Author: ஹேமா
•2:06 AM

ஏனப்பா....ஏன் என்ர குஞ்சைப் போட்டு அடிக்கிற !

அதுசரி ...உங்கட பிள்ளைக்கு ஒண்டெண்டா உடன வந்திடுவியள்.அதுவும் துண்டை முறுக்கித் தோள்ல போட்டுக்கொண்டு.

நீ இஞ்ச வாடாப்பு ராசா...ஏன் கொம்மா இப்பிடிப் போட்டுக் கும்முறா உன்னை?

ஓம்...ஓம்...அப்பிடியே சொல்லிக் கிளிக்கத்தான் போகுது குரங்கு.வாய் மட்டும்தான் வங்காளம்போல...அதுவும் என்னட்ட மட்டும் !

சரி..சரி...இப்ப என்னப்பா நடந்தது அதைச் சொல்லன் நீ .

ஓம் ஓம்....கால் முளைச்சிட்டுதெல்லோ உங்கட நோஞ்சானுக்கு.உங்கால இஞ்சாலயெண்டு அந்த வளைவு மூலை வளவு வரைக்கும் வெளிக்கிட்டுடார் இப்பல்லாம்...துலைஞ்சவன்.

அதுக்கேனப்பா இப்பிடி அலம்புற.சின்னதுகள் எண்டா வீட்டுக்குள்லயே புளுக்கை போட்டுக்கொண்டு உன்ர சீலைக்குள்ளயே கிடக்குமோ.வெளில போய்க் கீய்த்தானே வருங்கள்.நீ ஏன் இந்தப் பாடு படுறயப்பா.

ஓ...ஓ...இப்பிடியே அவனுக்குச் வக்காளத்து வாங்கி வாங்கியே அவன் நாசமாய்ப் போறான்.அங்கத்தைப் பெடியள் எல்லாம் உதவாததுகள்.அதுகளோட பிழங்கிப் பழகி ஒரு சதத்துக்கு உதவாம வருது உது.எல்லாத்துக்கும் நல்லா வாயடிக்குது.

சரி...விடு விடு...அவன் கெட்டிக்காரன்.சரியாயிடுவான்.

ஓம்...ஓம் உப்பிடியே சொல்லிச் சொல்லித்தான் கழுதை குட்டிச்சுவர்ல ஏறி நிக்குது.பிறகு உதே வாய் என்னைத்தான் குற்றம் சொல்லும்.வளத்த வளப்பைப் பார் எண்டு.அப்ப கேட்டுக்கொள்றன் உங்களை.

யேய்...கொஞ்சம் சும்மா இரு பாப்பம்.சும்மா முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுற.புத்தி இருக்கோ உனக்கு.நீ ஒரு சென்மம்.

அதெண்டாச் சரிதான்.நான் புத்தி கெட்டவளெல்லோ.இஞ்ச வாருங்கோ.
சொல்லித் தாங்கோவன்.

என்ன....நானும் பாத்துக்கொண்டிருக்கிறன்.சத்தம் உச்சத்தில ஏறிக்கொண்டேல்லோ போகுது.கவனமாயிரு...சொல்லிட்டன்....ஓம்.
சும்மா இருங்கோப்பா.ஏதோ நான் சத்தம் போட்டா அடங்கிற ஆள்மாதிரி.பேசாமப் போங்கோ பாப்பம்.

யேய்...இப்ப வாய் மூடப்போறியோ இல்லையோ.இல்லாட்டி...!

ஓம்...ஓம் என்னத்தைச் சொன்னாலும் அடக்கிப்போடுவியளே...இது உங்கட குடும்பத்துக்கே பழக்கிப்போன ஒண்டெல்லோ...

யேய்....இப்ப என்ன உனக்கு....என்னண்டாலும் என்னோட இருக்கட்டும்.தேவையில்லாமலுக்கு என்ர குடும்பத்தை இழுத்தியெண்டா...
சொல்லிட்டன் ஓம்...

அடப் போங்கோப்பா...உங்கட கும்பத்தைப் பற்றித் தெரியதோ.உலுத்துக் கெட்ட குடும்பம்.என்ர அப்பர் சொன்னதைக் கேக்காம உங்களுக்குப் பின்னாலதான் துலைவன் எண்டு அழுங்கு பிடிச்சுக்கொண்டு வந்த எனக்கு வேணும்....வேணும்....இதுவும் வேணும்.....இன்னமும் வேணும்.

ஓமடி நானும் அப்பிடித்தான்.என்ர தலையெழுத்து.எங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோட எண்டதுபோல சனியன் உன்னோட மாரடிக்க வேண்டிக் கிடக்கு.

ஓம்...ஓம் என்னவோ சும்மா கூட்டிக்கொண்டோ வந்தனியள் வந்த மாதிரியல்லோ.எங்கட அப்பரிட்ட விடாப்பிடியா நண்டுபோல நிண்டு 15 பவுண் நகை வாங்கேக்க உங்கட மார் அடிக்கேல்லையோ.

