Author: யசோதா.பத்மநாதன்
•7:38 PM
ஒருவரை அல்லது ஒரு நிகழ்ச்சியை ஞாபகப் படுத்த ஏதேனும் ஒரு பாடல் வரி அல்லது ஒரு இசைக்குறிப்பு அன்றேல் ஏதேனும் ஒரு சிறிய பொருள் அல்லது நடைபெறும் ஒரு சிறு சம்பவம் போதுமானதாக இருக்கும்.பழைய நினைவுகளையும் வாழ்க்கையையும் அது மீட்டுத் தந்து விட்டுப் போயிருக்கும்.

அது போலத் தான் இந்தக் கிடுகுவேலியும் மூக்குப் பேணியும்!யாப்பாணத்தை; ஊரை; அங்கு வாழ்ந்த வாழ்வை இந்தப் படங்கள் நினைவு படுத்திப் போகிறது.



கிடுகு வேலி யாழ்ப்பாணத்து இமேஜ்களில் முக்கியமானது.யாழ்ப்பாண மக்களின் கட்டுப்பாடான மற்றும் கட்டுப் பெட்டிக் கலாசாரத்தை குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதற்கு ’கிடுகுவேலிப் பாரம்பரியம்’என்ற சொல்லைக் குறியீடாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிடுகுவேலிகள் அங்கு தனித்துவமாக விளங்குவதையும் குறியீடாகக் கையாளப்படுவதையும் வரலாற்றுப் பரப்பில் தெளிவாகக் காணலாம்.



அது போலத்தான் மூக்குப் பேணியும்.அதன் தனித்துவமான வடிவமும் அன்னாந்து குடிப்பதற்கேற்ற வகையில் இருக்கும் அதன் நளினமும் அன்றாடப் பயன்பாட்டில் யாழ்ப்பாணத்தார் மூக்குப் பேணியைப் பயன்படுத்திய பாங்கும் யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தின் இன்னொரு இமேஜ்.

இந்தப் படங்களை கூகிளில் பார்த்த போது ஊர் சோகம் சூழ்ந்தது. அதனால் பதியத் தோன்றிற்று.
Author: ஜேகே
•7:44 PM


“சும்மா போ அன …இனி வெறுங்கல்லு .. என்னால தோண்ட ஏலாது”
“என்ற அச்சா குஞ்சல்லோ, இன்னும் ரெண்டு அடி தான் .. தோண்டினா .. குத்தி போட்டு மண்மூடை அடுக்கலாம்”
“அப்ப பின்னேரம் லலித்தொட கிரிக்கட் விளையாட விடுவியா?”
“சரி என்னத்தையும் போய் விளையாடு .. இப்ப இத கிண்டு”

அம்மா கிரிக்கட் விளையாட பெர்மிஷன் தந்த சந்தோசத்தில் போட்ட பிக்கான் கொஞ்சம் ஆழமாகவே விழ, யாழ்ப்பாணத்து கல்லு “நங்” என்று சத்தம் போட்டது. கொஞ்சம் கையால் மண்ணை கிளறி, கல்லை க்ளீன் பண்ணிவிட்டு, மீண்டும் சரியான கொட்டு பார்த்து பிக்கான் போட்டேன். சர்க்கென்று பிக்கான் இறங்க, நான் பிடியை ஒரு எம்பு எம்ப சர்ர்க்க்க்க் என்று இன்னொரு சத்தம்.

பிக்கான் மரப்பிடி முறிந்துவிட்டது!


என்னடா இது சிறுகதை போலே ஆரம்பிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். ஈழத்தில் பிக்கான் போட்டு கைப்பிடி முறிச்ச அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். வாழை அடிக்கிழங்கு எல்லாம் கிளறி கிளீன் பண்ணும்போது, முறிஞ்சு போன அனுபவம் இருக்கா? பிடி என்னதான் ஸ்ட்ராங்கா இருந்தாலும், விஷயம் தெரியாமல் தெண்டிவிட்டீர்கள் என்றால் கதை சரி. .. ஆ அப்பு.. இந்த மரப்பிடி எப்பிடி செய்யிறது என்றதும் சொல்லவேண்டும். கொடாரிப்பிடியை எல்லாம் கொல்லைப்புறத்து காதலியா தனியா எழுத முடியாது. பிறகு என்னையும் கொடாறிக்காம்பு என்று சொன்னாலும் சொல்லிடுவாங்கள் இல்லையா!

