Author: geevanathy
•9:33 AM
(இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை)


(கல்வெட்டுக்கள்)

(விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கியமான பொருட்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தியதாகக் கருதப்படும் பொருட்கள்)

(நீர்த் தொட்டி)

(மருத்துவத் தொட்டி)
'வெல்கம் விகாரை ' திருகோணமலையில் உள்ள பலரும் அறிந்த இடம். எனினும் அதற்கு 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் இன்னுமொரு பெயர் இருக்கும் விடையத்தைச் சில வருடங்களுக்கு முன்னமே வரலாற்று நூல்கள் மூலம் அறிந்துகொண்டேன். 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் பெயர் இங்குள்ள மக்களின் பேச்சுவழக்கில் இல்லையாயினும் இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும்.


திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை.


திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம் பெறுகிறது.


'மகாசேனனின் துன்புறுத்தல் காரணமாக தற்காலிகமாகவே இந்து ஆலயங்கள் அழிக்கப்ட்டது. பௌத்த மதம் இந்து மத்ததுடன் போட்டி போட்ட போதும் பௌத்த மதம் துறைமுக நகரான திருகோணமலையில் இருந்து பின்வாங்க வேண்டி இருந்தது.' என்ற பேராசிரியர் சேனக பரணவிதானவின் கூற்றும், 'சோழர்கள் இலங்கையில் பல பௌத்த பள்ளிகளை அழித்ததார்கள்' என்ற சூளவம்சத்தின் கூற்றும் அக்காலத்தில் இருந்த மதமுரண்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.



வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளியின் தோற்றம் பற்றிய தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லையாயினும் , இது சோழருடைய படையெடுப்புக்கு( 10 ம் நூற்றாண்டு) முன்னமே இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.


சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராசராசப் பெரும் பள்ளி என சோழ ஆட்டசியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கப் பட்ட அதிகளவான அறக்கொடைச் சாசனங்கள் தமிழ் மொழியில் இருப்பதும் , சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டமையையும் ( இராசராச சோழன் 84 பசுக்களைத் தானம் செய்தார் - வரலாற்றுச் சாசனம்) வைத்துப் பார்க்கும் போது வெல்கம் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வக்ககப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.



Share/Save/Bookmark


Author: கானா பிரபா
•2:26 AM
"உவனுக்கு சோறு கறியை விடக் கள்ளத்தீனி தான் விருப்பம்" இது என் அம்மா அடிக்கடி என்னைப் பற்றி மற்றவர்களுக்குப் போட்டுக் கொடுக்கும் ஒரு கருத்து ;).

நாவுக்கு ருசியான தின்பண்டங்கள், குறிப்பாக அவற்றின் மூலம் எந்த விதமான ஊட்டச்சத்துக்களை அதிகம் கொண்டிராத ஆனால் இனிப்பு அல்லது காரமான வகையறாக்களைத் தான் இப்படி "கள்ளத்தீனி" அல்லது "கள்ளத்தீன்" என்று அடையாளப் பெயர் கொண்டு எங்களூரில் அழைப்பார்கள். இதற்கு முன்னர் எழுதிய சொக்கிளேற்றும் விசுக்கோத்தும் பதிவில் இருக்கும் பெரும்பாலான பண்டங்கள் இந்தக் கள்ளத்தீனி வகையறாவுக்குள் அடங்கி நிற்கின்றன.

தமிழகத்தில் கள்ளத்தீனி என்ற சொலவாடை பாவிக்கப்படுகின்றதா என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் நண்பர் திரு அவர்கள் சொல்லியிருந்தார் குமரி பகுதியில் கள்ளப் பண்டம் என்று அழைப்பார்களாம்.
Author: யசோதா.பத்மநாதன்
•7:01 PM

ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப் பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயை நான் மறந்தேன்!

பாதையிலே வீடிருக்க
பழனிச் சம்பா சோறிருக்க
எருமைத் தயிரிருக்க
ஏண்டி வந்தோம் கண்டிச் சீமை?

எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடிஞ்சு நிக்கயிலே
வெட்டு வெட்டு எங்கிறானே
வேலையத்த கங்காணி!

தோட்டம் பிரளியில்லே
தொர மேல குத்தமில்லே
கங்காணி மாராலே
கன பிரளியாகுதையா!

அட்டைக் கடியும்
அரிய வழி நடையும்
கட்டை இடறுதலும்
காணலாம் கண்டியிலே!

ரப்பரு மரமானேன்
நாலுபக்க வாதுமானேன்
இங்கிலிசுக் காரனுக்கு
ஏறிப் போகக் காருமானேன்.

