Author: வந்தியத்தேவன்
•12:30 AM
இப்பத்தான் எங்கட வேலணை வலசுண்ட கூழ் குடித்துவிட்டு உங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அப்படியே போற வழியில் இடியப்பமும் சொதியும் சாப்பிட்டுக்கொண்டுபோங்கோ.

பொதுவாக இடியப்பத்தை காய்ச்சல்காரர்டை சாப்பாடு என்பார்கள். ஏனென்றால் பெரும்பாலும் காய்ச்சல் நேரம் இடியப்பம்தான் சாப்பிடுவது. இதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு தோசை இட்டலிபோல இடியப்பம் அவ்வளவு கடினமான (ஹார்ட்) சாப்பாடல்ல. கொஞ்சம் லைட்டான சாப்பாடு. இடியப்பம் உடனடியாக சமிச்சும்போம் இதனாலும் பெரும்பாலானவர்கள் வெளியிடத்திற்க்குச் சென்றால் இடியப்பம் சாப்பிடுவார்கள்.

எங்கட நாட்டிலையே இடியப்பம் சொதி தேங்காய்ப்பூச் சம்பல் உழுந்துவடை கூட்டணி சரியான பேமஸ். இலங்கையின் சகலபகுதியிலும் கிடைக்கும் சாப்பாடுகளில் இதுவும் ஒன்று. சிங்களப்பகுதியில் கூட இடியாப்பையும் கிரி ஒதியும் என அழைப்பார்கள்.

சொதி என்பது தேங்காய்ப்பாலில் செய்யப்படும் ஒரு தண்ணி உணவு. சரியான விளக்கம் தெரியவில்லை. சைவச் சொதி என்றால் வெங்காயம், கறிவேப்பிலை, சில இடங்களில் தக்காளி எல்லாம் போடுவார்கள். மச்சச் சொதி என்றால் மீன் சொதி பிரபலம். கடைகளில் கூடுதலாக சைவச் சொதிதான் கொடுப்பார்கள்.

தமிழகத்தில் சட்னி எனப்படும் உணவுதான் நம்ம நாட்டில் சம்பல் என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றது. இதிலும் அரைச்ச சம்பல் இடிச்ச சம்பல் என வகைகள் உண்டு. அத்துடன் வெள்ளைச் சம்பல் சிவப்புச் சம்பல் என கலரைவைத்துக்கூட சம்பல் உண்டு. வெள்ளைச் சம்பல் தேங்காய்ப்பூவுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைப்பது. சிவப்புச் சம்பல் தேங்காய்ப்பூவுடன் சிவத்த் செத்தல் மிளகாய் போட்டு அரைப்பது. சம்பல் பற்றிய மேலதிக விபரங்களை சமையல் ஆச்சிகள் தருவார்கள். எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்.

வடை என்றால் உடனே ஞாபகத்திற்க்கு வருவது யாழ்ப்பாணம் மலாயன் கபே வடையும் கொழும்பு சரஸ்வதி லொட்ஜ் வடையும் தான். ஒருமுறை மாத்தளையில் ஒரு சைவக்கடையில் சுடச்சுட பருப்பு வடை சாப்பிட்டேன் நல்ல உருசியும் மலிவும். இப்போ ஒரு வடை 30 ரூபாவிற்க்கு விற்கிறார்கள். திருகோணமலையில் ஐயர் கடை தோசை நல்ல பேமஸ்.

நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் சைக்கிளில் சென்ற காலத்தில் வல்லை கழிந்ததும் ஆவரங்காலிலோ கொஞ்சம் சைக்கிள் ஓடத் தெம்பிருந்தால் கோப்பாயிலோ ஒரு கடையிலை இறங்கில் காலையிலை என்றால் இடியப்பம் சொதி வடையும் பின்னேரத்தில் என்றால் வடையும் பிளேன் டீயும் குடித்துவிட்டு நல்ல உசாராக பயணம் செய்வது.

யாழ்ப்பாணம் ட‌வுணில்(டவுணா? ரவுணா?)சைவம் என்றால் மலேயன் கபேயிலும் மச்சம் என்றால் வேறுகடையிலும் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அபப்டியே லிங்கத்தில் ஒரு ஐஸ்கிறீமையும் குடித்துவிட்டு ஒரு பீடா சப்பும் இன்பம் மீண்டும் எப்போ வரும்.
This entry was posted on 12:30 AM and is filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

24 comments:

On June 25, 2009 at 1:33 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

இடியப்பம்-சொதி நல்லாத்தான் இருக்கும்.. ஆனா என்ன.. சாப்பிட்டுக் ககைகழுவ திரும்பப் பசிச்சிடும்! :O))

புட்டு இருக்கே.. அது கொங்கிறீற் மாதிரி!!

