Author: வடலியூரான்
•3:32 AM
இதென்னடா ஆருக்கோ பேச்சு விழுது எண்டு நினைச்சு பின்னங்கால் பிடரியிலை பட ஓட வெளிக்கிடாதையுங்கோ.நான் வெங்காயம் எண்டு சொன்னது எங்களின்டை செல்வ(ல)த்தை தான்.எங்கன்ரை ஊரிலை அதை "காய்" எண்டும் சொல்லுவம்.எங்கள் எல்லாருக்கும் செல்வதை அள்ளிச் சொரிகின்ற லக்ஸ்மி அது.வெங்காயத் தோட்டத்திலையிருந்து உழைத்து எங்களவர்கள் எங்கேயோ உயரத்துக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள்.எங்களுக்குக் காசு மழைபொழிகின்ற காமதேனு அது.




நாங்கள் அதைக் காலால் உழக்க மாட்டோம்.மாலையாகி,வீட்டை விளக்குக் கொழுத்திய பின்னரோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ யாருக்கும் அதைக் கொடுக்கமாட்டோம்.ஏனென்றால் அவ்வாறு கொடுத்தால் அந்த லக்ஸ்மி எங்களை விட்டுப்போகிறாள் என்ற நம்பிக்கையுடையவர்கள் நாங்கள்.(நீங்கள் சிலவேளைகளில் காசினை வெள்ளிக்கிழ்மைகளிலோ அல்லது விளக்குக் கொழுத்தியபின்னரோ கொடுக்காமால் இருக்கலாம்)நாங்கள் அந்தப் பணத்துக்கு ஈடாக வெங்காயத்தையும் நினைத்துக் கொள்வதால் அதனை மேற்க்கூறிய தருணங்களில் வெளிச்செல்ல அனுமதிக்க மாட்டோம்.




எங்கள் வெங்காயத் தோட்டங்களில் நாங்கள் செருப்புடன் இறங்கவே மாட்டோம்.வேறொருவன் இறங்கினாலும் அவன் காலை உடைக்கவும் தயங்க மாட்டோம்.ஏனென்றால் எங்கள் காசுக்கடவுளை காலால் உழக்குகின்ற செயலாகவே நாங்கள் அதைக் கருதுவோம்.வெங்காயச் சருகு காற்றிலே சரசரத்து ஏற்படுத்துகின்ற சரசரப்போசையும் அதன் வாசமுமே எங்களுக்கு நித்திரையை வரவைக்கும்.கறி,புளிகளில் காரசாரமாய் வெங்காயம் வெளிப்பட்டால் தான் எங்களுக்குப் சாப்பாடு இறங்கும்.இல்லையென்றால் பத்தியப் படாது.நாங்கள் வெங்காயத்தோடை எப்பிடி ஒட்டியிருக்கிறம்.எங்கடை வாழ்க்கையிலை அது எப்பிடிப் பின்னிப் பிணைஞ்சிருக்குது எண்டு சொல்லவெளிக்கிட்டுத் தட்டுத் தடுமாறி வந்த ஒரு சில உதாரணங்கள் தான் உவை.





இப்பிடி எங்கன்ரை மூச்சோடையும்,பேச்சோடையும் கலந்த வெங்காயச் செய்கை பற்றியதொரு பதிவு தான் இது. யாழ்ப்பாணத்தில் வெங்காயச் செய்கைக்கு புன்னாலை கட்டுவன்,இடைக்காடு,ந்வக்கிரி,வலிகாமத்தின் இன்னும் பல பகுதிகள்,தென்மராட்சி மற்றும் வட்மராட்சியில் மந்திகை,வதிரி,புலோலி,பொலிகண்டி போன்றவை பிரசித்தி பெற்ற இடங்களில் சிலவாகும்.



எங்கடை ஊரிலும் வெங்காயம் பெரும்பாலானவர்களால் செய்கை பண்ணப் படும் ஒரு பயிராகும்.வேறு சிலர் போயிலை(புகையிலை), மற்றும் கத்தரி,மிளகாய்,பூசணி,பயிற்றை,பாகல் போன்ற சில்லறைப் பயிர்களும் பயிரிடுவினம்.வெங்காயத்தை விட பொயிலை வருமானம் கூடின பயிரென்றாலும் அதற்கு அதிகளவு கஸ்ரப்படவேண்டியிருக்கும்.




நான் ஏற்கனவே சொன்னது மாதிரி வெங்காயத்தை நாங்கள் கூடுதலாகக் "காய்" எண்டு தான் சொல்லுவம்.பயிரிடுகின்ற தோட்டத்தை "தறை" அல்லது "தெணி"எண்டு சொல்லுவோம்.அவற்றுக்கும் "ஐயன் தெணி","மாலந்தெணி","வெளித்தெணி","மடத்தெணி","வல்லூட்டி","ஆவலம் பிட்டி","காறவாய்ப்பள்ளம்" எனப் பெயர்கள் எல்லாம் உண்டு.அவற்றின் பரப்பளவு பொதுவாக "பட்டி"யில் தான் அளக்கப்ப்டும்.10 பட்டி ஒரு "பரப்பு" க்குச் சமனாகும்.




எங்கடை ஊரிலை முழுநேர விவசாயிகள் அல்லது முற்றுமுழுதாக விவசாயத்தை நம்பிக் கொண்டிருக்கிறாக்கள் எண்டால் மிச்சும் குறைவு.பெரும்பாலான ஆக்கள் பாட் ரைமா(பர்ட் டிமெ) மற்ற வேலைகளைச் செய்துகொண்டு வெங்காயத்தை முழுநேர வேலைகளை செய்யிறவை.ரீச்சர்(Teacher),போஸ்ற் பீயோன்(Post Peon),கடை முதலாளி, பிரதேச சபை உட்பட ஏனைய அரசாங்க உத்தியாகத்தர்மார்,அதிபர் எண்டு தொடங்குகிற லிஸ்ற் டொக்டர்,இஞ்சினியர்,லோயர்(Lawyer),பாங்க் மனேச்சர்((Bank Manager) வரையாய் அந்த பாட் ரைம்(Part Time) வேலையின் வீச்சு வேறு படும்.




பாட் ரைம் வேலை எண்டு நான் சொன்னது வேலை செய்யிற நேரத்திலையில்லை.வாற வருமானத்தின் படி.அவையளுக்கு உந்தக் கண்டறியாத வேலைகளிலை கிடைக்கிற ச்ம்பளம் வந்து மட்டு மட்டா குடும்பச் செலவுக்கத் தான் காணும்.தங்கடை தொழிலின்ரை வரும்படியை வைச்சுக் கொண்டு அவையளே சொல்லுவினம் தோட்டம் தான் எங்கடை மெயின் வேலை.எங்கடை தொழிலுகள் எல்லாம் சப்(Sub)தான் எண்டு.




என்றை அப்பாவும் ஒரு ரீச்ச்ர்(Teacher) தான்.அவரும் உப்புடி ரீச்சிங்கை(Teaching) பாட் ரைமாச் செய்யிற ஆள் தான்.எனக்கும் அது ஏனெண்டு தெரியேல்லை, எனக்கு அப்பா ஒரு வாத்தியார் எண்டு சொல்லுறதை விட நானொரு தோட்டக்காரன்ரை பெடியனெண்டு சொன்னால் ஒரு கூடுதல் சந்தோசம் மாதிரி.உள்ளூர ஒரு பரம திருப்தி.அது மட்டுமில்லை கம்பசிலையும் என்னட்டை ஜூனியர்ஸ் கண்டுபிடிக்க இல்லையெண்டாலும், அவங்கடை அப்பாவும் ஒரு தோட்டக் காரன் எண்டால் ஒரு ராகிங்கும் செய்யாமலே(ஏதோ பெரிய ராக்கர் தான் போ) விட்டு விடுகின்ற ஒரு வீக்னசும்(weekness) இருந்ததுகொண்டிருந்தது.




என்னதான் அவையள் உத்தியோகம் பாத்தாலும்,படிச்சாலும் அவையள் எல்லாரும் நல்ல "கை பக்குவப்பட்ட" தோட்டக்காராக்கள் தான்.நான் கண்ணாலை கண்ட எத்தினை எங்கடை ஊர்,பிரதேச அண்ணாமார்,தேப்பனோடை சேர்ந்து மம்பெட்டி பிடிச்சு,எருப்பரவிக் கொத்தித் தோட்டஞ்செய்து இண்டைக்கு இஞ்சினியர்,டொக்ரர்மாராய் ஆகியிருக்கினம்.ஒரளவு வயதிலேயே படிப்பு சறுக்கினாலுமெண்டிட்டு கைகாவலா எல்லரும் தோட்ட வேலையளைப் பழகிவைச்சிருக்கிறது தான்.




