Author: கலை
•6:34 AM
பஞ்சியாக்கிடக்கெண்டா, இங்க எழுதிறதுக்கில்லை அந்தப் பஞ்சி :). அந்தச் சொல்லையும் இந்த முற்றத்தில இணைத்து வைக்கலாமேயெண்டுதான். ஏனெண்டால், நான் அடிக்கடி இந்த ‘பஞ்சியாக்கிடக்கு' அல்லது ‘பஞ்சியாயிருக்கு' எண்டு சொல்லேக்கை (அதுக்காக நான் எப்பவுமே பஞ்சிப்பட்டுக் கொண்டிருக்கிறன் எண்டு நினைக்காதையுங்கோ), இந்த வார்த்தையை விளக்கவேண்டி வந்திருக்கு.

”பஞ்சியாக்கிடக்கா? அது என்னது?” எண்டு கேக்கக்கூடிய இடத்திலதான் நானும் ஆரம்பத்தில வளர்ந்தது. பிறகு அந்த சொல் பரிச்சயத்தில வந்ததும், எனக்கு பிடித்திருந்ததால, அடிக்கடி சொல்லத் தொடங்கியிட்டன். 'அலுப்பாயிருக்கு' எண்ட சொல்லும் இந்த ‘பஞ்சியாக்கிடக்கு' எண்ட சொல்லின்ரை தம்பிதான் எண்டு நினைக்கிறன்.

மொத்தத்தில, எதையும் செய்ய விருப்பமில்லாமல் சோர்ந்து போயிருக்கிறன் என்பதை இப்படிச் சொல்லலாம்.

பி.கு. : நான் மட்டும் பஞ்சிப் பட்டது காணாதெண்டு, இந்தச் சொல்லையே தெரியாமல் இருந்த சிலரையும்கூட (இந்தியத் தமிழர்கள்), 'பஞ்சியாயிருக்கு' எண்டு சொல்ல வைச்சிட்டன் எண்டால் பாருங்கோவன் :).
Author: மொழிவளன்
•5:49 AM
இது அநேகமாக பெடியலிண்ர பேச்சு வழக்கிலேயே அதிகம் என நினைக்கின்றேன்.

மணிக்காய்

குணத்தில் நல்ல பெடியனாக இருந்தால், நல்லவனாக இருந்தால் “அவன் மணிக்காய் மச்சான்” என்று கூறுவோம்.

பேய்க்காய்

கடுங்கெட்டிக்காரனாக இருந்தால் “அவன் பேய்க்காய்” என்றும் கூறுவோம். அட உந்தக் கடுங்கெட்டிக்காரன் என்பதும் எமது பேச்சுவழக்கல்லே!

கடுங்கெட்டிக்காரன்

மறந்தே போனன், திறமைசாலி என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல் கடுங்கெட்டிக்காரன். இச் சொல் பொதுவாக எல்லோரிடமும் பயன்படும் சொல்.

உந்த

இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.

அப்பு

“அப்பு” எனும் சொல் குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்களை பேச்சு வழக்கில் அழைக்கப் பயன்படுகின்றது. இது தாத்தா என்பதற்கு இணையானச் சொல். பாட்டி என்பதற்கு இணையானச் சொல்லாக “ஆச்சி” பயன்படுகின்றது.

எண்ரையப்பு, என்ரை செல்லையப்பு என்று தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.

அப்பு ஆச்சியர் வாழ்ந்தப் பூமி இந்தப் பூமி தானடா!

ஒரு தாயகப் பாடலின் வரிகள். (நினைக்கும் போது நெஞ்சில் வலி பிறக்கிறது.)

