Author: Unknown
•6:52 AM
பனையயும் எங்கட வாழ்வையும் பற்றி ஏற்கனவே நான் எழுதின கொஞ்சம் நீள....மான பதிவுக்கு பின்னூட்டம் போட்ட கனபேர் கனக்க புதுப் புது விஷயங்கள் சொல்லியிருக்கினம். அடையெல்லாம் பதிவில சேர்க்காம, ஆரெல்லாம் என்ன சொன்னவை எண்டு ஒரு பதிவையே போட்டால் வாசிக்கிறவைக்கு சுகமாய் இருக்கும் என்டு நினைக்கிறன். இருக்கிற வேலையளுக்க பின்னூட்டம் எல்லாம் வாசிக்க கனக்கப் பேருக்கு நேரம் இருக்கிறதில்லைதானே.. அதுதான் இப்பிடிச் செய்யிறன்.

எங்கட வசந்தன் அண்ணை சொன்னார் பாருங்கோ நான் ஊமலைப் பற்றிக் கதைக்கேக்கை பூரானைப் பற்றிக் கதைக்காம விட்டுட்டன் எண்டு. உண்மைதான். பூரான் எண்ட உடன இது கடிக்கிற பூரான் எண்டு நினைக்கக் கூடாது. இது ஊமலுக்குள்ள இருக்கிற ஒரு விஷயம். முக்கியமா பானங்கிழங்கு கிண்டேக்க கிடைக்கிற ஊமலுக்குள்ள தேடித் தேடி வெட்டிச் சாப்பிடலாம். பூரான் இருக்கிற ஊமல் கொஞ்சம் பாரமாயிருக்கும். வெள்ளைக் கலரில கொஞ்சம் இனிப்பும் துவர்ப்பும் (சரியான சுவைதான் சொல்லுறனோ எண்டு உறுதிப்படுத்துங்கோ, இனிப்பு கொஞ்சம் கூடவாய் இருக்கும்), நல்ல மென்மையா, வாய்க்குள்ள போட்டா கரைஞ்சு போறளவுக்கு மென்மையா இருக்கிறதுக்குப் பேர்தான் பூரான்.

சந்திரன் அண்ணை என்ன சொன்னவரெண்டால், 'ஊமல் பனம் பழத்திண்ட கடைசி பரிமாண வடிவம் எண்டது சரி. ஆனால் ஊமலை போட்டு பாத்தி கட்டுறேல்லை. ஊமலுக்கு முன் உள்ள நிலையை பனம்கொட்டை எண்டு மாடு சூப்பி, இல்லாடி வெயிலிலை காய்ஞ்சு போய், இல்லாட்டி பினாட்டு பினைஞ்சு வாறது. அதை போட்டு பாத்திகாட்டி பனம் கிழங்கு எடுக்கிறது. பனங்கிழங்கு பத்திலை இருந்து எடுக்கிறது தான் ஊமல், அதாவது பனம் கொட்டையில் இருந்து தும்புகள் எல்லாம் இழந்த நிலை'. ஆளும் பனை பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். ஆள் வலு விசயகாரன் பாருங்கோ. ஊமல் பற்றி கலையும் இதே கருத்தைத் தான் தெரிவித்திருக்கிறார். வசந்தன் அண்ணை ‘பனங் கொட்டு' பற்றியும் கேட்டார். அதுக்கு வந்தி அண்ணையும், சந்திரன் அண்ணையும் சொன்ன விளக்கங்களை கீழ போடுறன்.

'பனைமரத்தின் வெளிப்புறம் வன்மையானது, அது தான் வளை, சிலாகை, தீரந்தி என பலதும் செய்ய பயன்படும். அதின் மையபகுதி மென்மையானது அதை சோத்தி எண்டு சொல்லிறது. தறிச்ச பனைமரம், அல்லது தான விழுந்த பனைமரத்தை கொஞ்ச நாளைக்கு உக்க விட்ட அதின் சோத்தி பகுதி மரவண்டு/ கொறவணன் புழு, மற்றும் நுண்ணங்கிகளாலை இலகுவில் உக்கி, அழிஞ்சு போகும், ஆனா வெளிப்பகுதி அப்பிடியே இருக்கும். உக்கின உள் பகுதியை கோதி எடுத்து விட்டா ஒரு குழாய் மாதிரி இருக்கும். இந்த பனம் கொட்டு தான் இரண்டு வயல்களுக்கிடையே தண்ணி பாய (வயலுக்கை தண்ணி கூடி வரம்பை உடைக்காது பாதுக்காக்க) பாவிக்கிறது. அதை விட ஒட்டு மாங்கண்டுகளை பிரட்டி சந்தைக்கு கொண்டு போறதுக்கும் மாங்கண்டை பனம் கொட்டுக்கை நட்டு தான் கொண்டு போறது'- இது பனங்கொட்டு பற்றி சந்திரன் அண்ணா சொன்னது.