இரண்டு வேலை தெரிஞ்சிருக்கிறதும் நல்லது தானே.ஆனால் நான் அந்தளவுக்கு ஒண்டும் செய்யவில்லை.ஆனாலும் எல்லா வேலையும் கொஞ்சம் கொஞ்சம் செய்யப் பழகியிருந்தன்.ஆனாலும் பெரிதளவில் உடம்பை முறிச்சுச் செய்யாததாலை(வேறையென்ன பஞ்சி தான்.அதாலை "பம்ஸ்" அடிச்சது தான் அந்தக்காலத்திலை)அந்தளவுக்குக் கைப் பக்குவம் இல்லாட்டிலும் ஏதோ அம்மமாவின்றை ஆக்கினையிலை "ஆம்பிளைப் பிள்ளையாப் பிறந்தனீ, மம்பெட்டி பிடிச்சுப் பழகாமல்...இஞ்சை பார் பெண்ணாப் பிறந்த நானே இந்தவயதிலையும் என்ன பக்குவமா மம்பெட்டி பிடிக்கிறன் ..." எண்டு எதோ பிடிக்கோணும் எண்டதுக்காகவேண்டி மம்பெட்டி பிடிச்சிருக்கிறன்.அதெல்லாம் தெரிஞ்சபடியாலை இண்டைக்கு இந்தப் பதிவை எழுதிறன்.




ஆனால் எங்கடை பொடியள் எவ்வளவு கஸ்ரமான சூழ்நிலைகளிலையும் குண்டுக்குப் பயந்து பங்கருக்கை ஒளிச்சிருந்து குப்பிவிளக்கிலை படிச்சு முன்னுக்கு வந்த ஆக்கள் கனபேர்.அவையள் எல்லாம் எங்களுக்கு,எங்கடை பொடியளுக்கு முன்மாதிரியா இருக்கினம்.இப்பிடிப் பலர் பலவாறு கஸ்ரப்பட்டாலும் எனது பல்கலையில் நான் சந்தித்த எனது தம்பியொருவரைப் பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன்.இந்தப்பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லையெனினும் அதை இங்கே சொல்லிவிடலாம் எண்டு நினைக்கின்றேன்.




பெயர் வேண்டாம்.அவன் பேசாலையிலிருந்து பல்கலை வந்து சேர்ந்தவன்.தகப்பன் போரினால் ஏலாவாளியாக்கப்பட்டபின்னர் தன் குடும்பத்துக்காக தானே வள்ளமேறி,இரவிலே மீன்பிடிக்கச் சென்று,பகலிலே வந்து படித்து பொறியியல்ப் பீடம் ஏகியவன்.பொறியியல் அனுமதி கிடைத்தும் குடும்பநிலை கருதி பல்கலையைத் துறந்து,தூக்கியெறிய வெளிக்கிட்ட வேளையில்,தாயினதும்,வேறு சிலரினதும் நிர்ப்பந்தமான,மண்டாட்டமான வேண்டுதலுக்காக பல்கலை வந்தவன்.இப்படியாக பல கஸ்ரங்களிலும் கல்வியைக் கைவிடாதது ஈழ்த்த்மிழினம்.




இதை இப்போதைய போனும் கையுமாகத் திரிந்து காசையும் வீணாக்கி,காலத்தையும் மண்ணாக்கி,மூஞ்சிப்புத்தகத்தாலை வயித்திலை பிள்ளையை வருவித்துக்கொண்டும் அனைவரையும் பேய்க்காட்டிக் கொண்டிருக்கிற இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது எங்கள் எல்லோரதும் அவா.அது ஒரு புறம் இருக்க நாங்கள் விசயத்திற்கு வருவோம்.




உப்புடியெண்டால் சொல்ல வந்ததை மறந்து போடுவன் அப்பரெல்லாம் தோட்ட சீசனிலை,எட்டுமணி மட்டும் தோட்டத்துக்கை நிண்டு வேலைசெய்து போட்டுத் தான் பள்ளிக்கூடம் போவார்.எங்கன்றை ஊரிலை தொழில்ரீதியாப் பாத்தால் போஸ்ர் பீயோன்மார் தான் கூட.ஒரு ஏழெட்டுப் பேர் இருப்பினம்.ஏன் ஊரிலை போஸ்ற் பீயோன்மார் கூட எண்டு இன்னும் கொஞ்சம் கீழை வாசிச்சுப் போட்டுக் கண்டுபிடியுங்கோ பாப்பம்.




அவையள் என்ன செய்வினம் எண்டால்,விடியக் காலமை மிசினை(நாங்கள் வோட்டர் பம்மை மிசின் எண்டு தான் சொல்லுவம்)கொண்டு போய் தோட்டத்துக்கை பூட்டிப் போட்டு,சேட்டைக் கழ்ட்டி கிணத்துக்குப் பக்கத்திலையிருக்கிற பூவரசமரத்தில கொழுவிப் போட்டு,ஜீன்சை முழங்காலுக்கு மேலை மடிச்சுவிட்டிட்டுத் தண்ணி மாறுவினம்.ஒரூ 8, 8.30 அப்பிடி அவையின்ரை மனுசிமார் தோட்டத்துக்கை சாப்பாடு கொண்டுவர,தோட்டத்துக்கையே சாப்பிட்டு,வாயைக் கொப்பளிச்சுப்போட்டு,மனுசிமாரைத் தண்ணி மாறவிட்டிட்டு,சேட்டையெடுத்துக் கொழுவிக்கொண்டு கந்தோருக்குப் போய் சைனை(Signature) வைச்சிட்டு அண்டைக்குக் குடுக்கவேண்டிய கடிதங்களையெடுத்துக் கொண்டு,தபால் குடுக்கப் போறன் எண்டு சொல்லிக் கொண்டு வெளிக்கிட்டுடுவினம்.





சைக்கிளைத் திரும்பக் கொண்டுவந்து தோட்டத்தடியில் நிப்பாட்டிப் போட்டு,மனுசிமாரை மத்தியானச் சமையலுக்கு அனுப்பிபோட்டு,திரும்பவும் மாற வெளிக்கிட்டுடிவினம்.அப்பக் கடிதம் எண்ணெண்டு குடுக்குறது எண்டு தானே கேக்கிறியள்?அது ஊருக்கை தானே.மாலைக்கை ஆலமரத்துக்கு கீழை இருக்கிற வாசிகச்சாலையிலை வெட்டிக் கதைகதைக்கிறதுக்கு கூடுற பெடியளட்டையோ அல்லது ஆம்பிளையளிட்டையோ குடுத்துவிட்டால் சரிதானே.எல்லா வீட்டையும் கடிதம் போடும்.சிம்பிள் வேலை.சிம்பிளா போஸ்ற் மான் வேலை செய்துகொண்டு தோட்டத்தையும் செய்துகொள்ளலாம்.இப்ப விளங்குதே ஏன் எங்கடை ஊரிலை போஸ்ற்மான்மார் கூட எண்டு.




இனி வெங்காயச் செய்கையின் ஒவ்வொரு படியையும் படிப்படியாகத் தருகின்றேன். நீங்களும் ஒரு தோட்டக்காரனெண்டால் ஏதாவது பிழையெண்டால் சொல்லுங்கோ இல்லையெண்டால் பேஸ்புக்கிலை தோட்டஞ் செய்த எக்ஸ்பீரியன்சை வைச்சுக்கொண்டு இதையும் செய்துபாருங்கோவன்.




வெங்காயம் செய்யும் போகத்தினடிப்படையில் நாங்கள் "கோடைக்காய்","மாரிக்காய்" எண்டு சொல்லுவம்.மாரிக்காய் மார்கழி,தையில் விதைச்சு, மாசி,பங்குனியில் முடியும்.கோடைக்காய் வைகாசி ஆனியில் தொடங்கி ஆடி ஆவணியில் முடியும்.எங்களது இடங்களில் பெரும்பாலும் மாரிக்காய் மட்டுமே நடப்படும்.



கொத்திக் குப்பை தாட்டல்

பெரும்பாலும் ஐப்பசியிலை மாரிகாலம் தொடங்கினாப்போல,ஒரு ஒண்டிரண்டு மழை பெய்ஞ்சு,மண்ணை நனைச்சாப்போல தோட்டத்தைப் பண்படுத்தத் தொடங்கிடுவம்.பழைய கொட்டிலுகளைப் புடுங்கிப் புதுசா மேய(வேய) வெளிக்கிடேக்கை வாற ,அந்தக் கொட்டிலின்றை பழைய கிடுகுகள்,பனையோலைகள்,இலைகுழைகள்,மாட்டெரு,ஆட்டுப்புழுக்கை போன்றவற்றைக் கொத்திதாட்டுத் தான் பண்படுத்தல் தொடங்கும்.