மீண்டும் அடுத்தப் பதிவில்

அன்புடன் மொழிவளன் ஹொங்கொங்கிலிருந்து
Author: தமிழன்-கறுப்பி...
•1:50 AM
எந்த மொழியாயிருந்தாலும் அதனை அந்தஊர் பெண்கள் பேசிக்கேட்கும் பொழுதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது அதுவும் வயதுப்பெண்களிடமிருந்து கேட்கும் பொழுதில் அந்த மொழிக்கு ஒரு தனித்தன்மை வந்து விடுகிறது. உதட்டசைவுகளும், உடல் மொழியும் அவளவளுக்கே உரிய தனி இயல்புகளோடும் பேசக்கேட்கையில் அது ஒரு தனி பரவசம் தருகிற நிகழ்வு. இப்படி நான் கேட்க விரும்பியிருக்கிற மொழிகள் தற்போதைக்கு அரேபியப்பெண்களின் ஹபீபிக்கள், கேரளத்துப்பெண்களின் திறக்கப்டாத உதடுகளினுடு வருகிற வார்ததைகள், கறுப்பு நிற தேவதைகளிடமிருந்து தமிழ், பதின்மங்களில் இருக்கிற குரல்களினூடு சிங்களம் சாதாரணமாய் பேசும் பொழுதே பெண்கள் மொழியை இயல்பாக அழகுசெய்கிறார்கள்.இப்படி இருக்க நெருக்கம் நிறைந்த பெண்மையின் அழைப்புகள் எப்படி இருக்கும்?! அப்படி ஒரு பரவசம் மிகுகிற வார்த்தைதான் இஞ்சையப்பா இந்த இஞ்சையப்பா(அல்லது இதனுடைய பொருள் தருகிற மற்றய வார்த்தைகள்) என்கிற வார்த்தையை கேட்காத யாழ்ப்பாணத்து ஆண்கள் யாராவது இருந்தால் இவர்களுடைய வாழ்க்கை இளம்பெண்களால் சபிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

அவள் என்னை எப்பொழுது அப்படி அழைக்கத்தொடங்கினாள் என்பது தெரியாது ஆனால் அது அவள் என் மீது வைத்திருந்த பிரியங்களின் நம்பிக்கையின் அளவீடாக எனக்கு தோன்றியது அவளோடு ஊரில் இருக்கும் வரையும இந்த வார்த்தைகளை நான் கவனித்ததே இல்லை. கடல் கடந்து வந்த பிறகு ஒரு அடைமழை நாளின் பின்னேரமொன்றில் அவள் என்னை அப்படி அழைத்த பொழுது சிலிர்த்துப்போயிருந்தேன் அதற்கு பிறகு அவள் என்னை அழைக்கும் பொழுதில் அவளோடு முழுவதுமாய் வாழ்ந்ததுபோலவும் அந்த நெருக்கத்தை புதுப்பிப்பது போலவும் உணரத்தொடங்கினேன்.. பிரிவறிவித்த பொழுதுகளில் கூட அவளால் இந்த வார்ததைகளை உச்சரிக்காமல் பேச முடியவில்லை அந்தளவுக்கு ஜீவ நெருக்கம் நிறைந்த உறவாக அவளெனக்கு இருந்தாள்.

எனக்கும் அவளுக்கும் இடையில் அவள் என்னை அப்பா என்ற விழிப்புகளோடு எப்பொழுது அழைக்கத்தொடங்கினாள் என்பது தீர்மானமாக தெரியவில்லை அனால் அவள் அப்படி அதிகம் விழிப்பது தொலைபேசியில் அவளோடு பேசும் பொழுதுகளிலென்றுதான் நினைக்கிறேன் அதற்கு நானும் அவளும் தொலைபேசியில்தான் அதிகம் பேசியிருப்பது ஒரு காரணமாயிருக்கலாம்.மற்றும்படி நேரில் சந்திக்கிற பொழுதுகளில் பெரும்பாலும் பேசுவதில்லை என்பது வேறுகதை.சுருக்கமாக சொல்லப்போனல் பேசிக்கொண்டடிருக்கும் பொழுதில் அது தெரியாவிட்டாலும் இஞ்சையப்பா என்று ஒரு தேவதை அழைக்கிற தருணங்கள் அந்த அழைப்புக்குரியவன் வாழ்கிற பொழுதுகள். நினைவுகளை அசைபோடுகிற தனிமைகளில் தெரியும் அந்த நெருக்கம் நிறைந்த வார்ர்ததைகளின் சுகம்! அது அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

காதலர்களுக்கிடையில் கூட பெண்கள் இயல்பாகவே இப்படி அழைக்கத்தொடங்கி விடுவார்கள் அது அவர்களுக்கிடையில் இருக்கிற நம்பிக்கை மற்றும் நெருக்கத்தை குறித்து வெளிப்படும் என்பது என்னுடைய எண்ணம் மற்றும்படி அனேகம் காதலர்களுக்கிடையில் இது இருக்கும் ஆகக்குறைந்து அவர்கள் இரண்டு பேருக்குமான பொழுதுகளிலாவது கட்டாயமாய் இருக்கும். இது யாழ்ப்பாணத்தில் கணவனை அழைக்கும் வழக்கமாக அன்று தொட்டு இருந்த வருவதில் இருக்கிற அனிச்சையான இயல்பு என்று நினைக்கிறேன்.இந்த இஞ்சையப்பா என்கிற வார்ததை கொடுக்கிற பொருள் அழைக்கிற தொனியிலும் சத்தத்தின் அளவிலும் கூடவே அந்த நேரத்திற்கும் உடல் மொழிக்கும் உரியதாக அமையும் அதை சரியாக கண்டு கொள்வது ஆண்களின் பொறுப்பு.

