Author: வந்தியத்தேவன்
•1:59 AM
வடமராட்சியில் துன்னாலை என்னும் இடத்தில் இருக்கும் வல்லிபுர ஆழ்வார் என்ற விஷ்ணுகோவில் இலங்கை மக்கள் அனைவரிடமும் மிகவும் பிரபலம். சிவபூமியான இலங்கையில் மிகவும் குறைந்தளவான விஷ்ணு ஆலயங்களே இருக்கின்றன. வடபகுதியில் வல்லிபுர ஆழ்வாரும், பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலும் மட்டும் விஷ்ணு ஆலயங்களாக விளங்குகின்றன. வல்லிபுர ஆழ்வார்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என பிரசித்தமானது. அதிலும் கடல்தீர்த்தம் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாகவே விளங்குகின்றது. புரட்டாதி பூரணைதினத்தில் வங்காளவிரிகுடாவில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சனேயர் சகிதம் தீர்த்தமாட மாலையில் பக்தர்கள் புடைசூழ‌ செல்வார். காலையிலிருந்தே வடமராட்சியின் பல பாகத்திலிருந்தும்,தென்மராட்சி, வலிகாமம் போன்ற எனைய யாழ்குடாநாட்டின் பகுதிகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் துன்னாலையை நோக்கி வந்துகொண்டே இருப்பார்கள். பல வீதிகளில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திருப்பார்கள். எண்பதுகளில் மாட்டுவண்டில்களில் பலர் வருகைதருவார்கள். பின்னர் காலமாற்றத்தில் ஏனைய வாகனங்களிலும் சிலர் கால்நடையாகவும் வருவார்கள்.



வல்லிபுர ஆழ்வார் கோவில் இராஜகோபுரம் 2002ல் எனது புகைப்படக் கருவியில் சுட்டது. இராஜ கோபுரத்தில் மஹாத்மா காந்தியின் சிலை கூட‌ இருக்கின்றது.



கோவிலிருந்து ஏறக்குறைய 3 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலுக்கு தீர்த்தமாடச்செல்லவேண்டும். முன்னர் மூன்று மணற்குன்றுகளை கடந்து செல்லவேண்டும், தற்போது மணல் அகழ்வினால் ஒரே ஒரு குன்றுமாத்திரம் இருக்கின்றது. பருத்திதுறை துறைமுகம் வரை முருகைக்கல் பாறையினால் அமைந்த கடற்கரைப்பகுதி(ஆண்கடல் என்பார்கள்). பருத்தித்துறை முனைப்பகுதியில் இருந்து மணல்சார்ந்த நெய்தல் கடலாக அழகாகவும் மிகவும் ஆபத்தாகவும் காட்சிதருகின்றது.காங்கேசந்துறையிலிருந்து பருத்தித்துறை துறைமுகம் வரையான கடல் பாக்குநீரிணை ஆழம் குறைந்தகடல். அதன்பின்னர் ஆழம் கூடிய வங்காள விரிகுடா ஆரம்பமாகின்றது. இதனாலோ என்னவோ இலங்கையின் கிழக்குப்பகுதி கடற்கரை பெரும்பாலும் மணல் சார்ந்த கடலாகவே இருக்கின்றது. வருடத்திற்க்கு ஒருதடவைதான் கடலுக்கு தீர்த்தமாடச் செல்லும் பாதை பாவிக்கபடும். போகும் வழியில் கடற்தாவரங்களான இராவணன் மீசை போன்றவை கிடைக்கும். சிறியவயதில் சிப்பி, சோகியுடன் இராவணன் மீசையையும் பொறுக்கியது ஞாபகம் வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் சாரணர்கள், முதலுதவி அணியினர் எனப் பலரின் உதவிகளை ஆலய நிர்வாகம் ஏற்படுத்துகின்றது. பாடசாலை சாரணர் அணியில் இருந்தபடியால் சில தடவைகள் கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலைவேளையிலும் பூரணை நாளிலும் தீர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவே இருக்கும் பெரிய அலைகள் உருவாகும். ஆனால் இதுவரை யாரும் அலையில் அடித்துச் சென்றதாக தெரியவரவில்லை. சிறுவர்கள் முதியவர்கள் எனப் பலரும் கடலில் குளிப்பார்கள். தீர்த்தம் ஆடமுன்னர் அந்தப் பகுதியில் குளிப்பது தடை செய்யப்பட்டிருக்கும். ஆஞ்சனேயரை கடலில் ஒரு தடவை போட்டு எடுத்ததன் பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும். பின்னர் சந்திரன் உதயமாகும் போது மக்கள் கோவிலடிக்கு திரும்புவார்கள். தொண்ணூறுகளுக்கு முன்னர் கிழக்கிழங்கை, தென்னிலங்கை என இலங்கையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் வருவார்கள். தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்.

நாங்கள் பதின்மவயதில்(டீன் ஏஜ்) இருந்த காலத்தில் தீர்த்தத்திற்க்கு போவதென்பது ஒரு சுற்றுலாபோல‌. வழியில் யூகேயில்(உபயகதிர்காமம்)சில நண்பர்களைச் சந்திப்போம் அங்கேயுள்ள தண்ணீர்ப் பந்தலில் மோர், சர்க்கரைத் தண்ணீர், பின்னாளில் ஜூஸ் என குடிப்பது வழக்கம். பின்னர் ஆனைவிழுந்தான் சந்தியிலும் தண்ணீர்ப் பந்தலில் பொழுதுபோக்கிவிட்டுத்தான் கோவிலுக்குச் செல்வது. ஆனைவிழுந்தானில் பேய் இருக்கின்றது என பரவலாக ஒரு கதை அடிபட்டதால் இரவு வேளைகளில் அந்தப் பாதையை பாவிப்பதில்லை. இந்த அனுபவம் பெரும்பாலான வடபகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும். வலையுலகிலும் சிலருக்கு கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.

ஏற்கனவே ஈழத்துமுற்றத்தில் கிருத்திகன் வல்லிபுர ஆழ்வார் பற்றி எழுதியிருந்தாலும் என் உளறல்களில் இருந்து இன்றைக்கு வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழாவை ஒட்டி இந்த பதிவு மீள் பிரசுரமாகின்றது.
Author: Unknown
•1:57 PM
எனக்குத் தெரியும். நான் ஏதோ பெம்பிளைப் பிள்ளையளுக்கு கண்ணாடி வளையல் வாங்கிக் குடுத்த கதை எழுதப் போறன் எண்டுதான் முக்கால்வாசிப் பேர் ஓடி வந்திருப்பியள் எண்டு. இது அதைப் பற்றின கதை இல்லைப் பாருங்கோ. அய்.. பாக்க வச்சேன் பழுக்க வச்சேன் பண்டிச் சோறு தின்னவச்சேன்.. வளீக்ஸ் வளீக்ஸ். இது வேற கதை.

