Author: சினேகிதி
•12:54 PM
***முன்குறிப்பு - படங்கள் இணைக்கப்பட்டிருக்கு***

குதியம் குத்துதல் பற்றி யோசிச்சனா நான் முந்தி எழுதின ஒரு பதிவு ஞாபகம் வந்திச்சு *** எச்சரிக்கை*** மீள்பதிவு :)

மலைநாடான் பாலைப்பழத்தைப் பற்றி எழுதினாரா நான் அதைப்போய் வாசிச்சனா இப்ப எனக்கும் நான் ரசிச்சு ருசிச்சு சண்டைபிடிச்சு பிச்சுப் பிடுங்கி சாப்பிட்ட பழம் காய் பற்றியெல்லாம் எழுதவேணும் போல இருந்திச்சா அதான் எழுதினா என்ன குறைஞ்சிடுவன் என்று எழுத வெளிக்கிட்டிட்டன்.

பாலர் வகுப்புப் படிச்ச காலத்தில இருந்தே பள்ளிக்கூடம் போற வழியில ரியூசன் போற வழியில இப்பிடி எப்பெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வீட்டை விட்டுப் போறனோ அப்பெல்லாம் ஆற்றயும் வீட்டுக்காணியிலோ அல்லது தோட்டத்துக்காணியிலோ கைவைக்காமல் வீடு திரும்பினதா ஞாபகம் இல்லை.



என்ன சத்தம் நறநற என்று? இதைப்படிக்கிற யாரோ ஒரு ஆணுடைய பல்லுத்தான் நறநறக்குது.இதுகள் பண்ணின வால்தனத்துக்கெல்லாம் ஊர்க்காரர் எங்களைத்தானே அடிச்சிருக்குதுகள் என்றுதானே மனசுக்குள்ள திட்டுறீங்கள்.சரி சரி மறந்துபோங்கோ மன்னிச்சுடுங்கோ பால்ய சினேகிதிகளை.

இலந்தப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாலர் வகுப்புப் படிக்கும்போது ரியூசனுக்குப் போனது தேவா ரீச்சரிட்ட பிறகு அவான்ர தங்கை சாந்தாக்காட்ட.அவேன்ர வீட்டுக்குப் போற வழியில ஒரு இலந்தப்பழ மரம் நிக்குது.மரமோ சரியான உயரம்.நான் என்ர நண்பர்கள் சுஜித்தா சுபாசினி டொம்மா இன்னும் கொஞ்சப்பேர் பாலர் வகுப்பில எவ்வளவு உயரம் இருந்திருப்பம் என்று சொல்லவும் வேணுமா? இலந்தப்பழ மரத்துக்குப் பக்கத்தில கிழங்குக்கு தாக்குறதுக்கா ஊமல்கொட்டை பறிச்சு விட்டிருப்பினம் காணிச்சொந்தக்காரர்.எங்களுக்கு கல்லில கொஞ்சம் பாசம் பாருங்கோ அதால கல்லை விட்டிட்டு ஊமல்கொட்டையை எடுத்து போட்டிக்கு மரத்துக்கு எறிவம்.மரத்தில இருக்கிற கொஞ்ச நஞ்ச பழம் அப்பத்தான் பழுக்கத்தொடங்கியிருக்கிற செம்பழம் எல்லாம் விழும் பாய்ஞ்சு பாய்ஞ்சு பொறுக்கிறது.கொஞ்ச நேரம் மரத்துக்குக் கீழ நிண்டா காணிக்காரர் வந்து “யாரடா அது இலந்தைக்குக் கீழ” என்று சத்தம்போடுவாரெல்லோ.ஒரு விசயம் பாருங்கோ ஒரு நாள் கூட “யாரடி அது மரத்துக்குக் கீழ” அவர் கேட்டதே இல்லை :-) எங்கட குட்டிச்சைக்கிளை மெல்லமா உருட்டிக்கொண்டு ரியூசனுக்குப்போவம்.ம் ம் அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பர்களே...

பிறகு கொஞ்சம் வளர்ந்தாப்போல ஸ்கொலர்சிப் ஸ்பெஸல் கிளாஸ் போற வழியிலதான் அணிஞ்சில்பழ மரம் இருக்கு.என்னத்துக்கு அணிஞ்சில் என்று பெயர் வந்திருக்கும் என்று தெரியேல்ல..அணில் சாப்பிடுற பழமாயிருக்குமோ?? எனக்கென்றா அந்த மரத்தில அணிலைப்பார்த்ததா ஞாபகம் இல்லை.அணிஞ்சில் பழமும் ஒரு வித்தியாசமான ரேஸ்ற்தான்.கிட்டத்த றம்புட்டான் பழத்தின்ர உள்ளான் மாதிரி சின்னனா இருக்கும் என்று நினைக்கிறன்.பழத்தை சாப்பிட்ட அணிஞ்சில்பழக் கொட்டையை நிலத்தில தேய்ச்சு ஒரு சிறிய துவாரத்தை உண்டாக்கினா அதில ஒரு விதமான ஓசை வரும் அதை வைச்சு விசிலடிக்கலாம் :-)


(படம் உபயம் : வசந்தனண்ணா:) )

இன்னொரு வீட்டில ஜம்புக்காய் இருக்கு.றோஸ் நிற ஜம்புக்காயை விட பச்சை நிற ஜம்புக்காயைத்தான் எனக்குப் பிடிக்கும்.நாங்கள் களவெடுக்காம சாப்பிட்டதெண்டா ஜம்புக்காய்தான்.அந்த வீட்டுக்கார அம்மம்மான்ர பிள்ளைகள் எல்லாரும் கொழும்பில அதால அவாக்கு நாங்கள்தான் பேரப்பிள்ளைகள் மாதிரி ஜம்புக்காய் சீசனில மறக்காம ஒரு பெரிய பாக்ல கொண்டுவந்து தருவா வீட்ட.அத விட நாங்களும் விருப்பமான நேரத்தில போய்ச் சொல்லிட்டு ஆய்ஞ்சு சாப்பிடலாம். எங்கட காணிக்குள்ள காரைக்காயும் சூரைக்காயும் இருக்கு.எங்களுக்குத் தனியா அங்க போறதுக்கு அனுமதியில்லை இருந்தாலும் நிறைய நாள் அப்பப்பாவுக்குத் தெரியாம காணிக்குள்ள நுழைஞ்சிருக்கிறம் சூரைக்காய் பிடுங்க.ஒரு நாள் நாங்கள் காணிக்குள்ள நிக்கிறநேரம் பார்த்து யாரோ வாற சத்தம் கேட்டு பதட்டத்தோட ஓடுபட்டு விழுந்தெழும்பி கைகாலெல்லாம் சிராய்ப்புகளோட ஓடித்தப்பியிருக்கிறம்.


(கொய்யாக்காய்)



(நெல்லிக்காய்)

வீட்டில நிக்கிற கொய்யாக்காய் மாதுழம்பழம் நெல்லிக்காய்களையும் விட்டு வைக்கிறதில்லை. நெல்லிக்காயைத் தாத்தா ஏதோ மருந்துக்குப் பாவிக்கிறவர் என்று அம்மாக்கு நாங்கள் சும்மா புடுங்கி எறிஞ்சு விளையாடுறது விருப்பமில்லை அதால அம்மா வீட்டில இல்லாத நேரமாப் பார்த்து நாங்கள் நெல்லிமரத்தில ஏறிடுவம்.அப்பிடித்தான் ஒருநாள் நான் நெல்லிமரத்தில கீழ என்ர நண்பிகள் கொஞ்சப் பேர் ஏந்துறதுக்கு ரெடியா சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நிக்கினம் நான் ஆய்ஞ்சு போடுற காய்களைப் பிடிப்பதற்கு.நெல்லிமரம் நிற்பது மதில் கரையோட.எங்கட வீடு தெருவோரத்தில கடைசி வீடு.அங்கால எல்லாம் தோட்டங்கள்.தோட்ட வேலை முடிஞ்சு தியாகண்ணை வந்துகொண்டிருந்தவர் டக்கெண்டு கேற்றைத்திறந்துகொண்டு வீட்டுக்குள்ள வந்ததும் மட்டுமில்லை கேற்றில ஏறி என்னை வலுக்கட்டாயமாத் தூக்கிக்கொண்டு இறங்கிட்டார்.நான் பிலத்த சத்தமா அவரோட வாய்காட்டுறன் “இப்ப என்னத்துக்கு என்னைத்தூக்கினீங்கள் நான் என்ன உங்கட வீட்டு மரத்திலயோ ஏறி நின்டனான்” அது இது என்று ஒரே சத்தம். அவர் ஒன்றும் சொல்லாம நான் நின்ற கொப்பைக் காட்டினார்.நான் நின்ற இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு கோடாலிப்பாம்பு நிக்குது.ஐயோ என்று கத்திக்கொண்டு ஒரே ஓட்டம்.அதுக்குப்பிறகு தியாகண்ணையை எங்க கண்டாலும் அவர் நான் கத்தின மாதிரிக் கதைச்சுக் காட்டுவார் எனக்கு ஐயொ மானம்போகுதே என்று கத்தோணும் போல இருக்கும்.

