Author: ந.குணபாலன்
•12:00 PM


                                                                          மூலக்கதை
 : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்



துடிப்பு பதினொன்று : பாதாளச் சுரங்கம் 



ரெண்டு மூண்டு நாளாய்த் திண்டு தள்ளின பண்டி இறைச்சி, குடிச்சு முடிச்ச சாராயம், பத்தும் பத்தாததுக்கு இருவது வெள்ளைக்குதிரை பரிசு எண்ட அறிவிப்பு எல்லாமாய்ச் சேர்ந்து அரணக்காறங்களை உசுப்பேத்தி விட்டுது. இப்ப எல்லாரும் அண்ணரைத் தேட வெளிக்கிட்டிட்டாங்கள். பொழுது விடிஞ்சதிலை இருந்து பொழுதறு மட்டும் தேடுதல் வேட்டை. அண்டைக்கு காட்டுறோசாப் பள்ளத்திலை அவங்கடை கால் மிதிபடாத ஒரு வீடு, ஒரு வளவு இல்லை. பத்தை செத்தை, பள்ளம் பறுகு, மூலை முடுக்கு, கிணறு, துலாமரம், பத்தல், தொட்டி ஏன் கனக்கப் பறைவான்? ஒரு மூத்திரக்கோடி தன்னும் தள்ளுபடியில்லை.  சிங்கநெஞ்சனைக் கண்டு பிடிக்காட்டாலும் ஒரு சின்னத் தடயம் எண்டாலும் கண்டுபிடிக்க வேணுமாம்.

கட்டாரும், வெட்டாரும் ஊரைச் சுற்றிக் குதிரையிலை போய்   என்ரை அண்ணரைப் பற்றிய  அறிவித்தலை கொம்பு வாத்தியத்தைப் பெலத்து ஊதி எல்லாருக்கும் கேட்க வாசிச்சவங்கள். என்ரை காதிலையும் அந்த அறிவித்தல் வந்து விழுந்தது தான். 



<எமது பெரு மதிப்புக்குரிய தெங்கில் நயினார் அவர்களுக்கு எதிராகச் செயற்படுபவன், எங்கள் எல்லோரதும் பகைவன், யோனத்தான் சிங்கநெஞ்சன் என்பவன் ,சட்ட விரோதமாக ஊருக்குள் புகுந்து விட்டான். இரகசியமாக எங்கோ ஒரு மறைவிடத்தில் பதுங்கி இதுவரையும் இருக்கிறான். கடுக்கண்ட வயசு, இளமஞ்சள் நிற தலைமுடி, கரு நீலக் கண்கள், மெல்லிய தேகம், செந்தளிப்பான  தோற்றமும், கண்கவர் அழகும் கொண்டவன் . அவனை  ஒளித்து வைத்திருப்பவருக்கு மரணதண்டனை. கையும் களவுமாகப் பிடிக்க உதவி செய்பவருக்கு இருபது  வெள்ளைக் குதிரைகள்  வெகுமானம். >

உதெல்லாம் அண்ணரைப் பற்றிய யூச்சியின்ரை வருணனை விளக்கமாய்  இருக்க வேணும். பின்னை வேறை என்னவாம்? ஒரு அரணக்காறனுக்கும் அண்ணர் என்ன நிறம் எண்டு கூடித் தெரியாது.

கட்டாரும், வெட்டாரும் ஊர் சுற்றி கொம்பூதிச் சொன்ன படி இருக்கத் தக்கனவாய் இருக்க பெத்தய்யா வீட்டுக்கு, ஒருத்தர்,ரெண்டு பேராய்  அரணக்காறங்கள் கவனம் இல்லாத தருணங்கள் பார்த்து சனங்கள் மாறி மாறி வந்த சீர். முன்னுக்கு தெருப்பக்கத்துத் தலைவாசலாலை வராமல், பின்னுக்குக் கோடிப்பக்கம் இருந்த வேலிப் பொட்டுக்குள்ளாலை பார்த்துப் பதுங்கி வந்தவை. வந்த சனம் அண்ணருக்கு பயணம் சொல்லிப் போனதுகள்.  அண்ணர்  செய்த உதவியளுக்கு எல்லாம் மெத்தப் பெரிய உபகாரம் எண்டு நன்றி சொல்லிச்சினம். அனக்கு அடிதலைப்பு ஒண்டும் பிடிபடேல்லை. சொல்லப்போனால் நான் அறியாத கன சாதனை தான் அண்ணர் நடத்தியிருக்கிறார் போலை. ஒருத்தரும் வெறுங்கையோடை வரேல்லை. தங்கள் தங்களுக்கே சாப்பாடு ஆனவாகிலை இல்லாத நிலைமையிலும் ஒரு துண்டு பாண் எண்டாலும் கொண்டு வந்து தந்தவை. 

"உதென்ன இது? எனக்கேன் இம்மளவும்? முதலிலை நீங்கள் என்ன இண்டைக்குத் திண்டநீங்கள் எண்டு சொல்லுங்கோ" எண்டு அண்ணரும் ஒராள் விடாமல் கேட்டவர். அவையளின்ரை முகத்தை முறிக்கக் கூடாதெண்டு கொண்டு வந்த சாப்பாடுகளிலை கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக் கொண்டு மிச்சத்தை வலுக் கட்டாயமாய்த் திருப்பி விட்டவர்.  

"அது காரியமில்லை. நீர் வெளிக்கிடிற பயணம் எக்கச்சக்கமான பயணம். பதிவிலை மறைஞ்சு எவ்வளவு நேரம், எத்தினை நாள் கணக்கிலை காத்திருக்க வேணுமோ? உமக்கு தேவையான அளவு சாப்பாடு கைவசம் இருக்க வேணும் ராசா." எண்டு சொல்லிச்சினம். 

கண்ணிலை கண்ணீர் கசிய 

"உம்மை எங்களாலை எந்தக் காலத்திலையும் மறக்கேலாது யோனத்தான். சுகம்பெலமாய் எடுத்த காரியத்திலை வெற்றியோடை திரும்பிவாரும்." எண்டு சொல்லி அண்ணரை அணைச்சுப் பயணம் சொல்லிச்சினம்.
"ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ. உங்கடை புண்ணியத்திலை நான் நல்ல சுகமாய் இருப்பன். நானும் பத்திரமாய்ப் போட்டுவாறன், நீங்களும் பத்திரமாய் இருங்கோ. தீர யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு நடந்து, உங்கடை உங்கடை குடும்பங்களுக்கு கயிட்ட துன்பத்தைக் குடுத்திடாதையுங்கோ!" எண்டு அண்ணரும் அன்போடை கதைச்சுப் பயணம் சொன்னவர். பேந்து அவசர அவசரமாய் கட்டார் வெட்டாரின்ரை அலப்பறையைக் கேட்க போச்சினம். எல்லாம் சும்மா ஒரு பைம்பலுக்குத் தான். 

எங்கடை மத்தியாசு வளவுக்கும் அரணக்காறங்கள் வந்து பூர்ந்தாங்கள். நான் அடுப்படியிலை ஒரு வாங்கிலிலை பேயடிச்ச மாதிரிப் பயத்திலை இருந்தன். என்னாலை அசைய முடியேல்லை. ஆனால் பெத்தய்யா சரியான கடுப்பிலை இருந்தவர்.

"என்ன மண்ணாங்கட்டியை இஞ்சை வந்து தடவுறியள்?" எண்டு கேட்டார்.
"உந்தச் சிங்கநெஞ்சன் புராணமெல்லாம் நான் நம்ப மாட்டன். எல்லாம் நீங்களாயே இட்டுக்கட்டின கதை. எங்களை எல்லாம் நிம்மதியாய் இருக்க விடாமல் வந்து எல்லாத்தையும் பிரட்டிக் கொட்டிறதுக்கு  உங்களுக்கெல்லாம் இது ஒரு சாட்டு." எண்டு பொரிஞ்சு தள்ளினார். மெய்தான் எல்லாத்தையும் பிரட்டிக் கொட்டினவங்கள். முதலிலை பெத்தய்யாவின்ரை படுக்கை அறைக்குப் போய் அலமாரியிலை கிடந்த உடுப்பு, படுக்கைச்சீலை எல்லாம் நிலத்திலை இறைச்சுக் கொட்டினவங்கள். சரியான மோடுகள். அண்ணர் என்ன அலமாரிக்கு உள்ளுக்கை போய் குடியிருக்கிறாராமே? 

" ஏன் அந்த சட்டிபானை அடுக்கி வைக்கிற அலமாரியை விட்டனீங்கள்? அதையும் துப்பரவாக்கினால் நல்லதெல்லே?" எண்டு பெத்தய்யா சீண்டி விட்டார். அவங்களுக்கு எரிச்சல் கிளம்பினது. அடுப்படிக்குள்ளை வந்தாங்கள். எல்லாத்தையும் கீழை இழுத்துக் கொட்டினான்கள். நான் வாங்கிலை விட்டு அரங்கேல்லை. உள்ளாலை அனக்கு பயத்திலை காய்ச்சல் கிளம்பின மாதிரி  இருந்திச்சுது. அண்டிரவு தான் அண்ணரும் நானும் சுரங்கத்தாலை காட்டுறோசாப் பள்ளம் விட்டுப் போறது எண்டு திட்டம். ஐயோ இந்த நேரம் பார்த்துப் பிடிபட்டுப் போனார் எண்டால்? கடைசி நேரத்திலை எல்லாம் கொட்டிக் குலைஞ்சு போய்விடக் கூடாது.


பெத்தய்யா குடைவை மறைக்கிற அலமாரி முழுக்க பழைய உடுப்பு, கம்பளி ரோமம், கண்டது கடியது, கஞ்சல் குப்பை கசாகூளம் எல்லாம் போட்டு அடைஞ்சு வைச்சிருந்தவர். ஏனெண்டால், உள்ளுக்கை இருந்து ஒரு மெல்லிய சத்தம் கூடக் கசிஞ்சு வந்திடக் கூடாது எண்டுதான். அங்கை தானே அண்ணரின்ரை ஒளிச்சிருக்கிற இடம்? அவன் ஒரு அரணக்காறன் தன்ரை தோளை முட்டுக் குடுத்து அலமாரிய அரக்க வெளிக்கிட்டான். வீடு முழுதும் இடிஞ்சு தரை மட்டமாகக் கத்தவேணும் போலை கிடந்துது. அவனை மனசார திட்டினன். அவன்ரை தடிச்ச கையும், தொக்கையான  கழுத்தாங்குத்தியும், நெத்தியிலை இருந்த பாலுண்ணியும் பார்க்கப் பார்க்க வெறுப்பாய் இருந்திச்சுது. அலமாரியை அரக்கப்  போய் , குடைவின்ரை தட்டிக் கதவு அவன்ரை கண்ணிலை பட்டுது எண்டு கண்டால், கதை கந்தல்தான்.


இருந்தால் போலை கூச்சல் ஒண்டு கேட்டிச்சுது. பெத்தய்யா தான் கத்தினவர். 

"ஐயோ! நெருப்பு! நெருப்பு! உங்கடை தெங்கில் சொல்லி விட்டவனே வீடுகளுக்கும் நெருப்பு வையுங்கோடா எண்டு?" எப்பிடி நெருப்புப் பத்தினது எண்டு தெரியேல்லை. ஆனால் மெய்மெய்யா நெருப்பு பிடிச்சிட்டுது. நிலத்திலை அள்ளி வீசின கம்பளி ரோமம் அடுப்பு மேடைக்குக் கிட்டவாய்  கிடந்தது, அடுப்பிலை இருந்து பொறி பறந்திருக்க வேணும், புசு புசு எண்டு எரியத் தொடங்கினது. அரணக்காறங்கள் நெருப்பை மிதிச்சு அணைக்கப் பார்த்தாங்கள். ஆற்றாக் கடைசியிலை ஓடிப்போய்த் தண்ணியைப் பீப்பாயோடை  தூக்கி வந்து ஊத்தி அணைச்சாங்கள். நெருப்பு அணைஞ்சு போச்சு ஆனால் பெத்தய்யாவின்ரை கோவமும், திட்டும் குறையேல்லை. 


"ஒரு புறமறிவு எண்டது இல்லாத சென்மங்கள். கண்கடை இருக்க வேண்டிய இடத்திலை இல்லாமல் எங்கினை அடைவிலை போட்டுதாம்? இப்பிடியே ஒரு கவனமில்லாமல் ஆரும் கம்பளி ரோமத்தை அடுப்பு மேடைக்குக் கிட்ட விட்டு எறிவினம்?" பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரிப் பெத்தய்யா அவங்களைப் பேசினவர். அந்தப் பாலுண்ணி நெற்றிக்காறனுக்கு சினம் கிளம்பினது.

"வாயை மூடு கிழடா. இனியும் திறந்தாய் எண்டால் ஒரேயடியாய் மூட வைப்பன்." எண்டு அதட்டினான். அனக்குப் பயம் பயமாய்க் கிடந்துது. ஆனால் இந்தப் பெத்தய்யா எண்டால் ஒண்டுக்கும் வெருளேல்லை .

"அள்ளி எறிஞ்சதெல்லாம் ஆராம் உங்கடை குஞ்சியப்பனே வந்து எடுத்து அடுக்கிறது? பார்! பார்! சேறும் சுரியுமாய் பண்டி உழக்கின நிலம் மாதிரி கிடக்கு. ஒரு வீடு வாசல் மாதிரிக் கிடக்கே?" எண்டார். அவரின்ரை நோக்கம் எல்லாம் வலு கெதியிலை அவங்களைப் போக்காட்ட வேணும் எண்டதுதான். பற்றைக்கு எறிஞ்ச கல்லு முசலுக்குப் பட்ட மாதிரி பெத்தய்யாவின்ரை கதை கேட்ட அரணக்காறங்கள் 

"உன்ரை பண்டிக் கொட்டிலை நீயே வழிச்சுத் துடை." எண்டு சொல்லிவிட்டு நடையைக் கட்டினாங்கள்.

"நல்லகாலத்துக்குத் தான் நெருப்புப் பத்தினது. அண்ணருக்கும் நல்லகாலம்." எண்டு பெருமூச்சு விட்டன். பெத்தய்யா தன்ரை நுனி விரல்களை ஊதினார். 

" ஓம் சில சில நேரங்களிலை சின்னச் சின்ன நெருப்புக்களும் நல்லதுக்குத் தான். ஒரு அந்தர அவசரத்துக்கு வெறுங்கையாலை அடுப்பிலை இருந்து தணலை எடுக்கவும் மனிசர் பழகி இருக்க வேணும்." எண்டார் பெத்தய்யா. ஓகோ! அப்ப பெத்தய்யா தான் நெருப்புக்குக் காரணமோ? வந்த நெருக்குவாரம் இன்னும் முழுசாய்த் தீர்ந்த பாடில்லை. வீட்டை விட்டு வெளியேறின ரெண்டு அரணக்காறனும் குதிரைமாலுக்குள்ளை போய்த் தடவினான்கள். அந்தப் பாலுண்ணி நெற்றிக்காறன் பெத்தய்யாவிட்டை திரும்ப வந்தான். 

"உன்னட்டை ரெண்டு குதிரை நிக்குது கிழடா! ஒண்டுக்கு மேலை வைச்சிருக்க அனுமதி இல்லை எண்டது தெரியாதோ?" எண்டு கேட்டான். குதிரைமாலிலை வியாழரையும், வெள்ளியாரையும் ஒருமிக்கக் கண்டிட்டான். இண்டிரவு அக்கரையிலை இருந்து ஆள் வரும். அப்ப அந்த வெள்ளை நெற்றிக் குதிரையைத் தெங்கில் நயினாருக்குக் குடுத்து அனுப்பு." எண்டான்.
"ஐயோ! அது இந்தப் பெடியின்ரை எல்லோ?" எண்டு மறுத்துப் பார்த்தார்.
" ஓகோ! அப்பிடியோ? சரி இனி அது தெங்கில் நயினாரின்ரை சொத்து." எண்டு விசமத்தோடை சொன்னான்.  

நான் எண்டால் வெள்ளியாரை நினச்சு அழ வெளிக்கிட்டன். ஐயோ இண்டைக்கு எண்டு பார்த்தெல்லோ அண்ணரும் நானும் வெளிக்கிடப் போறம்? அந்த நீளமான சுரங்கம் தோண்டி முடிஞ்சுது. இப்பத்தான் அனக்கு ஒரு கவலை தொட்டிச்சுது. நாங்களே ஊர்ந்து தவண்டு போற சுரங்கத்தாலை எப்பிடி வியாழரையும், வெள்ளியாரையும் கொண்டு போறதாம்? அதுகள் பாவம் எப்பிடி மனிசரைப் போலை தவழுங்கள்?  உது பற்றி முன்னை பின்னை ஒரு எப்பன் தன்னும் யோசிச்சே பாராத வெருளி வெங்காயம் தான் நான். பேசாமல் பெத்தய்யாவின்ரை பொறுப்பில்லை தான் விட்டிட்டுப் போக வேணும். அது இன்னும் துன்பமான காரியமெல்லோ? வெள்ளியாரை தெங்கிலுக்கு எண்டு வந்து பிடிக்கப் போறாங்கள். 


பாலுண்ணி நெற்றிக்காறன் ஒரு சின்ன மரத் தட்டை தன்ரை முடியலை எடுத்துப் பெத்தய்யாவின்ரை மூக்குக்கு நேரை நீட்டினான். இன்னும் என்ரை நெஞ்சு வெடிக்குமாப் போலை சொன்னான். 

"இந்தா! இந்த இலச்சினையை பிடி."
"உது என்ன கலியாணத்துக்கு எனக்கு?" எண்டு பெத்தய்யா கேட்டார்.
"இரவைக்கு குதிரை பிடிக்க வாற ஆளுக்கு அடையாளம் தெரியிறதுக்காக இதை வாசல் கதவிலை தொங்க விடு. நீ குதிரையை மனம் விரும்பித் தான் தெங்கில் நயினாருக்குக் குடுக்கிறாய் எண்டதுக்கு இது அடையாளம்."
" கேகே! நான் ஒண்டும் விரும்பிக் குடுக்கேல்லை. விருப்பம் இல்லாமல் பறி குடுக்கிறன் எல்லோ?" பெத்தய்யா வாயடிச்சார். அப்ப அந்தச் சனியன் பிடிப்பான் வாளை உருவினான்.  

" நீ மனம் விரும்பித் தான் குடுக்கிறாய் கண்டியோ! வாற ஆளிட்டை இந்த இலச்சினையையும் குடுத்து அனுப்பு. அந்தாள் குதிரையோடை கறுமண்யாக்காவுக்குப் போய்  நீ மனம் விரும்பித் தந்ததுக்கு அத்தாட்சியாய் இந்த இலச்சினையைக் காட்ட வேணும். ஏனெண்டால் எங்கடை தெங்கில் நயினார் ஆரும் மனம் விரும்பித் தாற அன்பளிப்பைத் தான் ஏற்றுக் கொள்ளுவார். விளங்கிச்சோ கிழடா?"  எண்டு சொல்லிப் பெத்தய்யாவைப் பிடிச்சுக் கீழை விழத் தக்கனவாய் தள்ளிப் போட்டுப் போவிட்டான். நல்ல காலம் பெத்தய்யா விழுந்து அடிகிடி படாமல் சமாளிச்சிட்டார். அவங்கள் அடுத்த பக்கம்  தேடுதல் வேட்டைக்குப் போட்டாங்கள்.



" நல்ல பகிடி! தெங்கில் நயினாராமாம், அவருக்கு ஆருமாம் மனம் விரும்பிக் குடுக்கிறதாமாம்,  அன்பளிப்பாமாம்,  அதைத் தானாமாம்  ஏற்றுக் கொள்ளுவாராமாம்!" எண்டு பொரிஞ்சு தள்ளினார். பாவம் வேறை என்ன செய்யிறது? அவங்கள் சொன்னது மாதிரி வாசலிலை இலச்சினையைத் தொங்க விட்டார். 


அண்டு பின்னேரம் நாங்கள் மூண்டு பேரும் ஒண்டாயிருந்து கடைசியாய் சாப்பிட்டம். பெத்தய்யா கோதுமைக் கஞ்சி காய்ச்சித் தந்தவர். மூண்டு பேருமே கவலையாய் இருந்தம். நான் கூடுதலாய் துக்கப் பட்டு அழுதன். காடுமேடு குண்டுகுழி எல்லாம் தாண்டி என்னைப் பத்திரமாய்க் காவி வந்த வெள்ளியாரை நினைச்சு அழுதன். என்ரை சொந்தப் பேரனார் மாதிரி என்னைப் பராமரிச்ச பெத்தய்யாவைப் பிறிஞ்சு போறதை நினச்சு அழுதன். அரணக்காறன் தள்ளி விடேக்கை ஒண்டுமே செய்ய முடியாத ஒரு சின்னப் பொடியனாய்ப் போட்டேனே எண்டு அழுதன். 


அண்ணர் ஒண்டும் பறையாமல் எதோ கடுவலான யோசினையிலை இருந்தார். பேந்து முணுமுணுத்தார்.

"எனக்கு மட்டும் குறியீட்டுச்சொல்லு தெரிஞ்சுது எண்டால்....."
"என்ன குறியீட்டுச்சொல்லு?"
"பெருங்கதவத்தாலை போற வாற நேரம் தெங்கிலின்ரை ஆக்கள் சொல்லிறது. அதைச் சொல்லாமல் போகவரேலாது தெரியுமோ?"
"அனக்குத் தெரியும். குறியீட்டுச்சொல்லும் அனக்குத் தெரியும்."

 < சகல அதிகாரங்களும் வரந்தரும் தெங்கில் நயினார் ஒருவருக்கே!>

"யூச்சி சொல்லினதைக் கேட்டநான் எண்டு உங்களுக்குச்  சொல்ல இல்லையோ?"

அண்ணர் என்னைக் கொஞ்ச நேரம் கண்ணிமை வெட்டாமல் பார்த்தார். பேந்து சிரிக்க வெளிக்கிட்டார்.

"சீனியப்பு நீ எண்டால் எனக்கு நல்ல விருப்பம். உனக்குத் தெரியும் தானே?" எண்டார். குறியீட்டுச்சொல்லைக் கேட்டு அவருக்கு என்ன அப்பிடிப் புளுகு எண்டு அனக்கு பிடிபடேல்லை. உவர் தான் பெருங்கதவத்தாலை போகேலாதே? ஆனால் அம்மளவு கவலை இருக்கேக்கையும் அவரைக் கொஞ்சம் உற்சாகப் படுத்த அந்தக் குறியீட்டுச்சொல்லு உதவினதை இட்டு அனக்கும் திறுத்தி தான். 

