Author: யசோதா.பத்மநாதன்
•7:08 PM

கடந்த வாரம் துணிக்கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன்.

அங்கு ஒரு கத்தரிக்கோல் - ஒரு சின்னக் கத்தரிக்கோல் - நூல்கள் வெட்டப் பாவிப்பது. காணக்கிடைத்தது. யாரோ ஒருவருடய கற்பனை! கலை நயம்!

அது ஒரு கொக்கு மாதிரி தோற்றம் கொண்டது.! அதன் கூரிய மூக்கு தான் வெட்டும் பகுதி. ஒரு சிறு உபகரணத்தை எத்தனை அழகாய் வடிவமைத்திருக்கிறார்கள் எனத் தோன்றியது.

அதைப் பார்த்த போது நம்மிடம் அப்படி ஏதாவது கலை நயம் மிக்க பொருட்கள் இருந்தனவா என எண்ணமோடியது. அப்போது எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது பாக்கு வெட்டி தான். ஒரு மான் பாய்ந்தோடுவது போல வடிவமைக்கப் பட்டிருந்த பாக்கு வெட்டி ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஒருமுறை ஒருவர் வீட்டில் கண்டிருந்தேன்.

வீட்டுக்கு வந்து முதல் வேலையாக கூகுளில் பாக்குவெட்டி தேடினேன். :) ரொம்ப முக்கியம் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது எனக்கு அது முக்கியம்!! :))

எத்தனை அழகழகான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பாக்கு வெட்டிகள்! அவை ஈழத்தில் இந்தியாவில் மட்டுமின்றி தென்கிழக்காசிய நாடுகளிலும் புளக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை இப்போது உங்கள் பார்வைக்காகவும் தருகிறேன்.




















படங்கள்: நன்றி கூகுள் இமேஜ்.








Author: யசோதா.பத்மநாதன்
•7:38 PM
ஒருவரை அல்லது ஒரு நிகழ்ச்சியை ஞாபகப் படுத்த ஏதேனும் ஒரு பாடல் வரி அல்லது ஒரு இசைக்குறிப்பு அன்றேல் ஏதேனும் ஒரு சிறிய பொருள் அல்லது நடைபெறும் ஒரு சிறு சம்பவம் போதுமானதாக இருக்கும்.பழைய நினைவுகளையும் வாழ்க்கையையும் அது மீட்டுத் தந்து விட்டுப் போயிருக்கும்.

அது போலத் தான் இந்தக் கிடுகுவேலியும் மூக்குப் பேணியும்!யாப்பாணத்தை; ஊரை; அங்கு வாழ்ந்த வாழ்வை இந்தப் படங்கள் நினைவு படுத்திப் போகிறது.



கிடுகு வேலி யாழ்ப்பாணத்து இமேஜ்களில் முக்கியமானது.யாழ்ப்பாண மக்களின் கட்டுப்பாடான மற்றும் கட்டுப் பெட்டிக் கலாசாரத்தை குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதற்கு ’கிடுகுவேலிப் பாரம்பரியம்’என்ற சொல்லைக் குறியீடாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிடுகுவேலிகள் அங்கு தனித்துவமாக விளங்குவதையும் குறியீடாகக் கையாளப்படுவதையும் வரலாற்றுப் பரப்பில் தெளிவாகக் காணலாம்.



அது போலத்தான் மூக்குப் பேணியும்.அதன் தனித்துவமான வடிவமும் அன்னாந்து குடிப்பதற்கேற்ற வகையில் இருக்கும் அதன் நளினமும் அன்றாடப் பயன்பாட்டில் யாழ்ப்பாணத்தார் மூக்குப் பேணியைப் பயன்படுத்திய பாங்கும் யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தின் இன்னொரு இமேஜ்.

இந்தப் படங்களை கூகிளில் பார்த்த போது ஊர் சோகம் சூழ்ந்தது. அதனால் பதியத் தோன்றிற்று.
Author: ஜேகே
•7:44 PM


“சும்மா போ அன …இனி வெறுங்கல்லு .. என்னால தோண்ட ஏலாது”
“என்ற அச்சா குஞ்சல்லோ, இன்னும் ரெண்டு அடி தான் .. தோண்டினா .. குத்தி போட்டு மண்மூடை அடுக்கலாம்”
“அப்ப பின்னேரம் லலித்தொட கிரிக்கட் விளையாட விடுவியா?”
“சரி என்னத்தையும் போய் விளையாடு .. இப்ப இத கிண்டு”

அம்மா கிரிக்கட் விளையாட பெர்மிஷன் தந்த சந்தோசத்தில் போட்ட பிக்கான் கொஞ்சம் ஆழமாகவே விழ, யாழ்ப்பாணத்து கல்லு “நங்” என்று சத்தம் போட்டது. கொஞ்சம் கையால் மண்ணை கிளறி, கல்லை க்ளீன் பண்ணிவிட்டு, மீண்டும் சரியான கொட்டு பார்த்து பிக்கான் போட்டேன். சர்க்கென்று பிக்கான் இறங்க, நான் பிடியை ஒரு எம்பு எம்ப சர்ர்க்க்க்க் என்று இன்னொரு சத்தம்.

பிக்கான் மரப்பிடி முறிந்துவிட்டது!


என்னடா இது சிறுகதை போலே ஆரம்பிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். ஈழத்தில் பிக்கான் போட்டு கைப்பிடி முறிச்ச அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். வாழை அடிக்கிழங்கு எல்லாம் கிளறி கிளீன் பண்ணும்போது, முறிஞ்சு போன அனுபவம் இருக்கா? பிடி என்னதான் ஸ்ட்ராங்கா இருந்தாலும், விஷயம் தெரியாமல் தெண்டிவிட்டீர்கள் என்றால் கதை சரி. .. ஆ அப்பு.. இந்த மரப்பிடி எப்பிடி செய்யிறது என்றதும் சொல்லவேண்டும். கொடாரிப்பிடியை எல்லாம் கொல்லைப்புறத்து காதலியா தனியா எழுத முடியாது. பிறகு என்னையும் கொடாறிக்காம்பு என்று சொன்னாலும் சொல்லிடுவாங்கள் இல்லையா!

கோடாலி, பிக்கான், மண்வெட்டி போன்றவற்றுக்கு மரப்பிடி செய்வது பூவரசு மரத்தில் இருந்து தான். இடியப்ப உரல், நல்ல மாட்டுவண்டில் அச்சு எல்லாம் பூவரசு மரத்தில் இருந்து செய்யப்படுவதே. மரம் பார்த்தால் நோஞ்சான் மாதிரி இருக்கும். ஆனால் ஊரில கதியால்(வேலி) அடைக்கும்போது முக்கிய பாயிண்டுகளில் எல்லாம் பூவரசு தடி தான் நடுவார்கள். அதுவும் அடைக்க தெரியாமல் அடைத்தால், மரம் சரிஞ்சு வளர்ந்து மற்றவன் காணிக்குள் தலை எட்டிப்பார்த்து, யாழ்ப்பாணத்தில் பல வேலிச்சண்டைகளை ஊதிபெருப்பித்த பெருமை இந்த பூவரசுக்கு உண்டு. காய வச்சு அடுப்பெரிச்சா கொஞ்சம் புகைச்சலாக எரியும்! இலையை சுருட்டி பீப்பீ ஊதலாம். கொஞ்சம் பெரிய இலை புடுங்கினால், வைரவர் கோவிலில் பிரசாதம் கொடுக்கலாம். ஊர்க்கோவில்களில் வெற்றிலை கட்டுப்படியாகாத காலத்தில் வீபூதி சந்தனம் சுருட்டிக்கொடுப்பதும் இதில் தான். பூவரசுக்கு அப்படி ஒரு ஹிஸ்டரி இருக்கு! அந்த மரத்தில் இருந்து தான் நல்ல பழுத்த கொப்பாக பார்த்து வெட்டி, நெருப்பு தணலில் முதல்ல போட்டு சுடுவார்கள். ஒரு பொன் நிறத்தில் எரிந்து வரும்போது, தோலை கீறி, மரவேலை செய்யும் தொழிலாளர்களிடம் கொடுத்து சீவி எடுத்து, மண்வெட்டி, பிக்கான் கோடாலிக்கு பிடி போட்டால், சிங்கன் அசையாமல் இருப்பார்!

இப்பிடி கனகசபை தாத்தா ஊரில் இருந்து செய்துகொண்டு வந்த பிடி தான் அன்றைக்கு முறிஞ்சு போய்விட்டது. அம்மாவை பாவமாய் பார்த்தேன். அம்மா நெருப்பு எடுக்க போகிறார் என்று பயம். ஆனால், அவ சோட்டியை கொஞ்சம் உயர்த்தி செருகிக்கொண்டே, “சும்மா படிச்சு படிச்சு உடம்பு பூளை பத்திப்போய் கிடக்கு, ஒழுங்கா குனிஞ்சு நிமிர்ந்து ஒரு வேலை செய்ய தெரியாது” என்று திட்டியவாறே, அங்கே இங்கே கிடந்த சின்ன சின்ன விறகு காம்புகளை எடுத்து பிக்கான் ஓட்டையில் சக்கை வைத்து, மீண்டும் பிடியை, பிடரிப்பக்கமாக சுவரில் நாளு அடி நன்றாக அடித்து இறுக்கி தந்தார். இப்போது கூட நான் இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது ஒரு ப்ளேன்டீ போட்டுக்கொண்டு வந்து தந்துவிட்டு, நேற்றைக்கு “Yarl IT Hub”, இன்றைக்கு “கொல்லைப்புறத்து காதலியா” என்று சொல்லிக்கொண்டே அதே மாதிரி மனசுக்குள் திட்டியிருக்கவேண்டும். கேட்கவில்லை அம்மா!