கோடாலி, பிக்கான், மண்வெட்டி போன்றவற்றுக்கு மரப்பிடி செய்வது பூவரசு மரத்தில் இருந்து தான். இடியப்ப உரல், நல்ல மாட்டுவண்டில் அச்சு எல்லாம் பூவரசு மரத்தில் இருந்து செய்யப்படுவதே. மரம் பார்த்தால் நோஞ்சான் மாதிரி இருக்கும். ஆனால் ஊரில கதியால்(வேலி) அடைக்கும்போது முக்கிய பாயிண்டுகளில் எல்லாம் பூவரசு தடி தான் நடுவார்கள். அதுவும் அடைக்க தெரியாமல் அடைத்தால், மரம் சரிஞ்சு வளர்ந்து மற்றவன் காணிக்குள் தலை எட்டிப்பார்த்து, யாழ்ப்பாணத்தில் பல வேலிச்சண்டைகளை ஊதிபெருப்பித்த பெருமை இந்த பூவரசுக்கு உண்டு. காய வச்சு அடுப்பெரிச்சா கொஞ்சம் புகைச்சலாக எரியும்! இலையை சுருட்டி பீப்பீ ஊதலாம். கொஞ்சம் பெரிய இலை புடுங்கினால், வைரவர் கோவிலில் பிரசாதம் கொடுக்கலாம். ஊர்க்கோவில்களில் வெற்றிலை கட்டுப்படியாகாத காலத்தில் வீபூதி சந்தனம் சுருட்டிக்கொடுப்பதும் இதில் தான். பூவரசுக்கு அப்படி ஒரு ஹிஸ்டரி இருக்கு! அந்த மரத்தில் இருந்து தான் நல்ல பழுத்த கொப்பாக பார்த்து வெட்டி, நெருப்பு தணலில் முதல்ல போட்டு சுடுவார்கள். ஒரு பொன் நிறத்தில் எரிந்து வரும்போது, தோலை கீறி, மரவேலை செய்யும் தொழிலாளர்களிடம் கொடுத்து சீவி எடுத்து, மண்வெட்டி, பிக்கான் கோடாலிக்கு பிடி போட்டால், சிங்கன் அசையாமல் இருப்பார்!

இப்பிடி கனகசபை தாத்தா ஊரில் இருந்து செய்துகொண்டு வந்த பிடி தான் அன்றைக்கு முறிஞ்சு போய்விட்டது. அம்மாவை பாவமாய் பார்த்தேன். அம்மா நெருப்பு எடுக்க போகிறார் என்று பயம். ஆனால், அவ சோட்டியை கொஞ்சம் உயர்த்தி செருகிக்கொண்டே, “சும்மா படிச்சு படிச்சு உடம்பு பூளை பத்திப்போய் கிடக்கு, ஒழுங்கா குனிஞ்சு நிமிர்ந்து ஒரு வேலை செய்ய தெரியாது” என்று திட்டியவாறே, அங்கே இங்கே கிடந்த சின்ன சின்ன விறகு காம்புகளை எடுத்து பிக்கான் ஓட்டையில் சக்கை வைத்து, மீண்டும் பிடியை, பிடரிப்பக்கமாக சுவரில் நாளு அடி நன்றாக அடித்து இறுக்கி தந்தார். இப்போது கூட நான் இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது ஒரு ப்ளேன்டீ போட்டுக்கொண்டு வந்து தந்துவிட்டு, நேற்றைக்கு “Yarl IT Hub”, இன்றைக்கு “கொல்லைப்புறத்து காதலியா” என்று சொல்லிக்கொண்டே அதே மாதிரி மனசுக்குள் திட்டியிருக்கவேண்டும். கேட்கவில்லை அம்மா!

எங்கள் வீட்டு சாமியறை. பிள்ளையார், முருகன், லட்சுமி, சரஸ்வதி, நயினை நாகபூஷணி அம்மன், குட்டி சிவலிங்கம், மன்னார் அன்ரி தந்த மடு மாதா சிலை, வீட்டு குடிபூரலுக்கு யாரோ உபயம் செய்த ஓம் சரவணபவ எழுத்து போட்ட மிகப்பெரிய முருகன் படம், பிருந்தாவனத்து கிருஷ்ணன், சின்ன இயேசு படம், சிவனே என்று உட்கார்ந்து இருக்கும் புத்தர் சிலை என்று ஒரு தட்டு பூரா கடவுள்கள். ஸ்பெஷலாக லட்சுமி, முருகன், பிள்ளையார் படங்களுக்கு மட்டும் வண்ண வண்ண பல்புகள் மேலே எரியும். எங்கள் வீடு என்று இல்லை, யாழ்ப்பாணத்தில் எந்த வீட்டிலும் இப்படி தான் கடவுள்கள். பல்ப் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்! மேல் தட்டில் சாமிகள் இருக்க, கீழே மிக நீளமான ஒரு நிலக்கீழ் சீமந்து கிடங்கு அந்த அறையில் இருந்தது. சாமான்கள் வைப்பதற்காக அது அமைக்கப்பட்டிருக்கவேண்டும். 85, 86 களில் எல்லாம் சண்டைகள் நடக்கும் நேரம் நாங்கள் எல்லாம் அந்த கிடங்குக்குள் போய் பதுங்கிக்கொள்ளுவோம். முதல் காதலி போல் முதல் பங்கர் அது. பயந்து பதுங்கிய காலம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது! மேலே கடவுள்களை தாண்டி குண்டு விழாது என்று கொழும்பர் மாமிக்கும் பெரும் நம்பிக்கை. வீட்டுக்கு பங்கர் தேவையில்லை. அது போதும் எண்டு சொல்லிவிட்டார்.