இஞ்ச பார்...சும்மா எல்லாத்துக்கும் எதிர்த்துக் கதைக்காத.வாய் காட்டாத.ஒண்டு வச்சனெண்டா உனக்கு.நல்லா வாங்கப்போற...

ஓம்..ஓம்....அதுக்குத்தானே அப்பர் என்னைப் பெத்து உங்களிட்ட வாய்க்கரிசி போட்டவர்.அடிப்பியள் நீங்கள்.

(ப்ப்ப்ளார்.............)

என்ர ஐயோ...கடவுளே அடிச்சுப் போட்டியளெல்லோ..இவ்வளவு காலமும் இல்லாம கை நீட்ற அளவுக்கு உங்கட கை வளந்திட்டுதெல்லோ.இனியும் இந்த விசரி உங்களோட இருந்தாளெண்டா....நான் போறன் என்ர வீட்டுக்கு.

போடி...போ என்னவோ உவ இல்லாட்டி உலகமே இல்லையாக்கும்.வாழ ஏலாதோ...பெரிய இவவெண்டு நினைப்பு இவவுக்கு.

ஓம் ...இப்ப உங்களுக்குத் தெரியாது.கொஞ்சம் பொறுங்கோ.நாளைக்கு றோட்டில நிப்பியள்...யாரடா ஒரு சொட்டுக் கஞ்சி ஊத்துவினம் எண்டு கிளிஞ்ச சாரத்தோட நிப்பியள் பாருங்கோ...அப்ப தெரியும்.

ஓமடி போடி...நீ இல்லாட்டி ஒரு ஆண்டி மடம்...அரச மரம்...சந்தி மடம்...
கிடைக்காமலே போகும்.

சரி சரி நான் வெளிக்கிடுறன்.ரெண்டொருநாள் செல்ல எங்கட வீட்டுப் பக்கம் "இஞ்சாரப்பா".... எண்டுகொண்டு வருவியள்...சமாதானம் பேசிக்கொண்டு...அப்ப பேசிக்கொள்றன் உங்களை.

ஓ...அப்பிடி ஒரு நினைவிருக்கோ உனக்கு.என்னவோ பூனை கண்ணை மூடிக்கொண்டா பூமியே இருண்டு போகுதெண்டு நினைப்பாம் அதுக்கு.....விளங்கிச்சோ... ஒருக்காலும் நான் உன்ர வீட்டுப்பக்கம் வரன் தெரியுமோ.

அதையும் நான் பாத்துக்கொள்றன்...கொப்பரும் பிள்ளையுமாக் கிடந்து காயுங்கோ....வாறன்.

**************************************

அம்மா.....அம்மா....அம்மாய்..அம்மா வேணும் எனக்கு.அப்பாய்....அம்மாய்

என்னடா இப்ப உனக்கு.அம்மாய் கொம்மாய் சும்மாய்...அதான் போட்டாளெல்லோ....
உன்னாலதான் எல்லாம் ....இனிமேல்பட்டு அந்தப் பக்கம் அந்தப் பெடியளோட போவியே....எங்கயடா அந்தத் தடி.அறுந்தவள் அதையும் எடுத்து ஒளிச்சுப்போட்டுப் போட்டாளே.இரு....கிளுவங் கம்புதான் உனக்குச் சரி.

டேய் நில்லடா....ஓடினா இன்னும் உதைப்பன்....

(அடி...1...அடி2 3 4 5 6 )

ஐயோ....அம்மா.....அப்பா....அடிக்கிறார்.


பாலாஜியிட்ட இருந்து எங்கட மொழி அசைவில் எடுத்து மீள்பதிவாக்கினது பாருங்கோ.இதுதான் என்ர முதல் பதிவும் ஈழத்து முற்றத்தில.
Author: தாருகாசினி
•12:11 PM
என்ன கனகமக்கா அரக்கபரக்க ஓடிவாறியள் என்ன நடந்தது..என்ன மார்க்கண்டண்ணண்ர பிருந்தாவை காணேல்லயாமோ...அவள் உதில வதிரி சந்திக்கு தானே ரியூசனுக்கு போறவள்..

அது வந்து கமலாக்கா விடிய 6 மணிக்கு வகுப்பு எண்டு கருக்கலுக்குள்ளயே வெளிக்கிட்டிட்டாளாம்..8 மணிக்கு முடியிற வகுப்பு 10 மணி ஆயிட்டுது..ஆளை காணேல்ல...

அங்க சந்திக்கு பக்கத்தில சென்றி பொயின்ற் ஒண்டு இருக்கெல்லோ..அதில தான் அந்த படுபாவியள் பிடிச்சு வச்சிருக்கிறாங்களோ தெரியாது..அதான் எங்கட சுந்தரமண்ணை விசாரிக்க எண்டு போட்டார் அவருக்கு சிங்களம் நல்லா கதக்கத்தெரியும்...இங்க சின்னம்மாக்கா ஒரே ஒப்பாரி பச்சை தண்ணி கூட குடிக்கேல்லயாம்...