எங்கள் வீட்டு சாமியறை. பிள்ளையார், முருகன், லட்சுமி, சரஸ்வதி, நயினை நாகபூஷணி அம்மன், குட்டி சிவலிங்கம், மன்னார் அன்ரி தந்த மடு மாதா சிலை, வீட்டு குடிபூரலுக்கு யாரோ உபயம் செய்த ஓம் சரவணபவ எழுத்து போட்ட மிகப்பெரிய முருகன் படம், பிருந்தாவனத்து கிருஷ்ணன், சின்ன இயேசு படம், சிவனே என்று உட்கார்ந்து இருக்கும் புத்தர் சிலை என்று ஒரு தட்டு பூரா கடவுள்கள். ஸ்பெஷலாக லட்சுமி, முருகன், பிள்ளையார் படங்களுக்கு மட்டும் வண்ண வண்ண பல்புகள் மேலே எரியும். எங்கள் வீடு என்று இல்லை, யாழ்ப்பாணத்தில் எந்த வீட்டிலும் இப்படி தான் கடவுள்கள். பல்ப் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்! மேல் தட்டில் சாமிகள் இருக்க, கீழே மிக நீளமான ஒரு நிலக்கீழ் சீமந்து கிடங்கு அந்த அறையில் இருந்தது. சாமான்கள் வைப்பதற்காக அது அமைக்கப்பட்டிருக்கவேண்டும். 85, 86 களில் எல்லாம் சண்டைகள் நடக்கும் நேரம் நாங்கள் எல்லாம் அந்த கிடங்குக்குள் போய் பதுங்கிக்கொள்ளுவோம். முதல் காதலி போல் முதல் பங்கர் அது. பயந்து பதுங்கிய காலம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது! மேலே கடவுள்களை தாண்டி குண்டு விழாது என்று கொழும்பர் மாமிக்கும் பெரும் நம்பிக்கை. வீட்டுக்கு பங்கர் தேவையில்லை. அது போதும் எண்டு சொல்லிவிட்டார்.

இந்தியன் ஆர்மி டவுன் பக்கம் மூவ் பண்ணிக்கொண்டு இருக்கு. எங்கள் சாமியறை கிடங்கு இந்தியாவின் அடிக்கு தாக்குப்பிடிக்காது என்று இயக்கத்தில இருந்த சொந்தக்கார அண்ணா ஒருவர் சொல்லிவிட, இப்போதெல்லாம் குண்டடிக்க நாங்கள் ஓடுவது பாத்ரூமுக்கு தான். எங்கள் வீட்டு பாத்ரூமுக்கு மேலே பெரிய தண்ணீர் தாங்கி இருக்கிறது. கொங்கிரீட். ஷெல் விழுந்தாலும் துளைத்துக்கொண்டு வராது. பாதுகாப்பு. தூக்கம் வந்தால் கொஞ்சம் சாய்ந்தும் தூங்கலாம். சாமியறை கிடங்கு போதாது. பாத்ரூம் .. பயத்தில மணம் எல்லாம் பெரிசா இருக்காது.

அப்பாவின் நண்பர் ஒருவர். அவர் டீச்சர். சுதுமலையில் வசித்தவர். ஒருநாள் குண்டு அடித்துக்கொண்டு இருக்கும் போது அவர் வீட்டு பாத்ரூமில் பதுங்கியிருக்க, குண்டு வீட்டின் மேல விழுந்துவிட்டது. ஸ்பாட்டில் ஆள் க்ளோஸ். நிலநடுக்கம் வந்தால் வீட்டை விட்டு வெளியே ஓட வேண்டுமாம். இல்லாவிடில் நேரிசல்களுக்குள் சிக்கி செத்துவிடுவோமாம். அந்த அங்கிளும் அப்பிடி தான் நெரிசலில் இறக்க, அடுத்தவாரமே எங்கள் வீட்டு முன் வளவில் பங்கர் வெட்ட முடிவானது!


எங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறீங்களா? வீட்டுக்கு முன்னாலே ஒரு பரப்பு காணி. பூங்கன்று தான் முழுக்க இருக்கும். நந்தியாவட்டை, நாகமணி, செவ்வரத்தை, ரோசா, தியத்தலாவ என்ற மலைக்கிராமத்தில் இருந்து அம்மா கொண்டு வந்து வைத்த பார்பட்டன்ஸ் என்று விதம் விதமாக பூத்து தொங்கும். கிணற்றடியில் ஒரு செவ்வரத்தை, மொத்தமா எட்டு ஒட்டு அம்மா ஒட்டியிருப்பார். எட்டு கலர்ல பூ பூத்திருக்க சுற்று வட்டாரத்தில இருந்தவங்க எல்லாம் வந்து பார்த்துவிட்டு போவார்கள். கம்பஸ் பக்கத்தில பூக்கன்று வீடு என்று சந்திக்கடையில கேட்டால் சேவயர்(surveyor) வீட்டை உடனே காட்டுவார்கள். பேபி ஸ்டூடியோ அங்கிள் கொடாக் பிலிம்ல போட்டோ எல்லாம் எடுத்து தன் கடையில் மாட்டி வைத்தார். சுரேஷ் அண்ணா உதயனுக்கும் அறிவிப்போம், வந்து படம் பிடிப்பார்கள் என்றார். ஆனா அடுத்த மாசம் தானே இந்தியன் ஆர்மி இறங்கீட்டுது அங்க!

பங்கர் வெட்டுவதற்கு தோதான இடம் பார்க்கவேண்டும். தொலைவிலையும் இருக்க கூடாது. கக்கூசுக்கு கிட்டவும் இருக்கக்கூடாது. கீழால பைப் லைன் இருந்தாலும் கவனிக்கோணும். கிணத்தடி கடைசியா தெரிந்தெடுக்கப்பட்டது. செவ்வரத்தைக்கு பக்கத்தால பங்கர். அது பெரிய மரம், பக்கத்தில ஒரு எலுமிச்சையும் நின்றது. மேலால பொம்மரில இருந்து பார்த்தா கண்டு பிடிக்கேலாது. முதல் பங்கர் வெட்டியாச்சு. வெட்டினது ஞாபகம் இல்லை. ஆனா ஒருக்கா ரெண்டு தரம் பங்கருக்க இருந்தது ஞாபகம் இருக்கு. கொஞ்ச நாள் தான். இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தை பிடிச்சிட்டான். எங்கட முன் வீட்டில இந்தியன் ஆர்மி காம்ப் வந்தது. பங்கர் இருக்கிறது தெரிஞ்சா சிக்கல் எண்டு அப்பா குப்பையை போட்டு மூடிப்போட்டார்.

மூண்டு வருஷங்கள் பங்கர் இல்லாத வீடு. இந்தியன் ஆர்மியை இப்போது ஒரு வழியா கப்பலில் அனுப்பியாயிற்று. கொஞ்ச நாள் யாழ்தேவி ட்ரெயின் எல்லாம் இலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் ஓட ஆரம்பித்துவிட்டிருந்தது! கரண்ட் கூட அவ்வப்போது லக்ஸபானாவில் இருந்து விசிட் பண்ணும். திடீரென்று ஒரு நாள் அறுவாங்கள் சண்டையை தொடங்கிவிட, இப்போதெல்லாம் அடிக்கடி பொம்பர் விசிட் பண்ண ஆரம்பித்தது. கையோடு கோட்டை பிரச்சனை ஆரம்பிக்க, இளம் ஆட்கள் எல்லொரும் இயக்கப்பாட்டு பாடிக்கொண்டே முற்றவெளி ஏரியாவில் பங்கர் வெட்ட போயிட்டு வருவார்கள். சிலநேரங்களில் திரும்பி வராமலேயே இருந்துவிடுவார்கள். சில நேரம் பிரேதம் மட்டும் வரும்.

இப்ப இயக்கம் யாழ்ப்பாணத்தை வைத்திருக்கிறது. அப்போது நிதர்சனம் என்று இயக்கத்தின் தொலைகாட்சி இருந்தது. அதன் அலுவலகம் எங்கள் வீட்டுக்கு முன்னால். முன் வீடு ஒரு புரோக்டர் வீடு. அவர் குடும்பம் எப்பவோ ஆஸ்திரேலியாவுக்கு எஸ்கேப். அதனால் தான் முதலில் இந்தியன் ஆர்மி அந்த வீட்டில் காம்ப் போட்டது. அவர்கள் போக நிதர்சனம் காம்ப் வந்துவிட்டது. முன்னுக்கு நிதர்சனம் காம்ப் என்பதால் பொம்மர் குண்டு போடும்போது காம்பில் விழாமல் சுற்றுவட்டாரத்தில் தானே விழும்! அத்தனை வீடுகளும் பங்கர் வெட்ட ஆரம்பிக்க, அது ஒரு முஸ்பாத்தி என்றால் முஸ்பாத்தி தான் போங்கள்.

பங்கர் வெட்டுவது என்பது கிட்டத்தட்ட நவராத்திரிக்கு கொலு வைப்பது போல. வீட்டுக்கு வீடு அப்போது பங்கர் வெட்டுவார்கள். ஒரு “ட” எழுத்து வடிவில் அநேகமான பங்கர்கள் இருக்கும். சில பெரிய பங்கர்கள் “ப” வடிவில் இருக்கும். சும்மா ஒன்றுமே இல்லாமல் டப்பா “I” வடிவ பங்கர்களும் சிலர் வெட்டுவதுண்டு. யார் வீட்டில் ஆழமான பங்கர் என்பதில் தான் போட்டியே. எங்கள் ஊர் திருநெல்வேலி, கொஞ்சம் தோண்டினா கல்லு வர தொடங்கிவிடும். இரண்டு அடிக்கு பிறகு பிக்கான் போட வேண்டும். நான்கடியில் ஆப்பு வைத்து வெட்டவேண்டும். அதனால் போட்டியில் எங்கள் வீடு எப்போதுமே பின் தங்கி விடும். அன்ரி ஒருவரின் வீட்டு பங்கரில் ஆள் ஒருவர் குனியாமல் நிற்கலாம்.

