Author: கலை
•4:32 AM
சில சிலேடை வார்த்தைகளை இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்துத் தாத்தா, பேத்திக்குச் சொல்லிக் கொடுத்தது. ஒரே வசனத்தை வேவ்வேறு பொருளில் கூறுவது.

1. யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்று வைக்க வேண்டிய பதாகையில் "யாழ்ப்பாணம் வர வேற்கிறது" என்று எழுதி விட்டார்களாம். அதனை வாசித்தவர், "யாழ்ப்பாணம் வர, வேர்க்கும்தான்" என்றாராம்.

2. ஆசிரியர் "சீனி தின்றால் இனிக்கும்" என்று எழுதினாராம். உடனே மாணவன் "அதெப்படி, சீனி தின்ன, றால் இனிக்கும்?" என்று பகிடி விட்டானாம். காரணம், அவன் அர்த்தம் கொண்டது, "சீனி தின், றால் இனிக்கும்".

3. ஒரு கடையில் "இன்றுமுதல் தோசைக்கு சம்பல் இல்லை" என்று எழுதி வைத்திருந்தார்களாம். ஒருவர் வந்து சாப்பிடத் தொடங்கிவிட்டு, கொஞ்ச நேரத்தில் "சம்பல் கொண்டு வாங்கோ" என்றாராம். அதற்கு கடைக்காரர், "அதானே எழுதிப் போட்டிருக்கு. தெரியேல்லையோ?" என்றாராம். அதற்கு சாப்பிட வந்தவர், "இது இரண்டாவது தோசை எண்டதாலதான் கேக்கிறன். கொண்டு வாங்கோ" என்றாராம். அவர் வாசித்தது (அல்லது அப்படிக் காட்டிக் கொண்டது), " இன்று, முதல் தோசைக்குச் சம்பல் இல்லை" என்பதாகும்.

4. "வாரும், இரும், படியும்". இதனை "வாரும் இரும்படியும்" என்றும் சொல்லலாம்.

அடுத்தது சிலேடை இல்லை. ஆனாலும் உண்மையாக நடந்ததென்று தாத்தா கூறினார்.

முன்பு ஒரு தடவை (முன்னொரு காலத்திலே) அவரது தம்பியை அம்மா கடைக்கு அனுப்பும்போது, ஒரு துண்டில் எழுதிக் கொண்டு போகச் சொன்னாராம். அம்மா சொல்லச் சொல்ல, அவர் ஒரு சிறிய துண்டில் எழுதினாராம்.

அவர் எழுதியது இப்படி...

* தனிமல்லி,
* கால் றாத்தல் பனங்கட்டி,
* ரெண்டு குட்டான் விசுக்கோத்து

அவருடைய அம்மா உண்மையில் சொன்னது....

* தனிமல்லி - கால் றாத்தல்,
* பனங்கட்டி- ரெண்டு குட்டான்,
* விசுக்கோத்து