யாராவாது எக்ஸோறாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீங்கிளா? ஓருதரும் சிரிக்க வேண்டாம் ஓகே.நான் மட்டுமில்லை என்ர பிரண்ட்ஸ்ம் சாப்பிட்டு இருக்கினம்.அந்தப்பழம் சிவப்பாகிக் கறுப்பாகும் ஆனால் அது கறுப்பாக முதலே நாங்கள் சாப்பிட்டுடுவமே :-)


(நாவல்பழம்)

கனடாவில் ஒரு பாகிஸ்தான் கடையில் இலந்தப்பழம் நாவல் பழம் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறன் இப்ப அந்தக் கடையைத்தான் போய்த் தேடவேணும்.

பிறகு எனக்குப் பதின்மூன்று வயதிருக்கும்போது மாத்தளைக்கு போயிட்டம்.அங்க இந்த இலந்தப்பழம் எல்லாம் இல்லை.அங்க ரியூசனுக்குப் போன ரீச்சர் வீட்ட வெரலிக்காய் மரம் இருக்கு. வெரலிக்காய் ஒரு கசப்பு உவர்ப்பு எல்லாம் மிக்ஸ் பண்ணின மாதிரி ஒரு ரேஸ்ற் பச்சை நிறத்தில இருக்கும். உப்புத்தண்ணில ஊறப்போட்டு தூள் தடவி விற்பார்கள் கடைகளில் பேருந்துகளில்.நினைக்கவே வாயூறுது.பழமும் சாப்பிடலாம் எனக்குக் காய்தான் விருப்பம்.

(ஆம்பரலங்காய்)

மற்றது ஆம்பரலங்காய்.ரீச்சற்ற மாமிக்கு எங்களைக் கண்டாலே பிடிக்காது ஏனென்றால் ரீச்சர் எங்களை ஆய்ஞ்சு சாப்பிடுங்கோ என்று விட்டிடுவா நாங்களும் உப்பு தூளெல்லாம் கொண்டுபோய் ரீச்சற்ற மாமிக்கு காட்டிக் காட்டி சாப்பிடுவம்.பிறகு கேள்விப்பட்டம் ரீச்சற்ற மாமி சுங்கான் குடிக்கிறதுக்காக ஆம்பரலங்காய் பக்கத்து வீட்டு ஆக்களுக்கு விக்கிறவாவாம் அதில நாங்கள் ஆப்பு வைச்சதாலதான் எங்களை அவாக்குப் பிடிக்காதென்று.

இன்னும் பழங்கள் காய்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு.நீங்களும் உங்களுக்குப் பிடித்த பழம் காய்களைப் பற்றிச் சொல்லுங்கோ.

பின்னோட்டங்களில் உரையாடிய பழங்களின் படங்கள்:

1)அன்னாமுண்ணா



2) முழுநெல்லி - கச்சல் நெல்லிக்காய்


3)நான் எழுத மறந்த மசுக்குட்டிப்பழம்


4) Passion Fruit


5)புளியம்பழம் ( ஆ..வாயூறுது)


6)விளாம்பழம்

This entry was posted on 12:54 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

62 comments:

On July 2, 2009 at 2:58 PM , soorya said...

ரசித்தேன்
சுவைத்தேன்.
நினைத்தேன்
அணிலோடும் அணிஞ்சில்களை
மட்டுமல்ல...!
வாயூறும் பல பழங்களையும்
பழையவற்றையும்
நன்றி.

 
On July 2, 2009 at 5:33 PM , Anonymous said...

ஆம்பரலங்காய் - பேரே இப்பதான் கேள்விப்படறேன். படம் கிடைச்சா போடுங்களேன். எப்படி இருக்குன்னு பாக்கலாம் .

 
On July 2, 2009 at 7:49 PM , யசோதா.பத்மநாதன் said...

ஜம்புப் பழம் சாப்பிடுற குழந்தையைப் பாக்க நீ சின்னனில இருந்தது போல இருக்கடி மோன.

கறுப்புப் பொட்டோட சின்னப் பெண்குழந்தை!

ஆஹா!!

 
On July 2, 2009 at 8:44 PM , வந்தியத்தேவன் said...

எனக்கும் உங்களைப் போன்ற சினேகிதி ஒருத்தி இருந்தால் அவள் தான் பள்ளிக்கு போகும் வழியில் திரும்பும் வழியில் எல்லாம் கள்ள மாங்காய் நெல்லி எல்லாம் ஆய்ந்து தருவாள் நானும் என்ரை நண்பனும் அவளுக்கு சென்றியாக நிற்போம். இதெல்லாம் அந்தக் கால சுவாரசியங்கள்.

அணிஞ்சில் பழம் சுவைதான் ஆனால் அதன் தோலின் மணம் சிலவேளை மச்சமணமடிக்கும். அண்ணாமுண்ணாப் பழம் சாப்பிட்டதில்லையா? நாங்கள் கொஞ்சம் கடுக்கண்டாப்பிறகு காட்டு நெல்லி(கச்ச நெல்லி) ஆய இன்னொரு ஊருக்குப்போய் சில தடவை பிடிபட்டு பல தடவை வெற்றிகரமாக ஆய்ந்துகொண்டு வாறது. கச்ச நெல்லி சாப்பிட்டுவிட்டு தண்ணி குடிக்க தண்ணி நல்ல இனிப்பாக இருக்கும்.

சினேகிதி நீங்கள் சரியான குழப்படியோ?

 
On July 2, 2009 at 9:01 PM , வாசுகி said...

நானுன் எக்சோரா பழம் சாப்பிட்டிருக்கிறேன். ஒரு பழமும் கிடைக்கா விட்டால்,அம்மாவுக்கு தெரிந்தால் அடி விழும் என்று களவாக தான் சாப்பிடுவோம்.

அணிஞ்சில்பழம் நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன். கூழாம்பழத்தை தான் அப்படி சொல்வதோ என நினைக்கிறேன்.

கொய்யாப்பழம் ஆய்வதற்காக கூரைக்கு மேல் ஏறி கோடாலிப் பாம்பிட்ட மாட்டுப்பட்ட அனுபவம் இருக்கு.நல்ல காலம் கடிக்கேல.

கொழும்பு வந்த போது தான் ஆம்பரலங்காய் தெரியும். சிங்களவர்கள் சோறுடன் கறியாக‌
பாவிக்கிறவர்கள்.

எங்கட இடத்தில் கத்தாப்பூ காய் பிரபலமாய் இருந்தது. கல்லால குத்தி
சாப்பிடுவதில் ஒரு சந்தோசம்.
நாவல் பழமும் அடிபட்டு சாப்பிடுவார்கள்.

எமது வீட்டிற்கு முன் இருந்த வெறும் காணியில, வேலியோட ஒரு குட்டி அன்னமுன்னா மரம் இருந்தது.
எப்பவாவது அருமையாய் ஒரு காய் தான் காய்க்கும். அந்த காயில ஊரில இருக்கிற எல்லோரும்
கண் வைத்து இருப்பார்கள் உரிமையாளர் உட்பட.ஆனால் உரிமையாளர் இது வரை
சாப்பிட்டதே இல்லையாம். முன் வீடு என்பதால் என்னில சந்தேகம் அவர்களுக்கு. ஹி ஹி
ஆனால் பேசமாட்டார்கள். ரொம்ப நல்லவங்க.