இந்தியன் ஆர்மி டவுன் பக்கம் மூவ் பண்ணிக்கொண்டு இருக்கு. எங்கள் சாமியறை கிடங்கு இந்தியாவின் அடிக்கு தாக்குப்பிடிக்காது என்று இயக்கத்தில இருந்த சொந்தக்கார அண்ணா ஒருவர் சொல்லிவிட, இப்போதெல்லாம் குண்டடிக்க நாங்கள் ஓடுவது பாத்ரூமுக்கு தான். எங்கள் வீட்டு பாத்ரூமுக்கு மேலே பெரிய தண்ணீர் தாங்கி இருக்கிறது. கொங்கிரீட். ஷெல் விழுந்தாலும் துளைத்துக்கொண்டு வராது. பாதுகாப்பு. தூக்கம் வந்தால் கொஞ்சம் சாய்ந்தும் தூங்கலாம். சாமியறை கிடங்கு போதாது. பாத்ரூம் .. பயத்தில மணம் எல்லாம் பெரிசா இருக்காது.

அப்பாவின் நண்பர் ஒருவர். அவர் டீச்சர். சுதுமலையில் வசித்தவர். ஒருநாள் குண்டு அடித்துக்கொண்டு இருக்கும் போது அவர் வீட்டு பாத்ரூமில் பதுங்கியிருக்க, குண்டு வீட்டின் மேல விழுந்துவிட்டது. ஸ்பாட்டில் ஆள் க்ளோஸ். நிலநடுக்கம் வந்தால் வீட்டை விட்டு வெளியே ஓட வேண்டுமாம். இல்லாவிடில் நேரிசல்களுக்குள் சிக்கி செத்துவிடுவோமாம். அந்த அங்கிளும் அப்பிடி தான் நெரிசலில் இறக்க, அடுத்தவாரமே எங்கள் வீட்டு முன் வளவில் பங்கர் வெட்ட முடிவானது!


எங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறீங்களா? வீட்டுக்கு முன்னாலே ஒரு பரப்பு காணி. பூங்கன்று தான் முழுக்க இருக்கும். நந்தியாவட்டை, நாகமணி, செவ்வரத்தை, ரோசா, தியத்தலாவ என்ற மலைக்கிராமத்தில் இருந்து அம்மா கொண்டு வந்து வைத்த பார்பட்டன்ஸ் என்று விதம் விதமாக பூத்து தொங்கும். கிணற்றடியில் ஒரு செவ்வரத்தை, மொத்தமா எட்டு ஒட்டு அம்மா ஒட்டியிருப்பார். எட்டு கலர்ல பூ பூத்திருக்க சுற்று வட்டாரத்தில இருந்தவங்க எல்லாம் வந்து பார்த்துவிட்டு போவார்கள். கம்பஸ் பக்கத்தில பூக்கன்று வீடு என்று சந்திக்கடையில கேட்டால் சேவயர்(surveyor) வீட்டை உடனே காட்டுவார்கள். பேபி ஸ்டூடியோ அங்கிள் கொடாக் பிலிம்ல போட்டோ எல்லாம் எடுத்து தன் கடையில் மாட்டி வைத்தார். சுரேஷ் அண்ணா உதயனுக்கும் அறிவிப்போம், வந்து படம் பிடிப்பார்கள் என்றார். ஆனா அடுத்த மாசம் தானே இந்தியன் ஆர்மி இறங்கீட்டுது அங்க!

பங்கர் வெட்டுவதற்கு தோதான இடம் பார்க்கவேண்டும். தொலைவிலையும் இருக்க கூடாது. கக்கூசுக்கு கிட்டவும் இருக்கக்கூடாது. கீழால பைப் லைன் இருந்தாலும் கவனிக்கோணும். கிணத்தடி கடைசியா தெரிந்தெடுக்கப்பட்டது. செவ்வரத்தைக்கு பக்கத்தால பங்கர். அது பெரிய மரம், பக்கத்தில ஒரு எலுமிச்சையும் நின்றது. மேலால பொம்மரில இருந்து பார்த்தா கண்டு பிடிக்கேலாது. முதல் பங்கர் வெட்டியாச்சு. வெட்டினது ஞாபகம் இல்லை. ஆனா ஒருக்கா ரெண்டு தரம் பங்கருக்க இருந்தது ஞாபகம் இருக்கு. கொஞ்ச நாள் தான். இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தை பிடிச்சிட்டான். எங்கட முன் வீட்டில இந்தியன் ஆர்மி காம்ப் வந்தது. பங்கர் இருக்கிறது தெரிஞ்சா சிக்கல் எண்டு அப்பா குப்பையை போட்டு மூடிப்போட்டார்.

