Author: இறக்குவானை நிர்ஷன்
•1:36 AM
நமக்கென தனியான கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, விழுமியங்கள் உண்டு. அவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

அதனை நெறியாகவும் செம்மையாகவும் செய்யும்பொருட்டும் நடைமுறை உலகோடு பொருந்தும் வகையிலும் யாழ் மண் என்ற இணையத்தளம் இன்றுமுதல் இயங்குகிறது.

இது ஒரு புதிய பரிமாணம்.



யாழ் மண்ணின் கலை,கலாசார விழுமியங்களையும் பிரத்தியேக செய்திகளையும் தனித்துவங்களையும் தாங்கி எங்களுடைய பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீரகேசரி இணையக்குழுவினருடன் இணைந்து, தூரநோக்கத்துடன் செயலாற்றக்கூடிய ஆசிரிய பீடத்தினரும் தொழில்நுட்ப வல்லுநர்களும் யாழ் மண் இணையத்தளத்தினை மெருகேற்றுகிறார்கள்.

உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்பேசும் மக்களுக்கு யாழ்ப்பாணம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்குவதாக யாழ் மண் அமைந்துள்ளது.

குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு இந்தச் செய்தி சந்தோசம் தருவதாக இருக்கும் என நம்புகிறோம். எப்போதோ விட்டுச்சென்ற மண்ணின் தற்போதைய நிலைவரத்தை யாழ் மண் உங்கள் கண்முன் கொண்டுவரும்.

யாழ் மண்ணுக்கு வாருங்கள். உங்கள் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லுங்கள். தேவைக்கேற்றவாறு சிறப்பாக அதனை மாற்றியமைப்பதற்கு யாழ் மண் குழுவினர் தயாராக இருக்கிறார்கள்.

-இராமானுஜம் நிர்ஷன்
Author: geevanathy
•12:03 PM
கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.




கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளியெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.



கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.




வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள்.


இவ்வாலச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.

01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பெருமக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.

02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.

03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.


இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

உசாத்தணை

வரலாற்றுத் திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன்

திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் - பண்டிதர் இ.வடிவேல்

கட்டுரை- 'இலங்கையில் கிடைத்த தமிழ் சாசனத்தில் முதன்முதலாக திருப்பள்ளியெழுச்சியென்ற சொல்' - பேராசிரியர் சி. பத்மநாதன்

கட்டுரை - 'கிழக்கிலங்கையில் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழரின் தொன்மைச் சான்றுகள்' - கலாநிதி.ப.புஷ்பரெட்ணம்

தகவல் திரட்டுவதில் உதவியவர்கள் - கந்தளாய் சிவன்ஆலயக்குருக்கள், திரு.க.ரவிராஜன் (திருப்பணிச்சபை சிவன் ஆலயம்)
Share/Save/Bookmark
Author: கானா பிரபா
•3:18 AM
"ஊரில் ஒரு குமர் தனியனாப் போக வழியில்லை, சந்தியிலை நிண்டு இளந்தாரிப் பெடியள் அவளவையை சைற் அடிக்கிறாங்கள்"

ஈழத்து ஊர்களில் மேற்கண்ட சம்பாஷணையை ஊர்ப் பெரியவர்கள் வாயிலிருந்து விழக் கேட்கலாம். அந்த வாக்கியத்தில் வந்த இளந்தாரி என்பது கட்டிளம் காளை என்ற சொற்பதத்திற்கு நிகரானது. காதல் வயப்படுகின்ற பருவம் என்பது இன்னும் நெருக்கமான அர்த்தம் கொள்ளத்தக்கதாக அமையும். பெடியள் என்பது தமிழகத்தில் பொடியன் என்று புழங்கும் சொல்லுக்கு நிகரான அர்த்தம் கொண்டு அமையும்.

இளவட்டப் பொண்ணு, குமரிப் பெண் என்று அர்த்தம் கொள்ளும் சொற்பதமே ஈழத்துப் பேச்சு வழக்கில் அர்த்தப்படும் "குமர்ப்பெட்டை". பருவமடைந்த பெண்களை இங்கே அர்த்தப்படுத்தி அழைப்பதுண்டு. முன் சொன்ன இளந்தாரிக்கு பெண் பால் அர்த்தமாகவும் இது அமையும்.
Author: geevanathy
•9:33 AM
(இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை)


(கல்வெட்டுக்கள்)

(விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கியமான பொருட்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தியதாகக் கருதப்படும் பொருட்கள்)

(நீர்த் தொட்டி)

(மருத்துவத் தொட்டி)
'வெல்கம் விகாரை ' திருகோணமலையில் உள்ள பலரும் அறிந்த இடம். எனினும் அதற்கு 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் இன்னுமொரு பெயர் இருக்கும் விடையத்தைச் சில வருடங்களுக்கு முன்னமே வரலாற்று நூல்கள் மூலம் அறிந்துகொண்டேன். 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் பெயர் இங்குள்ள மக்களின் பேச்சுவழக்கில் இல்லையாயினும் இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும்.


திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை.


திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம் பெறுகிறது.