கலக்கல் இடுகை.

 
On July 2, 2009 at 9:06 PM , சினேகிதி said...

நான் நிறைய பழங்களை காய்களை மிஸ் பண்ணிட்டன் இதில. நன்றி சூர்யா.

 
On July 2, 2009 at 9:12 PM , சினேகிதி said...

வாங்க சின்ன அம்மிணி :) ஆம்பரலங்காய் பார்க்க மாங்காய் மாதிரித்தானிருக்கும் பச்சையாய் ஆனால் மாங்காய் சேப்ல இருக்காது. மாங்காய்க்கு மூக்கு இருக்கல்லா...இதுக்கு மூக்கு இருக்காது.

உப்புத்தூள் போட்டு விப்பினம் ..நல்ல ரேஸ்ரா இருக்கும்.

 
On July 2, 2009 at 9:13 PM , வந்தியத்தேவன் said...

எக்சோரா பழம் என்றால் எது? படம் எக்சோரா என்பது ஒரு பூமரம் என நினைக்கிறேன். ஈச்சம்பழம் சாப்பிட்டதில்லையா? அம்பரலங்காய் கொழும்பில் அதிகம் கிடைக்கும் பழம். மாங்காய் போல் டேஸ்ட். சைசில் மாங்காயைவிட சின்னன்.

உங்கள் பதிவினையும் வாசுகி மணிமேகலா ஆச்சியின் பதில்களையும் பார்க்கும்போது நீங்கள் அந்தக்காலத்தில் பொடியன்களுக்கு சமமாக குதியன் குத்தியிருக்கிறீயள். அப்போ என்ன நினைவு? எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் சிந்திப்பதேயில்லை. கலக்குங்கோ

 
On July 2, 2009 at 9:14 PM , சினேகிதி said...

\\ஜம்புப் பழம் சாப்பிடுற குழந்தையைப் பாக்க நீ சின்னனில இருந்தது போல இருக்கடி மோன.

கறுப்புப் பொட்டோட சின்னப் பெண்குழந்தை!

ஆஹா!!\\

என்ன மணிப்பாட்டி என்னை மறக்கேல்லயோ நீங்கள் :)

என்னட்டயும் அதப்போல சட்டை இருந்ததணை ஞாபகமிருக்கோ உங்களுக்கு:)

 
On July 2, 2009 at 9:20 PM , சினேகிதி said...

வந்தியத்தேவன் ,

கள்ள நெல்லி ஆஞ்சு தர நீங்கள் நல்லா சாப்பிட்டனீங்கிளோ:) நல்ல ஆக்கள் நீங்கள்:)

எனக்கு பழம் ஞாபகமிருக்கு மணம் ஞாபகமில்ல...அதுசரி மச்சமணம் என்டால் என்ன?

எங்கட வீட்டுக்கிட்ட கச்சல் நெல்லி (முழு நெல்லி) நிண்டது. ரியூசனால வரேக்க போய் ஆய்றனாங்கள். அது முன்கேற்றால போய் சொல்லிட்டு ஆயலாம்:)

அண்ணாமுண்ணாப் பழம் சாப்பிட்டிருக்கிறன் ஆனால் எனக்கது பெரிசா விருப்பமில்ல. கடுமினிப்பது..பிடிக்கிறேல்ல. அம்மம்மான்ர காணிக்க நிக்குது அண்ணாமுண்ணா.

 
On July 2, 2009 at 9:25 PM , சினேகிதி said...

அப்பாடா வாசுகி நீங்களும் சாப்பிட்டினீங்கிளோ :)

அணிஞ்சில் பழம் முதல் பச்சையாய் பிஞ்சாயிருந்து பிறகு வெள்ளையாய் வந்து பிறகு பிங் கலரா பழுக்கும். கூழாம்பழம் என்டால் என்ன?

கத்தாப்பூ காய்??? நல்ல பெயராயிருக்கு..அதப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ.


எனக்கும் உங்களிலதான் சந்தேகம்...உண்மையைச்சொல்லுங்கோ அந்த அண்ணாமுண்ணா காணாமல் போனது உங்கட கைவரிசை தானே:)

 
On July 2, 2009 at 9:28 PM , சினேகிதி said...

வந்தியத்தேவன் பருத்தித்துறை , மாலுசந்தி எல்லாம் வருது உங்கட பதிவில ஆனால் எக்ஸோராப்பழம் தெரியாதா ?

எக்ஸோரா மரத்தில காய்க்கிற காய் முதல் பச்சையாய் இருந்து மஞ்சளாகி பிறகு சிவப்பாபி பிறகு கறுப்பாகும். கறுப்பெண்டால் நல்ல பழம்...அந்தப்பழத்தைச் சாப்பிட்டு விதையை நட்டு வச்சால் எக்ஸோராக் கண்டு வரும்...பழத்தை சாப்பிடாமல் நட்டாலும் கண்டு வரும்தான் :)

 
On July 2, 2009 at 9:30 PM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

வாயூற வைக்கிறீங்களே சினேகிதி!!

எக்சோராப் பழமா!! வேலியோரம் நிற செடியில இருந்து எடுக்கிற சோத்துத்தண்ணிப் பழந்தான் எனக்குத் தெரியும்!! வேற ஆருக்காவது அது தெரியுமா?

மகிழம்பழம் சாப்பிட்டிருக்கிறீங்களா? (லாவுளு என்பது சிங்களப் பெயர்)கடுபுளியம்பழம், jam பழம், விளி மாங்காய் (பெயர் சரியோ தெரியாது) பற்றியும் சொல்லுங்களன் ஆராவது!! yumm!!

 
On July 2, 2009 at 9:38 PM , சினேகிதி said...

வந்தாச்சா ஷ்ரேயா:) உங்களைத்தான் தேடினான். இது மீள்பதிவு அம்மணி:) முந்தின பதிவிலயும் நீங்கள் விளிமாங்காய் பற்றி ஒரு விளக்கம் சொன்னீங்கள்.

சோத்துண்ணிப்பழம் எனக்குத்தெரியாது..எப்பிடியிருக்கும்?

மகிழம்பழமும் லாபிள் பழமும் ஒன்டா?? மகிழம்பழம் கோயில்ல நிக்கிறது. லாபிள் பழம் சாப்பிட்டிருக்கிறன் ( மஞ்சள் பழம்?)

Jam பழம் பிடிக்கும்...செம்புளியம்பழம் ஐயோ ரொம்பப் பிடிக்கும். ஆனால் புளி சாப்பிட்டால் மூளை மந்தம் ஆகும் என்டுவினம்.

 
On July 2, 2009 at 10:15 PM , வாசுகி said...

ஒரு வெறும் காணியில இனிப்பு புளி மரம் இருந்தது.அதுக்கு தான் நல்ல டிமாண்ட். எங்கட வீட்டில புளிய மரம் இருந்தாலும் நாம் சைக்கிளில போய் அங்கு தான் களவெடுப்போம். ஆனால் அந்த புளியபரத்தில 6 மணிக்க்கு பிறகு பேய் வாறதெண்டு
எங்கட பெருசுகள் பேய்க்காட்டி வைத்திருந்ததால் நாம் முன்னேற்பாடாய் 5 மணிக்கு முன்பே
எங்கட வேலையை கச்சிதமாய் முடித்துவிடுவோம்.
அதுமட்டுமில்லை பிறகு அந்த புளியங்கொட்டையை பாக்குவெட்டியால இரண்டாக‌
உடைத்து தாயம் விளையாடுவோம். தாயம் விளையாடினால் வீட்டுக்கு தரித்திரம் பிடிக்கும் எண்டு பெருசுகள் பேசுவதால் களவாக தான் விளையாடுவோம்.