மூண்டு வருஷங்கள் பங்கர் இல்லாத வீடு. இந்தியன் ஆர்மியை இப்போது ஒரு வழியா கப்பலில் அனுப்பியாயிற்று. கொஞ்ச நாள் யாழ்தேவி ட்ரெயின் எல்லாம் இலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் ஓட ஆரம்பித்துவிட்டிருந்தது! கரண்ட் கூட அவ்வப்போது லக்ஸபானாவில் இருந்து விசிட் பண்ணும். திடீரென்று ஒரு நாள் அறுவாங்கள் சண்டையை தொடங்கிவிட, இப்போதெல்லாம் அடிக்கடி பொம்பர் விசிட் பண்ண ஆரம்பித்தது. கையோடு கோட்டை பிரச்சனை ஆரம்பிக்க, இளம் ஆட்கள் எல்லொரும் இயக்கப்பாட்டு பாடிக்கொண்டே முற்றவெளி ஏரியாவில் பங்கர் வெட்ட போயிட்டு வருவார்கள். சிலநேரங்களில் திரும்பி வராமலேயே இருந்துவிடுவார்கள். சில நேரம் பிரேதம் மட்டும் வரும்.

இப்ப இயக்கம் யாழ்ப்பாணத்தை வைத்திருக்கிறது. அப்போது நிதர்சனம் என்று இயக்கத்தின் தொலைகாட்சி இருந்தது. அதன் அலுவலகம் எங்கள் வீட்டுக்கு முன்னால். முன் வீடு ஒரு புரோக்டர் வீடு. அவர் குடும்பம் எப்பவோ ஆஸ்திரேலியாவுக்கு எஸ்கேப். அதனால் தான் முதலில் இந்தியன் ஆர்மி அந்த வீட்டில் காம்ப் போட்டது. அவர்கள் போக நிதர்சனம் காம்ப் வந்துவிட்டது. முன்னுக்கு நிதர்சனம் காம்ப் என்பதால் பொம்மர் குண்டு போடும்போது காம்பில் விழாமல் சுற்றுவட்டாரத்தில் தானே விழும்! அத்தனை வீடுகளும் பங்கர் வெட்ட ஆரம்பிக்க, அது ஒரு முஸ்பாத்தி என்றால் முஸ்பாத்தி தான் போங்கள்.

பங்கர் வெட்டுவது என்பது கிட்டத்தட்ட நவராத்திரிக்கு கொலு வைப்பது போல. வீட்டுக்கு வீடு அப்போது பங்கர் வெட்டுவார்கள். ஒரு “ட” எழுத்து வடிவில் அநேகமான பங்கர்கள் இருக்கும். சில பெரிய பங்கர்கள் “ப” வடிவில் இருக்கும். சும்மா ஒன்றுமே இல்லாமல் டப்பா “I” வடிவ பங்கர்களும் சிலர் வெட்டுவதுண்டு. யார் வீட்டில் ஆழமான பங்கர் என்பதில் தான் போட்டியே. எங்கள் ஊர் திருநெல்வேலி, கொஞ்சம் தோண்டினா கல்லு வர தொடங்கிவிடும். இரண்டு அடிக்கு பிறகு பிக்கான் போட வேண்டும். நான்கடியில் ஆப்பு வைத்து வெட்டவேண்டும். அதனால் போட்டியில் எங்கள் வீடு எப்போதுமே பின் தங்கி விடும். அன்ரி ஒருவரின் வீட்டு பங்கரில் ஆள் ஒருவர் குனியாமல் நிற்கலாம்.

நிதர்சனம் காம்ப் முன்னுக்கு வந்தது என்று சொன்னேன் இல்லையா. இப்போது கிணற்றடியில் பங்கர் வெட்டுவது பொம்மர் காரனுக்கு அல்வா எடுத்து வாயில் வைப்பது போல. போட்டான் என்றால் அடுத்த நிமிஷம் அடுத்த பிறவியில், யாரேனக்கு அப்பனோ, அவன் குழைந்தையை எடுத்து கொஞ்சிக்கொண்டு “ஜேக் சுள்ளி” என்று பெயர் வைத்திருப்பான். நல்ல காலம் நாங்கள் வீட்டுக்கு பின்னால் பங்கர் வெட்ட முடிவு செய்ததால் இன்னமும் ஜேக் ஜெகேயாகவே இருக்கிறான்!


எங்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு விலாட்டு மாமரம். அதற்கு அடியில் தான் பங்கர் வெட்ட ஆரம்பித்தோம். பங்கர் வெட்ட ஆட்கள் பிடிப்பது கஷ்டம். கூலியும் ப்ளேன் டீயும் குடுத்து மாளாது. நாங்களே வெட்டினோம். பக்கத்துவீட்டுக்காரரும் உதவி செய்தார்கள். எங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள நான்கைந்து குடும்பங்களுக்கு ஒரு பங்குக்காணியும் கிணறும் இருந்தது. அந்தக்காணியில் மூன்று உயர்ந்த தென்னை மரங்கள். மரங்களில் காய்க்கும் தேங்காய் கூட எல்லோருக்கும் பங்கு தான். ஆனால் இரவிலே எத்தனையாவது சாமத்தில் இருந்தாலும், அந்த மரங்களில் இருந்து தேங்காய் விழுந்தால், தொப் என்று சத்தம் கேட்கும். எல்லா வீட்டுக்காராரும் அலறிப்பதைத்துக்கொண்டு இரவோடி இரவாக ஓடுவார்கள், தேங்காய் பொறுக்க. தேங்காய்க்கு பங்கில்லாதவன் முதல் ஓடுவான்! அப்படி ஒரு ஒற்றுமையான பங்கு காணி அது. இப்போது பங்கருக்கு மேலே போட்டு மூட தென்னங்குற்றி வேண்டும் என்பதால் எல்லா குடும்பங்களும் ஒத்துக்கொண்டு அந்த தென்னைகளை வெட்ட முடிவு செய்தோம். குற்றிகளை பங்கு பிரிப்பதில் கூட போட்டி தான். அடிக்குற்றி கொஞ்சம் ஸ்ட்ராங் இல்லையா. அதுக்காக சண்டை பிடிப்பார்கள். இதெல்லாம் என்னுடைய அடுத்த கதையில் சொல்கிறேன். இப்போது மாட்டருக்கு வருவோம்.