பெத்தய்யா தன்ரை படுக்கை அறையை ஒதுக்கி அடுக்கப் போனார். அண்ணரும் பின்னாலை இழுபட்டார். என்னவோ குசுகுசுத்திச்சினம். பெரிசாய் அனக்கு ஒண்டும் கேட்கேல்லை. கடைசியிலை அண்ணர் சொன்னது சாதுவாய்க் கேட்டது.

"என்னாலை ஏலாமல் போச்சுது எண்டால் என்ரை தம்பியை நீங்கள் தான் பாதுகாக்க வேணும்." பேந்து அனக்குக் கிட்ட வந்தார்.
" சொல்லிறதைக் கவனமாய்க் கேள் சீனியப்பு! நான் முதலிலை கிளம்பிறன். என்ரை தகவல் வாற வரைக்கும் நீ பெத்தய்யாவோடை இருக்க வேணும். சிலநேரம் கொஞ்ச நாள் செல்லக் கூடும். நான் போய் ஒருசில காரியங்களை ஒழுங்கு படுத்த வேணும்."
ஓ ஓ ....   அனக்கு உந்தக் கதையே பிடிக்கேல்லை. ஆரையும் வருவினம் எண்டு காத்திருந்து அனக்குப் பழக்கமில்லை. அதுகும் இப்ப பயப்பிட்டபடி இருக்கிற நேரத்திலை. அண்ணருக்கு எந்த ஆபத்தும் கோட்டைச் சிவருக்கு அங்காலை வந்து சேராது எண்டது, ஆருக்குத் தெரியும்? அப்பிடி என்ன காரியம் செய்ய வெளிக்கிட்டவர்  ஒருவேளை அது ஏலாமல் போகிறதுக்கு? அப்பிடி ஏலாமல் போற கட்டத்திலை என்ன செய்வார்? 

"நீ இப்பிடிப் பயப்பிடக் கூடாது சீனியப்பு. நீ கார்ல் சிங்கநெஞ்சன் எண்டதை எக்காலமும் மறந்திடாதை!" பேந்து பெத்தய்யாக்கும் அனக்கும் பயணம் சொல்லிப் போட்டு சுரங்கத்திலை இறங்கினார்.  கடைசியாய் சுரங்கத்துக்குள்ளை அவரின்ரை கை அசைஞ்சு பிரியாவிடை சொன்னதைத் தான் கண்டம். இப்ப தனிச்சுப் போனம், நானும் பெத்தய்யாவும்.
"அகிளான் மாதிரி ஒருத்தன் இப்ப தனக்குக் கீழாலை போய்க் கொண்டிருக்கிறான் எண்டதை தடியன் தொடிக்கி கனவிலையும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டான்." எண்டு பெத்தய்யா சிரிச்சார்.
"இல்லை. ஒருக்கால் யோசிச்சுப் பாருங்கோ. அகிளான் வெளியாலை தலையை நீட்டிற நேரம், கையிலை உள்ள ஈட்டியைக் குறி பார்த்து எறிய மாட்டானே?" எண்டு நான் கவலைப் பட்டன். 

அனக்கு ஒரே துக்கம் துக்கமாய் வந்துது. குதிரைமாலுக்கை வெள்ளியாரிட்டை போனன். வெள்ளியாரிட்டை ஆறுதல் தேடித் போறது எக்கணம் இதுதான் கடைசித் தரம். ஆனால் இனிமேலை அதைக் கண்கொண்டு காணவே முடியாது எண்ட நிலைமை வந்த பிறகு என்னத்தை நினைச்சு ஆறுதல் படுகிறது? 


பின்னேரத்துச் சாய்ஞ்ச வெய்யில் இன்னும் கோட்டை மதிலுக்குப் பின்னாலை மறையேல்லை. குதிரைமாலிலை உள்ளுக்கை  அரையிருட்டாய் இருந்துது. சின்ன யன்னல், அதுகும் கிழக்குப் பார்த்த படி, அதினாலை உள்ளுக்கை சரியான வெளிச்சம் இல்லை. அப்பிடி இருந்தும் என்னைக் கண்டதும் வெள்ளியார் ஆர்வத்தோடை என்பக்கம் திரும்பினதைக் கண்டன். நான் போய் அதின்ரை கழுத்தைக் கட்டிப் பிடிச்சன். இப்பிடி ஒரு நிலைவரத்தை நான் விரும்பி உருவாக்கவில்லை எண்டது வெள்ளியாருக்கு விளங்க வேணும் எண்டு விரும்பினன். 


"ஆனால் சிலநேரம் இந்த நிலைவரத்துக்கு நான்தான் பொறுப்பாளி." எண்டு சொல்லி அழுதன். 

"நான் செர்ரிப்பள்ளத்திலை பேசாமல் பறையாமல் இருந்திருந்தால் நீயும் தெங்கிலின்ரை கையுக்கை போகவேண்டிய கட்டாயம் வந்திருக்காது. என்ரை பிழையைப் பொறுத்துக் கொள்,வெள்ளியார்! அனக்கு எல்லாத்தையும் மறந்த மாதிரி இருக்க, நடக்கத் தெரியேல்லை."
என்ரை மனக்கவலை வெள்ளியாருக்கு விளங்கி இருக்க வேணும். தன்ரை மெதுமையான வாய்ப்பகுதியாலை என்ரை காதடியை தடவினது. அழ வேண்டாம் எண்டு என்னைக் கேட்குமாப் போலை இருந்திச்சுது. 

ஆனால் என்னாலை அழுகிறதை நிற்பாட்ட முடியேல்லை. கண்ணீர் வற்றும் வரைக்கும் அழுதன். வெள்ளியாரின்ரை மேலை சீப்பாலை உருவி தேய்ச்சு மெருகேத்தினன். கடைசியாய் மிஞ்சிக் கிடந்த அந்தக் கொஞ்சக் கொள்ளையும் ரெண்டு குதிரையும் தின்னட்டும் எண்டு குடுத்தன். வியாழரும் பாவந்தானே? வெள்ளியாரின்ரை மேலை உருவி மெருகேத்த மெருகேத்த என்ரை நினைப்பு முழுக்க முழுக்க நடக்கக் கூடாத நடப்புக்களை நினைச்சபடி.


வெள்ளியாரைக் கொண்டுபோக எண்டு வாறவன் சும்மா கீழை விழுந்து செத்துப் போகட்டும். ஆத்தங்கரைக்கு வரு முன்னமே செத்துத் துலையட்டன். நான் உண்மையிலையே இப்பிடி இன்னொருத்தன் சாக வேணும் எண்டு நினைக்கிறது எம்மளவு கொடுமை, பாவமும் தானே? அதுகும் எய்தவன் இருக்க அம்பை நொந்த மாதிரி.  நினைச்சாப் போலை என்ன எல்லாம் நடக்கப் போகுதே?சாய்ச் சாய்! அவன் இவ்வளவுக்கும் படகிலை ஏறி இருப்பான். கொள்ளை அடிக்கிற பொருள் எல்லாம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது அந்தப் படகு தான். எக்கணம்  இத்தறைக்கு கரைக்கு வந்திருப்பான். ஒருவேளை பெருங்கதவம் தாண்டி உள்ளிட்டிருக்கவும் கூடும். எந்த நொடியிலையும் அவன் இங்கை வரக்கூடும். ஓ  என்ரை வெள்ளியார்! நானும் , நீயும் இப்ப எங்கினையும் அரணக்காறங்கள் கண்ணிலை படாத இடமாய்ப் பார்த்து ஓடிப் பறிஞ்சம் எண்டால்?


இப்பிடி என்ரை யோசினை நினைப்பு எல்லாம் கண்டதையும் கடியதையும் நினைச்சுக் குழம்பின படி இருக்க, ஆரோ குதிரைமால் கதவைத் திறந்திச்சினம். பயக்கெடுதியிலை நான் குரையை வைக்க ஆயித்தம். பார்த்தால் வந்தது பெத்தய்யா தான். என்னடா இது இம்மளவு நேரமாய் இந்தப் பெடி குதிரைமாலிலை என்ன செய்யிறான் எண்டு யோசிச்சு இருப்பார் போலை. உள்ளை அரையிருட்டாய் இருந்ததிலை அனக்கு கொஞ்சம் திறுத்தியாய் இருந்தது. பெத்தய்யா நான் அழுததைக் காணேலாது தானே? எண்டாலும் அவருக்கு விளங்கீட்டுது.

"என்ரை குஞ்சன்! என்னாலை ஏதும் மேற்கொண்டு செய்யேலும் எண்டால் செய்து போடுவன். என்ன செய்யிறது இந்தப் பெத்தய்யாவாலை எந்த உதவியும் இல்லை. தேவையான மட்டிலை அழுது உன்ரை கவலையைத் தீர்."எண்டு என்ரை உச்சந் தலையிலை கொஞ்சினார். அப்ப யன்னலுக்கு வெளியாலை....... ஐயோ கடவுளே!  குதிரை பிடிக்கிறவனெல்லோ வாறான் ? மத்தியாசு வளவுக்குள்ளை.... விழுவான் தெங்கிலின்ரை அறுதல்படை அரணக்காறன்......ஐயோ வெள்ளியாரைப் பிடிக்கப் போறானே.

"அங்கை வாறான் பெத்தய்யா! அந்தா பாருங்கோ குதிரை பிடிக்கிறவன் வாறான்!" நான் கத்தினதைத் தாங்கேலாமல் வெள்ளியாரும் கனைச்சது. மறு நொடியிலை மாலின்ரை கதவு திறந்தது. அங்கை நிண்டான் அவன் கறுப்பு தலைக் கவசமும், கறுப்பு கம்பளி மேலங்கியுமாய். 
"இல்லை! ஐயோ வேண்டாம்!" எண்டு நான் குழறினன்.  ஆனால் அவன் அதுக்கிடையிலை அனக்குக் கிட்ட வந்து என்னைக் கட்டிப் பிடிச்சான். அண்ணர் தான் இப்பிடிக் கட்டி அணைச்சுப் பிடிக்கிறவர். அப்பிடியெண்டால் ....இது?.....

"உன்ரை சொந்த அண்ணனை உனக்கு அடையாளம் தெரியேல்லையோ?" எண்டு திமிறின என்னைப் பார்த்துச் சொன்னான். யன்னலுக்குக் கிட்ட என்னை இழுத்துப் போய் தன்ரை முகத்தை நான் குணமாய்ப் பார்க்கும் படி நிண்டான்...., நிண்டார். எண்டாலும் என்னாலை அது என்ரை அண்ணர் எண்டு நம்பக் கயிட்டமாய் இருந்துது. ஏனெண்டால் அவரைப் பார்க்கேலாமல் அருவருப்பான தோற்றமாய் இருந்தவர். இனி இல்லை எண்ட வடிவு, கண்கவர் அழகு எண்டு அவரைப் பற்றிச் சொன்னதெல்லாம் பொய் எண்ட மாதிரிப் போச்சு. அந்த வடிவான பொன் மஞ்சள் நிறத் தலைமயிர் நிறம் மாறி, அவரின்ரை முகத்துக்குப் பொருத்தம் இல்லாமல் செம்பட்டை நிறமடிச்சது. மேல் சொண்டுக்குள்ளை என்னத்தையோ அதக்கி வைச்சிருந்ததாலை அது வீங்கி அந்த இலச்சணமான முகத்தை கேவலமாக்கிச்சுது. இப்பிடிச் சின்னச்சின்ன மாறுதலாலை இம்மளவு தூரம் அவரின்ரை வடிவு கெட்டுப் போகும் எண்டு என்னாலை நம்ப முடியேல்லை. இனி எல்லாத்துக்கும் மேலாலை அவர் போட்டிருக்கிற அரணக்காறன் வேசம் பார்க்கவே  வெறுப்பாய் இருந்துது. 

மற்றும்படிக்கு எண்டால் அவரின்ரை வேசம் வினோதம் எல்லாம் கண்டு சிரிச்சிருப்பன். அதுக்கெல்லாம் இப்ப நேரகாலம் பொருத்தமாய் இல்லை. அதோடை அண்ணருக்கும் நேரமில்லை.
"கெதியா, கெதியா! வலுசுறுக்கிலை நான் திரும்ப வேணும். அந்த கறுமண்யாக்காக்காறன்  எக்கணம் வரப்போறான். " பெத்தய்யாவிட்டை கைநீட்டிக் கேட்டார்.
"பெத்தய்யா! அந்த இலச்சினை எங்கை? தெங்கிலுக்கு உங்கடை குதிரையளை மனம் விரும்பித் தானே குடுக்கிறீங்கள்?"
"பின்னை என்னவாம் ? வேறை என்னத்தை நீ நினைக்கிறாய்?" எண்டு புன்சிரிப்போடை இலச்சினையைப் பெத்தய்யா குடுத்தவர். 
"பெருங்கதவத்திலை இருக்கிற காவலனுக்கு  நான் பொய் பறையேல்லை எண்டு ஒம்பிக்கிறதுக்கு இந்த இலச்சினை தேவை." 

நாங்கள் கடகடவெண்டு  குதிரை ரெண்டுக்கும் சேணம், கடிவாளம் எல்லாம் கட்டிவிட்டம்.  அதுக்கிடையிலை தான் எப்பிடிப் பெருங்கதவம் தாண்டி வந்தவர் எண்டு அண்ணர் பெத்தய்யாவுக்குச் சொன்னவர்.
"அது வலுசுகம். சீனியப்பு சொல்லித் தந்த குறியீட்டுச் சொல்லு எனக்கு இப்ப பாடம். கேளுங்கோ சொல்லிறன். தட்டிக்கதவுக்கு வந்தவுடனை காவலனிட்டை குறியீட்டுச் சொல்லைச் சொன்னன்.
சகல அதிகாரங்களும் வரந்தரும் தெங்கில் நயினார் ஒருவருக்கே!> உதைக் கேட்ட உடனை  
< எங்கத்தையாலை வாறாய்? என்ன காரியமாய் ஊருக்குள்ளை போறாய்?> எண்டு கேட்டாங்கள்.
< கறுமண்யாக்காவாலை வாறன். தெங்கில் நயினாருக்கு குதிரை பிடிக்க மத்தியாசு வளவுக்குப் போறன் > எண்டு சொன்னன். 
< உள்ளை வரலாம் > எண்டாங்கள். 
< நன்றி > எண்டு சொல்லீட்டு வந்திட்டன். இப்ப உங்களுக்கு முன்னாலை நிற்கிறன். ஆனால் நான் இப்ப நிண்டு மினைக்கெடாமல் போகவேணும். தெங்கிலின்ரை அடுத்த அரணக்காறன் குதிரை பிடிக்க எண்டு உள்ளை வந்திட்டான் எண்டால் நம்ம நிலைமை மோசமாய்ப் போடும்."

நாங்கள் குதிரையளை எம்மளவு வேகமாய் வெளியாலை கொண்டு வந்தம் எண்டதை அனக்கு விளங்கப் படுத்த முடியேல்லை. அம்மளவு கெதியிலை காரியங்கள் மளமளவெண்டு நடந்துது. அண்ணர் வியாழரிலை ஏறினார், ஒரு கையாலை வெள்ளியாரின்ரை கடிவாளக் கயிற்றைப் பிடிச்சார்.
"பத்திரம், பெத்தய்யா! அப்ப பேந்து சந்திப்பம்!" எண்டிட்டுக் குதிரையளோடை வெளிக்கிட்டார்.
"அப்ப நான்?" நான் கத்தினன்.
"நான் என்ன செய்யிறது?" 
அண்ணர் கையாட்டிப் பயணம் சொன்னார்.
"பெத்தய்யாவைக் கேள் சொல்லுவார்." எண்டு திருப்பிக் கத்தினார். நான் ஒரு பேயன் மாதிரி அவர் போறதை ஆவெண்டு பார்த்துக் கொண்டு நிண்டன். 

ஆனால் பெத்தய்யா விளப்பம் சொன்னவர்.
"நீ ஒண்டை விளங்கிக் கொள்ள வேணும் சீனியப்பு!, பெருங்கதவம் தாண்டி உன்னாலை போகேலாது. இண்டைக்கு சாமத்திலை யோனத்தான் தோண்டி வைச்ச பாதாளச் சுரங்கத்தாலை நீ வெளியேறலாம். யோனத்தான் அங்காலை உன்னைப் பார்த்துக் காத்திருப்பான்."
"அது நிச்சயம் நடக்கும் எண்டுறியளோ?" என்ரை வழக்கமான ஐமிச்சம் பிடிச்ச கேள்வி.
"கடைசி நேரத்திலை அண்ணருக்கு ஏதும் ஆபத்து எண்டால்?..."
"தெங்கில் இருக்கிற உலகத்திலை எதுகுமே நிச்சயம் இல்லை. அப்பிடி ஏதும் குழப்பம் எண்டால் போன வழியாலையே அப்பிடியே  திரும்பி பெத்தய்யாவிட்டை வந்திடு. பெத்தய்யாவோடை பத்திரமாய் இருந்து சீவிக்கலாம்." பெத்தய்யாவிட்டை இருந்து ஒரு பெரிய பெருமூச்சுப் பறிஞ்சது.

நான் எல்லாத்தையும் யோசிச்சுப் பார்க்கத் தெண்டிச்சன். முதல் பாதாளச் சுரங்கத்துக்கு உள்ளை ஊர்ந்து தவண்டு போக வேணும். அது மோசமானதாய் இருக்கும். பேந்து மதிலுக்கு அங்காலை இருக்கிற காடு. அங்கை எண்டால் அண்ணர் இருக்க மாட்டார். அவருக்காகக் காத்துக் காத்து இருக்க வேணும். கடைசியிலை நிலைமை கைமீறிப் போச்சு எண்டது தெரியவரும். பேந்தென்ன திரும்பிப் பாதாளச் சுரங்கத்துக்குள்ளாலை ஊர்ந்து வர வேணும். அண்ணர் இல்லாத கொடுமையான ஒரு சீவியத்தை மேற்கொள்ள வேணும்.

நாங்கள் இப்ப குதிரையள் இல்லாமல் வெறிச்சோடிப் போன மாலுக்கு வெளியாலை நிண்டம். அப்பத்தான் அனக்கு இன்னொரு காரியம் ஓடி வெளிச்சது. 
"கறுமண்யாக்காவிலை இருந்து வாறவனுக்கு என்ன சொல்லிறது பெத்தய்யா? ஒரு குதிரையும் மாலிலை இல்லை எண்டு கண்டால் என்ன ஆய்க்கினை தருவானோ?"
"அவன் வாறதுக்கிடையிலை இஞ்சை இப்ப ஒரு குதிரை நிற்கும். வியாழர் வந்தவுடனை நான் பக்கத்து வளவிலை கொண்டு போய் மறைச்சு வைச்ச என்ரை தங்கராசிக் குதிரையை இப்ப போய்க் கூட்டிவாறன்."எண்டார். 
"அப்பிடி எண்டால் உங்கடை குதிரையை எல்லோ பிடிச்சுக் கொண்டு போகப் போறான்?"
"மானம் கெட்டவன் என்ன செய்யிறான் எண்டு தான் பார்ப்பமே?" எண்டு சொல்லீட்டு குடுகுடெண்டு ஓடிப் போனார்.

பெத்தய்யா தங்கராசியைக் கொண்டுவந்து மாலிலை கட்டவும், வெள்ளியாரைக் கொண்டு போக வந்த தெங்கிலின்ரை  அரணக்காறனும் மத்தியாசு வளவுக்கு வரவும் சரியாய் இருந்திச்சுது. வந்த வரத்திலை தெங்கிலின்ரை அரணக்காறங்களின்ரை வழக்கப் படி அதட்டிக் கூப்பிட்டு கண்டபடி பேசினான். குதிரைமாலிலை ஒரு குதிரை மட்டும் தான் இருக்குது, அதையும் பெத்தய்யா தர மாட்டன் எண்டு சொல்ல ஆளுக்குக் கேந்தி இன்னும் ஏறிப் போச்சு. 
"இப்பத்தானே ஒரு குதிரை பிடிகாறன் வந்து குதிரையைப் பிடிச்சுக் கொண்டு போனவன்? பேந்து என்ன தாரை வார்ப்புக்கு எண்டு நீ இப்ப வந்து நிற்கிறாய்? எத்தினை பேர் இப்பிடிக் கிளம்பி  இருக்கிறியள்? எத்தினை குதிரை எண்டு பறிப்பீங்கள்? அப்பிடியெண்டால்  உனக்கு முதல் வந்தவன் ஆரின்ரை ஆள்? அவன் குதிரையோடை இலச்சினையையும் பிடுங்கிக் கொண்டு போட்டான். உனக்கு என்னத்தைப் பிடுங்கித் தாறது? ஒரு மரமண்டைக்கு மற்ற மரமண்டை என்ன செய்யுது, போக்குவரத்து  எண்டு தெரியாததுக்கு நானே பாடு? ஒரு குதிரை வைச்சிருக்கிறதுக்கு எனக்கு அனுமதி இருக்கு கண்டியோ!"

பெத்தய்யாவின்ரை நக்கல் நளினப் பேச்சு சிலசில அரணக்காறருக்கு கொதி கேந்தியை இன்னும் கிளப்பும். சிலசில பேரை வாயடைச்சுப் போகச் செய்யும். இப்ப வந்தவன் பெத்தய்யா இப்பிடித் துணிஞ்சு வாயடிப்பார் எண்டு எதிர்பார்க்கேல்லை. வெருட்டு விடலாம் எண்டு வந்தவர் அடங்கிப் போனார். 
"எங்கையோ ஒரு பிழை நடந்து போச்சுது" எண்டு முணுமுணுத்தபடி போனான். வந்த வேலையை சரியானபடி செய்து பேரெடுக்கலாம் எண்டு ஆசைப்பட்டு ஏமாந்து போனான். அந்த ஏமாற்றம் அவன்ரை முகத்திலை, சதிரத்தின்ரை அசைவிலை, நடையிலை தெரிஞ்சது.

"பெத்தய்யா! உங்களுக்குப் பயமே இல்லையோ?" தெங்கிலின்ரை அரணக்காறன் கண்ணை விட்டு மறைஞ்ச உடனை கேட்டன்.
"ஏன் இல்லாமல்? இஞ்சை என்ரை நெஞ்சைத் தொட்டுப் பார். என்ன அடி அடிக்கிது எண்டு ? " என்ரை கையை தன்ரை நெஞ்சிலை வைச்சவர். தடதட எண்டு தாள வாத்தியந்தான் கையிலை தெரிஞ்சது.
"பயம் இல்லாதவை ஆருமே இல்லை. ஆனால் எங்கடை பயத்தை எதிரிக்குக் காட்டப்  படாது."