உங்கள் எல்லாருக்கும் 'அங்கிறி' எண்டால் என்னெண்டு தெரியும்தானே. தெரியாட்டி உங்கட மரமண்டையளில எல்லாரும் ஒவ்வொரு குட்டு வச்சுக் கொள்ளுங்கோ. சின்ன வயசில நீங்கள் 'கோவம்' போட்டிருப்பியள் இல்லாட்டா ‘டூ' விட்டிருப்பியள், இல்லாட்டா ‘காய்' விட்டிருப்பியள். சரிதானே. இத வடிவா விளங்கப் படுத்த ஒராளைத் துணைக்குக் கூப்பிடுவமன். அந்தாள் எங்கடை வந்தியண்ணா. இப்ப நான் வந்தியரோட கோவம் போட்டால், வந்தியர்தான் என்ர அங்கிறி தெரிஞ்சுதோ.

பத்துப் பதினோராம் வகுப்பு வருகிற வரைக்கும் இந்த அங்கிறிப் பிரச்சினை இருக்கும். அங்கிறியின்ர சைக்கிள் என்ர சைக்கிளில முட்டினால், கன நாளா துடைபடாமல் தூசி படிஞ்சு கிடந்த சைக்கிள் அண்டைக்கு எண்ணை தண்ணி எல்லாம் போட்டுத் துடைபடும். அங்கிறியின்ர கொப்பியும் என்ர கொப்பியும் முட்டுப்பட்டால், என்ர கொப்பி உறை கிழியும். அங்கிறி என்ர உடுப்பில முட்டுப்பட்டால், உடுப்புக் கிழியும் எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சியளே, ‘உஃபு, உஃபு' எண்டு ஊதி விட்டுக்கொள்ளுவம். அதே போலத்தான் அங்கிறியின்ர உடம்பும், எங்கட உடம்பும் முட்டினாலோ, ஏன் அங்கிரி எங்களைக் கடந்து போகேக்க வாற காத்துப் பட்டாலோ ஒரே ‘உஃபு உஃபு' தான்.

இதில பெரிய பகிடி, அஞ்சாம் வகுப்புக்கு முன்னம் பெட்டையள், பொடியங்கள் (பெண்கள், ஆண்கள் எண்டு சொல்லோணும். சொல்லாட்டா ராசசுலோசனா ரீச்சரும், மாலியக்காவும் தோலுரிச்சுப் போடுவினம்) முட்டுப் பட்டாலும் இதே 'உஃபு உஃபு' கட்டாயம் இருக்கும். சில வேளை பொடியளின்ர கொப்பியளை பெட்டையளும், பெட்டையளின்ர கொப்பியளை பொடியளும் திருத்த வேண்டி வரும். அப்பிடித் திருத்தி திருப்பிக் குடுக்கிற கொப்பியளையும் ஊதித்தான் தீட்டுக் கழிப்பம். அதெல்லாம் ஒரு காலம்.

அது சரி, இந்த அங்கிறி, ‘உஃபு உஃபு' இதுக்கிள்ள வளையல் எங்க வந்தது எண்டு கேக்கிறியள் அப்பிடித்தானே. கதை சொல்லேக்கை நான் ஊரெல்லாம் சுத்தித்தான் வருவன். எங்க சுத்தினாலும் சுப்பற்றை கொல்லைக்கு வருவன். அதுவும் நாங்கள் ஆர் தெரியுமே? நேர நெத்தியில வைக்கிற பொட்டை தலையச் சுத்தி வந்து மூக்கில வைக்கிற ஆக்களெல்லே. அப்பிடிப்பட்ட ஒரு பாரம்பரியத்தில பிறந்த நான் சுத்தாமல் என்னெண்டு விஷயத்துக்கு வாறது பாருங்கோ. உப்பிடித்தான் 750 ரோட்டில போனால் 9 மைல் தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு............ சரி சரி..நீட்டி முழக்காம விஷயத்துக்கு வா எண்டுறியளா? இப்பிடி நீட்டாட்டா கதை சின்னனாப் போடுமெல்லே. விஷயத்துக்கு வாறன்.

வளையல் எண்டத விளக்க திரும்பவும் வந்தியரைக் கூப்பிடுவம். வந்தியரும் நானும் இப்ப அங்கிறியள் சரியோ. ஆனா, அந்தாள் நல்ல மனிசன் தானே. அதனால அந்தாள் என்னோட ‘பழம்' விட்டுக் கதைக்க ஆசைப்படுகுது எண்டு வச்சுக் கொண்டால், இப்ப வந்தியர்தான் நான் சொல்ல வந்த ‘வளையல்'. அதாவது, இரண்டு அங்கிறியளுக்கை வளைந்து கொடுத்து சமாதானம் செய்ய வாற ஆள்தான் நான் சொல்ல வந்த வளையல். இந்த வளையலின்ர அங்கிறி வளைஞ்சு வரேல்லையோ, இவரின்ர மானம் கப்பலேறீடும். சில வேளை சில வளையல்கள் மற்ற அங்கிறியால் ‘கொம்மாண கொப்புவாண கதையாத' எண்டு அவமானப் படுத்தப்படுவதும் உண்டு. இந்தக் 'கொம்மாவாணக் கொப்புவாண கதையாத' எண்ட வார்த்தைதான் ஒரு வளையலுக்குக் கிடைக்கிற மெத்தப் பெரிய அவமானம்.

நீ ஏதோ பெரிய ஆள் மாதிரி கனக்க எல்லாம் எழுதிறாய், இந்த அங்கிறி வளையல் பற்றி உனக்கென்ன அனுபவம் இருக்கிறது எண்டு கேக்கிறியளே. இதில கலாநிதிப் பட்டம் பெறுமளவுக்க பல அனுபவம் இருக்கிறது, ஒவ்வொரு வகுப்பிலையும். தங்கவேலரின்ர கேம்பிறிட்ஜ் கொட்டிலில படிக்கேக்க, 7ம் வகுப்பில நான் மொனிற்றராய் இருந்தபோது, எங்கட வகுப்பில என்னைத் தவிர 42 பொடியள். அதில 39 பேர் எனக்கு அங்கிறியள், அவையளுக்கு நான் அங்கிறி. அவையள்ள சில பேருக்கு நான் வளையல், சில பேர் எனக்கு வளையல்கள். இப்ப சொல்லுங்கோ, எனக்கில்லாத தகுதியா.