 
On June 25, 2009 at 1:49 AM , சந்தனமுல்லை said...

ஆகா..நல்லா சொல்லியிருக்கீங்க..ஷ்ரேயா மேடம் என்ன சொல்றாங்க..//அது கொங்கிறீற் மாதிரி!!// ??

 
On June 25, 2009 at 2:08 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//அது கொங்கிறீற் மாதிரி!!//

கொங்கிறீற் = concrete. சாப்பிட்டா ரொம்ப நேரத்துக்குப் பசிக்காது.

--
ஷ்ரேயான்னு கூப்பிட்டாப் போதும் ஆச்சி.. 'மேடம்'லாம் வேணாம். :O))

 
On June 25, 2009 at 2:12 AM , தமிழன்-கறுப்பி... said...

நடக்கட்டும் நடக்கட்டும்...

 
On June 25, 2009 at 2:25 AM , தமிழன்-கறுப்பி... said...

யாழ்ப்பாணம் ரவுணில எது தெரியுதோ இல்லையோ எல்லோருக்கும் மலாயன் கபே தெரிஞ்சிருக்கும்.
அந்த நினைவுகள்,
அட வேண்டாம் வந்தியத்தேவன்..!

 
On June 25, 2009 at 2:31 AM , சந்தனமுல்லை said...

//ஷ்ரேயான்னு கூப்பிட்டாப் போதும் ஆச்சி.. 'மேடம்'லாம் வேணாம். :O)//

ஹிஹி..ஒரு பில்டப்-க்குதான்...கண்டுக்காதீங்க! :-)

 
On June 25, 2009 at 3:31 AM , Anonymous said...

பெரிய பங்கு...கலக்கல் பதிவு!

 
On June 25, 2009 at 4:26 AM , வாசுகி said...

என்ன எல்லாரும் சாப்பிடுறதிலயே கண்ணாய் இருக்கிறியள்.

பலர் இடியப்பத்தை விட புட்டு தான் விருப்பம் எண்டு சொல்லினம்.முக்கியமா பெடியளுக்கு.
புட்டும் பொரியலும் வேணும் எண்டு ஒற்றைக்காலில நிற்பினம்.
அதுவும் குழல் புட்டு வேணுமாம். சும்மா குழல் இல்லை மூங்கில் குழல்.
மூங்கில் குழலுக்கு எங்க போறது. இருந்தாலும் அந்த புட்டு நல்ல உரிசை தானே.

வெள்ளவத்தை அக்கா கடையில புட்டும் பொரியலும் சாப்பிட வரிசையில நிற்பினம்.
நானும் நிண்டிருக்கிறன்.

இடியப்பமும் மீன் சொதியும் நல்லாத்தான் இருக்கும் .
வெள்ளவத்தையிலயும் ஒரு மலாயன் கபே இருக்கு எண்டினம் உண்மையோ?

 
On June 25, 2009 at 4:52 AM , வந்தியத்தேவன் said...

//மழை` ஷ்ரேயா(Shreya) said...
இடியப்பம்-சொதி நல்லாத்தான் இருக்கும்.. ஆனா என்ன.. சாப்பிட்டுக் ககைகழுவ திரும்பப் பசிச்சிடும்! :O))

புட்டு இருக்கே.. அது கொங்கிறீற் மாதிரி!//
உண்மைதான் இடியப்பம் உடனே சமிச்சுடும் அதனால் திரும்ப பசிக்கும். புட்டு கொங்கிறீற் மாதிரி அல்ல அதன் மறுபெயரே கொங்கிறீற் தான். என்ன கடைகளில பெரிசா கிடைக்கிறதில்லை. கொழும்பிலை வானிலை வைச்சு விற்கிறார்கள்.

 
On June 25, 2009 at 4:58 AM , வந்தியத்தேவன் said...

//தமிழன்-கறுப்பி... said...
அட வேண்டாம் வந்தியத்தேவன்.//

தமிழன்-கறுப்பி அந்த நினைவுகள் எப்படியும் மனதை வருடும் தான். உங்கள் நினைவுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு மனப்பாரத்தைக் குறையுங்கள்.

 
On June 25, 2009 at 5:00 AM , வந்தியத்தேவன் said...

// ♥ தூயா ♥ Thooya ♥ said...
பெரிய பங்கு...கலக்கல் பதிவு //

பங்கு சும்மா பின்னூட்டம் இடாமல் பதிவையும் தொடங்கவும்.

 
On June 25, 2009 at 5:03 AM , வந்தியத்தேவன் said...