லாவுளுப்பழம் என்று தான் நாமும் சொல்வோம். எங்கட அம்மம்மா வீட்டில் நிண்டது. அது மஞ்சள் நிறத்தில தானே இருக்கும்.
மா மாதிரி இருப்பதால் எனக்கு பிடிப்பதில்லை. ஆனால் பலர் விரும்பி சாப்பிடுவார்கள்.

இடம்பெயர்ந்து போகேக்க வழியில ஈச்சம் பழம் சாப்பிட்டிருக்கிறேன்.
அந்த நேரம் அது தான் எங்கட உணவாய் இருந்தது.
பனம் பழமும் நல்லா இருக்கும். பனங்காய் பணியாரம் இன்னும் நல்லா இருக்கும்.

 
On July 2, 2009 at 10:20 PM , வாசுகி said...

// வந்தியத்தேவன் said...

எக்சோரா பழம் என்றால் எது? படம் எக்சோரா என்பது ஒரு பூமரம் என நினைக்கிறேன். //

அந்த பூமரத்தில காய்க்கிற பழம் தான். பூமரம் எண்டதால நாம் விட்டு வைப்பமா?

அது மட்டுமில்லை.எக்சோரா மரத்தில பொன்வண்டு பிடித்து நெருப்பு பெட்டியில பூட்டி வைக்கிறனாங்கள்.

 
On July 2, 2009 at 10:36 PM , சந்தனமுல்லை said...

ஆகா..நல்ல மீள் இடுகை சிநேகிதி! பின்னூட்டங்கள் செம சுவாரசியம்!
//சோத்துண்ணிப்பழம் , jam பழம்// இதெல்லாம்தான் புரியலை! அப்புறம் பாப்பா செம க்யூட்! பாப்பா கையிலே இருக்கும் பழத்தை நாங்கள் பன்னீர் பழம்னு சொல்லுவோம்! :-)

 
On July 3, 2009 at 12:59 AM , வந்தியத்தேவன் said...

//சினேகிதி said...
வந்தியத்தேவன் ,

கள்ள நெல்லி ஆஞ்சு தர நீங்கள் நல்லா சாப்பிட்டனீங்கிளோ:) நல்ல ஆக்கள் நீங்கள்:)

எனக்கு பழம் ஞாபகமிருக்கு மணம் ஞாபகமில்ல...அதுசரி மச்சமணம் என்டால் என்ன?//

என்ன செய்கிறது பொம்பிளைப்பிள்ளையள் களவெடுத்தால் பெரிதாக ஒருதரும் திட்டமாட்டார்கள். மச்சமணம் என்பது மீன் மணம் ஹிஹிஹி,.

//சினேகிதி said...
வந்தியத்தேவன் பருத்தித்துறை , மாலுசந்தி எல்லாம் வருது உங்கட பதிவில ஆனால் எக்ஸோராப்பழம் தெரியாதா ?//

இப்போ ஞாபகம் வருகிறது. நாங்கள் சில பழங்களில் ரிஸ்க் எடுப்பதில்லை. எங்கட சினேகிதப் பெட்டையள் எக்சோராப் பழம் நல்லாத் தின்பார்கள்.

 
On July 3, 2009 at 1:04 AM , வந்தியத்தேவன் said...

விளாங்காயையும் விளாம்பழத்தையும் விட்டுவிட்டியள். விளாங்காய் உப்புடன் சாப்பிட்டால் நல்ல ருசி என்ன கொஞ்சம் தொண்டை கட்டிக்கும். எங்கட பள்ளிக்கூடம் புட்டளையில் கொஞ்ச நாள் இடம் பெயர்ந்திருக்கும்போது மகிழங்காய் சாப்பிட்டனாங்கள். லாவுலு வேறை மகிழங்காய் வேறை என நினைக்கிறேன் ஸ்ரேயா.

//சினேகிதி said...
ஆனால் புளி சாப்பிட்டால் மூளை மந்தம் ஆகும் என்டுவினம்.//

இல்லாவிட்டால் எமக்கு ஏதோ மூளை பாஸ்ட் போல கதைக்கிறீயள் புளியங்காயாக சாப்பிட்டால் கொஞ்சம் தான் புளிக்கும் ஆனால் புளியம்பழம் வாயில் வைக்கும்போது ஐயோ புளியோ புளி. பசங்க படத்தில் ஒரு வெட்கம் வருதே பாடலில் நம்ம சோப்பிக்கண்ணு ஒரு ரியாக்சன் கொடுப்பார் புளி சாப்பிடும்போது அதுதான் ரியல். கொஞ்சம் கடுக்கண்டாப்போல எங்களுக்கும் சோப்பிக்கண்ணு போல சினேகிதிகள் இருந்தவர்கள் எங்களை வச்சு கள்ள மாங்காய் நெல்லிக்காய் வாங்கிச் சாப்பிடுவார்கள். இப்போ எங்கே இருக்கிறார்களோ ம்ம்(பெருமூச்சு)

 
On July 3, 2009 at 1:32 AM , சுபானு said...

நன்றி சினேகிதி பல மறக்கமுடியாத பழங்களை ஞாபத்தில் கொண்டு வந்ததிற்கு..

நானும் எக்ஸோறாப்பழம் சாப்பிட்டு இருக்கன்.. நல்லாயிருக்கும்.

 
On July 3, 2009 at 7:03 AM , வலசு - வேலணை said...

அந்தநாள் நினைவுகள் நெஞ்சில் மீண்டும் வந்தது.
எக்ஸ்சோறா, தண்ணிச்சோத்துப்பழம், அன்னமுன்னா, இலந்தைப்பழம் எல்லாம் நானும் சுவைத்திருக்கிறேன்

 
On July 3, 2009 at 7:53 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

என்னது மீள்பதிவா? ஓஒ இப்ப விளங்குது ஏன் முதலே வாசிச்ச மாதிரிக் கிடந்ததெண்டு!! :O)

//சோத்துண்ணிப்பழம் , jam பழம்// இதெல்லாம்தான் புரியலை!//

நான் எழுதிறது முதல் தடவையிலே ஆச்சிக்கு விளங்கினா ஆகாதாமே!! :OD

வேலணை வலசு- ஒருக்கா இந்தப் பிள்ளைகளுக்குச் சோத்துத்தண்ணிப் பழத்தைப் பற்றிச் சொல்லுங்களன்..

 
On July 3, 2009 at 8:20 AM , வந்தியத்தேவன் said...

என்ன பிள்ளையள் எல்லோரும் இன்னொரு பழத்தை மறந்துபோனியள் அதுதான் சரஸ்வதி பூசைக்காலத்திலை கிடைக்கிற நாவல்ப்பழம். நாகர்கோவில் பக்கம் நிறைய நாவல் மரங்கள் நிற்கிறது அங்கிருந்துதான் பெரும்பாலும் கொண்டுவருவார்கள். ஒரு சுண்டு பத்துரூபா(கடைசியாக நான் 1996ல் வாங்கியது). எங்கட பாடசாலை வளவிலையும் ஒரு மரம் நிண்டது. நாவல்ப்பழமும் சீனியும் கலந்து சாப்பிட்டால் நல்ல டேஸ்ட். என்ன வாய்தான் நாவல் நிறமாக மாறும். கொலஸ்ரோலைக் குறைக்கும் என்பார்கள்.

 
On July 3, 2009 at 9:02 AM , சினேகிதி said...

வாசுகி :) எங்கட வீட்டுக்கு கிட்ட ஒரு பாட்டி வீட்டில புளிய மரம் நிண்டது..அதை மரம் எண்டு சொல்லேலாது தோப்பு என்டு சொல்லலாம். அவ்வளவு பெரிரிரிரிய மரம். ஒரு பெரிய காணி அதுக்குள் இந்த மரம் பெரியம் உயரமில்ல ஆனால் சரியா சடைச்சு நிக்கும். தொங்காமல் நிண்டுகொண்டே ஆயலாம். ஆனால் அந்தப்பாட்டிக்கு அந்த புளியமரத்தால தான் வருமானம். 2 பேர் அங்க வேலை செய்வினம்...புளியம்பழம் பொறுக்கி விதைநீக்கி பக்கற்ல போட்டுக் கடையளுக்கு குடுக்கிறது.