பங்கர் வெட்டி, குற்றி அடுக்கி, அதற்கு மேல் உரப்பை (போரை பாக்) யில் குரு மணல் நிரப்பியாச்சு. குருமணல் என்று சொல்வது கடற்கரை மணல். ஷெல் விழுந்தால் சரக்கென்று இறங்கி சிக்கிப்போய் நிற்கும். வெடிக்காது. சும்மா களிமண் போட்டு நிரப்பினா, கட்டி பட்டுப்போய், ஷெல் மூடையில் விழுந்த உடனேயே வெடித்துவிடும். இதெல்லாம் யாழ்ப்பாணத்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள். விஞ்ஞானி என்றால் அப்துல்கலாம் மாதிரி அணுகுண்டு எப்படி செய்யவேண்டும் என்று கண்டுபிடிக்க தேவையில்லை. அணுகுண்டு போட்டால் எப்படி தப்புவது என்று கண்டுபிடிப்பவனும் விஞ்ஞானி தான். ஏனோ தெரியாது அவர்களை உலகம் கொண்டாடுவதில்லை!

பங்கர் ரெடி. இப்போது இண்டீரியர் டிசைன் செய்யவேண்டும். சும்மா போய் பதுங்கி இருக்கும் பங்கர் தான்.ஆனால் அதற்குள் நிறைய விஷயம் இருக்கு. பங்கர் சுவரில் கிழக்கே பார்க்கும் வண்ணம் சதுரவடிவ அரை அடிக்கு அரை அடி, குட்டி பொந்து ஒன்று போட வேண்டும். அங்கே ஓரு பிள்ளையார் சிலை, உங்கள் ஊர் கோயில் கடவுள் படம். மடு மாதா, நல்லூர் கந்தன் படம் என் ஒரு மினி சுவாமி வைப்போம். அம்மா காலையில் சாமிக்கு பூ ஆய்ந்து வைக்கும்போது, பாவம் பங்கருக்குள்ளும் இறங்கி இரண்டு பூக்கள் வைத்து கும்பிடுவார். கோயிலில் இருக்கும் கடவுள்களை விட பங்கருக்குள் இருக்கும் கடவுள்களை தனியாக கவனிக்கவேண்டும். இல்லாவிடில் பாவம் நாங்கள், கடவுள்கள் கைவிட்டு விடுவார்கள்.

பங்கரில் அதேபோல இன்னொரு பொந்து வைத்து, அங்கே மெழுகுதிரி, நெருப்புப்பெட்டி(தீப்பெட்டி) வைக்கவேண்டும். ஹெலிகாப்டர் மேலே சுற்றினால், பங்கரின் வாசலை ஓலையால், அல்லது ஒரு தகரத்தால் உள்ளே இருந்து மூடவேண்டும். இல்லாவிட்டால் கண்டுபிடித்து சுட தொடங்கிவிடுவான். மூடிவிட்டால் உள்ளே கும்மிருட்டு, வெளிச்சம் வேண்டும். அதுக்கு தான் இந்த மெழுகுதிரி. ஆத்திர அவசரத்துக்கு பங்கருக்கு ஓடும்போது எவனாவது தீப்பெட்டி எடுத்துக்கொண்டு ஒடுவானா? அதுக்கு தான் இந்த முன் ஜாக்கிரதை. காமடி என்னவென்றால் எங்கள் முன்வீட்டுக்காரர்கள் தங்கள் பங்கருக்குள் கரண்ட் கனெக்ஷன் குடுத்து மின்விசிறி, லைட் எல்லாம் பொருத்தி இருந்தார்கள். உள்ளே இருந்த சாமிப்படத்துக்கு LED ஒளிவட்டம் வேறு. நாங்கள் எல்லாம் கண்காட்சி பார்க்க போவது போல அவர்கள் பங்கரை பார்க்க போவோம். சூப்பராக இருக்கும். ஆனால் குண்டு போடும்போது அனேகமாக கரண்ட் இருக்காது. அப்படியே இருந்தாலும் பக்கத்தில் விழுந்தால், அதிர்ச்சியில் பல்ப் வெடிச்சு கரண்ட் லீக்காகி சாகவேண்டியது தான். ஷோ காட்டுறதுல எங்கட யாழ்ப்பாணத்து ஆட்கள் போல உலகத்தில வேற எங்கேயும் ஆட்கள் பார்க்கமாட்டீர்கள். கனடாவில் அகதி அந்தஸ்து கிடைத்ததுக்கே மண்டபம் எடுத்து பார்ட்டி வைத்த ஒருத்தரை கூட எனக்கு தெரியும்! அம்மா இப்படியா கூத்துக்களை “புறக்கோலம்” காட்டுறாங்கள் என்று சொல்லுவா. யாழ்ப்பாண தமிழ் என்று நினைக்கிறேன்.