பி.கு: எங்கட ஊர்ப் பொரி விளாங்காய் சாப்பிட்டிருக்கிறியளா? ஒரு சுப்பர் சாப்பாட்டுச் சாமான் அது. அது ஒரு காலத்தில் குழுமங்களுக்கிடையே வேறு அர்த்தத்தில் பயன்பட்டது. அது பற்றி ஈழத்து முற்றத்தில அடுத்ததாய் எழுதிறன்.
Author: Unknown
•6:08 PM
குப்பை பரவுதல் எண்டால் என்னவோ ஒரு கெட்ட விசயம் எண்டமாதிரி நினைக்காதீங்கோ. இப்ப கிட்டடியில வீட்டாரோட கதைக்கேக்கை இந்தச் சொல் திரும்ப ஞாபகம் வந்தது பாருங்கோ. மற்றப் பாகங்களில என்ன மாதிரி எண்டு தெரியேல்லை, ஆனால் எங்கட ஊரில வயல் விதைப்புக் காலங்களில இந்தக் குப்பை பரவுதல் எண்ட சொல் அடிக்கடி அடிபடும். குப்பை தானாப் பரவாது பாருங்கோ. நாங்களாத்தான் பரவோணும்.

அனேகமா ஆவணிப் நடுப்பகுதி-புரட்டாசி காலகட்டத்தில நாங்கள் எங்கட பெரும்போக நெல் விதைப்புக்கு வயல்களை உழத் தொடங்கீடுவம். ஓம்...ஓம்... நீங்கள் விதைக்கிறதே ஒரு போகம்தான் அதுக்குள்ள என்ன பெரும்போகம் சிறுபோகம் எண்டு புழுகிறாய் எண்டு நீங்கள் சொல்லிறது கேக்குது பாருங்கோ. அப்பிடி உழ முன்னம் வயலுக்கு பசளை போடுற வேலைதான் இந்தக் குப்பை பரவுறது. குப்பை எண்டால், வெறும் குப்பைதான் பாருங்கோ. ஆனால் இந்தக் குப்பை சேக்கிறது பெரிய கதை.

ஒவ்வொரு நாளும் விடிய எழும்பி வீடு கூட்டிறது ஒராள் முத்தம் கூட்டிறது ஒராள் எண்டு மாறிமாறிச் செய்யிறனியள்தானே நீங்கள் எல்லாரும். (எங்கட வீட்டிலை அம்மாவும் அப்பாவும் எங்களை இது செய்ய விடேல்லை எண்டிறது வேற விசயம்). ஊரில முத்தம் கூட்டிறம் எண்ட பேரில வளவு முழுக்க கூட்டுவினம், சரிதானே. எங்கள் எல்லாருக்கும் தெரியும் எங்கட வளவுகளில ஒவ்வொரு நாளும் என்ன குப்பை சேர்றது எண்டு. என்ன சேர்றது?? சொல்லுங்கோ பாப்பம்?...கஞ்சல் அல்லது குப்பை எண்டு நாங்கள் சொல்லுற இலை குழையள் தானே. அதைத்தான் பாருங்கோ சேத்துவச்சு வயல் உழ முன்னம் வயலுக்குள்ள பரவிறது. இதுதான் நான் சொல்ல வந்த ‘குப்பை பரவுதல்'

மற்ற வீடுகளில எப்பிடியோ தெரியேல்லை, நாங்கள் குப்பை சேர்க்கிறது இப்பிடித்தான் பாருங்கோ. கீழ உள்ள படத்தை ஒருக்கா வடிவாப் பாருங்கோ.
இந்த அமைப்புத்தான் எங்கட வீட்டில குப்பை சேர்க்கிறதுக்குப் பயன் படுகிறது. வீட்டின்ர பின்பக்கம் இருக்கிற மதில் ஒரு பக்கமா இருக்க மிச்ச மூண்டு பக்கமும் நல்ல காய்ஞ்ச வடலி ஓலை அல்லது மூரி மட்டை வச்சு அடைப்பினம். ஒரு மூலையில மட்டும் ஒரு சின்ன வாசல் விடுவினம். மதிலும் வேலியும் சந்திக்கிற வாசலுக்கு எதிர்ப் பக்கமாய் இருக்கிற இடத்தில இருந்து, வளைவைக் கூட்டி அள்ளிற குப்பையை எல்லாம் கொண்டேக் கொட்டுவினம். மதில் முண்டு குடுக்கிற பக்கத்தில தொடங்கினால் கனக்கக் கொட்டலாம்தானே... அதுக்குத்தான் அந்த மூலையில் இருந்து தொடங்கிறது. சில பேர் ‘ட' பட மதில் சந்திக்கிற இடத்தில ரண்டு பக்கம் சின்ன வேலி போட்டுக் குப்பை கொட்டுவினம். அது சின்ன இடத்தில நிறையக் குப்பை கொட்டுறதுக்கு இன்னும் திறம் பாருங்கோ.

அங்கை என்ன பிளாஸ்ரிக்கும் பொலித்தீனுமா வளவுகளில கிடக்கிறது. எங்கையாவது அங்கை ஒண்டும் இங்கை ஒண்டும் இருக்கும். அதுகளை ஒரு பக்கமாய் இன்னொரு இடத்திலை எறிஞ்சிட்டு, வடிவா மக்கி எருவாகக் கூடிய இலை தழை போன்ற குப்பையளை மட்டும் நான் மேல கீறிக்காட்டின வடிவில இருக்கிற குப்பை கொட்டிற இடத்தில கொட்டுவம். இருந்திட்டு பஞ்சீல பொலித்தீன், கண்ணாடி, பிளாஸ்ரிக் எண்டு என்னத்தையாவது ஒண்டாய்க் கொண்டே கொட்டிறதை அப்பா கண்டா பேசுவார். அந்தப் பயத்திலையே சரியாக் கொட்டுறது. சில பேர் குப்பையோடு சேத்து மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை எல்லாம் கொட்டுவினம். நாங்களும் அப்பிடித்தான். சிலபேர் ரண்டையும் தனித்தனியாக் கொட்டிறவை.

வயல் உழுகிற காலத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தக் குப்பையளை ற்க்ரர் லையோ, லாண்ட் மாஸ்ரரிலையோ, மாட்டு வண்டிலிலையோ ஏத்தி வயலுக்குக் கொண்டுபோறது. நான் அறிஞ்ச காலத்தில நாங்கள் றக்ரர் இல்லையெண்டால் லாண்ட்மாஸ்ரர் மட்டும்தான் பாவிச்சனாங்கள். மாட்டு வண்டியிலை ஏத்திறது சரியான வேலை மினைக்கேடு பாருங்கோ. இதைக் ‘குப்பை ஏத்திறது' எண்டுதான் சொல்லிறனாங்கள். குப்பை ஏத்திறது எண்டால் சும்மா விசயமில்லைப் பாருங்கோ. ஒரு நாளும் ஒரு வீட்டுக் குப்பை வயலுகளுக்குக் காணாது. எவ்வளவு தட்டு வயல் கூட இருக்கோ, அவ்வளவுக்கு அவ்வளவு குப்பை கூட வேணும். இதனால எங்கட வீட்டுக் குப்பை மட்டுமில்லாமல், வயல் செய்யிறது கௌரவக் குறைவு எண்டு நினைக்கிற பலபேர் வீட்டுக் குப்பையையும் போய்க் கேட்டு வாங்கி வயலுக்குக் கொண்டுவந்து போடுவம். போட்டு கொஞ்சக்காலம் வயலுக்கை மக்கவிட்டு அதுக்குப் பிறகு உழுது பயிரிட, அனேகமா மழையும் கை கொடுத்தால் அமோகமா விளையும் நெல்.

