Author: கானா பிரபா
•1:54 AM
ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையில் கி.பி 1415 இல் அரசனாகிய பொழுது பல நூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. மலைப் பிரதேசத்தையும் வன்னிகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது கவனஞ் செலுத்தினான். அக்காலத்திலே கனக சூரிய சிங்கையாரியானின் ஆட்சி யாழ்ப்பாண இராச்சியத்திலே விளங்கி வந்தது.

மலையாள தேசத்துப் பணிக்கன் ஒருவனுடைய மகனும் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனுமாகிய செண்பகப் பெருமாள் என்னும் சப்புமல் குமாரய யாழ்ப்பாணத்துக்கு எதிரான படையெடுப்புக்குத் தலைமை தாங்கினான்.
முதலாவது தடவையாகப் படையெடுத்தபோது செண்பகப் பெருமாள் எல்லைக் கிராமங்கள் சிலவற்றைத் தாக்கி விட்டுத் திரும்பினான். பின்பு, மீண்டுமொருமுறை அவன் வட இலங்கையை நோக்கிப் படையெடுத்துச் சென்று பெரு வெற்றி பெற்றான்.

கனக சூரிய சிங்கையாரியான் இயலுமானவரை போர் புரிந்து விட்டு நிலமையைச் சமாளிக்க முடியாத நிலையிலே தன் மனைவி மக்களுடன் தென்னிந்தியாவிற்குத் தப்பியோடிவிட்டான். கி.பி 1450 ஆம் ஆண்டளவிலே எழுதப் பெற்ற முன்னேஸ்வரம் சாசனம் பராக்கிரமபாகுவைப் "பரராஜசேகர புஜங்க" என்று வர்ணிப்பதால், அக்காலகட்டத்திலேயே செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருக்கவேண்டும்.

ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்திலே ஆட்சி செலுத்துவதற்கென, செண்பகப் பெருமாளை அரசப் பிரதிநிதியாக நியமித்தான். செண்பகப் பெருமாள் ஆரியச் சக்கரவர்த்திகளின் சிம்மாசனத்திலே வீற்றிருந்து யாழ்ப்பாணத்துப் பிரதானிகளை அரச சபையிற் கூட்டி அவர்களுடைய ஆதரவுடன் ஆட்சிபுரிந்தான். செண்பகப் பெருமாளைப் பற்றிய தனிச் செய்யுளொன்று கையாலமாலையிலே காணப்படுகின்றது.

அது பின்வருமாறு அமைந்துள்ளது.

" இலகிய சகாப்த மெண்ணூற்
றெழுபதாஅ மாண்ட தெல்லை
அலர் பொலி மாலை மார்ப
னாம்புவ னேக வாகு
நலம் மிகு யாழ்ப்பாணத்து
நகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக்
கோயிலும் கட்டுவித்தானே"

வரலாற்று நூல்கள் சிலவற்றின் பிரகாரம் புவனேகபாகு என்பது செண்பகப் பெருமாள் அரசனாகிய போது சூடிக்கொண்ட பட்டப் பெயராகும். செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலே தங்கியிருந்த காலத்திலே அரசனொருவனுக்குரிய சின்னங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தான். என்று கருத இடமுண்டு. அவனாலேயே யாழ்ப்பாண நகரும், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் கட்டப்பட்டதாக இச்செய்யுள் வாயிலாக அறியப்படும் செய்திகளாகும்.

உசாத்துணை:
1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
3. "நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா
4. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
சித்திரம்:
The University of Chicago Magazine December 1995


இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகோற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழாப்படங்கள், அனுப்பி வைத்த நண்பர் செந்தூரனுக்கு நன்றி







This entry was posted on 1:54 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On July 31, 2009 at 10:17 PM , சி தயாளன் said...

செண்பகப் பெருமாள் வரலாறை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி...:-)

 
On August 1, 2009 at 2:51 AM , கானா பிரபா said...

வருகைக்கு நன்றி "டொன் லீ" ;-)