உழுதல்

கொத்திப் பிரட்டி,ஒரு மாதத்திற்கு மேல் அப்பிடியே நிலத்தை விட்டு விட மேலும் மேலும் மழை பெய்ய மண் அடைஞ்சு மண் இறுகி விடும்.பிறகு லான்ட்மாஸ்ரரால்(லன்ட் மச்டெர்) நிலத்தை உழுவார்கள்.அல்லது இதற்குப் பதிலாக இப்போதும் கொத்தலாம்.உண்மையில் கொத்தும் போது தான் ஆழமாக மண் தோண்டப்பட்டு புரட்டப்படுவதால் இதுவே சிறந்தமுறையாகக் கருதப்படுகின்றபோதும் செலவு குறைவு மற்றும் இலகு போன்ற காரணங்களினால் தான் உழப்படுகின்றது.


வாய்க்கல் வரம்பு போடுதல்

பிறகு பெரிய பெரிய மண்கட்டிகள் சின்னஞ்சிறு கட்டிகளாக உடைக்கப்பட்டு கயிற்றுப்பந்தைப் பயன்படுத்தி நேராக வாய்க்கால் வரம்பு போடபப்டும்.


வெங்காயம் நோண்டுதல்/காய் நுள்ளுதல்


வெங்காயத் தாறிலிருந்து வெங்காயத்தை நுள்ளி எடுத்தலைத் தான் வெங்காயம் நோண்டுதல் என்று சொல்லப்படுகின்றது.வெங்காயத்தை நுள்ளியெடுப்பது மட்டுமில்லாமல் வெங்காயத்தின் வெளிச்சரையெல்லாத்தையும் உருத்தி,செத்தல் வெங்காயங்களை ஒதுக்கித் தான் வெங்காயம நோண்டுவோம்.நோண்டியபிறகு பார்த்தால் குங்குமக் கலரோடு வெங்காயாம் சும்மா ஜொலித்துக் கொண்டிருக்கும்.


தெளித்தல்/புழுதித் தண்ணி

வெங்காய நடுகைக்கு முதல்நாள் மிசின் பூட்டி,புதிதாகப் போடப்பட்ட வாய்க்காலில் புழுதித் தண்ணி தாராளமாக பாயவிடப்படும்.ஒரு பழைய சாப்பாட்டு கோப்பை போன்ற ஏதாவது தட்டையான பாத்திரத்தால் எல்லா இடமும் நல்லா தண்ணியை அள்ளித் தெளித்து மண்ணை நன்றாக குளிர்விப்போம்.மண் நன்றாக நனைந்தால் தான் நடுகைக்கு இலகுவாக இருக்கும்.


சாறுதல்

அடுத்தநாள்,அதாவது வெங்காய நடுகையன்று காலையில் நிலம் சாறப்படும்.சாறுதல் என்பது கொத்துதல் மாதிரித்தான்.ஆனால் கொத்துதல் இல்லை.மண்வெட்டியை சிறிதளவே தூக்கி,அதிகளவு ஆழமாகத் தோண்டாமல்,சிறு சிறு கட்டிகளாக அல்லது தூளாக மண் வருமாறு கொத்துதல் ஆகும்.சின்னக் கொத்துதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


பாத்தி கட்டுதல்

ஒராள் முன்னுக்கு சாறிக் கொண்டுபோக,மற்றவர் அந்த மண்ணை நன்றாக உருத்தி,மண்ணைப் பதமாக்கி,மடை விட்டு, நடுகைக்கு ஏற்றாற் போல பாத்தி கட்டிக் கொண்டுபோவார்.

நடுகை

நடுகை இன்றைக்கு நடுகை என்றால் விடியக் காலமை வெள்ளன மாயக்கைப் பிள்ளையாரட்டை போய் கற்பூரங் கொழுத்தி,சிதறு தேங்காய் அடிச்சுப் போட்டு அவற்றை கோயில் வாசலிலை கிடக்கிற கொஞ்சம் பூவையும் எடுத்துக் கொண்டு வந்து வீட்டிலை ராசியான கைக்காரர் யாராவது நாள்க்காயை நடுவினம்.(நிச்சய்மா அந்த ராசியான கைக்காரன் நான் இல்லை.என்ரை மூண்டு வயசிலை என்ரை ராசி எப்பிடி இருக்குது எண்டு பாக்கிறதுக்காக வேண்டி,என்ரை கையைப் பிடிச்சு நாள்க்காயை நட்டிச்சினமாம்.அந்த வருசம் மழை வந்து கொட்டோ கொட்டெண்டு கொட்டி,எல்லாத்தையும் அழிச்சுப்போட்டிச்சுதாம்.ம்ம்ம் என்னதொரு ராசி...!!!)அதிலையிருந்த நான் ஒரு நாளும் நாள்க்காயை நடுறதில்லை.நாள்க்காயை நட்ட பின்னர் நடுகைப் பெண்டுகள் வந்து வெங்காயத்தை கட்டின பாத்திகளிலை மள மளவெண்டு நட்டுக் கொண்டு போவினம்.


மிதந்த காய் ஊண்டுதல்

நடுகை பெண்டுகள் அவசரத்திலை காய் ஊண்டிக்கொண்டு போகேக்கை சில காய்கள் வடிவாக மண்ணுக்குள் ஊண்டுப்பட்டிருக்காது.அப்பிடி ஊண்டுப் பட்டிருக்காவிட்டால் வெங்காயம் சிலவேளைகளில் தண்ணி மாறும் போது அடித்துக் கொண்டு செல்லப் படலாம் எனபதோடு அவை உருண்டு,திரண்டு,விளையமாட்டாது.நன்றாக விளைந்தால் தானே நல்ல நிறை நிக்கும்.நாங்களும் நல்ல லாபம் எடுக்கலாம்.அப்பிடி வடிவாக ஊண்டப்படாத காய்களை வெங்காயம் முளைவிடத் தொடங்கிய பிறகுதான் அவதானிக்கலாம்.வெங்காயம் நட்டு ஒரு 5,6 நாளைக்குப் பிறகு அப்பிடி வடிவாக ஊண்டப்படாத காய்களை ஒரு குத்தூசியால் நிலத்தில் குத்தி அந்த துளைக்குள் இந்தக் காய்களை ஊண்டிவிடுதலைத் தான் மிதந்த காய் ஊன்டுதல் எண்டு சொல்லிறது.


தண்ணி மாறுதல்

கூடுதலாக கிணத்திலையிருந்த மிசினாலை இறைச்சுத் தான் தண்ணி மாறுவம்.முதல்த்தண்ணி வெங்காயம் நட்டு ஒரு பத்துநாளுக்குப் பிறகுதான் இறைப்பம்.அதுக்குப் பிறகு ஒவ்வொரு 4,5 நாளுக்கொருக்கால் தண்ணி மாறுவம்.இந்தத் தண்ணி மாறுறதெண்டுறது பயங்கர கரைச்சலான விசயம்.பாத்தால் சிம்பிளான வேலை மாதிரித்தான் தெரியும்.அனுபவம் இல்லையோ நிச்சயமா ஏலாது.உடைக்காமல் மாறவேணும்.இடைக்குள்ளை எங்கையாவது உடைச்சுதெண்டால் அள்ளிப் போடுறதுக்கும் மண் எடுக்கேலாது.ஏனெண்டால் வெங்காயம் எல்லா இடமும் நடப் பட்டிருக்கும்.தண்ணி மாறேக்குள்ளையும் அடித்தறையிலையிருந்து தலைப்பு தறை வரை போகேக்கை இடப்பக்கமா மாறிகொண்டு போனால், தலைப்பிலிலையிருந்து திரும்பி வரேக்கை வலப்பக்கமா வெட்டிக் கட்டிக் கொண்டுவரலாம்.


புல்லுப்ப்டுங்குதல்/உரம் போடுதல்/மருந்தடித்தல்

இது உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச வேலைகள் எண்ட படியால் இதுக்கு விளக்கம் தேவையில்லயெண்டு நினைக்கிறன்.


பூ முறித்தல்


வெங்காயம் ஒரு 65 - 70 நாள்ப்பயிர்.அது ஒரு 45 - 50 நாளுக்குப் பிறகு மொட்டுவிட்டுப் பூக்கத் தொடங்கும்.அந்தப் பூவை நாங்கள் முறித்துத் தந்தால் நீங்கள் அதை சுண்டி சாப்பிடிருப்பியள்.அதை முறிக்காமல் விட்டால் வெங்காயம் விளையாது எண்டபடியால் தான் அதை முறிக்கிறது.ஏனெண்டால் வெங்காயத்தின்றை சத்தெல்லாம் பூவுக்குப் போகும் எண்டு பெரியாக்கள் விளக்கம் குடுப்பினம்.