கொஞ்சம் பொறுங்கோ சுந்தரமண்ணை வாறார் என்னண்டு கேப்பம்..என்ன யாழ்ப்பாணத்தில இருந்து வாற வாத்தி வர பிந்திபோச்சோ...அப்பிடியெண்டா முதலே அறிவிக்கவெல்லோ வேணும் அத விட்டிட்டு .என்ன கண்டறியாத ரியூசன் நடத்துறாங்களாம் ரியூசன்..இந்த பெட்டைக்கும் கொஞ்சமெண்டாலும் பொறுப்பு இருக்கே..வாத்தி வரப்பிந்தும் எண்டா வீட்ட வந்து ஒரு சொல்லு சொல்லியிட்டு போயிருக்கலாம்..அத விட்டிட்டு பக்கத்தில கூடப்படிக்கிற பொடிச்சி வீட்ட போய் நிண்டிருக்காளாம்..நாங்கள் இங்கை நெஞ்சிடிச்சு கொண்டு...பொம்பிளபிள்ளைய பெத்து படிக்க விட்டிட்டு வயித்தில நெருப்பையெல்லே கட்டிகொண்டிருக்கவேண்டிகிடக்கு...நல்ல காலம் சுந்தரமண்ணை ஆமிக்காறனட்ட கேக்க முதல் ரியூசன்ல போய் விசாரிச்சது....



சொல்விளக்கம்

அரக்கபரக்க-மிகவேகமாக அல்லது படபடப்புடன் கூடிய என்ற கருத்தை குறிக்கும் சொல் பிரயோகம்

கருக்கல்-பொழுது நன்றாக விடிய முதல் உள்ள ஒரு மெல்லிய இருட்டு பொழுதினை குறிக்கும்...
மாலை சாயும் நேரத்தையும் கருக்கல் என்று சொல்வார்கள்..

கேப்பம்-கேட்போம்
Author: கானா பிரபா
•3:22 AM


"என்ன பிள்ளை வீடெல்லாம் ஒரே மச்ச வெடுக்கா இருக்கு, நாறல் மீனைப் பார்க்காம வாங்கீட்டியோ"
வீட்டு வாசல் படியை மிதிக்கும் முன்னமே ஐயாத்துரை அண்ணை கேட்கிறார்.


மேற்குறித்த வாக்கியத்தில் வரும் "மச்சம்" , "வெடுக்கு" ஆகியவை புதுமையான சொற்களாகக் குறிப்பாகத் தமிழகத்தவருக்குத் தென்படும்.

மச்சம் என்பது மீன் என்பதன் ஒத்த சொல் என்பது எல்லோரும் அறிந்ததே. அதற்கு நெருக்கமான உதாரணமாக கிருஷ்ண பரமாத்மாவின் "மச்ச அவதாரம்" என்பது மீன் வடிவம் எடுத்ததாக இதிகாசம் சான்று பகரும்.

ஈழத்துப் பேச்சு வழக்கில் மச்சம் என்பதைப் பொதுவாக மாமிசம் என்ற வகையறாவுக்கு ஒத்த கருத்தாகப் பாவித்து வருவது வழமை. எனவே வீட்டில் மீன் கறி என்றால் மட்டுமல்ல, கோழி, ஆடு, மாடு எதைக் கறியாக்கினாலும் "மச்சம்" என்ற பொது வழக்கில் அழைப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக தாவர உணவுகளை "சைவம்" சமைத்தேன் என்று அடையாளப்படுத்துவார்கள்.
தமிழக நண்பர் ஒருவர் கருத்துப்படி அசைவ உணவை "மச்சம்" என்று தமிழக வழக்கில் பாவிப்பதில்லை என்று சொன்னார். ஆனால் ஈழ வழக்கோடு பெரிதும் பொருந்திப் போகும் குமரி மாவட்டத்திலாவது இப்படியான சொற் பிரயோகம் இருக்கா என்ன?

அடுத்ததாக வரும் சொல் "வெடுக்கு"
மாமிசம் சமைத்தால் இயல்பாகவே கிளம்பும் வாசனையைத் தான் "வெடுக்கு" என்ற அடைமொழியிட்டுக் குறிப்பிடுப்பிடுவார்கள். "வெடுக்கென ஓடினான்" என்பதில் வரும் வேகம், விரைவு என்ற தொனியில் மாமிசம் காய்ச்சும் போது திடீரென நாசியைத் துளைக்கும் வாசனை மேலெழுந்து வருவதால் தானோ என்னவோ "வெடுக்கு" என்று அழைக்கிறார்கள்.
"வெடுக்கு" என்ற பதம் தவிர "வெடில்" என்றும் சம அர்த்தத்தோடு பேசுவார்கள். அதாவது "மீன் நாற்றம்" என்பதை "மீன் வெடுக்கு" "மீன் வெடில்" என்றும் சொல்லுவார்கள்.