சாமம் ஆகிப் போனது. காட்டுறோசாப் பள்ளத்தை விட்டு நான் வெளியேற வேண்டிய நேரம் வந்திட்டுது. பெத்தய்யாவை விட்டுப் பிறியிற தருணம் வந்திட்டுது.
"போட்டுவா என்ரை குஞ்சன்! இந்தப் பெத்தய்யாவை மறந்திடாதை." எண்டு என்னை அணைச்சுக் கொஞ்சினார் பெத்தய்யா.
"எந்தக் காலத்திலையும் உங்களை மறக்க மாட்டன் பெத்தய்யா." எண்டு அவரின்ரை தாடி வளர்த்த முகத்திலை கொஞ்சினன். பேந்து பாதாளச் சுரங்கத்துக்கு உள்ளை இறங்கி விட்டன்.

இப்ப நான் மட்டும் தன்னந்தனிய இருட்டான இந்தப் பாதாளச் சுரங்கத்துக்குள்ளை. அனக்கு நானே கதை சொல்லிச் சொல்லி பயப்பிடாமல் அமைதியாய் ஊர்ந்து ஊர்ந்து போக தெண்டிச்சன். 
"கும்மிருட்டுத் தான். அதுக்கு என்ன? சாய்ச் சாய்! அது ஒண்டும் மூச்சடக்காது.....ஓ! மெய்தான் கழுத்தாங் குத்தியிலை தண்ணி சொட்டினது தான். எண்டாப்போலை? பேயா! சுரங்கப்பாதை முழுசாக இடிஞ்சு மூடப் போகுதே? இல்லை இல்லை! நீ சுரங்கத்தாலை மேலை மிதக்கிற நேரம் தடியன் தொடிக்கி உன்னைக் காணமாட்டான். கும்மிருட்டுக்குள்ளை பார்க்கிறதுக்கு அவன் என்ன பூனையோ? ஓமோம்! கொண்ணர் அங்கை காத்துக் கொண்டு இருப்பார். எந்தப் பயமும் இல்லை. நான் சொல்லிறது புத்தியிலை உறைக்குதோ? கொண்ணர் அங்கை நிற்கிறார் எண்டால் நிற்கிறார் தான் மறு பேச்சில்லை கண்டியோ!"

ஓம்! மெய்யாத்தான் அண்ணர் அங்கை நிண்டவர். இருட்டுக்குள்ளை ஒரு கல்லிலை இருந்தவர். கொஞ்சம் தள்ளி வியாழரும், வெள்ளியாரும் நிண்டதுகள்.

"ஆ கா கார்ல் சிங்கநெஞ்சன்! வா வா ஒரு வழியாய் வந்து சேர்ந்திட்டாய் தம்பிக்குட்டீ!" எண்டு அண்ணர்  என்னை வலு புளுகத்தோடை வரவேற்றார். 
                                                    ( பேந்து சந்திப்பம்)

சொல் விளக்கம்:
பொழுதறு மட்டும் = பொழுது + அறு மட்டும் - இருட்டும் மட்டும் 
பத்தை < பற்றை - புதர் 
செத்தை - குப்பை, உலர்ந்த சருகு, ஓலை வேலி 
பறுகு - சிறு புதர் 
பத்தல்- கிணற்றுடன் சேர்த்துக் கட்டியிருக்கும் தரை 
கோடி- வீடிருக்கும் வளவின் ஒதுக்கான இடம் 
மூத்திரக்கோடி- சலம் பெய்யும் கோடி 
கடுக்கண்ட வயசு < கடிக்கண்ட வயசு = கடி+கண்ட+ வயசு =விளக்கம் அறிந்த வயசு - பதின்மவயசு
செந்தளிப்பு < செந்தலிப்பு - செழிப்பு
வேலிப் பொட்டு - பக்கத்து வளவுக்குப் போய் வருவதற்காக வேலியில் இருக்கும் ஓட்டை
அலப்பறை - உரத்த அலட்டல்
பைம்பல்< பம்பல் - களிப்பு, மகிழ்ச்சி 
கடுப்பு - எரிச்சல் 
கஞ்சல் குப்பை கசாகூளம் - குப்பை குப்பை குப்பை 
தொக்கை - தடித்த 
கழுத்தாங்குத்தி < கழுத்தாங்குற்றி= கழுத்து +ஆம் + குற்றி - கழுத்தடி 
பாலுண்ணி - உடம்பில் தோன்றும் ஒரு வித சதை வளர்ச்சி 
புறமறிவு - புறத்தைப் பற்றிய அறிவு, சூழலைப் பற்றிய அறிவு 
அடைவு - அடகு 
பேசினவர் - ஏசின அவர் 
குஞ்சியப்பன் - சிற்றப்பன் 
சேறும் சுரியும் - சேறும் சேறும் 
நெருக்குவாரம் - நெருக்கடி 
பண்டி - பன்றி 
பெடி- சிறு பையன் 
எப்பன் - எள்ளளவு 
கடுவல் - கடுமை 
சாதுவாய் - மெதுவாய் 
இத்தறைக்கு - இந்நேரம் 
அகிளான் < அகழான் - வயல் எலி 
எக்கணம் < இக்கணம் - இந்நேரம் 
எக்கணம் - எந்நேரமும் 
ஓடிப் பறிதல் - ஓடி மறைதல் 
குணமாக - சரிவர, சரியாக 
சொண்டு - உதடு 
அதக்குதல்- குதப்புதல்,  வாயுள் அடைதல் 
ஒம்பித்தல் -  ஒப்புவித்தல், நிரூபித்தல் 
தவண்டு< தவழ்ந்து 
ஓடி வெளித்தது - எண்ணம் வந்தது 
கேந்தி- கடுங்கோவம் 
தாரைவார்ப்பு - இழத்தல், பறிகொடுத்தல் 
















Author: தங்கராசா ஜீவராஜ்
•5:59 AM

ஆலயம்


13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.



இச்சாசனம் குறித்து பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.’இச்சாசனம் கற்பலகை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்கள் அமைந்துள்ள பகுதி 1அடி 7அங்குல நீளமானது.எழுத்துக்கள் ஓரளவு பெரியவை. இவை சராசரியாக 15 அங்குல உயரமும் அகலமும் கொண்டவை. இச்சாசனத்தை 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாகக் கொள்ளலாம்.



துண்டமாகிவிட்ட இச்சாசனத்தில் எல்லாமாகப் பதினொரு வரிகள் காணப்படுகின்றனவாம். முதல் நான்கு வரிகளும் சொற்கள் அடையாளம் காண்பதற்கு ஏற்றவாறு அமையவில்லையாம். 5ஆவது வரி முதலான சாசனப்பகுதி கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

5. உடையார் நிச்ச
6. யித்த ஜகதப்ப
7. கண்டன் தாநத்(து)
8. க்கு நிலையாக்(கித்)
9. தம்பலகாம ஊ
10. ரை நான் கெல்
11.லைக்கு தள எல்லை.


இந்தச் சாசனத்தில் முக்கியமான மூன்று விபரங்கள் காணப்படுகின்றன. முதலாவது ‘உடையார்’ என்ற சொல் எழுதப்பட்டுள்ளது. உடையார் என்ற சொல் சாசனவழக்கில் அரசர்களை அல்லது அரச பிரதானிகளைக் குறிக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.



இன்னொரு அதிமுக்கியமான விடயம் ‘தம்பலகாமம்’ என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளமையாகும். தம்பலகாமம் என்னும் பெயர் புராதனமானது. அது ஏறக்குறைய எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து வழங்கி வருகிறது என்பது இச்சாசனித்தினூடாக உறுதியாகின்றது.சாசனத்தின் மூன்றாவது முக்கியமான அம்சம் ‘ஜகதப்ப கண்டன் தானம்’ என்பது பற்றிய குறிப்பாகும். ‘கண்டன்’ என்பது போர் வீரனைக் குறிக்கும் சொல்லாகும்.



வரலாற்றுத்துறை பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் இச்சாசனம் குறித்து ஆய்வுகள் செய்து இத்தகைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள்.பதினோராம் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் திருகோணமலைப் பிரதேசத்தில் கந்தளாய் மயிலங்குளம் போன்ற இடங்களில் இத்தகைய படைகள் இருந்தன என்பது வரலாறாகும். இதே போன்று தம்பலகாமத்திலும் ‘ஜகதப்ப கண்டன்’ என்ற பெயரால் வழங்கிய படையொன்று இருந்துள்ளது என்பது இந்தச் சாசனத்தின் மூலம் அறியப்படுகிறது.



கந்தளாய் கட்டக்குளப்பற்று, பதவியா, மன்னார் மாதோட்டம் ,புலச்சேரி, தேவபட்டினம் முதலிய இடங்களில் கலிங்கத்து மாகோன் தனது படை நிலைகளை அமைத்திருந்தான் எனப் பாளி சிங்கள வரலாற்று நூல்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன.



பழமையில் திருகோணமலைப் பிரதேசத்தில் தம்பலகாமப்பற்று ஒரு தனி வன்னிமையின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தது. இது வன்னியர்கள் பற்றிய தமிழ் நூல்களிலும் ஒல்லாந்த பிரித்தானிய நிர்வாக அதிகாரிகளின் அறிக்கைகளிலும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தம்பலகாமம் சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அங்குள்ள ஆட்சியாளரின் ஏற்பாட்டின் பிரகாரம் ஒரு வீர பட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிக நகராக இருந்ததா? என்ற சந்தேகங்களை வரலாற்றுப் பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் தனது’தம்பலகாமத்துக் கல்வெட்டு’ ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.



இவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்போது இது தொடர்பான சில விபரங்களை தடையங்களை அல்லது செவிவழிமூலமான செய்திகளையும் ஆய்வுக்குத் துணையாக எடுத்துக்கொள்வது பயனள்ள ஒரு விடயமாக அமையும் என நாம் நம்புகிறோம்.



போர்த்துக்கீசர் கோணேசர்கோயிலை இடித்து அழித்த பின்னர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தோற்றம் பெற்றதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள தம்பலகாமம் புதிய குடியேற்றக் காணிகளுக்குச் செல்லும் பாதையில் சுமார் 250 மீற்றர் தூரத்தில் சுமார் பத்து அல்லது15 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காட்டுப்பகுதி இன்றும் ‘கோட்டை’ என அழைக்கப்பட்டு வருகிறது. பழமையில் இது சிறிய கோட்டையாக இருந்ததாகவும் இக் கோட்டையைச் சுற்றி அகழிகள் இருந்ததாகவும் காலப்போக்கில் இவையெல்லாம் சிதைந்து அழிவுற்றுவிட்டன என்றும் வயதில் முதிந்தோர்கூறுகின்றனர்.



கலிங்க மாகனின் படையணியொன்று இக்கோட்டையில் இருந்ததாகவும் ‘தம்பன்’ என்ற கலிங்கப்படைத் தளபதி இக்கோட்டையின் தளபதியாக இருந்ததாகவும் வீரஞ்செறிந்த அத்தளபதி கிழக்கிலங்கையில் மாகனுக்கெதிராகச் செயல்பட்டோரை புறங்கண்டு ‘தம்பன் கடவை’ வரையில் கலைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.



‘தம்பன் கடவை’ என்பது பொலனறுவை ஊடாக மட்டக்களப்புக்குச் செல்லும் பாதையில் ‘மன்னம்பிட்டிக்கு’ அருகாண்மையில் அமைந்துள்ளது.இதேபோல தம்பலகாமத்திலிருந்து 6 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ‘கப்பல்துறையில்’தம்பலகாமத்து இளைஞர்கள் ‘திரைகடலோடியும் திரவியம் தேடினர்’என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தக்கடல் வாணிபத்தினூடாகவும் கப்பல்துறைக்கடலில் முத்துக்குளித்து பொருளீட்டிய காரணத்தினாலும் தம்பலகாமம் ஒரு பட்டினமாகக் காணப்பட்டது எனக்கருதுவதில் எவ்வித தவறுமில்லை.



குளக்கோட்டன் காலத்தில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பாவநாசத் தீர்த்தம் கப்பல்துறை கடலோரமாக அமைந்திருந்தது.தற்பொழுது ஆலங்கேணிக் கிராமத்திற்கருகில் உள்ள கங்கையாற்றில் ஆதிகோணநாயகரின் தீர்த்தோட்சபம் நடைபெற்று வருகிறது எனினும் ஆதிகோணநாயகர் கோயிலில் வைராவியார் குடும்பத்தினர் பழமையில் நடைபெற்ற கிரிகைகளை ஞாபகத்தில் கொண்டு கப்பல்துறைக்குச் சென்று கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் இடத்தில் இச்சடங்குகளை வருடாவருடம்நிறைவேற்றி வருவது இன்றும் நடைமுறையிலுள்ளது.



‘தம்பைநகர்’ எனப்புராணங்களிலும் கோணேசர் கல்வெட்டிலும் விளிக்கப்படும் தம்பலகாமம் கப்பல் துறையையும் தன்னகத்தே கொண்டது என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் மிகப் பொருத்தமானதாகும்.இவ்விடயங்களை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும் பொழுது எண்ணூறு வருடங்களுக்கு முன்பு தம்பலகாமம் ஒரு வீர பட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிகப் பெருநகராக விளங்கியிருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலையாகும்.



வே. தங்கராசா
தம்பலகாமம்








Author: ந.குணபாலன்
•3:05 AM


                                                                          மூலக்கதை
 : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்





துடிப்பு பத்து : கொலை பாதகன்


நான் ஒரு காலமும் கறுமண்யாக்காவின்ரை நயினார் தெங்கில் எண்டவனைப் போலை ஒரு கொடூரப் பிறவியைக் கண்டதில்லை. அந்த இறுகி உறைஞ்சு போன விடியாத பேய் மூஞ்சை, அதின்ரை பார்வை பட்ட சீவன் வாடி வதங்கி கருகிப் போடும். பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம நதியிலை தன்னுடைய தங்கப்படகிலை ஆள் அம்பு அரணப் படையோடை வந்து பெருந்தோணித்துறையிலை வந்திறங்கினான். நான் பெத்தய்யாவோடை பெருந்தோணித்துறையடிக்குப் போனநான். அண்ணர் தான் என்னை அனுப்பி வைச்சவர்.
"நீ நேரிலை அந்தத் தெங்கிலை ஒருக்கால் பார்க்க வேணும். அப்பத்தான் உனக்கு இன்னும் நல்லாய் விளங்கும். காட்டுறோசாப் பள்ளத்திலை அடிமைச் சேவகத்தாலையும், பசி பட்டினியாலையும் சாகிற சனங்கள்; நினைக்கிறதும், விரும்பிறதும் ஒரேயொரு காரியம் தான். காட்டுறோசாப் பள்ளத்தின்ரை விடுதலை மட்டுந்தான்." எண்டு அண்ணர் சொன்னவர்.

மேலை உசரத்திலை பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம மலையளின்ரை உச்சி மலையிலை தெங்கிலின்ரை கோட்டை இருந்தது. அங்கை தான் அவன் பாதுகாப்பாய் இருந்தவன். இடைசுகம் ஆத்து வழியாலை வந்து காட்டுறோசாப் பள்ளத்துக்கு வந்து தன்ரை கொடுமையான நடவடிக்கையளைக் காட்டிச் சனங்களை வெருட்டி அடக்கி வைச்சிருந்தவன். அவன்ரை கொடுமையளாலை  சனங்கள் ஒருத்தரும் அவனை மறக்கேலாமல் இன்னும் இன்னும் விடுதலையை நினைச்சு கனவிலையும், நினைவிலையும் ஏங்கினபடி; எண்டு அண்ணர் சொன்னவர்.


முதலிலை அனக்கு ஒண்டும் கண்ணிலை எத்துப் படேல்லை.  அரணக்காறன்கள் நிறையப் பேர் நெருக்கியடிச்ச படி எங்களுக்கு முன்னாலை நிண்டவங்கள். நீளநீள வரிசையாய் அரணக்காறங்கள்  தெங்கிலின்ரை பாதுகாப்புக்கு எண்டு குமிஞ்சு போய் நிண்டாங்கள். அந்தளவுக்குப் பயம், நம்பிக்கையீனம் நயினாருக்கு! எங்கினையும் இருத்தாப்போலை ஒரு ஒற்றை அம்பு சீறிக் கொண்டு பாயக் கூடுமெல்லே? கொடுங்கோலனாய் இருக்கிறவங்களுக்கு  எந்த நேரமும் பயம் தான் எண்டு அண்ணர் சொன்னவர். தெங்கில் எண்டவன் மற்ற எல்லாரையும் விடப் பயங்கரமான பாதகன் எல்லோ? 


அனக்கும், பெத்தய்யாக்கும் முன்னுக்கு என்ன நடக்குதெண்டு ஒண்டும் தெரியேல்லை. பின்னை நான் ஒரு வழி கண்டு பிடிச்சன். குந்தி இருந்து அந்த விறைச்ச மண்டை அரணக்காறங்களின்ரை கால் இடைவெளியாலை பார்த்தன். பெத்தய்யாக்கு அப்பிடிக் குந்தியிருந்து பாக்கேலாமல் இருந்தது.
" உசிரிலை பதிஞ்ச வடுபோலை என்னென்ன பயங்கரமான சம்பவங்களுக்கு இண்டைக்கு நீ சாட்சியாய் இருக்கப் போறியோ?" எண்டு பெத்தய்யா கவலைப் பட்டார். 

இந்தப் பெருந்தோணித்துறைக் கதவம் தெங்கில் வாறதுக்காகத் தான் இப்ப திறந்து கிடக்கு. ஆனபடியால்தான் இப்ப பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம நதியைப் பார்க்கக் கூடியதாய் இருக்குது. ஒரு பெரிய வடிவான தங்கநிறமான படகு ஒண்டு ஆத்து நடுவிலை  வந்து கொண்டிருந்தது. கறுப்பு நிற சீருடை போட்டிருந்த படகுப்படைக்காறங்கள் துடுப்பு வலிச்சவங்கள். எத்தினை சோடி துடுப்பு எண்டதை  என்னாலை எண்ணி மாள முடியேல்லை. ஒவ்வரு தரமும் துடுப்புகள் ஒரே சீராய் மேலை தூக்குப் பட்ட நேரம் காலைமை நேரத்து வெய்யிலிலை பளிச்சிட்டது. துடுப்பு வலிச்சவங்கடை பாடு பெரிய பாடாய்க்  கிடந்துது. தோணித்துறைக்குக்குக் கொண்டு வந்து படகை அணைக்க சரியாய்க் கயிட்டப் பட்டவங்கள். ஆத்து நீரோட்டம் நடுக்கொள்ள அந்தளவுக்குக் கடும் வேகமாய் இருந்தது. படகை இழுத்துப் பறிச்சுக் கொண்டு போகுமாப் போலை நீரோட்டம் இருந்தது.  கொஞ்சத்தூரத்திலை ஒரு அருவி குதிக்கிற சத்தம் சோ எண்டு பெரிய இரைச்சலாய்க் கேட்டது. ஒருவேளை அந்த அருவி இழுக்கிற நீரோட்டம் தான் படகை தத்தளிக்க வைக்குதோ?
"கறுமாஅருவி தான் அது." எண்டு நான் கேட்டதுக்குப் பெத்தய்யா சொன்னார்.
"கறுமாஅருவியின்ரை மெட்டு காட்டுறோசாப் பள்ளச் சனங்களுக்கு தாலாட்டு மாதிரி. சின்னப் பிள்ளையள் தொட்டு பெரியாக்கள் ஈறாய் அதைக் கேட்டுக் கொண்டுதான் நித்திரை கொள்ளிறது." எண்டார். 

மற்றும்படிக்கு காட்டுறோசாப் பள்ளத்துச் சனம் ஆருமே ஆத்துத் தண்ணியிலை ஒரு தரம் கூடி கால் நனைக்க முடியாமல் பூட்டிக் கிடக்கும். நான் காட்டுறோசாப் பள்ளத்துச் சின்னப் பிள்ளையளை நினைச்சுப் பார்த்தன். ஆத்தங்கரை ஓரத்திலை நீரோட்டம் இல்லாமல் அமைதியாய் இருந்தது. ஒருநேரம் இந்த ஆத்தங்கரை ஓரத்திலை இந்தப் பிள்ளையள் தன்னிட்டவாரம் விளையாட்டுப் படகு விட்டு, கூழாங்கல்லுப் பொறுக்கி, மீன் பிடிச்சு, நீந்திக், குளிச்சு, கும்மாளமடிச்சு, நல்ல அமளியாய் விளையாடி இருக்குங்கள். தெங்கிலின்ரை ஆக்கிரமிப்பு வந்த பின்னாலை அந்தச் சுதந்திரம் பறி போயிருக்கும், பாவங்கள். இப்பத்தான் ஊரைச் சுற்றி கோட்டை மதில் எழுப்பிக் கட்டிப் போட்டாங்களே! ரெண்டே ரெண்டு வாசல் மட்டுந்தான் ஊருக்குள்ளை வாறது போறதுக்கு. ஒண்டு நான் உள்ளிட்ட கோட்டை வாசல் பெருங்கதவம் எண்டு பேர், மற்றது இப்ப நாங்கள் வந்து நிக்கிற இந்தப் பெருந்தோணித்துறைக் கதவம். எப்பவும் ரெண்டு வாசலும் பெலத்த காவலோடை. ஒரு இலையான், ஒரு எறும்பு கூடி தெங்கிலின்ரை அரணக்காறங்களைத்  தாண்டி வர, போக முடியாது. 

திறந்த பெருந்தோணித்துறைக் கதவத்தின்ரை இடைவெளியிலை   தெங்கிலின்ரை தங்கநிறப் படகு படகுத்துறையின்ரை மிதவைப் பாலத்திலை வந்து அணைஞ்சது தெரிஞ்சது. தெங்கில் படகிலை இருந்து  இறங்கினான். தங்க நிறச் சேணம் பூட்டின ஒரு கறுப்புக் குதிரையிலை வலு கலாதியாய் ஒரு அரணக்காறனின்ரை  முதுகிலை கால் வைச்சு ஏறினான்.  அவன்ரை குதிரை அனக்குக் கிட்ட வந்த நேரம் நல்ல வடிவாய் அவன்ரை முகம், கண், பார்க்கிற பார்வை எல்லாம் தெரிஞ்சது.  நச்சுப் பாம்பின்ரை அரத்த வெறி பிடிச்ச பார்வை.  அரத்தச் சிவப்பு கஞ்சுகம், தலையிலை இருந்த முடியிலை கூடி அரத்தத்திலை தோய்ச்சு எடுத்த கணக்கிலை பறவைச் செட்டை அலங்காரம்,  சிவப்புச் சாயம் போட்ட மாட்டுத்தோலாலை செய்த காலணி.  இப்பத்தான் ஆரையோ ஒரு அப்பாவியைக் கொலை செய்த இடத்திலை அந்த அரத்தம் தெறிச்ச மாதிரி அவன் போட்டிருந்த தங்க நகையிலை பதிச்ச  ரெத்தினக் கல்லுக்  கூட அனக்குத் தெரிஞ்சது. அனக்கு முள்ளந்தண்டு, கிண்டு எல்லாம் உறைஞ்சு போச்சு. 