தறிபட்ட பனையின் அடிப்புறத்தையும் கொட்டு என்பார்கள். சிலாகை கொஞ்சம் தடிப்பு குறைஞ்ச மெல்லியது. பெரியதை வளை என்பார்கள். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வீடுகளின் வளைகள் பனை வளைதான்.- இது வந்தியண்ணா சொன்னது.

அதோட இந்த அம்மன் கோயில் வழிய கஞ்சி ஊத்திறதுக்கும், கள்ளுக் கடையளிலயும் ஒரு ஏதணம் போல பாவிக்கிற பிளா பற்றியும் என்ர பதிவிலை கதைக்க மறந்து போனன். அது பற்றியும் கதைச்சிருக்கிறம் பின்னூட்டங்களில. பனையோலையில செய்யிற ஏதனம் மாதிரியான அந்த அமைப்பைத்தான் பிளா எண்டு சொல்லுவினம். அதே போல குருத்தோலையைப் பற்றிக் கதைச்ச நான் காவோலை பற்றிக் கதைக்கேல்லை. காவோலை வீடுகளில அடுப்பெரிக்கப் பயன்படும். ஞாபகப் படுத்திய வந்தி அண்ணாவுக்கு நன்றி, அந்தக் காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும் பழமொழிக்கும் சேர்த்து.

அதைவிட கொக்காரை, கங்குமட்டை, குருமபை போன்ற சொற்களையும் வசந்தன் அண்ணாவும், வர்மா அண்ணாவும் ஞாபகப் படுத்தி இருந்தார்கள். பனங்கட்டியின் நோய் நிவாரணக் குணங்கள் பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும். எனக்குத் தெரிந்து மூல நோய் இருக்கிறாக்களுக்கு சித்த வைத்தியம் செய்யிற ஆக்கள் அடிக்கடி பரிந்துரைக்கிற ஒண்டு. வேற என்ன நோய்க்கெல்லாம் பரிந்துரைக்கினம் எண்டு எனக்குத் தெரியேல்லை.

பனையைப் பற்றி இதைச் சொல்லாட்டா பிழையாகீடும். கனக்க பழசுகளுக்கு பனங்காணீக்க போகாடா, போகாது தெரியுமோ? நைசா போய் குந்தீட்டு, பனை ஓலையால துடைச்சிட்டு நேர கிணத்தடியில போய் குளிக்கிற கனபேரக் கண்டிருக்கிறன். பனங்காணியளுக்க போகேக்க கீழ மேல பாத்து அவதானமாப் போ எண்டு வீடுவழிய சொல்லுறது இவயளிண்ட தொல்லையாலதான்.

பி.கு: பனை அபிவிருத்திச்சபையின் முன்னாள்தலைவரான மு.பாக்கியநாதன் எழுதிய 'பனையியல்' என்னும் புத்தகத்தில் பனையைப்பற்றி பலதகவல்கள் உள்ளன என்று மேற்படி புத்தகத்தை வர்மா அண்ணை (அண்ணையா, அப்புவா எண்டு சரியாத் தெரியேல்லை), பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கும், பின்னூட்டம் மூலம் மேற்படி தகவல்கள் சொன்ன, வசந்தன், கலை, வி.ஜெ. சந்திரன், வந்தியண்ணா, கலை, ஷங்கர் மற்றும் பின்னூட்டம் போட்ட தமிழன்- கறுப்பி, சினேகிதி, கானா பிரபா அண்ணை எல்லோருக்கும் நன்றி.
This entry was posted on 6:52 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On August 13, 2009 at 10:29 AM , வந்தியத்தேவன் said...

கீத் பனையியல் புத்தகத்தின் மின்னூல் வடிவம் இங்கே இருக்கு.

http://www.palmyrah.info/

 
On August 13, 2009 at 11:19 AM , Unknown said...

நன்றி வந்தியண்ணா... எப்பிடி உங்களால மட்டும் இப்பிடியெல்லாம் ஏலுது.. நீங்கள் சின்ன வயசிலயே வலு கெட்டிகாரன் எண்டு நினைக்கிறன்..

 
On August 13, 2009 at 11:19 AM , Unknown said...