இது பெருந்தோட்டத்தின் கழிவிரக்கப் பாடல்களில் ஒன்று.தாயகத்தையும் தாயையும் விட்டு வந்தது பற்றியும்; வசதி வாய்ப்புகள் எல்லாம் இருக்க அவற்றை விட்டு விட்டு வந்தது பற்றியும்;மனிதத் தன்மையற்று இருக்கும் கங்காணி பற்றியும்; நடந்து செல்வதில் ஏற்படும் இடறுபாடுகள் பற்றியும் கூறி; ரப்பர் மரத்துக்குத் தன்னை உவமிக்கிறாள் இக் கூலிப் பெண்.எப்போதும் வெட்டுக்கு இலக்காகும் ரப்பர் மரத்தைப் போல் தான் இருப்பது பற்றியும்; மற்றவர்கள் சுகத்துக்காக இருக்கும் காரைப் போல் தான் ஆகிவிட்ட சோகத்தையும் கூறும் இச் சிறிய பாடல் கண்டிப் பெண்களின் ஒரு கால கட்டத்துத் துயர நிலையை எளிமையாகக் கூறுகிறது.


அருஞ்சொல் விளக்கம்:-

இடுப்பொடிஞ்சு - மிகக் களைத்துப் போய்

கங்காணி - பெருந்தோட்டத்து மேற்பார்வையாளன்

பிரளி - பிரச்சினை

தொர - ஆங்கிலேய உத்தியோகத்தன்

வாது - (மரக்)கிளை

இங்கிலிசுக்காரன் - ஆங்கியேய உத்தியோகத்தன்.
Author: வர்மா
•7:31 AM

தை பிறந்தால் வழி பிறக்கும்

தைகள் பல வந்தன போயின

வழி இன்னமும் பிறக்கவில்லை


சூடாமணி 19.01.1997
பத்திரிகையில்வெளியானகவிதையைஈழத்துமுற்றத்தில் பதிந்து என் ஏக்கத்தைத்தீர்க்கிறேன்.
அன்புடன்
வர்மா

Author: Admin
•8:08 AM
தமிழர் எமது கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை  அறிந்து கொள்ள முடிந்தது.

எனது கிராமம்கூட கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாகும். இக் கிராமத்திலே கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்ற இடம் கொம்புச் சந்தி என்று இப்பொழுதும் அழைக்கப்படுகிறது ஆனால் இங்கு இருக்கும் அநேகமானவர்களுக்கு கொம்புமுறி விளையாட்டு என்றாலே என்ன என்று தெரியாது.

 கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களை சந்திக்கக் கிடைத்தது. அவர் கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக பூரணமான விளக்கத்தினைத் தந்ததோடு. அவரால் கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தினையும் தந்தார். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கண்ணகை அம்மனுடன் தொடர்பு பட்டதே கொம்புமுறி விளையாட்டு. மாநாய்கரின் வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலனுடைய மனைவி. இவர்கள் மூவரும் செட்டிகள். இதனால்தான் கண்ணகியும் செட்டிச்சி அம்மை. மாதவிக்குப் பொன்தோற்றகோவலருடன் மதுரைக்குச் சென்ற கண்ணகை ஆயர் இடைச் சேரியில் தங்கியிருக்க. கோவலன் கண்ணகியின் இடது காற்சிலம்பை விற்க மதுரை நகர் வீதியிலே விலை கூறினான்.

பாண்டிமாதேவியின் சிலம்பை பறி கொடுத்த தட்டான். சிலம்புத் திருடன் கோவலன் என்று பாண்டி மன்னனிடம் குற்றம் சாட்ட விதி வலியால் தீர விசாரித்தறியாத மன்னன் கோவலனை மழுவால் வெட்டுவிக்கும்படி கட்டளை இட்டான்
கோவலன் கொலையுண்டான். இதை கண்ணகை அறிந்தாள். கடும் சினம் கொண்டாள். "காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்? என்று செங்கதிர்ச் செல்வனிடம் கேட்டாள் . உன் கணவனை கள்வன் என்ற இவ்வூரை தீ உண்ணும் என்றான் செங்கதிர்ச் செல்வன். தலைவிரி கோலம். ஒரு கையில் சிலம்பும் மறு கையில் வேப்பம் குழையோடும். மன்னனிடம் சென்று வாதாடி வழக்குரைத்து.சிலம்புடைத்துவழக்கு வென்றாள்.

மன்னனும் மனைவியும் உயிர் நீத்தனர். இடது முலை திருகி நகர் எரித்தால். ஆயர் இடைச் சேரிக்கு வந்தாள். ஆய்ச்சியர் வெண்ணை தயிர் என்பவற்றை அவள் மார்பிலே அப்பினர். சீற்றத்துடன் வந்து கொண்டிருந்த கண்ணகியின் முன்னால் கோவலன் கட்சி, கண்ணகை கட்சி எனப் பிரிந்து கொம்புமுறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சினம் தணிந்த கண்ணகை சிரித்து மகிழ்ந்தாள். தாயே குளிந்தளிர்வாய் என்று அவர்கள் வேண்ட அம்மனும் குளிர்ந்தாள். இதுதான் கொம்புமுறி விளையாட்டு வந்த வரலாறு.