புகைப்படம் நன்றி: இணுவில் கெளரி லோகேஸ்வரன் இணுவிலுக்குப் போன போது எடுத்தது facebook இல் போட்டவ
Author: கானா பிரபா
•3:55 AM
வைரவர் கோயிலுக்குப் படையல் செய்யும் மும்முரத்தில் அம்மா அடுக்களையில் இருக்கிறார். மெல்லப் போய்ப் பார்த்தால் ஒரு பெரிய அலுமினியப்பாத்திரத்துக்குள் ஏதோ கிண்டிக் கொண்டிருந்தார். அந்தப் பாத்திரத்துக்குள் சர்க்கரை, தேங்காய்ப்பூ, பயறு எல்லாம் சேர்ந்த கலவையாக கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் பார்க்க வந்த சனம் மாதிரி நெருக்கமாக இருக்கினம். மெல்ல மெல்லக் கிளறி சர்க்கரை நொந்து நூலாகும் வரையும் ஆக்கி விட்டு விட்டுத்தான் பேசாமல் விட்டார் அம்மா.

அடுத்தது என்ன? இன்னொரு பெரும் பாத்திரத்துக்குள் அரிசிமாவையும், கொஞ்சம் உப்பையும் போட்டுக் கொதிநீரை வாரி இறைத்து விட்டு அந்தப் பாத்திரத்தில் இருக்கும் மாவையும் கிளறோ கிளறென்று கிளறிப் பதமாக்கி விட்டுப் பின்னர் ஒவ்வொரு உருண்டையாக உருட்டிப் பின் வட்டமாக்கிவிட்டு, மற்றப் பாத்திரத்தில் இருந்த பயறு, தேங்காய்ப்பூ, சக்கரைப்பூக் கூட்டணியினரைத் திரட்டிய மாவுக்குள் மெதுவாகத் தள்ளி விட்டு மூடிக்கட்டி உருண்டையாக்கித் தலையில் ஒரு குடும்பி மாதிரி வைத்து விட்டார். ஆகா மோதகம் தயார். அதையே இன்னும் நீட்டான இலைவடிவமான தினுசாக மாற்றி விட்டு உள்ளுக்குள் அந்தக் கூட்டணியை வைத்துப் பூட்டி கொஞ்சம் பற்களைக் காட்டினால் கொழுக்கட்டை தயார்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். முன்னர் எட்டிப்பார்க்கும் போது கலவையாக இருந்த அந்தப் பயறு, சர்க்கரை, தேங்காப்பூ சேர்ந்த கூட்டணியைத் தான் "உள்ளுடன்" என்று அழைப்பார்கள்.
பெரும் எடுப்பிலான திருவிழாக்கள் என்றால் அயலவர்கள் ஒன்று சேர்ந்து, பதமாகச் செய்த உள்ளுடனை திரட்டி வைத்த மாவில் மோதகம், கொழுக்கட்டை பிடித்துக் கொண்டே உள்ளூர் , உலக அரசியல் பேசிக் கொண்டே காரியத்தை முடிப்பார்கள்.

கொஞ்சம் பணக்கார விட்டு மோதகம், கொழுக்கட்டை என்றால் முந்திரிகை வத்தல், கற்கண்டும் கடிபடும்.

மோதகம், கொழுக்கட்டை போன்றவற்றின் உள்ளே அமைந்திருப்பதால் "உள்ளுடன்" என்று வந்திருக்குமோ அல்லது "உள்ளுடல்" தான் "உள்ளுடன்" ஆகியதோ தெரியாது. தமிழகத்திலும் இந்தச் சொல் உபயோகத்தில் இருக்கிறதா என்ன? இல்லாவிட்டால் எப்படிச் சொல்வார்கள்?

என்னதான் சொல்லுங்கோ, எனக்கு மோதகம் சாப்பிடுறதிலும் பார்க்க அந்த மாவுக்குள் இருக்கும் "உள்ளுடன்" சமாச்சாரம் என்றால் கொள்ளைப் பிரியம். என் சின்ன வயசில் எனக்குக் கிடைக்கும் மோதகத்தின் தோலை (மா பகுதி) உரித்து அம்மாவின் கையில் கொடுத்து விட்டு சாவகாசமாக இந்த உள்ளுடனைச் சாப்பிட ஆரம்பிப்பேன். இதுக்காகவே எனக்காக மோதகம் உருட்டாத உள்ளுடன் பாகத்தை கொஞ்சமாக முற்கூட்டியே எடுத்து வைத்து விட்டு அம்மா மோதகம் செய்வது வழக்கம். இப்ப மட்டும் என்னவாம். உணவகத்தில் விற்கும் கொழுக்கட்டையை வாங்கி ஒரு கப்பில் போட்டு விட்டு கரண்டியால் "உள்ளுடன்" சாப்பிடும் வழக்கம் இன்னும் இருக்குப் பாருங்கோ.
தொட்டில் பழக்கம் சிட்னி வரைக்குமாமே ;)
Author: தமிழ் மதுரம்
•8:01 PM
மிக மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் மெல்பேண் அப்புக்குட்டி என்னுடன் ஒரு ஒலிப்பதிவில் இணைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மிக மிக பிசியா, வேலைப் பளுவின் மத்தியில் ஓடியாடித் திரிந்த எங்கடை அப்புக்குட்டியைத் தேடிப் பிடித்து வந்து ஒரு குரல் பதிவினைச் செய்திருக்கிறேன்.