புளியங்கொட்டை சுட்டுச் சாப்பிட்டிருக்கிறீங்கிளா??? எங்கட வீட்டி தாயம் எல்லாம் விளையாடினதில்ல:(

வல்லிபுரக்கோயிலுக்குப் போற வழியில ஈச்சமரம் நிக்குது அப்ப இறங்கி நிண்டு ஈச்சங்கொப்பு வெட்டி உப்புத்தண்ணி தெளிச்சு பழுக்க வைச்சுச் சாப்பிட்டிருக்கிறம். பிறகு மாமா வெற்றிலைக்கேணிக்குப் படிப்பிக்கப் போட்டு லீவுக்கு வரேக்க நிறை ஈச்சம்பழம் கொண்டு வருவார். அது சிலநேரம் மிஞ்சிப்போய் காய்ஞ்சுபோயிடும்.

கனடாவிலயும் ஒருக்கா பனங்காய்ப் பணியாரம் சாப்பிட்டிருக்கிறன். நல்லாத்தானிருந்தது.

 
On July 3, 2009 at 9:06 AM , சினேகிதி said...

\\பூமரம் எண்டதால நாம் விட்டு வைப்பமா?

அது மட்டுமில்லை.எக்சோரா மரத்தில பொன்வண்டு பிடித்து நெருப்பு பெட்டியில பூட்டி வைக்கிறனாங்கள்.
\\

பூமரம் பிஞ்சு செடி கொடி என்னத்தைத்தான் விட்டு வைச்சிருக்கிறம் :)

பூனைப்பழம் என்டு ஒன்டிருக்குத் தெரியுமா? குட்டி passion fruit மாதிரியிருக்கும்.

எங்கட வீட்டு எக்ஸோராவில ஏன் பொன்வண்டு வரேல்ல....நாங்கள் நெல்லிமரத்திலதான் பொன்வண்டு பிடிச்சு நெருப்பெட்டிக்க வைச்சு ஐயோ அதுகளப்படுத்தின பாடு.

 
On July 3, 2009 at 9:13 AM , சினேகிதி said...

\\ஆகா..நல்ல மீள் இடுகை சிநேகிதி! பின்னூட்டங்கள் செம சுவாரசியம்!
//சோத்துண்ணிப்பழம் , jam பழம்// இதெல்லாம்தான் புரியலை! அப்புறம் பாப்பா செம க்யூட்! பாப்பா கையிலே இருக்கும் பழத்தை நாங்கள் பன்னீர் பழம்னு சொல்லுவோம்! :-)\\

யாம் பழம் தேடிப்பார்த்தன் படம் கிடைக்கேல்ல. அதுக்கு வேற என்னவும் பெயர் இருக்குமெண்டு நினைக்கிறன்.
அது சரியான குட்டி குட்டியா மஞ்சள் சிவப்பு பிங் நிறத்தில இருக்கும். சரியான மென்மையான பழம். மெல்லமாத்தான் ஆயோணும் இல்லாட்டி நசிஞ்சு தண்ணியாயிடும்.

பன்னீர்ப்பழமா:) நல்லாத்தானிருக்கு பெயர்.

 
On July 3, 2009 at 9:22 AM , சினேகிதி said...

\\விளாங்காயையும் விளாம்பழத்தையும் விட்டுவிட்டியள். விளாங்காய் உப்புடன் சாப்பிட்டால் நல்ல ருசி என்ன கொஞ்சம் தொண்டை கட்டிக்கும்\\


அதானே விளாங்காயையும விளாம்பழத்தையும் எப்பிடி மறந்தன். எனக்கு பழத்தை விட காய்தான் விருப்பம். எங்கட காணிக்குள்ளயே ஒரு விளாமரம் நிக்குது. செருப்பால கூட அந்த மரத்துககு எறிஞ்சிருக்கிறன். ஆனா விளா பழமாகமுதல் ஒரு றோஸ் கலர்ல இருக்கிற செங்காய் சூப்பரா இருக்கும்.

\\பசங்க படத்தில் ஒரு வெட்கம் வருதே பாடலில் நம்ம சோப்பிக்கண்ணு ஒரு ரியாக்சன் கொடுப்பார் புளி சாப்பிடும்போது அதுதான் ரியல். \\

என்னது உங்கட சோபிக்கண்ணா?? இப்பிடித்தான் நிறையப்பேர் சொல்லிக்கொண்டு சோபிக்கண்ணுக்கு சாம்பிராணி போட்டுக்கொண்டு திரியினம்.

அந்தப்படத்தில எனக்கு நிறையச் சொல்லுகள் விளங்கேல்ல.

ஆனால் எந்த நேரமும் கொல்லுப்பட்டுக்கொண்டிருக்கிற அப்பா அம்மாமார் கட்டாயம் பார்க்கோணும்.

அதில ஒரு காட்சி வரும் அன்பு உனக்கு மாப்பிளை முறை என்று ஜீவாக்கு சொல்ல ஜீவா தலையில அடிச்சுக்கொண்டு சொல்லுவான் " மாப்பிளையா கறுமம் கறுமம்" என்று. சூப்பர் சீன்.

 
On July 3, 2009 at 9:29 AM , சினேகிதி said...

\\மறக்கமுடியாத பழங்களை ஞாபத்தில் கொண்டு வந்ததிற்கு..

நானும் எக்ஸோறாப்பழம் சாப்பிட்டு இருக்கன்.. நல்லாயிருக்கும்.
\\

வாங்க சுபானு...உங்கட ப்ளாக் பார்த்தன் நல்லா எழுதிறீங்கள். 2007 லயிருந்து எழுதிறீங்கள் ஆனால் எனக்குத் தெரியாமல் போச்சு.

 
On July 3, 2009 at 9:33 AM , சினேகிதி said...

\அந்தநாள் நினைவுகள் நெஞ்சில் மீண்டும் வந்தது.
எக்ஸ்சோறாஇ தண்ணிச்சோத்துப்பழம்இ அன்னமுன்னாஇ இலந்தைப்பழம் எல்லாம் நானும் சுவைத்திருக்கிறேன\\

ஏன் வலசு என்டு பெயர் வைச்சிருக்கிறீங்கள்?? ஒவ்வொரு முறையும் எழுதேக்க ஒருமாதிரியிருக்கு.

தண்ணிச்சோத்துப்பழமா??இதுவும் ஸ்ரேயா சொன்ன சோத்துப்பழமும் ஒன்டா??? இதுக்கும் சோத்துக்கும் ஏதும் தொடர்பிருக்கா?

 
On July 3, 2009 at 9:35 AM , சினேகிதி said...

\\என்னது மீள்பதிவா? ஓஒ இப்ப விளங்குது ஏன் முதலே வாசிச்ச மாதிரிக் கிடந்ததெண்டு!! :) \\


அதான் முதல் வரியிலயே போட்டிருக்கிறனே " எச்சரிக்கை - மீள்பதிவெண்டு" :)

 
On July 3, 2009 at 9:40 AM , சினேகிதி said...

\\என்ன பிள்ளையள் எல்லோரும் இன்னொரு பழத்தை மறந்துபோனியள் அதுதான் சரஸ்வதி பூசைக்காலத்திலை கிடைக்கிற நாவல்ப்பழம். \\

என்ன நக்கலா வந்தியத்தேவன் ? நான் நாவல் பழத்தைப்பற்றி ஒரு வரி எழுதியிருக்கிறன் பதிவில :) அதவிட வாசுகி சொல்லியிருக்கிறா நாவல் பழம் அடிபட்டு சாப்பிடுறதென்டு. ஆனால் சீனி போட்டு சாப்பிடுறதைப் பற்றி கேள்விப்படேல்ல.

 
On July 3, 2009 at 10:36 AM , வந்தியத்தேவன் said...

//சினேகிதி said...