இது தனிய நெல் வயலுக்கு மட்டும் செய்யிறேல்லை. கனபேர் தோட்டக் காணியளுக்கும் இதே முறையிலை குப்பை பரவிப் பண்படுத்திறவை. நாங்கள் வயல்க் காணியள் மட்டும்தான் செய்தனாங்கள். அதுவும் வெளிநாட்டுக்கும், கொழும்புக்கும் மாறிப் போனாக்கள் பராமரிக்கச் சொன்ன வயல்களை எல்லாம் பண்படுத்தி நெல் விதைச்சனாங்கள். சில காலங்களில சில வயல்களை (குளங்கரை, காவில், கிராய், வல்லை ஆகிய நாலு இடங்களில வயல் செய்தனாங்கள்) ஆருக்காவது குத்தகைக்குக் கொடுக்கச் சொல்லி உரிமையாளர்கள் சொன்னால், அந்தக் குத்தகைக் காசைப் பொறுப்பாக வாங்கிக் கொடுப்பதும் எங்கட வேலை. ஆனா அனேகமா நாங்கள்தான் அந்த வயல்களை விதைக்கிறது. ஆகக் குறைந்தது எங்கட உறவுகளின் 7 வீடுகளில் குப்பை ஏற்றுவதுண்டு.

நேரடியாக வயலில் இறங்கி நான் வேலை செய்யவில்லை. எல்லாம் அப்பாதான். ஆனால் இந்தக் குப்பை பரவுதல் எனக்கு ஏனோ பிடிச்சிருக்கு. உரம் போட்டுப் பண்படுத்திறம் எண்ட பேரில நிலத்தைப் புண்படுத்தாமல் இயற்கைப் பசளைகளை வீசி எறிந்து தன்னிச்சையாகவே நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வந்திருக்கிறோம். என்னதான் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாய் உரம் அது இது எண்டு எல்லாம் வந்தாலும், பயிரிடுவதுக்கு முன் நிலத்தைப் பண்படுத்த எங்கட ‘குப்பை பரவுதலுக்கு' நிகராக ஒண்டுமே கண்டுபிடிபடேல்லை எண்டதில பெருமையா இருக்குப் பாருங்கோ.

பி.கு-1: கனடாவிலையும் முத்தம் கூட்டுறனாங்கள், வின்ரரிலை. எல்ல குப்பை எல்லாம் வெள்ளையா, படு குளிரா இருக்கும் (ஸ்னோவைச் சொல்லுறன்). அடுத்தது வீட்டுக் குப்பைகளை அகற்ற எண்டு சொல்லி பச்சை, நீலம், சாம்பல் எண்டு மூண்டு கலரில மூண்டு கலன்கள் தந்திருக்கிறாங்கள் பாருங்கோ, வெள்ளிக்கு வெள்ளி தலையிடிதான். மற்றபடி கோடை காலத்தில Backyard இல சில பயிர்கள் போடுவினம். அதுவும் இல்லையெண்டால் அங்க வெயிலுக்க தோட்டம் செய்திட்டு இஞ்ச வந்த எங்கட சனம் முக்கால்வாசிக்கு விசர் பிடிச்சிடும்.

பி.கு-2: யாழ்ப்பாண மக்களை எங்களை விடுங்கோ. உந்த வன்னிச் சனம் மும்முரமாய் வயல் செய்யிறதுகள். இப்ப அதுகளுக்கு வாழ்க்கையே உடைஞ்ச மாதிரி. என்ர மச்சாளின்ர புருசன் சொன்னார், ‘எங்களை எங்கட சொந்த இடங்களுக்கு விட்டா வயல் செய்து இழந்த சொத்தெல்லாம் 5 வருசத்தில மீட்டிடுவன்' எண்டு. உண்மைதான் பாருங்கோ. வெளிநாடுகளுக்கு வந்து உழைக்கிறதை விட வயலை நம்பி உழைக்கலாம்தான். ஆனா எல்லாத்துக்கும் சில சில விசயங்கள் கூடி வரோணும்தானே. பாப்பம்..

விரைவில திரும்பவும் சந்திப்பம்....
Author: வர்மா
•8:01 AM
மலைமகளே மாதரசியே
கலையூர்தியே கற்பகமே
முக்கண்ணன் நாயகியே
முக்கனியே வந்திடம்மா

நாரணியே தரணிபோற்றும்
பூரணியே வந்திடம்மா
பகையைதீர்த்திடம்மா வெற்றி
வாகையைத்தந்திடம்மா


நண்ணார்மிடுக்கொடிக்க
மண்ணிலேவந்திடம்மா
எல்லையிலாநாயகியே
தொல்லைகளைப்போக்கிடம்மா

திருப்பாற்கடலில்தோன்றியவளே
திருமாலைத்துணையாய் தேர்ந்தவளே
திருவேஉருவாய் உடையவளே
கருணைக்கண்காட்டிடம்மா

செங்கமலநாயகியேதாயே
மங்காதசெல்வம் தந்திடம்மா
திருமகள் எனும்நாமத்தவளே
திரும்பியேகொஞ்சம்பாரம்மா


செல்வத்துக்கதிபதியே
செல்வியே முண்டகாசினி
பெருந்தன்மைகாத்திடவே
பெருமலையைத்தந்திடம்மா


கலைகளின் நாயகியே
கலைவாணியே வந்திடம்மா
முத்தமிழைத்தந்திடம்மா
பக்தர் நாம்சிறப்புறவே

நான்முகன் கிழத்தியே
வெண்தோடகத்தில் இருப்பவளே
பண் இசைபாடிடவே
நாவினில் வந்திடம்மா

வெண்டாமரைத்தேவியே
கண்மலர்ந்துபார்த்திடம்மா
கலையரசியேமாதேவி
நிலையாகநின்றிடம்மா

அங்கையற்கண்ணியே போற்றி
அர்த்தநாரீஸ்வரியே போற்றி
அலையிடைப்பிறந்தவளேபோற்றி
செல்வாம்பிகையே போற்றி
வித்தியார்த்திதேவியேபோற்றி
முப்பெரும்தேவியரே போற்றி
ஆதிபராசக்தியே போற்றி போற்றி

ரமணி
வீரகேசரி வாரவெளியீடு 28 09 09


ஈழத்துமுற்றத்துக்கு வந்து நாட்கள்பல கடந்துவிட்டன.நவராத்திரிக்காக கடந்தவருடம் நான் எழுதிபத்திரிகையில்வெளியான கவிதையைமீள்பதிவிடுகிறேன்.
Author: கானா பிரபா
•5:52 AM
ஈழத்தில் புழங்கும் பயன்பாட்டுச் சொற்கள் வரிசையில் சில தின்பண்டங்கள் குறித்துப் பயன்படுத்தும் சொற்களை இங்கே தருகின்றேன். இங்கே பலகாரங்கள் அல்லாத தீனிப்பண்டங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சொற்களைத் தருகின்றேன்.