'இஞ்சருங்கோ' என்பது தற்பொழுது வழக்கத்திலிருந்த குறைந்து விட்டதென்பது நான் அந்த அழைப்புகளை கேட்டது குறைவென்பதிலிருந்து கண்டு கொண்டது. அதன் மருவு வழக்குகளாக இஞ்சையப்பா இஞ்சையுங்கோ போன்றவை இருக்கிறது. இஞ்சருங்கோ என்று பாவிக்கிறவர்கள் முந்தைய தலை முறையினர்தான், உதாரணமாய அப்துல்ஹமீத் யாழ்ப்பாணம் பார்த்தபொழுதில்(தெனாலி) இருந்த யாழ்ப்பாணத்து தலை முறையினர்தான் இப்பொழுது கணவனை இப்படி அழைக்கிறவர்களுக்கு குறைந்தது நாற்பது வயதிருக்கலாம் இது என்னுடைய கருத்து மட்டுமே! மற்றபடி நீங்கள் அப்படி அழைக்கக்கூடாதென்றெல்லாம் நான் சொல்லவில்லை அது உங்களிருவரையும் பொறுத்தது. எனக்கெல்லாம் அவள் சிணுங்கலாய் இஞ்சையங்கோ (இஞ்சையப்பா)என்கையில் செத்துவிடலாம் போலிருக்கும்.


இப்பொழுதிலிருக்கிற தலைமுறை என்னங்கோ அல்லது அப்பா அல்லது இஞ்சையப்பா என்றுதான் அதிகம் பயன் படுத்துவதாய் என்னளவிலான அனுபவம் இருக்கிறது அந்தந்த ஊர் வழக்கத்தின் படிதான் இந்த வார்த்தைகளின் தொனி இருக்கும்.யார் பயன் படுத்துகிறார்களோ இல்லையோ எனக்கந்த மொழி நிறையப்பிடிக்கிறது.பெயர் சொல்லி அழைக்கிற தருணங்கள் போலவே நம்பிக்கைகளோடு நெருக்கத்தின் உறுதியல் தானாக வெளிப்படுகிற இந்த வார்த்தைகள் குடும்ப வாழ்க்கையில் அதற்கதற்குரிய வேளையில் அதற்கதற்குரிய தொனிகளில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மிக விருப்பமாக பல நாட்களாக எழுத வேண்டுமென நினைத்திருந்த ஒரு விசயம் இப்பொழுதெல்லாம் என்னை எந்த தேவதையும் அப்படி அழைப்பதில்லை என்கிற உணர்வுகள் குறுக்கிடுவதில் மழுமையில்லாமல் வந்திருக்கிறது,பார்க்கலாம் இந்த பதிவையே இன்னொரு பொழுதில் என்னால் வேறுமாதிரியாக எழுத முடியும் எனறு நம்புகிறேன்.இப்போதைக்கு மிகுதியை பின்னூட்டங்களில் பார்த்துக்கொள்ளலாம்.