என்ன நக்கலா வந்தியத்தேவன் ? நான் நாவல் பழத்தைப்பற்றி ஒரு வரி எழுதியிருக்கிறன் பதிவில :) அதவிட வாசுகி சொல்லியிருக்கிறா நாவல் பழம் அடிபட்டு சாப்பிடுறதென்டு. ஆனால் சீனி போட்டு சாப்பிடுறதைப் பற்றி கேள்விப்படேல்ல//

உப்பிடித்தான் சோப்பிக்கண்ணுவின் நினைப்பிலை நாவல்பழத்தை மறந்துபோனேன். ஆறுதலாக ஒவ்வொருபழத்தின் படத்தையும் எப்பாடுபட்டாவது போட்டுடுனம்.

 
On July 3, 2009 at 12:52 PM , சினேகிதி said...

\\ஆறுதலாக ஒவ்வொருபழத்தின் படத்தையும் எப்பாடுபட்டாவது போட்டுடுனம்.
\\

படங்கள் தேடி போட்டிருக்கு வந்தியத்தேவன்.

இலந்தைப்பழம் அணிஞ்சில் பழஙக்களின் படங்கள் கிடைக்கவில்லை. இனி நான்தான் ஊருக்குப்போய் எடுத்துக்கnhண்டு வரோணும்.

 
On July 3, 2009 at 4:07 PM , DJ said...

சிநேகிதி,
நீங்கள் படத்தில் போட்டிருக்கின்ற அளவுக்கு நாவற்பழம் இருக்காதென்றே நினைக்கின்றேன்.

 
On July 3, 2009 at 6:47 PM , Anonymous said...

படத்துக்கு நன்றி சினேகிதி

 
On July 3, 2009 at 10:14 PM , சினேகிதி said...

\\சிநேகிதி,
நீங்கள் படத்தில் போட்டிருக்கின்ற அளவுக்கு நாவற்பழம் இருக்காதென்றே நினைக்கின்றேன்.\\

நாவல்பழம் என்று கூகில்ல தேடினால் இது வந்திச்சு...கீழ நாவல்பழம் என்டுதான் போட்டிருக்கு டிஜே. நம்ம ஊரில நாவல்பழம் பெருசா இல்லையெண்டதால வேற எங்கயுமே அது பெரிசா வளராதா :)

http://images.google.ca/images?q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D&oe=utf-8&rls=org.mozilla:en-GB:official&client=firefox-a&um=1&ie=UTF-8&sa=N&hl=en&tab=wi

சின்ன அம்மணி ஒருமாதிரி ஆம்பரலங்காய் படம் தேடி எடுத்திட்டன்:)

 
On July 4, 2009 at 6:35 AM , தமிழன்-கறுப்பி... said...

நாங்கள் அதிகம் சாப்பிடுறது விளாங்காய்தான், அடுத்தது மாங்காய்..

சினேகிதி கடும் குழப்படி போல அந்த நாளைல. ;)

 
On July 4, 2009 at 7:48 AM , DJ said...

/நம்ம ஊரில நாவல்பழம் பெருசா இல்லையெண்டதால வேற எங்கயுமே அது பெரிசா வளராதா/

வளருந்தான்.
ஆனால் இது குண்டுக் கத்தரிக்காய் சைஸிலெல்லோ இருக்கு :-(.

 
On July 4, 2009 at 8:05 AM , சினேகிதி said...

\\
நம்ம ஊரில நாவல்பழம் பெருசா இல்லையெண்டதால வேற எங்கயுமே அது பெரிசா வளராதா/

வளருந்தான்.
ஆனால் இது குண்டுக் கத்தரிக்காய் சைஸிலெல்லோ இருக்கு :-(.\\


நாவல் பழம் எண்டு தேடின லிங் போட்டனான் ....அதில இருக்கிற மற்றைய படங்களும் இப்பிடித்தான் பெருசா இருக்கு. நான் நினைக்கிறன் நாங்கள் சாப்பிட்ட நாவல்பழம் ஆக்கள் காட்டில புடுங்கிக்கொண்டு வந்து விக்கிறதாக்கும்.....இவை வியாபாரத்துக்காகவே நல்லாப்பசளை போட்டு வளர்க்கிறதாக்கும் :)

 
On July 4, 2009 at 8:09 AM , சினேகிதி said...

\\நாங்கள் அதிகம் சாப்பிடுறது விளாங்காய்தான்இ அடுத்தது மாங்காய்..

சினேகிதி கடும் குழப்படி போல அந்த நாளைல. ;)\\


எங்கட பள்ளிக்கூடத்திலயும் ஒரு விளாங்காய் மரம் நிண்டது பிறகு பின்னேரப் பள்ளிக்கூடம் தொடங்க அந்த மரத்தை தறிச்சிட்டினம் :(.

2பேர் தொடர்ந்து குழப்படி குழப்படி என்டு அடுத்த பதிவுக்கு அடி எடுத்து தாறீங்கள்:)

 
On July 4, 2009 at 8:17 AM , தமிழன்-கறுப்பி... said...

//வேலியோரம் நிற செடியில இருந்து எடுக்கிற சோத்துத்தண்ணிப் பழந்தான் எனக்குத் தெரியும்!! //

அதை நாங்கள் சோத்துப்பழம் எண்டு சொல்லுவம் ஷ்ரேயா..

சோத்துப்பழம் எண்டுறது தும்பு தும்பு மாதிரியான கிளைகள் இருக்கிற செடியில இருக்கிறதெண்டு நினைக்கிறன்.

அதெல்லாம் காணக்கிடைக்கிறல்ல இப்ப...

 
On July 4, 2009 at 8:23 AM , தமிழன்-கறுப்பி... said...

DJ,

இந்த நாவல் பழச்சண்டை இன்னும் முடியல்லயோ, எங்கடை ஊரில இருந்து இந்தப்பக்கம் வறணி அந்தப்பக்கம் நாகர் கோயில் எண்டு நாவல் பழத்துக்கெண்டே சைக்கிளோடின காலங்களும் இருந்திச்சுது...

அது சரி கனடாவில நாவல் பழம் இருக்குதோ ;)

குழப்படி காரரை குழப்படி எண்டாமல் பின்ன என்னண்டு சொல்லுறது :)

 
On July 4, 2009 at 12:28 PM , சினேகிதி said...

\\அது சரி கனடாவில நாவல் பழம் இருக்குதோ ;)
\\
சோத்துப்பழம் எண்டுறது தும்பு தும்பு மாதிரியான கிளைகள் இருக்கிற செடியில இருக்கிறதெண்டு நினைக்கிறன்.\\

இந்தச்சோத்துப்பழம் பெரிய கரைச்சலா இருக்கு. அது எப்பிடியிருக்கும்?? ஒருவேளை எங்கட ஊரிலயும் எங்கட கண்ணுக்குத் தெரியாமல் இருந்திச்சோ தெரியேல்ல.

ஓம் கனடாவில இருக்கு நாவல் பழம்....நடுக இல்ல எப்பவாவது நொந்து நசிஞ்சு போய் வரும். நான் இனி அதை வேண்டிக்கொண்டு போய்த்தான் டிஜேக்கு proof பண்ணோணும்

 
On July 4, 2009 at 9:29 PM , வி. ஜெ. சந்திரன் said...

//சிநேகிதி,
நீங்கள் படத்தில் போட்டிருக்கின்ற அளவுக்கு நாவற்பழம் இருக்காதென்றே நினைக்கின்றேன்//

http://adupankarai.kamalascorner.com/2008/06/blog-post_975.html

இதிலை இருக்கிற அளவிலை நாவல் பழங்கள் எங்கட காணியளிலை நிக்கிற மரங்களில் இருந்து பிடுங்கி சாப்பிட்டிருக்கிறன்.

எங்கட வளவுகளிலை 15-20 நாவல் மரங்கள் நிண்டது. அதிலை 2-3 மரத்திலை உப்பிடி பெரிய நாவல் பழம் கிடைக்கும்.

இப்ப எத்தினை மரம் மிஞ்சி இருக்கு எண்டு தெரியா.

 
On July 5, 2009 at 11:03 AM , சினேகிதி said...

\\இதிலை இருக்கிற அளவிலை நாவல் பழங்கள் எங்கட காணியளிலை நிக்கிற மரங்களில் இருந்து பிடுங்கி சாப்பிட்டிருக்கிறன்.