தமிழக வழக்கில் "சாக்லேட்" (chocolate) என்று பரவலாகப் பயன்படுத்தும் சொல்லை ஈழத்து மொழி வழக்கில் சொக்கிளேற் என்று பயன்படுத்துவர்.
Milk chocolate என்று ஆங்கிலத்தில் புழங்கும் இனிப்புப் பதார்த்ததை ஈழத்தில் பொதுவாக கண்டோஸ் என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் Kandos என்ற பெயரில் பிரபல நிறுவனமே இந்த இனிப்புப் பதார்த்தங்களை அங்கே தயாரித்து விற்பனைக்காகச் சந்தைப்படுத்துகின்றது. பின்னாளில் 80 களிலே Edna என்ற நிறுவனம் போட்டியாக இந்தத் தொழிலில் இறங்கியிருந்தாலும் Edna வின் உற்பத்திகளையும் கண்டோஸ் என்று பொதுவழக்கில் சிலர் பயன்படுத்துவது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

தமிழக வழக்கில் பிஸ்கெட் (biscuit) என்று அழைப்பதை ஈழத்து மொழி வழக்கில் பிஸ்க்ற் என்றும் கிராமப்புறங்களில் விசுக்கோத்து என்றும் அழைப்பார்கள். (சிலரை கேலி பண்ண விசுக்கோத்து என்று அழைப்பது வேறு கதை ;-))

தமிழக சஞ்சிகைகளில் ரொட்டி என்று பழங்கும் சொல் கூடவே பிரெட் (bread) என்றும் பயன்படுத்தும் பண்டம் ஈழ வழக்கில் பாண் என்று மட்டுமே அழைக்கப்படும்.
பாண் என்ற இந்த உணவுப்பொருள் வழக்கமான வடிவில் கிடைக்கும் அதே வேளை, சப்பையாக இருக்கும் ஒரு வடிவிலும் இருப்பது என் அறிவுக்கு எட்டியவரை ஈழத்தில் மட்டுமே கிடைக்கின்றது இதை றோஸ் பாண் அல்லது சப்பட்டைப் பாண் என்றும் அழைப்பார்கள்.

ஈழத்தவர் ஒருவர் சென்னையில் இருந்த வேளை ஒரு மளிகைக்கடைக்குப் போய் "பாண் இருக்கா" என்று கேட்க மளிகைக்கடைக்காரர் பேந்தப் பேந்த முழித்தாராம். பிறகு அவர் கடையினுள் நோட்டம் விட்டு கண்ணாடிப்பெட்டியில் இருந்த அந்தப் பாணைக் கண்டு "இது தான் இதைத்தான் கேட்டேன்" என்று சொல்லவும், மளிகைக்கடைகாரர் "அட, பிரெட்ன்னு தமிழ்ழ சொல்ல வேண்டியது தானே" என்றாராம் என்று வேடிக்கையாகச் சொல்லும் கதை உண்டு.

தமிழக வழக்கில் பன் (bun)என்று பயன்படுத்தும் சொல், ஈழவழக்கில் பணிஸ் என்று அழைக்கப்படும். இனிப்பான, அல்லது இனிப்பு சேர்க்கப்படாத இந்தத் தின்பண்டம் பல வடிவில் கிடைக்கும். உருண்ட வடிவில் இருப்பது பொதுவாக பணிஸ் என்றும், நீள் கொம்பு வடிவாக இருப்பது கொம்பு பணிஸ் என்றும் அழைக்கப்படும்.

பாண், பணிஸ் பற்றி வந்தியத் தேவன் ஈழத்து முற்றத்தில் முன்பு எழுதிய சுவையான பதிவு இதோ காலையும் நீயே மாலையும் நீயே

தமிழக வழக்கில் மிட்டாய் (toffee) வழங்கும் பதார்த்தத்தினை ஈழத்துப் பேச்சு வழக்கில் ரொபி என்றே குறிப்பிடுவார்கள். கூடவே இனிப்புத் துண்டங்களாப் பொதி (pack)செய்யாமல் இருக்கும் பதார்த்தை "இனிப்பு" என்ற பொதுவான குறீயீட்டுப் பெயராக அழைக்கும் பண்பும் உண்டு. குறிப்பாக போத்தல்களில் நிரப்பியிருக்கும் தோடம்பழச் சுவை கொண்ட இனிப்புக்களை "தோடம்பழ இனிப்பு" என்று அழைப்பதோடு இவை விலையிலும் மலிவு என்பதால் குழந்தைகளின் விருப்புக்குரிய தேர்வாக இருக்கும்.

மில்க் ரொபி, புளுட்டோ ரொபி (ஞாபகப்படுத்திய பகீ இற்கு நன்றி) போன்றவை பெரும்பாலும் உள்ளூர் உற்பத்திகளாகச் செய்யப்பட்டுச் சந்தைப்படுத்தப்படும்.

மேலே படத்தில் இருப்பது பஞ்சு மிட்டாய் /பஞ்சு முட்டாஸ் படம் நன்றி: பதிவர் மீனாக்ஸ் வலைப்பதிவு

மேலே படத்தில் இருப்பது தும்பு முட்டாஸ் , நன்றி துஷ்யந்தினி கனகசபாதிப்பிள்ளை

பஞ்சு மிட்டாய் அல்லது பஞ்சு முட்டா என்ற இனிப்புப் பதார்த்தத்தை கோயில் திருவிழாக்காலத்தில் அதிகம் காணலாம். பொதுவாக மிட்டாய் என்ற சொற்பிரயோகத்துக்கு மாற்றீடாக ஈழமொழி வழக்கில் முட்டாஸ் என்ற சொல்லே பயன்பாட்டில் இருக்கின்றது. பஞ்சு முட்டாஸ் என்ற இனிப்புப் பதார்த்தை விட எங்கள் ஊர்க் கோயில்திருவிழாக்களில் தும்பு முட்டாஸ் எனப்படும் இனிப்புப் பண்டம் பெரும் கிராக்கியில் இருப்பதைச் சொல்லி வைக்க வேண்டும். காரணம் அதைக் கைக்கு அடக்கமான தாளில் சுற்றியே கொடுத்து விடுவார்கள். எடுத்துத் தின்பதும் இலகுவாக இருக்கும்.

அப்பளம் (ஞாபகப்படுத்திய சினேகிதிக்கு நன்றி) என்ற பெயரில் பல்வேறு நிறத்தில் தட்டையாகச் செய்யப்பட்ட பெரிய அப்பள வடிவில் இருக்கும் இனிப்புப் பதார்த்தமும் இருக்கின்றது, இது தமிழகத்தில் இருக்கின்றதா தெரியவில்லை. அதற்கான பதிலீட்டுச் சொல்லும் நான் அறியவில்லை.