இது ஈழத்து முற்றம் வலைப் பதிவிற்காகச் செய்யப்பட்ட ஒரு சிறப்பு ஒலிப்பதிவு என்று கூறலாம். இந்தக் குரல் பதிவில் ஈழம் சம்பந்தமான நிறைய விடயங்களை அலசாது விட்டாலும் ஒரு சில விடயங்களை அலசியிருக்கிறோம் என்றே கூறலாம். எந்தவித ஆயத்தமும் இல்லாது திடீரென அப்புக் குட்டியைக் கண்டவுடன் செய்யப்பட்ட ஒலிப்பதிவு என்பதால் ஏற்கனவே ஈழத்து முற்றத்தில் வந்திருந்த தகவல்களும், பதிவுகளும் மீண்டும் வருகிறது என நினைக்கிறேன். அதற்காக அனைத்து வாசகர்களும் பொறுத்தருள்வீர்கள் என்று கருதுகிறேன்.




இந்தக் குரல் பதிவு பற்றிய உங்களது ஆக்க பூர்வமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம். ஒரு சில இடங்களில் ஒலித் தெளிவின்மையும் காணப்படுகின்றது. யாவரும் பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறோம்.


குரல் பதிவினைக் கேட்க..

Get this widget | Track details | eSnips Social DNA




உங்கள் ஆதரவிற்கு நன்றிகளோடு, கமல் & அப்புக் குட்டி அன்கோ.



ஈழத்து முற்றம் இன்று இருநூறு பதிவுகள் என்கின்ற இலக்கினை எட்டியிருக்கின்றதென்றால் அதற்கான பிரதான காரணகர்த்தாக்காளாக விளங்குபவர்கள் எங்களது வாசகர்கள் ஆவார்கள். வாசகர்களின் ஊக்கத்திற்கும், சளைக்காது ஈழம் சம்பந்தமான பலதரப்பட்ட பதிவுகளையும், தகவல்களையும் தேடி எடுத்துப் பதிவேற்றும் எங்கள் சக வலைப்பதிவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும், எங்களோடு கைகோர்த்துப் பயணிக்கும் ஈழத்து முற்றப் பதிவர்களுக்கும் ஈழத்து முற்றத்தின் கடைக் குட்டி எனும் வகையில் என்சார்பாகவும், ஏனைய எங்களின் அன்பு உள்ளங்கள் சார்ப்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



தொடர்ந்தும் வாங்கோ...! உங்கள் பேராதரவைத் தாங்கோ!
Author: யசோதா.பத்மநாதன்
•7:20 PM

வன்னியின் தென்னோலை வீடுகளில் அழையா விருந்தாளிகள் இந்தச் சிட்டுக் குருவிகள். யாரும் அவர்களுக்கு நல்வரவு சொல்லத் தேவையில்லை. தாமாகவே வந்து உரிமையோடு வீட்டின் முகடுகளில் தம் சிறு கூடுகளைக் சிறு சிறு புற்களாலும் உட்புறம் மென்மையான பட்டுப் போன்ற வெள்ளைச் செட்டைகளை வைத்து மென்மைப் படுத்தியும் கட்டிக் கொள்ளும். தவிட்டின் நிறம் கொண்ட இக் குருவிகளில் ஆண்குருவி சற்றே கடுமையான நிறத்திலும் பெண்குருவி மென்மையான வண்ணத்திலும் காணப் படும்.

தானியங்களைப் பொறுக்கித் தின்னும் இவை மனித குணங்களுக்கு நன்கு இசைவாக்கப் பட்டவை. அவைகளது உலகம் தனியானது.மனிதர்களை அவை கவனிப்பதில்லை. அவர்களுக்கு அவை கரைச்சல் கொடுப்பதும் இல்லை.கீச்சு கீச்சு என்று தம் சிறிய அலகால் கீச்சிடும். ஆனால் அது யாருக்கும் தொந்தரவாய் இருப்பதில்லை.

வன்னிப் பிரதேசங்கள் நெல் போன்ற தானிய வகைகளுக்கு பெயர் பெற்றதால் இவைகளின் பெருக்கம் அங்கு அதிகமாக இருக்கும்.வன்னி மக்களும் அவற்றைத் தொந்தரவு செய்வதில்லை.அழகானதொரு நட்புறவு அங்கத்தைய விவசாயிகளுக்கும் பறவைகள், விலங்குகளுக்கும் இடையே இருப்பது வன்னி மண்ணின் சிறப்புகளில் ஒன்று.

சில வருடங்களுக்கு முன்னால் எங்கோ ஒரு கட்டுரை படித்தேன். இந்தச் சிட்டுக் குருவிகள் எல்லாம் இப்போது முழுவதுமாக இல்லாது போய் விட்டனவாம்.

போரின் காரணமாக!
Author: தமிழ் மதுரம்
•10:31 AM
தொடர்பாடல் என்பது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் கருத்துக்களை மேம்படுத்தவும் பயன்படுகின்ற ஒரு வழியாகும். இன்றய நவீன் விஞ்ஞான திழில் நுட்ப உலகின் வளர்ச்சியினால் தொடர்பாடல் சாதனங்கள் பல்கிப் பெருகியுள்ளதோடு நவீன முறைகளிலும் இப்போது உலகெங்கும் கிடைக்கின்றது எனலாம்.