நன்றி!
Author: சயந்தன்
•12:03 PM
இந்தப்பதிவில ஈழத்துப்பேச்சு வழக்கில பயன்படுத்தப்படுற சொற்களுக்கு நான் விளக்கமேதும் தாறதா இல்லை. ஆனா இந்தச் சொற்களை எப்படிச் சேர்த்தன் எண்டு சொல்லிவிடுறன். அகிலன்ர மரணத்தின்வாசனை புத்தகத்தை மலையாளத்தில மொழிபெயர்க்கிற முயற்சியள் நடக்குது. மொழிபெயர்க்கறதா சொல்லியிருக்கிறவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மொழி அறிஞர். அவர் புத்தகத்தை வாசிச்சுவிட்டு முதல்வேலையா ஒரு பெரிய லிஸ்ட் போட்டுத்தந்தார். இதெல்லாம் என்ன என்ற கேள்வியோடு. அந்த லிஸ்ட்டை கொஞ்சத்தை இங்கை போடுறன். சிலது நேரடியாகத் தெரிந்ததுதான். உதாரணத்துக்கு டைக்டர் - ரைக்ரர் வேறுபாடுகளையும் அவர் குறிச்சுத் தந்தவர். அதனால் அப்பிடியாப்பட்ட சொல்லுகளை விடுறன். பாப்பம். ஈழம் தமிழகம் எண்ட வேறுபாடு இல்லாமல் எல்லாரும் முயற்சியுங்கோ பாப்பம். ஏனென்டால் ஈழத்துக்குள்ளேயே சில சொல் வழக்குகளை இன்னொரு சக ஈழத்தவரால புரிஞ்சு கொள்ள முடியாமலும் இருக்கிறது. அவர் தந்த லிஸ்ட்

அவாப்பட்டு
எணேய்
புழுகம்
கதியால்
நூக்கோணும்
பரியாரி
பேக்காட்டுதல்
மொக்கு
அசுமாத்தம்
கெக்கட்டம்
பதகளிக்கிறது

இத்தோட எனது கன்னிப்பதிவை முடிக்கிறன் :)
Author: மொழிவளன்
•8:03 AM

சொல்லில் அருஞ்சுவை அள்ளித்தரும் சுரங்கம் தமிழ் மொழியாகும். அதனால் தான் தமிழுக்கும் அமுதென்று பெயர் எனப் பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். தமிழ் பல கிளை மொழிகளை உடையது. அதில் யாழ்ப்பாணத் தமிழ் சிறப்பானதாகும். அதற்குப் பல தனிச்சிறப்புக்கள் உள்ளன.

படைப்பிலக்கியங்கள் மொழி வளர்ச்சிக்கு ஆதாரமாகவுள்ளன. சிறுகதைகள், நாவல்கள் என்பன பிரதேச பேச்சு வழக்கை பிரதிபலிப்பனவாக உள்ளன. யாழ்ப்பாண மக்களின் பேச்சுத் தமிழ் அந்தப் பிரதேசப் படைப்பாளர்களால் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

ஆரம்பகால ஈழத்து சிறுகதைகள் எழுத்து தமிழிலும், இந்தியப் பேச்சு வழக்கிலும் எழுதப்பட்டன. இதற்கு காரணம் அக்காலத்து எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை கூடுதலாக தமிழக சஞ்சிகைகளுக்கு எழுதினர். பின்னர் இந்தப் போக்கில் மாற்றம்ஏற்பட்டது. சிறுகதையோ, நாவலோ உயிர்த்துடிப்புடன் அமைய வேண்டுமானால் பேச்சு மொழியில் எழுதப்பட வேண்டும். அதில் வரும் உரையாடல்கள் கதை இடம்பெறும் களத்தின் பேச்சு மொழியில் இருப்பது அந்தப் படைப்புக்கு சிறப்புச் சேர்ப்பதாக அமையும்.

ஈழத்தில் மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களின் படைப்புக்களில் பிரதேச பேச்சு மொழி கையாளப்பட்டிருப்பதை காண முடியும். இவர்களே முதலில் பிரதேச பேச்சு மொழியை தமது சிறுகதைகளில் சிறப்பாகப் பயன்படுத்தினார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஈழத்து சிறுகதைகள் பலவற்றில் யாழ்ப்பாணத் தமிழ் கையாளப்பட்டிருக்கிறது.

எஸ். பொன்னுத்துரை எழுதிய ‘தேர்’ சிறுகதையில் வரும் உரையாடல் இவ்வாறு அமைகிறது.

“என்ன அப்பு இண்டைக்கு காலமைக் கோச்சியிலை மூத்தண்ணர் வருவாரெல்லே?”

