Author: கானா பிரபா
•3:56 AM
இந்த ஆண்டு யூன் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பித்தது ஈழத்து முற்றம் என்ற இந்தக் குழும வலைப்பதிவு. இன்னும் இரண்டு நாட்களோடு இரண்டு மாதங்களை எட்டிப்பிடிக்கும் இந்தக் குழுமத்தில் புதிய இடுகைகள், பதிவர்களின் சொந்த வலைத்தளங்களில் இருந்து மீள் இடுகையாகப் பகிர்ந்த பதிவுகள் உட்பட இதுவரை 76 இடுகைகளைக் கண்டிருக்கின்றோம்.

இந்தக் குழுமத்தை ஆரம்பித்தபோது சொன்னது போல ஈழத்தின் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்களின் அணிவகுப்பாக, ஈழத்தின் பல்வேறு திசைகளில் வாழும், வாழ்ந்த பதிவர்களை ஒன்றிணைத்து இந்த ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவை இயங்க வைத்திருக்கின்றோம். இன்னும் பல ஈழ நண்பர்களை இந்தக் குழுமத்தில் இணைந்து செயற்படவும் அன்புடன் அழைக்கின்றோம். தனிமடல் மூலம் kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் விருப்பைத் தெரியப்படுத்தவும்.

இன்று ஐம்பது பதிவர்களைக் கொண்டியங்கும் இந்தக் குழும வலைப்பதிவில் இதுவரை ஒரு சில பதிவர்கள் தமது படைப்புக்களை வழங்காவிடினும் காலவோட்டத்தில் அவர்களின் நேரச் சிக்கல் களையப்பட்டுத் தம் பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பார்கள். எமக்கிடையே இருந்த சிறு சிறு பேதங்கள் இன்று எம்மினத்தின் எதிர்கால அடையாளத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டிருக்கும் இந்த நிலையில் எம்மால் முடிந்தளவு எம் தாய் தேசத்தின் தனித்துவமான அடையாளங்களை இப்படியான வலையாவணமாகத் திரட்டுவோம்.

இந்த வேளை இன்னொரு நல்ல செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். இந்த ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவில் இடம்பெறும் ஆக்கங்களில், எழுத்தாளரின் சுய தேடலில்/சிந்தையில் உருவான கட்டுரைகள் , சொந்த முயற்சியில் விளைந்த ஆராய்ச்சிப் பகிர்வுகள் (உசாத்துணை விபரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்) போன்றவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான ஆக்கங்கள் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் தொகுக்கப்பட்டு , தைத்திருநாள் தமிழ்ப்புத்தாண்டு நாளில் வடலி வெளியீட வெளிவர இருக்கின்றது என்பதையும் மகிழ்வோடு சொல்லி வைக்கின்றோம்.

அன்புடன்
ஈழத்து முற்றம் குழும நண்பர்கள்

படம் உதவி: http://www.imagesofasia.com
This entry was posted on 3:56 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

18 comments:

On August 3, 2009 at 4:19 AM , சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் கானாஸ்!! எல்லா ஈழத்து முற்றம் அங்கத்தினர்களுக்கும் ஒரு ஹூர்ரே!! :-)

 
On August 3, 2009 at 4:30 AM , சி தயாளன் said...

:-) நிச்சயமாக

 
On August 3, 2009 at 4:32 AM , Unknown said...

வாழ்த்துக்கள். பல்வேறு ஈழ சம்பந்த செய்திகளையும், ஈழம் நினைவிலிருந்து மறையாதிருக்க வேண்டிய காரியங்களையும் எதிர்பார்க்கிறேன்.

 
On August 3, 2009 at 5:27 AM , King... said...

நல்ல விசயம்...

 
On August 3, 2009 at 6:18 AM , ஹேமா said...

பிரபா,எனக்கும் கொஞ்சம் திட்டு விழுந்திருக்கிற மாதிரி இருக்கு.
நானும் நினைச்சுப் பாக்கிறன்.ஒண்டும் வருகுதில்லை.என்ன செய்ய நான்!
எப்பவும் எழுதுறவையளுக்கு வாழ்த்துக்கள்.

 
On August 3, 2009 at 7:47 AM , வர்மா said...

எழுதாதவர்களையும் எழுதவைக்க நல்லமுயற்சி
அன்புடன்
வர்மா

 
On August 3, 2009 at 8:09 AM , வந்தியத்தேவன் said...

பிரபா உங்கள் முயற்சிக்கு என்னால் ஆன சகல உதவிகளையும் செய்யமுயற்சிக்கின்றேன். அதே நேரம் 50 பதிவர்கள் இருந்தும் சில இன்னமும் ஒரு பின்னூட்டம் கூட இடாமல் இருப்பது கவலையளிக்கின்றது. பதிவு எழுத சில மணி நேரம் தேவைப்படலாம் ஆனால் பின்னூட்டம் இட்டு அந்தப் பதிவில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள சில நிமிடங்களை ஒதுக்கினால் முற்றத்து மல்லிகைகள் இன்னும் மணம் வீசும். இது என்னுடைய ஆதங்கம் மட்டுமே.

 
On August 3, 2009 at 8:12 AM , கிடுகுவேலி said...