அவன் ஒருத்தரையும் கண்ணெடுத்துப் பார்க்கேல்லை. அதுக்கெல்லாம் உந்தச் சனங்களுக்கு அருகதை இல்லை எண்டமாதிரி ஒரு  ஆணவம். கறுமண்யாக்காவின்ரை நயினார் தெங்கில் ஆன தானும் தனக்குத் தாளம் போடுற படையும் ஏதோ ஒரு தேவலோகத்திலை மிதக்கிற மாதிரியும், உந்தப் பாவப் பட்ட சனங்கள் அவன்ரை கண்ணிலை படாத மாதிரியும் ஒரு செட்டு. 
காட்டுறோசாப் பள்ளத்துச் சனங்களுக்கெல்லாம் ஊர்ச் சந்தைக்கு வரும்படி கட்டளை. குஞ்சு குருமான் தொடங்கி கிழடு கட்டை ஈறாய் எல்லாருமே வந்து நிண்டவை. தெங்கில் பிரசங்கம் செய்யிறதாம், எல்லாரும் அதைக் கேட்க வேணுமாம்.  நானும் பெத்தையாவும் சந்தையடிக்குப் போய்ச் சனத்தோடை சனமாய் நிண்டம். 

நல்ல வடிவான ஒரு சந்தை முற்றம். சுற்றவர வடிவான பழங்கால பாணி வீடு, கடை, கட்டிடம், கிட்டங்கி எல்லாம். ஒரு சத்தஞ் சலாரும் காட்டாமல் எல்லாரும் நிண்டம். ஆனால் ஒவ்வருத்தரின்ரை மனதிலையும் குமுறின கோவமும், துக்கமும் அனக்கு விளங்காமலில்லை. இந்தச் சந்தையடியிலை  ஒருநேரம் என்ன மாதிரி கலகலப்பாய் சனம் வந்து போயிருக்குங்கள். கோடைகாலத்து நீண்ட பின்னேரப் பொழுதுகளிலை, பானகப்பந்தல் வழிய பானகம் வாங்கிக் குடிச்சு, உந்த மரத்தடி வாங்கில் வழிய இருந்து கூடிக், கதைச்சுக், குலாவிக், கும்மாளம் அடிச்சு, ஆட்டமும் பாட்டமுமாய் இருந்திருக்குங்கள்.  

ரெண்டு பழைய பெரிய லிண்டென் மரங்களுக்கு நடுவிலை தன்ரை குதிரையிலை வந்து நிண்டான்.  சனக்கூட்டத்தைப் பாராமல் காற்றை மணந்து மோப்பம் பிடிக்குமாப் போலை அவன்ரை தலை நிமிர்ந்து இருத்துது. அவனுக்குப் பக்கத்திலை ஒருத்தன்   மண்டைக்கனம் பிடிச்சவன் ஒரு வெள்ளைக்குதிரையோடை நிண்டவன், பேர் பியூக்கையாம்,  முதல்மந்திரியாம். பெத்தையா சொன்னவர். கனநேரமாய் ஒரு சொல்லும் பறையாமல் பேசாமல் நிண்டவங்கள். சுற்றவர கறுப்பு தலைக் கவசம்,  கறுப்புச் சீருடை, ஏந்தின வாள் , வடிய வடிய வேர்வை இந்த கோலத்திலை அரணக்காறங்கள் காவலுக்கு நிண்டபடி. பின்னை வேர்த்து வடியாமல் என்ன செய்யும்? நல்ல வெய்யில் எறிச்சதேல்லோ?

"தெங்கில் என்ன சொல்லப் போறானாம்?" எண்டு பெத்தய்யாவைக் கேட்டன். 

"வேறை என்னத்தை பெரிசாய் மாற்றிச் சொல்லப் போறான். வழமையாய்ப் பாடிற புறணி தான். காட்டுறோசாப் பள்ளத்தாரின்ரை போக்கிலை திறுத்தியில்லை எண்டுதான் சொல்லுவான்." எண்டார். சொன்னால் போலை ஒரு சங்கதி தெங்கில் ஒண்டும் சொல்லிறதில்லை. அடிமையளோடை நயினார் பறைய மாட்டாராமெல்லே? பியூக்கையிட்டை தான் அவன்ரை வாயசையும். பியூக்கை தான் தொலுக்குமுதலி. 
" நீங்கள் ஒழுங்காக சுறுக்காக வேலை செய்யாமல் இழுத்தடிக்கிறீர்கள். எதிரிகளுக்கு உதவுகிறீர்கள். சிங்கநெஞ்சன் இன்னும் பிடிபட்ட பாடாயில்லை. இதனாலே எமது கருணையுள்ள தெங்கில் நயினார் காட்டுறோசாப் பள்ளத்துச் சனங்களிலை திறுத்தியீனமாய் இருக்கிறார். " எண்டு உரத்த குரலிலை பியூக்கை சொன்னான்.
"ஓமோம்  எனக்கு விளங்குது. எனக்கு விளங்குது." எண்டு அனக்குப் பக்கத்திலை ஒரு அனுங்கல் குரல் கேட்டுது. நல்லா வயசு போன ஒரு அப்பு ...., கட்டையான மெலிஞ்ச உருவம் ...., கந்தல் உடுப்பு ...., நரைச்ச தலைமயிர், தாடிமீசை. 

"...........எமது கருணைமிக்க நயினார் அவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. வெகு விரைவில் அவர் ஆணைக்குக் கீழ்ப்படியாத இந்தக் காட்டுறோசாப் பள்ளத்தைக் கடுமையாகத் தண்டிப்பார். " எண்டு பியூக்கை இன்னும் வெருட்டினான்.

"மெய்தானே? நயினார் சொல்லிறதும் ஞாயம். நயினார்  செய்யிறதும் ஞாயம். " எண்டு அனக்குப் பக்கத்திலை நிண்ட அந்த அப்பு தாளம் போட்டது. அனக்கு விளங்கீட்டுது. உது ஆரோ மேல்வீடு கழண்ட சீவன். வயசு போக அறளை பேர்ந்த சென்மம்.
"............ ஆனால் எமது கருணைமிக்க நயினார்; குருதி பொங்கும் தண்டனையை உடனடியாக இந்நேரம் வழங்காமல் இன்னும் கொஞ்சக் காலம் அவகாசம் தருகின்றார், அத்துடன் ஒரு வெகுமதியையும் அறிவிக்கின்றார். அதாவது சிங்கநெஞ்சனை பிடித்துத் தருபவருக்கு இருபது வெள்ளைக் குதிரைகள் வெகுமதியாக வழங்கப் படும்"

"ஓ அப்ப நான் அந்த நரியைப் பிடிச்சுக் காட்டிறன்." எண்டு சொல்லி அந்த விசர் பிடிச்ச அப்பு என்னைஇடிச்சுத் தள்ளினது. அனக்கு வந்த கோவத்துக்கு செப்பட்டையைப் பொத்தி ஒரு அறை விடவேணும் போலை கிடந்துது. என்னதான் அறளைகிறளை பேர்ந்துபோன சீவன் எண்டாலும் கதைக்கிற கதையே இது?

"ஒரு வெக்கம் சிக்கு எண்டதுக்கு உம்மடை சீவியத்திலை இடமில்லையே?"  எண்டு கிசுகிசுத்துக் கேட்டன்.
"சாய்ச்  சாய்! அப்பிடி ஒண்டும் இப்போதைக்கு இல்லை." எண்டு ஒரு நக்கலாய் சொன்னபடி என்ரை கண்ணை ஊண்டி அந்த அப்பு பார்த்துது. அப்பத்தான் கவனிச்சன். உந்த வடிவான பளிச்சிடிற நீலக்கண் வேறை ஆரின்ரையாம்? என்ரை அண்ணரின்ரை எல்லோ?



என்ரை நெஞ்சு பயத்திலை தாளவாத்தியக் கச்சேரி நடத்திச்சுது.  என்னதான் துணிச்சல் எண்டாலும் ஒரு அளவு கணக்கு வேண்டாமே? இப்பிடியே தெங்கிலின்ரை மூக்குக்கு முன்னாலை வந்து நிற்கிறது? ஆனால் ஒருத்தராலையும் அடையாளம் காணேலாது. அண்ணர் பெத்தய்யாவின்ரை முதுகிலை இடிச்சு 
"என்ன அப்புக்கிழவா நாங்கள் முன்னைபின்னை ஆளையாள் கண்டிருக்கிறமோ?" எண்டு பகிடியாய்க் கேட்கிறவரைக்கும் பெத்தய்யாவாலை கூட கண்டுபிடிக்க ஏலாமல் இருந்திச்சுது. அண்ணருக்கு வேசம் கட்டிறது எண்டால் ஒரு கலை. நாங்கள் பூமி நச்சத்திரத்திலை...., அம்மாவோடை சீவிச்ச நாளையளிலை...., பின்னேரங்களிலை...., அடுப்படியிலை...., நான் வருத்தத்திலை உத்தரிச்ச  பொழுதுகளிலை...., என்னைச் சிரிக்க வைக்கிறதுக்கு...., வேசம் கட்டி நாடகம் நடிச்சுக் காட்டிறவர். என்ரை ராசன் அடிக்கிற கூத்திலை சிரிச்சுச் சிரிச்சு வயிறு நோகும்.

ஆனால் பகிடி முசுப்பாற்றி விடிறதுக்கு இது ஏற்ற தருணமே? இந்த தறுகுறும்பு கொஞ்சம் கூடிப் போச்சு.
" என்ன நடப்பு எண்டதை நானும் பார்க்கத் தானே வேணும்?" எண்டு  தன்ரை நடப்புக்கு சிரிக்காமல் ஞாயம் சொன்னார். பின்னை சிரிக்கிற காரியமே இது?  காட்டுறோசாப்பள்ளத்து ஆம்பிளையள் எல்லாரையும் ஒரு பக்கம் வரிசையாய் நிற்க வைச்சான்கள். தெங்கில் மேற்பார்வை பார்த்து இன்னின்னார் எண்டு கையாலை காட்டினான். கைகாட்டுப் பட்டவை  எல்லாம் அடிமைச் சேவகத்துக்கு ஆத்தைக் கடந்து கறுமண்யாக்காவுக்கு போகவேணும். கறுமண்யாக்காவுக்குப் போனவை உசிரோடை தாய்தேப்பனிட்டை, பெண்சாதி பிள்ளையளிட்டை  மீண்டு வந்த கதை இல்லை.  பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம மலையளின்ரை உச்சி மலையிலை தெங்கில் தன்ரை கோட்டையைப் பெருப்பிச்சுக் கட்டிறான். எந்தக் காலத்திலையும் ஆராலையும் பிடிபடாமல் பத்திரமாய் இருக்க வேணும் எண்டது அவன்ரை விருப்பம். தன்ரை ஆசையை நிறைவேற்றுறதுக்கு அவனுக்கு நிறைய அடிமையள் தேவை. அந்தப் பாவப்பட்ட சனம் கல்லுக் காவிக் காவியே கந்தறுந்து போனது. சாகும் வரை கடுமையான கயிட்டமான வேலைதான். 

"வேலைக் கயிட்ட துன்பத்திலை வருத்தம் வந்திச்சுது    
  எண்டால்?..." முன்னம் ஒருக்கால் நான் ஐமிச்சப் பட்டுக் கேட்டனான்.
"ம்...கூம்! கடைசியிலை கத்துலாவுக்குத் தீன் தான்" எண்டு பெருமூச்சு விட்டபடி அண்ணர் சொன்னவர். அவரின்ரை  தேகத்திலை அப்ப ஒரு நடுக்கம் தெரிஞ்சது. அதை நினைச்சவுடனை அந்த வேகா வெய்யிலிலையும் அனக்கு பயத்திலை குளிர்ந்து நடுக்கம் வந்திச்சுது. கத்துலா எண்டது என்ன? எப்பிடி இருக்கும்? ஒரு விளக்கமும் இதுவரை அனக்குத் தெரியாது. எண்டாலும் கத்துலா எண்டது ஒரு பயங்கரமான காரியம் எண்ட மட்டிலை அனக்கு விளங்கிச்சுது. 

தெங்கில் கை காட்டத் தொடங்க பயங்கர அமைதியாய் இருந்திச்சுது. தெங்கிலுக்கு மேலாலை லிண்டென்மரக் கிளையிலை இருந்த குருவி ஒண்டு கீழை நடக்கிற பயங்கரம் ஒண்டையும் அறியாமல் தன்னிட்டவாரம் இனிமையாய் பாடினது கூட அவசுரமாய்க் கிடந்திது. தெங்கிலின்ரை கை காட்டின திக்கெல்லாம் அழுகைச் சத்தம். பிரியன்மாரைப் பறி குடுக்கிற பெண்டில்மாரின்ரை புலம்பல், தேப்பன்மாரை விட்டுப் பிறயிற  பிள்ளை குட்டியளின்ரை அலறல், பெத்த மகன்மார் தங்களுக்கு முன்னாலை உசிரோடை பலியாடாய்ப் போறதைத் தாங்கேலாமல் வயசு போன தாய்தேப்பன்மாரின்ரை கதறல் ஐயோ! கடவுள் எண்டு ஒண்டு இருக்கோ? எல்லாருமே அழுதிச்சினம். நானுந்தான்.

தெங்கில் ஆர் எவரின்ரை அழுகையையும் ஒரு கணக்கிலை 
எடுக்கேல்லை. குதிரையிலை கொலு இருந்தபடி ஆள் ஆளாய்க் காட்டக் காட்ட, அவன்ரை கைவிரல் மோதிரத்து ரெத்தினக் கல்லு நெருப்பு மாதிரி பளிச்சிட்டது. ஐயோ! என்ன கொடுவினை இது? தெங்கில் தன்பாட்டிலை தன்ரை ஆள்காட்டி விரலாலை ஒவ்வொருத்தருக்கும் மரணதண்டனை எல்லோ எழுதிட்டுப் போறான்? அப்பிடிக் காட்டுப் பட்ட ஒரு தேப்பன்காறனுக்கு தன்ரை பிள்ளையளின்ரை அழுகை கேட்டு மனசு தாங்கேலாமல் குழம்பிப் போச்சு. சடாரெண்டு வரிசையை முறிச்சுக் கொண்டு அரணக்காறங்கள் தடுக்கிறதுக்கு முன்னம் தெங்கிலை அண்டிக்  கிட்டவாய்ப் போய் விட்டார்.
"கொடுங்கோலா! கொலைகாறா! சாவெண்டது உன்னையும் ஒருநாளைக்குத் தேடி வரும் மறவாதை!" எண்டு கத்திப் போட்டு <பொளிச்> எண்டு தெங்கிலின்ரை மூஞ்சையிலை காறாப்பிச்சுத் துப்பினார்.

தெங்கில் கையை அசைச்சான். கிட்ட நிண்ட ஒரு அரணக்காறன் தன்ரை வாளை உருவி ஓங்கினான். அந்தக் கத்தி வெய்யிலிலை பளபளக்கக் கண்டன். ஆனால் அண்ணர் இழுத்து என்ரை  முகத்தை தன்ரை நெஞ்சுக்குள்ளை அணைச்சு மறைச்சுப் பிடிச்சார். நான் அந்தக் கொடுமையான கொடுமையைப் பார்க்கக் கூடாதெண்டு. ஆனால் அனக்கு கேட்டது. சொல்லப்போனால் அண்ணரின்ரை நெஞ்சுக்குள்ளை இருந்து ஒரு <அக்> எண்டு ஏங்கி வெடிச்ச  விம்மல்  சத்தம் மெள்ளக் கேட்டது. மனசெல்லாம் பாரமாய்க் கனத்தது. வெட்டுப் பட்டவரை இழுத்துக் கொண்டு போய் ஆத்திலை வீசினவங்கள்.  நாங்கள் வீட்டுக்கு உடனை  திரும்பாமல் ஊரைச் சுற்றி நடந்தம். அந்த நேரம் ஒண்டு கவனிச்சன்,  அண்ணரின்ரை முகத்தாலை கண்ணீர் வடிஞ்சது. சும்மா சும்மா தொட்டது துடைச்சதுக்கு எல்லாம் அழுகிற ஆள் அவரில்லை.

அண்டு நாள் முழுக்க காட்டுறோசாப்பள்ளம் முழுதும் இழவு வீடாய்ப் போச்சு. எல்லாருமே அழுதவை. ஆனால் பெலத்து அழுகிற உரிமையும் இல்லாமல் போச்சு. அரணக்காறங்கள் அழுகிற சனத்தை ஓய்ஞ்சு இருந்து ஒப்பாரி வைக்கவும் விடேல்லை. அதைச் செய் இதைச் செய் எண்டு தெல்லோட்டின படி வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சின மாதிரிக் கரைச்சல் குடுத்தாங்கள். அவங்களுக்கு என்ன கவலை? கொண்டாட்டம் எல்லோ? தெங்கில் காட்டுறோசாப்பள்ளம் வாற நேரத்திலை எல்லாம் அவங்களுக்கு விருந்து வைப்பான். சந்தையடியிலை வெட்டுப் பட்டுச் செத்தவன் பாவியின்ரை அரத்தம் காயேல்லை. அரணக்காறங்களின்ரை கும்மாளம் தொடங்கீட்டிது. பீப்பாய் பீப்பாயாய் சாராயம் வந்திச்சுது. ஊரிலை சனம் வளர்த்த பண்டி எல்லாம் கம்பிச் சட்டங்களிலை குறுக்காய்க் குத்துப் பட்டு நெருப்பிலை வெந்தபடி. அந்த பண்டி புலுண்டிற மணமும், நெருப்பாலை கிளம்பின புகாரும் ஊர் முழுதையும் அம்மிப் பிடிச்சது. வழமையிலை வாயூற வைக்கிற மணம், அண்டைக்கு ஓங்காளம் வரவைக்கிற நாத்தமாய் இருந்திச்சுது.

"காட்டுறோசாப்பள்ளத்துச் சனங்களிட்டை வெருட்டிப் பிடுங்கின  பண்டியளை திண்டு திண்டு தான் உந்தக் காடை கடப்பளி எல்லாம் கொழுத்துப் போச்சுது. நாசமாய்ப் போவார் குடிக்கிறது கூட சனங்களை வருத்தி வடிச்ச சாராயந்தான். " பெத்தய்யா வீட்டுக்குப் போற வழியிலை சொல்லிப் புறுபுறுத்தார். தெங்கில் ஒண்டும் இந்தக் கொண்டாட்டங்களிலை கலந்து கொள்ளேல்லை. வந்தான், பியூக்கையைக் கதைக்க வைச்சு சனங்களை வெருட்டினான், கைகாட்டி அடிமைச் சேவகத்துக்கு ஆள் பிடிச்சான், ஒருத்தனை வெட்டுவிச்சான்  அம்மளவுந் தான். நயினாரின்ரை நீதி பரிபாலனம் முடிஞ்சுது. வந்த வழியிலை ஆத்தைக் கடந்து திரும்பிப் போட்டான்.
"காட்டுறோசாப் பள்ளத்துக்கு இண்டைக்கு ஒரு பாடம் படிப்பிச்சுப் போட்டன் எண்ட திறுத்தியோடை போய் தன்ரை கோட்டையிலை இருப்பான்." எண்டார் அண்ணர்.
" இஞ்சை இருக்கிறதெல்லாம் பயந்த அடிமைக் கூட்டம் எண்டு நினைப்பான்"

" அங்கை தான் ஆள் பெரிய பிழை விடுவார் கண்டியோ" எண்டார் பெத்தய்யா.
"அவனாலை விளங்கிக் கொள்ள முடியாததொரு சங்கதி என்னெண்டால், அடக்குமுறையாலை எந்த ஒரு சனத்தையும்  நீண்ட காலத்துக்கு அடக்கி வைச்சு ஆள முடியாதது எண்டது." நாங்கள் அப்பிள் மரங்கள் வீட்டைச் சுற்றி நிற்கிற ஒரு வளவைத் தாண்டிப் போனம். 
"உது தான் சந்தையிலை வெட்டுப் பட்டவன் வீடு" எண்டு காட்டினார் பெத்தய்யா. வீட்டுக்கு வெளியாலை கல்லுப் படியிலை ஒரு மனிசி இருந்தவ. பார்த்தவுடனை அனக்குத் தெரிஞ்சு போச்சு,  இவ தான் செத்தவர் பெண்டில் எண்டு. பிரியன்காறனை தெங்கில் கை காட்டினவுடனை குழறி அழுதவ எல்லோ? தன்ரை நீளமான இளமஞ்சள் நிறத் தலைமயிரைக் கத்திரிக்கோலாலை ஒட்ட நறுக்கிக் கொண்டிருந்தா. 
"அந்தோனியா! என்ன காரியமடி மேனை செய்யிறாய்?" எண்டு பரிதவிச்சுக் கேட்டார் பெத்தய்யா. 
" என்ரை பிரியனையே கொலை செய்து போட்டாங்கள் அம்மான். இனி இந்த தலைமயிரை வளர்த்து நான் என்ன செய்ய? வில்லின்ரை நாணுக்குக் கயிறாய்த் திரிச்சுக் குடுக்கப் போறன்." எண்டு ஒரு விறுமம் பிடிச்ச மாதிரி சொன்னா. அதுக்கு மிஞ்சி ஒண்டும் அவ பறையேல்லை. அந்த நேரம் கண்ட அவவின்ரை கண்ணையும், அதிலை தெரிஞ்ச அவலத்தையும், சினத்தையும்  என்னாலை எந்தக் காலமும் மறக்கேலாது. பெத்தையாவும் அதுக்கு மேலை ஒண்டும் சொல்லேல்லை. அவவின்ரை பிள்ளையளை அங்கினை காணேல்லை. ஆரும் இனசனம் அதுகளின்ரை கவனத்தை மாற்ற, ஆறுதல் சொல்ல, பயத்தைப் போக்காட்ட எண்டு தங்களோடை கூட்டிப் போயிருக்கும். அங்காலை ஒரு அப்பிள் மரத்தடியிலை,  பாவம் செத்தவரின்ரை தாய்க்கிழவி தன்ரை பாட்டிலை தன்ரை மகனைப் பற்றிச் சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்துது. தெங்கிலையும் , அவன்ரை அரணக்காறங்களையும் மண்ணை அள்ளிக்கொட்டி திட்டி அந்த ஆச்சி அறம்பாடினது.