“எப்படியும் அவன் வருவான். காதுப்பிடியிலை கமலா கூட்டியந்திடுவாள். கோச்சி இன்னும் நாவற்குழியைத் தாண்டியிருக்காது. இப்ப நடக்கத் துவங்கினாலும், நேரத்தோடை ஸ்ரேசனுக்குப் போயிடலாம். ஆனா அவனுக்கு உதொண்டும் புடிக்கிறேல்லை. நான் எங்கடை வீட்டுக்கு வாறதுக்கு ஆரும் வந்து வழிகாட்டத் தேவையில்லை எண்டு, எத்தினை கோசு கோவிச்சது எனக்கெல்லோ தெரியும்”

தமிழகத்திலே புகை வண்டி எனச் சொல்லப்படுவது, எமது நாட்டில் புகையிரத வண்டி என அழைக்கப்பட்டாலும், பேசும் போது அவ்வாறு சொல்வதில்லை. யாழப்பாண மாவட்டத்திலுள்ள கிராமப் புறங்களில் கோச்சி என சொல்லப்படுகிறது. இரயில் கடவைகளிலும் மக்களுக்கு விளங்கும் வகையில் கோச்சி வரும் கவனம் என்றே முன்பு எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ணுற்ற வர கவியான கல்லடிவேலன் கொப்பர் எப்போ வருவார் என அருகில் எழுதி வைத்தார், எனச் சொல்வார்கள்.

கோச்சி என்ற சொல் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அம்மாவைக் குறிக்கப் பயன்பட்டது. அவ்வாறே கொப்பர் என்ற சொல் அப்பாவைக் குறித்தது. ஆச்சி, அப்பு என்ற சொற்களும் அங்கு அம்மா, அப்பாவை அழைக்கப் பயன்பட்டன.

காலை என்பது யாழ்ப்பாணத் தமிழில் காலமை எனப்படுகிறது. எத்தனை முறை என்பதற்கு பபதிலாக எத்தினை கோசு எனச் சொல்லப்படுகிறது. அக்காவை அக்கை என்றும் கொக்கா எனவும் அழைப்பதுண்டு. அத்தான் அத்தார் எனச் சொல்லப்படுகின்றார்.

க. சட்டநாதன் எழுதிய ‘உலா’ சிறு கதையில் வரும் உரையாடலில் இடைப்பட்ட சொற்கள் கையாளப்பட்டுள்ளன. “உதென்ன விடுப்பு? தேரிலை சாமி கூட வரேல்லை”. உவர் பெரிய மீசை முளைச்ச கொம்பர். சனத்துக்கை போய் நெரியப் போறாராம்”. இப்படி ‘உலா’ சிறுகதையில் இடைப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தகப்பன் என்ற சொல் தேப்பன் என யாழ்ப்பாணத் தமிழில் வழங்கப்படுகிறது. வருடம், ஜீவிதம் ஆகிய சொற்கள் முறையே வரியம், சீவியம் என வழங்கப்படுகின்றன. போய்விட்டு வருகிறேன் என்பது போட்டு வாறன் எனச் சொல்லப்படுகிறது.

பேராசிரியர் ஆ. கார்த்திகேயன் யாழ்ப்பாணத் தமிழ் எவ்வாறு தமிழக பேச்சு மொழியில் இருந்து வேறுபட்டுள்ளது என்பது பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். இங்க என்பது இஞ்ச என்றும் இங்காலை என்பதை இஞ்சாலை என்றும் யாழப்பாண பேச்சுத் தமிழில் காணமுடியும்.

ஈழத்து சிறுகதை மூலவர் என இலங்கையர் கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன் ஆகியோர் போற்றப்படுகின்றனர். இவர்களது சிறுகதைகளில் பேச்சுத் தமிழ் சிறப்பாக மையாளப்படவில்லை என விமர்சகர்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால் இலங்கையர் கோனின் சிறுகதைகளில் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் அமைந்த உரையாடல்களை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அவரது ‘மச்சாள்’ என்ற சிறகதையில் வரும் உரையாடல்கள் இவ்வாறு அமைந்துள்ளன.

“அதெல்லாம் என்னை ஏன் கேட்கிaர்? மக்சாள், என்ரை பெரியண்ணன் இண்டைக்குப் பின்னேரம் வந்திடுவார் அவரைக் கேளும், நீர் வடிவோ வடிவில்லையோ எண்டு. அவர் நல்லாய்ச் சொல்லுவார்” என்றும் அதே சிறுகதையில் இன்றுமொரு இடத்தில் வரும் உரையாடலில்,

“சும்மா கணக்கு விடாதையும் மச்சாள்! அண்ணன் இஞ்சை வந்தால் அறைக்கை போய் ஒளிச்சுக் கொண்டு யன்னற் சீலையை நீக்கி நீக்கிப் பார்க்கிறது எனக்குத் தெரியாதோ” என்பதாக இலங்கையர் கோனின் ‘மச்சாள்’ சிறுகதையில் உரையாடல்கள் யாழ்ப்பாணத் தமிழில் உள்ளன. இன்றைக்கு என்பது இண்டைக்கு என இந்த உரையாடலில் சுட்டப்பட்டுள்ளது.