நனைத்தல்

ஆகலும் கடைசியான இறைப்பை நனைத்தல் என்று சொல்லுறது.இதற்கும் ஒரு கோப்பையால் அள்ளித் தெளித்து வரம்பு,வாய்க்கால் எல்லாம் நன்றாக ஈரமாக்குவோம்.அப்படியென்றால் தான் கிண்டுவதற்கு நன்றாக இருக்கும்.


கிண்டி விரித்தல்

நனைத்ததற்கு அடுத்தநாள், வெங்காயத்தைக் கிண்டி அடுக்கி விரித்து,பச்சையாக இருக்கும் வெங்காயத்தாறு காயும்வரை ஒரு கிழமை வரை வெங்காயம் தோட்டத்திலேயே விடப்படும். முடிச்சல் வெங்காயம் காய்ஞ்சபிறகு,கையால் பிடிக்கக்கூடியளவு தாற்றுடன் வெங்காயத்தை எடுத்து,கடல் தண்ணியில் ஊறப்போட்ட, பனஞ்சார்வோலை ஈர்க்காலே அளாவி,தாற்றை ஒரு மடிப்பு மடிச்சுக் கட்டி அந்த ஈர்க்கை ஒரு இழுப்பு இழுத்து வெங்காயப் பிடி கட்டுவோம்.


பிணைச்சல்

இப்படியாக முடியப்பட்ட வெங்காயப் பிடிகள் நான்கை ஒன்றாக இணைத்து ஒரு பிணைச்சல் கட்டப்படும்.ஏற்றி,இறக்குவதெல்லாம் இந்தப் பிணைச்சல்களினால் இலகுவாக்கப்பட்டுவிடும். இந்தப் பிணைச்சல்கள் எல்லாத்தையும் ஒரு லான்ட் மாஸ்ரரில்(Land MAster) ஏற்றிக்கொண்டு,வந்து வீட்டை சேர்ப்பிக்கவேண்டியது தான் அடுத்த வேலை.இந்த ஒரு நாளுக்காகத்தான் நாங்கள் சின்ன வயதுகளில் ஏங்கித் தவித்து, காத்திருந்திருப்போம்.எல்லாம் ஒரு லான்ட் மாஸ்ரர் சவாரிக்காகத் தான்.லோட் நிரம்பிற அளவுக்கு,வெங்காயம் ஏத்தி முடிய எங்களையும் அந்த வெங்காயங்களுக்கு மேலை ஏத்திவிடச்சொல்லி நாங்கள் பிடிக்கிற அடம் தாங்காமல் அம்மப்பா தூக்கி ஏத்திவிட்டுவிடுவார்.ஏத்திவிட்டால், லான்ட் மாஸ்ரர் ஓடேக்கை பயமாத்தான் இருக்கும் எண்டாலும்,வெங்காயப் பிடியின்ரை மூட்டுக்கை கையைக் கொளுவி, ஒரு உடும்புப் பிடியைப் பிடிச்சுக்கொண்டு,ஏதோ பட்டத்து இளவரசன் பல்லக்கிலை போற மாதிரி ஒரு பீலிங்கோடை தான் நாங்கள் ஊர் ரோட்டுகளாலை லான்ட்மாஸ்ரரிலை அண்டைக்குப் போவம்.அந்த இளவரசனுக்குக் கூட அப்பிடியொரு இறுமாப்பு இருந்திருக்காது.ஆனால் எங்களுக்கு ஒரு திமிர் இருந்து கொண்டேயிருந்திருக்கும்.எங்கடை வயதையொத்த குஞ்சு,குருமனெல்லாம் எங்களைப் பாத்து வாயைப் பிளந்து பொறாமைப் பட்டு நிண்டு கொண்டிருக்குங்கள்.எங்களுக்கும்,எங்களுக்கெல்லாம் தங்கடை தோட்ட வெங்காய முடிச்சலுக்கு திமிராய் போன எங்களது வட்டப் பொடியளுக்கு நாங்களும் கொஞ்சமும் குறைஞ்சாக்கள் இல்லையெண்டு காட்டோணும், எண்டு காட்டவேணுமெண்டதுக்காகவேண்டி,அப்பிடியொரு திமிர் வந்து தொற்றிப் போடும்.அந்த நாளெல்லாம் இனி வராது.ம்ம்ம்..


தூக்குதல்

பிறகென்ன,வீட்டை கொண்டு வந்த வெங்காயத்தை எங்கை நிலத்திலேயே வைச்சிருக்கிறது.அப்பிடிக் கிடந்துதெண்டால்,காய் அண்டுப்பட்டு(நசிபட்டு)பழுதாப் போடும்.அதாலை வெங்காயத்துக்கெண்டு பிரத்தியேகமாப் பாவிக்கிற கொட்டிலுகளுக்கையோ அல்லது எங்களது வீட்டு அறைகளுக்குள்ளேயோ ஒவ்வொரு பிணைச்சலா நைலோன் கயித்திலை கட்டித் தூக்குறதைத் தான் தூக்குதல் எண்டு சொல்லுவம்.


வித்தல் (விற்றல்)

இப்படியொண்டைச் சொன்னால் நீங்கள் எனக்கு இப்ப அடிக்கத் தான் வருவியள் எண்டு எனக்குத் தெரியும்.என்ன நல்ல விலையாப் பாத்து விக்க வேண்டியது தான்.உதுகும் தெரியாதே..?உது கஸ்ரம் இல்லைத் தானே..கூடுதலாக வைகாசி பறுவம் தாண்ட தான் வெங்காயம் சும்மா நெருப்பு விலை விக்கும்.



(இப்ப என்ன போகுது... நாலை முக்கால், ஐஞ்சு போகுதாம்... எண்டால் இப்ப வெங்காயம் ஒரு அந்தர் 4750,5000 ரூபா வரை விக்குதாம் எண்டு அர்த்தம். என்ன நீங்களும் நட்டியள் எண்டால் நல்லா உழைக்கலாம்.மனுசிமாரட்டை ஒரு flat தா எண்டு சீதனம் தா எண்டு வாங்கிறதை விட,ஒரு 250,300 பட்டி தறை சீதனமா வாங்கினால் ஒரு பத்து வருசதுக்கிடையிலை நீங்களே 3 flat வாங்கிற அளவுக்கு உழைச்சுப்போடலாம்.


சில வட்டார சொற்கள்


பத்தியப்படாது - சாப்பாடு திருப்தியாக இல்லாவிட்டல் இப்படி சொன்னாலும் இதன் அதிக பயன் பாடு மருத்துவதுடனேயே வருகின்றது.ஒருவர் நோய்வாய்ப் பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு உண்ணக் கொடுக்கும் விசேட கவனிப்புள்ள உணவுகளை "பத்தியச் சாப்படு" என்று ஈழத்திலே அழைப்பார்கள்

போயிலை
- புகையிலை,வெற்றிலைத் தாம்பூலத்துடன் சேர்த்து சாப்பிடப்படுவது பாணி போட்டு பதமாக்கப்பட்ட புகையிலை.
சில்லறைப் பயிர்கள் - சிறு வருமானம்/கைச்செலவுக்கு வருமானம் தரும் பயிர்கள்
மிச்சும் குறைவு - மிகக் குறைவு
வரும்படி - வருமானம்
கை பக்குவப்பட்ட - செய்கின்ற தொழிலில் கை தேர்ந்த
கீழை - கீழே
கந்தோர் -அரசாங்க வேலை திணைக்களம் உருத்தி -நீக்கி
சரை - கோது என்றும் சொல்லலாம்.இங்கு வெங்காயத்தை சுற்றியிருக்கின்ற காய்ந்த தோல் என்றும் சொல்லலாம்
வெங்காயம் நோண்டுதல் - வெங்காயம் நுள்ளுதல்
புழுதி - காய்ந்த மண் என்றும் சொல்லலாம்.காற்றுக்குத் தூசியை அள்ளித் தெளித்தவாறு பறக்கும்
மடை - தண்ணிபாய விடப்படும் பாதை விடியக் காலமை -அதி காலை
வெள்ளன -முதலே/வேளையில்
நாள்க்காய் -நல்ல நாளில், சுபநேரத்தில் நாள்க்காய் நடப்பட்டுத் தான் வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்படும்.
அடித் தறை - தோட்டத்தின் ஆரம்ப எல்லை தலைப்புத் தறை - தோட்டத்தின் முடிவு எல்லை கிழமை - கிழமை என்றால் திங்கள்,செவ்வாய் என நாட்களைக் குறித்தாலும் வாரம் என்றொரு சிறப்புப் பதமும் ஈழத்தில் உண்டு.
பனஞ் சார்வோலை ஈர்க்கு - பனையின் குருத்திலிருந்து ஓலையை நீக்கி எடுக்கப்ட்ட ஈர்க்கு
அளாவி - சுற்றி என்றும் சொல்லலாம் அல்லது வளைத்து என்றும் கொள்ளலாம்
அண்டுப்பட்டு - இது அமத்துப் பட்டு என்ற பொருளில் தான் இங்கே வரும்
பறுவம் - பௌர்ணமி
மம்பெட்டி - மண்வெட்டிதான் இவ்வாறு அழைக்கப்படும்.அது "ப" அல்லது பிக்காஸ்,என்றும் "வ்" போன்ற வடிவுடைய மண்வெட்டி தோட்ட மண்வெட்டி என்றும் தண்ணி மாறப் பயன்படுகின்ற மண்வெட்டி கட்டை மண்வெட்டி என்றும் வகைப்படுத்தப்பட்டு அழைக்கப்படும்