நிதர்சனம் காம்ப் முன்னுக்கு வந்தது என்று சொன்னேன் இல்லையா. இப்போது கிணற்றடியில் பங்கர் வெட்டுவது பொம்மர் காரனுக்கு அல்வா எடுத்து வாயில் வைப்பது போல. போட்டான் என்றால் அடுத்த நிமிஷம் அடுத்த பிறவியில், யாரேனக்கு அப்பனோ, அவன் குழைந்தையை எடுத்து கொஞ்சிக்கொண்டு “ஜேக் சுள்ளி” என்று பெயர் வைத்திருப்பான். நல்ல காலம் நாங்கள் வீட்டுக்கு பின்னால் பங்கர் வெட்ட முடிவு செய்ததால் இன்னமும் ஜேக் ஜெகேயாகவே இருக்கிறான்!


எங்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு விலாட்டு மாமரம். அதற்கு அடியில் தான் பங்கர் வெட்ட ஆரம்பித்தோம். பங்கர் வெட்ட ஆட்கள் பிடிப்பது கஷ்டம். கூலியும் ப்ளேன் டீயும் குடுத்து மாளாது. நாங்களே வெட்டினோம். பக்கத்துவீட்டுக்காரரும் உதவி செய்தார்கள். எங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள நான்கைந்து குடும்பங்களுக்கு ஒரு பங்குக்காணியும் கிணறும் இருந்தது. அந்தக்காணியில் மூன்று உயர்ந்த தென்னை மரங்கள். மரங்களில் காய்க்கும் தேங்காய் கூட எல்லோருக்கும் பங்கு தான். ஆனால் இரவிலே எத்தனையாவது சாமத்தில் இருந்தாலும், அந்த மரங்களில் இருந்து தேங்காய் விழுந்தால், தொப் என்று சத்தம் கேட்கும். எல்லா வீட்டுக்காராரும் அலறிப்பதைத்துக்கொண்டு இரவோடி இரவாக ஓடுவார்கள், தேங்காய் பொறுக்க. தேங்காய்க்கு பங்கில்லாதவன் முதல் ஓடுவான்! அப்படி ஒரு ஒற்றுமையான பங்கு காணி அது. இப்போது பங்கருக்கு மேலே போட்டு மூட தென்னங்குற்றி வேண்டும் என்பதால் எல்லா குடும்பங்களும் ஒத்துக்கொண்டு அந்த தென்னைகளை வெட்ட முடிவு செய்தோம். குற்றிகளை பங்கு பிரிப்பதில் கூட போட்டி தான். அடிக்குற்றி கொஞ்சம் ஸ்ட்ராங் இல்லையா. அதுக்காக சண்டை பிடிப்பார்கள். இதெல்லாம் என்னுடைய அடுத்த கதையில் சொல்கிறேன். இப்போது மாட்டருக்கு வருவோம்.

பங்கர் வெட்டி, குற்றி அடுக்கி, அதற்கு மேல் உரப்பை (போரை பாக்) யில் குரு மணல் நிரப்பியாச்சு. குருமணல் என்று சொல்வது கடற்கரை மணல். ஷெல் விழுந்தால் சரக்கென்று இறங்கி சிக்கிப்போய் நிற்கும். வெடிக்காது. சும்மா களிமண் போட்டு நிரப்பினா, கட்டி பட்டுப்போய், ஷெல் மூடையில் விழுந்த உடனேயே வெடித்துவிடும். இதெல்லாம் யாழ்ப்பாணத்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள். விஞ்ஞானி என்றால் அப்துல்கலாம் மாதிரி அணுகுண்டு எப்படி செய்யவேண்டும் என்று கண்டுபிடிக்க தேவையில்லை. அணுகுண்டு போட்டால் எப்படி தப்புவது என்று கண்டுபிடிப்பவனும் விஞ்ஞானி தான். ஏனோ தெரியாது அவர்களை உலகம் கொண்டாடுவதில்லை!

பங்கர் ரெடி. இப்போது இண்டீரியர் டிசைன் செய்யவேண்டும். சும்மா போய் பதுங்கி இருக்கும் பங்கர் தான்.ஆனால் அதற்குள் நிறைய விஷயம் இருக்கு. பங்கர் சுவரில் கிழக்கே பார்க்கும் வண்ணம் சதுரவடிவ அரை அடிக்கு அரை அடி, குட்டி பொந்து ஒன்று போட வேண்டும். அங்கே ஓரு பிள்ளையார் சிலை, உங்கள் ஊர் கோயில் கடவுள் படம். மடு மாதா, நல்லூர் கந்தன் படம் என் ஒரு மினி சுவாமி வைப்போம். அம்மா காலையில் சாமிக்கு பூ ஆய்ந்து வைக்கும்போது, பாவம் பங்கருக்குள்ளும் இறங்கி இரண்டு பூக்கள் வைத்து கும்பிடுவார். கோயிலில் இருக்கும் கடவுள்களை விட பங்கருக்குள் இருக்கும் கடவுள்களை தனியாக கவனிக்கவேண்டும். இல்லாவிடில் பாவம் நாங்கள், கடவுள்கள் கைவிட்டு விடுவார்கள்.

பங்கரில் அதேபோல இன்னொரு பொந்து வைத்து, அங்கே மெழுகுதிரி, நெருப்புப்பெட்டி(தீப்பெட்டி) வைக்கவேண்டும். ஹெலிகாப்டர் மேலே சுற்றினால், பங்கரின் வாசலை ஓலையால், அல்லது ஒரு தகரத்தால் உள்ளே இருந்து மூடவேண்டும். இல்லாவிட்டால் கண்டுபிடித்து சுட தொடங்கிவிடுவான். மூடிவிட்டால் உள்ளே கும்மிருட்டு, வெளிச்சம் வேண்டும். அதுக்கு தான் இந்த மெழுகுதிரி. ஆத்திர அவசரத்துக்கு பங்கருக்கு ஓடும்போது எவனாவது தீப்பெட்டி எடுத்துக்கொண்டு ஒடுவானா? அதுக்கு தான் இந்த முன் ஜாக்கிரதை. காமடி என்னவென்றால் எங்கள் முன்வீட்டுக்காரர்கள் தங்கள் பங்கருக்குள் கரண்ட் கனெக்ஷன் குடுத்து மின்விசிறி, லைட் எல்லாம் பொருத்தி இருந்தார்கள். உள்ளே இருந்த சாமிப்படத்துக்கு LED ஒளிவட்டம் வேறு. நாங்கள் எல்லாம் கண்காட்சி பார்க்க போவது போல அவர்கள் பங்கரை பார்க்க போவோம். சூப்பராக இருக்கும். ஆனால் குண்டு போடும்போது அனேகமாக கரண்ட் இருக்காது. அப்படியே இருந்தாலும் பக்கத்தில் விழுந்தால், அதிர்ச்சியில் பல்ப் வெடிச்சு கரண்ட் லீக்காகி சாகவேண்டியது தான். ஷோ காட்டுறதுல எங்கட யாழ்ப்பாணத்து ஆட்கள் போல உலகத்தில வேற எங்கேயும் ஆட்கள் பார்க்கமாட்டீர்கள். கனடாவில் அகதி அந்தஸ்து கிடைத்ததுக்கே மண்டபம் எடுத்து பார்ட்டி வைத்த ஒருத்தரை கூட எனக்கு தெரியும்! அம்மா இப்படியா கூத்துக்களை “புறக்கோலம்” காட்டுறாங்கள் என்று சொல்லுவா. யாழ்ப்பாண தமிழ் என்று நினைக்கிறேன்.

அந்த நாட்களில் சண்டை தொடங்கிவிட்டால் பள்ளிக்கூடம் இருக்காது. ஜாலி தான். என்ன ஒன்று, குண்டு அடிக்கடி பக்கத்தில விழும். அம்மா எங்களை எல்லாம் பங்கருக்குள்ளே போயிருந்து விளையாடுங்க என்று சொல்லுவா! உள்ளே ஒரு பாயை விரித்து அனேகமாக விளையாடும் விளையாட்டு தாயம் தான். யாருக்காவது தாயம் ஞாபகம் இருக்கிறதா? 32 பேட்டி, நான்கு சிப்பி சோகி, சதுரங்க ஆட்டம். யாராவது ஒருத்தன் அலாப்பிகொண்டு சண்டை பிடிக்கும் மட்டும் போட்டி தொடரும். சில நேரங்களில் மாபிள் போளை கூட விளையாடி இருக்கிறோம். பரீட்சை நேரம், படிக்கும் போது அடிக்கடி பங்கருக்குள் போனால் படிப்பு குழம்பும் என்பதால் பங்கருக்குள்ளேயே டேரா போட்டு படிப்பதுண்டு. அது ஒரு அழகிய கனாக்காலம் தான்!