அந்த நாட்களில் சண்டை தொடங்கிவிட்டால் பள்ளிக்கூடம் இருக்காது. ஜாலி தான். என்ன ஒன்று, குண்டு அடிக்கடி பக்கத்தில விழும். அம்மா எங்களை எல்லாம் பங்கருக்குள்ளே போயிருந்து விளையாடுங்க என்று சொல்லுவா! உள்ளே ஒரு பாயை விரித்து அனேகமாக விளையாடும் விளையாட்டு தாயம் தான். யாருக்காவது தாயம் ஞாபகம் இருக்கிறதா? 32 பேட்டி, நான்கு சிப்பி சோகி, சதுரங்க ஆட்டம். யாராவது ஒருத்தன் அலாப்பிகொண்டு சண்டை பிடிக்கும் மட்டும் போட்டி தொடரும். சில நேரங்களில் மாபிள் போளை கூட விளையாடி இருக்கிறோம். பரீட்சை நேரம், படிக்கும் போது அடிக்கடி பங்கருக்குள் போனால் படிப்பு குழம்பும் என்பதால் பங்கருக்குள்ளேயே டேரா போட்டு படிப்பதுண்டு. அது ஒரு அழகிய கனாக்காலம் தான்!


குண்டு போடும்போது யாரு முதலில் பங்கருக்குள் போவது என்பதில் கொஞ்சம் பயம். பாம்பு பூரான், புலிநக சிலந்தி எல்லாம் உள்ளே இருக்கலாம். போனவருக்கு கடி நிச்சயம். அந்த சண்டையில், பத்து போடவோ, புக்கை கட்டவோ குருநகருக்கு உங்களை தூக்கிக்கொண்டு ஓட முடியாது பாருங்கள். இதிலும் அம்மா தான் சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து கிளியர் பண்ணுவா! அதுக்கப்புறம் அடிச்சு பிடிச்சுக்கொண்டு உள்ளே ஓடுவோம். ஆனால் இந்த இளந்தாரி ஆண்கள் உள்ளே வர பிகு பண்ணுவார்கள். அதென்ன பொம்பிள பிள்ளை மாதிரி ஓடி பதுங்கிறது என்று சொல்லிக்கொண்டே வெளிய வாசலில் நின்று பொம்மர் பார்த்து, அது எங்கட ஏரியாவுக்கு குண்டு போடபோகுதென்றால் மாத்திரமே உள்ளே வருவார்கள். ஆனா பின்னாடிக்கு சுப்பர் சொனிக், கபீர் விமானங்கள் போன்ற ஒலியை விட வேகமாக பறக்கும் விமானங்கள் வந்த பிறகு, இவர்கள் வீரத்தை கொஞ்சம் குறைத்து, பங்கர் படிக்கட்டில் நின்று செடில் காட்டுவார்கள்!

93, 94ம் ஆண்டு காலப்பகுதியில் பொம்மர் விமானிகள் FM ட்ரான்ஸ்மிஷன் மூலம் தான் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். அப்பா அவர்களின் frequency ஐ tap பண்ணி, குறுக்கே கேட்பார். சிங்களத்தில் பேசினாலும் இவருக்கு கொஞ்சம் புரியும்.
“மே நண்டா காம்பேக்க டான்டோன்ன”
“தவ ரவுண்டேன் கீல, பள்ளேன்ன யன்ன .. மங் கவர் ….”
“என்னப்பா சொல்லுறாங்கள்”
“நண்டா காம்ப் அடிக்க போறாங்கடா”
“எதெப்பா நண்டா காம்ப்?”
“நந்தா என்றால் மாமி என்று அர்த்தம்.. மாமின்ட காம்ப்”
“மாமிக்கு எங்கயப்பா காம்ப் இருக்கு?”
அப்பாவும் இப்போது நாசியை தடவி யோசித்தார்.
டேய் மாமி எண்டுறது கிட்டிண்ட மாமிடா, பக்கத்து ரோட்ல தானே கிட்டு மாமி வீடு இருக்கு. ஓடுடா ஓடு பங்கருக்க..
கிட்டு அண்ணா போலவே கிட்டு அண்ணாவின் மாமி எங்கள் ஊரில் மிகப்பிரபலம். அதனால் அவர் வீட்டில் தான் குண்டு போடா போகிறார்கள் என்று பயந்து, நாங்கள் எல்லாம் ஓடி உள்ளே ஒளிந்திருக்க, குண்டுகளை எங்கேயோ தூரத்தில் போட்டுவிட்டு விமானங்கள் ஓடிவிட்டன. கொஞ்ச நேரம் கழிந்து தான் தெரிந்தது, குண்டு போட்டது கொக்குவிலில் இருந்த “நந்தாவில் அம்மன் கோவிலடி” காம்படியில் என்று. வழமை போலவே குண்டு காம்பில் விழாமல் பக்கத்துவீட்டில் விழ ஆறேழு பேர் செத்துப்போனார்கள். எண்ணிக்கை மறந்துவிட்டது. செத்தவர்களும் தான்.