இலங்கைத் திரு நாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் எனும் பகுதி இப்பொழுது வசந்தம் வீசிக் கொண்டிருப்பதாக எல்லோராலும் சொல்லப்படுகிறது. இந்த யாழ்ப்பாணம் இருண்டு போயிருந்த காலப் பகுதியில் மின்சார வசதிகளை அனுபவியாமலும் ரெலிபோன் என்றால் என்னவென்று தொட்டுப் பார்த்தறியாமலும் நாங்கள் வாழ்ந்திருந்தோம் என்றால் யாரும் மறுத்துரைக்க மாட்டீர்கள் தானே? இதற்கு எடுத்துக் காட்டாக 1990 களின் பிற் பகுதியினைக் குறிப்பிடலாம். நானும் என் சக வயதையொத்த நண்பர்களும், ஏன் 1987களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பிற்ந்த அனைவரும் புகையிரதத்தைப் புத்தகத்தில் மட்டுமே பார்த்து வாழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதியது.





ரூ.... ரூ...நகுலன்.... ஓவர்.... ஓவர்...
ஓமோம்.. ரூ.. ரூ.... செல்வன் ஓவர் ஓவர்... என்று எங்கட அண்ணயாக்கள் வோக்கி ரோக்கி மூலம் கதைத்ததைப் பார்த்ததாக ஞாபகம். இதனை அடிப்படையாகக் கொண்டு எங்களூரில் கிடத்தற்கரிய பொருளாக இருந்த தீப் பெட்டியை வைத்து ரெலிபோன் உருவாக்கிப் பேசியவர்கள் நாங்கள். இரண்டு தீப் பெட்டிகளை எடுத்து அதன் உள்ளுடனாக இருக்கும் வெள்ளைப்பெட்டியினுள் செப்புக் கம்பி அல்லது வயரினுள் வருகின்ற மெல்லிய (தண்ணிக்) கம்பியினை எடுத்து அதனைத் தீப் பெட்டிக்குள் செருகி விட்டு ந்ண்பர்கள் இருவர் சேர்ந்து ஒருவர் ஒரு பக்கத்திலும் மற்றயவர் இன்னொரு பக்கத்திலுமாக நின்று கதைத்து எமது சிறு பராயத்தைக் கழித்த காலமதுவென்று கூறலாம்.







எங்களூரின் வசந்தமும் எங்களின் வசந்தகாலமும் இப்படித்தான் ஆரம்பமாகியது.பின்னர் அண்ணயாக்கள் அனைத்துலக தொலைத்தொடர்பு சேவையினை ஆரம்பித்தார்கள். அச் சேவையானது அன்றைய காலப் பகுதியில் எங்கள் மக்களின் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப எட்டாக் கனியாகவே இருந்தது. ஒரு நிமிடத்திற்கு 300 ரூபாக்கள் முதல் 600 ரூபாக்கள் வரை அண்ணையாக்கள் பணம் அறவிட்டதாக கூறுவார்கள். இதனைவிட அப்போதைய கருத்துச் சுதந்திரமாக என்ன பேசினாலும் திறந்த வெளியில் அனைவர் முன்னிலையிலேயே பேச வேண்டுமென்பது அண்ணயாக்களின் விதி முறையாக இருந்தது. இதற்கு அவர்கள் கூறும் சாட்டு பூட்டிய கூண்டிற்குள் நின்று தொலைபேசியில் பேசினால் இராணுவ ரகசியங்கள் புலனாய்வுத்தகவல்கள் இலகுவாக எதிரணிப் படைகளுடன் பரிமாறப்பட்டுவிடும் என்பதாகும்.




யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தின் வசமான பின்னர் மெது மெதுவாக செம்மணிப் புதைகுழிகளை மூடி மறைக்கும் நோக்கிலும் வசதி வாய்ப்புகளை மக்களுக்கு அறிமுகப்படுத்திப் போராட்ட ஆதரவினையும் பற்றுதியையும் திசை திருப்பும் நோக்கிலும் தொலைபேசி மின்சாரம் என்பன 1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணக் குடா நாட்டில் srilanka telecom நிறுவனத்தினர் முதன் முதலாக தொலைத் தொடர்புப் பரிவர்த்தனைக் கோபுரம் அமைத்து தமது சேவையினை ஆரம்பித்தார்கள். அப்போதைய சூழலுக்கமைவாக அச் சேவைகள் பெரும்பாலும் நகர்ப்புறத்தை அண்டி வாழ்பவர்களுக்கே கிடைக்கக் கூடியதாகவிருந்தன.