(இன்று எனது வலைப்பூவுக்கு முதலாவது பிறந்தநாள்)
Author: சஞ்சயன்
•1:48 PM

செல்வவில்லா, எனது பெரிய பெரியம்மாவின் வீடு. மருதனாமடத்தில் (காங்கேசன்துரை வீதியில்) இராமநாதன் மகளீர் பாடசாலையுடனான மதிலுடன் அமைந்திருக்கும் வீடு. இந்த வீட்டுச் சுவர்களுடன் எனக்கு பெரும் பரீச்சயமில்லை என்றாலும், மட்டக்களப்பில் இருந்து வருடத்துக்கு ஒரு முறை விடுமுறையில் போகும் போது எனது நினைவில் படிந்துவிட்ட நினைவுகளின் நிழல்களையே பதிய நினைத்திருக்கிறேன் இன்று.

குமாரவேலர் தான் வீட்டின் அதிபதியும் எனது பெரிய பெரியப்பாவும். அந்தக்காலத்து சிங்கப்பூர் பென்சனீயர். சிங்கப்பூரில் இருந்து பெரியப்பா காசு அனுப்ப மாணிக்கராகிய எனது தாத்தா கட்டினாராம் அந்த வீட்டை. பெரியப்பா ஆகக் குறைந்தது 6 அடி உயரமிருப்பார். வெள்ளைத் தும்பு முட்டாஸ் போன்ற தலைமயிர், வெள்ளை சேட், வெள்ளை வேட்டி தவிரித்து வேறு ஏதும் நிறங்கள் அவரின் உடையில் நான் கண்டதில்லை.

செல்வராணி, எனது பெரியப்பாவின் அதிபதி, எனது பெரிய பெரியம்மா. அவரின் பெருடன் "villa"வை சேர்த்து வைத்த பெயர் தான் அவர்களின் வீட்டின் பெயர்.

பெரியம்மாவுக்கும் எனது அம்மாவுக்கும் ஏறத்தாள 23 வயது வித்தியாசம். பெரியம்மா குடும்பத்திடம் எல்லாம் இருந்து குழந்தைகளைத் தவிர. அவர்களின் வீட்டுக்கு போகும் நேரமெல்லாம் பெரியம்மாவின் அன்புத் தொல்லை ஒரு இதமான இம்சையாகவே இருக்கும். இரவு நித்திரையில் இருக்கும் போது 11 மணிபோல் எழுப்பி பால் குடிச்சிட்டு படுடா என்பார், கையில் சீனி போட்ட பாலுடன் வந்து. மூக்குப்பேணியை நான் கண்டதும் அங்குதான்.

அவர்களின் வீட்டில் பல வினோதமான பொருட்கள் இருந்தன. அதில் ஒன்று ரேடியோ. அந்த ரேடியோ மிகப் பெரியது. அதன் முன் பக்க கண்ணாடியில் கிழக்காசிய நாடுகளின் பல நகரங்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 6 வெள்ளை நிற கட்டைகள் இருந்தன. அது எப்படி இயங்கியது என்று எனக்குத் தெரியாது. ஆனால் பல நாட்கள் அதை திருகிப் பார்த்திருக்கிறேன். யாருமில்லாத போது.

அவர்களின் வீட்டின் முன் பகுதியில் பெரியதோர் போர்டிக்கோ இருந்தது. அதற்கு இரு பக்கங்களிலும் வாகனம் நுளையுமளவுக்கான இரும்பிலான பலத்த கேட்களுமிருந்தன. கேட்டுக்கும் போட்டிக்கோவுக்குமிடையில் பெரியம்மாவின் ரோசாப்பூத் தோட்டமிருந்தது. அதில் இல்லாத நிறங்களில்லை. அதற்கங்கால் பெரியப்பாவின் ”ஓடாத மொரீஸ் மைனர்” கார் நிற்கும் கறாஜ் இருந்தது.

 யாழ்ப்பாணத்திலேயே ”ஓடாத மொரீஸ் மைனர்” வைத்திருந்தது எனது பெரியப்பா தான். பெயர்தான் ”ஓடாத மொரீஸ் மைனர்” ஆனால் கார் ஓடும். அவர் அந்தக் காரை மாதத்தில் ஒரு தரம் மட்டும் வெளியில் எடுப்பார். வங்கியில் இருந்து பென்சன் காசு எடுக்கப் போகும் போகுமன்று மட்டும் கார்.

காராஜ்ஐ விட்டு வெளியில் வரும். 3 கிலோமீட்டர் போய் வங்கியில் காசு எடுத்து திரும்ப 3 கிலோ மீட்டர் ஓடி வருவார். கேட் திறக்க ஆள் நிற்கும் அப்படியே கராஜ்க்குள் விடுவார் காரை. பிறகு ஓரு மாதமாகும் கார் வெளியில் வர. இது தான் அந்தக் காருக்கு ”ஓடாத மொரீஸ் மைனர்” என்று பெயர் வரக் காரணம். 2004 ம் ஆண்டு வரை அந்தக் கார் 44000 மைல்களே ஓடியிருந்தது.
1962 ம் ஆண்டு 3000 ரூபாய்கு வாங்கிய கார் அது என்று செல்லக் கேட்டிருக்கிறேன். அது வாங்கியது பற்றியும் ஒரு சுவராசியமான கதையிருக்கிறது. 1962ம் ஆண்டு ஒரு நாள் பெரியப்பா தனது சைக்கிலில் யாழ்ப்பாணம் போய் மொரீஸ்மைனர் விற்கும் கடையில் கார் பார்த்திருக்கிறார். கார் பிடித்துப் போக மனிதர் விற்பனையாளரிடம் விலையைக் கேட்க.. விற்பனையாளர் பெரியப்பாவின் ரலி சைக்கிலையும், வெள்ளை சேட், வெள்ளை வேட்டியையும் பார்த்து நக்கலாய் உன்னால உத வாங்ககேலாது அவ்வளவு விலை என்று எளனப்படுத்தியிருக்கிறார் பெரியப்பாவை. அது பெரியப்பாவின் மானப் பிரச்சனைாயக மாற, உடனடியாக வங்கிக்குப் போய் காசு எடுத்துவந்து காரை வாங்கினாராம் என்றார் பெரியம்மா ஒரு நாள்.

அந்த வீட்டின் அமைப்பே அலாதியானது. நான்கு பெரிய அறைகள். ஜன்னல்களுக்கு பலவண்ணணக் கண்ணாடிகள். மாடியில் சாமியறை, நீண்டகல்ந்த விறாந்தைகள், விறாந்தையில் இரண்டு பிரம்பிலான சாய்மனைக் கதிரைகள். அவற்றில் கட்டாயம் ரகுநாதய்யர் பஞ்சாங்கமிருக்கும். கொமேட் வைத்த கக்கூஸ்சும் குளியலறையும். இரண்டு குசினிகள் அதற்கங்கால் மாட்டு-ஆட்டுக் கொட்டில் அதற்கருகில் கிணறும், தண்ணீர்த் தொட்டியும். அதற்கங்கால் குளியலறை, அதற்கு மேல் சீமெந்திலான தண்ணீர் டாங்க், அருகில் தண்ணீர் பம்ப் இருக்கும் அறை. இவற்றின் கீழ், தண்ணீர் வெளியேற சீமெந்துக் கான். அதற்கங்கால் வாழைகள் பிறகு தோட்டம் தொடங்கும் எல்லை.

வீட்டின் முன்னால் ஜிம்மியும், வீரனும். பின்னால் இன்னும் 4 நாய்கள். வைக்கோல்போரடியில் இன்னுமொன்று. விறைந்தையில் 3 கிளிகள் (களுத்தில் சிவப்புக் கோடு இருக்கும்), அதிலொன்று ராணி, ராணி என்று பெரியம்மாவை அழைக்கும். அவரும் அருகில் போய்க் கதைப்பார். இதை விட 2 மைனாக்கள், வீட்டின் பின்னாலிருந்த கொட்டிலில் நாலைந்து மாடுகளும், ஆடுகளும், தோட்டத்துக்குள் இருந்த கோழிக் கூட்டினுள் 20 - 25 கோழிகளும் சில சேவல்களும்.