"கொம்பு எனப்படுவது வளைந்த மரத்தடியாகும். வெட்சி, கருவீரம், கரயாக்கு என்ற மரக்கிளைகளே பயன் பட்டன. வட சேரிக்கொம்பு 90 பாகை வளைவிலும் தென்சேரிககொம்பு அதை விடக்கூடிய வளைவிலும் இருக்கவேண்டும் என்பது விதி. இரண்டே முக்கால் விரல்க்கடையில் சரிகொம்பு இருக்க வேண்டும். இரண்டு விரக்கடை குச்சித்தோடு இருக்கவேண்டும். கொம்புகளின் அளவுப் பிரமாணம். ஏனைய கட்சியினால் பரிசீலிக்கப்படும். கொம்புகளுக்கு மூன்றரை முழம் (ஐந்தரை அடி) நீழமான பில்லிக்கம்புகள் வைத்து வெளுக்கயிற்றினால் வரிந்து பனிச்சை மரத்தின் கைகளின் பசை பூசி காய வைத்து எடுப்பர். கொம்புக்கு "அரிப்பு" எனப்படும் கயிறு கட்டப்படும்.

தூண்டில் போடுவோருக்கு தூண்டில் அரிப்புப் பற்றியும் நன்கு தெரியும். அரிப்பு என்பது ஒரு ஆள் நீளமான சுமார் ஆறடி நீளக் கயிறாகும். இது வெள்ளை ஆத்தி நாரினால் திரிக்கப்பட்ட வெளுக் கயிறாகவோ, மான் தோலினால் திரிக்கப்பட்ட கயிறாகவோ இருக்கும். இந்தக் கயிற்றுக்கு ஆமணக்கு என்னை பூசுவது வழக்கம். தென்சேரி வாரக் கொம்பு அரிப்பிலே உள்ள கொழு தவனையுடாக பெரிய வடத்தினைப்பூகுத்தி பெரு  மரமொன்றின் அடியில் பிணைத்து விடுவர். வட சேரிக் கொம்பின் கொளுத் தவணையுடன் ஒரு உலக்கை போடப்படும். வட சேரிக்கொம்பின் கொழு தவணையில் நீழமான வடமும் பூட்டப்படும்.

தென்சேரி வாரத்தினர் தமது கொம்பினை தயாராகப் பிடித்துக்கொள்ள வடசேரி வாரத்தினர் தமது கொம்பினைப் பூட்டுவதத்கு தயாராக நிற்பர். நீழமான வடத்திலே வடைசேரித் தென்சேரிப் பொது மக்கள் இழுப்பதட்குத் தயாராக நிற்பர். கொம்பு பூட்டும் போது தத்தமது கொம்புகளை பாது காக்கும் வகையில் பில்லி மிரட்டும் இழுபறி இடம் பெரும். சரியாகப் பூட்டப்பட்டதும்.பொது மக்களின் இழுவையினால் கொம்பு ஒன்று முறிந்து விடும். முறியாத கொம்புக்குரியவர்கள் வெற்றி ஆரவாரம் செய்வர்.இரு சேரிக்கும் பொதுவாக உள்ள ஈடகத்தை அலங்கரித்து அதில் தமது கொம்பினை வைத்து கொம்புமுறிப்பாடல்களை பாடுவார்.

வசந்தன் கூத்துக்கள், பொய்க்கால் குதிரை ஆட்டம், வினோத உடை அலங்காரம் என்பன இரவு முழுவதும் இடம் பெறும். கொம்பு முறிப்பில் கொம்பின் வலிமையோடு பல மந்திர, தந்திர வித்தாண்மைகளும் பயன்படுத்தப்பட்டன.

தோற்ற கட்சியினர் மறுநாள் போட்டிக்கு கொம்பு ஆயத்தம் செய்வர். போட்டி பலநாள் தொடரும். சுள்ளிக்கொம்பு 01, கொம்புத்தட்டுக் கொம்பு 03, கூடாரக் கொம்பு 05, ஏடகக் கொம்பு 07, தண்ணீர்க் கொம்பு 01 முறித்து விளையாடுவதற்கு இரண்டு பிரிவுகள் தேவை. கோவலன் கட்சியை வடசேரி என்றனர். கண்ணகை கட்சியை தென்சேரி என்றனர்.

கொம்புமுறி விளையாட்டின்போது பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இன்னும் பல தகவல்களையும் கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
Author: கானா பிரபா
•11:45 PM
"அக்கா! உங்கட வீட்டிலை பெரிய "ஏதனம்" ஏதாவது இருக்குதா பொங்கல் பொங்க?