காட்டுறோசாப்பள்ளத்திலை கனக்கக் காரியங்களுக்குத் தண்டனை மரணதண்டனைதான் எண்டு அண்ணர் முன்னை சொன்னவர். எல்லாத்திலையும் ஆபத்தான காரியம் ஆயுதம் வைச்சிருக்கிறது தானாம்.  அதுக்குக் கடுமையான தடை. தெங்கிலின்ரை அரணக்காறரும் அம்புவில்லு, வாள், ஈட்டி எண்டு  தேடி ஆராயாத வளவுமில்லை, பூராத வீடுமில்லை, பிரட்டிப் பார்க்காத பெட்டியுமில்லை. ஒரேயொரு ஒற்றை ஆயுதம் கூட அவங்கள் கண்டு எடுத்ததில்லை. ஆனால் கடைசியிலை ஒரு ஆயுதப் போராட்டம் எண்டு வாறநேரம் தேவைப் படும் எண்டு சொல்லி, ஏதாவது ஒரு ஆயுதத்தை இரகசியமாய் செய்யாத வளவுமில்லை, பதுக்கி வைக்காத வீடுமில்லை எண்டு அண்ணர் சொன்னவர். 

அப்பிடி ஏதும் ஆயுதங்கள் பதுக்கி வைச்சு இருக்கிறதைக் காட்டிக் குடுத்தால் அதுக்கும் வெள்ளைக் குதிரை பரிசு எண்டு தெங்கில் அறிவிச்சு இருந்தவனாம்.
"முட்டாள்! காட்டுறோசாப் பள்ளத்திலை ஒரு  துரோகி இருக்கிறான் எண்ட நினைப்போ அவனுக்கு? ஒரேயொரு குருவியைத் தன்னும் காட்டிக் குடுக்கிற வேலைக்கு அவனாலை ஆரையும் வளைக்கேலாது." எண்டார் பெத்தய்யா.
"செர்ரிப்பள்ளத்திலை தான் ஒரேயொரு துரோகி இருக்கிறான்." எண்டு அண்ணர் கவலையோடை சொன்னார். அண்ணர் அனக்குப் பக்கத்தாலை தான் நடந்து கொண்டிருந்தவர். அவர் இப்ப போட்டிருக்கிற வேசமும், கந்தல் உடுப்பும், நரைச்ச சடையும், தாடியும் அது  அண்ணர்தான் எண்டு நம்பேலாமல் இருந்திச்சுது. 

"நாங்கள் அனுபவிக்கிற துன்பமும், வன்முறையும், கொடுவினையும்  நேரிலை தன்ரை கண்கொண்டு  யூச்சி கண்டதில்லை. கண்டான் எண்டால் பேந்து எந்த ஒரு காலத்திலையும் உந்தத் துரோக வேலை செய்ய மாட்டான்." எண்டு சொன்னார் பெத்தய்யா.
" சோபியா அக்கை பாடு எப்பிடி இருக்கோ? என்ன செய்யிறாவோ? தெரியேல்லை" எண்டு அண்ணர் கவலைப் பட்டார்.
"பியாங்கா ஒழுங்காய் உசிரோடை அவவின்ரை கைக்குப் போய்ச் சேர்ந்திச்சுதோ, என்னமோ?"
"அது நல்லபடி போய்ச் சேர்ந்திருக்கும் எண்டு நினைப்பமே! " நம்பிக்கையாய்ச்  சொன்னார் பெத்தய்யா. 
"யூச்சியையும் இம்மட்டிலை சோபியா தடுத்திருக்கும்."

நாங்கள் வீட்டுக்கு மத்தியாசு வளவுக்கு வந்தநேரம் தடியன் தொடிக்கியும் வேறை மூண்டு பேரும் காட்டுறோசாப் பற்றையளுக்கு நடுவிலை புல்லிலை படுத்துக் கிடந்த படி  தாயம் விளையாடினவங்கள். அண்டைக்கு அவங்களுக்கு வேலைக்கு விடுமுறை. பின்னேரம் முழுமனையும் அவங்கள் அந்த இடம் விட்டு அரங்கேல்லை. அடுப்படி யன்னலுக்குள்ளாலை அவங்கடை கூத்தையெல்லாம் பார்க்கக் கூடியதாய்க் கிடந்தது.  தாயம் உறுட்டிறதும், இறைச்சியைக் கடிக்கிறதும், சாராயம் அடிக்கிறதும் ஒரே அமளி. ஒரு முழுச் சாராயப் பீப்பாயை சந்தையடியிலை இருந்து தோளிலை தூக்கி ஓடிவந்த அவங்கடை புளுகத்தை எல்லோ பார்த்திருக்க வேணும்? கொஞ்சத்தாலை தாயம் உறுட்டிறதும் அலுத்துப் போச்சு. தின்னுறதும் குடிக்கிறதும், தின்னுறதும் குடிக்கிறதும் மட்டுந்தான். மற்றும் படிக்கு பீயுறுட்டி வண்டு போலை உந்தக் காட்டுறோசாப் பற்றையளை சுற்றிச்சுற்றி நிறைவெறியிலை உருண்ட சீர்தான். அதுகும் மெத்திப் போக நாலு பேரும் நல்ல நித்திரை. 

அவங்கடை தலைக் கவசம், சீருடை, கம்பளி மேலங்கி எல்லாம் அங்கினை அங்கினை நிலத்திலை போட்டபடி. இப்பிடி ஒரு வெக்கையான காலநேரத்திலை எப்படா கழட்டிப் போடுவம் எண்டு காத்துக் கொண்டு இருந்தவங்களோ? 
"எக்கணம் தெங்கில் வந்து இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண வேணும், மச்சான்மாருக்கு சவுக்கடிதான்." எண்டு சொன்ன அண்ணரைத் திரும்பிப் பார்க்கக் காணேல்லை. நிண்ட இடத்துக்கும் பறையாமல் ஆள் எங்கினையோ பறிஞ்சிட்டுது.  இதென்னடா இந்த அண்ணர் எங்கை போட்டார் எண்டு நான் பயப்பிடுறதுக்கு இடையிலை புயல் அடிச்ச மாதிரி உள்ளை வந்தார். அவரின்ரை கையிலை அரணக்காறங்கடை ஒரு தலைக் கவசம், ஒரு சீருடை, ஒரு மேலங்கி, ஒருசோடி காலணி. ஒரு ஓட்டத்திலை ஓடிப்போய் இறாய்ஞ்சிக் கொண்டு பறந்து வந்திட்டார்.

"என்ன சீலம்பாயுக்கு உந்த கழுத்தறுக்கிற எளிய படையின்ரை உடுப்பு உனக்கு?" பெத்தய்யா எரிச்சலிலை கேட்டார்.
"இப்ப இல்லை. ஆனால் தேவை வாற நேரம் உதவியாய் இருக்கும்." எண்டார் அண்ணர். 
" அந்தநேரம் நீயுமெல்லோ ஆப்பிடப் போறாய்?" எண்டு கவலைப் பட்டார் பெத்தய்யா. அண்ணர் ஒண்டும் பறையேல்லை. தான் போட்டிருந்த கிழட்டு வேசத்தை உருவிப் போட்டிட்டு, அரணக்காறங்கடை  உடுப்பை மாட்டிப் பார்த்தார். பார்க்கப் பயமாய்க் கிடந்துது.  பெத்தய்யாவும் நடுக்கத்தோடை,
"கடவுளாணை உந்தக் கழுத்தை வெட்டிறவங்கடை உடுப்பை  உருவி குடைவுக்குள்ளை கொண்டுபோய் ஒளிச்சு வையடா மேனை" எண்டு கெஞ்சுமாப் போலை கேட்டார். அண்ணரும் அப்பிடித்தான் செய்தவர். 

மிச்சநாள் முழுக்க நித்திரை அடிச்சம். அதாலை தடியன் தொடிக்கியும் கூட்டாளிமாரும் வெறி முறிஞ்சு எழும்பின நேரம், ஆர் தலைக்கவசம் துலைச்சது, ஆரின்ரை சீருடை காணாமல் போச்சுது எண்டெல்லாம் ஆராய்ஞ்சு தங்களுக்கை நசுக்கிடாமல் அமளிப் பட்டது ஒண்டும் நமக்குத் தெரியாது. களவுக்கு வந்தவனைக் குளவி கொட்டின மாதிரி வாய்விட்டு ஒருத்தரட்டையும் ஒண்டும் பறையேலாது தானே? வெளியாலை பெரிய அதிகாரிக்குத் தெரிஞ்சாலே சவுக்கடிதான். அப்பிடி இருந்தும் ஒரு சின்ன அடிபிடிச் சத்தம் கேட்டு பெத்தய்யா நித்திரையாலை முழிச்சவராம். பார்த்தால் அடக்கின குரலிலை வசைபாடிறதும் ஒருத்தனை ஒருத்தன் போட்டுப் பிடிக்கிறதுமாய் முள்ளுப்பற்றை எல்லாம் தேகத்தைக் கிழிக்க உறுண்டு பிரண்டவங்களாம்.   

அண்டிரவு நாங்கள் தொடர்ந்து சுரங்கம் தோண்டிற வேலையைச்  செய்தம். 
"இன்னும் மூண்டே மூண்டு இரவுதான். அதுக்கு மிஞ்சி இல்லை." எண்டார் அண்ணர். 
"பேந்தென்ன நடக்கும்?" எண்டு கேட்டன்.
"பேந்தென்ன? நான் எதுக்கெண்டு இங்கினை வந்தநானோ அது நடக்கும்." எண்டார் அண்ணர்.
"எடுத்த காரியம் வெல்லுவனோ இல்லையோ, மறியல் உடைச்சு ஒர்வாரை விடுவிக்கிறது எண்டதிலை இருந்து நான் பின்னடிக்க மாட்டன்."
"அண்ணர் இனிமேல் என்னை விட்டிட்டு ஒரிடமும் நீர் போகேலாது. நீர் போற இடமெல்லாம் நானும் வாறது தான் மறு கதையில்லை." எண்டு அறுத்துறுத்துச் சொன்னன். கனநேரமாய் என்னை வைச்ச கண் வாங்காமல் பார்த்தார், பேந்து சிரிச்சார். 
"உண்மையிலையே உனக்கும் இட்டம் எண்டால், எனக்கும் இட்டம் தான்." எண்டார்.

                                                                                   (பேந்து சந்திப்பம்)


சொல்விளக்கம் :

இடைசுகம் - இடைக்கிடை 
அமளி - கலகலப்பு
அமளி - கைகலப்பு 
உள்ளிடுதல் - உள்ளே வருதல் 
இலையான் - ஈ 
வலு கலாதி - பெருங்கலகம் 
வலு கலாதி - நளினம்
கஞ்சுகம் - சட்டை 
செட்டு- திமிர் 
கிட்டங்கி - களஞ்சியம் 
புறணி - குறை கூறுதல் 
தொலுக்குமுதலி - மொழிபெயர்ப்பவர் 
அறளை பேர்தல்- ஞாபக மறதி நோய், alzheimer நோய் 
செப்பட்டை- கன்னம் 
வெக்கம்சிக்கு - சூடுசுரணை 
தறுகுறும்பு - பயமில்லாத குறும்பு 
இன்னின்னார்- இவரிவர் 
வருத்தம் - நோய் 
வேகா வெய்யில் - பொசுக்கும் வெய்யில் 
பிரியன்< புருசன் - கணவன் 
பெண்டில் - மனைவி 
தேப்பன் - தகப்பன் 
காறாப்பிச்சு < காறி + அப்பிச்சு - காறிச் சேர்த்து 
தெல்லோட்டுதல் - அலைக்கழித்தல் 
புலுண்டுதல் - மீன், இறைச்சி என்பவை பொசுங்குதல் 
புகார் - புகை 
அம்முதல்- மூடிப் பிடித்தல் 
ஓங்காளம்< ஓக்காளம் - சத்தி/வாந்தி வரும் உணர்வு 
காடை கடப்பளி < காடை கடப்பழி - காடையன் கீழானவன் 
அம்மான்- மாமா 
விறுமம்- பின் விளைவைப் பற்றி நினைக்காத கோவம் , பிடிவாதக் கோவம் 
அறம்பாடுதல் - சபித்தல் 
பூராத- புகாத 
பறிஞ்சு - ஓடி 
இறாய்ஞ்சுதல் - ஓடிப்போய் அல்லது பறந்துபோய் ஒரு பொருளைப் பறித்தல் 
சீலம்பாய்- கேவலம், துன்பம் 
ஆப்பிடுதல் < அகப்படுதல் 
நசுக்கிடாமல் - சத்தமின்றி 
போட்டுப்பிடித்தல்- அடிபிடிப் படுதல் 
அறுத்துறுத்து- அசையாத உறுதியாய் 
கயிட்டம் - துன்பம் 
இட்டம் - விருப்பம் 



















Author: தங்கராசா ஜீவராஜ்
•5:46 AM
நா.தம்பிராசா


திருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய எமது பெருமதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்களேயாகும்.



வரலாற்றை ஆராய்ந்த பல பேராசிரியர்களுக்கு இவர் பெரும் உதவியாக இருந்தார். 1970 ஆம் ஆண்டு தொடக்கம் தனது தாயாருடன் இணைந்து தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை ஆவணப்படுத்தும் பெருங்கைங்கரியத்தில் ஈடுபட்டார். வரலாற்று ஆய்வை தனது மூச்சாகக் கருதியவர் திரு.நா.தம்பிராசா அவர்கள்.



கந்தளாய்க்கல்வெட்டு, பெரியகுளம் கல்வெட்டு, மாங்கனாய்க்கல்வெட்டு ,புல்மோட்டைக்கல்வெட்டு, பத்திரகாளியம்மன் கல்வெட்டு ,நிலாவெளிப்பிள்ளையார் கோயில் கல்வெட்டு, கங்குவேலிக்கல்வெட்டு ,தம்பலகாமம் ஐயனார்திடல் கல்வெட்டு, வில்லூண்டிக்கந்தசாமி கோயில் கல்வெட்டு ஆகியவை இவரது பெருமுயற்சி காரணமாக வரலாற்றுத்துறை நிபுணர்களான கலாநிதி.செ.குணசிங்கம் ,பேராசிரியர்.சி.பத்மநாதன் ,பேராசிரியர்.கா.இந்திரபாலா ஆகியோர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அரிய பல வரலாற்றுத் தடயங்களை உலகுக்கு அறிமுகம் செய்தன.



பத்தாம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் நிலாவெளிக்கல்வெட்டிலேயே ‘திருகோணமலை’ என்ற சொல் முதன் முதலாக அறியப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கலாநிதி திரு.கா.சரவணபவன் அவர்கள் ‘வரலாற்றுத் திருகோணமலை’ தொடர்பான ஆய்வுகளைச் செய்தபோது திரு.நா.தம்பிராசா அவர்களின் உதவி பெரிதும் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.



வரலாற்றுத்துறை மட்டுமில்லாது தனது மனைவி மகேஸ்வரியுடன் இணைந்து திருகோணமலை ஆத்திமோட்டைத் தமிழ் வித்தியாலயத்தை ஆரம்பித்து வைத்த பெருமையும் இவரைச் சார்ந்தது. திருகோணமலையின் வரலாறு பற்றிய அவரது தேடல் இலங்கையில் மட்டுமல்ல வெளிநாட்டவர்களாலும் போற்றிப் பேசப்பட்ட ஒரு விடயமாகும்.



தான் பிறந்த மண்ணை தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்தப் பெருமகன் கடந்த 17.01.2013 இல் இயற்கை எய்தினார். அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.


வே.தங்கராசா.






Author: ந.குணபாலன்
•3:42 PM

                                                                          மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்

துடிப்பு 9 : தடியன் தொடிக்கி! 

சிலசில நேரங்களிலை அக்களிப்பிலை நான் என்னையே மறந்த தருணங்களும் இருக்கு. பூமி நச்சத்திரத்திலை நாங்கள் சீவிச்ச நாளையளிலை வரியாவரியம் சூரியனின்ரை வடதிசைப் புறப்பாட்டைக் கொண்டாடிற திருநாள் வடந்தைக் காலத்திலை டிசம்பர் 21ந் திகதி வரும். அப்ப ஒருதரம் அண்ணர் கனகாலமாய்க் காசு சேர்த்து ரெண்டு பேர் இருந்து சிந்திலை சறுக்கி விளையாடத் தக்க கதழாசனம் ஒண்டு வாங்கி அனக்கு திருநாள் பரிசாய்த் தந்தவர்.


கதழாசனம் - toboggan  

அந்தத் தரம் ஒருக்கால் இப்பிடித்தான் அக்களிப்பிலை என்னை நானே மறந்து போனநான். பேந்து அண்ணரை நஞ்சியாலாவிலை ஆத்தங்கரையிலை கண்ட நேரம் ஒருக்கால். மற்றது குதிரைக்காறன் வளவுக்கு வந்த முதல்நாளிலை அண்ணரோடை சேர்ந்து அனுபவிச்ச அந்த மாயாசாலக்கதையிலை சீவிச்ச மாதிரியான அற்புத ரவு. ஆனால் அந்த அக்களிப்பான முந்தின தருணங்கள் எல்லாம் இப்ப நான் பெத்தய்யா மத்தியாசு வீட்டு இரகசிய அறையிலை நிலத்திலை நித்திரையாய்க் கிடந்த அண்ணரைக் கண்ட அக்களிப்புக்கு சமமில்லை. ஆரும் இம்மளவுக்குப் புளுகப் படேலுமே? என்ரை உசிரே புளுகத்திலை கெக்கட்டம் விட்டு பெருஞ்சிரிப்பாய்ச் சிரிக்குதே!

நான் அண்ணரை ஓடிப்போய் தொடேல்லை, எழுப்பேல்லை, அவரைக் கண்ட புளுகிலை கத்திக் கூத்தாடவுமில்லை. பறையாமல் போய் அவருக்குப் பக்கத்திலை படுத்தன், நித்திரையாய்ப் போனன். எம்மளவு நேரம் நித்திரை கொண்டிருப்பனோ தெரியாது. ஒருவேளை ஒருநாள் பொழுது முழுக்கவும்  இருக்குமோ? கண்ணை முழிச்சுப் பார்த்தால் அண்ணர் அனக்குப் பக்கத்திலை இருந்தார். என்னைப் பார்த்துச் சிரிச்சபடி இருந்தார். அவர் சிரிக்கேக்கை அப்பிடி ஒரு கருணையான முகத்தை வேறை எங்கினையும், எந்த ஒரு சீவனிலையும் ஒருத்தர் பார்க்க முடியாது. நான் அவரின்ரை சொல்லுவழி கேளாமல் இங்கினை வந்தது அவருக்குப் பிடிக்காமல் இருக்கும் எண்டு நான் நினைச்சன். சிலநேரம் உதவி எண்டு தான் கத்திக் குழறினதையும் மறந்து போயிருக்கக் கூடும். ஆனால் என்னைக் கண்டது ஆளுக்கு வலு புளுகம் எண்டது வெளிவெளியாய்த்  தெரிஞ்சது. நானும் அண்ணரைப் பார்த்துச் சிரிச்சன். கொஞ்சநேரத்துக்கு ஒண்டுமே பறையாமல் ஆளையாள் பார்த்துச் சிரிச்ச சீர்தான்!



"உதவி எண்டு கத்தினநீங்கள் எல்லோ?" எண்டு கடைசியிலை நான்தான் அமைதியைக் குழப்பினன். அப்ப அண்ணரின்ரை முகச் சிரிப்பு நிண்ட இடத்துக்கும் பறையாமல் ஓடி ஒளிச்சிட்டுது. 

"ஏன் கத்தினநீங்கள்?"எண்டு கேட்டன். அதைப் பற்றி நினைக்கவே அவருக்குப் பிடிக்கேல்லை போலை. அந்த நினைப்பே அவருக்கு நோக்காட்டைக் குடுத்திருக்க வேணும். என்ரை கேள்விக்கு மறுமொழி சொல்ல விரும்பாதது போலை மெள்ள,
" நான் அந்த அறுந்த கத்துலாவைக் கண்டநான். அது செய்ததையும் கண்டநான்."எண்டு சொன்னார்.

அதுக்கு மேலை கத்துலா எண்டதைப் பற்றிக் கேட்டு அவருக்கு அரியண்டம் குடுக்க நான் விரும்பேல்லை. ஆனால் கத்துலா எண்டது என்ன மாதிரியான சென்மம் எண்ட கேள்வி என்ரை மனசுக்குள்ளை இருந்தது. ஆனால் எல்லாத்தையும் விட அண்ணருக்கு கனக்கப் புதினங்கள் சொல்ல இருக்கெல்லோ? முதல் காரியமாய் யூச்சியைப் பற்றி சொல்ல வேணும்! அண்ணராலை உந்தக் கதையை நம்ப முடியேல்லை. அழுவாரைப் போலை அவரின்ரை முகமெல்லாம் வெளிறிப் போச்சுது.

"ஐயோ! யூச்சியோ? இல்லையில்லை நம்பேலாமல் கிடக்கே? யூச்சியோ? அருளாசிப் பூனைபோலை இம்மளவு காலமும் நடிச்சவனோ?" அண்ணரின்ரை கண்ணிலை கண்ணீர் அரும்பிச்சிது.  
"சோபியா அக்கைக்கு உடனடியாய் வியளம் சொல்லி அனுப்ப வேணும். அவவின்ரை புறா பியாங்கா இஞ்சை தான் இப்ப நிற்குது. இண்டைக்கு மைம்மல் பட பியாங்காவை கடிதம் வைச்சுப் பறக்க விடவேணும்."எண்டு அண்ணர் சொன்னார். 

ஓ! அதுதானே பின்னை? சோபியா அக்கையின்ரை புறா! வெண்பனி வண்ணப்புறா!நான் கத்துலாக் குகைக்கு அனுப்புப் படாமல் இருக்கிறதுக்கு இந்தப் பியாங்கப் புறாதான் காரணம் எண்டது பற்றி அண்ணருக்குச் சொன்னன். 