குண்டு போடும்போது யாரு முதலில் பங்கருக்குள் போவது என்பதில் கொஞ்சம் பயம். பாம்பு பூரான், புலிநக சிலந்தி எல்லாம் உள்ளே இருக்கலாம். போனவருக்கு கடி நிச்சயம். அந்த சண்டையில், பத்து போடவோ, புக்கை கட்டவோ குருநகருக்கு உங்களை தூக்கிக்கொண்டு ஓட முடியாது பாருங்கள். இதிலும் அம்மா தான் சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து கிளியர் பண்ணுவா! அதுக்கப்புறம் அடிச்சு பிடிச்சுக்கொண்டு உள்ளே ஓடுவோம். ஆனால் இந்த இளந்தாரி ஆண்கள் உள்ளே வர பிகு பண்ணுவார்கள். அதென்ன பொம்பிள பிள்ளை மாதிரி ஓடி பதுங்கிறது என்று சொல்லிக்கொண்டே வெளிய வாசலில் நின்று பொம்மர் பார்த்து, அது எங்கட ஏரியாவுக்கு குண்டு போடபோகுதென்றால் மாத்திரமே உள்ளே வருவார்கள். ஆனா பின்னாடிக்கு சுப்பர் சொனிக், கபீர் விமானங்கள் போன்ற ஒலியை விட வேகமாக பறக்கும் விமானங்கள் வந்த பிறகு, இவர்கள் வீரத்தை கொஞ்சம் குறைத்து, பங்கர் படிக்கட்டில் நின்று செடில் காட்டுவார்கள்!

93, 94ம் ஆண்டு காலப்பகுதியில் பொம்மர் விமானிகள் FM ட்ரான்ஸ்மிஷன் மூலம் தான் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். அப்பா அவர்களின் frequency ஐ tap பண்ணி, குறுக்கே கேட்பார். சிங்களத்தில் பேசினாலும் இவருக்கு கொஞ்சம் புரியும்.
“மே நண்டா காம்பேக்க டான்டோன்ன”
“தவ ரவுண்டேன் கீல, பள்ளேன்ன யன்ன .. மங் கவர் ….”
“என்னப்பா சொல்லுறாங்கள்”
“நண்டா காம்ப் அடிக்க போறாங்கடா”
“எதெப்பா நண்டா காம்ப்?”
“நந்தா என்றால் மாமி என்று அர்த்தம்.. மாமின்ட காம்ப்”
“மாமிக்கு எங்கயப்பா காம்ப் இருக்கு?”
அப்பாவும் இப்போது நாசியை தடவி யோசித்தார்.
டேய் மாமி எண்டுறது கிட்டிண்ட மாமிடா, பக்கத்து ரோட்ல தானே கிட்டு மாமி வீடு இருக்கு. ஓடுடா ஓடு பங்கருக்க..
கிட்டு அண்ணா போலவே கிட்டு அண்ணாவின் மாமி எங்கள் ஊரில் மிகப்பிரபலம். அதனால் அவர் வீட்டில் தான் குண்டு போடா போகிறார்கள் என்று பயந்து, நாங்கள் எல்லாம் ஓடி உள்ளே ஒளிந்திருக்க, குண்டுகளை எங்கேயோ தூரத்தில் போட்டுவிட்டு விமானங்கள் ஓடிவிட்டன. கொஞ்ச நேரம் கழிந்து தான் தெரிந்தது, குண்டு போட்டது கொக்குவிலில் இருந்த “நந்தாவில் அம்மன் கோவிலடி” காம்படியில் என்று. வழமை போலவே குண்டு காம்பில் விழாமல் பக்கத்துவீட்டில் விழ ஆறேழு பேர் செத்துப்போனார்கள். எண்ணிக்கை மறந்துவிட்டது. செத்தவர்களும் தான்.

என்னடா இது பங்கர் வெட்டி கனகாலம் ஆயிட்டுதே? எப்ப தான் எங்கள் முன் காம்புக்கு குண்டு போடுவாங்கள்? நாங்களும் கஷ்டப்பட்டு பங்கர் வெட்டினதுக்கு பலனை அனுபவிக்கலாம் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது தான் அந்த நாளும் வந்தது. அது ஒரு மாசி மாசத்து காலை. 1991 என்று நினைகிறேன்.

அன்றைக்கு காலையே ஏழு மணிபோல இரண்டு பொம்மர்கள் வந்து ஐந்தாறு தடவை ரவுண்ட் அடித்துவிட்டு போனது. பொம்மர் சுற்றும் போக்கை பார்த்தே அம்மா சொல்லிவிட்டார் இது நோட்டம் பார்க்க வந்திருக்கு. குண்டு போடாது என்று. நாங்களும் எங்கள் வேலைகளை பார்த்துகொண்டிருக்க தான், நாச்சிமார் கோயிலடியில் வசிக்கும் அப்பாவின் நண்பர் செல்வராஜா, அந்தக்காலத்தில் சிலோன் ஏர்போர்சில் வேலை செய்தவர் ஓடிவந்தார். அவர் வரும்போதே ஒரு அவசரம்.
“என்ன அவசரமாய் விடிய வெள்ளன இங்கால பக்கம்”
“சந்திரா, இப்ப FM கேட்டனான், பொம்மர் காரங்கள் இங்கால தான் குண்டு போட போறாங்கள்”
ஏன் அப்படி சொல்ற?
“கம்பசுக்க போட்டிடாத, அந்த காம்ப் பக்கத்து வீட்டில தாமரைக்குளம் இருக்கும், பார்த்து வை” எண்டு கதைச்சவங்கள்
தாமரைக்குளமா அது எங்க இருக்கு?
எங்கட பாங்கர் நடராசா, வீட்டு முற்றத்தில கண்டறியாத தாமரை குளம் வச்சிருக்கிறான் இல்ல? குண்டு போட்டா அங்கேயும் விழாது, காம்பிலேயும் விழாது, பின் வீடு, உன்ர வீட்ட தான் விழும்
சும்மா விசர்க்கதை கதைக்காத, அந்த சின்ன குளம் மேல இருந்து தெரியுமே, நீ சும்மா எதையோ கேட்டிட்டு.
சொல்றத சொல்லிப்போட்டன், சும்மா நடப்பு காட்டாம, இண்டைக்கு மட்டும் கொக்குவில் பக்கம் போய் இருங்க
எங்களிட்ட நல்ல பங்கர் இருக்கு, பார்ப்பம்
செல்வராஜா அங்கிள் போய்விட்டார். அப்பா டென்சன் ஆகவில்லை. ரேடியோவை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டார். அம்மா உடனேயே அக்கம் பக்கம் விஷயத்தை சொல்லிவிட்டார். நியூஸ் தீயாய் பரவியது. அம்மா அவசர அவசரமாக சமைக்க தொடங்கினார். வீட்டுக்கதவுகளை இப்பவே பூட்டு போட்டு மூடுவிட்டு முன் வாசல் மட்டும் திறந்து வைத்திருந்தார். தாலிக்கொடி, நகை பாக் ரெடி. அவசரத்துக்கு ஓட எல்லாமே ஆயத்தம். தூரத்தே பொம்மர் சத்தம் கேட்டது!


பொம்மர் வருது என்றவுடனேயே, எங்கள் பக்கத்துவீட்டு அன்னலட்சுமி கிழவி ஓடிவந்துவிட்டது. நாங்கள் போக முன்னமேயே அது பங்கருக்குள் போய் விட, நாங்கள் எல்லாம் உள்ளே போக தயங்கினோம். அந்த கிழவி சரியாக குளிக்காது. பக்கத்தில் போனாலே “தாழம்பூவே வாசம் வீசு” தான். ஆனா “அம்மா விறகு கட்டை எடுக்கட்டா?” என்று மிரட்ட, மூக்கை பொத்திக்கொண்டு ஒவ்வொருவராய் உள்ளே போனோம். பொம்மர் இப்போது ஒரு ரவுண்ட் வந்துவிட, அம்மா கேட்டை பூட்டிக்கொண்டு(பங்கருக்குள் இருக்கும்போது தான் கள்ளர் வருவாங்கள்), பங்கருக்குள் வந்தார். அப்பா இன்னமும் வெளியே தான்! கையில் FM ரேடியோவில் பொம்மர் காரனின் லைவ் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டு!

இரண்டாவது ரவுண்ட். எங்கள் ஏரியாவை அடிக்க போறான் என்பது தெரிந்துவிட்டது. நாங்கள் எல்லோரும், அப்பாவை வா வா என்று கத்த, அவர் இன்னமும் நடப்புக் காட்டிக்கொண்டு நின்றார்! சரியான frequency ஐ இன்னமும் ரேடியோவில் பிடிக்க முடியவில்லை. பங்கருக்குள்ளே இன்னொரு காட்சி ஓடிக்கொண்டு இருந்தது! எட்டடி நீள பங்கரில் ஆறுபேர் இருக்கிறோம். கிழவிக்கு பக்கத்தில் யாரும் போகவில்லை. கிழவி ஒரு உருத்திராட்ச மாலையை கையில் வைத்துக்கொண்டு “அப்பனே, முருகா, பிள்ளையாரப்பா” என்று எல்லா கடவுளுக்கும் பங்கருக்குள் வரும்படி இன்விடேஷன் கொடுத்துக்கொண்டு இருக்க, எமக்கோ நாற்றம் தாங்க முடியவில்லை. மேலே வேறு அவன் குண்டு போட்ட பாடில்லை. பாவிகளா ஏண்டா இந்த சுத்து சுத்திறீங்க? வந்தமா போட்டமா என்று போகவேண்டாம்?