அழகு என்ற சொல்லுக்கு பதிலாக வடிவு என்ற சொல் அதிகமாக யாழ்ப்பாண பேச்சுத்தமிழில் பயன்படுத்தப்படுகிறது. வடிவு என்பது அழகுக்கு மாத்திரம் பயன்படவில்லை. ஒரு செயலை சிறப்பாகச் செய்து முடித்தலையும் குறித்தது.

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் வினைச்சொல் அமைப்பும் ஏனைய பேச்சுத் தமிழில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது. சில வினைச் சொல் விகுதிகள் பழந்தமிழோடு ஒத்துள்ளது. எடுத்துக் காட்டாக நன்மை ஒருமை சுட்டும் விகுதியைக் குறிப்பிடலாம். ஏனைய பிரதேச பேச்சுத் தமிழில் பங்கெடுப்பேன், சுடுவேன், தருவேன் என வழங்கப்படும் சொற்கள் யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் பங்கெடுப்பன், சுடுவன், தருவன் எனச் சொல்லப்படுகின்றது.

“இன்பம் தருவன் குயிலே, உன்னை உகப்பன் குயிலே” எனத் திருவாசகத்தில் குயில் பத்தில் பாடப்பட்டுள்ளது. இங்கே வருகின்ற தருவன், உகப்பன் போன்ற வினைச் சொற்கள் யாழ்ப்பாண பேச்சு மொழியில் வழங்கப்படுகிறது. இது

ஜி>ஓம் என்பது பிரணவ வடிவமாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானின் வடிவம் ஓம் என்ற பிரணவப் பொருளை உணர்த்துகிறது. பிரணவ மந்திரத்தை சிவபிரானுக்கு முருகன் போதித்தார். இதனால் ஓங்கார மூர்த்தியாக முருகன் போற்றப்படுகிறார். ஓம் என்ற சொல் யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சம்மதம் தெரிவிக்க ஓம் எனச் சொல்லப்படுகிறது. ஓம் என்ற சொல் விகுதியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பழந்தமிழில் எண்ணுவம், அறிகுவம், வேண்டுவம், வருவம் போன்ற வடிவங்களில் அம்விகுதி வருவதைக் காண முடியும். நீ. பி. அருளானந்தம் எழுதியுள்ள ‘பெட்டைக்குட்டி’ என்ற சிறுகதையில் வரும் உரையாடலில் ஓம் என்ற சொல் விகுதியாக கையாளப்பட்டுள்ளது.

“அந்தப் பூனைக்குட்டிகள் முழுக்கலும் பெட்டைக் குட்டிகளாய் இருந்தாலும் பரவாயில்லை. அவையளை வீட்டிலை வைச்சு வளர்ப்பம். ஆராவது பிறகு வந்து எங்களுக்கு வளர்க்கத் தாருங்கோ வெண்டு கேட்டால் கொடுப்பம்”

இங்கே வளர்ப்பம், கொடுப்பம் என்ற சொற்கள் யாழ்ப்பாண பேச்சு மொழியினை நினைவுபடுத்துவதாய் உள்ளன.

வரும் போது, போகும்போது, சாப்பிடும் போது, குடிக்கும் போது என்ற சொற்கள் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் வரேக்கை போகேக்கை, சாப்பிடேக்கை, குடிக்கேகை என்பதாக உரையாடப்படுகிறது.

ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் வழங்கப்படுவதுமுண்டு. உழைத்தல் என்ற சொல் உடல் உழைப்பை மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. யாழ்ப்பாண பேச்சு மொழியில் பணம் ஈட்டுதலையும் குறிக்கும். எடுத்தல் என்பது பொருட்களை எடுப்பதற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட வில்லை கைநிறையச் சம்பளம் எடுப்பதையும் சுட்டுகிறது.

நிற்கிறான் என்பது யாழ்ப்பாணத் தமிழில் நிற்பதை மாத்திரம் குறிக்கவில்லை. “தான் காதலிச்ச நிர்மலாவைக் கட்ட வேணும் எண்டு நிக்கிறான்” என்பதாக உரையாடலில் வழங்கப்படுகிறது. “மாமி வீட்டுச் சாப்பாடு நல்லாய் இருக்கு தாக்கும் அதுதான் அங்கேயே நிண்டுட்டான். என நிற்றல் என்பது பல்வேறு பொருள்களில் வழங்கப்படுகிறது.