இந்த சேவல்களில் ஒன்றுக்கும் எனக்கும் எட்டாப் பொருத்தமாக இருந்து. என்னைக் கண்டால் திரத்தி வந்து கொத்தும். நான் வரும் போதெல்லாம் அதற்கு சிறைத்தண்டணை விதித்தார் பெரியம்மா. பின்பொருநாள் அண்ணண் ஒருவனின் போர்க்கோழி (சேவல்) ஒன்றை வைத்து நான் எனது கொலைவெறியை தீர்துக் கொண்டது, பெரியம்மா அறியாத கதைகளில் ஒன்று.

பெரியப்பாவின் சைக்கிலும் அலாதியானது. எப்பொழுதும் தேர் மாதிரியே வைத்திருப்பார் அதை. அழகிய கைபிடி, அதில் குஞ்சம் தொங்கும். பாருக்கு வயர் சுற்றியிருப்பார், அழகிய சத்தத்துடனான மணி, டைனமோ, முன்னுக்கு பெரிய லைட், பின்னால் சிவப்பு லைட். பெரிய கரியர், பெரிய ஸ்டான்ட். ரிம்முக்கு மஞ்சல் நிற பூ போட்டிருப்பார். ஐப்பான் செயினும் பிறேக் கட்டையும், செயின் வெளியே தெரியாத மாதிரி செயின் பொக்ஸ். அதுவும் அவரின் காரைப் போல ஊருக்குள் பிரபல்யமானது தான்.

வீட்டுத் தோட்டம் பெரியது என்பதை விட, அது மிகப் பெரியது என்பதே சரி. காலையில் ஒரு கையில் வேப்பம் குச்சியுடனும், மறுகையில் குத்தூசியுடனும் உலாவருவார் பெரியப்பா. பழுத்த பலா இலைகளை குத்தூசியில் குத்திக் கொண்டே முழுத் தோட்டத்தையும் உலாவருவார். அவரின் தோட்டத்தில்தான் நான் முதன் முதலில் ”வேரிலே பழுத்த பலா” கண்டேன். மா, பலா தோடை, மாதுளை, தென்னை, பனை என பலவிதமான மரங்களிருந்தன. மாவிலும், பலாவிலும் வித விதமான ருசியில் பல மரங்களுமிருந்தன.

அவர்கள் வீட்டில் பலர் வளர்ந்தார்கள். அவர்கள் பெரியவர்களாகியதும் திருமணம் முடித்துக் கொடுத்தார்கள். எங்கள் சின்னப்பெயரிம்மாவின் கடைசி மகனும் அங்கு தான் வளர்ந்தான். பெரியம்மாவினதும், பெரியப்பாவினதும் செல்லம் தான் அவனை கெடுத்தது என்று யாரும் சொன்னால் நான் அதை மறுக்க மாட்டேன். பெரியப்பாவிற்கு அவனின் மேல் அப்படியோர் பாசமிருந்தது. அவனின் சொல்லுக்கு மனிதர் மகுடியாய் ஆடினார். இவனும் ஆட்டுவித்தான். பெரியப்பா விரும்பியபடியே அவருக்கு கொள்ளி வைத்ததும் அவன் தான்.

பெரியப்பா 95 வயது தாண்டி வாழ்ந்திருந்தார். பெரியம்மாவும் கிட்டத்தட்ட அப்படித்தான். இன்று எனது சின்னப் பெரியம்மாவின் மகன் அந்த வீட்டில் வாழ்கிறார்.

இறுதியாய் அங்கு போய் வந்த பின் மனது ஏனோ இந்த முறை செல்வவில்லாவின் சுவர்கள் என்னுடன் பேசவில்லை என்றது. அது கசந்தாலும் உண்மையை மறுப்பதற்கில்லை.

‌செல்வவில்லாவுக்கு இது சமர்ப்பணம்.
Author: கானா பிரபா
•3:06 AM

"தம்பி! உமக்கு இதில் அவ்வளவு விளப்பம் இல்லை, பெரியாக்கள் கதைக்கேக்க இடையில வராதையும்"

ஊர்ப்பெரியவர்கள் யாராவது பேசிக்கொண்டிருக்கும் போது நடுவில் பாய்ந்து முந்திரிக்கொட்டையாய் நாமும் ஏதாவது கருத்துச் சொல்ல விழைந்தால் அந்தப் பெரியவர்களிடம் இருந்து கிட்டும் விமர்சனம் இப்படியாக இருக்கும்.

விளப்பம் என்பதற்கு குறித்த விடயம் குறித்த ஆழமான அறிவு, அல்லது அந்த விஷயம் பற்றிய பின்புலம் தெரிதல் போன்றதான ஒத்த கருத்துக்களைச் சொல்லலாம்.

"இதில எனக்கு அவ்வளவு விளப்பம் இல்லை, என்னை விட்டுடுங்கோ"
இப்படியான மறுமொழியை சாதாரணமாக நம்மூர் ஆட்களிடம் கேட்கக்கூடியதாக இருக்கும். அதாவது
ஏதாவது சிக்கல் தரக்கூடிய சமாச்சாரம் என்றால் அதில் ஏதாவது அரைகுறையாகக் கருத்துக் கூறப்போய் ஏன் சிக்கலில் மாட்டவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடாக அது அமையும்.

அதே சமயம் "இந்த விஷயத்தில் எனக்கு நல்ல விளப்பம் " இப்படியான எதிர்க்கருத்தாக அமையும் சொல்லாடல்களைப் பேச்சுவழக்கில் காண்பது அரிது. அதற்குப் பதிலாக
"எனக்கு இதைப்பற்றி நல்லாத் தெரியும்" என்பதான சொல்லாடலே பதிலீடாகப் பாவனையில் இருக்கின்றது.

ஈழத்தில் பரவலாகப் புழங்கும் விளப்பம் என்ற சொற்பதத்தை மலையாளிகள் அதிகமாகப் பயன்படுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் தமிழகத்தவர் இந்தச் சொல்லைத் தம் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்துகின்றார்களா என்பதை தமிழகத்து நண்பர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும்.
Author: வடலியூரான்
•5:37 AM
என்னத்தைத் தான் இண்டைக்கு தியேட்டரிலை பெஸ்ற் ஷோ(First Show), நெற்றிலே(இன்டெர்னெட்) பாட்டு, படம், ட்ரெயிலர் பார்க்க முடியுமெண்டாலும் அண்டைக்கு(95 களுக்கு முதல்)ஒரு வசதிகளுமில்லாமல் இருக்கேக்கை பார்த்த படங்கள் மாதிரியோ, அல்லது அதிலிருந்த சந்தோசம் மாதிரியோ வராது கண்டியளோ.அது தான் அந்த நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.



ஊரிலை ஒரு கலியாண வீடு,சாமத்திய வீடு முடிஞ்சால் ஊர் முழுக்க அந்தக் கலியாண வீடோ,சாமத்திய வீடோ நடந்த வீட்டுக்காரரிட்டை, "என்ன கொப்பி வந்திட்டுதோ? எப்ப வரும்? வந்தா எங்களுக்குஞ் சொல்லுங்கோ" எண்டு நச்சரிச்சு நச்சரிச்சே தொலைச்சுப் போடுங்கள்.அதுகளும் படத்துக்கு சொல்லாட்டிலும் ஏதாவது குறைவருமோ எண்டிட்டு ஊர் முழுக்க காட்(Card) குடுக்காத குறையாப் படத்துக்குச் சொல்லுவினம்.




இண்டைக்கு இரவு படமெண்டால் எல்லா வீடுகளிலும் 5,6 மணிக்கே கோதம்ப மாப் புட்டை(கோதுமை மா) அவிச்சது பாதி,அவிக்காதது மீதியெண்டு அவிச்சுக் கொட்டிப் போட்டு பெண்டுகளும் அவையளோடை பிள்ளையளும் எல்லாரும் நடையைக் கட்டிப்போடுவினம்.ஆம்பிளையளும் அவையளுக்குப் பிறகாலை ஒரு பெட் ஷீற்றை(Bed Sheet)மடிச்சு கமக்கட்டுக்கை வைச்சுக் கொண்டு படையெடுப்பினம்.பேந்தேன் பேசுவான்,படம் போடுற வீடு கலியாண வீடு மாதிரித் தான் மாறிப் போடும்.