மூன்றாவது ரவுண்ட், பதிகிறான். மாமரத்துக்கு மேலால் கிரீச்சிக்கொண்டு சத்தம், அரை வினாடி தான், “டம்டமாங்” என்ற பெருத்த சத்தத்துடன் குண்டு விழுந்து வெடிக்கிறது. பங்கர் வாசல் அப்பாவுக்காக திறந்து இருந்ததால் படீர் என்று காற்றும் புழுதியும் உள்ளே அடிக்க, எல்லோரும் ஏக நேரத்தில் அப்பாஆஆஆஆஆஆ என்று கத்தினோம். அண்ணா உடனேயே வெளியே போய் அப்பாவை பார்க்க எத்தனிக்க அம்மா அவனை உள்ளே இழுத்தார். குண்டு இன்னமுமே சிதறிகொண்டு இருந்தது. ஒரு சில சன்னங்கள் பங்கர் வாசல் மட்டும் வந்து விழுந்தன. தென்னங்குற்றிகளுக்கிடையே இருந்து மணல் அதிர்ச்சியில் சிந்திக்கொண்டு இருந்தது. தலை எல்லாம் மண். அப்பா என்ன ஆனார்?அம்மாவும் நாங்களும் கதறுகிறோம். இரண்டு செக்கன் இருக்கும், அண்ணன் சொல்வழி கேட்காமல் எழுந்து ஓடுகிறான். எங்களுக்கு டிக் டிக் என்று இருக்கிறது. கடவாய் எல்லாம் தன்னாலே அடித்துக்கொள்கிறது. நடுக்கம். விமானம் அடுத்த ரவுண்ட் வருகிறது. கொஞ்ச நேரத்தில் அண்ணா திரும்பி ஓடி பங்கருக்குள் நுழைகிறான். அவனுக்கு பின்னால் அப்பா பட படவென உள்ளே நுழைந்ததை பார்த்த பிறகு தான், எங்களுக்கெல்லாம் நெஞ்சுக்குள் தண்ணி வந்தது, அம்மாவை திரும்பி பார்த்தேன்.

அம்மா இன்னமுமே வீறிட்டு அழுதுகொண்டு இருந்தார். அப்போது பிறந்த குழந்தை போல!
The secret of the greatest fruitfulness and the greatest enjoyment of existence is: to live dangerously!
--Friedrich Nietzsche, The Joyful Wisdom

பின் குறிப்பு:
அது தான் இந்த பதிவின் கிளைமாக்ஸ். நாங்கள் பங்கருக்குள் இருக்கும் போது மேலும் மூன்று குண்டுகள் எங்கள் வீட்டில் விழுந்ததும், நல்ல காலம் அப்பா அந்த இடத்திலேயே விழுந்து படுத்ததால் உயிர் தப்பியதும், பின்னாலே நடந்த பல நூற்றுக்கணக்கான குண்டுவெடிப்புகளும், நான் பதுங்கிய பங்கர்களும், பல சுவாரசிய விஷயங்கள் என்று இந்த பதிவு தொடரலாம் தான். ஆனால் நீண்டுவிட்டது.
சென்ற வருடம், நான் யாழ்ப்பாணம் போயிருந்த போது, அந்த மாமரத்தடிக்கு போயிருந்தேன். பங்கர் இருந்த இடம் குப்பை போட்டு மூடியிருந்தது. அதற்குள் இருந்த கடவுள்களும், விளையாட்டுகளும், பயங்களும் … எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்.

Author: சஞ்சயன்
•10:18 AM
ஏறத்தாள 33 - 34 வருடங்களுக்கு முன்னான நினைவுச் சிப்பிக்குள் முத்தாய் ஒளிந்திருந்த கதை இது. ஏனோ இன்று நினைவில் கரை தட்டியது.

காலம் 1976 -77 கள். மட்டக்களப்பு மாவட்டத்தின்  பிரபல்யமான பாடசாலையாகிய மெதடிஸ்த மத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற  கனாக்காலம்.

என்னுடன் பதுளையில் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் படித்த நண்பனும் அவனின் இரு சகோதரர்களும் என்னுடன் விடுதியில் தங்கியிருந்தார்கள். ஆரம்ப காலங்களில், மட்டக்களப்பு மண்ணின் புழுதி, மனத்தையும் உடலையும் ஆட்கொள்ள முதல் எனக்கு நண்பனாக ப‌ழைய பதுளை நண்பன் மட்டுமே இருந்தான்.

இவர்களின் பதுளைத் தமிழ் மட்டக்களப்புத் தமிழுக்கு புதிதாய் இருந்ததால் இவர்களின் தமிழ் வேடிக்கையாய் இருந்தது பலருக்கு. நக்கலுக்கும், கிண்டலுக்கும் உட்பட்டார்கள்.  காலப் போக்கில் மொழிவேறுபாடுகள் மறைந்து போயின. விடுதி வாழ்க்கை என்பது ஒரு வித இயந்திரத் தன்மையான வாழ்க்கை. நேரம் தவறாமால் எல்லாமே நடக்கும். சூரியன் உதித்து மறைவது போல.

காலையில் எழும்பி மாலையில் மயங்கும் வரை எல்லாமே அட்டவணையிடப்பட்டிருக்கும். மாணவ தலைவர்களின் மிரட்டல்களுக்கும் ஆசிரியர்களின் கண்டிப்புக்கும், இவ்றையெல்லாம் மீறி ”முற்றும் உணர்ந்த” எங்கள் அதிபர் பிரின்ஸ் காசிநாதரின் ”கழுகுக் கண்களையும்” மீறி எம்மால் எதையும் செய்ய முடியாதிருந்த காலம் அது.

காலையில் மேற் பக்கம் கருகியிருக்கும் ஒரு றாத்தல் பாண் மூன்றாக வெட்டப்பட்டு சம்பலுடன் பரிமாறப்படும். அன்றைய காலையுணவுக்கு பொறுப்பானவர்கள் எமது நண்பர்கள் எனின் மூன்றில் ஒன்று என்னும் விதி யாருக்கும் தெரியாமல் மீறப்பட்டு, எம்மிலும் சிறியவன் ஒருவனுக்கு காலையுணவு ஏறக்குறைய இல்லாது போயிருக்கும்.  பசியின் முன் நியாயம் அடிபட்டுப்போகும் என்பதை முதன் முதலில் உணர்த்திய இடம் எமது உணவுச்சாலையே.

அப்போதெல்லாம் பாடசாலை இரு நேரங்கள் நடைபெற்றது. மதிய இடைவேளை நீண்டிருக்கும். வெட்டி எடுத்த தண்டவாளத்தில் இரும்புத் துண்டால் அடித்து சாப்பாட்டு நேரம் அறிவிக்கப்பட்டதும் உணவுச் சாலையின் கதவுக்கருகில் வரிசையில் நின்று மாணவர் தலைவர்களின் கட்டளைப்படி உட்புகுந்து எனக்கு என்று வழங்கப்பட்ட இடத்தில் எனது அலுமீனிய தட்டில் இடப்பட்டிருக்கம் சோற்றின் அளவையும் கறிகளின் அளவையும் கண்கள் அளவெடுக்கும் வரை மனம் பெரும் பாடு படும். அன்று உணவு பரிமாறுவது எமது நண்பர்களில் ஒருவராக இருந்தால் எமது பாடு கொண்டாட்டம் தான். இல்லையேல் திண்டாட்டம். கொண்டாட்டமும் திண்டாட்டமும் . இரவையும் பகலையும் போல் மாறிக் கொண்டேயிருந்தது.

மாதத்தில் ஒரு நாள் அதாவது முழு நிலவன்று இரவு கல்வி நேரம் இல்லாதிருக்கும். விளையாட்டுகள் களைகட்டும். மகிழ்ச்சியின் உச்சத்தில் கண்ணயரும் வரை கொண்டாட்டமாய் கழியும் ஒரே ஒரு இரவு, அந்த முழு நிலவின் இரவொன்றே. இந்த ஒரு நாளுக்காவே வாழ்ந்திருந்த காலங்கள் அவை.

இவ்வாறு நானும் எனது பதுளை நண்பர்களும் விடுதி வாழ்க்கைக்கு இசைவாக்கம் அடைந்திருந்தோம். எனது வகுப்புத் தோழனும் இன்றைய காலத்தில் பாரீஸ் நகரத்தில் வசிப்பவருமாகிய நண்பர் ராஜேந்திரன் என்பவரும் எம்முடன் விடுதியில் தங்கியிருந்தா(ன்)ர்.

எங்களின் பெற்றோர்கள் விரும்பியதை நாம் பாடசாலையில் செய்தோமோ நானறியேன். ஆனால் நாம் விரும்பியதை தேவைக்கதிகமாகவே செய்தோம். நானும், எனது பதுளை நண்பர்கள் இந்துக்கள். இந்த ராஜேந்திரன் ரோமன் கத்தோலிக்கவர். பகலில் உயிர் நண்பர்களாய் இருந்த நாம் அதிகாலையில் மட்டும் எலியும் பூனையுமாய் இருக்க வேண்டிய காலம் எமக்குத் தெரியாமலே எம்மை சூழ்ந்து கொண்டது.

இந்துக்களின் சுவாமியறை ஒரு மண்டபத்தின் வலது கோடியிலும், ரோமன் கத்தோலிக்கத்தவரின் ஜெபி்க்கும் அறை இடது கோடியுலும் இருந்தது. இந்து மாணவதலைவர்கள் என்னிடம் தினமும் பூப்பறித்து சுவாமிப்படங்களை அலங்கரிக்கும் பொறுப்பை தந்த போது ரோமன் கதோலிக்கத்து பூஜையறையை மலர்களால் அலங்கரிக்கும் பொறுப்பு ராஜேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.

தினமும் யார் முதலில் பூப்பறிப்பது என்று பெரும் போட்டி ஆரம்பமாயிற்று. சிவனே என்று மணியடிக்கும்வரை தூங்கும் கும்பகர்ணனின் தம்பி நான்.  நான் எழும்பும் போது பூக்கள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க ஜெபமண்டபத்தில் யேசுநாதரையும், புனித மரியாளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கும். முருகனும், சிவபெருமானும் பூக்கள் இன்றி பரிதாபமாய் இருப்பார்கள். இந்த சரித்திர தோல்வியை இந்து மாணவதலைவர்களால் தாங்க முடியாதுபோயிற்று.