குஞ்சு என்பது கோழிக் குஞ்சு, குருவிக் குஞ்சு என்பவற்றை மாத்திரம் குறிக்கவில்லை. “என்ரை குஞ்செல்லே குளப்படி செய்யாதேங்கோ” எனத் தாய் தனது மகனையோ மகளையோ பார்த்துச் சொல்வதுண்டு. காதலன் காதலி, கணவன் மனைவி ஆகியோரும் அன்புப் பெருக்கினால் குஞ்சு என ஒருவரை ஒருவர் அழைப்பதை யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் காண முடியும். இலங்கையில் ஒவ்வொரு பிரதேசத்திலும் தமிழ் மொழி அந்தப் பிரதேசத்துக்குரிய சிறப்புடன் பேசப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்பு தமிழ், மலையக தமிழ் என்பவை தனித்துவமானவை.

யாழ்ப்பாண தமிழ் அந்த உச்சரிப்பின் அடிப்படையிலேயே பிற மொழிச் சொற்களையும் உள்வாங்கியுள்ளது. முன்பெல்லாம இலக்கியக் கல்வி கற்றோர் மட்டுமே எழுத முடியும் என்ற நிலைப்பாடு இருந்தது. உரை நடை இலக்கியங்களும் அதிகம் எழுதப்படவில்லை. செய்யுள்களாகவே படைப்புகள் காணப்பட்டன.

யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் சிறுகதைகள், நாவல்கள் வெளியானபோது சில தமிழக எழுத்தாளர்கள் அதனை கேலி செய்தனர். இந்தப் படைப்புகளுக்கு அடிக் குறிப்புத் தேவை என்றனர். நம் நாட்டு பண்டிதர்கள் பலரும் சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை ஆரம்பத்தில் ஏற்கவில்லை. ஆனால் இன்று நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தலித் இலக்கியம் கரிசல் இலக்கியம் என மண் வாசனையோடு எழுதப்படும் படைப்புக்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

சிறுகதைகள், நாவல்களில் யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் உரையாடல்கள் அமைந்தால் அவற்றுக்கு அடிக்குறிப்பு எழுதப்பட வேண்டும். இவ்வாறான கருத்து கி. வா. ஜகநாதன், பகீரதன் போன்ற தமிழக எழுத்தாளர்களால் முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இன்று தமிழகச் சஞ்சிகைகள் பலவற்றில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த ஆக்கங்கள் பல வெளிவருகின்றன. இதனை யாழ்ப்பாண பேச்சுத் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதலாம்.

தினகரனில் வந்தது
Author: கானா பிரபா
•3:10 AM
வல்வை நலன்புரிச் சங்கம் அவுஸ்திரேலியா பிரிவு ஜூலை 2005 இல் வெளியிட்ட மலரைப் புரட்டியபோது அதன் ஆசிரியர் வல்வை சு.சக்திவடிவேல் இந்த "மாப்புக்கட்டு" பற்றி இப்படிச் சொல்கின்றார்.

1972 ஆம் ஆண்டு காலப்பகுதி அது. ஆசிரிய சேவையில் என்னை இணைத்துக் கொண்ட காலம். எனது ஆசிரியப்பணி அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலையில் தான் தொடங்கியது.

அன்று மாணவர்களுக்கு கணிதம் படிப்பித்துக் கொண்டிருந்தேன். ஒரு மாணவன் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை.

"பாரதிதாசன்! எழும்பு.....வா இங்கை"
கதிரையிலிருந்து கொண்டு அவனை அழைத்தேன்.
அவன் பவ்யமாக என் முன்னே வந்து நின்றான்.
என் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, கடுப்பான தொனியில்....
"மாப்புக் கட்டடா" என்றேன் நான்.

அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான்.
எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எனது சொல்லுக்குக் கட்டுப்படாமல்...அவன் பணிவான மாணவன் தான்! என்றாலும் நான் சொல்லும் பொழுது..அவனை அடிப்பதற்காக கையை ஓங்கினேன்.