எங்கட வளவுகளிலை 15-20 நாவல் மரங்கள் நிண்டது. அதிலை 2-3 மரத்திலை உப்பிடி பெரிய நாவல் பழம் கிடைக்கும்.\\

அப்பாடா இப்பத்தான் நிம்மதி :)

 
On July 6, 2009 at 6:01 AM , Vasanthan said...

படத்திலயிருக்கிற முதலாவது குவியலுக்குக் கிட்டவாக கமரா இருப்பதால் இப்படிக் குண்டுக் கத்தரிக்காய் அளவுக்குத் தெரிகிறது என்று நினைக்கிறேன். மற்றும்படி உண்மையிலேயே அந்த அளவில் இருந்தால் அவை நாவற்பழங்களல்ல.

 
On July 6, 2009 at 6:15 AM , Vasanthan said...

பிள்ளையொண்டு ஜம்புக்காய் தின்னுற படத்தில எனக்கு நன்றி சொல்லியிருக்கிறியள். அது நானெடுத்த படமில்லை; என் 'தோழன்' ஒருவன் எடுத்தபடம்.

அதுசரி, அந்தப்படத்துக்கு நன்றி சொல்லிற இடத்தில அது என்ன ஒரு நகைப்பு?

அன்னமுண்ணா (எங்கட உச்சரிப்பில 'அன்ன'தான்) பற்றி முந்தியொருக்கா சந்திரவதனாவும் நானும் அதை எப்பிடி உச்சரிக்கிறதெண்டு கதைச்ச ஞாபகமிருக்கு. ஏன் அந்தக் கதை வந்ததெண்டு ஞாபகமில்லை. சினேகிதி போட்ட படங்களுக்குள்ள அதிகம் பிடிச்ச பழமெண்டா அது அன்னமுண்ணா தான். பிறகு விளாம்பழம். விளாத்தியில பழத்தைவிடவும் காய்தான் மிகப்பிடிக்கும். விளாங்காயச் சம்பல் போட்டா அந்தமாதிரி இருக்கும்.

விளாம்பழம் பிசைஞ்சா (கோதுடைச்சு, பழச்சதைகளை ஒன்றாக்கி சீனியும் தேங்காயப்பாலும் விட்டுக் குழைப்பது) பிறகு உடைச்ச விளாங்கோதுக்குள்ளயே போட்டுத்தான் சாப்பிடுறது. அதுவொரு தனி உருசி. முடிஞ்சபிறகும் பெருவிரல் நகத்தால கோதை வழிச்சு முடிப்போம்.

=====================
எனது ஞாபகத்தின்படி 'குதியன் குத்திறது' எண்டு பெண்குழந்தைகளின் துடியாட்டத்துக்குத்தான் அதிகம் சொல்லப்படுவதாக நான் நினைக்கிறேன். வேறு யாரும் இதைக் கவனித்திருக்கிறீர்களா?

 
On July 6, 2009 at 11:59 AM , சினேகிதி said...

\\படத்திலயிருக்கிற முதலாவது குவியலுக்குக் கிட்டவாக கமரா இருப்பதால் இப்படிக் குண்டுக் கத்தரிக்காய் அளவுக்குத் தெரிகிறது என்று நினைக்கிறேன். மற்றும்படி உண்மையிலேயே அந்த அளவில் இருந்தால் அவை நாவற்பழங்களல்ல.\\

அதெப்பிடி வசந்தனண்ணா சத்தியம் பண்றீங்கிள்??? நாவல் பழம் இந்த சைசிலதான் இருக்கோணும் என்டு ஆரும் எழதி வைச்சிருக்கினமா? இதுக்கு மேல பெருசா வராதெண்டு உங்களுக்கும் டிஜேக்கும் அப்பிடி உறுதியாய் தெரியும்?

 
On July 6, 2009 at 12:01 PM , சினேகிதி said...

\\பிள்ளையொண்டு ஜம்புக்காய் தின்னுற படத்தில எனக்கு நன்றி சொல்லியிருக்கிறியள். அது நானெடுத்த படமில்லை; என் 'தோழன்' ஒருவன் எடுத்தபடம்.

அதுசரி, அந்தப்படத்துக்கு நன்றி சொல்லிற இடத்தில அது என்ன ஒரு நகைப்பு?
\\

உபயம் என்டால் ஆரும் தாங்களாக் குடுக்கிறது...இது நான் நீங்கள் பின்னோட்டத்தில போட்ட படத்தை எடுத்துப்பயன்படுத்தினான் உங்களிட்ட கேக்காமல் அதான் அந்தச் சிரிப்பு.

 
On July 6, 2009 at 12:05 PM , சினேகிதி said...

\\விளாங்காயச் சம்பல் போட்டா அந்தமாதிரி இருக்கும்.\\

விளாங்காயில சம்பலா?? நாங்கள் ஒருநாளும் அப்பிடிச் செய்யேல்ல ...நெல்லிக்காய் ஏன் பச்சை அப்பிள் கூட வெட்டி உப்புத்தூள் போட்டுச் சாப்பிட்டன் ஆனால் விளாங்காய் அப்பிடிச் சாப்பிடேல்ல.



\\விளாம்பழம் பிசைஞ்சா (கோதுடைச்சு, பழச்சதைகளை ஒன்றாக்கி சீனியும் தேங்காயப்பாலும் விட்டுக் குழைப்பது) பிறகு உடைச்ச விளாங்கோதுக்குள்ளயே போட்டுத்தான் சாப்பிடுறது. அதுவொரு தனி உருசி. முடிஞ்சபிறகும் பெருவிரல் நகத்தால கோதை வழிச்சு முடிப்போம்.\\

எங்கட வீட்டுக்குப்பக்கத்தில டொக்டர் வீடு. அவர் கஸ்டப்பட்ட ஆக்களிட்ட காசு வாங்க மாட்டார் அதால சில பேர் விளாம்பழம் மங்குஸ்தான் பழம் எண்டெல்லாம் கொண்டுவந்து குடுப்பினம் அப்ப இரவு நேரத்தில டாக்குத்தர் மாமாவே விளாம்பழம் குழைச்சுத்தருவார்...அந்தமாதிரியிருக்கும்.

 
On July 6, 2009 at 2:56 PM , வி. ஜெ. சந்திரன் said...

//விளாங்காயில சம்பலா?? நாங்கள் ஒருநாளும் அப்பிடிச் செய்யேல்ல ...நெல்லிக்காய் ஏன் பச்சை அப்பிள் கூட வெட்டி உப்புத்தூள் போட்டுச் சாப்பிட்டன் ஆனால் விளாங்காய் அப்பிடிச் சாப்பிடேல்ல.//

விளாங்காயில் சம்பல் போடுற.

விளாங்காயை பாதியா உடைச்சு தேங்காய் திருவிற மாதிரி திருவி எடுத்து பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, தேங்காய்பூ சேர்த்து பிரட்டினா விளாங்காய் சம்பல் ரெடி.

வசந்தன் விளாங்காய் சம்பலை சொல்லி வாயூற வச்சிட்டீர். இஞ்சை மருந்துக்கு கூட விளாம்பழம், விளாங்காய் கிடைக்காது :(

 
On July 6, 2009 at 3:04 PM , வி. ஜெ. சந்திரன் said...

//அதெப்பிடி வசந்தனண்ணா சத்தியம் பண்றீங்கிள்??? நாவல் பழம் இந்த சைசிலதான் இருக்கோணும் என்டு ஆரும் எழதி வைச்சிருக்கினமா? இதுக்கு மேல பெருசா வராதெண்டு உங்களுக்கும் டிஜேக்கும் அப்பிடி உறுதியாய் தெரியும்//

நாவல் குண்டு கத்தரிக்காய் அளவிலை இருக்காது. வசந்தன் சொன்ன மாதிரி கிட்டவ படம் எடுத்த படியா அப்பிடி தெரியுது எண்டு நினைக்கிறன். நான் இணைப்பு குடுத்த வலைப்பதிவிலை இருக்கிற படதிலை இருக்கிற அளவிலை நாவல் பழம் இருக்கெண்டு சொன்னானே தவிர குண்டு கத்தரிக்காய் அளவிலை இருக்கும் எண்டு சொல்ல இல்லை :).