'மகாசேனனின் துன்புறுத்தல் காரணமாக தற்காலிகமாகவே இந்து ஆலயங்கள் அழிக்கப்ட்டது. பௌத்த மதம் இந்து மத்ததுடன் போட்டி போட்ட போதும் பௌத்த மதம் துறைமுக நகரான திருகோணமலையில் இருந்து பின்வாங்க வேண்டி இருந்தது.' என்ற பேராசிரியர் சேனக பரணவிதானவின் கூற்றும், 'சோழர்கள் இலங்கையில் பல பௌத்த பள்ளிகளை அழித்ததார்கள்' என்ற சூளவம்சத்தின் கூற்றும் அக்காலத்தில் இருந்த மதமுரண்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.



வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளியின் தோற்றம் பற்றிய தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லையாயினும் , இது சோழருடைய படையெடுப்புக்கு( 10 ம் நூற்றாண்டு) முன்னமே இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.


சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராசராசப் பெரும் பள்ளி என சோழ ஆட்டசியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கப் பட்ட அதிகளவான அறக்கொடைச் சாசனங்கள் தமிழ் மொழியில் இருப்பதும் , சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டமையையும் ( இராசராச சோழன் 84 பசுக்களைத் தானம் செய்தார் - வரலாற்றுச் சாசனம்) வைத்துப் பார்க்கும் போது வெல்கம் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வக்ககப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.



Share/Save/Bookmark


Author: கானா பிரபா
•2:26 AM
"உவனுக்கு சோறு கறியை விடக் கள்ளத்தீனி தான் விருப்பம்" இது என் அம்மா அடிக்கடி என்னைப் பற்றி மற்றவர்களுக்குப் போட்டுக் கொடுக்கும் ஒரு கருத்து ;).

நாவுக்கு ருசியான தின்பண்டங்கள், குறிப்பாக அவற்றின் மூலம் எந்த விதமான ஊட்டச்சத்துக்களை அதிகம் கொண்டிராத ஆனால் இனிப்பு அல்லது காரமான வகையறாக்களைத் தான் இப்படி "கள்ளத்தீனி" அல்லது "கள்ளத்தீன்" என்று அடையாளப் பெயர் கொண்டு எங்களூரில் அழைப்பார்கள். இதற்கு முன்னர் எழுதிய சொக்கிளேற்றும் விசுக்கோத்தும் பதிவில் இருக்கும் பெரும்பாலான பண்டங்கள் இந்தக் கள்ளத்தீனி வகையறாவுக்குள் அடங்கி நிற்கின்றன.

தமிழகத்தில் கள்ளத்தீனி என்ற சொலவாடை பாவிக்கப்படுகின்றதா என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் நண்பர் திரு அவர்கள் சொல்லியிருந்தார் குமரி பகுதியில் கள்ளப் பண்டம் என்று அழைப்பார்களாம்.
Author: யசோதா.பத்மநாதன்
•7:01 PM

ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப் பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயை நான் மறந்தேன்!

பாதையிலே வீடிருக்க
பழனிச் சம்பா சோறிருக்க
எருமைத் தயிரிருக்க
ஏண்டி வந்தோம் கண்டிச் சீமை?

எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடிஞ்சு நிக்கயிலே
வெட்டு வெட்டு எங்கிறானே
வேலையத்த கங்காணி!

தோட்டம் பிரளியில்லே
தொர மேல குத்தமில்லே
கங்காணி மாராலே
கன பிரளியாகுதையா!

அட்டைக் கடியும்
அரிய வழி நடையும்
கட்டை இடறுதலும்
காணலாம் கண்டியிலே!

ரப்பரு மரமானேன்
நாலுபக்க வாதுமானேன்
இங்கிலிசுக் காரனுக்கு
ஏறிப் போகக் காருமானேன்.

இது பெருந்தோட்டத்தின் கழிவிரக்கப் பாடல்களில் ஒன்று.தாயகத்தையும் தாயையும் விட்டு வந்தது பற்றியும்; வசதி வாய்ப்புகள் எல்லாம் இருக்க அவற்றை விட்டு விட்டு வந்தது பற்றியும்;மனிதத் தன்மையற்று இருக்கும் கங்காணி பற்றியும்; நடந்து செல்வதில் ஏற்படும் இடறுபாடுகள் பற்றியும் கூறி; ரப்பர் மரத்துக்குத் தன்னை உவமிக்கிறாள் இக் கூலிப் பெண்.எப்போதும் வெட்டுக்கு இலக்காகும் ரப்பர் மரத்தைப் போல் தான் இருப்பது பற்றியும்; மற்றவர்கள் சுகத்துக்காக இருக்கும் காரைப் போல் தான் ஆகிவிட்ட சோகத்தையும் கூறும் இச் சிறிய பாடல் கண்டிப் பெண்களின் ஒரு கால கட்டத்துத் துயர நிலையை எளிமையாகக் கூறுகிறது.


அருஞ்சொல் விளக்கம்:-

இடுப்பொடிஞ்சு - மிகக் களைத்துப் போய்

கங்காணி - பெருந்தோட்டத்து மேற்பார்வையாளன்

பிரளி - பிரச்சினை

தொர - ஆங்கிலேய உத்தியோகத்தன்

வாது - (மரக்)கிளை

இங்கிலிசுக்காரன் - ஆங்கியேய உத்தியோகத்தன்.
Author: வர்மா
•7:31 AM

தை பிறந்தால் வழி பிறக்கும்

தைகள் பல வந்தன போயின

வழி இன்னமும் பிறக்கவில்லை


சூடாமணி 19.01.1997
பத்திரிகையில்வெளியானகவிதையைஈழத்துமுற்றத்தில் பதிந்து என் ஏக்கத்தைத்தீர்க்கிறேன்.
அன்புடன்
வர்மா