"இது ஒரு அதிசயந்தான்.காட்டுறோசாப் பள்ளத்திலை வீடான வீடு எல்லாத்தையும் விட்டிட்டு நேரை சரி கணக்கா அண்ணர் நீர் இருக்கிற வீடு தேடி வந்தனே!? அந்தநேரம் பார்த்து பியாங்கா வெளியாலை என்ரை கண்ணிலை படாமல் இருந்திருக்கும் எண்டால், பெத்தய்யா வீட்டையும் தாண்டிப் போயிருப்பன் தான்." எண்டு சொன்னன்.
"பியாங்கா! பியாங்கா! சரியான தருணத்திலை நீ அப்பிடி வெளியாலை நிண்டதுக்கு, உனக்கு மெத்தப் பெரிய உபகாரம் " எண்டு அண்ணர் பியாங்காப் புறாவுக்குத் தன்ரை நன்றியைச் சொன்னவர். அண்ணருக்கு மிச்சக் கதையளைக் கேட்கிறதுக்கு அப்ப நேரமில்லை. தலைக்கு மேலை முக்கியமான வேலை இருந்தது. கைவிரல் நிகத்தாலை சிவரைச் சுறண்டினவர். ஏதோ எலியொண்டு சிவர்ப்பலகையை அறுத்த மாதிரிச் சத்தம் கேட்டது.

கனநேரம் பிடிக்கேல்லை. பெத்தய்யா வந்து தட்டியைத் திறந்து உள்ளை எட்டிப் பார்த்தார். 

"குட்டியர் சீனியப்புவும் மூசி மூசி நித்திரை...." எண்டு பெத்தய்யா தொடங்கினார். அண்ணர் அவரை இன்னும் கதைக்க விடாமல்,
"மத்தியாசப்பு!...இல்லை நானும் இனிப் பெத்தய்யா எண்டு சொல்லுவம். எனக்கொரு உதவி செய்யுங்கோ பெத்தய்யாபியாங்காவை உடனடியாய்க் கொண்டு வாங்கோ! இண்டைக்கே மைம்மல் பொழுதுக்கு தகவல் அனுப்ப வேணும்!" எண்டு  அண்ணர் கெஞ்சிற குரலிலை கேட்டார். இன்னும் ஒண்டைக் கவனிச்சன். முன்னை அனக்கு எண்டு சொல்லிறவர். இப்ப மற்றவையள் கனபேர் சொல்லிற மாதிரி எனக்கு எண்டிறார்.

பெத்தய்யாவுக்கு ஏன் அவசர அவசரமாய் பியாங்காவை அனுப்பி வைக்க வேணும் எண்டு விளப்பம் சொன்னார். பெத்தய்யாவுக்கு யூச்சியின்ரை துரோக வேலையைப் பற்றியும் சொன்னார். அப்ப பெத்தய்யா வழக்கமாய் வயசு போன ஆக்கள் தலையாட்டுமாப் போலை தலையாட்டி மிச்சம் கவலைப் பட்டவர்.

"யூச்சி! ம். ஆரோ செர்ரிப்பள்ளத்தானின்ரை திருவிளையாடல் தான் இது எண்டு நான் நம்பினதும் சரியாத்தான் போச்சிது. அவனாலைதான் இண்டைக்கு ஒர்வாருக்கு கத்துலாக்குகையிலை மறியல் இருக்க வேண்டிய இந்த நிலைமை. என்ரை கடவுளே! இப்பிடியும் சில மனிசரைப் படைச்சியே !"எண்டு புலம்பினவர். பேந்து தட்டியை மூடிட்டு பியாங்காவைக் கொண்டு வரப் போட்டார். 

நல்லதொரு கள்ள அறைதான் இது. கதவுமில்லை, யன்னலுமில்லை.  வாறதுக்கும் போறதுக்கும் ஒரே வழி சிவரோடை சிவராய்க் அடையாளம் தெரியாமல் அலமாரிக்குப் பின்னாலை இருந்த தட்டி ஒண்டு தான். ஒரு மெத்தை கிடந்திது, மற்றும்படிக்கு ஒரு தளபாடமுமில்லை; அது வைக்கிற அளவுக்கு இடமுமில்லை. மாட்டுக்கொம்பிலை செய்த ஒரு விளக்கு ஒண்டுதான் ஒரளவுக்கு  கும்மிருட்டைப் போக்காட்டினது. அந்த வெளிச்சத்திலை ஒரு மெல்லிய தாளிலை அண்ணர் சோபியா அக்கைக்குக் கடிதம் எழுதினவர்.


" காலகாலத்துக்கும் சாபத்துக்கு உள்ளான துரோகி  தங்கச்சாவல் யூச்சி. வலு சுறுக்காக அவனுக்கொரு வழி செய்யவும். தம்பி என்னிடத்திலே."


" என்னைத் தேடி வெளிக்கிட்டுக் காணாமல் நீ போய்விட்டாய் எண்ட தகவலை  நேற்றைக்குச் செக்கல் நேரம் பியாங்கா தான் கொண்டு வந்தது." எண்டார் அண்ணர். 

"சோபியா அக்கை அனக்கெண்டு மரக்கறிக்கஞ்சி கொண்டு வந்திருப்பா. நான் அடுப்படிச் சிவரிலை எழுதின விடுகதை எல்லாம்  பார்த்தவவோ? என்னவோ?" எண்டு கவலைப் பட்டன்.
"என்ன விடுகதை?" எண்டு அண்ணர் கேட்டார்.

கனா வரும்  - ஒரு குரல் வரும்!
வான் வண்ண வரை வரை 
விரை என மனதின் உரை 
சினம் தரும் வினாத் தேடும்  
                                விடை காண விடை தாரும்!   
                                                                            எண்டு அண்ணருக்கு நான் எழுதின முதல் விடுகதையைச் சொன்னன்.
" சோபியா அக்கை பதட்டப்படக் கூடாதெண்டு தான் எழுதினநான்."
அண்ணர் சிரிச்சார்.
"பதட்டப்படக் கூடாதோ? நல்லாய்த்தான் நீயும் சொல்லுவாய்! என்னைத்தேடி உந்த நஞ்சியாலா மலையளிலை நீ திரியிறாய் எண்டதைக் கேட்டு என்ரை மனசு அமைதியாய் இருந்திருக்கும் எண்டு நீ நம்பிறியே? சோபியா அக்கையும் நல்லாய் யோசிச்சிருப்பா." எண்டு சொன்னார். அனக்கு வெக்கமும் துக்கமுமாய் முகம் வாடிப் போச்சிது. 

என்ரை முகம் வாடினதைக் கண்டவுடனை அண்ணர் என்னச் சமாதானப் படுத்தினவர்.

"துணிச்சல்காற என்ரை சின்ன சீனியப்பு! எம்மளவு வடிவாய்க் கவிதை கணக்கிலை விடுகதை எழுதி இருக்கிறாய்! நீல மலைப்பக்கம் எண்டதை நல்ல வடிவாய் வான் வண்ண வரை வரை எண்டு ...ஆ! எங்கினை இதை எல்லாம் எழுதப் படிச்சநீ?" எண்டு என்னைக் கேட்டார். 
"எல்லாம் உங்களிட்டை இருந்து தான். நீங்கள் அனக்கு எம்மளவு கதையள் , கவிதையள்  சொல்லி இருக்கிறீங்கள்!" எண்டன். 
"என்ன மாதிரித் துணிஞ்சு இம்மளவு தடையளையும் தாண்டி வந்திருக்கிறாய்!துணிச்சல்காற என்ரை சின்ன சீனியப்பு! அங்கினை நஞ்சியாலாவிலை இருக்கேக்கையும் நன்மையையும், அதிட்டமும் உன்ரை பக்கந்தான்; இங்கினை வந்தவுடனையும் இன்னும் கூடுதல் நன்மையையும், அதிட்டமும் தான்." எண்டு அண்ணர் என்னைப் புழுக அனக்குக் கொஞ்சம் வெக்கமாயும் இருந்திச்சுது. ஒருத்தர் என்னைத் துணிச்சல்காறன் எண்டு சொன்னது அதுதான் முதல்தரம்! அப்ப நான் நினைச்சநான் என்னெண்டால் இப்பிடியே தொடர்ந்தன் எண்டால் சிங்கநெஞ்சன் எண்ட பேருக்கும் பங்கமில்லை! யூச்சிப்பூச்சி என்னைப் பற்றி சேட்டைக் கதை ஒண்டும் உரைக்கவும் இடமிராது!

அடுப்படிச்சிவரிலை இன்னும் எழுதி வைச்ச மற்ற விடுகதையும் அனக்கு ஞாவகம் வந்திச்சிது. அண்ணரிட்டை அது பற்றி சொன்னநான்.

                                    பரி வெண்மை நாடும் 
நாடி செம்மை ஆகும் 
பல உண்மை ஆயும் 
பத்திரம் வாயும் நீயும் !

"நாடி செம்மை எண்டு குறிப்பாய் எழுதினது சட்டெண்டு கூபரைத்தான் நினைக்க வைக்கும். அது பிழைதான் கார்ல்!" எண்டு அண்ணர் சொன்னவர். கூபர் என்னை ஓநாயளிட்டை இருந்து காப்பாற்றின கதை எல்லாத்தையும் சொன்னநான். அதுக்கு அண்ணர் தான் சென்ம சென்மத்துக்கும் கூபருக்குத் கடமைப் பட்டவர் எண்டு சொன்னவர். 


காட்டுறோசாப் பள்ளத்திலை செக்கல் பொழுதாகி மைம்மல் ஆனது. பியாங்காவை அனுப்பி வைக்க வேணும்! பெத்தய்யாவின்ரை மத்தியாசுவளவிலை இருந்து பார்த்தால் பணிய இறக்கத்திலை இருந்த வீடுகளிலை எல்லாம் விளக்குகள் மினுமினுக்கத் துவங்கினது. சும்மா வெளிப் பார்வைக்குத் தான் அமைதியும், நிம்மதியுமாய் எல்லாமே இருந்தது. வீடுகள் வழிய சனங்கள் 

- இரவுச்சாப்பாடு தின்னுங்கள், 
- ஒருத்தரோடை  ஒருத்தர் கதை பறைஞ்ச படி இருக்குங்கள், 
- பிள்ளையளுக்கு விளையாட்டுக் காட்டி, பாட்டுப் பாடி,    
   மாயாசாலக் கதையள் சொல்லி சுகம்பெலமாய் இருக்குங்கள் 
எண்டு; உள்ளூர் நடப்புத் தெரியாத பிறத்தியார் ஒருத்தர் பிழையாய்  நினைக்கக்கூடும். ஆனால் உள்நடப்பு அப்பிடி இல்லை எண்டது எங்களுக்கெல்லோ தெரியும்! சனங்கள் ஒண்டும் கலகலப்பாயும் இல்லை. நிம்மதியாயும் இல்லை. அதுகளுக்கு ஆனவாகிலை தின்னுறதுக்கும் ஒண்டுமில்லை. அதுகளுக்கு கண்ணீரும், கவலையும் தான் பாதிச் சாப்பாடு! இந்தத் துன்பதுயரங்களை எல்லாம் மறக்காமல் இருக்கிறதுக்குத் தான்; தெங்கிலின்ரை அரணக்காறர் வாளும் வேலும் வைச்சுக் கொண்டு கோட்டை மதிலிலை உலாவிறாங்கள். எங்களுக்கு எந்த நேரமும் இதை ஞாவகப் படுத்தின மாதிரி .

பெத்தய்யா வீட்டு யன்னலிலை வெளிச்சமில்லை. ஆக்கள் குடியில்லாத வீடு கணக்கிலை வீடு இருட்டாய் இருந்துது. நாங்கள் வீட்டுக்கு வெளியாலை நிண்டம். பெத்தய்யா வீட்டு முடக்கிலை  காவலுக்கு நிண்டார். அவரின்ரை கையிலை ஒரு கொம்பு விளக்கு. நானும் அண்ணரும் பியாங்காவோடை மெள்ள மெள்ள  காட்டுறோசாப் பத்தைக்குள்ளை பூந்தம். இப்பிடிப் பத்தை பெத்தய்யாவின்ரை மத்தியாசு வளவைச் சுற்றி இருந்தது. அனக்கு காட்டுறோசாப்பூ பிடிச்சது. அதின்ரை வாசமும் பிடிச்சது. மூக்கு அடைக்கிற கடும் வாசமில்லை, அளவான வாசம். அப்ப என்ரை மனசிலை ஒரு நினைவு ஓடிச்சிது. இனி எப்பெண்டாலும் இந்தக் காட்டுறோசாப்பூ வாசம் மணக்கிற நேரத்திலை; இப்ப நானும், அண்ணரும் இப்பிடி காட்டுறோசாப் பத்தைக்குள்ளை ஊர்ந்து ஊர்ந்து கோட்டை மதிலுக்கு அருகிலை வந்ததும், என்ரை நெஞ்சு படக்கு படக்கு எண்டு இடிக்கிறதும் ஞாவகம் வரும். கோட்டை மதிலிலை தெங்கிலின்ரை அரணக்காறர் <அசுகை ஏதும் தெரியுதோ?> எண்டு  

கண்ணும் கருத்துமாய் காவல் நிண்டவங்கள். ஒருவேளை தங்கடை  கண்ணிலை சிங்கநெஞ்சன் தட்டுப் படக்கூடும் எண்டு எதிர்பார்த்து இருந்தவன்களோ?

அண்ணர் தன்ரை முகத்திலை கரிபூசி, ஒரு குல்லாயையும் இழுத்துக் கண்ணை மறைச்ச மாதிரி போட்டிருந்தார். அவரைப் பார்த்து  யோனத்தான் எண்டொருத்தர் சொல்ல மாட்டினம். எண்டாலும் ஒவ்வரு முறையும் மறைவிடத்தை விட்டு வெளியை வந்து நடமாடிறது உயிருக்கு ஆபத்தான வேலையெல்லே? அண்ணர் பெத்தய்யா வீட்டிலை, தான் ஒளிச்சிருக்கிற அந்த இரகசிய அறையைக் குடைவு எண்டு தான் சொன்னவர். அந்த ஊரிலை காட்டு முசல், பகல் நேரத்திலை ஒளிச்சிருக்கிற பொந்தைக் குடைவு எண்டுதான் சொன்னவையள். ஒரு, நூறாள் அண்ணரை இராப்போலாய்  தேடித் திரியிறாங்கள் எண்டு நான் அறிஞ்சதை அண்ணருக்குச் சொன்னநான். 

" நல்லாய்த் தேடட்டும்" எண்டார் அண்ணர். தானே தன்ரை கையாலை பியாங்காவை அனுப்பி வைக்க வேணும் எண்டு சொன்னவர். பியாங்கா பறந்து போகேக்குள்ளை ஆரின்ரை கண்ணிலையும் படாமல் பறந்தது எண்டது தனக்கு உறுதியாய் தெரிய வேணுமாம். 

கோட்டை மதிலிலை உலாவின அரணக்காறங்கள் அவனவனுக்குரிய  பகுதியைக் காவல் காத்தாங்கள். மத்தியாசு வளவின்ரை பின்பக்கம் இருந்த பகுதியிலை தடியன் ஒருத்தன் இடம் வலமாய் உலாத்தின சீர். அவன்ரை கண்ணிலை படாமல் இருக்கத் தெண்டிச்சம். பெத்தய்யா விளக்கை ஆட்டிச் சைகை காட்டிறது எண்டது பேச்சு. பெத்தய்யா சொன்னவர்,

"நான் விளக்கைப் பணிய வைச்சிருந்தன் எண்டால் நீங்கள் மூச்சு வெளியிலை விடப்படாது. அப்ப தடியன் தொடிக்கி உங்களை நல்லாய் நெருங்கி வந்திட்டான் எண்டது அருத்தம். விளக்கை உசத்திப் பிடிச்சால் அவன் அங்காலை மதில் திரும்பிற முடக்கிலை நிக்கிறான், அங்கை நிக்கிற மற்ற அரணக்காறனோடை  நிண்டு அலட்டிறான் எண்டு அருத்தம். அப்ப பார்த்து நீங்கள் பியாங்காவை பறக்க விடுங்கோ!" எண்டு.

நாங்களும் அப்பிடியே சைகை அடையாளம் பார்த்துப் பியாங்காவைப் பறக்க விட்டம். 

"பறந்து போட்டுவா! என்ரை பியாங்கா! பத்திரமாய்ப் போட்டுவா! நஞ்சியாலாவின்ரை நீலமலையைத் தாண்டி செர்ரிப்பள்ளத்துக்குப் போட்டுவா! பத்திரம்! யூச்சியின்ரை அம்புக்குப் பத்திரம்!" எண்டு அண்ணர் பிரியாவிடை சொன்னவர். அனக்கு ஒரு ஐமிச்சம்! பியாங்காவுக்கு மனிசரின்ரை கதை விளங்கியிருக்க வேணும். அண்ணரின்ரை கதையைக் கேட்டிட்டு பியாங்கா அவரைக் கவலைப்பட வேண்டாம் எண்டு சொல்லுமாப்போலை  தன்ரை சொண்டை அவரின்ரை சொக்கிலை வைச்சது. அதுக்குப் பிறகு தான்  பறந்து போச்சுது. அந்த அரையிருட்டு வானத்திலை பியாங்காவின்ரை வெள்ளை நிறம் பளிச்சிட்டது. மதிலுக்கு மேலாலை பியாங்கா பறக்கேக்கை தடியன் தொடுக்கியின்ரை கண்ணிலை பட்டிடுமோ எண்டு பயந்தன். ஆனால் அவன் காணேல்லை. மற்ற கூட்டாளி அரணக்காறனோடை கதையிலை ஆள் ஐக்கியம். அதினாலை  தடியன் தொடிக்கிக்கு ஒண்டும் கேக்கவுமில்லை, ஒண்டையும் அவன் காணவுமில்லை. 

பெத்தய்யா விளக்கைப் பணிய இறக்கவுமில்லை. பியாங்கா கண்ணிலை இருந்து மறைஞ்ச உடனை அண்ணரைப் பிடிச்சுக் கொற இழுவையாய் இழுத்தன். வலு சுறுக்கிலை அவரைக் குடைவுக்குள்ளை பத்திரமாய் கொண்டு போய் விட வேணும் எண்டு அந்தரப் பட்டன். ஆனால் அண்ணருக்கு எண்டால் எந்த ஒரு அந்தரமும் இல்லை, விருப்பமும் இல்லைப் போலை. அது, அளவான குளிர்ச்சியும், சுவாத்தியமான காத்தும் வீசின ஒரு நல்ல  மைம்மல் பொழுது. அனக்கு விளங்கினது தான்; அவருக்கு ஏன் விருப்பம் இல்லையெண்டு. பின்னை? மூச்சடைக்கிற மாதிரியான அந்த குடைவுக்குள்ளை  ஓடிப்போய் அடையிறதுக்கு அண்ணருக்கு விருப்பம் இருக்குமே? பூமிநச்சத்திரத்திலை வருத்தக்காறனாய் அடுப்படிக்குள்ளை அடைஞ்சு கிடந்த அனக்கேல்லோ மற்ற ஆக்களை விட இது கூடுதலாய் விளங்கும்! 


முழங்காலைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு  அண்ணர் புல்லிலை இருந்தபடி பணிய ஊருக்குள்ளை இருந்த வீடுகளிலை இருந்து வந்த விளக்கு வெளிச்சங்களைப் பார்த்து இரசிச்சுக் கொண்டிருந்தார். அமைதியாய் இருந்தவர். தன்ரை முதுகுக்குப் பின்னாலை உலாத்தின தெங்கிலின்ரை அரணக்காறன்களைப் பற்றி எதுவித் கவலையும் படாமல் இரவு முழுக்க அங்கையே இருக்கப் போறதெண்டு தீர்மானிச்சவரோ?

"ஏன் இதிலை இருக்கிறீர்?" எண்டு கேட்டன்.
"ஏனெண்டால் எனக்கு இப்பிடி இருக்கிறது விருப்பம். மைம்மலுக்கை இந்த ஊரைப் பார்க்க விருப்பம். குளிர்ச்சியான காத்து என்ரை முகத்தைத் தடவிறது விருப்பம். இளஞ்சிவப்பு நிறக் காட்டுறோசாப்பூ வாசம் மணக்கிறது விருப்பம். அது கோடைகாலம் கெதியாய் வருகுது எண்டதைச் சொல்லுது எல்லோ?" எண்டு சொன்னவர்.
"அனக்கும் இப்பிடியே இருக்கத்தான் விருப்பம்" எண்டன்.
"காட்டுறோசாப் பள்ளத்துச் சனத்துக்கும் இது தான் விருப்பம். இதை விடப் பெரிசாய் வேறை ஒண்டுக்கும் சனம் ஆசைப் படேல்லை. அப்பிடியிருக்க அவையளை அமைதியைச் சீவிக்க விடாமல் தெங்கில் எண்ட கொடியவன் ஏன் எல்லாத்தையும் அழிச்சு அட்டகாசம் பண்ணிறான்?" எண்டு சொல்லிக் கவலைப் பட்டார். அதுக்கு என்னத்தைப் பறையிறது எண்டு அனக்குப் பிடிபடேல்லை.
"சரி வா இனி உள்ளுக்கை போறது தான் நல்லது." எண்டு கூப்பிட்டார்.

எதுக்கும் முதல் தடியன் தொடிக்கி நிக்கிற இடத்து நிலைவரம் பற்றி அறிய வேணும். அதுக்குப் பெத்தய்யாவின்ரை திக்கிலை  பார்த்தம். இப்ப இருட்டிப் போச்சு. பெத்தய்யாவின்ரை உருவம் தெரியேல்லை. ஆனால் விளக்கு வெளிச்சம் மட்டும் தெரிஞ்சது. இனிப் பெத்தய்யாவுக்குக் கிட்ட ஓடுவம் எண்டு வெளிக்கிட, அந்த நேரம் எண்டு பார்த்து கொம்புவிளக்கு சடக் கெண்டு கீழை இறங்கினது. நாலுகால் பாய்ச்சலிலை குதிரையள் வாற சத்தம் கேட்டுது. வந்த குதிரையள் பெத்தய்யாவுக்குக் கிட்ட வர வேகத்தைக் குறைச்சு நிண்டிட்டிதுகள். அதிலை வந்தவங்கள் பெத்தய்யாவோடை கதைக்கிறது கேட்டுது. அண்ணர் என்னை முதுகில் பிடிச்சுத் தள்ளி,

"ஓடு! பெத்தய்யாவிட்டை ஓடு!" எண்டு கிசுகிசுத்து அவசரப் படுத்தினார். தானும் காட்டுறோசாப் பத்தைக்குள்ளை பதுங்கினார். நான் பயந்து நடுங்கினபடி விளக்கு வெளிச்சத்தை குறி வைச்சுப் போனன். 

"வெளியாலை நல்ல சுவாத்தியமாய்க் கிடக்கு. காத்து வாங்குவம் எண்டு வெளியை வந்து நிக்கிறன்." எண்டு பெத்தய்யா சொல்லிக் கேட்டுது.