என்னிடம் இருந்த பொறுப்பு பறிக்கப்பட்டு பதுளை நண்பர்களிடம் கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் காலை யேசுவுக்கும், புனித மரியாளுக்கும் பூ இருக்கவில்லை. முருகனில் இருந்து சரஸ்வதி வரை என்று எல்லோரும் பூவினால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள்.

எங்கள் கடவுளின் மானம் காப்பாற்றிய வீரர்களாக எனது பதுளை நண்பனும் அவனின் சகோதரர்களும் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்ட்டார்கள். அவர்களுக்கு உட்சாகம் கரைபுரண்டோடியது.

இந்த தோல்வியை ரோமன் கத்தோலிக்க பக்கத்தில் ஈடு செய்ய நண்பன் ராஜேந்திரன் பணிக்கப்பட்டான். அன்றில் இருந்து  தொடங்கியது பெரும் யுத்தம். யார் முதலில் எழும்புகிறானோ அவன் எல்லா பூக்களையும் பறித்து தனது கடவுளுக்கு படைத்தான். மற்றவன் பூக்கள் தேடி விடுதியை விட்டு அலைய  வெளியே செல்ல வேண்டியேற்பட்டது.

5.30 க்கு எழும்பி பூ பறிக்கும் இவர்களின் போட்டியால் இவர்கள் எழும்பும் நேரம் காலை 5 மணியாகி, பின்பு 4 மணியாகி, அதன் பின்பு 3 மணியாகி இறுதியில்  சாமமாகியது. சாமத்தில் பூக்கள் பூக்காது என்பதால் இவர்கள் பூக்களின் மொட்டுக்களைப் பிடுங்கி தண்ணீரில் போட்டு சாமியறையில் வைக்கத் தொடங்கினார்கள். இதுவே நாளைடைவில் இரவு 10மணிக்கே பாடசாலை எல்லைக்குள் இருந்த நாளை பூக்க வேண்டிய சகல மொட்டுக்களும் பறிக்கப்பட்டு தண்ணீரில் இடப்பட்டு மறுநாள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டது.

பூக்கள் தேவைப்படாத இஸ்லாமிய நண்பர்களை இருபகுதியினரும் சமமாகப் பிரித்து எடுத்து நீ எங்களுக்கு பூ பறித்து தர வேண்டும் என்ற கூத்தும் சில காலம் நடந்தது. அவர்களும் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வரும் போதெல்லாம் இரு பகுதியினருக்கும் பூக்களை வெளியில் இருந்து கொண்டு வந்தது தந்தனர். மத ஒற்றுமையின் உச்சம் அது.

நான்  மாணவர் தலைவராகி, பின்பு சிரேஸ்ட மாணவ தலைவராக வந்த பின்பும் இதே கூத்து தொடர்ந்தது. நானும் ரோமன் கத்தோலிக்க மாணவர்களை கட்டுப்படுத்தி என் பங்குக்கு என் தெய்வங்களுக்கு பூ பறிக்க வசதிசெய்து கொடுத்‌து புண்ணியம் தேடிக் கொண்டேன்.

ஏறத்தாள 33 வருடங்களின் பின் ஓர் நாள் எனது கல்லூரிக்குள் நுழைந்து எங்கள் கால்களின் தடங்களை தேடி நடந்து கொண்டிருந்தேன். மனம் காற்றிலும் கடுகி 33 வருடங்களைத் தேடி ஓட ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதை சொல்லிற்று.

மேசையில் சப்பாணி போட்டு இருந்து சங்கீதம் கற்பித்த மகாலிங்கம் மாஸ்டரின் வகுப்பறை, அதனருகே தண்ணீர்ப் பைப், பழைய கன்டீன். கன்டீனின் அருகே ‌அதே பழைய மணியடிக்கும் தண்டவாளத் துண்டு. அதற்கங்கால் விடுதியின்  உணவுச்சாலை, அதற்கப்பால் விடுதியாசிரியர் சுந்திரலிங்கம் அண்ணணின் அறையும், புகை படிந்து கரிய நிறத்திலிருக்கும் குசினி. கழிவு நீர் தேங்கி நிற்கும் கான். அதற்குப் பின்னால் குளிக்கும்  தண்ணீர்த் தொட்டிகள்,  தண்ணீர் டாங்க், கிணறு.

இப்படி எல்லா இடங்களையும் மனதால் நுகர்ந்து திரிகிறேன். என்னைக் கடந்தோடும் இன்றைய மாணவர்கள். அவர்களிடமும் ‌ எம்மிடமிருந்த அதே குறும்பு, குசும்பு, சேட்டைகள். விடுதியின் சுண்ணாம்புச் சுவற்றை தடவி சுகம் காணும் என்னை குறும்புக்கண்களால் அளவெடுத்துப் போகிறார்கள் சிலர். இங்கே படித்தீர்களா? Old boy?  என்று குசலம் விசாரித்தவனின் தலைகோதி புன்னகைத்து தலையாட்டினேன் வார்த்தைகள் ஏனோ வர மறுத்தன.

கெதியில இங்க ”புது பில்டிங்” வருது. பழைய hostel ஐ உடைக்கப்போறாங்களாம் என்றான் அவன். புன்னகைத்து ”தெரியுமய்யா” என்றேன்.

அதிபரின் கந்தோர் கதவினருகே நின்ற போது என்னையறியாது கழுத்து வரை மேற்சட்டை பொத்தான்களை கை தன்னிச்சையாக பூட்டிய பின்பே நான் என்ன செய்கிறேன் என்பது புரிந்து. பாடசாலை நாட்களில் மேற்சட்டை பொத்தான்கள் இன்றி இந்தக் கந்தோருக்குள் உட்புகுவது தற்கொலைக்குச் சமம். அவ்வளவு கடுமையான அதிபர் எமது பிரின்ஸ் சேர். இன்றோ நிலமை வேறு. இருப்பினும்  தன்னிச்சையாக பூட்டப்பட்ட பொத்தான்களை களட்ட விரும்பமின்றி உட்புகுந்தேன்.

கண்ணாடிப் பெட்டியினுள் எமது காலத ”பெரு மண்டபத்தின்” இரு அத்திவாரக் கற்கள் ஞாபக சின்னங்களாய் இருக்க, இன்றைய அதிபர், பெருமையாய் தன் காலத்தில் கட்டப்பட்ட புதிய மண்டபத்தைப் பற்றி விபரித்தர்ர். மகிழ்ச்சியாய் இருந்தாலும் எதையோ இழந்தது போலிருந்தது எனக்கு.

அங்கிருந்து வெளியேறிய போது, போட்டி போட்டு பூப்பறித்த செம்பரத்தை, மல்லிகை, நந்தியாவட்டைப் பூ மரங்களை கண்கள் தேடின. புதிது புதிதாய் பூத்திருந்த சீமெந்துப் பூக்களின் சுவர்களின் மத்தியில் எங்களின் நட்பூக்கள் எமது எதையும் காணக்கிடைக்கவில்லை.

கடந்து ஓடிய மாணவர்களின் வேகத்தில் கிளம்பிய புழுதி மட்டும் பாடசாலையின் வாசனையுடன் இருந்தது.

...........

பூப்பறிப்பதில் கில்லாடியும், அதற்குப் பின்னான காலங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட ”பதுளை நண்பன்”  ஒருவனுக்கு இது சமர்ப்பணம்.
Author: யசோதா.பத்மநாதன்
•4:23 AM


இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பானத்துப் பேச்சுவழக்கு விஷேஷம்.

கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன.

இவர்கள் காணவர்மாரை இஞ்சரும்!,இஞ்சருங்கோ! என்று அழைக்கும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்ததும் இஞ்சரும் அப்பா!இஞ்சருங்கோ அப்பா என அது பதவிப் பெயர் கொண்டழைக்கப்படும் வழக்கு இன்றும் இருக்கிறது.(இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ.... என்று ஒரு பாடலும் உள்ளது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.)

அதற்கு, என்ன சங்கதி? என்றவாறு கணவர்மாரின் பதில் கேள்வி ஆரம்பமாக இப்படியாகச் அவர்களின் சம்பாஷனைகள் தொடரும். ஆனாலும் கணவர்மார் மனைவிமாரின் பெயரைச் சொல்லியோ அன்றேல் அவர்களின் செல்லப்பெயர் / வீட்டுப் பெயர்களைச் சொல்லியோ (பொதுவாக கிளி,ராசாத்தி,செல்லம்,குட்டி,...இப்படியாகச் செல்லப் பெயர்கள் இருக்கும்)அழைக்கும் வழக்கு இருக்கிறது.



என்றாலும் இந்த மெய்யே என்ற சொல் வீச்சு நல்ல அர்த்தம் நயம் தோய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது. மெய் என்பதற்கு உடல் என்றொரு அர்த்தமும் உண்டு. கணவன்மாரை மனைவிமார் மெய்யே! மெய்யே!! (உண்மையே! உண்மையே!)என்று கூப்பிட்டதனால் போலும் நீங்களும் நாங்களும் பிறந்திருக்கிறோம்!!

(நேற்றய தினம் (11.02.2012) இவ்வாறான ஒரு கருத்துத் தோய மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களின் பேச்சைக் கேட்டதன் எதிரொலி இது)
Author: யசோதா.பத்மநாதன்
•6:00 PM


நினைவிருக்கிறதா? சனசமூக நிலையம் என்றும் அதற்கொரு பெயர் இருந்தது.பொதுவாக யாழ்ப்பாணத்துக் கிராமப் புறங்களில் இது இயங்கி வந்தது.கிராமத்து ஆண்களும்பெரும்பாலும் இளைஞர்களும் பத்திரிகை சஞ்சிகை பார்க்கக் கூடும் இடம் என்று மட்டுமில்லாமல் ஊர் புதினம், மற்றும் அன்றாட நிலவரங்கள் கதைக்கும் ஒரு பொது இடமாகவும் அது இருந்தது. சமூகத்தை இணக்கும் ஒரு மையமாகவும் சமூக முன்னேற்றம் அதன் இலக்காகவும் விளங்கியது.

