீழே இருப்பது புற்பாய். பந்திப்பாய் இதனைப்போல பாதியளவு இருக்கும். 

அது போல சீனத்து ஜாடிகளும் இருந்தன. அவை ஊறுகாய் மற்றும் பினைந்த புளி ஆகியன போட்டு வைக்கப் பயன் பட்டன.



குத்துவிளக்கொன்று சுவாமி அறையில் தவறாமல் இருக்கும்.ஆறு மாணிக்கு கால் முகம் கழுவி விளக்கேற்றி தேவாரம் பாடி படிப்பு மேசைக்கு போக வேண்டியது அனேகமாக எல்லாப் பிள்ளைகளுக்கும் பிறப்பிக்கப் பட்ட கட்டளையாக இருக்கும்.



அது போல மண்ணெண்ணையில் எரியும் ஒரு கைவிளக்கு எப்போதும் அடுப்படி பறனில் அவசர தேவைக்காக வீற்றிருக்கும்.


போருக்கு முன்பான யாழ்ப்பாண வீடுகளுக்கென்றிருந்த சில குண இயல்புகள் இவை.

படங்கள்:நன்றி கூகுள் இமேஜ்.