எங்கள் ஊரிலிருந்தும் சரி யாழ்ப்பாணத்தின் பிற கிராமப்பகுதிகளிலிருந்தும் சரி வெளிநாட்டில் உள்ள தமது உறவுகளுடன் கதைக்க வேண்டுமாக இருந்தால் 1996ம் ஆண்டில் யாழ் நகரிற்குத் தான் செல்ல வேண்டும். இரவில் யாழ் நகரப் பகுதியிலுள்ள தொலைத் தொடர்பகத்திற்குச் சென்று தங்கியிருந்து மேலைத்தேய நாடுகளிலுள்ள தமது உறவுகளுடன் உரையாடிவிட்டுப் பின்னர் மறுநாள் வீடு வரும் உறவுகளையும் நான் கண்டிருக்கின்றேன். இரவில் ஊரடங்குச் சட்டம் என்பதால் வீடு திரும்ப முடியாத நிலமைகூடத் தொடர்பாடலுக்குச் சிக்கல் ஏற்படுத்தியது என்றால் பாருங்களேன்.




1997களின் பிற் பகுதிகளில் யாழ்ப்பாணப் பண்ணைப் பாலத்திற்கு அண்மையாக அமைக்கப்பட்ட தொலைத்தொடர்புக் கோபுரம் மீளத் திருத்தியமைக்கப்பட்டு தொலைபேசிச் சேவைகள் விஸ்தரிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஊருக்கொரு ரெலிபோன்கடை(கொமினிகேசன்)முளைக்கத் தொடங்குகின்றது. இக் காலப் பகுதியில் இருபத்தி நான்கு மணி நேர மின்சாரம் யாழ் குடா நாட்டிலுள்ள மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதால், இந்தத் தொலைபேசிகள் யாவும் சூரிய ஒளியில் செயற்படும் மின்கலத்தை (solar System) அடிப்படையாக வைத்தே இயங்கத் தொடங்கின்றன. வெளிநாட்டிற்கு ஒரு அழைப்பினை மேற்கொள்வதென்றால் ஐரோப்பிய நாட்டிற்கு ஒரு கட்டணமும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிறிதொரு கட்டணமும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு வேறொரு கட்டணமுமாக தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தினர் அறவிட்டார்கள். இதனை விட உள் வரும் அழைப்புக்களுக்கு நிமிடத்திற்கு 8ரூபாவினை அறவிட்ட தொலைத் தொடர்பகங்கள் பின்னர் நிமிடத்திற்கு 5 ரூபாவினை அறவிட்டுத் தற்போது நான்கு ரூபாவினை நிமிடத்திற்கு அறவிடுகின்றன.





சமாதான காலப்பகுதி என்பது யுத்தமற்ற ஒரு பெருவாழ்வினையும் தமிழ் மக்களுக்கென்று தனியானதொரு தீர்வினையும் தருவதற்காகப் பிறந்த காலப் பகுதி என்று நாம் எல்லோரும் நம்பிய காலப்பகுதியாகும். 2002ம் ஆண்டில் A9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டபின்னர் கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திலும் நிறுவப்பட்டன. யாழ் குடாநாட்டில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த கையடக்கத் தொலைபேசி நிறுவனமாக Dialog Gsm நிறுவனத்தினைக் குறிப்பிடலாம். அதன் பின்னர் Mobitel எனும் நிறுவனமும் தனது கிளையினைப் பரப்பத் தொடங்குகிறது. இன்று சி.டீ.எம்.ஏ (CDMA) போன்ற தொழில் நுட்பம் வாய்ந்த தொலைபேசிகளும் எமது யாழ் குடா நாட்டில் அறிமுகமாகிவிட்டன.





எம்மவர்களின் தொலைபேசித் தொடர்பாடல் முறைசற்று வித்தியாசமானது என்றே கூறலாம். ஆரம்பகாலத்தில் எமது யாழ்ப்பாணத் தொலைத்தொடர்பு நிலையங்களில் கதைக்கும் எம்மவர்கள் கண்ணாடிக் கூண்டிற்குள் நின்றபடி கைகளையெல்லாம் அசைத்துக் கதைப்பதனைக் கண்டிருக்கின்றேன். ஒருவர்
’’ஓம் தம்பி சொல்லடா. நான் ஏதோ இருக்கிறேன். பொயிலைக்கண்டு ராசா இப்ப இந்தளவுக்கு வளந்திட்டுது (இப்படித் தனது கைகளைக் காட்டி அவர் சொல்வது அவர் மகனுக்குத் தெரியுமோ தெரியாது) வாற மாசம் வெட்டப் போறன். உனக்கொரு பொம்பிளை பார்த்திருக்கிறன் ராசா வடிவெண்டா நல்ல வடிவுதான். இஞ்ச பாரன். எனக்கு முன்னால நிக்கிற பொட்டமாதிரி இருக்கும்’’ என்று கூறினார்.
மகனுக்கு இதைக் கேட்டதும் புரையேறியிருக்கும்.மகன் பதிலுக்கு என்ன கேட்டிருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.