ஆனால்,பெண்கள் அதிகம் அங்கு போனதாகவோ அவர்களின் நடவெடிக்கைகளில் பங்கு பற்றியதாகவோ நான் அறியவில்லை.அது எவ்வாறு ஆரம்பித்தது? எவ்வாறு இயங்கியது? பணம் எங்கிருந்து கிடைத்தது? என்பது பற்றி எனக்கதிகம் தெரியாது.

இந்த ஈழத்து முற்றத்துக்கு வருபவர்கள் உங்கள் உங்கள் பிரதேசத்தில் அது எவ்வாறு தோற்றம் பெற்றது? எவ்வாறு இயங்கியது? என்று கூறினால் நன்றாகவும் அறியாத பல விடயங்களை எல்லோரும் அறிந்ததாகவும் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாகவும் அது இருக்கும்.

இதற்கான படத்தைத் தேடிக் கொண்டு போன போது சுவாரிசமான வாசிக சாலை அமைப்பாளர் ஒருவரின் நினைவு மீட்டல் கிட்டிற்று. அதனையும் ஒரு வரலாற்றுத் தகவலுக்காக ஈழமுற்றத்து வாசகர்களுக்காகத் தருகிறேன்.

கரந்தன் கலைவாணி வாசகசாலை வரலாறு

எழுபதின் ஆரம்பகாலாப்பகுதி. நான் அப்போது உரும்பிராய் இந்துக்கல்லு}ரியில் உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். படித்துக்கொண்டிருந்தேன் என்பதைவிட படிப்பதாகக் கூறிக்கொண்டு பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தேன் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமானது. வேலை செய்ய வேண்டிய வயதில் வேலை செய்யாது தந்தையாரின் சிறிய வருமானத்தில் வாழ்ந்த காலம். எப்படியிருந்தபோதும் வாய்க்கு உருசியாக அம்மாவின் சாப்பாடு எப்போதும் இருக்கும். நண்பர்களுடனும், என் வயதை ஒத்த நெருங்கிய உறவுகளுடனும் இரவில் நடுச்சாமம்வரை கும்மாளம் அடிப்பதும், யாழ் முற்றவெளியிலும், பரமேஸ்வராக் கல்லுரி மைதானத்திலும் பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் எல்லா உதைபந்தாட்டங்களையும் சென்று பார்ப்பதும், யாழ்ப்பாணத்திலுள்ள சினிமாக் கொட்டகைகளில் திரையிடப்படும் எல்லா திரைப் படங்களையும் தவறாமல் சென்று பார்ப்பதும், உரும்பிராய் கலை வளர்ச்சிக் கழகம் ஒன்று ஆரம்பித்த பின்னர் பல நாடகங்களை நடித்து அரங்கேறுவதிலும் முன்னின்று பொழுதை வீணாக்கிய காலம் என்றும் கூறலாம். எப்படி எப்படியெல்லாம் எமது இளமை நாட்களை இனிமையாகக் கழிக்க முடியுமோ அப்படியெல்லாம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த காலம். ஆனால் ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்துகொண்டுதான் இவையெல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தோம்.

அப்போதுதான் எமது கரந்தன் கிராமத்தில் ஒரு வாசகசாலை அமைக்கவேண்டும் என்று என் மனதில் ஓர் ஆசை ஏற்பட்டது. அப்போது கரந்தனில் ஒரு வாசிகசாலை அமைக்கவேண்டும் என்ற பேச்சை எடுத்தாலே அங்குள்ள பெரியவர்களிடம் அடியோ, அல்லது ஏச்சோ வாங்கவேண்டிய ஒரு நிலைமை இருந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

சில வருடங்களுக்கு முன்னர் கரந்தனில் உள்ள பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வாசகசாலை அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள். தற்போது போயிட்டி நோக்கிச் செல்லும் சந்தியில் திரு சின்னையா மாமாவின் காணிக்குள் ஒரு வாசகசாலையை அமைக்க ஆரம்பித்தார்கள். இவர் எனது அம்மாவிற்குத்தான் மாமா. ஆனால் அம்மா அழைப்பதுபோல்தான் சின்னையா மாமா, இராசையா மாமா என்று நாமும் எல்லோரையும் அழைப்போம். திரு.சின்னையா அவர்கள் தியாகதீபம் திலீபனின் பேரனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மட்டும் கடும் மழை பெய்தபோது மரத்துண்களாலும், தென்னை ஓலைகளாலும் வேயப்பட்ட கூரை மட்டும் கொண்ட அந்தக் கொட்டகைக்குள் ஒதுங்கி நின்றதாக ஞாபகம்.

அந்தக் கட்டடம் ஆரம்பமாகிய சில நாட்களுக்குள் திரு சின்னையா அவர்களின் குடும்பத்தில் ஒரு பூகம்பம் வெடித்தது. அவர்களின் குடும்பத்துள் ஏற்பட்ட பகமையால் அவருடைய தங்கையும், திரு இராசையா அவர்களுடைய மனைவியுமான திருமதி சின்னத்தங்கம் இராசையா மாமி திடீரெனத் தற்கொலை செய்துவிட்டார். அந்தச் சோகம், துயரம், அதிர்ச்சி கரந்தனிலிருந்த எல்லோரையும் ஓர் உலுப்பு உலக்கிவிட்டது. இவை எல்லாம் சிறுவனாக இருந்த என் மனதில் ஆழப்பதிந்து இப்போதும் அழியாமல் இருக்கின்றது. அந்தச் சம்பவம் நடந்தபின்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த வாசகசாலை இருந்த இடம்தெரியாமல் போய்விட்டது. அதன் காரணத்தினாலேயே வாசகசாலை கட்டவேண்டும் என்று யாராவது கதைத்தால் உடனே “முன்பு வாசகசாலையைத் தொடங்கி ஒருவரைப் பலி கொடுத்துவிட்டீர்கள், இனி யாரைப் பலி கொடுக்கப்போகிறீர்கள்?” என்று பொதுவாக பெரியவர்கள் எல்லோருமே கேட்பார்கள். அவர் இறந்ததற்கு அந்த வாசகசாலைதான் காரணம் என்றும் கூறுவார்கள். அதனால் பல காலமாக அதனைப் பற்றிப் பேசவே பலர் தயங்கினார்கள்.

இளைஞர்களாகிய எம்மிடம் எதுவித பணமோ, காணியோ, வசதிகளோ இருக்கவில்லை. ஆனால் என் மனதுள் எப்படியாவது ஒரு வாசகசாலை கட்டவேண்டும் என்ற அவா மட்டும் அதிகரித்துக்கொண்டே வந்தது. அப்போது என்னுடன் ஒன்றாகப் படித்த உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த அரியராசா என்ற நண்பர் சுன்னாகத்தில் ஓர் அச்சியந்திரசாலையில் வேலை செய்துகொண்டிருந்தார். ஓர் அதிஸ்டலாபச் சீட்டுப் போட்டால் ஓரளவு பணம் சேர்க்கலாம், அதனை வைத்துக் கொண்டு யாரிடமாவது ஒரு சிறிய காணியை இனாமாகப் பெற்று கட்டட வேலைகளை ஆரம்பிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அவரிடம் இதுபற்றிக் கதைத்தேன். தான் அதிஸ்டலாபச் சீட்டுக்களை அச்சடித்துத் தருவதாகக் கூறினார். அதற்கு ஆதாயமில்லாமல் செலவு மட்டுமாக நாற்பது ரூபாய்கள் வேண்டும் என்றும் கூறினார். நான் யாருடனும் இதுபற்றிக் கலந்துரையாடவேயில்லை. ஒருவாறு நாற்பது ரூபாய்களைச் சேர்த்து ஆயிரம் ஒரு ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிற அதிஸ்டலாபச் சீட்டுக்களை அச்சடித்து வைத்திருந்தேன்.

எனது நான்காவது மாமா சுந்தரலிங்கம் என்னைவிட மூன்று வயது மூத்தவர் என்றாலும் நெருங்கிய நண்பர் போலவே நாமிருவரும் அப்போது பழகிவந்தோம். இருவரும் ஒரே சாயலையும் அப்போது கொண்டிருந்தோம். அங்கிருந்த இளவயது மங்கையர்களைப்பற்றியும், மற்றையவர்களைப் பற்றியும் தினமும் பல உருசியான கதைகள் கூறுவார். தான் பார்த்துவிட்டு வந்த புதிய சினிமாப்படம் பற்றி ஒன்றும் விடாமல் கூறி எனக்கு நடித்தும், பாடியும் காட்டுவார். இளவயதில் சினிமாப் படம் பார்க்கும் ஆசையையும், பாடல்களில் கூடிய நாட்டத்தையும் ஊட்டியவரும் அவரேதான். அவரிடம் இதுபற்றிக் கூறி ஆலோசனை கேட்டேன். அவரும், எம்முடன் மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே எமது திட்டத்தை இரகசியமாகக் கூறி வைத்தோம்.