சரியெண்டு படம் பார்க்கப் போனால் அண்டைக்கு திருவிழாத் தான். அப்பவெல்லாம் "எஞ்சின்" இலையிருந்து தான் "கறண்ட்" வரும்.எஞ்சினெண்டால் நீங்கள் இப்ப பார்க்கிற ஜப்பானிலையிருந்து வாற "ஜெனறேற்றர்" எண்டெல்லாம் நினைக்காதையுங்கோ."வோட்டர்ப் பம்பையும்" மோட்டரையும் வைச்சு எங்கன்றை ஆக்கள் கண்டு பிடிச்சது.(கஷ்ரங்கள் எங்களைச் சூழ்ந்த போது தான் எங்கன்ரையாக்கள் எத்தினையைக் கண்டு பிடிச்சாங்கள்.வால் கட்டையில அடிக்கிற வெடியிலையிருந்து வானத்திலை பறக்கிற பிளேன் வரைக்கும்)



வோட்டர்ப் பம்மின்றை புட்வால்வ் (நீரை கீழிருந்து எடுத்து மேலே தள்ளும் பின்பக்கத்திலுள்ள குழாய்)கலட்டிப் போட்டு அதையும் மோட்டரையும் பலகையிலை வைச்சுத் தறைஞ்சு தான் "மேட் இன் -- "ஜெனரேற்றைச் செய்ஞ்சிருப்பாங்கள் எங்கடையாக்கள்.முதல்லை வோட்டர்ப் பம்மின்றை காபரேற்றருக்கை கொஞ்சம்,கொஞ்சமாப் ரின்னரைப் பனுக்கி பனுக்கி அதை ஸ்டார்ட்(Start)பண்ண வைக்கிறதுக்குள்ளை அதை இழுத்து இழுத்து இழுக்க்கிறவனுக்கு மூச்சுப் போடும்.அது ஸ்டார்ட் எடுத்தாப் போலை கொஞ்ச நேரம் சோக்கிலை(chock) ஓடி, ஒரு கட்டத்துக்குப் பிறகு தான் அந்த Bar(பட்டி)ஐ மோட்டரிலை கொழுவுவாங்கள்.கேட்டால் இல்லையெண்டால் இஞ்சினுக்கு லோட்(Load) கூடி இஞ்சின் ஸ்டார்ட் எடுக்க மாட்டாதாம் எண்டு விளக்கம் வேறை குடுப்பாங்கள்.சரியெண்டு ஒருமாதிரி இஞ்சின் ஸ்டார்ட் பண்ணினாப் பிறகு T.V யிலை படம் வாறது தான் பெரிய கதை





எங்கன்ரை ஊரிலை செல்லக்கண்டண்ணை தான் ரீ.வி, டெக் வைச்சு வாடகைக்கு விடுறவர்.ஆள் ரீ.வி, டெக்கை ஓட்டத்துக்கு கொண்டு வந்தால் எங்களை மாதிரி சின்னப் பெடியளையெல்லாம் தொட விட மாட்டார்.நாலைஞ்சு வருசமாக அதைத் தங்கக்கட்டி மாதிரித் தான் வைச்சுப் பாவிச்சுக் கொண்டு வந்தார்.ரீ.வி டெக் வந்த அந்த பெட்டியைத் திறந்து, றெஜிபோமைக் கலட்டி,பொலித்தீன் பாக்குக்குள்ளாலை(Bag)அதை எடுத்து ஒரு ரீப்பொயிலை டெக்கையும் ஒரு மேசையிலை ரீ.வி யையும் வைச்சு அதுக்கு மேலை ஒரு ஒறேஞ் கலரிலை நல்ல ஒரு துணியையும் விரிக்கிறதுக்கிடையிலை "அரக்கடா..இதைக் கவனமாப் பிடி..,ஆ.ஆ ....மெள்ள .. ஆ மெள்ள ஆ.. பாத்து..." எண்டு இஞ்சத்தை எப்.எம் ரேடியோக் காரர் கணக்கா செய்யிறது கால்வாசி,சொல்லுறது முக்கால் வாசி எண்டது கணக்கா மனிசன் ஒரு ரணகளப் படுத்திப் போடும்.ஆனாலும் அந்தக் நாங்கள் காலத்திலை ஆளைப் பார்த்து வாயைப் பிளந்து தான் இருக்கிறம்.



செல்லக்கண்டண்ணையின்டை 21 இஞ்சி சொனி(Sony) ரீ.வியின் வலப் பக்க மேல் மூலையில 8 பட்டன் மாதிரி இருக்குது.அதுக்குக் கீழே ஒரு சின்னப் பெட்டிமாதிரி இருக்குது.அதுக்குள்ளை கொஞ்சக் கட்டைகள் கிடக்குது.

ஆள் வந்து, முதலாவது பட்டினை அமத்திப் போட்டு,அதுக்குக் கீழையிருக்கிற சின்னப் பெட்டியின்றை சின்னக் கதவை திறந்து,அதுக்குள்ளை இருக்கிற கட்டையளை ஒவ்வொன்றாச் சுத்தத் தொடங்குவார்.பிறகு கொஞ்சத்தாலை அடுத்த பட்ட்ன் எண்டு ஒரு மாதிரிச் சுத்திக் கொண்டு போகேக்கை திடீரெண்டு கறுப்பும்வெள்ளையும் புள்ளிகள் வந்திடும்.உடனை நாங்களெல்லாம் "ஆ.. படம் வரப் போகுது ..ஐ.." எண்டு ஒரே "கெக்கக்கை பிக்கை" எண்டு கைதட்டிக் கூ அடிச்சுச் சிரிப்பம்.திடீரெண்டு அதுவும் போடும்."பங்கை பார் நீங்கள் கத்தினபடியால தான் ரீவி பிழைப் பட்டுப் போச்சுது.சத்தம் போடாமல் இருங்கோ பார்ப்பம்" எண்டு யாராவது பெரிசுகள் பின்னுக்கு இருந்துகொண்டு அதட்டுங்கள். நாங்களும் அதுகளை எதோ உண்மையெண்டு நம்பி "கப் சிப்" எண்டு சைலென்றாயிடுவம்.செல்லக்கண்டண்ணைக்கும் கோபம் வந்திடும்.



செல்லக்கண்டண்ணையும் கோபத்தோடை ரீவிக்கு ரெஸ்ராலை குத்தி குத்தி,முறுக்க,திடீரெண்டு பாத்தால் எல்லாம் கறுப்பாக் கிடக்கும்.நடுவிலை மட்டும் மேலையிருந்து கீழை இரண்டு வெள்ளைக் கோடு மாதிரிப் போகும்.பேந்தென்ன எங்களுக்குத் துள்ளிக்குதிப்புத் தான்.அதுகும் கொஞ்சத்தாலை போடும்."உங்களுக்கு அப்பவும் படிச்சுப் படிச்சுச் சொன்னான்...பாத்தியளே இப்பவும் போட்டுது.. சத்தம் போடாமல் இருங்கோ பாப்பம்.." எண்டு அதட்டல் பிறகும் வரும்.செல்லக்கண்டண்ணையும் முறுக்கிக் கொண்டே போகும்.திடீரெண்டு பாத்தால் வானவில் மாதிரி கலர் கலரா கோடுகள் மேலையிருந் கீழை வாறமாதிரி இருக்கும்.அப்ப இனிப் படந்தொடங்கப் போகுது எண்டு நாங்கள் எங்கடை எக்ஸ்பீரியன்சிலை சொல்லிப் போடுவம்.



நாங்கள் சொன்ன மாதிரித் தான் திடீரெண்டு பாத்தால் மாப்பிளைக்கு அறுகம்புல்லு வைக்கிற சீன் போய்க் கொண்டிருக்கும்.எல்லாரும் உடனை முதல்லையிருந்து விடுங்கோவன் எண்டு செல்லக்கண்டண்ணையைக் கெஞ்ச "ஏன் இதிலையிருந்து பாருங்கோவன்" எண்டு செல்லக்கண்டண்ணையும் பெண்டுகளுக்குப் பஸ் அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொண்டு ரிவைண்ட்(Rewind) பண்ண,ஆக்களெல்லாம் படத்திலை பின்னுக்கு ஓடிப் போய்க் கொண்டிருப்பினம். பேந்தென்ன நாங்கள் எங்கடை "கெக்கக்கை பிக்கையைத்"7 தொடங்கிடுவம்.





உந்தத் திருவிழாவுகள் எல்லாம் முடிஞ்சு ஒரு மாதிரி நிறைகுட செற்றோடை இருக்கிற ஒரு பெரிய கப்பல் வாழைப் பழச் சீப்புக்குப் பக்கத்திலை குத்துவிளக்கைப் பாக்காமல் வீடியோவைப் பாத்துக் கொண்டு குத்துவிளக்குக் கொளுத்திற மாப்பிளையின்டை தாய் தேப்பனோடை படம் தொடங்கும்.பின்னாலை Background இலை "பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதைத் தொடங்கிவிடு.." எண்டு பாட்டும் பரலலா(Parallel) போய்க்கொண்டிருக்கும்.