விடுபட்ட சொற்கள் தொடரும்.
Author: வந்தியத்தேவன்
•5:17 AM
பாடசாலை நினைவுகள் எவ்வளவு பசுமையானதோ அதேபோல் ரியூசன் நினைவுகளும் அதே அளவு பசுமையானது. சினேகிதி எழுதிய "ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள் " ஒரு 8 ஆம் அல்லது 9 ஆம் வகுப்புடன் நின்றுவிட்டதுபோல் தெரிகிறது. ஆகவே உயர்தரத்தில் நாங்கள் செய்த குழப்பங்களும் பசுமையான நினைவுகளும் கொட்டில் காலத்து நினைவுகளாக, கொட்டில் என்றவுடன் கள்ளுக்கொட்டிலை நினைக்கவேண்டாம்.

உயர்தரம் படிக்கப்போகின்றோம் என்றவுடன் முதலில் எல்லோரும் கேட்கும் விடயம் எங்கையப்பு ரியூசன் போகப்போறாய்? மட்ஸ் என்றால் வெக்டரிடம் போ அவர் தான் சரியான ஆள் இது ஒருவர், இன்னொருவரோ "இல்லை இல்லை ஆரம்பத்தில் வெக்டரிடம் பார்க்க நல்லையா மாஸ்டரிடம் போ, அவர் தான் அடிப்படையில் இருந்து திறமாகச் சொல்லித் தருவார்" என வகுப்புகள் தொடங்கமுன்னரே குளப்பத் தொடங்கிவிடுவினம்.

ஆனால் அந்தக் காலத்தில் நாம் ஆற்றை பேச்சைக் கேட்டோம். அதனால் கூட்டாளிப் பொடியள் போற ரியூசன் தான் எனக்கும். சாதாரண தரம் வரை இன்னொரு ரியூசனில் படித்துவிட்டு வதிரியிலுள்ள "பீகொன்" என்ற தியேட்டருக்கு எங்கள் வானரப் படை இறங்கியது.

அங்கே ஆரம்பத்தில் புதிய ஆசிரியர்கள் புதிய இடம் என்பதால் கொஞ்சம் அமைதியாகவே இருந்தோம். என்னுடைய பாடசாலை நண்பர்கள், ஏனைய பாடசாலையில் படித்து முன்னைய ரியூசன் நண்பர்கள், அத்துடன் பல புதிய முகங்கள், பருத்தித்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை என பல இடங்களில் இருந்தும் வந்தவர்கள் தான் பலர்.

பெண்வரிசையில் பெண்கள் அவர்களுக்குப் பின்னால் ஆண்கள் என முதல் சில நாட்கள் அனைவரும் இருந்தோம். நாம் செய்த அட்டகாசங்களில் எங்களை முன்னுக்கு விட்டுவிட்டு பெண்களை பின்னால் இருத்திவிட்டார்கள். இந்தக் கொடுமை உயர்தரம் முடியும்வரை தொடர்ந்தது.

பெளதிகவியல் ஆசிரியர் திரு.வர்ணம் அவர்கள், சந்தேகம் எதுவும் இருந்தால் எழும்பிக்கேட்க வெட்கப்பட்டால் துண்டில் எழுதிக்கொடுங்கோ என்றார். இதுதான் சாட்டு என நம்மடை வாரணப் படை ஒருமுறை விஜய் படமான பூவே உனக்காகப் பாடலான "ஆனந்தம் ஆனந்தம் பாடும்" பாடலில் வரும் வரியான "காதலோடு வேதங்கள் 5 என்னுங்கள்" என்ற வரி சரியா நாங்கள் படிக்கின்ற காலத்தில் வேதங்கள் என்றால் 4 எனத் தான் படித்தோம் என எழுதிக்கொடுத்தால், மனிசன் யார் எழுதியது என்பதை அந்த துண்டை வந்தவழியே அனுப்பி கண்டுபிடித்து ஒரு கிழிதான். பெரும்பாலும் மாணவர்களை அவர் ஏசுவதில்லை.

இரசாயனவியல் ஆசிரியர் அன்பாக தில்லை என அழைக்கப்படும் திரு. தில்லைநாதன் ஆசிரியர், இவர் வல்லைவெளி தாண்டி வருபவர் என்பதால் எப்படியும் கொஞ்சம் லேட்டாகத் தான் வருவார். இதனால் இவர் பாடம் வரும்வரை எங்கள் சில்மிசங்களும் கொழுவல்களும் நடக்கும். எங்கடை வகுப்பில் சில பெண் பிள்ளைகள் தில்லை சேரின் பாடத்திற்க்கு இருப்பதில்லை அவர்கள் இன்னொரு ஆசிரியரிடம் இரசாயனவியல் படிக்கச் செல்பவர்கள். ஒருநாள் தில்லை சேர் வழக்குத்துக்கு மாறாக நேரத்துக்கு வந்துவிட்டார். முதல் பாடம் முடிய இவர்கள் கொட்டிலை விட்டு வெளியே செல்ல நாங்கள் சும்மா இருக்காமல் அவர்களின் பட்டப் பெயர்களைச் சொல்லிக் கத்த அதிலை ஒருத்தி எங்களுக்கு அடிப்பன் என கைகாட்டியதும் அதனைத் தில்லை சேர் பார்த்ததையும் நாங்கள் பார்க்கவில்லை.

அண்டைக்கு முழுநேரமும் எங்களுக்கு இரசாயனவியலுக்குப் பதிலாக எச்சும் பெண்களுடன் எப்படி நடக்கவேண்டும் என தில்லை சேர் பாடம் எடுத்தார். அப்படி ஒரு பேச்சு ஒருநாளும் நாங்கள் எந்த ஆசிரியரிடமும் கேட்கவில்லை. இதில் எனன் விசேடம் என்றால் அண்டைக்கு சகல பெண்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆண்களை மட்டும் வைத்துக்கொண்டுதான் அர்ச்சனை நடந்தது.

பிறகு பேப்பர் கிளாஸ் காலங்களில் எங்கடை சங்கரலிங்கம்(ஆறரை அடி உயர மனிதர்) அண்ணையின் ரியூசனில் பின்னேரம் 6 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணிக்குத் தான் வகுப்பு முடியும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து வகுப்புக்கு வருகின்ற பெண்களை நாங்கள் தான் மெய்ப்பாதுகாப்பாளர்கள் போல் அவர்களின் வீடுவரை கொண்டு சென்று விடுவது. இத்தனைக்கும் அதுகள் எங்களுடன் கதையாதுகள், முன்னால் செல்வார்கள் நாங்கள் பின்னால் செல்லவேண்டும், ஏதாவது கதை கேட்டால் யாரும் பார்த்தால் பிரச்சனை என மெதுவாகச் சொல்வார்கள். ஒருக்கால் இருட்டிற்க்குள் இரும்பு மதவடி தோட்டத்திற்க்கை விழுந்து, நாய் திரத்தி என பல அனுபவங்கள் இருக்கின்றன. இப்போ அந்த நண்பிகள் குடும்பமாக வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கின்றார்கள்.