என்னடா இது பங்கர் வெட்டி கனகாலம் ஆயிட்டுதே? எப்ப தான் எங்கள் முன் காம்புக்கு குண்டு போடுவாங்கள்? நாங்களும் கஷ்டப்பட்டு பங்கர் வெட்டினதுக்கு பலனை அனுபவிக்கலாம் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது தான் அந்த நாளும் வந்தது. அது ஒரு மாசி மாசத்து காலை. 1991 என்று நினைகிறேன்.

அன்றைக்கு காலையே ஏழு மணிபோல இரண்டு பொம்மர்கள் வந்து ஐந்தாறு தடவை ரவுண்ட் அடித்துவிட்டு போனது. பொம்மர் சுற்றும் போக்கை பார்த்தே அம்மா சொல்லிவிட்டார் இது நோட்டம் பார்க்க வந்திருக்கு. குண்டு போடாது என்று. நாங்களும் எங்கள் வேலைகளை பார்த்துகொண்டிருக்க தான், நாச்சிமார் கோயிலடியில் வசிக்கும் அப்பாவின் நண்பர் செல்வராஜா, அந்தக்காலத்தில் சிலோன் ஏர்போர்சில் வேலை செய்தவர் ஓடிவந்தார். அவர் வரும்போதே ஒரு அவசரம்.
“என்ன அவசரமாய் விடிய வெள்ளன இங்கால பக்கம்”
“சந்திரா, இப்ப FM கேட்டனான், பொம்மர் காரங்கள் இங்கால தான் குண்டு போட போறாங்கள்”
ஏன் அப்படி சொல்ற?
“கம்பசுக்க போட்டிடாத, அந்த காம்ப் பக்கத்து வீட்டில தாமரைக்குளம் இருக்கும், பார்த்து வை” எண்டு கதைச்சவங்கள்
தாமரைக்குளமா அது எங்க இருக்கு?
எங்கட பாங்கர் நடராசா, வீட்டு முற்றத்தில கண்டறியாத தாமரை குளம் வச்சிருக்கிறான் இல்ல? குண்டு போட்டா அங்கேயும் விழாது, காம்பிலேயும் விழாது, பின் வீடு, உன்ர வீட்ட தான் விழும்
சும்மா விசர்க்கதை கதைக்காத, அந்த சின்ன குளம் மேல இருந்து தெரியுமே, நீ சும்மா எதையோ கேட்டிட்டு.
சொல்றத சொல்லிப்போட்டன், சும்மா நடப்பு காட்டாம, இண்டைக்கு மட்டும் கொக்குவில் பக்கம் போய் இருங்க
எங்களிட்ட நல்ல பங்கர் இருக்கு, பார்ப்பம்
செல்வராஜா அங்கிள் போய்விட்டார். அப்பா டென்சன் ஆகவில்லை. ரேடியோவை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டார். அம்மா உடனேயே அக்கம் பக்கம் விஷயத்தை சொல்லிவிட்டார். நியூஸ் தீயாய் பரவியது. அம்மா அவசர அவசரமாக சமைக்க தொடங்கினார். வீட்டுக்கதவுகளை இப்பவே பூட்டு போட்டு மூடுவிட்டு முன் வாசல் மட்டும் திறந்து வைத்திருந்தார். தாலிக்கொடி, நகை பாக் ரெடி. அவசரத்துக்கு ஓட எல்லாமே ஆயத்தம். தூரத்தே பொம்மர் சத்தம் கேட்டது!


பொம்மர் வருது என்றவுடனேயே, எங்கள் பக்கத்துவீட்டு அன்னலட்சுமி கிழவி ஓடிவந்துவிட்டது. நாங்கள் போக முன்னமேயே அது பங்கருக்குள் போய் விட, நாங்கள் எல்லாம் உள்ளே போக தயங்கினோம். அந்த கிழவி சரியாக குளிக்காது. பக்கத்தில் போனாலே “தாழம்பூவே வாசம் வீசு” தான். ஆனா “அம்மா விறகு கட்டை எடுக்கட்டா?” என்று மிரட்ட, மூக்கை பொத்திக்கொண்டு ஒவ்வொருவராய் உள்ளே போனோம். பொம்மர் இப்போது ஒரு ரவுண்ட் வந்துவிட, அம்மா கேட்டை பூட்டிக்கொண்டு(பங்கருக்குள் இருக்கும்போது தான் கள்ளர் வருவாங்கள்), பங்கருக்குள் வந்தார். அப்பா இன்னமும் வெளியே தான்! கையில் FM ரேடியோவில் பொம்மர் காரனின் லைவ் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டு!