ஒருநாள் இரவு ஏழு மணியிருக்கும். நானும் சுந்தரலிங்க மாமாவும் அவர்களது வீட்டில், அதாவது எனது பேரானார் வீட்டிலிருந்த விளக்கை (Petrolmax) கொண்டுவந்து அந்தச் சந்தியில் வைத்தோம். அயலவர்கள் எல்லோரும் என்ன வீதியிலே பெரிய வெளிச்சம் தெரிகிறதே என்ன விசேசம் என்று கேட்டபடி ஒவ்வொருவராக அங்கே வந்து சேர்ந்தார்கள். அதுதான் அப்போதைய வழமை. அப்போதுதான் நான் யாருக்கும் தெரியாமல் அச்சடித்து வைத்திருந்த அதிஸ்டலாபச் சீட்டுக்களைக் காட்டி எமது நோக்கத்தை வெளியிட்டோம். அங்கிருந்த அனைவரும் அதற்கு தமது ஆதரவைத் தருவதாக உடனேயே உறுதியளித்தார்கள். அப்போது தற்செயலாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்த திரு சின்னையா மாமா “என்ன நடக்கிறது?” என்று கேட்டார். நாம் எமது நோக்கத்தைக் கூறியதும் அவர் எதுவுமே பேசாது சென்றுவிட்டார். அவருக்கு பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சோக நிகழ்வு மீண்டும் வந்திருக்கலாம்.

அப்போது மலாயன் “பென்சனியர்” திரு பொன்னையா அவர்களின் மருமகனான கதிர்காமதாஸ் அவர்களும், மகனான திரு இராசனேசன் அவர்களும்கூட அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எம்முடன் அருகருகே வாழ்ந்திருந்தபோதிலும் அதுவரை எம்முடன் நெருங்கிப் பழகியதில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அதுவரை நெருங்கிப் பழகாத கரந்தன் மக்கள் அனைவரும் அன்றிலிருந்து நெருங்கிப் பழக ஆரம்பித்துவிட்டார்கள். அந்த இடத்திலேயே வைத்து ஒரு நிர்வாகக் குழுவை நாம் தெரிவுசெய்தோம். தலைவராக திரு கதிர்காமதாஸ் அவர்களும், காரியதரிசியாக திரு ஜெயவீரசிங்கம் அவர்களும், பொருளாளராக திரு நாகராஜா அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள். உப தலைவர், உப காரியதரிசி, உப பொருளாளர் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். ஆனால் எனக்கு இவற்றில் எதுவித பதவிகளும் கிடைக்கவில்லை. அதனையிட்டு நான் எதுவித கவலை கொள்ளவுமில்லை. கிராமத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்தோம். அதுவே எமது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

அப்போது எங்கே இதனைக் கட்டுவது என்று எல்லோரும் கேள்வி எழுப்பியபோது திரு இராசையா மாமா அவர்கள் எழுந்து தான் தனது காணியில் ஒரு பகுதியை அன்பளிப்பாகத் தருவதாகக் கூறினார். அதன்படி வாசகசாலை தற்போது அமைந்திருக்கும் இடம் திரு இராசையா மாமா அவர்களால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அது எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நாம் எல்லோரும் அயல் கிராமங்களாகிய அச்செழு, நீர்வேலி, ஊரெழு, உரும்பிராய், கோப்பாய் போன்ற இடங்களில் வசிக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்றுப் பணம் சேர்த்தோம். இளைஞர்கள், பெரியவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்புத் தந்தார்கள். பலர் அன்பளிப்பாக பெருமளவு பணஉதவியும் செய்தார்கள். சுமார் ஆறு மாதங்களின் பின்னர் அதே சந்தியில் கிராமத்திலிருந்த பெரியவர்களான திரு சிவகுரு, திரு இராசையா, தம்பிப்பிள்ளை போன்றவர்களை அழைத்து அதிஸ்டலாபச் சீட்டுக்களை இழுத்து வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களைக் கொடுத்தோம்.

கட்டட வேலைகளும் ஆரம்பமாகி குறுகிய காலத்திற்குள்ளேயே வாசகசாலைத் திறப்புவிழாவையும் வெகுசிறப்பாக நடாத்தினோம். அன்று ஓர் ஒலிபெருக்கியை வாடகைக்கு அமர்த்தி வீதிவீதியாக அறிவிப்புச் செய்ய என்னுடன் படித்துக்கொண்டிருந்த நண்பன் திரு குமரேஸ்வரராஜா உதவிசெய்தார். இன்று அவன் எம்முடன் இல்லையே என்று எண்ணும்போது கவலைதான். அன்று அங்கே வாசகசாலையின் முன்னால் இருந்த “கரந்தன் கலைவாணி வாசிகசாலை” என்ற பெயர்ப்பலகை எழுத குறுகிய காலத்தில் யாரும் கிடைக்காததால் அதனையும் நானே எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது. அது மிகவும் அழகாகவும் அமைந்துவிட்டது. அது என்னால் எழுதப்பட்டதென்று எண்ணும்போது இப்போதும் எனக்குள் ஓர் ஆனந்த அலை ஓடுவதாகவே உணர்கிறேன். அன்று அங்கே வாழ்ந்த இளைஞர்கள் அனைவருக்கும் இந்த வாசகசாலைகள் பற்றிய இனிய நினைவுகள் எப்போதும் அழியாது இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

பலருடைய அறிவுப் பசியைப் போக்கும் ஓர் களஞ்சியமாக இது இப்போதும் இயங்கிவருவது கண்டு மனம் மகிழ்கிறேன். நான் இலண்டனுக்கு வருவதற்கு ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்த காலத்தில் தினமும் அங்கு சென்று இரவு பன்னிரண்டு மணிவரை “தாயம்” விளையாடி மகிழ்ந்ததையும், அப்போது வெளிவந்த வசந்தமாளிகை படத்தை நண்பர்களுடன் சென்று ஐந்து தடவைகள் பார்த்து மகிழ்ந்ததையும் எண்ணிப் பார்க்கிறேன். மீண்டும் 2003 ஆம் ஆண்டு எமது மகளுடன் சென்று அந்த வாசகசாலைக்கு முன்னால் நின்று நிழற்படம் பிடித்தபோது பழைய நினைவுகளெல்லாம் பாய்ந்தோடி வந்ததைத் தடுக்கமுடியவில்லை. இந்த வாசகசாலைக்கும் எனக்கும் உரிய நெருங்கிய உறவுவை எண்ணும்போது என் மனம் பூரிப்படைகிறது. கலைமகள் பெயர் கொண்ட எமது இந்தக் கலைக்கூடம் எப்போதும் அங்கு வருபவர்களுடைய தேவைகளைத் தீர்த்துவைக்க இறைவன் ஆசியருளவேண்டும் என்று பிரார்த்தித்து நானும் வாழ்த்துகிறேன்.

மு.து.செல்வராஜா
இலண்டன். 30.01.2008



திரு.இராசையா

கரந்தன் கலைவாணி வாசகசாலையின் இன்றைய படங்கள்











நன்றி;
Author: ந.குணபாலன்
•11:27 AM






இது ஒரு சுவையான கவிதை. இதை எழுதியவர் நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் அவர்களின் மகனார் இளமுருகனார் ஆவார்.

செல்வஞ் செல்வாக்காய் வாழ்ந்த ஒரு சீமான். அவரைச் சார்ந்து வாழ வேண்டிய குமுகக் கட்டுப் பாட்டில் இருந்த பறை முழக்கம் செய்யும் ஒரு கலைஞர் .
பணத்தால் பெரியவர் மற்றவரை எதற்கோ கை நீட்டி அடித்து விட்டார். மற்றவரின் ஏலாத்தன்மை இங்கே கவிதையாகி வழிகிறது.

காரிரங்கும் கொடைமுதலி நீயொறு த்தால்
நானழுவேன், கலகமில்லை.
வாரிரங்கும் பறைமுகத்தில் வளைகோலால்
நின்மனையில் மெல்லத்தட்டில்....  
ஊரிரங்கும், உறவிரங்கும், மனையிரங்கும்,
பனையிரங்கும் உண்மை ஐயா!
ஓரிரங்கலன்றி மதி, திதி தோறும் 
இரங்கலெனில் யார் சமர்த்தன்?

விளக்கம்:
கொடையில் சிறந்த உம்மைக் கண்டு பொறாமை கொண்ட கருமுகில் அழும்.
அப்படிக்கொத்த இரக்க குணமுடைய குமுகத்தில் முதன்மையானவரே நீர் (ஒறுத்தால்)கோபித்தால் நான் அழுவேன், அதனால் ஒரு கலகமும் உருவாகாது.

எனது பறையை இழுத்துக் கட்டியிருக்கும் வார், நோக்காடு தாங்கேலாமல் அழுகின்றது. அப்படியான பறையின் முகத்திலே வளைந்த கோலால் நான் வந்து உமது  வீட்டிலே மெல்லத்தட்டினால் ( நீர் மண்டையைப் போடும் நேரம்)............

இந்த ஊரே அழும்,
உமது உறவுகள் அழும்,
உம்முடைய வீட்டார் அழுவர்,......


ஊரழும்..சரி...
உறவு அழும்..சரி...
வீட்டார் அழுவர்..சரி..

அதென்ன பனையிரங்கும்?
பனை அழுமாமோ ?
என்ன குறளிக் கதையிது?
கேளுங்கள் புலவரின் பகடியை....
பனை கள்+நீர்=கண்ணீர் சொரியுமாம். இவர் குடிக்க வேண்டிய கள்ளுத்தண்ணி  குடிப்பவர் இவர் இல்லாமல் வீணாகிச் சொரியுமாம்.

 
இது உண்மை ஐயா!
நீர் என்னை அடிக்க  நான் அழுவது ஒருமுறை மட்டுமே.
நான் பறையை அடித்தால் உம் வீட்டில் ஒருமுறை மட்டுமே ஒப்பாரிக்
குரல் கிளம்பும்? மாசாமாசம் வருகின்ற உமது செத்த திதிகளில் எல்லாம் ஒப்பாரிக் குரல் கிளம்புமே? அப்படிஎன்றால் யார் கெட்டிக்காரன்?