மேற்குறித்த ஈழத்துப் பேச்சாடல் அமைப்பில் வரும் "ஏதனம்" என்பதன் பொருளாக அமைவது பாத்திரம் என்பதாக அமைந்திருக்கும். அதாவது பாத்திரம் ஏதாவது இருக்கிறதா என்பதை ஏதனம் என்ற மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்துவார்கள். பாத்திரம் என்பதைத் தவிர வேறு பொருட்களுக்கு ஏதனம் என்ற சொல் அமைவதாக எனக்குத் தெரியவில்லை (தெரிந்தால் சொல்லலாம்)

"ஏதேனும்" என்ற சொற்பதம் "ஏதனம்" என்று மருவியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகராதியிலும் இந்தச் சொல் காணக்கிடைக்கவில்லை.

தமிழக வழக்கில் அண்டா என்று சொல்லும் பாத்திரத்தை ஈழத்து மொழி வழக்கில் சருவச் சட்டி என்று பயன்பாட்டு மொழியாகப் பயன்படுத்துவதையும் காணலாம்.

அலைகள் இணையத்தில் வெளிவந்த
"காய்ச்ச நேரமில்லா கனகமக்கா" என்ற கவிதையை சன்னதமாடி என்பவர் இப்படி எழுதியிருந்தார். அதை ரசித்துப் பகிர்கின்றேன்.

சோத்துச் சட்டி சருவச்சட்டி
மச்சக்கறிக்கு தனிச்சட்டி
இது பொரியல் சட்டி
அது சொதிச்சட்டி
பெரிசா இருக்கிறது குழம்புச்சட்டி
கைபிடி இல்லாதது பால்கறிச் சட்டி
மூடியுள்ள சட்டி புட்டவிக்க
பானை சட்டி பொங்கலுக்கு
மரக்கறிச்சட்டி எப்பன் பெரிசு
புளியாணச் சட்டி இஞ்சாலை
திவசச்சட்டி செற் தனி
மச்சம் மாமிசம் படையல் சட்டி
கஞ்சி வடிக்க பழைய சட்டி
சாதி கூடியவைக்கு தனிச்சட்டி
கொஞ்சம் குறைஞ்சவைக்கு இன்னொன்று
நல்லாக் குறைஞ்சவைக்கு பழைய சட்டி
வேறை சிலருக்கு எவர்சில்வர் சட்டி
கோயிலுக்கு நாலு சட்டி
விரதத்துக்கு விசேடமான சட்டி
காஸ் அடுப்புச் சட்டி புதிசு
சபை சந்திக்கு பதினாறு சட்டியள்
தோட்டத்துக்கு தண்ணி ஊத்த தனிச்சட்டி
குருவிக்கு தண்ணி வைக்க இன்னொண்டு
குடிகாரருக்கு தனிச்சட்டி
கொலக்சனுக்கு வாறவைக்கு ஒரு சட்டி
அங்கை கிடக்குது பாயாசச்சட்டி
மேசைக்குக் கீழை முற்றிலும் புதுச்சட்டி
பறணிலை பலகாரச்சட்டியள்
மேசைக்கு மேலை மூடிச் சட்டியள்
கட்டிலுக்குக் கீழை சருவச்சட்டியள்
சாமி அறையிலை புதுச்சட்டியள்
படுக்கையறை முழுதும் பத்து பதினைஞ்சு
பறணிலை கிடக்கு அண்டா சட்டி
இடியப்பச் சட்டி தோசைச்சட்டி
றவ்வைச்சட்டி
பொரியல் சட்டி புண்ணாக்கு சட்டி
அவியல்சட்டி துவையல் சட்டி
அடுத்தவீட்டுக்கு அனுப்பும் சட்டி
பரிசோடை வாற குடும்பத்துக்கு டிசைன்சட்டி
பரிசில்லாமல் வாறவைக்கு புறம்பான சட்டி
ஒழுங்கா வட்டி தாறவைக்கு ஒருவகைச் சட்டி
ஒழுங்கில்லா மனிசருக்கு ஓட்டைச் சட்டி
முட்டைச் சட்டி முருங்கைக்காய் சட்டி
பெட்டைக்கு சீதனம் குடுக்கும் சட்டி
அப்பச் சட்டி உறொட்டிச் சட்டி
காலைச்சட்டி மாலைச்சட்டி
இரவு நேரம் இன்னொரு சட்டி
வெளி நாட்டு காசையெல்லாம் சட்டிகளாக்கி
காய்ச்ச நேரமில்லா கனகமக்கா
இருக்க இடமில்லாமல்
வீட்டுக்கு வெளியே
விழுந்து படுத்தாள்.

நன்றி: கவிதை பகிர்ந்த அலைகள் இணையம், படம் பகிர்ந்த கூடல் இணையம்