இரண்டாவது ரவுண்ட். எங்கள் ஏரியாவை அடிக்க போறான் என்பது தெரிந்துவிட்டது. நாங்கள் எல்லோரும், அப்பாவை வா வா என்று கத்த, அவர் இன்னமும் நடப்புக் காட்டிக்கொண்டு நின்றார்! சரியான frequency ஐ இன்னமும் ரேடியோவில் பிடிக்க முடியவில்லை. பங்கருக்குள்ளே இன்னொரு காட்சி ஓடிக்கொண்டு இருந்தது! எட்டடி நீள பங்கரில் ஆறுபேர் இருக்கிறோம். கிழவிக்கு பக்கத்தில் யாரும் போகவில்லை. கிழவி ஒரு உருத்திராட்ச மாலையை கையில் வைத்துக்கொண்டு “அப்பனே, முருகா, பிள்ளையாரப்பா” என்று எல்லா கடவுளுக்கும் பங்கருக்குள் வரும்படி இன்விடேஷன் கொடுத்துக்கொண்டு இருக்க, எமக்கோ நாற்றம் தாங்க முடியவில்லை. மேலே வேறு அவன் குண்டு போட்ட பாடில்லை. பாவிகளா ஏண்டா இந்த சுத்து சுத்திறீங்க? வந்தமா போட்டமா என்று போகவேண்டாம்?

மூன்றாவது ரவுண்ட், பதிகிறான். மாமரத்துக்கு மேலால் கிரீச்சிக்கொண்டு சத்தம், அரை வினாடி தான், “டம்டமாங்” என்ற பெருத்த சத்தத்துடன் குண்டு விழுந்து வெடிக்கிறது. பங்கர் வாசல் அப்பாவுக்காக திறந்து இருந்ததால் படீர் என்று காற்றும் புழுதியும் உள்ளே அடிக்க, எல்லோரும் ஏக நேரத்தில் அப்பாஆஆஆஆஆஆ என்று கத்தினோம். அண்ணா உடனேயே வெளியே போய் அப்பாவை பார்க்க எத்தனிக்க அம்மா அவனை உள்ளே இழுத்தார். குண்டு இன்னமுமே சிதறிகொண்டு இருந்தது. ஒரு சில சன்னங்கள் பங்கர் வாசல் மட்டும் வந்து விழுந்தன. தென்னங்குற்றிகளுக்கிடையே இருந்து மணல் அதிர்ச்சியில் சிந்திக்கொண்டு இருந்தது. தலை எல்லாம் மண். அப்பா என்ன ஆனார்?அம்மாவும் நாங்களும் கதறுகிறோம். இரண்டு செக்கன் இருக்கும், அண்ணன் சொல்வழி கேட்காமல் எழுந்து ஓடுகிறான். எங்களுக்கு டிக் டிக் என்று இருக்கிறது. கடவாய் எல்லாம் தன்னாலே அடித்துக்கொள்கிறது. நடுக்கம். விமானம் அடுத்த ரவுண்ட் வருகிறது. கொஞ்ச நேரத்தில் அண்ணா திரும்பி ஓடி பங்கருக்குள் நுழைகிறான். அவனுக்கு பின்னால் அப்பா பட படவென உள்ளே நுழைந்ததை பார்த்த பிறகு தான், எங்களுக்கெல்லாம் நெஞ்சுக்குள் தண்ணி வந்தது, அம்மாவை திரும்பி பார்த்தேன்.

அம்மா இன்னமுமே வீறிட்டு அழுதுகொண்டு இருந்தார். அப்போது பிறந்த குழந்தை போல!
The secret of the greatest fruitfulness and the greatest enjoyment of existence is: to live dangerously!
--Friedrich Nietzsche, The Joyful Wisdom

பின் குறிப்பு:
அது தான் இந்த பதிவின் கிளைமாக்ஸ். நாங்கள் பங்கருக்குள் இருக்கும் போது மேலும் மூன்று குண்டுகள் எங்கள் வீட்டில் விழுந்ததும், நல்ல காலம் அப்பா அந்த இடத்திலேயே விழுந்து படுத்ததால் உயிர் தப்பியதும், பின்னாலே நடந்த பல நூற்றுக்கணக்கான குண்டுவெடிப்புகளும், நான் பதுங்கிய பங்கர்களும், பல சுவாரசிய விஷயங்கள் என்று இந்த பதிவு தொடரலாம் தான். ஆனால் நீண்டுவிட்டது.
சென்ற வருடம், நான் யாழ்ப்பாணம் போயிருந்த போது, அந்த மாமரத்தடிக்கு போயிருந்தேன். பங்கர் இருந்த இடம் குப்பை போட்டு மூடியிருந்தது. அதற்குள் இருந்த கடவுள்களும், விளையாட்டுகளும், பயங்களும் … எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்.