எனது கை அவனது முதுகில் இறங்குவதற்கு முன்... எனது மனசில் ஒரு சிறு பொறி.
"கையைக் கட்டடா"
அவன் உடனடியாகக் கைகளைக் கட்டிக்கொண்டு பரிதாபமாக என்னைப் பார்த்தான்.
அப்பொழுதுதான் "மாப்புக் கட்டு என்பது எமது வல்வெட்டித்துறைப் பிரதேசத்துக்கே மட்டுமான சொல்வழக்கு என்பது எனக்குப் புரிந்தது.

மாப்புக்கட்டு என்றால் மார்பைக் கட்டு, கையைக் கட்டு என்று அர்த்தப்படும். அதாவது இரண்டுகைகளையும் மார்பை நோக்கிக் கட்டிப் பணிவாக நின்றிருத்தல் என்பதேயாகும்.
Author: வந்தியத்தேவன்
•10:53 PM
பொடியன், பொடிச்சி, பெட்டை, பொடியள் போன்ற சொற்கள் ஈழத்து வட்டார வழக்கில் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை. இந்தச் சொற்களின் மூலத்தை இணையத்தில் தேடு தேடென்று தேடினேன் கிடைக்கவில்லை. தமிழகத்தில் இந்த வார்த்தைகள் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை என நினைக்கின்றேன்.

இனி சொற்களுக்கான விளக்கம்

பொடியன் : பெரும்பாலும் சிறுவர்களைக் குறிப்பிடப்பயன்படுத்துவது. சிலவேளைகளில் இளைஞர்களையும் இந்தச் சொல்கொண்டு அழைப்பார்கள்.
உதாரணம் :
1. என்ரை மூத்த பொடியன் டொக்டருக்கு படிக்கிறான்

இங்கே பொடியன் குறிப்பிட்ட நபரது மூத்தமகனைச் சுட்டிக்காட்டுகின்றது.

2. சிவத்திற்க்கு பொடியன் பிறந்திருக்கு.

இந்த வாக்கியத்தில் பொடியன் ஆண் குழந்தையைக் குறிக்கிறது.

சிலவேளைகளில் பொடியனைச் சுருக்கி பொடி எனவும் அழைப்பார்கள்.

பொடிச்சி : பொடியனின் பெண்பால். பொம்பிளைப் பிள்ளைகளைக் குறிக்கும்.

உதாரணம் :
1. கோயிலுக்கு சிவசம்பு வாத்தியார்ட்டை சிவலைப் பொடிச்சி வந்திருந்தாள்,
இங்கே சிவலைப் பொடிச்சி சிவந்த அல்லது மாநிறமான பெண்ணைக் குறிக்கும்.

பெட்டை : பெண்களைக் குறிக்கும் இன்னொரு சொல். பெரும்பாலான கிராமங்களில் வழங்கும் சொல். கொஞ்சம் நாகரீகமாக பேசுகின்றவர்கள் இதனைத் தவிர்ப்பார்கள். குறிப்பாக கொழும்புத் டமில்ஸ். பெரும்பாலும் இளைஞர்கள் இந்தச் சொல் பாவிப்பார்கள்.

உதாரணம் :
1. வடிவான பெட்டை, சோக்கான பெட்டை. இரண்டுக்கும் அர்த்தம் அழகான பெண்.

பொடியள் : இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் கூட்டத்தைக் குறிக்கும் சொல். பொதுப்பாலாகும்.

உதாரணம் :
1. வைரவ கோயிலடியில் பொடியள் விளையாடுகிறாங்கள்.
2. உந்தப்பொடியள் செய்யும் சேட்டைகள் சரியில்லை.

இதனை விட விடுதலை இயக்கங்களில் இருப்பவர்களயும் பொடியள் என அழைப்பார்கள்.

3. வாசிகசாலையில் பொடியள் இண்டைக்கு கூட்டமாம்.
நூலகத்தில் ஏதோ ஒரு இயக்கத்தினர் கூட்டம் போடுகின்றார்கள் என்பது இதன் அர்த்தமாகும்.

பிற்குறிப்பு : நான் தமிழ் அறிஞன் அல்ல. அத்துடன் சாதாரண தரம் வரை மட்டுமே தமிழ் படித்தவன். மற்றும்படி நிறைய ஈழத்து நூல்கள் வாசித்த அனுபவம் மட்டுமே. ஆகையால் ஏதும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும். அத்துடன் உங்களுக்குத் தெரிந்த ஏனைய உதாரணங்களையும் இந்தச் சொற்களின் மூலங்களையும் அறியத்தரவும்.