"சுவாத்தியமாய் இருக்கோ?" எண்டு ஒரு அதட்டலான குரல் கேட்டுது.
"பொழுது பட்ட பிறகு வெளியிலை உலாத்தினால் மரண தண்டனை எண்டது உனக்குத் தெரியாதோ?"
"கீழ்ப்படிவு எண்டது என்னெண்டு தெரியாத பெத்தய்யாக் கிழவா! எங்கை உன்ரை பேரப்பெடி?" எண்டு கேட்டது இன்னொரு குரல்.
"இஞ்சை நிக்கிறான்." எண்டார் பெத்தய்யா, நான் இப்ப அவருக்குக் கிட்டவாப் போயிட்டன்.  அதிலை வந்த குதிரைக்காறங்கள் ஆரெண்டு அனக்குத் தெரிஞ்சிது. அது என்ரை நேற்றைய கூட்டாளிமார், கட்டாரும், வெட்டாரும் தான்!


"இண்டைக்கு இரவுக்குத் தாங்கள் பெரியவர் நீலமலைப் பக்கம் நிலா வெளிச்சத்தை அனுபவிக்கப் போகேல்லையாமோ?" எண்டு நக்கலாய்க் கேட்டான் வெட்டார். 

"அது சரி நுள்ளான் உன்ரை பேரைக் கேக்க மறந்து போச்சு. உன்ரை பேரென்ன?" எண்டும் கேட்டான்.
"என்னை எல்லாரும் சீனியப்பு எண்டு கூப்பிடுறவை." எண்டு துணிஞ்சு சொன்னன். என்ரை உண்மையான பேர் தெரிஞ்சது மூண்டு பேர். ஆரெண்டால் அண்ணர், பெத்தய்யா, நான். சோபியா அக்கைக்குக் கூடத் தெரியாது. யூச்சிப்போச்சிக்கும் தெரியாது.
"சீனியப்புவோ? சரி. சீனியப்பு நாங்கள் ஏன் இப்ப இஞ்சை வந்தனாங்கள் எண்டு நீ நினைக்கிறாய்?" எண்டு கட்டார் கேட்டான். அனக்கெண்டால் என்ரை கால் ரெண்டும் திடீரெண்டு இல்லாமல் போன மாதிரிப் பயம் வந்திச்சுது. வேறை என்னத்துக்கு? என்னைக் கொண்டுபோய் கத்துலாக் குகையிலை அடைக்கிறதுக்குத் தான்! வேறை எதை நான் நம்ப?

"பார்த்தியே? இரவு நேரங்களிலை தெங்கில் நயினாரின்ரை கட்டளைக்குக் கட்டுப்பட்டுச் சனங்களெல்லாம் நடக்கினமோ எண்டு கண்காணிக்கத் தான். உன்ரை பெத்தய்யாவுக்கு இதை விளங்கிக் கொள்ள ஏலாமல் கிடக்கு. நீயெண்டாலும் கொஞ்சம் விளங்கப் படுத்து.  பொழுது பட்ட பின்னாலை வீட்டுக்கு வெளியிலை வாறதை நீயும் உன்ரை பெத்தய்யாவும் நிப்பாட்டுங்கோ! இல்லையெண்டால் துன்பம்தான்!" எண்டு கட்டார் புத்தி சொன்னான்.

"ஒண்டு ஞாவகம் இருக்க வேணும்! நாங்கள் வாறபோற  நேரங்களிலை நீ இருக்க வேண்டிய இடத்திலை இல்லையெண்டு கண்டால்.... உன்ரை பெத்தய்யா அறளை பேர்ந்த கிழவன் சாகிறதும் ஒண்டுதான், இருக்கிறதும் ஒண்டுதான். ஆனால் நீ சின்னப்பொடியன். இன்னும் எம்மளவுக்கு வாழ வளர வேண்டிய பொடியன். முழு ஆம்பிளையாய் வளர்ந்து தெங்கில் நயினாரின்ரை படையிலை சேர்ந்து சேவை செய்ய வேணும். இல்லையோ?" எண்டு வெட்டார் பினாத்தினான்.

ஓமோம். தெங்கிலின்ரை அறுதல் படையிலை சேர வேணுமாமோ? அதிலும் காட்டிப் பேசாமல் செத்துப் போகலாம்! மனசிலை நினைச்சன் ஆனால் ஒண்டும் வெளியிலை சொல்லேல்லை. உவங்களுக்குக் கதை சொல்லிச் சீண்ட உது சந்தர்ப்பம் இல்லை. அண்ணரின்ரை நிலைமை தெந்தட்டிலை இருக்கு எண்டதை நினச்சு அனக்கு சீவன் போற பயமாய்க் கிடந்திச்சு. அவங்களை அங்கத்தையாலை கெதிப்பண்ணிப் போக்காட்ட நினைச்சு, 

"ஓம். நீங்கள் சொன்னபடி செய்யிறன்." எண்டு சொன்னன். 
"நல்லது. நாளைக்குக் காலைமை பெருந்தோணித்துறைக்கு எல்லாரும் வரவேணும். காட்டுறோசாப் பள்ளத்தின்ரை காவலர் தெங்கில் நயினார் பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம நதியிலை தன்னுடைய தங்கப் படகிலை படை பரிவாரங்களோடை பவனி வந்து பெருந்தோணித்துறையிலை இறங்குகிறார்." எண்டு ஒரு விதமான செட்டுக்  கதை கதைச்சான்.  

போக வெளிக்கிட்டவன் ஒருக்கால் குதிரையை நிப்பாட்டி,

"இதை ஒருக்கால் கேள் கிழடா!" எண்டு பெத்தய்யாவைப் பார்த்துக் கத்தினான். ஒருகால் வீட்டுக்கையும், மறுகால் வெளியாலையுமாய் நிண்டார் பெத்தய்யா. 
"பொன்னிற தலைமயிரும், நீலக்கண்ணுமாய் நல்ல வடிவான ஒரு கடுக்கண்ட வயசுப் பெடியன் ஒருத்தன் சிங்கநெஞ்சன் எண்டு பேர்....தெரியுமோ அவனை? எங்கினையும் கண்டநீயோ?" எண்டு வெட்டார் கேட்டான். நான் பெத்தய்யாவின்ரை கையைப் பிடிச்சுக் கொண்டு நிண்டனான். அவரின்ரை நடுக்கம் கையிலை தெரிஞ்சது. ஆனால் வலு அமைதியாய்,
"சாய். அப்பிடி ஒரு சிங்கநெஞ்சனையும் நான் கண்டதுமில்லை , கேட்டதுமில்லை."  எண்டு சொன்னவர்.
" கண்டதில்லையோ? சரி! அப்பிடி ஒருத்தனைக் காணிற நேரம் , அவனை ஒளிச்சு மறைச்சு வைக்கிற ஆளுக்கு என்ன தண்டனை எண்டது ஞாவகம் இருக்க வேணும். மரணதண்டனை! உனக்குத் தெரியுந்தானே?"எண்டு கட்டார் சொல்லிப் போட்டுப் போயிட்டான்.

" இஞ்சை இருந்தால் மரணதண்டனை, அங்கை அரங்கினால் மரணதண்டனை. உதைத் தவிர வேறை எண்ணம், நினைவு எதுகுமே இவங்கடை மண்டைக்குள்ளை இல்லை." எண்டு பெத்தய்யா புறுபுறுத்தார். குதிரைக் குளம்படிச் சத்தம் இப்ப துப்பரவாய்க் கேட்கேல்லை. பெத்தய்யா கொம்பு விளக்கைத் தூக்கிப் பிடிச்சார். அண்ணர் அடுத்த நொடியிலை வந்திட்டார். அவரின்ரை முகத்திலை, கையிலை எல்லாம் காட்டுறோசா முள்ளுக் கிழிச்சுப் போட்டுது. கடவுளே எண்டு பாரதூரமானதாய் ஒண்டுமில்லை. அண்ணரின்ரை முகத்திலை பியாங்காவைப் பத்திரமாய் அனுப்பி வைச்ச திறுத்தி இருந்திச்சிது. 


முதல் வேலையாய் குதிரைமாலுக்குப் போய் குதிரையளைத் தீன் குடுத்துப் பராமரிச்சம். வியாழரையும் வெள்ளியாரையும் ஒண்டாய்க் கண்டது  மனசுக்குப் பெரிய ஆறுதலாய் இருந்தது. ரெண்டும் ஒண்டோடை ஒண்டு தலையை நெருக்கமாய் வைச்சபடி நிண்டதுகள். தாங்கள் என்னென்ன சம்பவங்களுக்கை மாட்டுப் பட்டது , மீண்டது எண்டு தங்கடை மொழியிலை வளமை பறைஞ்சதாக்கும்! நான் அதுகளுக்குக் கொஞ்சம் கொள்ளுக் குடுத்தன். அண்ணர் என்னை முதலிலை தடுத்தவர், பேந்து 

"சரி காரியமில்லை. இந்த ஒரு தரம் மட்டும் குடு. இங்கினை காட்டுறோசாப் பள்ளத்திலை சனங்கள் குதிரைக்குக் கொள்ளுக் குடுக்கிறதை கைவிட்டிட்டிதுகள். புல்லு மட்டுந்தான் குடுக்கிறது. கொள்ளெல்லாம் மனிசருக்கே அருந்தலான சாப்பாடாய்ப் போச்சுது." எண்டார்.


கொஞ்சத்தாலை பெத்தய்யா வீட்டு அடுப்படியிலை இருந்து மூண்டு பெரும் இராச்சாப்பாடு சாப்பிடத் தொடங்கினம். குடைவின்ரை தட்டி திறந்த படி  கிடந்திது. ஏதும் குழப்பம் எண்டால் சட்டெண்டு அண்ணர் ஓடி ஒழிக்க வேணுமெல்லோ? பெத்தய்யா ஒரு சருவச்சட்டியிலை கோதுமைக் கஞ்சி கொண்டு வந்து சாப்பாட்டு மேசையிலை வைச்சார். 
"இண்டைக்கு இதுதான் சாப்பிட இருக்குது. கூடுதல் பாகம் தண்ணிதான், எண்டாலும் சூடாயிருக்குது." எண்டு சாதுவான கவலையோடை சொன்னவர்.  அப்பத் தான் ஞாவகம் வந்தாப்போலை நான் கொண்டு வந்த அசம்பி எங்கை எண்டு பார்த்தன். அதுக்குள்ளை என்னென்னெல்லாம் இருக்கு எண்டது ஞாவகம் வந்திச்சுது. நான் அசம்பியைத் தேடி எடுத்து சோபியா அக்கை தந்த பாண், கூபர் அய்யா தந்த வத்தல் இறைச்சி எல்லாத்தையும் வெளியாலை எடுத்தன். அதுகளைக் கண்ட அவாவிலை ரெண்டு பேரின்ரை நாலு கண்ணும் பளிச்சிட்டுது. நான் கொண்டு வந்தது அவையளுக்கு பெருநாள் சாப்பாடு போலை இருந்தது. அனக்கு அதையிட்டு நல்ல மனத் திறுத்தி. ஒண்டுமே பறையாமல் பெத்தய்யாவும் அண்ணரும் சாப்பிட்டினம் சாப்பிட்டினம் சாப்பிட்டபடியே இருந்திச்சினம். பாவம் எத்தினை நாளுக்கு முன்னம் நேர்சீராய் சாப்பிட்டவையோ? கனநேரம் ஒரு கதைபேச்சும் இல்லை. கடைசியிலை அண்ணர்,
"சாப்பிட்டு வயிறு மெத்திறது எண்டதே கிட்டத்தட்ட எனக்கு மறந்து போச்சுது." எண்டு சொன்னார்.

காட்டுறோசாப் பள்ளத்திலை இருக்கிறதை இட்டு அனக்கு வரவரக் கூடுதல் திறுத்தியாய் இருக்குது. சரியான காரியம்தான் செய்திருக்கிறன் எண்டு மனசுக்கு ஆறுதலாய் இருந்திது. குதிரைக்காறன் வளவிலை இருந்து வெளிக்கிட்ட நேரந்தொட்டு  பெத்தய்யா வீடு வந்தது வரை நடந்த நடப்பு எல்லாத்தையும் ஒழுங்காய் அண்ணருக்குச் சொன்னன். கட்டாரும், வெட்டாரும் எப்பிடி என்னைக் கூட்டி வந்து பெத்தய்யா வீட்டிலை விட்டவங்கள் எண்டதை எல்லாம் சொன்னன். அண்ணர் திரும்பத் திரும்ப கட்டார், வெட்டார் பற்றின கட்டத்தைப் பற்றித் தான் கேட்டுக்கேட்டுச் சிரிச்சார். நானும் அண்ணர் சிரிப்பார் எண்டு நினைச்சநான் எல்லே? பெத்தய்யாவும் சிரிச்சவர்.


"உவங்கள் ஒண்டும் பெரிய புத்திசாலியள் இல்லை. ஆனால் தாங்கள் பெரிய அறிவாளியள் எண்டு தங்களுக்கை ஒரு நினைப்பு." எண்டு பெத்தய்யா சொல்லிச் சிரிச்சார்.

"நானே அவங்களை ஏமாத்திப் போட்டனே! என்னைப் பற்றின முழு விவரமும் தெரிஞ்சிருப்பான்கள் எண்டால்? தாங்கள் தேடித் பிடிக்க வேண்டிய சிங்கநெஞ்சனின்ரை தம்பிக்காறன், காட்டுறோசாப் பள்ளத்துக்குள்ளை நுழையிறதுக்கு தாங்களே உதவி ஒத்தாசை செய்திருக்கிறாங்கள்." எண்டு நானும் சொல்லிச் சிரிச்சநான்.

அப்ப எனக்கு ஒரு கேள்வி மனசுக்குள்ளை வந்தது. அதைப் பற்றி இதுவரை நான் யோசிச்சே பார்த்ததில்லை.

"அது கிடக்க, அண்ணர் எப்பிடிக் காட்டுறோசாப் பள்ளத்துக்கை உள்ளிட்டநீர்?" எண்டு ஆவலாய்க் கேட்டன். அண்ணர் சிரிக்க வெளிக்கிட்டார். 
"பாய்ஞ்சு வந்து உள்ளிட்டநான்." எண்டார்.
"வியாழரோடை பாய்ஞ்சநீரே?"
"ஓம், பின்னை? என்னிட்டை வேறை ஒரு குதிரையும் இல்லையே!"
நான் அண்ணர் வியாழரோடை தடையளை தாண்டினதெல்லாம் முன்னை பார்த்திருக்கிறன் தான். ஆனால் உந்த கோட்டை மதிலை எப்பிடி அண்ணரையும் காவினபடி வியாழர் பாய்ஞ்சு தாண்டி வந்து இருக்கும்? நம்பிறது கயிட்டமான காரியம்.
"நாங்கள் உள்ளிட்ட நேரம் மதில் முழுசாய்க் கட்டி முடிஞ்ச பாடில்லை. ஒரு பக்கம் கட்டின குறையாய்க் கிடந்தது. அந்த இடத்தாலை தான் பாய்ஞ்சு உள்ளிட்டநாங்கள். எண்டாலும் ஓரளவுக்கு உசரம். வியாழர் கெட்டிக்காறன் அரும்பொட்டிலை சமாளிச்சுப் போட்டுது."எண்டு விளப்பம் சொன்னார்.


"அது சரி அப்ப அரணக்காறங்கள் ஒருத்தரும் காணேல்லையோ?"

அண்ணர் கையிலை வைச்சிருந்த பாணிலை ஒரு கடி கடிச்ச படி திரும்பச் சிரிச்சார்.
" ஒரு கும்பல் அரணக்காறங்கள் எங்களைக் கலைக்க வெளிக்கிட்டான்கள். வியாழரின்ரை பின்பக்கம் அம்பொண்டு சாதுவாய்த் தைச்சுப் போட்டுது. ஆனால் நாங்கள் தப்பீட்டம். ஒரு நல்ல இரக்க குணமுள்ள ஒரு கமக்காறன் என்னையும், வியாழரையும் தன்னுடைய கால்நடைக் கொட்டாரத்துக்குள்ளை வைக்கோல் கத்தையளுக்குப் பின்னாலை ஒளிச்சு வைச்சவர். இருட்டின பிறகு பெத்தய்யா வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டவர். இப்ப உனக்கு உள்ள கதை எல்லாம் தெரியும்." எண்டு சொல்லி முடிச்சார்.
"உள்ளபடியான முழுக்கதை இன்னும் இருக்கு, முடியேல்லை. உனக்குத் தெரியாது சீனியப்பு!, இங்கினை ஊருக்குள்ளை சனங்கள் யோனத்தானையும், குதிரையையும், அந்த மயிர்க்கூச்செறிய வைக்கிற குதிரைப் பாய்ச்சலையும் பற்றி பாட்டுகள் இயற்றிப் பாடுதுகள்.  தெங்கில் கொடுங்கோலன், காட்டுறோசாப் பள்ளத்தைப் பிடிச்சு எங்களை எல்லாம் அடிமைப் படுத்தின பிறகு நடந்த ஒரேயொரு நன்மையான காரியம் உது மட்டுந்தான். 
யோனத்தான்! அதிட்ட யோகத்தான்!
மானத்தான்! விடுதலை காணத்தான்!
வானத்தால் வந்த தேவன்தான்!
வானத்தில் பரி ஒன்று பறக்குமோ?
வானத்தில் அவன் பரி பறக்குமே!
இப்பிடி யோனத்தானைப் பற்றி எல்லாரும் பாடுகினம்.நானும் யோனத்தானின்ரை வரத்து எங்களுக்கு ஒரு விடிவைக் கொண்டு வரும் எண்டு நம்பிறன். இதுதான் முழு நடப்பும் சீனியப்பு!"எண்டு அண்ணரைப் பற்றிப் பெருமையாய்ச் சொன்னார் பெத்தய்யா. 

"இன்னும் ஒரு இரகசியம் இருக்கு சீனியப்பு. அதைத் தன்ரை வாயாலை பெத்தய்யா சொல்ல மாட்டார். தற்பெருமை அடிக்கிற ஆள் அவரில்லை. ஒர்வார் கத்துலாக் குகையிலை மறியலிலை  இருக்க  காட்டுறோசாப் பள்ளத்திலை ஆராம் விடுதலை இயக்கத்தை இரகசியமாய்க் கொண்டு நடத்திறதாம்?  வேறை ஆர்? பெத்தய்யா தான்!  உண்மையிலையே பெத்தய்யாதான் விடுதலை காண வந்த தேவன் கண்டியோ!" எண்டு அண்ணர் தன்ரை பங்குக்குப் பெத்தய்யாவைப் பற்றிச் சொன்னார். 
"சாய்!சாய்!. என்னைப் போய்ப் புழுகிக் கொண்டு. அவன் வெட்டார் சொன்ன கணக்கிலை நான் கிழவன்  சாகிறதும், இருக்கிறதும் ஒண்டுதான்." எண்டு பெத்தய்யா சொன்னார்.
"இப்பிடிச் சொல்லாதையுங்கோ பெத்தய்யா! நீங்கள் இப்ப அனக்குப் பெத்தய்யாவாய் ஆகிவிட்டியள் எல்லோ? அனக்காக நீங்கள் கனகாலம் சீவிக்க வேணும்" எண்டு சொன்னன்.
"சரி சரி! அதுக்காக எண்டாலும் உசிரோடை இருக்கிறன். ஆனால் போராட்டத்தை தலைமை தாங்கி  நடத்திறதுக்கு எனக்கு வயசு போட்டுது. வேறை ஆரும் இளந்தாரியள் தான் முன்னுக்கு வந்து பொறுப்பெடுக்க வேணும். " பெத்தய்யாவிட்டை இருந்து ஒரு  பெருமூச்சு பறிஞ்சது.
"ஒர்வார் மட்டும் இஞ்சை இப்ப இருந்திருந்தால்...இப்ப அவர் கத்துலாக் குகையிலை அடைபட்டுக் கிடக்கிறார். கத்துலாவுக்கு எண்டைக்கு அவரை பலி குடுப்பாங்களோ?" எண்டு அழுவாரைப் போலை புலம்பினார் பெத்தய்யா. 

அதைக் கேட்ட அண்ணரின்ரை முகம் வெளிறிப் போச்சுது. 

"அதையும் ஒருக்கால் பார்ப்பம். இப்ப நாங்கள் நடவடிக்கையிலை இறங்க வேணும். உனக்கு ஒரு சங்கதி தெரியாது சீனியப்பு. இந்த வீட்டிலை இராவிலை சாமம் சாமமாய் நாங்கள் வேலை செய்யிறது, பகல் நேரம் முழுக்க நித்திரை கொள்ளுறது. வா எப்பிடியெண்டு உனக்குக் காட்டிறன்." அண்ணர் என்னைக் கூப்பிட்டார். தட்டிக் கதவுக்குள்ளாலை தவண்டு குடைவுக்குள்ளை அதுதான் அந்த இரகசிய அறைக்குள்ளை பூந்தார். நானும் பின்னாலை போனன். அண்ணர் தான் படுத்திருந்த மெத்தையைச் சுறுட்டி ஒரு பக்கம் வைச்சார். தளத்திலை ரெண்டு பலகை, தொட்டவுடனை கையோடை வந்திச்சுது. அதுகளை அரக்கி வைச்சார். எட! உள்ளுக்கை இருட்டாய் கிடங்கு போலை கிடக்கே! 
"இங்கைதான் என்ரை நிலத்தடிச் சுரங்கப் பாதை தொடங்குது." எண்டு அண்ணர் விபரிச்சார். 
"எங்கை போய் முடியிது?" ஓரளவுக்கு என்னாலை யோசிச்சுப் பிடிக்க முடிஞ்சாலும் கேட்டன்.                     
"கோட்டை மதிலுக்கு வெளியாலை காட்டுக்குள்ளை தான் முடிய வேணும். இன்னும் ரெண்டு இராப்பொழுது முழு மூச்சாய் வேலை செய்தால் தேவையான அளவு தூரம் தோண்டி முடிச்சிடலாம். அவசரப் பட்டு இடை நடுவிலை தடியன் தொடுக்கியின்ரை மூக்குக்கு நேரை சரி கணக்காய் போய் வெளியாலை எழும்பி நிக்கக் கூடாது." எண்டு சொல்லிவிட்டு சுரங்கத்துக்குள்ளை தவண்டு போனார்.