இனி எங்கள் இளசுகளின் தொலைபேசி உரையாடலினைப் பார்ப்போம். இளசுகளின் கைகளில் கையடக்கத் தொலைபேசிகள் புழங்கத்தொடங்கியபோது பெரும்பாலும் வசதியுள்ள இளசுகளே கையடக்கத் தொலைபேசிகளை அதிகளவில் பாவிக்கத் தொடங்கியிருந்தார்கள்.ஒரு சிலர் தங்களுடைய தொலைபேசிக்குத் தாங்களே ஒலியினை (Alaram Set பண்ணி ஒலியெழுப்புதல்) வைத்துப் பொது இடங்களில் தங்களுக்கு தொலைபேசியழைப்பு வந்தது போன்று பேசிக் கலர் காட்டு வதனையும் நாம் கண்டிருக்கிறோம். ஒருவர் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிற்பார். திடீரென அவரது தொலைபேசி மணி அடிக்கத் தொடங்கும். மன்னிக்கவும் அவரது தொலைபேசியின் Alaram அடிக்கத்தொடங்கும். அவர் தனக்குத் தொலைபேசிவந்ததுபோல் பேசத்தொடங்குவார். அவரது றீலினைக் கண்டுபிடித்ததும் அவரது நண்பர்களெல்லாம் கலர் காட்டுறான் ஆள் என்று ந்க்கலடிப்பார்கள். சிலரிடம் தொலைபேசியிருக்கும் ஆனால் சிம் காட்டோ இல்லையென்றால் தொலைபேசியில் பேசுவதற்குரிய காசோ இருக்காது.ஆனால் எம்மவர்கள் சளைக்காது பேசுவார்கள் என்றால் பாருங்களேன்.





ஒரு சிலர் பேரூந்தின் பின் பகுதியில் நின்று தொலை பேசியில் பேசினார்களென்றால் பேரூந்தின் முன் பகுதியில் நிற்பவர்களுக்குக் கூட அவரது பேச்சுத் தொனி கேட்கும் என்றால் சொல்லவா வேணும்? எம்வரில் ஒருவர் தனது மாட்டினை எப்படிக் கண்டு பிடித்தார் என்று தெரியுமா?
எங்களூரில் சிவராசா என்றொரு விவசாயி தனது மாட்டினைத் தொலைத்து விட்டார். விடா முயற்சியுடன் தேடியும் மாடு சிக்கவில்லை என்பதால் சிவராசா தனது மனைவியிடம் ’’என்ரை கூட்டாளி பக்கத்து ஊரிலை இருக்கிறான். அவனிட்டை ஒருக்கால் போன் பண்ணிக் கேளன் என்று சொல்லியிருக்கிறார். அவரது மனைவியும் போனைப் போட்டிருக்கிறா. போனைப் போட்டதும் ‘’ஒப அமத்துவன்ன சந்தி கலன கட்ட. கருணாகரப் பசுவ அமத்தன்ன’’ என்று சொல்லியிருக்கிறது. உடனே தொலை பேசித் தொடர்பினைத் துண்டித்த சிவராசாவின் மனையியோ பதறியடித்தபடி
‘’ இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ... சிவராசாவின்ரை மகள் கதைச்சவா. உங்கடை கூட்டாளி கருணாகரண்ணை பசுவை அமத்திப் பிடிச்சிருக்கிறாராம். வாங்கோ மாடு ஓட முதல் பிடிச்சருவம் என்று கூறியிருக்கிறா. இப்படியும் எம்மவர்கள் தொலைபேசியில் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.




எங்கடை ஊரிலை உள்ள வயசு போனா ஆட்களிடம் ரெலிபோன் மாட்டி விட்டால் போதும். ஹலோ உதார் கதைக்கிறது? என்று தொடங்கித் தங்கள இளமைக் கால நினைவுகள் வரைக்கும் கதைத்துத் தான் ரெலிபோனை வைப்பார்கள். எங்கோ ஒரு கதையில் வாசித்ததாக ஞாபகம். யாழ்ப்பாணத்திலுள்ள பாட்டியொருவர் ரெலிபோனைக் கூப்பிடுவான் என்று அழைத்ததாக விளிக்கப்பட்டிருந்தது. கூப்பிடுவான் கூப்பிடுறான் என்றால் அவாவின் மொழியில் ரெலிபோன் அடிக்கிறது. ஓடிப் போய் எடுங்கோ என்று அர்த்தமாம்.



செய்மதி மூலம் இயங்கும் தொலைபேசிகளும் எங்களூரில் அறிமுகமாகியிருந்தன. இவற்றினைக் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே பயன்படுத்தினார்கள். ஒரு நாள் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் இராணுவ வீரர்களின் மலசல கூடத்திற்குள் இருந்து தொலை பேசி உரையாடல் கேட்டதாம். உசாரடைந்த இராணுவ வீரர்கள் கையும் களவுமாக விடுதலைப் புலிகளுக்குச் செய்மதித் தொலை பேசி மூலம் தகவல் வழங்கிய இராணுவ உளவாளியினைப் பிடித்ததா தகவல்கள் வெளியாகின. விடுதலைப் புலிகளின் இராணுவ இரகசியங்களும் இந்தச் செய்மதித் தொலை பேசி மூலம் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.




தொலைபேசி.. இதனை நாம் தொல்லை பேசியாக மாற்றாது விட்டால் நன்று.