//வாசுகி said...
வெள்ளவத்தையிலயும் ஒரு மலாயன் கபே இருக்கு எண்டினம் உண்மையோ//

முந்தி இருந்தது ராமகிருஷ்ணா உணவகத்திற்க்கு முன்னால் இருந்த ஒரு சின்னக்கடை யாழ்ப்பாணம் மலாயன் கபேற்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். இவர்களின் மத்தியானச் சாப்பாடு வீட்டுச்சாப்பாடுபோல் நல்லாயிருக்கும். கொழும்பில் அறைகளில் நிண்ட நிற்கின்ற எத்தனையோ இளைஞர்களின் அந்த நாளைய ஒன்று கூடும் இடம்.

புட்டும் பொரியலும் நல்லதொரு கூட்டணி. குழல் புட்டென்றால் மாம்பழம் தான் பெஸ்ட்.

 
On June 25, 2009 at 5:39 AM , யசோதா.பத்மநாதன் said...

சொதிக்குப் பச்சை மிளகாயும் பாதியாக் கீறிப் போட வேணும் ராசா.இல்லாட்டிக்குச் சொதி உறைப்பில்லாமல் எல்லே போடும்!

இடிச்ச சம்பல் எண்டிறது கொஞ்சம் வித்தியாசம் மோனை.அதுக்குச் செத்தல் மிளகாயப் பொரிச்செடுக்க வேணும். இத உரலுல இடிக்க வேணும்.கடசியாப் பழப்புளி விட வேணும்.பிறகு தாளிதமும் போட்டா கருவேப்பமிலை வாசத்தோட நல்லா இருக்கும். தோசைக்கு இது நல்லாச் சேரும்.

சட்னி எண்டுறது கொஞ்சம் வித்தியாசம் ராசா. இது கொஞ்சம் தண்ணிப் பதமா இருக்கும். இட்லிக்குத் தான் இது வலு தோது கண்டியோ!

உதுகள் எல்லாம் தெரிஞ்சிருக்க வேணும் ராசா.பிறகு உனக்கு வாற பொம்பிளப் பிள்ளைக்கு உதவுமெல்லே?:)

 
On June 25, 2009 at 5:57 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
உதுகள் எல்லாம் தெரிஞ்சிருக்க வேணும் ராசா.பிறகு உனக்கு வாற பொம்பிளப் பிள்ளைக்கு உதவுமெல்லே?:)//

ஆச்சி கட்டாயம் பொடியன்களும் சமைக்கத் தெரிந்திருக்கவேணுமோ. எனக்கு ஒரன்றும் தெரியாது. உந்தச் சம்பல் செய்முறைபற்றி எழுதினால் புண்ணியம் கிடைக்கும்.சிலவேளை மனிசி கோவிச்சுக்கொண்டு போனால் பாணுடன் சாப்பிட உதவும்.

 
On June 25, 2009 at 6:01 AM , கானா பிரபா said...

முன்னால மாஸ்டர் படிப்பிச்சுக் கொண்டிருக்கேக்க பின் வாங்கில் இருந்து கூட்டாளிமார் குசுகுசுப்பதையும் சொதி வைக்கிறது என்பினம் (எல்லாம் ஒரு அனுபவம் தான் :)

 
On June 25, 2009 at 6:03 AM , கானா பிரபா said...

யாழ்ப்பாணம் ட‌வுணில்(டவுணா? ரவுணா?)//

ரவுண் எண்டு தானே பேசுவோம்

//மலேயன் கபேயிலும்//

அது மலாயன் கபே. இடியப்ப ஆசையைக் கிளப்பிய உங்களை ;)

 
On June 25, 2009 at 6:04 AM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
முன்னால மாஸ்டர் படிப்பிச்சுக் கொண்டிருக்கேக்க பின் வாங்கில் இருந்து கூட்டாளிமார் குசுகுசுப்பதையும் சொதி வைக்கிறது என்பினம் (எல்லாம் ஒரு அனுபவம் தான் :)//

சொதி வைச்சதால் தான் இப்படி இருக்கிறமோ ஹிஹிஹி சும்மா. நீங்கள் எல்லாம் பின்னாலிருந்துதான் சொதிவைப்பீர்கள் நாங்க முன்னாள் இருந்தே சொதி என்ன குழம்பே வைப்போம்.

 
On June 25, 2009 at 6:06 AM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
யாழ்ப்பாணம் ட‌வுணில்(டவுணா? ரவுணா?)//

ரவுண் எண்டு தானே பேசுவோம்//

நன்றிகள் பிரபா

எனக்கு சின்ன டவுட் ரவுண் தான் சரி சிலபுத்தகங்களில் டவுண் என்று படித்து குழம்பிப்போனேன். இடியப்ப ஆசையில் மலாயன் கபே ஸ்பெலிங் மிஸ்ரேக்.