உள்ளை போன அண்ணர் வருமட்டும் நான் கனநேரமாய்க் 

காத்திருந்தன். ஒரு பெரிய கூடை நிறம்ப மண்ணோடை வந்தார். மேலை நிண்ட என்னை, அந்தக்கூடை மண்ணைத் தூக்கிப் பெத்தய்யாட்டை குடுக்கச் சொன்னார்.  தட்டியைச் சுறண்டிப் பெத்தய்யாவைக் கூப்பிட்டு மண் கூடையைக் குடுத்தன்.
"வாய்ச்சுப் போச்சு.என்ரை தோட்டத்துக்கு இன்னும் நல்ல மண் கிடைக்குது. என்னட்டை மட்டும்  கடலை, அவரை விதை இருந்து நானும் அதை நட்டு வளர்த்தன் எண்டால் .... பசி பட்டினி எண்டது காட்டுறோசாப் பள்ளத்திலை இராது " எண்டார் பெத்தய்யா.
"ஓமோம்  நல்லாய் நம்பிக் கொண்டிருங்கோ! உங்கடை தோட்டத்திலை பத்துப் பறை கடலை விளைஞ்சால் ஒன்பது பறை கடலையை அந்த நாசமாய்ப் போற தெங்கில் பிடுங்கிப் போடுவான் எண்டது மறந்து போச்சோ?" எண்டு அண்ணர் கேட்டார். பெத்தய்யாவுக்குக் காத்து இறங்கிப் போச்சுது. பெரிய பெருமூச்சோடை 
"ம்......என்ன செய்வம்? தரித்திரியம் பிடிச்ச தெங்கில் இருக்கிற வரை காட்டுறோசாப் பள்ளத்து சனத்துக்குப் பசியும் பட்டினியும் தான் எண்ட எழுத்தாய்ப் போச்சே."எண்டு பெத்தய்யா கவலைப் பட்டார்.

இப்ப நான் கதவடியிலை காவலுக்கு நிக்க, பெத்தய்யா மண் கூடையைக் கொண்டு போய் தோட்டத்திலை கொட்டிப் போட்டு வரவேணும். இருட்டுக்கை எந்தொரு சின்ன அசுகை தெரிஞ்சாலும் ஆபத்தானது.  அப்பிடி ஏதும் தெரிஞ்சால் நான் உடனடியாய் சீக்காய் அடிச்சு எச்சரிக்க வேணும் எண்டு அண்ணர் சொன்னவர். அனக்கும், அண்ணருக்கும் தெரிஞ்ச மெட்டு ஒண்டு. அது அனக்கு சீக்காய் அடிக்கத் தெரியும். அண்ணர்தான் பழக்கித் தந்தவர். அப்ப நாங்கள் பூமி நச்சத்திரத்திலை அம்மா வீட்டிலை இருந்தநாங்கள். படுக்கையிலை நித்திரை வர முன்னம் அடிக்கிறநாங்கள். அண்ணர் திரும்பச் சுரங்கத்துக்குள்ளை போய்விட்டார். பெத்தய்யா அலமாரியை அரக்கி தட்டிக் கதவை மறைச்சு விட்டார். 

"ஒண்டு மட்டும் வலு கவனம் சீனியப்பு! யோனத்தான் குடைவுக்குள்ளை இருக்கிற நேரமெல்லாம் அலமாரியை அரக்கி தட்டிக் கதவை மறைச்சு வைக்காமல் ஒருக்காலும் இருந்திடப் படாது. தெங்கில் விழுவான் பிடிச்சு வைச்சிருக்கிற நாட்டிலை இருக்கிற நீ  இதை உன்ரை  மூளையிலை உறைக்கிற மாதிரி ஞாவகம் வைச்சிருக்க வேணும்." எண்டு பத்திரம் சொன்னார்.
"பெத்தய்யாவாணை ஒருக்காலும் மறக்க மாட்டன்."எண்டு சத்தியம் பண்ணினன். அடுப்படியிலை அரை இருட்டாய் இருந்தது. ஒரு சின்ன விளக்கு மட்டும் அடுப்படி மேசையிலை எரிஞ்சது. அதையும் ஊதி அணைச்சார் பெத்தய்யா.
"இராநேரம் எண்டது இருட்டாயே காட்டுறோசாப் பள்ளத்திலை இருக்கட்டும். இரவுக்கும் இப்ப கனக்கக் கண் முளைச்சிட்டுது.  எல்லாத்தையும் வேவு பார்க்க வேணும் எண்டு அலையுது." எண்டார் பெத்தய்யா.

மண் கூடையோடை இருட்டுக்குள்ளை போனார். என்னெண்டுதான் ஒண்டிலையும் தடக்குப் படாமல் போய்வாறாரோ எண்டு திகைப்பாய் இருந்துது.நான் கதவடியிலை காவலுக்கு நிண்டபடி. கும்மிருட்டுத் தான் தேவை எண்டு பெத்தய்யா நினைச்சது பிழையில்லை. வீட்டுக்குள்ளை இருட்டு, வெளியாலை இருட்டு, காட்டுறோசாப் பள்ளம் முழுக்க இருட்டு,  வானம் கூட இருட்டாய்த் தான் இருந்தது. ஒரு வெள்ளியும் இல்லை, நிலாவுமில்லை. கரியை அரைச்சுப் பூசி விட்ட மாதிரி இருட்டு இருந்துது. பெத்தய்யா சொன்னது போலை இரவுக்குக் கனக்கக் கண் முளைச்சிருந்தாலும், இப்பிடியான கரியிருட்டிலை ஒண்டையும் வேவு பார்க்கேலாது எண்டது ஒரு ஆறுதல்.


அந்தக் கதவடியிலை தனிச்சு நிக்கிறது கவலையும், தனிமையுமாய் ஏன் பயமாயும் கூட இருந்தது. ஒவ்வரு நிமிசமும் போகப்போக அந்தரம் அந்தரமாய் இருந்தது. பெத்தய்யா திரும்பி வர மாட்டாரோ? இருட்டுக்குள்ளை பெத்தய்யா போன திக்கை உத்து உத்துப் பார்த்தன். இப்ப இருட்டாய் இல்லையோ? கவனிச்சுப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சமானது போலை கிடந்தது. அல்லாட்டில் என்ரை கண் இருட்டுக்குப் பழகி விட்டுதோ? அப்ப நான் கவனிச்சன். நிலா கருமுகிலைக் கிழிச்சுக் கொண்டு மெள்ளத் தலை காட்டினது. ஐயோ! இந்த நேரம் பார்த்து நிலவெறிச்சுது எண்டால் நிலைமை படு  மோசமாய்ப் போடுமே! பெத்தய்யா கெதியிலை வந்திட வேணும் எண்டு கடவுளை மண்டாடினன். நல்லகாலம் கொஞ்சம் இருள் அங்கினை இங்கினை இருக்கு. ஒரு அவசர ஆபத்துக்கு ஓடி ஒளிக்கலாம் .  ஆனால் கொஞ்சம் பெத்தய்யா பிந்திப் போட்டார். நிலா பளீர் எண்டு மிச்சம் வெளிச்சமாய் எறிச்சது. வெள்ளிப் பாலாறு ஒண்டு காட்டுறோசாப் பள்ளத்திலை பாய்ஞ்ச மாதிரி கிடந்திது. 


அந்த நிலா வெளிச்சத்திலை நான் பெத்தய்யாவைக் கண்டன். தூரத்திலை மண்ணைக் கொட்டிப்போட்டு வெறுங் கூடையோடை  காட்டுறோசாப் பத்தையளுக்குள்ளாலை வந்து கொண்டிருந்தார். நான் அவசர அவசரமாய் சுற்றவரப் பார்த்தன். ஐயோ! அப்ப அவன் தடியன் தொடிக்கியைக் கண்டன். கோட்டை மதிலிலை இருந்து கயித்து ஏணியிலை அனக்கு முதுகு காட்டினபடி கீழை இறங்கிக் கொண்டிருந்தான். பயம் தொட்டிட்டிது எண்டால் ஒருத்தர் சீராய் ஒரு சீக்காய் அடிக்க முடியுமே? ஒருமாதிரி மெட்டுப் பிடிச்சு சீக்காய் அடிச்சன். பெத்தய்யா ஒரு பல்லி ஓடி ஒளிச்ச மாதிரிப் பத்தையுக்கை  பதுங்கினார். தடியன் தொடிக்கி அனக்குக் கிட்ட வந்தான். 

"என்னத்துக்கு சீக்கை அடிக்கிறாய்?" எண்டு உறுமினான்.
"அது...வந்து... இண்டைக்குத்தான் முதல் முறையாய்...சீக்காய் அடிக்கப் பழகினநான். அனக்கு முந்திச் சீக்காய் அடிக்க தெரியாமல் இருந்தது. இப்ப அனக்கு நல்லாய் சீக்காய் அடிக்க வருது....கேட்க விருப்பமே?" எண்டு ஒரு மாதிரி உளறி வைச்சன்.
"பொத்து வாய். மூச்சுக் காட்டப் படாது. சீக்காய் அடிக்கிறதுக்குத் தடை இருக்கோ இல்லையோ தெரியேல்லை. தடை இருக்கும் எண்டுதான் நினைக்கிறன். ஏனெண்டால் தெங்கில் நயினாருக்கு உதெல்லாம் பிடிக்காது. அது சரி ஏன்?  கதவு சாத்தி வைக்க வேணும் எண்டு உனக்குத் தெரியாதோ?" எண்டு என்னை அதட்டினான்.
"தெங்கிலுக்கு கதவு திறந்த படி இருக்கிறது பிடிக்காதோ?" எண்டு சீண்டிக் கேட்டன். என்ரை விசார்த்தனமான துணிச்சலை இப்ப நினைக்க அனக்கே திகைப்பாய் கிடக்கு. 
"புழுக்கையா! முதலிலை மட்டு மரியாதையாய்க் கதைக்கப் பழகு. தெங்கில் நயினார் எண்டு சொல்ல வேணும். தெங்கில் எண்டு மட்டு மரியாதை இல்லாமல் நீ கூப்பிடிறதுக்கு அவரென்ன உன்ரை வீட்டு வேலைக்காறனே?" எண்டு சீறினான்.
"அது கிடக்கட்டும். நான் சொல்லிறபடி நீ இப்பசெய்ய வேணும். எனக்கு இப்ப ஒரு பெரிய கிண்ணி நிறையத் தண்ணி குடிக்க வேணும். கோட்டை மதிலிலை காவலுக்கு நிண்டு நிண்டு ஒரு மனிசன் தாகத்திலை தவிக்க வேண்டிக் கிடக்கு."எண்டு கட்டளை இட்டான்.
எக்கணம் இவன் வீட்டுக்குள்ளை வந்தான் எண்டால், பெத்தய்யா வீட்டிலை இல்லை எண்டதைக் கண்டுபிடிச்சிடுவான். பேந்தென்ன? கந்தறுந்தவார் சாமத்திலை வெளியிலை நடமாடினது எண்டு சொல்லி  பெத்தய்யாவைக் கொலை செய்து போடுவாங்கள்.

" இதிலை ஒரு சொட்டு நேரம் நில்லுங்கோ. கொண்டு வாறன்." எண்டநான். அந்தக் குறுடு தடவிற இருட்டிலை அடுப்படிக்குள்ளை வதவத எண்டு ஒரு மாதிரி ஒண்டிலையும் தடக்குப் படாமல் ஓடிப்போய் கிண்ணியிலை தண்ணியை வார்த்தன். தண்ணிக் கிண்ணியை  எடுத்துக் கொண்டு திரும்பினன்.  அனக்குத் திக் கெண்டு போச்சுது. அந்த அறுவான் அந்த இருட்டிலை என்ரை முதுகுக்குப் பின்னாலை நிக்கிறான்.

"விளக்கைக் கொளுத்து. இப்பிடியொரு எலிப்பொந்து உள்ளுக்கை எப்பிடி இருக்கு எண்டு பார்க்க வேணும்." எண்டான். அனக்குக் கையெல்லாம் உதறப் பிடிச்சிது. கை நடுங்க நடுங்க ஒரு மாதிரி விளக்கைக் கொளுத்தினன். தண்ணியை வாங்கி மடமட வெண்டு குடிச்சான். இன்னுமொருக்கால் வாங்கிக் குடிச்சுப் போட்டுக் கிண்ணியை கீழை விட்டெறிஞ்சான். பேந்து ஐமிச்சத்தொடை தன்ரை சின்னப் பண்டியின்ரை கண்ணாலை சுற்றவரப் பார்த்தான். இந்தா இப்ப கேட்கப் போறானே எண்டு நினைக்க முன்னம் கேட்டான்.
"இந்த வீட்டிலை இருக்கிற அந்த மத்தியாசுக் கிழடன் எங்கை போட்டான்?"

நான் மூச்சுக் காட்டேல்லை. என்னத்தைப் பறையிறது எண்டு தெரியேல்லை.

"கேட்கிறது காதிலை விழேல்லையோ? எங்கை மத்தியாசு?" திரும்பவும் கேட்டான். 
"பெத்தய்யா நித்திரை."  ஏதாவது நானும் சொல்லத் தானே வேணும்.
"எங்கை படுத்திருக்கிறான்?"
அடுப்படிக்குப் பக்கத்திலை ஒரு சின்ன அறை. அதுக்குள்ளை பெத்தய்யாவின்ரை கட்டில். ஆனால் அனக்குத் தெரியும் பெத்தய்யா கட்டிலிலை இல்லையெண்டு! இருந்தாலும் என்னையறியாமல் "அங்கை" எண்டு அறைக்கதவைச் சுட்டிக் காட்டினன். பயத்திலை குரல் கீச்சிட்டிது. அந்தக் கீச்சுக் குரலைக் கேட்க அனக்கே சரியான கேவலமாய் இருந்தது. தடியன் தொடிக்கி நக்கல் சிரிப்பொண்டு சிரிச்சான்.
"உனக்குப் பிடிபடாமல் பொய் சொல்ல தெரியேல்லை. பொறு பொறு  உன்ரை பொய்யும் மெய்யும் இப்ப பிடிபடும்."
தான் ஏதோ சாதனை செய்த மாதிரி அவனுக்கொரு கிளுகிளுப்பு. நான் பொய் சொன்னதையும், பெத்தய்யா வீட்டிலை இல்லாததையும்  தான்கண்டு பிடிச்சது எண்டு காட்டிக் குடுக்க; பெத்தய்யாவுக்கு மரணதண்டனையும், அனக்கு அடிமைச்சேவகமும், தனக்குப் பதவி உயர்வும் கிடைக்கும் எண்டு நினைச்சிருப்பானோ? 


"விளக்கைத் தா!" எண்டு கேட்டு வாங்கினான்.  எல்லாத்தையும் போட்டது போட்ட படி விட்டிட்டுப் பறந்தோடிப் போய் பெத்தய்யாவையும் ஓடி உயிர் தப்பச் சொல்ல வேணும் எண்டு நினச்சன். ஆனால் பிந்திப் போச்சுது. பயத்திலை கால் ரெண்டும் ஆணி அடிச்ச மாதிரி நிலைகுத்திப் போச்சுது. வயித்தைப் பிரட்டினது. தடியன் தொடிக்கிக்கு என்னைப் பார்க்கப் பார்க்க சேட்டையாய் இருந்திச்சுது. அவனுக்கு ஒரு அவசரமுமில்லை. என்ரை அவத்தையைப் பார்த்து இரசிச்ச படி நிண்டான். அனக்கு இன்னும் இன்னும் பயம் வரட்டுக்கும் எண்டு நேரத்தை இழுத்தடிச்சான். ஒரு கணக்கிலை பார்த்து இரசிச்சது காணும் எண்டதன் மேலை என்னைப் பார்த்து,

" வாடி ராசன்! எனக்கு அந்த மத்தியாசுக் கிழடன் எங்கை படுத்து நித்திரை கொள்ளிறான் எண்டு  ஒருக்கால் காட்டடி ராசன்!" எண்டு நக்கல் நளினமாய்ச் சொன்னான். அறைக்கதவை உதைஞ்சு திறந்து, என்னைக் கழுத்தைப் பிடிச்சு உள்ளை தள்ளி விட்டான். நானும் கதவு நிலையிலை தடக்குப் பட்டு போய் விழுந்தன். என்னை இழுத்துத் தூக்கி விளக்கைப் பிடிச்சு முகத்தைப் பார்த்தான். 
"வாய் திறந்தால் பொய் பொய்யாய் சொல்லிற நரிக்குட்டி! காட்டடா கிழடனை!" எண்டு வசை பாடினபடி விளக்கை உசத்திக் கட்டில் இருந்த இருட்டு மூலையை கண்ணை இடுக்கிப் பார்த்தான். 

இந்த அமளியுக்குள்ளை பெத்தய்யாவின்ரை கொதி கிளம்பின குரல் அதட்டிக் கொண்டு வந்தது,

"ஆரடா அவன் அறுவான்? மனிசரை சாமம் ஏமத்திலை போய்  நித்திரைப் பாயிலையும் நிம்மதியில்லாமல் போட்டு வதைக்கிறது?" எண்டு! அனக்கு நான் காணுறது கனாவோ எண்டு ஐமிச்சமாய் கிடந்தது. பெத்தய்யாவை திகைச்சுப் போய்ப் பார்த்தன். பெத்தய்யா என்னைப் பார்த்து இரகசியமாய் கண்ணடிச்சார். அப்பத்தான் அனக்கு நெஞ்சுக்கை தண்ணி வந்திச்சிது. அவர் படுக்க போற நேரம் போடுற சட்டையைப் போட்டிருந்தார். நித்திரையாலை எழும்பி வந்தவர் போலை தலைமயிரும் குழம்பிக் கிடந்தது. யன்னல் சாதுவாய்த் திறந்து கிடந்தது. யன்னலுக்கு வெளிப் பக்கமாய் கூடையும் கண்ணிலை பட்டிது. மெய் மெய்யாய் பெத்தய்யா பல்லியின்ரை இனம் போலை! 

தடியன் தொடிக்கியின்ரை மூஞ்சை போன போக்கைப் பார்க்க பாவமாய் கிடந்தது. ஒரு மனிசன் தான் பிழை விட்டிட்டன் எண்டு வெக்கப் பட்டதை நான் அதுவரை கண்டதில்லை. பெத்தய்யாவை கண் முழி தெறிக்க வாய் பிளந்தபடி பார்த்தான்.

"நான் கொஞ்சம் தண்ணி குடிக்க வந்தநான்" எண்டு தடுமாறினான்.
"தண்ணீர் குடிக்க வந்தநீரோ? ஓமோம் நீர் சொல்லிற பொய்யை நம்பித்தானே தீரவேணும்? நானென்ன ஒரு விளப்பமும் இல்லாத விழுபேயனே? எனக்குத் தெரியாதே உங்கடை தெங்கில் உங்களுக்கு வைச்ச சட்டம்? காட்டுறோசாப் பள்ளத்து சனங்களிட்டை தண்ணிவெந்நி வாங்கிக் குடிக்கப் படாது. நஞ்சு வைச்சுக் கொலை செய்து போடுங்கள் எண்டு உனக்கு உத்தரவு இருக்கு. அப்பிடி இருக்கேக்கை நீ இஞ்சை வந்து தண்ணி குடிச்சு, உன்ரை கேடு காலத்துக்கு நீ திண்ட உங்கடை சாப்பாடே உனக்கு ஒத்துக் கொள்ளாமல் போய், நீ கிடந்து உத்தரிக்க, நாங்கள் தான் நஞ்சு கலந்த தண்ணி தந்து கொல்லப் பார்த்தது எண்டு எங்களுக்குத் தானே கழுத்துக்குக் கத்தி வரும்? இன்னொரு தரம் தாகம், தண்ணி எண்டு சொல்லிக் கொண்டு வந்தாய் எண்டால் உண்மையிலையே நஞ்சு வைச்ச தண்ணி தான் தருவன். நஞ்சு வைக்காமல் இருந்து வீணாய் சாகிற நேரம், நஞ்சை வைச்சிட்டு சாகலாந்தானே?" 

பெத்தய்யா பொரி பொரி எண்டு பொரிஞ்சு தள்ளினார். அனக்கு என்ரை காதிலை விழுந்தது எல்லாத்தையும் நம்பேலாமல் கிடந்தது.

ஒருவேளை இப்பிடித்தான் தெங்கிலின்ரை அரணக்காறங்களோடை கதைச்சுப் புழங்க வேணுமோ? தடியன் தொடிக்கி ஒண்டும் திருப்பிச் சொல்லமாட்டாமல் தொண்டையைச் செருமினபடி தன்ரை காவல் பகுதிக்கு, கோட்டை மதிலுக்குப் போனான்.
                                  (அண்ணரை எங்கை காணேன்?)




சொல்விளக்கம்:

தமிழ் ஆர்வலர், ஆய்வாளர் இராமகி அவர்களின் வளவின் (valavu.blogspot.com) பரிந்துரைப்படி;
வடந்தை - winter
சிந்து - snow
அரணம் - military
கதழ்வண்டி - sledge - சிந்தில் குதிரை இழுக்க வழுக்கிச் செல்லும் மனிதர்கள் பயணம் செய்யும் வண்டி
மேலுள்ள சொல்லை அடியாக வைத்து உருவாக்க முயன்ற சொல்:
கதழாசனம் - toboggan -  சிந்தில் வழுக்கி விளையாடும் கருவி

அக்களிப்பு - மனமகிழ்ச்சி
புளுகம்< புளகம் - மகிழ்ச்சி
கெக்கட்டம் - ஆரவாரம்
நோக்காடு - நோய், துன்பம்
அரியண்டம் < அரிகண்டம் - தொல்லை
அருளாசிப் பூனை- (எலிக்கு) ஆசி அருளும் பூனை
மைம்மல் < மைமல் - இருள் பரவும் நேரம்

தவண்டு< தவழ்ந்து
சீக்காய்< சீழ்க்கை

பத்தை < பற்றை - புதர்
பூந்தம் < புகுந்தோம்
இராப்போலாய்< இரவுபகலாய்
சொண்டு - பறவையின் அலகு , உதடு
சொக்கு - கன்னம்
கொற இழுவை - விடாப்பிடியாக இழுத்தல்
அந்தரப் படுத்தல் - அவசரப்படுதல்
சுவாத்தியம் - இன்பம்
நுள்ளான் - சிற்றெறும்பு
அறளை பேர்ந்த < அறளை பெயர்ந்த - வயோதிபத்தில் வரும் மறதி நோய் ( alzhimer) பிடித்த
பினாத்துதல் - அலட்டுதல்
தெந்தட்டு - சமநிலை, balance
செட்டு - தற்பெருமை
அருந்தல்- அருமை
இளந்தாரி - இளைஞர் 
ஒரு சொட்டு - ஒரு கொஞ்சம் 
அமளி - ஆரவாரம் 
விழு பேயன் - முழு முட்டாள் 
அரும்பொட்டு - மட்டுமட்டு