நிச்சயமாக இது ஒரு பெரிய முயற்சி. இணைந்த கைகளாக ஈழத்து முற்றத்தின் மணத்தினை உலகெங்கும் பரப்புவோம். ஆரம்பித்து வைத்த கானா பிரபா உங்களுக்கு ஒரு சலாம்.

 
On August 3, 2009 at 8:33 AM , தமிழன்-கறுப்பி... said...

நன்றி!


//-வெறுமன நன்றி சொன்னா காணாது கட்டாயம் ஒரு party வைக்கோணும்.//


இதுல என்ன வச்சுட்டாப்போகுது!
அதுக்கு எங்கடை குழுமப்பொருளாளர் வந்தியத்தேவன் ஒழுங்கு செய்வார் என்பதை நான் முன் மொழிகிறேன்.

---------------
இதனை சினேகிதி வந்து வழி மொழிவார். என்று நம்புவோம்.

:))

நன்றி.

 
On August 3, 2009 at 8:43 AM , குசும்பன் said...

//தைத்திருநாள் தமிழ்ப்புத்தாண்டு நாளில் வடலி வெளியீட வெளிவர இருக்கின்றது என்பதையும் மகிழ்வோடு சொல்லி வைக்கின்றோம்.//

வாழ்த்துக்கள் கானா உங்களுக்கும் இந்த குழுவில் இருக்கும் 50 பேருக்கும்

 
On August 3, 2009 at 9:39 AM , வந்தியத்தேவன் said...

//அதுக்கு எங்கடை குழுமப்பொருளாளர் வந்தியத்தேவன் ஒழுங்கு செய்வார் என்பதை நான் முன் மொழிகிறேன்.//
விரைவில் கொழும்பில் வைக்க இருக்கின்றோம். என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். அப்படியே ஈழத்து முற்றம் பற்றியும் ஒரு விளம்பரம் கொடுத்துவிடுவோம்.

 
On August 3, 2009 at 3:52 PM , M.Thevesh said...

எப்பொழுதும் கூட்டு முயற்சி வெற்றி
பெறும் என்பதற்கு இது ஒரு
எடுத்துக்காட்டு. உங்கள்
எல்லோராலும் ஈழம் பெருமை
அடைகிறது

 
On August 3, 2009 at 10:18 PM , ARV Loshan said...

வாழ்த்துக்கள்.. பெருமையைத் தான் இருக்கு..

ஊர் பற்றி எழுத ஒரு விஷயமும் மண்டைக்குள் வருகுதில்லை..
வருவேன்.. :)

சகாக்களுக்கு வாழ்த்துக்கள்.

 
On August 4, 2009 at 12:45 AM , யசோதா.பத்மநாதன் said...

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நல்லைக் கந்தன் திருவிழா வேளையில் உங்களுடய இந்த நல்ல முயற்சி வெற்றி பெற இறை ஆசியும் கிட்டட்டும்.

மேலும்,இந்தப் பதிவைப் பார்த்த போது மிக அருமையாகக் கிடைக்கத் தக்க படம் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.பாராட்டுகள்!

நம்முடய சமுதாயம் பெண்வழிச் சமுதாயம் என்பார்கள்.அதனால் பாரம்பரியப் பெண்ணின் அலங்காரங்களோடும் மிகப் பழய முத்திரை இலட்சினையோடும் இருக்கும் இந்தப் படம் அட்டைப் படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அபிப்பிராயப் படுகிறேன்.

அத்துடன் புத்தகமாக நீங்கள் தொகுக்கும் போது பாரம்பரிய உடைகள், அணிகலன்கள், பாத்திர வகைகள்.... போன்றவற்றின் படங்களையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

எனக்கு இணையப் புலமை வலு குறைவு. முடிந்தவர்கள் அதனையும் தொகுக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது ஒரு தாழ்மையான அபிப்பிராயம்.

உங்கள் முயற்சி வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்.உதவிகளையோ ஒத்துழைப்புகளையோ கேட்கத் தயங்காதீர்கள்.

 
On August 4, 2009 at 3:22 AM , அமுதா said...

வாழ்த்துக்கள்.

 
On August 4, 2009 at 4:48 AM , மாயா said...

வாழ்த்துக்கள்

"கழக உறுப்பினர்" என்ற வகையில் பெருமையாக இருக்கிறது, அதேவேளை இது வரை ஒரு பதிவேனும் எழுதவில்லையே என கவலையாகவும் இருக்கிறது.....


நன்றிகளுடன்
மாயா

 
On August 4, 2009 at 6:35 AM , சினேகிதி said...

நல்ல ஐடியா :) எழுதாமல் இருக்கிறாக்கள் எப்ப எழுதுறதா உத்தேசம்?

 
On August 4, 2009 at 9:34 AM , வந்தியத்தேவன் said...

//சினேகிதி said...
எழுதாமல் இருக்கிறாக்கள் எப்ப எழுதுறதா உத்தேசம்?//

சினேகிதி பதிவு எழுதாமல் இருக்கிறாக்கள் என நீங்கள் எழுதியிருக்கவேண்டும் இல்லையென்றால் அர்த்தம் மாறிவிடும். நாங்களும் இன்னும் எழுதவில்லை.