 
On June 25, 2009 at 7:03 AM , DJ said...

ச‌ம்ப‌லும் ச‌ட்னியும் வேறுவித‌மான‌வை அல்ல‌வா? ம‌ணிமேக‌லா குறிப்பிட்ட‌மாதிரி ச‌ம்ப‌ல் இடிய‌ப்ப‌ம், தோசை போன்ற‌வ‌ற்றோடு அதிக‌ம் சேர்த்துச் சாப்பிட‌வும், இட்ட‌லி ம‌ற்றும் வ‌டைக‌ளோடு சேர்த்துச் சாப்பிட‌ச் ச‌ட்னியும் என‌க்குப் பிடிக்கின்ற‌ கால‌ம் முன்பிருந்த‌து. இப்போது அதிக‌ உறைப்பு ஒத்துக்கொள்ளாத‌தால் தூர‌த்தில் வைத்து இர‌சிப்போடு எல்லாமே முடிந்துவிடும் :-).
...........

வ‌ந்திய‌த்தேவ‌ன் குறிப்பிட்ட‌மாதிரி கொழும்பிலும் (வெள்ள‌வ‌த்தையில்) ஒரு ம‌லாய‌ன் கஃபே இருந்த‌து. என‌து ந‌ண்ப‌ரொவ‌னின் த‌க‌ப்ப‌னார்தான் ந‌ட‌த்திக்கொண்டிருந்தார். 2004 அள‌வில் ந‌ண்ப‌னை அங்கே ச‌ந்தித்து உரையாடியதும் நினைவினிலுண்டு. பின்னாளில் ந‌ண்ப‌னின் சித்த‌ப்பா முறையான‌ ஒருவ‌ர் கொழும்பில் சுட‌ப்ப‌ட்டுக்கொல்ல‌ப்ப‌ட‌ ம‌லேய‌ன் க‌டையை விற்றுவிட்டோ (அல்ல‌து மூடிவிட்டோ) ந‌ண்ப‌னும் அவ‌ரின் குடும்ப‌மும் வெளிநாடொன்றுக்குச் சென்றுவிட்ட‌தாக‌ அறிந்தேன்.

 
On June 25, 2009 at 7:12 AM , யசோதா.பத்மநாதன் said...

பின்ன என்ன ராசா? அந்தக் காலம் போலயே?பொம்பிளயள் எல்லாம் இப்ப ஆணுக்குச் சமனா இருக்கேக்கை நீங்களும் அவைக்குச் சமனா இருக்க வேண்டாமே? பிறகு சங்கேனமாப் போடும்.கொஞ்சம் கொஞ்சமாப் பழகு மோன!

மனுசன் மனுசி எண்டு பாக்காமல் சினேகிதமா நல்ல சினேகிதப் பிள்ளயள் மாதிரி எல்லாத்திலும் எல்லாரும் சமன் எண்டு ஒராள ஒராள் விளங்கிக் கொண்டு அனுசரிச்சு உண்மையா நேர்மையா இருக்கேக்கை எவ்வளவு சந்தோசம் ராசா!

இப்ப எல்லாரும் சாப்பிட்டு முடிஞ்சு விளையாட்டுக்குப் போட்டீங்கள்.இரவுச் சாப்பாட்டுக்கு வாங்கோ சம்பலப் பற்றிச் சொல்லுறன்.

 
On June 25, 2009 at 7:22 AM , வலசு - வேலணை said...

இடியப்பத்திலும் விட வெள்ளைப்புட்டோட கயல் மீன்சொதியும் சேர்ந்தால் தூள் கிளப்பும்

 
On June 25, 2009 at 8:19 AM , geevanathy said...

//வடை என்றால் உடனே ஞாபகத்திற்க்கு வருவது யாழ்ப்பாணம் மலாயன் கபே ///

மறக்க முடியாத ஞாபகங்கள்..

 
On June 26, 2009 at 12:43 AM , Anonymous said...

அடடா கேகேஎஸ் வீதியில் ஒரு கடை இருந்ததே? சரஸ்வதி கடையா? மண்கும்பானிலும் ஒரு கடை இருந்ததே?

 
On July 5, 2009 at 8:02 AM , நெல்லைக் கிறுக்கன் said...

சொதி - தமிழகத்தில நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிகப் பிரபலம்.

கல்யாணத்துக்கு மறுநாள் மறுவீடு என்று ஒரு விழா நடக்கும். இதில் மணமகன் வீட்டார் சொதி சாப்பாட்டோடு விருந்து கொடுப்பது இன்றும் சில சமூகங்களில் நடைமுறை.

சொதிக்காக நிறைய கல்யாண வீடுகளில் சண்டை நடப்பது உண்டு.