 
On July 6, 2009 at 8:07 PM , சினேகிதி said...

\\விளாங்காயில் சம்பல் போடுற.

விளாங்காயை பாதியா உடைச்சு தேங்காய் திருவிற மாதிரி திருவி எடுத்து பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, தேங்காய்பூ சேர்த்து பிரட்டினா விளாங்காய் சம்பல் ரெடி.

வசந்தன் விளாங்காய் சம்பலை சொல்லி வாயூற வச்சிட்டீர். இஞ்சை மருந்துக்கு கூட விளாம்பழம், விளாங்காய் கிடைக்காது :(\\

வசந்தனண்ணா உண்மையிலயே பொம்பிளைப்பிள்ளையள்தான் குதியன் குத்துறதெண்டால் ஏன் நான் விளாங்காய்ச்சம்பல் சாப்பிடேல்ல ஆனால் நீங்கள் 2 பேரும் சாப்பிட்டிருக்கிறீங்கள்?

 
On July 6, 2009 at 8:09 PM , சினேகிதி said...

\\நாவல் குண்டு கத்தரிக்காய் அளவிலை இருக்காது. வசந்தன் சொன்ன மாதிரி கிட்டவ படம் எடுத்த படியா அப்பிடி தெரியுது எண்டு நினைக்கிறன். நான் இணைப்பு குடுத்த வலைப்பதிவிலை இருக்கிற படதிலை இருக்கிற அளவிலை நாவல் பழம் இருக்கெண்டு சொன்னானே தவிர குண்டு கத்தரிக்காய் அளவிலை இருக்கும் எண்டு சொல்ல இல்லை :).\\

நான் நாளைக்குத்தான் நாவல் கண்டு வேண்டப்போறன். 5 வருசத்தால இந்த வலைப்பதிவில குண்டுக்கத்தரிக்காய் அளவில நாவல் பழம் வளரும் எண்டு proof பண்றன் உங்கள் 3 பேருக்கும்:)

 
On July 8, 2009 at 6:01 AM , வி. ஜெ. சந்திரன் said...

//நான் நாளைக்குத்தான் நாவல் கண்டு வேண்டப்போறன். 5 வருசத்தால இந்த வலைப்பதிவில குண்டுக்கத்தரிக்காய் அளவில நாவல் பழம் வளரும் எண்டு proof பண்றன் உங்கள் 3 பேருக்கும்//

நாவல் கண்டு ரொரோண்டோவில் விக்குதோ?

 
On July 15, 2009 at 12:28 PM , M.Rishan Shareef said...

நல்லா இருங்கோ சினேகிதி..வாயூற வாயூற வாசித்தேன் :)

நான் நாவல்பழம் மட்டும் இதுவரை பார்த்ததும் இல்லை..சாப்பிட்டதும் இல்லை.

ஆம்பரலங்காயை எங்களூரில் ஜேம் செய்யவும் கறிக்கும் பயன்படுத்துவோம்.

எக்ஸோறாப் பழமும் சாப்பிட்டதில்லை. மசுக்குட்டிப்பழத்தை எங்களூரில் எறும்புக் காய் என்கிறோம்..
வெரலிக்காயை அவித்து தோல் வெடிக்குபொழுது மசாலா கலந்து சாப்பிட்டுப் பாருங்கோ..அருமை !

 
On July 15, 2009 at 11:03 PM , வசந்தன்(Vasanthan) said...

அதது அப்பிடித்தான் இருக்கும். ஓர் அரவு மாறியிருக்கிறதால பாலப்பழம் பலாப்பழம் மாதிரி வராது. நாவற்பழமும் நாவற்பழ அளவிலதான் இருக்க வேணும். இல்லாட்டி அதுக்கு வேற ஏதேனும் பேர்தான் வைக்க வேணும்.

உரம்போட்டு, மருந்தடிச்சுப் பெருசாக்கலாம் எண்டாலும் அதுக்கும் ஓர் அளவு இருக்குத்தானே? அப்பிடிப் பெருத்த நாவற்பழமானாற்கூட அதுக்கெண்டு சிறப்பான அடைச்சொல்லொண்டு முன்னுக்கு வரவேணும்; சின்ன வெங்காயம், வேதாளங்காய், பம்பாய் வெங்காயம் எண்டு வெங்காயங்களையும், பச்சை மிளகாய், கறிமிளகாய், பம்பாய் மிளகாய் எண்டு மிளகாய்களையும் தோடை, கொடித்தோடை, காட்டுத்தோடை, நாரத்தங்காய் எண்டும் பதம் பிரிக்கிறதைப் போல.

நீர் கண்டு வேண்டும், மாடு வேண்டும், பிரச்சனையில்லை. ஆனால் அஞ்சு வருசத்தில அது காய்க்குமெண்டும், அதுவும் குண்டுக்கத்தரிக்காய் அளவுக்குக் காய்க்குமெண்டும் என்ன துணிவில சொல்லிறீர்?

 
On July 15, 2009 at 11:06 PM , வசந்தன்(Vasanthan) said...

சந்திரன்,

விளாத்திச் சம்பலை விளக்கினதுக்கு நன்றி.

ஆனால் நாங்கள் பச்சை மிளகாய் போடுறேல. வறுத்த மிளகாய்த்தூள்தான் (தூள் மணம் வராமலிருக்கத்தான் வறுக்கிறது).

அதுகூட முத்திய விளாங்காய்ச் சம்பல் தனிருசி, பிஞ்சு விளாங்காய்ச் சம்பல் தனிருசி.
ம்....
எழுதவே வாய் என்னவோ செய்யுது.

 
On July 20, 2009 at 11:57 AM , சினேகிதி said...

\\நல்லா இருங்கோ சினேகிதி..வாயூற வாயூற வாசித்தேன் :)\\

இதென்ன சாபம் மாதிரியிருக்கு:)

\\நான் நாவல்பழம் மட்டும் இதுவரை பார்த்ததும் இல்லை..சாப்பிட்டதும் இல்லை.\\

ம் நானும் மாத்தளையில் நாவல் பழம் சாப்பிட்டதில்லை. கொழும்பில் கிடைக்குமென்டு நினைக்கிறேன்.


\\ஆம்பரலங்காயை எங்களூரில் ஜேம் செய்யவும் கறிக்கும் பயன்படுத்துவோம்.\\

நாங்களும் ஆம்பரலங்காய் கறிக்குப் பயன்படுத்துவோம். ஆனால் ஜாம் செய்ததில்லை ஒருநாளும்.

நான் இங்கே குறிப்பிட மறந்தது பட்டுப்புளியைப் பற்றி:)


\\எக்ஸோறாப் பழமும் சாப்பிட்டதில்லை. மசுக்குட்டிப்பழத்தை எங்களூரில் எறும்புக் காய் என்கிறோம்..
வெரலிக்காயை அவித்து தோல் வெடிக்குபொழுது மசாலா கலந்து சாப்பிட்டுப் பாருங்கோ..அருமை !

\\
வெரலிக்காய் அவித்து மசாலா தடவி விற்பார்கள்..சாப்பிட்டிருக்கிறேன்.

 
On July 20, 2009 at 11:58 AM , சினேகிதி said...

\\நீர் கண்டு வேண்டும், மாடு வேண்டும், பிரச்சனையில்லை. ஆனால் அஞ்சு வருசத்தில அது காய்க்குமெண்டும், அதுவும் குண்டுக்கத்தரிக்காய் அளவுக்குக் காய்க்குமெண்டும் என்ன துணிவில சொல்லிறீர்?
\\

திரும்ப வந்து வாசிக்க மாட்டிங்கிள் என்ட துணிவுதான்.

 
On July 23, 2009 at 9:45 PM , வி. ஜெ. சந்திரன் said...

http://viriyumsirakukal.blogspot.com/2009/07/blog-post_23.html

 
On July 25, 2009 at 8:44 AM , சினேகிதி said...

நன்றி விஜே.

எக்சோறாப்படம் கேட்டாக்கள் போய்ப் பாருங்கோ.