மின் நூல் வடிவத்தின் இணைப்பை பதிவில் இணைக்கிறேன்

 
On August 13, 2009 at 11:33 AM , M.Rishan Shareef said...

பனை பற்றிய பல விபரங்களைத் தெரிந்துகொண்டேன். நான் இன்னும் பனம்பழம் சாப்பிட்டதில்லை. நீங்கள் சொல்லும் விவரங்கள் எல்லாமே புதிதாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே !

 
On August 13, 2009 at 11:38 AM , வந்தியத்தேவன் said...

//Kiruthikan Kumarasamy said...
நன்றி வந்தியண்ணா... எப்பிடி உங்களால மட்டும் இப்பிடியெல்லாம் ஏலுது.. நீங்கள் சின்ன வயசிலயே வலு கெட்டிகாரன் எண்டு நினைக்கிறன்..//

கீத் ஒரு உண்மையைச் சொல்லட்டா என்னிடம் பனையியல் புத்தக வடிவில் இருக்கின்றது, ஒருக்கால் அதனைச் சுருக்கி எழுதவேண்டும் என நினைத்தேன் இடையில் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பில் வாசிக்க நேரம் கிடைக்கவில்லை. அப்படித்தான் ஆழியவளை என்ற நூலும் வாசித்து எழுத இருக்க அண்ணன் பிரபா முந்திவிட்டார். யார் குத்தினால் என்ன எங்கட முற்றத்திலை நல்ல அரிசி வந்தால் சரி.

அந்தப் புத்தகத்தில் நல்ல படங்கள் கிடக்கின்றன. இணைக்கவும்.

வலு கெட்டிக்காரன் என்ற சொல்லை அடிக்கடி நல்லையா சேர் பாவிக்கிறவர்.

 
On August 13, 2009 at 11:40 AM , வந்தியத்தேவன் said...

இன்னொரு பனை சம்பந்தப்பட்ட விடயம்

ஒரு பனைக் கள்ளு : அதாவது ஒரு பனையிலிருந்து இறக்கிய கள்ளு. இது அவ்வளவாக புளிக்காது, சுவையும் வித்தியாசம். மற்றைய கள்ளுகள் பல பனைகளில் இருந்து இறக்கி ஒன்றாகச் சேர்க்கிறது. இதனால் சுவை வித்தியாசமாக இருக்கும்.

தென்னங்கள்ளுக்கும் பனங்கள்ளுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கோ பார்ப்பாம்?

 
On August 13, 2009 at 2:13 PM , Unknown said...

வந்தியண்ணா
நல்லையா மாஸ்டரிட்டையே நீங்களும் படிச்சனியள்.. சரி சரி.. அப்ப நீங்கள் வலு கெட்டிக்காரன்தான்.. பனங்கள்ளுக்கும் தென்னங்கள்ளுக்கும் என்ன வித்தியாசம் எண்டு முற்றும் அறிந்த (குடித்த என்று வாசிக்கவும்) நீங்களேல்லோ சொல்லோணும்

கருத்துக்கு நன்றி ஷெரீஃப்

 
On August 13, 2009 at 9:36 PM , வர்மா said...

உதுக்குத்தான் எனக்குத்தெரிஞ்சகனவிசயங்களை நான் வெளிவிடுறதில்லை.பழைய விசயங்களைச்சொன்ன உடனை அப்புவாக்கிப்போட்டியள். பனங்கட்டிதவிர பனங்கற்கண்டு என்றும் ஒண்டு இருக்கு.சின்னக்குழந்தையளுக்கு அஜீரணம் என்றால் கொடுப்பார்கள். வந்தியத்தேவன் வலு விண்ணன் போலைகிடக்கு. எனக்கு வயசு கனக்க இல்லை. அடுத்தமாதம்தான் 80 வயசாகப்போகுது.பருமிளைஎல்லாரும் மறந்துபோனம். அதாலை கஞ்சிகுடிச்சா அதூன்ரை ருசியேதனிதான்.
அன்புடன்
வர்மா.

 
On August 14, 2009 at 3:56 AM , Unknown said...

சரி சரி.. வர்மா அண்ணை.. பேரப்பிள்ளையள் ஏதாவது சொன்னா கோவிக்கக் கூடாது..

 
On August 16, 2009 at 4:04 AM , யசோதா.பத்மநாதன் said...

:-)

 
On August 16, 2009 at 6:55 AM , வர்மா said...

ஆண் பனையில்தான் பனங்காய் இருக்கும்.
அன்புடன்
வர்மா