பிறகு மாப்பிளைக்கு அறுகம் பால் வைக்கிறது,அவர் குளிக்கிறது,அவர் வெளிக்கிட்டாப் போலை,பொம்பிளை வெளிக்கிட்டாப்போலை,மணவறை, பந்தி,கால் மாறிப் போறது,ரெஜிஸ்ரேசன் எண்டு ஒவ்வொரு லொக்கேசனுகள், அதுக்கு டெக்கரேசனுகள்,மேக்கப்புகள் எண்டு எல்லாம் மாறும்,பின்னாலை போற பாட்டுகளும்,"மாசி மாசந் தான் கெட்டி மேளதாளந்தான் ..","செம்மீனே செம்மீனே .ஒங்கிட்டை சொன்னேனே..","ஆடியில சேதி சொல்லி ஆவணில சேதிவச்ச மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு தான்..","ராசி தான் கை ராசி தான்...ஒம் மொகமே ராசி தான்..","ஆனந்தம் ஆனந்தம் பாடும்.." எண்டு மாறிக் கொண்டே போகும்.பொம்பிளை தோழியோடை மணவறைக்கு வரேக்கை, "மணமகளே மணமகளே வா .. உன் வலது காலை எடுத்து வைத்து வா " எண்டோ " வாராயோ தோழி.. வாராயோ.. மணப் பந்தல் காண வாறாயோ" எண்டு ள்.ற்.ஈஸ்வரி பாடின பாட்டையோ போட மறக்க மாட்டங்கள்.



தாலி கட்டுக்கள்,சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு மாப்பிளை, பொம்பிளையள் கலியாண உடுப்பு மாத்தின பிறகு வாற சீனுகளுக்கு ஏன் " சின்ன ராசாவே சிட்டெறும்பு என்னைக் கடிக்குது அடிக்கடி ராத்திரி துடிக்குது .." எண்டு போடுறவங்கள் எண்டு 2,3 வருசம் கழிஞ்சாப் போலை தானே எங்களெக்கெல்லாம் விளங்கிச்சுது.அதை எல்லாம் இதிலை எழுதேலாது தானே.எண்டபடியால் அதை விடுவம்.



எல்லாரும் கலியாணவீட்டுப் படத்திலை தாங்கள் எப்ப வருவம் எண்டு வாயைப் பிளந்து பாத்துக் கொண்டிருப்பினம்.வந்தால் காணும் பேந்தேன் பேசுவான் "பங்கை பாரன் நான் நிக்கிறன்.." எண்டு சங்கக் கடையிலை மா வாங்கிறதுக்கு நிக்கிற கியூவிலை(Queue)ஏதோ முதல் இடம் பிடிச்சது கணக்கா துள்ளிக் குதிப்பினம்.



படம் பாக்கப் போனால் அண்டைக்கு விசுக்கோத்துக்கள், வடையள், வாழைப்பழங்கள், தேத்தண்ணி எண்டு வயித்துப் பாட்டுக்கும் நல்ல கவனிப்பாத் தான் இருக்கும்.பேந்தென்ன கையை வைச்சால் அம்பிடிற எல்லாத்தையும் அள்ளி ஒரு முழக்கு ஒண்டு முழக்கித் தள்ளவேண்டியதுதானே.


ஒரு மாதிரி கலியாணவீட்டுப் படம் முடிஞ்சால் அடுத்த சோ(Show) தொடங்கும்.வசந்த மாளிகை, கௌரவம், பூவேலி, மின்சாரம் அது சம்சாரம், ஓர் ஊரில ஒரு ராஜகுமாரி,முந்தானை முடிச்சு, பாட்ஷா, அண்ணாமலை,காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், அவள் வருவாளா,ஆசை,மேட்டுக்குடி,சூரிய வம்சம், புன்னகை மன்னன், மூன்றாம் பிறை,பதினாறு வயதினிலே,சலங்கை ஒலி,தர்மா,உளவுத்துறை எண்டு இடையில ஒரு காலகட்டத்திலை வந்த படங்கள் எல்லாம் எங்கடை ஊரிலை சக்கை ஓட்டம் ஒடித் தள்ளிச்சுது.எனக்குத் தெரிஞ்சு நான் வசந்தமாளிகை படத்தை மட்டும் அஞ்சு தரம் பாத்தனான் எண்டால் பின்னைப் பாருங்கோவன்.கலியாண வீட்டுக் கொப்பிக்குப் பிறகு2,3 சினிமாப் படங்களும் போட்டு முடிக்க விடிஞ்சு போகும்.விடிய எங்களை மாதிரி கொஞ்சம் ரீவிக்கு முன்னாலையே அனாதைப் பிணங்களை மாதிரிப் படுத்துக் கிடக்குங்கள்.



இப்பிடியெல்லாம் கஸ்ரப்பட்டுப் படம் பாத்ததெல்லாம் அந்தக் காலம்.ஆனால் இண்டைக்கு எங்கடை ஊரிலை கூடுதலாக எல்லா வீடுகளிலும் பெரிய 21 இஞ்சி fலற் ஸ்க்றீன்(Flat Screen)ரீவீயள் கிடக்குது.டெக்குகள்,சிடிக்கள்(CD),டிவிடி பிளேயருகள்(DVD),படக் கொப்பிகள் எல்லாம் இருக்குது.ஆனால் பாக்கிறதுக்கு ஆக்களும் இல்லை.இருக்கிற ஆக்களுக்கு நேரமும் இல்லை.அவர்களுக்கும் பாக்கிற மனநிலையும் இல்லை.அங்கையொண்டு இஞ்சையொண்டு எண்டு எங்கன்ரை இனம் எல்லா இடமும் சிதறி, சந்தோசத்தைத் தொலைச்சுக் கிடக்குது.என்ன தான் கஸ்ரப்பட்டாலும் அந்தக் கால வாழ்க்கையே எவ்வளவோ பரவாயில்லை எண்டதோடை நிம்மதியானதும் சந்தோசமானதும் எண்டு என்ரை மனஞ் சொல்லுது.நீங்கள் என்ன சொல்லுறியள்.


கொப்பி - காணொளி பிரதி - வீடியோ

பேந்தேன் பேசுவான் - பிறகேன் பேசுவான்

தறஞ்சு -அறைதல்

ரின்னர் - பெற்றோல் போன்ற எரி பற்றுக் கூடிய எரிபொருள்

அரக்கடா - விலத்து

மெள்ள - மெல்ல

இஞ்சத்தை - இந்த தேசத்தின்

பங்கை பார் -அங்கை பார்

கப் சிப் அமைதியாயிருத்தல்

கால் மாறிப் போதல் - மாப்பிளை வீட்டுக்கு பொம்பிளை செல்லல்

சங்கக் கடை - நிவாரணம் குடுக்கப்படும் கடை(றடிஒன் ஷொப்)
Author: வர்மா
•6:52 AM
வரலாற்றுப்புகழ்மிக்க நல்லூர் தேர்த்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க சிறப்பாக நடைபெற்றது.

பட உதவி;பிரியா
Author: கானா பிரபா
•7:47 PM

இத்தனை நாளும் எதிர்ப்பார்த்த நாள் இன்று நல்லைக் கந்தன் ரதமேறி வரும் நாள். எம்பெருமானின் அருள் வேண்டிப் பக்தர்கள் தவம் கிடக்க, வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து ரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.




அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பு நிகழ்ச்சியில் சைவத்தொண்டர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், நல்லைக் கந்தன் பாடல்கள், நேயர்களின் நேரடிக் கருத்துப் பரிமாறல்கள், அத்தோடு நல்லைக் கந்தன் ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல் போன்ற அம்சங்கள் அரங்கேறியிருக்கின்றன

இன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், கடந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வுகளில் இருந்து இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.




முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு
Get this widget
Share
Track details



ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது
Get this widget
Share
Track details


எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய "முருக வழிபாட்டின் சிறப்பு"
க்குறித்த கருத்துப் பகிர்வு

Get this widget
Share
Track details



முன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கிய "நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்" குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு


அல்லது இங்கே சொடுக்கவும்

தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய "தேர்த் திருவிழாவின் சிறப்பு" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு


அல்லது இங்கே சொடுக்கவும்

அகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் "நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்" என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு


அல்லது இங்கே சொடுக்கவும்







நன்றி: இந்தப் பெரும் பணிக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும்

படங்கள் உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப் பிள்ளை
Lanka Library, மற்றும் கெளமாரம் தளம்
Author: வர்மா
•10:07 AM
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் புஷ்கரணியில் தீர்த்தமாடிய அற்புதமான காட்சி






















பட உதவி; பிரியா