பிறகு நெல்லியடி மொடேர்னில் பெளதிகவியல் பேப்பர் கிளாஸ் கணேசன் ஆசிரியரிடமும் வெக்டர் ஆசிரியரிடமும் எங்களுக்கு முன்னைய பட்சுடன் போனோம். கணேசன் சேர் வகுப்பிலை யாரும் நித்திரை கொண்டால் உடனே அவரைத் தட்டிக்கேட்பார் "யார் கனவிலை வந்தது என", ஆண்கள் என்றால் மீனாவோ ரம்பாவோ எனக்கேட்பார், பெண்கள் என்றால் "ரஜனியோ, கமலோ" எனக் கேட்பார், ஒருக்கால் இப்படித்தான் ஒரு பெடியனைக் கேட்க அவன் "மீனாவும் ரம்பாவும் அல்ல, பக்கத்து லொஜிக் வகுப்பில் இருக்கும் சியாமளாதான் கனவில் வந்தாள்" என்றான் வகுப்பே சிரிப்புத் தான்(சேர் உட்பட).

உப்பிடி நிறையக் கதைகள் இருக்கின்றது, உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனைய கதைகள் மீண்டும் வரும்.
Author: சினேகிதி
•7:41 PM
ஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்ட
இங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒரு பெடியன் வெளவால். அவன்ர அம்மா விடிய அரை இருட்டில அவனுக்கு பவுடர் எல்லாம் பூசி அனுப்பி விடுவா. பாவம் அவன் விதியே என்டு வருவான் எங்களோட.தனிய வரேக்க கதைக்க மாட்டான். நசுக்கிடாமல் இருப்பான். பிறகு பின்னேரம் மற்றப் பாடங்களுக்கு ரியூசனுக்கு வரேக்க மற்றப் பெடியங்களோட சேர்ந்த உடனதான் அவனுக்கு வாய் திறவடும். விடிய ரியூசனுக்குப் போட்டு வரேக்க அங்க பக்கத்தில இருக்கிற கொஞ்சம் பெரியண்ணாமார் எங்களோட வாயடிக்கிறதுக்காக பள்ளிக்கூடப் பட்டப் பெயர்களைச் சொல்லி இல்லாட்டி 'எடியே கறுப்பி கொக்காவையும் கூட்டிக்கொண்டு வாறது ரியூசனுக்கு' என்டுவினம். வெளவால் கொஞ்சம் தூரத்திலதான் வருவான். தனக்கு எதும் கேக்காதமாதிரி அப்பாவி மாதிரி மூஞ்சையை வைச்சுக்கொண்டு போவான். நாங்களும் நல்ல திறம்தானே. கறுவா கட்டக்கரி அம்மம்மாட்ட சொல்லி விடுறன் (அப்ப அம்மம்மாமார் பெடியங்களுக்கு காது முறுக்கிறது)இப்பிடி ஏதாவது சொல்லுவம். என்ன பிரச்சனையெண்டால் இந்த அண்ணைமார் ஏதொ ஒருவிதத்தில சொந்தக்காரர இருப்பினம். பெருசா வாய் விடேல்லாது. அளவுக்கு மீறினால் வீட்ட சொன்னால் அவை சொல்லுவினம் அங்கள் சும்மா ஆசைக்குச் சொல்றாங்கள். உங்களை ஆர் வாய்காட்டச் சொன்னதெண்டு.

பிறகு பின்னேரம் ரியூசனுக்குப் போனால் அங்க ஒரே சண்டைதான். ஒவ்வொருநாளும் புதுப்புது விதமான சண்டை வரும்.5ம் ஆண்டு ஸ்கொலர்சிப் வகுப்பெடுத்தது ஈசாக்கா.அநேகமா எல்லாருக்கும் விருப்பமான ரீச்சர். அவாக்கு எங்கட சண்டை தீர்த்து வைக்கிறதே பெரிய பாடு. அநேகமாச் சண்டையைத் தொடக்கிறது பெடியங்களாத்தானிருக்கும். சண்டை முற்றினால் சண்டை பிடிக்கிற பெடியனைப் பிடிச்சு பெட்டையளுக்கு நடுவில இருக்க விட்டிடுவா. பெட்டையளில முட்டக்கூடாதெண்டு வாங்கில்ல 2 பக்கமும் bag புத்தகங்கள் எல்லாம் எடுத்து வைச்சிட்டு மூஞ்சையைத் தூக்கி வைச்சுக்கொண்டு அடிக்கடி முறைச்சுக்கொண்டு இருக்குங்கள் மூஞ்சூறுகள். ஈசாக்கா வீட்ட ஸ்பெசல் கிளாஸ் அல்லது நாடகம் பழக எண்டு போய் அங்கயும் சண்டையெண்டால் பாவம் ஈசாக்கான்ர அம்மா கூட வந்து விலக்குப்பிடிப்பா சில நேரம்.

அதெல்லாம் முடிஞ்சு அடுத்தடுத்த வகுப்புகளுக் வந்தால் படிப்பில போட்டி கூடிடும். பத்தாதக்கு வாத்திமார் வேற எரியுற நெருப்பில எண்ணையை விடுற மாதிரி அடிக்கடி போட்டி வைப்பினம். பெட்டையள் ஒரு ரீம். பெடியங்கள் ஒரு ரீம். எங்கட ரீமுக்கு கேட்ட கேள்விக்கு நாங்கள் பதில் சொல்லாட்டால் அவங்களுக்குப் போயிடும் கேள்வி. 1-2 மார்க்ஸ் இடைவெளியில வெற்றி வந்தால் நாங்கள் அவங்களை அலாப்பியெண்டுறது அவங்கள் எங்களை அலாப்பியெணடுவாங்கள். வெல்லுற ரீம் தோக்கிற ரீமை முறைச்சுக்கொண்டேயிருக்கும். அதுவும் பெட்டையள் கனக்க வாயடிச்சால் ஒரு சிரிப்புச் சிரிச்சுக்கொண்டே அப்பண்ணா சொல்லுவார் 'வாறவன் பாடு கஸ்டந்தான்' (அப்பண்ணா கணிதம் விஞ்சாம் சமூகக்கல்வி இப்பிடி எல்லாம் படிப்பிச்சவர் சதாபொன்ஸ்ல் - இப்ப உயிரோட இல்லை.அவரைப்பற்றித் தனிப்பதிவு போடணும்).

ஏதும் கணக்குத் தந்து போட்டு பெட்டையளின்ர மெதட்ல வேணுமென்டு பிழைகண்டுபிடிப்பார். பெடியங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு நாங்கள் கத்துவம். அவங்கள் அப்பண்ணா எங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு வாங்கிலுக்கு மேல ஏறி நிண்டுகொண்டு கத்துவாங்கள். இங்கயும் இந்தச் சொந்தக்காரப் பெடியங்கள் இருந்து துலைப்பாங்கள் அதால நாம என்ன செய்தாலும் சொன்னாலும் வீடுவரைக்கும் போயிடும்.

கொஞ்சக்காலம் தூரத்துச்சொந்தக்காரர் ஒராள் ரியூசனுக்கு director ஆ வந்திட்டார். அவற்ற மகன் வேற என்ர வகுப்பு.மனுசன் வகுப்புக்கு மேற்பார்வை செய்ய வரேக்க வாத்திமாரிட்ட வேற சொல்லிடும் இவள் எனக்கு மருமகள் என்டு. கறுமம் இதை இப்ப இங்க வந்துச் சொல்ல சொல்லி யாரு கேட்டது. பெடியங்கள் ஒருபக்கம் கத்துவாங்கள். எனக்குப் பயமா வேற இருக்கும். யாரும் குழப்படி செய்தாலும் சொந்தக்காரப்பிள்ளையளுக்குத்தானே அடி விழுறது. சொந்தமெண்டால் யாரும் கேக்கமாட்டினம்தானே. அதும் அவர் தன்ர மகன்களுக்கே ரத்தம் வாறளவுக்கு அடிக்கிற ஆள். இப்பிடி நான் ரியூசனில சுதந்திரமா இருக்கப் பல தடைகள் ஆனால் தடைகளைக் கண்டு துவளும் இனமா நாங்கள் :) எதையும் தாங்கும் இதயம் :)

நான் கனக்க அடிவேண்டினது தமிழ் படிப்பிச்ச மாஸ்டரிட்டதான்.அவருக்குப் பெட்டையள்ல ஏதோ கோவம். எங்கடா அடிக்கலாம் என்டு திரிவார். எங்களுக்கு மட்டுமில்ல பெரியக்காவைக்கும் அடிச்சிருக்கிறார். காதல் தோல்வியோ என்னவோ. யார் செய்ற பாவம் எப்பிடியெல்லாம் விளையாடுது. வகுப்புக்கு முன்னால தோட்டம். தோட்டத்தில வேலை செய்றாக்களை வாய் பார்த்துக்கொண்டிருந்ததுக்காக அவரிட்ட நான் அடி வாங்கியிருக்கிறன். பிறகு அந்த மாஸ்டர் நிர்வாகத்துடன் பிரச்சனைபட்டு அவரை வரவேண்டாம் என்டு சொல்லிட்டினமாம்.

எங்களோட படிச்ச பெடியங்கள் சில பேர் facebook இருக்கிறாங்கள். கிட்டடில ஒருத்தர் message பண்ணியிருந்தார். அதுவும் தன்ர பட்டப்பெயரைப் போட்டு ஞாபகம் இருக்கோ என்டு கேட்டு. ஓமோம் நீர் வைச்சிருந்த அந்த bag கூட ஞாபகம் இருக்கெண்டு பதில் போட்டன்.நிறையப்பேர் கொழும்பிலும் வெளிநாட்டிலும்தான் இருக்கிறாங்கள். என்னோட நடுக அராத்துப்படுற ஒரு பெயடின் இப்ப என்ன செய்றான் என்டு விசாரிச்சன் ..அவன் சிலோன் பாங்ல வேலை செய்றானாம்.அவன் சரியான கட்டைப்புட்டு ஆனால் சத்தமெண்டா தொண்டைகிழியக் கத்துவான் :)கையை வேற ஆட்டி ஆட்டிக் கதைப்பான். இப்பிடி 12 வருடங்களுக்குப்பிறகு பழைய வால்கூட்டங்களுடன் கதைத்தது சந்தோசமாத்தான் இருந்தது. ஆனால் அவங்கள் செஞ்ச அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமே. கிணத்தில தண்ணி குடிக்கப்போனால் பெட்டையள் வந்தால் தண்ணி ஊத்த மாட்டாங்கள். வாளியைப் பொத்தெண்டு வைச்சிட்டுப் போடுவாங்கள். இதை ஒருநாள் யாரோ ஒரு வாத்தியார் பார்த்திட்டு முறைப்பாடு செய்ததால பெட்டையள் என்டாலென்ன பெடியங்கள் என்டாலென்ன கிணத்தில இருந்து தண்ணியள்ளினா வாளில தண்ணிமுடியும் வரைக்கும் தண்ணிகுடிக்க வாறாக்களுக்கு ஊத்தோணும். இவங்கள் ஒருநாள் வாளிக்க குட்டிப்பாம்பு ஒண்டு நிண்டது கண்டிட்டும் காணாத மாதிரி ஒரு பிள்ளை தண்ணிகுடிக்க குனிஞ்சாப்பிறகு ஊத்திறமாதிரி ஊத்திட்டு பாம்பு என்டிட்டு ஓடிட்டாங்கள். அது பாவம் ஒரே அழுகை. சைக்கிள் சீட்ல வெடிகொளுத்திப்போட்டிருக்கிறாங்கள். தாங்கள் செய்ததெல்லாத்தையும் நாங்கள் செய்தது என்டு பொய் சொல்லி மாட்டி விடுவாங்கள். இதால எத்தின தரம் மொத்த வகுப்புக்கும் சேர்ந்து punishment கிடைச்சிருக்கு. அதும் அப்பண்ணா சரியான பிடிவாதக்காரன். தான் நினைச்ச பதில் வரும் வரைக்கும் விடவே மாட்டார். கோவத்தில வகுப்பெல்லாம் கூட கான்சல் பண்ணியிருக்கிறார். இப்ப அப்பண்ணாவும் இறந்த பிறகு ரியூசன் எப்படி நடக்குதோ தெரியா. என்ர அம்மா சித்தி மாமாக்கள் என எல்லாரும் படித்த ரியூசன் அது.

என்னடா ரியூசன் என்டாலே பெடியங்களைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறன் என்டு நினைக்காதயுங்கோ. ரியூசனை நினைச்சால் வாற சந்தோசமான விசயங்கள் மட்டும் எழுதியிருக்கிறன். சோகங்களை உள்மனது ஞாபகம் வைத்துக்கொள்வதில்லையாம். நவசியண்ணா (இன்னுமொரு கணித ஆசிரியர் - அப்பண்ணாவின் அண்ணா) அவர் மந்திகை வைத்தியசாலையில் உடல் நலமற்று இருந்தது நாங்கள் பார்க்கப் போனது பிறகு அவர் ஒருநாள் இறந்துபோனது நாங்கள் எல்லாம் அந்த மாமரத்தின்கீழ் நின்று கதறிக் கதறி அழுதது இப்படி எல்லாமே ஞாபகம் வருது. அங்கு படித்த யாரும் இங்கு இருப்பின் தொடர்ந்து எழுதுங்கள்.